நிஜமாகவே முழு நீள…

Monday, February 1, 2010 Posted by Mugil

தமிழ்ப் படம் பார்த்து விட்டு அதைச் சிலாகித்து நான்கு வரி விமரிசனமாவது எழுதாவிட்டால் ஏவிஎம் ஸ்டூடியோ பிள்ளையார் கண்ணைக் குத்திவிடுவார் என்பதால்…

* நிஜமாகவே ‘முழு நீள’ நகைச்சுவைத் திரைப்படம்.

* ஏ,பி,சி முதல் இஸட் வரை எல்லா சென்டர்களிலும் எடுபடும்.

* படத்தில் ஒரு சில இடங்களில் தொய்வு தெரிந்தாலும், அநேக நகைச்சுவை காட்சிகள் நினைத்து நினைத்து சிரிக்கும் தரத்துக்கு இருக்கின்றன.

* இரண்டு மணி நேரம், ஐந்து நிமிடங்களில் படம் முடிந்துவிடுவது பெரிய ப்ளஸ்.

* சிம்பு, டி.ஆர்., பாக்யராஜ் மூவரையும் நேரடியாக நக்கலடித்திருப்பதைத் தவிர்த்திருக்கலாம்.

* இனி வரும் படங்களில் ஹீரோ பில்ட்-அப் காட்சிகள் வந்தால் தமிழ்ப் படம் நினைவுக்கு வந்து ரசிகர்கள் சிரிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

* தமிழ் சினிமாவின் க்ளிஷே காட்சிகளுக்கும் மாஸ் ஹீரோக்களுக்கும் லாடம் கட்டியிருக்கும் இயக்குநர் அமுதனுக்கு அடுத்த படம்தான் நிஜமான சவால். என்ன செய்யப் போகிறாரோ?

* 2010ன் முதல் ஹிட் தமிழ் சினிமா இதுவே. எனவே அட்வான்ஸாக இப்படி ஒரு போஸ்டர்…

* மிர்ச்சி சிவா எல்லோருடைய மனத்திலும் தாராளமாக இடம்பிடித்துவிட்டார். பார்க்கலாம், அடுத்து என்ன செய்யப் போகிறார் என்று.

(குறிப்பு: சில வருடங்களுக்கு முன் சிவாவை கல்கிக்காக பேட்டி எடுத்தேன். அது சிவாவின் கன்னி பேட்டி. தேடிப்பார்க்கிறேன். கிடைத்தால் தருகிறேன்.)


இன்னிக்கு தீபாவளியா? பொங்கலா?

Friday, January 29, 2010 Posted by Mugil

…என்று நினைக்குமளவுக்கு அத்தனை படங்கள் ரீலிஸ் ஆகின்றன. எனக்கு தெரிந்து ஐந்து. தமிழ்ப் படம், கோவா, ஜக்குபாய் (தியேட்டர் ரிலீஸ்), கதை, தைரியம். பொங்கல் படங்கள் வந்து இரண்டே வாரங்களே ஆன நிலையில், புது படங்களுக்குப் போதுமான தியேட்டர் இல்லாத நிலை. படங்களை இரண்டாவது ரவுண்ட் ரிலீஸ் செய்யும் சைதை ஸ்ரீநிவாசா தியேட்டரில்  இன்று ‘தைரியம்’ ரிலீஸ் ஆகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

தமிழ் படம் ஆக விளம்பரம் செய்யப்பட்டு, ஐந்து நாள்களுக்கு முன்பு தமிழ்ப் படம் ஆக மாறிய லொள்ளு சினிமாவைத்தான் முதலில் பார்க்க வேண்டும் நினைத்திருந்தேன். இன்றிலிருந்து மூன்று நாள்களுக்கு எங்கும் டிக்கெட் இல்லை. டிக்கெட் கிடைக்கும் என்பதற்காக அம்பத்தூர் மினிராக்கிக்கோ, ஈசிஆர் மாயாஜாலுக்கோ போக முடியாதே.

ஆன்லைனில் கோவா டிக்கெட்டுகளும் காலி. ஜக்குபாய் தியேட்டர்கள் அனைவரையும் இரு கரம் கூப்பி வரவேற்கின்றன. இன்றைக்குள் தெரிந்துவிடும், எவையெல்லாம் பிழைக்கும் என்று.

சரக்கு இல்லாத படங்கள், தியேட்டரை விட்டு துரத்தப்பட்டுவிடும் என்றே தோன்றுகிறது. ஏனென்றால் அடுத்தடுத்த வாரங்களில் ஏராளமான புதிய, பெரிய படங்கள் ரிலீஸுக்கு தயாராக நிற்கின்றன (அசல், பையா, விண்ணைத் தாண்டி வருவாயா). ‘வேட்டை ஆரம்பாயிருச்சு டோய்’ என்று தொடை தட்டிக்கொண்டு நீண்ட நாள்கள் மொக்கை போட முடியாது. வேட்டையாடிய வரைக்கும் போதும் என்று கிளம்ப வேண்டியதுதான். பார்க்கலாம், எத்தனை தேறும் என்று.

‘நெகட்டிவ் மார்கெட்டிங்’ – கடந்த இரண்டு படங்களைப் போல, தனது மூன்றாவது படத்துக்கும் வெங்கட் பிரபு அதே உத்தியைத்தான் பயன்படுத்துகிறார். அதாவது படத்தை, படத்தோடு தொடர்புடையவர்களை மட்டம் தட்டிப் பேசியே கவனம் ஈர்ப்பது. கோவாவுக்கும் அந்த உத்தி கைகொடுக்கிறதா என்று பார்ப்போம். கோவா, Hangover படத்தின் காப்பியாக இருக்குமோ என்று ட்விட்டரில் வள்ளிதாசன் சந்தேகம் எழுப்பியிருந்தார். எனக்கும் அப்படியொரு சந்தேகம் உண்டு.

தமிழ்ப் படம் குழுவினரும் சேனல்களில் அதே நெகட்டிவ் மார்கெட்டிங் உத்தியைத்தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். பாவம், ஜக்குபாய் குழுவினர். சன் டீவியில் கே.எஸ். ரவிக்குமார், சரத்குமார், ராதிகா மூவரும் படம் பற்றி பாசிட்டிவாக பேச முயற்சி செய்தார்கள். விரக்தியில் அவர்களையும் மீறி நெகட்டிவ் வார்த்தைகளே அதிகம் தென்பட்டன.

*

பொங்கல் ரிலீஸில் இரண்டு படங்கள் பார்த்தேன். முதலில் நாணயம். தூத்துக்குடியில் பார்த்தேன். படம் ரிலீஸ் ஆன இரண்டாவது நாள். காலைக் காட்சி. சூரிய கிரகணத்துக்கு பயந்து தியேட்டரில் சுமார் ஐம்பது பேர் மட்டும். டிக்கெட் விஷயத்தில் தூத்துக்குடி இன்னும் திருந்தவில்லை. என் பள்ளி நாள்களில் கௌண்டரில் பதினைந்து ரூபாய் கொடுத்துவிட்டு, கையில் 65 பைசாவுக்கு டிக்கெட் வாங்கியதாக ஞாபகம். இப்போது ஐம்பது ரூபாய் கொடுத்தேன். 14 ரூபாய்க்கு டிக்கெட் கொடுத்தார்கள். வளர்ச்சி இருக்கிறது.

படத்தின் விமரிசனம் எழுதவெல்லாம் தோன்றவில்லை. படம் போரடிக்கவில்லை. அதேசமயம் நினைத்து வியக்குமளவுக்கு காட்சி, ஒன்றுகூட படத்திலில்லை. வழக்கம்போல, பிரசன்னா ஸ்கோர் செய்திருக்கிறார். சிபி ம்ஹூம். ஹீரோ இமேஜையும் கெடுத்துக் கொண்டு, வில்லனாகவும் சோபிக்க முடியாமல்… பாவம். சத்யராஜ் போலவே நடிப்பதற்கு அவர் போதுமே, அவர் வாரிசு தேவையில்லையே.

நான் பார்த்த இன்னொரு படம் ஆயிரத்தில் ஒருவன். சோனியா அகர்வால் சத்தியமாக நான் அதற்கு விமரிசனம் எழுதப்போவதில்லை. ஆயிரத்தில் ஒருவன் பார்த்தேன் என்றுகூட சொல்ல முடியாது. எழுநூற்று ஐம்பதில் ஒருவன்தான் பார்த்தேன். படம் ஆரம்பித்து 20 நிமிடங்கள் தாமதமாகத்தான் தியேட்டருக்குச் சென்றேன். படத்தில் 25 நிமிடங்களுக்கு மேல் கத்தரி போட்டுவிட்டார்கள் போல. எனவே எனக்கு படம் மிக சீக்கிரம் முடிந்ததுபோல தோன்றியது.

ரீமா சென், தனது பாண்டிய குல ப்ளாஷ்பேக்கைச் சொல்லும்போது பாண்டிய குல மன்னனாக காட்டப்படும் புகைப்படம் (இதுவாகத்தான் இருக்கும் என்று நம்புகிறேன்.) ஒரு நொடியே வந்ததினால் எனக்கு சட்டென மனத்தில் பதியவில்லை. ஆனால் அதிர்ச்சியாக இருந்தது.

புகைப்படத்தில் இருப்பவர் யார்? ஆண்ட்ரியா சத்தியமாக, பாண்டிய குல மன்னன் அல்ல. ரேவா (மத்திய பிரதேசம்) சமஸ்தான மகாராஜா. 1854 முதல் 1880 வரை அதை ஆண்டவர். பெயர் ரகுராஜ் சிங். சிப்பாய் கலகத்தில் பிரிட்டிஷாருக்கு உதவியதன் மூலம் சில பிரதேசங்களை வெகுமதியாக பெற்றுக் கொண்டவர். மீன் கொடிக்கும் அவருக்கும் சம்பந்தமில்லை. ராஜபுத்திரர். இவரது முன்னோர்கள் சாளுக்கிய வம்சத்தைச் சேர்ந்தவர்கள். அவரது புகைப்படத்தோடு காட்டப்பட்ட மற்ற ‘பாண்டிய’ புகைப்படங்களையும் முன்பே பார்த்திருக்கிறேன். மனத்தில் நிற்கவில்லை. அவர்களும் பாண்டியர்களாக இருக்க வாய்ப்பே இல்லை. ஒரு நல்ல ஓவியரை வைத்து, கற்பனையாக ஓவியங்களை வரைந்து காட்டியிருக்கலாம்.

வாழ்க, செல்வராகவனின் வரலாற்றுத் தொண்டு.

பட்டியல் 2010

Tuesday, January 26, 2010 Posted by Mugil

தி.நகர் சோஷியல் கிளப் என்பது அன்று அதன் காண்டீனுக்குப் பிரசித்தமானது. அங்கு தஞ்சாவூர் டிகிரி காபி கிடைக்கும். நான்கணா. அதாவது இருபத்தைந்து காசுக்குக் கள்ளிச் சொட்டுப் போல ஒரு தம்ளர் காபி. ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபதுகளில் பாண்டி பஜாரில் சாந்தா பவன் என்ற சிற்றுண்டிச் சாலை அதன் தக்காளிச் சட்னிக்காகப் பெரும் புகழ் பெற்றது. நாகர்கோயில் சுந்தர ராமசாமி வரை அதன் மணம் வீசியிருந்தது. இப்போது சரவண பவன் எல்லா பேட்டைகளின் எல்லா  சிற்றுண்டிச் சாலைகளையும் பின்தள்ளி விட்டது. ஒரே மாதிரி சாம்பார், ஒரே மாதிரி சாம்பார் வடை, ஒரே மாதிரி குளோரின் மணமுள்ள குடிதண்ணீர். குறை கூற முடியாது.’

- அசோகமித்திரனின் ஒரு பார்வையில் சென்னை நகரம் புத்தகத்தில் தி.நகர் பற்றிய கட்டுரையிலிருந்து. தற்போது நான் படித்துக் கொண்டிருக்கும் புத்தகம் இது. முடிக்கப் போகிறேன். அடுத்து என் சரித்திரம் ஆரம்பிக்கலாம் என்றிருக்கிறேன். இரண்டையும் சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்கினேன். அங்கே நான் வாங்கிய புத்தகங்களின் பட்டியல் இது. சில ஆங்கில புத்தகங்கள் மட்டும் நடைபாதைக் கடையில் வாங்கியவை.

என் சரித்திரம் – உ.வே.சா.
ஒரு பார்வையில் சென்னை நகரம் – அசோகமித்திரன்
மார்க்கோ போலோ பயணக் குறிப்புகள் – தமிழில் பொன். சின்னத்தம்பி முருகேசன்
வரலாறும் வக்கிரங்களும் – டாக்டர். ரொமீலா தாப்பர், தமிழில் : நா. வானமாமலை
மைடியர் ஜவாஹர்லால் – மகாத்மா காந்தி – நேருவுக்கு காந்தி எழுதிய கடிதங்கள்
பகுத்தறிவு ஏன்? எதற்காக? – பெரியார்
ஆர்.எஸ்.எஸ். பற்றி – கி. வீரமணி
தியாகராய நகர் அன்றும் இன்றும் – நல்லி குப்புசாமி செட்டியார்
சினிமா? (1950களில் இருந்த தமிழ் சினிமா சூழலைச் சித்தரிக்கும் நூல்) – பி.எஸ். ராமையா
கொங்கு நாடும் கிழக்கிந்திய கம்பெனியும் (1792-1858) – தமிழ்நாடன்
முத்துக் குளித்துறையில் போர்ச்சுக்கீசியர் – ச. டெக்லா
சிவகாமியின் சபதம் – கல்கி
பார்த்திபன் கனவு – கல்கி
வணக்கம் – வலம்புரிஜான்
வெளிச்சம் தனிமையானது – சுகுமாரன்
தலைவாழை – மூத்த தலைமுறைச் சிறுகதைகள் – தொகுப்பாசிரியர் இ.எஸ்.டி.
இந்திய அரசியல் சாசனம் – ஏ.எஸ். நடராஜன்
பொதுமக்களுக்குத் தேவையான சட்டங்கள் – ஏ.எஸ். நடராஜன்
கோபுரத்தில் கொள்ளை – லயன் காமிக்ஸ்
மஞ்சளாய் ஒரு அசுரன் – லயன் காமிக்ஸ்
இரத்தக் கோட்டை – கேப்டன் டைகர் சாகசம் – முத்து காமிக்ஸ்

Reminiscences – The French in India

Pillars and Pearls – Margery Green, Macmillan and Co. Ltd.

Ancient Citites of the Indus – Edited by Gregory L Possehl

For a United India – Speeches of Sardar Patel 1947 – 1950, Publication Division

Indian Exploreres of the 19th Century, Indra Singh Rawat, Publication Division

The Kon-Tiki Expedition – Thor Heyerdahl

Politics, Society and Leadership Through the ages – Series Editor Dr. John Haywood