‘தேர்தலில் எனது ஆதரவு அர்த்தமற்றது’ – கமலஹாசன் அதிரடி!

‘தேர்தல்ல எந்தக் கட்சியை நான் ஆதரிக்கேனோ அந்தக் கட்சிக்கு டெபாசிட் ‘டப்பா’சிட் ஆயிடுது. ஸோ, அனைத்துக் கட்சிகளின் வேண்டுகோளுக்கிணங்க, இந்தத் தேர்தல்ல என்னோட ஆதரவு யாருக்கும் கிடையாது’ன்னு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வழக்கம்போல அறிக்கை விடப்போறாரு. அதைக் கேட்டதுக்கு அப்புறம் எல்லாக் கட்சிக்காரங்களும் பெருமூச்சு உட்டு நிம்மதியா இருப்பாங்க. ஆனா பத்திரிகைக்காரங்களுக்கு பரபரன்னு பத்திக்கிறாப்ல நியூஸ் வேணுமே, என்ன செய்யன்னு யோசிச்ச, குறுகுறு நாளிதழின் குறும்புக்கார நிருபர் ஒருவர் சில வி.ஐ.பிக்களைத் தேடி ஓடுனாரு. ‘உங்க ஆதரவு யாருக்கு’ன்னு தோண்டித் துருவிக் கேட்டாரு. ‘இது என்னடா வம்பாப் போச்சு’ன்னு அவங்க திக்கித் திணறி, விக்கி விழுங்கி சொன்ன பதில்தான் இது.



(முதலில் அந்த நிருபர் சென்ற இடம் ஆழ்வார்பேட்டை ஆண்டவனின் வீடு.)

நிருபர் : சார் வணக்கம். நீங்க சொல்லிட்டிங்கன்னா தலைப்புச் செய்தியா தட்டி விட்டிரலாம்.
கமல் : ஹாங்.. வெல்.. ‘தலைவன் இருக்கிறான்’ அறிவிப்பு அடுத்த மாசம் வந்துரும். அதை நான் ரெண்டு லாங்குவேஜ்ல.. ஐ மீன் டூ மொழி.
நிருபர் : அதை விடுங்க சார். வர்ற தேர்தல்ல, நீங்க யாரை ஆதரிக்கப்போறீங்க?
கமல் : தேர்தல். யெஸ். ஆதரவுங்கிறது எல்லாத்துக்குமே வேணும். ஒரு குழந்தைகிட்ட போய் அம்மா பிடிக்குமா, அப்பா பிடிக்குமான்னு கேட்டா அது சாதுர்யம் இல்லாத குழந்தைன்னா திருதிருன்னு முழிச்சிக்கிட்டு என்ன சொல்லன்னு தெரியாம, அடுத்த நிமிஷமே அதை மறந்து போயிரும். அதே குழந்தை புத்திசாலியா இருந்தா, அம்மா, அப்பா ரெண்டு பேரையுமே பிடிக்கும். ஓடிப் போன சித்தப்பாவைக் கூட எனக்குப் பிடிக்கும்னு சிரிச்சுக்கிட்டே சொல்லும். நான் சாதுர்யம் இல்லாத குழந்தையும் இல்ல. புத்திசாலிக் குழந்தையும் இல்ல. ஏன்னா நான் குழந்தையே இல்ல. அரசியல் கர்ப்பப்பையில் நான் இன்னும் கருத்தரிக்கவே இல்லை. கருத்தரிக்கவும் வாய்ப்பில்லை.  பூமியில ஒரு செடி முளைச்சு, கொடியாப் படரணும்னா அதுக்கு ஒரு குச்சி இருந்தா ஆதரவா இருக்கும். அந்தக் கொடி…
நிருபர் : எந்தக் கொடி சார்?
கமல் : கொடின்னா துணியால ஆனதா இருக்கலாம். ஆனா கொடியில துணியும் காயப்போடலாம். வடிவம் முக்கியம். ஐ மீன் பரிமாணம். பரிணாம வளர்ச்சி அடைய அடைய பரிமாணங்கள் நிறைய மாறுது. மாற்றம்தான் வாழ்க்கை.
நிருபர் : அதனால அரசியல்ல, ஆட்சியில மாற்றம் வரணும்னு சொல்லுறீங்களா?
கமல் : இல்ல. ஐ நெவர் மீன் தட். வார்த்தைகளைவிட அதோட அர்த்தம் ரொம்ப முக்கியம். அர்த்தங்களில்லாத வார்த்தைகள் இருக்கலாம். ஆனா ‘அர்த்தம்’ங்கிறதே ஒரு வார்த்தைதான்.
நிருபர் : அர்த்தம் புரிஞ்சிடுச்சு. ஓ.கே. தாங்க்யூ சார்.

(அடுத்த நாள், அப்பத்திரிகையில் ‘தேர்தலில் எனது ஆதரவு அர்த்தமற்றது’ – கமலஹாசன் அதிரடி!’ – என செய்தி மின்னுகிறது.

நிருபரின் அடுத்த டார்கெட் – கவுண்டமணி.)

நிருபர் : சார், ஒருகாலத்துல நீங்க இல்லாம எந்தப் படமும் இல்ல. ஆனா இப்ப எந்தப் படத்துலயும் நீங்க இல்ல. இனியும் தமிழ்நாட்டுல பல்லு போன பெரிசுங்க டூ பல்லு முளைக்காத பொடிசுங்க வரைக்கும் உங்களை நியாபகம் வைச்சிருக்கணும்னா நீங்க தேர்தல்ல யாரை ஆதரிப்பீங்க?
க.மணி : அடேய்! நானே ஆதரவு இல்லாம இருக்கேன். என்ன நக்கலா? என் வாயைப் புடுங்கி வம்பிழுக்கத்தான் இந்த ஒண்ணரையனா நோட்டையும், ஒழுகுற பேனாவையும் தூக்கிட்டு வந்தியா?
நிருபர் : உங்க ‘அடி’ஆள் செந்திலைப் பத்தி என்ன நெனைக்கிறீங்க?
க.மணி : அவன் என்ன ‘செக்கிழுத்த செம்மலா’? நினைச்சுக்கிட்டே இருக்கறதுக்கு. அடேய் பொறக்கறப்பவே மண்டையில மசுரில்லாம பொறந்த லொள்ளு புடிச்ச பெரிசு சத்யராஜெல்லாம் நமீதாகூட இன்னும் லவ்ஸ் பண்ணிக்கிட்டிருக்காரு. என்னை மாதிரி வளர்ந்து வர்ற நடிகனை அதுக்குள்ள வி.ஆர்.எஸ். கொடுத்து வீட்டுக்கு அனுப்பிட்டீங்களேடா! இது உங்களுக்கே நல்லா இருக்கா?
நிருபர் : உங்க கூடப் பொறக்காத தம்பி கார்த்திக்கைத்தான் நீங்க தேர்தல்ல ஆதரிக்கப்போறதா பேச்சு வந்துதே?
க.மணி : எந்தக் கருமாந்திரம் புடிச்ச நாயோ சொல்லிருக்கு. எனக்கு கூடப் பொறக்காத தம்பி, குறையாப் பொறக்காத தம்பின்னு யாருமே கிடையாது. நானே எனக்குத் தம்பி. நானே எனக்கு அண்ணன். நோ மோர் பிரதர்ஸ். பால் குடிச்சுட்டு வீட்டு பால்கனில ஒக்காந்து நிம்மதியா பறாக்கப் பாத்துக்கிட்டிருக்கிற எனக்கு பாலிடிக்ஸ் தேவையா?
நிருபர் : நீங்க வெளியில இருந்து ஆதரவு கொடுக்கறதுன்னா யாருக்கு கொடுப்பீங்க?
க.மணி : வாங்கடா வாங்க. எத்தனை பேருடா இப்படி கிளம்பியிருக்கீங்க? வாய்ப்பு இருக்கறதா எவனையோ ஏத்திவுட்டு வருங்கால முதல்வர்னு சொல்லுவீங்க. வாக்கு வங்கி இருந்தா வாய்ஸ் கொடுக்கச் சொல்லி நோண்டி விடுவீங்க. வக்கத்துக் கிடக்குறவனை ஏண்டா பிச்சுப் பிறாண்டுறீங்க. என்னைக் கொலகாரனாக்காதீங்க..
(கவுண்டமணி ஹை-டெசிபலில் கத்த, நிருபர் காதை பொத்திக் கொண்டே அங்கிருந்து எஸ்கேப் ஆகிறார். அடுத்த நாள் நாளிதழில் “கார்த்திக்கை நான் ஆதரிக்கவில்லை” – கவுண்டமணி திட்டவட்ட அறிவிப்பு!’ என செய்தி இளிக்கிறது.)

கண்டேன் பாட்டியை!

இளநீர்ப் பாட்டியை மீண்டும் கண்டுகொண்டேன். புரியாதவர்கள் சிரமம் பாராமல் இங்கே சென்று வரவும்.

அதே சிபி ஆர்ட் கேலரி பேருந்து நிறுத்தத்தில்தான் பார்த்தேன். காணாமல் போன இளநீர் வண்டிக்கு பதிலாக, பேருந்து நிறுத்தத்திலேயே தரையில் கடை விரித்திருந்தாள்.

ஸ்கூட்டியை விட்டு இறங்கி, ஹெல்மெட்டை கழட்டிவிட்டு ஆர்வமாக பாட்டியை நெருங்கினேன். மொட்டையடிக்கப்பட்டு, சற்றே முடிவளர்ந்த தலையோடு பாட்டி. நிமிர்ந்து பார்த்தாள். என்னைக் கண்டதும் அவள் முகத்தில் ஒரு பிரகாசம். ‘வந்துட்டியா ராசா. என்னைத் தேடுனியா?’ – குரலில் ஏக்கம்.

‘தேடுனேன் பாட்டி. ஆனா யார்கிட்ட விசாரிக்கிறதுன்னு தெரியல. என்ன ஆச்சு?’

‘அதயேன் கேக்குற. இந்தா மேலருந்து விளம்பர போர்டு என் தலைல வுழுந்து, அப்படியே சரிஞ்சுட்டேன். இங்கேயே ரெண்டு பாட்டில் ரத்தம் போயிருக்கும். ஆசுபத்திரில ரொம்ப நாள் கெடந்தேன். எம் புள்ளைங்க பாத்துக்கிட்டாங்க. திரும்ப வந்ததே மறுபொறப்புதான்.’

சொல்லிக்கொண்டே ஒரு பெரிய இளநீரை வெட்டி நீட்டினாள். பேருந்து நிறுத்தத்தின் மேலே பார்த்தேன். வெறும் கம்பிகள் மட்டும் நீட்டிக்கொண்டிருந்தன.

‘நான் வந்து நாலு நாளாச்சு. நீ ஏன் வரலை?’

‘இல்ல பாட்டி, இன்னிக்குத்தான் உங்களைப் பார்த்தேன்.’

பதினைந்து ரூபாயை நீட்டினேன். ஸ்கூட்டியில் ஏறி ஹெல்மெட்டை அணிந்தேன். ‘நீகூட வண்டிலலாம் போற. பாத்து கவனமா போ ராசா…’

பாமக பொதுக்குழுவில் மீண்டும் வாக்கெடுப்பு!

பாமக பொதுக்குழு இன்றும் பட்டவர்த்தனமாகக் கூடியது. இன்றும் ஒரு புதிய வாக்கெடுப்பை நடத்தினர். தமிழகத்தில் தேர்தல் வாக்குப்பதிவு முடிவதற்குள் பாமகவின் தேர்தல் கூட்டணி முடிவு குறித்த தெளிவான, குழப்பமில்லாத, கொள்கைப்பிடிப்புமிக்க, லாபகரமான அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புலி புராணம்!

தேசிய விலங்கு என்று சொல்லி பெருமைப்பட்டுக் கொள்ளலாம். ஆனால் எந்த மிருகக் காட்சியில் எப்போது புலி குட்டி போடும் என்று காத்துக் கொண்டிருக்க வேண்டியதிருக்கிறது. வண்டலூரில் வெள்ளைப்புலி அனு, மூன்று குட்டிகள் போட்டதாக செய்தி. கேக் வெட்டி கொண்டாட வேண்டும் என்று தோன்றுகிறது.

சரி, நம் முன்னோர்கள் புலிகளை எப்படியெல்லாம் அழித்தார்கள்? வேட்டை என்று சொல்லிக்கொண்டு மகாராஜாக்களும் பிரிட்டிஷாரும் செய்த அழிச்சாட்டியங்கள் என்னென்ன?

***

வேட்டையாடுதல் என்பது இந்திய மகாராஜாக்களின் பொழுதுபோக்குகளில் முக்கியமான ஒன்று. அதை ஒரு கௌரவமாகக் கருதினார்கள். ‘போன வருசம் மட்டும் நான் பதினேழு காட்டுப்பன்றி, ஒன்பது சிறுத்தை, நாலு புலி கொன்னுருக்கேன்’ என்று சக சமஸ்தான மகாராஜாக்களிடம் பட்டியலிட்டுப் பெருமைப்பட்டுக் கொள்வார்கள். அத்தோடு தாங்கள் வேட்டையாடிய விலங்குகளை பாடம் செய்துவைத்து ஓர் அறை முழுவதையும் நிரப்பியிருப்பார்கள்.

குவாலியர் மகாராஜா மாதவ் ராவ் சிந்தியா
குவாலியர் மகாராஜா மாதவ் ராவ் சிந்தியா

சமஸ்தானத்தில் வனப்பகுதி இருந்தால் போதும். அதற்குள் சகல சௌபாக்கியங்களும் நிறைந்த ஒரு வேட்டை அரண்மனையை கட்டி வைத்திருப்பார்கள். அவ்வப்போது அங்கு சென்று குடும்பத்தோடு தங்கி, டுமீல்.. டுமீல்! இன்றும் குவாலியரில் மாதவ் தேசியப் பூங்காவில், சிவ்புரி என்ற வேட்டை அரண்மனை அப்படியே இருக்கிறது. அது மகாராஜா மாதவ் ராவ் சிந்தியா கட்டியது.

பொதுவாக வைஸ்ராய், ஒரு சமஸ்தானத்துக்கு வருடத்துக்கு ஒருமுறைதான் செல்லுவார். செல்லும் நேரத்தில் பலே விருந்து உண்டு. அது காட்டை ஒட்டிய சமஸ்தானமாக இருந்தால் வேட்டையும் இருக்கும். ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு வேட்டை பிரசித்தம். உதய்பூர், ஜோத்பூர், குவாலியர், பஞ்சாப் பகுதிகளுக்குச் சென்றால் புலிகளை, புளியங்காய் அடிப்பது போல அடிக்கலாம். தோல்பூர், பரத்பூர் பகுதிகளுக்குச் சென்றால் விதவிதமான பறவைகளையும் கொத்துக் கொத்தாக வாத்துகளையும் அள்ளலாம். குஜராத் வனப்பகுதிகளில் சிறுத்தைகளுக்குக் குறிபார்க்கலாம். இந்தியா முழுவதிலுமே மான்களுக்குப் பஞ்சமிருந்ததில்லை. தெற்கே கேரள வனப்பகுதிகளுக்கு வந்தால் யானை வேட்டை சாத்தியம். இவைபோக கரடி, ஓநாய், மயில், காட்டுப்பன்றி, காட்டெருமை, காண்டாமிருக வேட்டைகளும் நடந்தன.

பிரிட்டிஷார், புலி வேட்டையாடுவதை கௌரவமான ஒன்றாகக் கருதினார்கள். சுட்ட புலியைக் குப்புறப்போட்டு, அதன்முன் லேடி வைஸ்ராயோடு நின்று, துப்பாக்கியுடன் சிரித்தாற்போல புகைப்படம் எடுத்துக் கொள்வது என்பதை அளப்பரிய சாதனையாக நினைத்தார்கள். தாங்கள் சுடும் புலி, குறைந்தபட்சம் பத்து அடி நீளமாவது இருக்க வேண்டும் என்பதிலும் கவனமாக இருப்பார்கள். புலி வேட்டையாடுவதில் மூன்று முறைகளைக் கடைபிடித்தார்கள்.

கர்ஸன், லேடி கர்ஸன், புலி
கர்ஸன், லேடி கர்ஸன், புலி

புலி நடமாட்டமுள்ள பகுதிகளை புக்கிகள் கண்டறிந்து சொல்லுவார்கள். அதற்கு அருகிலுள்ள பகுதியில் மகாராஜா, மரத்தில் மேலேறி மேடையில் துப்பாக்கியோடு காத்திருப்பார். கீழே சற்று தொலைவில் ஒரு ஆடோ, மாடோ, மானோ உயிரோடு கட்டப்பட்டிருக்கும். சாயங்கால வேளையில் புலிக்குப் பசி எடுக்க ஆரம்பிக்கும். தன் இடத்தில் இருந்து எழுந்து, சோம்பல் முறித்து, இரையை மோப்பம் பிடித்து வரும். கட்டப்பட்டிருக்கும் விலங்கு கத்த, புலி பாய, மகாராஜாவின் துப்பாக்கியிலிருந்து குண்டும் பாயும். இது முதல் முறை.

அதிகாலையிலேயே புலிக்கு இரை வைத்துக் காத்திருப்பார்கள். புலி, இரையை அடித்து இழுத்துச் சென்று சாப்பிட ஆரம்பிக்கும். அப்போது யானைமீது சென்று புலியைச் சுற்றி வளைத்துச் சுடுவது இரண்டாவது முறை. இந்த முறையில் மகாராஜாவின் குறி தப்பினால், வேறு யாராவது சுட்டு விடுவார்கள். ஏனெனில் புலி, பூ பறித்துக் கொண்டிருக்காதே.

மூன்றாவது முறை மகாராஜாக்கள் கொஞ்சமும் நோகாமல் நொங்கெடுக்கும் முறை. அதாவது மகாராஜா காட்டில் ஒரு பகுதியில் தனக்கான மேடையில் சௌகரியமாக உட்கார்ந்து கொள்ளுவார். யானைகளோடும் தீப்பந்தங்களோடும் முரசு கொட்டுபவர்களோடும் ஒரு படையினர் புலியின் இருப்பிடத்துக்கே சென்று, அதனை மிரள வைத்து மகாராஜா காத்திருக்கும் பகுதிக்கு ஓட்டி வருவார்கள். மகாராஜா அதை டுமீல் செய்வார்.

ஆனால் ரேவா சமஸ்தான மகாராஜா, புலி வேட்டைக்கு நான்காவதாக ஒரு புதிய முறையை உபயோகப்படுத்தினார். அவரிடம் பழக்கப்படுத்தப்பட்ட குரங்கு ஒன்று இருந்தது. வேட்டைக்கான மேடையில் அவர் இருக்கும்போது, அந்தக் குரங்கு மரத்தின் உச்சியில் இருக்கும். மகாராஜா, ஜாலியாக புத்தகங்கள் படித்துக் கொண்டிருப்பார். புலி அந்தப் பக்கமாக வந்தால், அந்தக் குரங்குக்குத் தெரிந்துவிடும். உடனே இறங்கிச் சென்று மகாராஜாவிடம் சத்தம் எழுப்பும். மகாராஜாவும் புத்தகத்தைக் கீழே வைத்துவிட்டு துப்பாக்கியைத் தூக்குவார்.

மிரள வைக்கும் வேட்டை புள்ளி விவரங்களில் சில. கூச் பிகார் மகாராஜா நிருபேந்திர நாராயண், தன் வாழ்நாளில் 365 புலிகள், 438 காட்டெருமைகள், 207 காண்டாமிருகங்கள், 311 சிறுத்தைகளை வேட்டையாடியிருக்கிறார். சர்குஜா சமஸ்தான ராஜா, ராமானுஜ் சரன் சிங், தம் வாழ்நாளில் சுட்ட புலிகளின் எண்ணிக்கை மட்டும் ஆயிரத்தைத் தாண்டும். ரேவா சமஸ்தான மகாராஜா குலாப் சிங்கில் புலி ஸ்கோர் தொள்ளாயிரத்துச் சொச்சம்.

(குமுதம் ரிப்போர்ட்டரில் எழுதி வரும் அகம் புறம் அந்தப்புரம் தொடரிலிருந்து ஒரு சிறு பகுதி.)

தமுக்கம் மைதானத்தில் ஐபிஎல் நடைபெறும் : அழகிரி அதிரடி

‘ஐபிஎல் என்பது இந்தியாவின் பாரம்பரியம். அதை மதுரையிலேயே நடத்திக் காட்ட நான் தயார்’ என்று திமுகவின் தென்மண்டல அமைப்புச் செயலாளர் மு.க. அழகிரி கூறியுள்ளார்.

நேற்று இரவு மதுரையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது :

‘இந்தியன் பிரிமியல் லீக், இந்தியாவில்தான் நடத்த வேண்டும். தேர்தல் என்ற ஒரு காரணத்தினால் அதை இங்கிலாந்துக்கோ, தென் ஆப்பிரிக்காவுக்கோ மாற்றுவதை திராவிட இதயங்கள் விரும்பாது. ஆகவே இந்தியாவின் பாரம்பரியம் நிறைந்த, ஐபிஎல் போட்டிகள் அனைத்தையும் மதுரையிலே யே நடத்திக் காட்ட நான் தயாராக இருக்கிறேன். இங்கே தமுக்கம் இருக்கிறது,  வண்டியூர் தெப்பக்குள மைதானம் இருக்கிறது, மேலும் பல பள்ளி, கல்லூரிகளின் மைதானங்கள் இருக்கின்றன. எல்லாவற்றையும்விட விளையாட வரும் வீரர்களுக்கு எமது தொண்டரடிப்படையினர் குவாலிஸ்களில் வலம்வந்து தக்க பாதுகாப்புகளை அளிப்பார்கள்.  இதனால் மதுரையில் மக்களவைத் தேர்தல் பணிகள் எந்தவிதத்திலும் பாதிக்கப்படாது.  திருமங்கலம் இடைத்தேர்தல் போலவே எல்லாம் சுபிட்சமாக நடக்கும். இந்தியாவின்  நலன் கருதி, கிரிக்கெட் ரசிகர்களின் விருப்பத்துக்காக நான் எடுத்திருக்கும் இந்த  முடிவை லலித்மோடி வரவேற்பார் என்று நம்புகிறேன்.’

இவ்வாறு அழகிரி பேசினார்.

இதற்கிடையில் தயாநிதி அழகிரியின் க்ளவுட் நைன் மூவிஸ் சார்பில் போட்டிகளை கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதற்கான பேச்சுவார்த்தை நடந்துவருவதாகத்  தெரிகிறது. இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா  அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது :

‘ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை மதுரையில் நடத்த வைத்து அதை எம்பிஎல் (மதுரை  பிரிமீயர் லீக்) என்று பெயர் மாற்ற கருணாநிதியின் குடும்பத்தினர் முயற்சி செய்கிறார் கள். கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதன்மூலம் தேர்தலில், மக்களின் கவனத்தைத் த ங்கள் பக்கம் இழுக்கலாம் என்று தப்புக்கணக்குப் போடுகிறார்கள். அவர்களுக்கும் எம்பிஎல்லும் கிடைக்கப்போவதில்லை, ஒரு எம்பி சீட்டும் கிடைக்கப்போவதில்லை.  டுவெண்டி டுவெண்டி போட்டிகள் மதுரையிலேயே நடந்தாலும், கருணாநிதியின் கட்சிக்கு நாற்பது தொகுதிகளிலும் தோல்விதான் கிடைக்கப்போகிறது என்பது மக்களுக்கே  தெரியும். தேர்தல் கமிஷனும் இந்திய கிரிக்கெட் வாரியமும் கருணாநிதி குடும்பத்தின்  குறுக்குபுத்தி வேலைகளுக்கெல்லாம் ஒருபோதும் துணைபோக மாட்டார்கள்.’

இவ்வாறு ஜெயலலிதா தன் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

இன்று காலையில் வீரத்தளபதி என்று தன்னைத்தானே அழைத்துக்கொள்ளும் நடிகர்  என்று சொல்லிக்கொள்ளும் ஜே.கே. ரித்தீஷ், அவசர அவசரமாக பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, ‘மதுரையில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் பட்சத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குத் தலைமையேற்று விளையாட கேப்டன் தோனி  மறுத்துள்ளதாகத் தெரிகிறது. சமீபத்தில் சென்னையில் நடந்த நட்சத்திர கிரிக்கெட்  போட்டியில் வீரமாக விளையாடிய அனுபவத்தை வைத்துச் சொல்கிறேன். சென்னை  சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டன் பொறுப்பேற்க நான் தயார்’  இவ்வாறு அவர் கூறினார்.