ஆஹா – முகலாயர்கள்!

முகலாயர்கள். இந்த வருடத்தில் வெளியாகவிருக்கும் என்னுடைய புத்தகங்களில் ஒன்று.

முகலாயர்களுக்கு முந்தைய டெல்லி சுல்தான்களின் ஆட்சியிலிருந்து இரண்டாம் பகதூர் ஷா ரங்கூனில் இறந்துபோனது வரை இந்தப் புத்தகத்தில் எழுதியுள்ளேன். மொத்தம் 330 ஆண்டு வரலாறு. வரும் வாரத்தில் புத்தகம் வெளிவந்துவிடும் என்று நினைக்கிறேன். 500 பக்கங்கள் கொண்ட புத்தகம் – விலை ரூ. 250.

முகலாயர்கள் குறித்த நான் பேசிய நிகழ்ச்சி, நாளை ஆஹா 91.9 பண்பலையில் பகல் 12.00 முதல் 1.00 வரை ஒலிபரப்பாகவிருக்கிறது. கேட்டு கருத்துகளைச் சொல்லுங்கள்.

எம்.ஆர். ராதா & தேவர் பாட்காஸ்ட்

எம்.ஆர். ராதா & தேவர் கிழக்கு பாட்காஸ்ட் – ஒலிவடிவம்.

கேட்க & டௌன்லோட் செய்ய…

வாழ்த்துகள்

நண்பர்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துகள்.

உங்கள் வெளியூர் பயணங்கள் இனிதாகுக!

அக்டோபர் 18, ஞாயிறு கிழக்கு பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் நண்பர் பா. தீனதயாளனோடு நானும் பேசுகிறேன். சாண்டோ சின்னப்பா தேவர், எம்.ஆர். ராதா இருவரது வாழ்க்கை குறித்த நிகழ்ச்சி. சென்னையில் இருப்பவர்கள் கேட்டுவிட்டு கருத்துகளைச் சொல்லுங்கள்.

விரைவில்….

மனமாற்றம்!

எல்லா டீவிக்களுக்கும் ரிமோட் உண்டு. எல்லா வானொலிகளுக்கும் கிடையாது. இருந்தாலும் ஆல் டைம் பாடல்களை வழங்கும் ஒரு எஃப்.எம். சேனலில் அளவுக்கு அதிகமாக விளம்பரம் வந்தால்கூட சட்டென .1லிருந்து .9க்குத் தாவி விடுவோம்.

ஆனால் பாடல்களே இல்லாமல் எஃப். எம்மில் ஒரு மணி நேரத்துக்கு நிகழ்ச்சி செய்ய முடியுமா? ஏதாவது ஒரு துறை குறித்தோ, பிரச்னை குறித்தோ இரண்டு அல்லது மூன்று நபர்கள் ஒரு மணி நேரம் கலந்துரையாடுவார்கள். கிழக்கு பாட்காஸ்ட்டின் இந்த கான்செப்டுடன் சில எஃப்.எம். சேனல்களை அணுகியபோது, ‘ரிஸ்க்கு மாமூ’ என்று அவர்கள் முகம் திருப்பிக் கொண்டார்களாம். ‘செஞ்சு பார்க்கலாம்’ என்று வாசலைத் திறந்துவிட்டது குமுதம் ஆஹா 91.9 எஃப்.எம்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்வது முதல் நிகழ்ச்சியை ஒலிப்பதிவு செய்வது, பின்பு அதை எடிட் செய்து ஒலிபரப்புக்காக தயார் செய்வது வரையிலான பொறுப்புகள் எனக்கு வழங்கப்பட்டன. ஆரம்பத் தடுமாற்றங்கள் நிறையவே இருந்தன. பேச எடுத்துக் கொள்ளும் பொருள், பேசும் நபரைப் பொருத்து நிகழ்ச்சியின் சுவாரசியம் அமைந்தது. கருத்துகள், விமரிசனங்கள் நிறையவே வந்தன.

‘பலர் ஒரே சமயத்துல பேசுறதுங்கிறது ஆல் இந்தியா ரேடியோவோட பழைய கான்செப்ட். அதை உடைக்கிறதுக்காகத்தான் எஃப்.எம்.லாம் வந்துச்சு. இரண்டு பேர் எப்பவாவது பேசுலாம். ஒருத்தரே கம்மியா பேசனாத்தான் நிகழ்ச்சி எடுபடும். இதான் இப்ப டிரெண்ட். நீங்க திரும்பவும் பழைய கான்செப்டுக்கே போறீங்க. பாடல்களும் இல்லை. சரி, செஞ்சு பாருங்க. எப்படிப் போகுதுன்னு பார்க்கலாம்’ – ஆஹாவிலேயே ஒரு நண்பர் சொன்ன கருத்து இது.

பலவிதமான விமர்சனங்களைக் கடந்து கிழக்கு பாட்காஸ்ட் கடந்த ஆறு வாரங்களாக ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. பத்ரியின் எண்ணங்கள் வழியாக மறுஒலிபரப்பும் நடக்கிறது. இன்னும் பல வாரங்கள் நிகழ்ச்சியைத் தொடர திட்டமிட்டிருக்கிறோம். நிகழ்ச்சியை எப்படியெல்லாம் மேம்படுத்தலாம், சுவாரசியப்படுத்தலாம் என்று ஒவ்வொரு வாரமும் கற்றுக் கொண்டிருக்கிறோம்.

‘ஒன் ஹவர் இப்படி ரெண்டு மூணு பேரு ஏதோ ஒரு டாபிக்ல மொக்கையப் போட்டா எவனும் கேக்க மாட்டான்’ – நிகழ்ச்சியை முழுவதுமாகக் கேட்கப் பொறுமையில்லாத என் நண்பர்களே அடித்த கமெண்ட் இது. ஊக்கப்படுத்தும் கமெண்ட்களும் எனக்கு நேரடியாகக் கிடைத்திருக்கின்றன. என் வீட்டின் அருகில் ஒரு பலசரக்குக் கடையில் வேலை பார்க்கும் குமார் என்பவர் சொன்ன கமெண்ட் முக்கியமானது.

‘நான் வித்யா நிகழ்ச்சி கேட்டேன். அவங்க பட்ட கஷ்டத்தையெல்லாம் கேக்குறப்போதான் அவங்கள புரிஞ்சுக்க முடிஞ்சது. திருநங்கைன்னு ஒரு வார்த்தை இருக்குதுன்னே உங்க ப்ரோகிராம்ல இருந்துதான் தெரிஞ்சுக்கிட்டேன். இவ்ளோ நாளா அவங்கள அலின்னும் அந்த நம்பரைச் சொல்லியும்தான் கூப்டுக்கிட்டிருந்தேன். இனிமே கண்டிப்பா அவங்களை அப்படிக் கூப்பிடமாட்டேன், அந்த நம்பரைச் சொல்லமாட்டேன்.’

சின்னதாக ஒரு மனமாற்றத்தைக் கொண்டு வந்தாலே அது நிகழ்ச்சிக்குக் கிடைத்த வெற்றிதானே!

லிவிங் ஸ்மைல் வித்யா பங்குபெற்ற கிழக்கு பாட்காஸ்ட் நிகழ்ச்சி இங்கே ஒலிவடிவில்.

எம்.ஜி.ஆரை அடக்கிய தேவர்!

‘அண்ணே யாரு உங்க படத்துல ஹீரோ?’

‘எம்.ஜி.ஆர்.’

‘நல்ல ஆளுண்ணே நீங்க. மொத மொதலாப் படம் எடுக்கறீங்க. ஒழுங்கா வேல நடக்க வேணாமா?’

‘ஏம்ப்பா, எம்.ஜி.ஆர். உனக்கென்ன கெடுதல் செஞ்சார்?’ – கோபத்தோடு சின்னப்பா தேவர் கேட்டார். சக தயாரிப்பாளர் அசரவே இல்லை. ‘அண்ணே நான் சொல்றேன்னு தப்பா எண்ணாதீங்க. நீங்க  எம்.ஜி.ஆர். காளையை அடக்குற மாதிரி நடிக்கணும்னு ஆசைப்படறீங்க. இன்னும் எம்.ஜி.ஆரை  நீங்க சரியாப் புரிஞ்சிக்கிடவே இல்ல. அவர் வரவே மாட்டார்.’
தேவர் பேசாமலிருந்தார். எம்.ஜி.ஆருக்கும் அவருக்குமான நட்பைப் பற்றித் தெரியாத அந்த சக தயாரிப்பாளர், ‘வரேங்க’ என்றபடி காரில் ஏறினார். எம்.ஜி.ஆர். மீதான குற்றச்சாட்டுகள் நெருப்பாகப் பரவியிருந்தன. எல்லோருமே குறை கூறினர். தயாரிப்பாளர்களோடு ஒத்துழைப்பது குறைவு. எம்.ஜி.ஆர். தன்னிச்சையாகச் செயல்படுகிறார். அவரால் படங்கள் வெளிவருவது தாமதமாகிறது.

அதற்கெல்லாம் காரணம் தி.மு.க.தான். ஒழுங்காக பக்தியோடு தொழில் செய்தவர்,  நாத்திகவாதிகளுடன் சேர்ந்து நாசமாகி விட்டார் என்பது போன்ற செய்திகள் எம்.ஜி.ஆரின் இமேஜைப் பாதித்தன. அலிபாபாவும் நாற்பது திருடர்களும் படத்தில் ‘அல்லா மீது ஆணையாக’ என்ற  வசனத்தைப் பேச மறுத்தார். அதை ‘அம்மா மீது ஆணையாக’ என்று மாற்றித் தரும்படி வசனகர்த்தா  ஏ.எல். நாராயணனை வற்யுறுத்தினார். முதலாளி டி.ஆர்.எஸ், ‘டயலாக் என்ன இருக்கோ, அதையே  பேசு ராமச்சந்திரா’ என்று உத்தரவே போட்டார். ஆனால் எம்.ஜி.ஆர். ஷூட்டிங்குக்கு தொடர்ந்து போகவில்லை. அவர் இல்லாமலேயே ஒரு சண்டைக் காட்சியையும் பாட்டு சீனையும் எடுத்து  டி.ஆர்.எஸ். படத்தை முடித்தார்.

எம்.ஜி.ஆர். மீண்டும் சேலம் சென்றார். ‘ராமச்சந்திரா படத்தை ஒரு தடவை பார்த்துட்டுப் போ’  என்று வழியனுப்பினார் டி.ஆர்.எஸ். கரடிமுத்து என்கிற நகைச்சுவை நடிகர், எம்.ஜி.ஆருக்கு  பதிலாக நடித்திருந்தார். எம்.ஜி.ஆர். அதிசயித்தபடி வெளியே வந்தார். அவருக்கே அசலையும் ÷ பாலியையும் பிரித்துப் பார்க்க முடியவில்லை.

குற்றச்சாட்டுகள் எதையும் தேவர் பொருட்படுத்தவில்லை. எம்.ஜி.ஆரை  நம்பினார். 1956 –  எம்.ஜி.ஆரின் ஆண்டாக இருந்தது. அதனாலேயே தாய்க்குப் பின் தாரம் படத்தையும் மிகுந்த  அக்கறையோடு தயாரித்துக் கொண்டிருந்தார்.

எம்.ஜி.ஆருக்காகவே சண்டைக் காட்சிகள் அதிகம் புகுத்தப்பட்டன. ஷூட்டிங் முடிய ஒரு  ஷெட்யூல் மட்டுமே பாக்கி. தேவர் உற்சாக நடை போட்டார். மருதமலை முருகன் அருளால் படம்  நல்லபடியாகவே தயாராகி விட்டது. காளைச் சண்டையை காமிராவில் பிடித்து விட்டால் வியாபாரம் முடிந்த மாதிரி. எம்.ஜி.ஆரிடம் பேசினார் தேவர்.

‘அண்ணே! உங்க தேதிக்கு காத்துக்கிட்டு இருக்கேன். வாகினில செட் தயார். வந்து பார்க்கறீங்களா?  பெரிய மைதானம். போதுமா சொல்லுங்க. வர்ற தை அமாவசை அன்னிக்கு வேலையை ஆரம்பி ச்சாப் பரவாயில்லயா?’

‘காளைக்கு நல்லா ட்ரெயினிங் கொடுத்தாச்சா?’ – எம்.ஜி.ஆர். கேட்டார்.

‘நீங்க அச்சப்படற மாதிரி விட்டுடுவேனா?’

‘பயமா, எனக்கா?’

‘இல்லண்ணே ஒரு பேச்சுக்கு…’
தேவருக்குச் சட்டென்று மனத்துக்குள் சிநேகித நூல் அறுவது போலிருந்தது. எம்.ஜி.ஆரின் உரையாடலும் நடவடிக்கையும் தட்டிக் கழிப்பதாகத் தெரிகிறதே. ஒழுங்காக முடித்துக்கொடுக்க மாட்டாரா?  எல்லோரும் சொன்னதெல்லாம் அனுபவித்து அவஸ்தையுற்று வெளியிட்ட சத்திய  வார்த்தைகள்தானா? என் எம்.ஜி.ஆர். இல்லையா இவர்?
தேவர், எம்.ஜி.ஆரை ஏறிட்டு நோக்கினார். மகிழ்ச்சி போனது. எனக்கு பதில் சொல்லிட்டுப் போ  என்கிற பிடிவாதமும் மிரட்டலும் கண்களில் அப்பட்டமாகத் தெரிந்தன.

‘அண்ணே…’

‘என் கால்ஷீட்டை இப்பப் பெரியவருதான் பார்க்குறாரு. நீங்க சக்ரபாணி அண்ணனைக் கேளுங்க’ –  எம்.ஜி.ஆர். சொன்னார்.

‘தாய்க்குப் பின் தாரத்துல சக்ரபாணி கிடையாதே. நான் எதுக்கு அவருகிட்டப் பேசணும்.’ – தேவர்  சூடானார்.

‘புரிஞ்சுக்குங்க அண்ணே. எல்லா முதலாளிகளும் அண்ணன்கிட்டதான் பேசறாங்க. எனக்கு அவரு  சொன்னா ஓகே. ஒரே குடும்பமா வாழறோம். பெரியவங்க வார்த்தையை மீற விரும்பல.’

தேவர் அமைதியாக வெளியேறி விட்டார்.

*******

தேவர் பிலிம்ஸின் முதல் தயாரிப்பான தாய்க்குப் பின் தாரமே தேவருக்குச் சுளையாக முப்பதாயிரம்  ரூபாயை லாபப் பங்காக அளித்தது. சொந்த சினிமா முயற்சி வெற்றி பெறாவிட்டால் தேவர் பிறந்த  ஊருக்கே போய்விடலாம் என்று முடிவு செய்திருந்தார். ஆனால் அவரது பேனரில் தாய்க்குப் பின்  தாரம் அள்ளிய வசூலை வேறு எந்தப் படமும் பெறவில்லை.
எம்.ஜி.ஆர். தேவரைச் சந்தித்தார். தன் சந்தோஷத்தைத் தெரியப்படுத்தினார். ‘அடுத்த ரிலீஸ் எப்ப  அண்ணே?’ என்றார் ஜாலியாக.

‘பார்க்கலாம்’ தேவர் சுருக்கமாக முடித்துக் கொண்டார்.

‘மனசுல எதையும் வெச்சுக்காதீங்கண்ணே. நீங்களே என்னைப் புரிஞ்சுக்கலண்ணா வேறு யார்  கிட்டப் போய் நிக்குறது?’

எம்.ஜி.ஆர். இறங்கி வந்தார். தேவர் பிடி கொடுக்கவில்லை. தாய்க்குப் பின் தாரம் தெலுங்கும் பேசியது. எம்.ஜி.ஆர்.  வீறுகொண்டு எழுந்தார். ‘யாரைக் கேட்டுப் படத்தை டப் செய்தீர்கள். எனக்கு எப்படி இன்னொரு வன் குரல் கொடுக்கலாம்?’ விளக்கங்கள் கேட்டு வக்கீல் நோட்டீஸ் பறந்தது தேவர் பிலிம்ஸுக்கு.

அலறியடித்துக் கொண்டு வாகினியில் நின்றார் தேவர். அதன் அதிபர்களில் ஒருவரான சக்ரபாணி சிநேகமாகச் சிரித்தார். தேவர் வசமிருந்த வழக்கறிஞரின் ஓலையை வாங்கி வாசித்துப் பார்த்தார். நாகிரெட்டி ஓடி வந்தார். அவரும் படித்துப் பார்த்து விட்டு கலகலப்பானார்.

சக்ரபாணி, எம்.ஜி.ஆருக்குத் தக்கபடி பதிலடி கொடுத்தார்.
‘காளையை நீங்கள் நிஜமாகவே அடக்கவில்லை. உங்களது டூப்தான் மோதி வெற்றி பெற்றார்.  ஆனால் அதற்கும் சேர்த்து ஊதியம் பெற்றுக் கொண்டீர்கள். உண்மையில் அக்கறையோடு நீங்களே  மாட்டை வென்றிருந்தால் இன்னும் எங்களுக்கு வசூல் அதிகரித்திருக்கும். அதற்கான நஷ்டத்தை  உங்களிடம் இருந்தே பெற விரும்புகிறோம்.’

எம்.ஜி.ஆர். அடங்கி விட்டார்.

********

சமீபத்தில் நான் மிகவும் ரசித்த, வியந்த, படித்து மகிழ்ந்த (எடிட் செய்த) புத்தகம் இது. சாண்டோ  சின்னப்பா தேவர். சினிமாவையும் சிவமைந்தனையும் வெறித்தனமாக நேசித்த ஒரு மாறுபட்ட  மனிதரின் வாழ்க்கை வரலாறு.

சினிமாவுக்குள் தேவர் எப்படி நுழைந்தார்? ஆரம்ப காலத்தில் எம்.ஜி.ஆருக்கும் தேவருக்கும் நட்பு  எப்படி இருந்தது? ஏன் முறிந்தது? மீண்டும் எப்படித் துளிர்த்தது? எம்.ஜி.ஆரை வைத்து ஒரு படம்  எடுப்பதற்குள்ளாகவே எத்தனையோ தயாரிப்பாளர்கள் நொடிந்து போயிருக்கிறார்கள். தேவரால்  மட்டும் எப்படி தொடர்ந்து இத்தனை படங்களைக் கொடுக்க முடிந்தது? ஒரே இனத்தைச் சார்ந்தவர்  என்றாலும் தேவர் ஏன் சிவாஜியை வைத்து படம் எடுக்கவில்லை? எம்.ஜி.ஆரையும் முருகனையும்  மட்டுமே நம்பி படம் எடுத்த தேவர், திடீரென மிருகங்களை நம்ப ஆரம்பித்தது ஏன்? மொழியே  தெரியாமல், பாலிவுட்டிலும் நுழைந்து தேவர் கலக்கியது எப்படி? இவை மட்டுமல்ல, இன்னும்  எத்தனையோ கேள்விகளுக்கு விடையளிக்கிறது இந்தப் புத்தகம்.

பூஜை போட்டு மூன்றே அமாவாசையில் படம் முடியவேண்டும். அடுத்த பௌர்ணமியில் படம்  ரிலீஸ் ஆக வேண்டும். இதுதான் தேவரின் கணக்கு. யாருக்காகவும் எதற்காகவும் தொழிலில்  சுணக்கம் வருவதை தேவர் ஒருபோதும் அனுமதித்ததில்லை, அது எம்.ஜி.ஆராகவே இருந்தாலு ம்கூட. கோலிவுட்டின் இடிஅமீன் இதுவே அவருக்கு வைக்கப்பட்ட பட்டப்பெயர்.

தேவர் பற்றியும் புத்தகம் பற்றியும் இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் நீ ங்கள் புத்தகத்தை வாசித்து அனுபவிக்கும் சுகத்தை நான் கெடுக்க விரும்பவில்லை.

தேவரது வாழ்க்கையிலேயே ஏகப்பட்ட சுவாரசியங்கள். புத்தகத்தை எழுதியிருக்கும் நண்பர் பா.  தீனதயாளனின் நடை அதை அதிசுவாரசியமாக்கியிருக்கிறது. புத்தகத்தைப் படிக்கும்போது நமக்கு தேவரது வசவுகளையும் பாசத்தையும் அனுபவித்துக் கொண்டே தேவர் பிலிம்ஸில் வேலை பார்க்கும் உணர்வு ஏற்படுகிறது. தேவரது வாழ்க்கையோடு அரைநூற்றாண்டு கால கோடம்பாக்கத்தின் வரலாற்றையும் பின்னிப் பிணைத்துக் கொடுத்திருக்கிறார் தீனத யாளன்.

கிழக்கில் வெளியாகியிருக்கும் சினிமா கலைஞர்கள் குறித்த புத்தகங்களிலேயே மிகச் சிறந்ததாக  நான் குறிப்பிடுவது இந்தப் புத்தகத்தைத்தான்.

புத்தகத்தை வாங்க.

தீனதயாளனின் பிற புத்தகங்கள்.

புத்தகம் குறித்த பாராவின் விமர்சனம்.

தேவர் குறித்த முரளிகண்ணனின் சமீபத்திய பதிவு.