ரஜினிகாந்த் 1982

‘புதியவர்கள் சிலர் வந்து என்னை நடிக்க அழைத்தார்கள். நீங்கள் நடிப்பதாகச் சம்மதம் தெரிவித்தால் போதும், பிறகு எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளலாம் என்றார்கள். இதற்கு என்ன அர்த்தம்?

என் பெயரை விளம்பரப்படுத்தி என்னைக் கொண்டு ஆதாயம் பெற வேண்டும் என்பது இவர்களது முதல் குறிக்கோள். எனக்கு ஆதாயமாக இருக்கக்கூடிய பெரிய பேனர்களை நான் தேர்ந்தெடுப்பதில் என்ன தப்பு? டென்ஷன் எல்லாம் எனக்குப் பிடிக்காது. என் படத்தை இடைஞ்சல்கள், தகராறு இல்லாமல் ஒழுங்காக எடுத்து முடிப்பார்களா என்பதில்தான் நான் அக்கறை செலுத்துவேன். என் பட முதலாளிகளுக்கு எப்படிப்பட்ட கேரக்டரில் என்னை நடிக்க வைக்க வேண்டும் என்பது தெரியாமல் போகுமா.

என்னைப் பொறுத்தவரை வித்தியாசமான காரெக்டர்கள், லட்சியப் படம், புதுமைப் படைப்பு என்றெல்லாம் நான் வீணே அலட்டிக் கொள்வதில்லை.’

-ரஜினிகாந்த் (மே 1982-பொம்மை)

(நன்றி: பா. தீனதயாளன்)

பாலா ஒரு யானை!

அவனப் பத்தி நான் பாடப் போறேன் – இவன பத்தி நான் பாடப் போறேன் – அவனும் சரியில்ல இவனுந்தான் சரியில்ல… யாரைத்தான் நான் இப்போ பாடப்போறேன்…

தெரிஞ்சேதான் யுவன், இப்படி ஒரு பாட்டை போட்டுக் குடுத்துருக்காருபோல! அதையும்புரிஞ்சுதான் பாலா, அந்தப் பாட்டை படத்துல உபயோகிக்கவும் இல்ல.

ஹி..ஹி...

படம் ஆரம்பிச்ச அஞ்சாவது நிமிசத்துல ‘டியா டியா டோலே’வென விஷால் குத்தாட்டம் போட ஆரம்பிச்சாரு. அடுத்து ஆர்யா தன் பங்குக்கு காதில் ஹெட்ஃபோனோடு.  அப்புறமா ஆர்யாவும் அவரு அம்மாவும் நாக்கை மடிச்சு ரொம்ப நேரத்துக்கு குத்தாட்டம் போட்டாங்க. ஆட ஆட நமக்குத்தான் மூச்சு வாங்குது. இந்தக் குத்தாட்டங்கள் க்ளைமாக்ஸ் வரை தொடர்ந்து வந்துகிட்டே இருக்குது (ஓ, இதுதான் கண்டினியூட்டியா!). இதனால் அறியப்படும் நீதியென்னென்னா, விளிம்புநிலை மனிதர்கள் தம் சோகத்தில், சந்தோஷத்தில், பசித்தால், தூக்கம் வந்தால், வயிறு கடமுடாவென்றால், வாந்தி வந்தால்கூட குத்தாட்டம் போடுவார்கள்.

அம்பிகா – பீடி வலிக்குறப்போ தியேட்டரில்  கைதட்டல், ஆர்யா – பூட்டைத் திறக்குறப்போ கைதட்டல், விஷால் – மேடையில நவரச ஆக்டிங் கொடுக்குறப்போ, மரமேறிகிட்டே அழுறப்போ கைதட்டல் – இப்படி படம் முழுக்க ஏகப்பட்ட இடங்கள்ல கைதட்டல். நான்கூட டைட்டில் கார்டுல டைரக்‌ஷன் பாலான்னு  போட்டதுல இருந்து, கிளைமாக்ஸ்ல  எ ஃபிலிம் பை பாலான்னு வர்ற வரைக்கும் விடாம கைதட்டிக்கிட்டே இருந்தேன், இண்டர்வெல்லகூட! ஏன்னா இது பாலா படமாச்சே!

படத்துல திடீர்னு சூர்யா நடிச்ச அவரோட வெளம்பரம் ஒண்ணு  பத்து நிமிஷத்துக்கு வந்துச்சு. அது அவரோட அகரம் பவுண்டேஷன் வெளம்பரம். அதுக்கடுத்ததா சரவணா ஸ்டோர்ஸ் வெளம்பரம், நவரத்னா தைல கூல்கூல் வெளம்பரம், ஜோதிகாகூட காப்பி குடிக்கிற வெளம்பரமெல்லாம் தொடர்ந்து வரும்னு நினைச்சு ஏமாந்துட்டேன். அந்த பத்து நிமிஷ அகரம் வெளம்பரம்கூட படத்தோட கதைய எந்த விதத்துலயும் பாதிக்கக்கூடாதுன்னுதான், பாலா படத்துல கதைன்னு ஒண்ணை கமிட் பண்ணிக்கவே இல்ல.

தலைகீழா நின்னு ஆர்யா, நான் கடவுள்ல அவார்டு பெர்பார்மென்ஸ் பண்ணிட்டாரு. ‘மச்சி எனக்கொரு பெர்பார்மன்ஸ் சொல்லேன்’னு விஷாலு அவருகிட்ட கேட்க… அப்புறம் நடந்ததெல்லாம் வரலாறு. இந்தப் படத்துல எதுக்காக விஷால் மாறுகண்ணோட நடிச்சாருன்னு நாமெல்லாம் அதே கண்ணோட்டத்துடன் படம் பார்த்தா ஒருவேளை புரியலாம். அதுல அவரோட உடல்மொழி, குரல்ல எல்லாம் பெண்மைத் தன்மைவேற! பின்நவீனத்துவமா இருக்குமோ? என்ன எழவுக்குன்னு யாமறியோம்; யாமம் அறியலாம்.

அடிமாடைக் கடத்துறாங்க. அதைவைச்சு அடிவயித்தைப் பிசையுற மாதிரி எதாவது சொல்லுவாங்களோன்னு நினைச்சேன். அந்த நேரத்துலதான் செம ட்விஸ்ட் ஒண்ணு வந்தது. ப்ளூ கிராஸ்காரங்க வந்து மாடுங்களையெல்லாம் அவுத்து உட்டுட்டாங்க. மாடுங்க எல்லாம் பட்டிக்குள்ள இருந்து கூட்டமா வெளியேறுன சமயத்துல, ரசிகர்களும் அதேமாதிரி வெளியேறி இருக்கணும். அஞ்சறிவு ஜீவனுங்களுக்கு இருந்த அறிவு, ஆறறிவு ரசிகர்களுக்கு இல்ல. ஏன்னா இது பாலா படமாச்சே!

விஷாலோட நடிப்பு? அதையெல்லாம் பாராட்டலாம். ஆனா இங்க என்ன ‘தனிநடிப்பு போட்டியா’ நடக்குது. அவரு ஸ்டேஜ் ஏறி ஸோலோவா திறமையைக் காட்டுறதுக்கு. கதையே இல்லாத படத்துல அவரு கதறிக் கதறி நடிச்சாலும் எதுவுமே ஒட்டலியே. ஆர்யா வேற தன் பங்குக்கு பாறைமேல நின்னு பத்து நிமிஷத்துக்கு திறமை காட்டுறாரு. அந்த பெரிய மனுஷன் ஹைனஸும்  (பேரென்ன, ஆங்.. எம்.ஜே. குமாரு!) ஒட்டுத்துணியில்லாம வாழ்க்கையோட எல்லைக்கே ஓடி பொணாமாகுறாரு. அப்பதானே ரசிகர்களை ரணகளமாக்குற க்ளைமாக்ஸ் வைக்க முடியும். எல்லாம் எதுக்கு?  ரெண்டு தேசிய விருது பார்சேல்ல்ல்ல்ல்ல்!!! (அட, போங்கப்பு. அது பாலா படத்துக்குத்தான் கொடுப்பாங்க. பாலா பேரு போடுற படத்துக்கெல்லாம் கொடுக்க மாட்டாங்க!)

பலகோடி மதிப்புள்ள மரம் உள்ள லாரியை எடுத்துக்கிட்டு விஷால் போனாரே, அப்புறம் என்ன ஆச்சுன்னு கேட்காதீங்க. நான் கடவுள்ல ஆர்யா, வில்லனை புதர் மறைவுல எடுத்துட்டுப் போயி என்ன பண்ணுனாரோ, அதையேத்தான் இதுல விஷாலும் பண்ணிருக்காருன்னு புரிஞ்சுக்கணும். ஆர்கே எதுக்கு, ஹைனஸோட ப்ளாஷ்பேக் என்ன, காதலிகளோட தேவை என்ன – இப்படி கேள்வி கேட்டுக்கிட்டே போகலாம். ஆனா பாலா பட கதாநாயகப் பாத்திரம் யாராவது வந்து என் குரல்வளையைக் கடிச்சுத் துப்பிருவாங்களோன்னு பயப்படுறதால…

தியேட்டரை விட்டு வெளியேவரும்போது, என்னோட சக ரசிகர்கள் எல்லாரோட முகத்தையும் பார்த்தேன். வெள்ளைத்துணியால தாடையோட சேர்த்து தலைல ஒரு கட்டு போட்டுருந்துச்சு. நெத்தியில ஒத்த ரூபாயும் தெரிஞ்சுது. நான் என் கட்டை அவுத்துட்டு, என்  நெத்தியில இருந்த ஒத்த ரூபாய எடுத்து பாக்கெட்ல போட்டுட்டு வீட்டுக்கு நடந்தேன்.

ஒல்லியாகவே இருந்தாலும் பாலா ஒரு  யானை. யானைக்கும்…

(பின்குறிப்பு : இதுவரை பாலாவின் படங்களை நான் விமரிசனத்துக்கு அப்பாற்பட்டவையாகத்தான் பார்த்திருக்கிறேன். அவன் இவன் தந்த ஏமாற்றத்தின் விளைவே இந்த விமரிசனம்.)

ஆரண்ய காண்டம்

* ‘இது ஒரு வித்தியாசமான படம். தமிழில் இதுவரை செய்யப்படாத முயற்சி’ – என்றெல்லாம் டைரக்டர் எங்கேயும் பேட்டி கொடுத்ததாக எனக்குத் தெரியவில்லை. ஆனால் அதுவே நிஜம்.

* ஒரு கதாபாத்திரம் எப்படி எல்லாம் இருக்க வேண்டும், எப்படிப் பேச வேண்டும், சிரிக்க வேண்டும், என்ன உடல்மொழி தேவை, என்ன மேனரிஸம் – எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து மெனக்கிட்டுச் செதுக்கியிருக்கும் இயக்குநரின் உழைப்பு அபாரம். கதாபாத்திரங்களுக்கான நடிகர்கள் தேர்வுக்கென தனி விருது இருந்தால் இந்தப் படத்துக்குக் கொடுக்கலாம்.

* வசனங்கள் பல இடங்களில் கைதட்டல் அள்ளுகின்றன. (வசனம் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா, ஓரம்போ வசனகர்த்தா.) சில முக்கியமான இடங்களில் புரியவில்லை. வசனம் புரியாமல் போனதால் படத்தின் கதை ஓட்டமே பலருக்குப் புரியவில்லை என்பதை தியேட்டரில் உணர முடிந்தது.

* வர வர சினிமாக்களில் சிறுவர், சிறுமியராக நடிக்கும் சைல்ட் ஆர்ட்டிஸ்களிடம் மாஸ் ஹீரோக்கள் எல்லாம் டியூசன் போக வேண்டும்போல. இந்தப் படத்தில் கொடுக்காப்புள்ளியாக வரும் சிறுவன் அசால்ட்டாக அசத்துகிறான். டயலாக் டெலிவரியிலும், முக பாவனைகளிலும் ஏக உயரத்தில் நிற்கிறான், ஸாரி நிற்கிறார்.

* காலையில் ஆரம்பித்து மாலைக்குள் முடியும் கதை என்பதால் படத்தை முதல் ஸீனிலிருந்து பார்த்தால் மட்டுமே கதையைப் புரிந்து படத்தோடு ஒன்றிப் போக முடியும். அரைமணி நேரம் கழித்து சாவகாசமாக தியேட்டருக்குள் நுழைந்த பின்வரிசை நபர்கள், ‘கதையே இல்லாம என்னத்தை படம் எடுத்திருக்கானுக…’ என்று டைரக்டரை கொஞ்சிக் கொண்டிருந்தார்கள்.

* படத்தில் விறுவிறுப்பைத் தாங்கிப் பிடிக்கும் முக்கியமான கதாபாத்திரம் பின்னணி இசை. பாடல்களே இல்லாத ஒரு படத்தில் யுவன் ஷங்கர் ராஜா. வாழ்த்துகள். ரத்தம் தெறிக்கும் காட்சிகளில் சித்தம் கலங்கடிக்கும் இடிஇசையைத் திணிக்காமல், புத்தம்புது விதமாக வயலினும் பிற வாத்தியங்களும் அந்தக் குரூரத்தை மென்மைப்படுத்துகின்றன. இம்மாதிரியான முயற்சிகளை யுவன் தொடர வேண்டும்.

* கேமரா வினோத். புதியவர் என்று நினைத்தேன். வசந்தின் ரிதம், அப்பு படங்கள் செய்துவிட்டு, பின் ஹிந்திக்குச் சென்றவர் என்றது கூகுள். பல காட்சிகள் இருள் சூழ்ந்தவை இருந்தும் மணிரத்னத்தனமாக இல்லாதது பெரிய ப்ளஸ்.

* சிறிய படம்தான். இருந்தாலும் எடிட்டர்கள் (பிரவீன், ஸ்ரீகாந்த்) சில காட்சிகளை இன்னும் வேகப்படுத்தியிருக்கலாம் என்று தியேட்டரில் ரசிகர்கள் பொறுமையிழந்து கத்தும்போது தோன்றுகிறது. இடைவேளைக்குப் பிறகு வரும் காட்சியில், சம்பத் உயிர் பிழைக்க ஓடும் காட்சியில் ஏதோ வித்தியாசமாகச் சொல்ல வருகிறார்கள் என்று மட்டும் புரிகிறது. அது என்னவென்று என் பாமர அறிவுக்குப் புரியவில்லை.

* படத்தில் மெல்லிய நகைச்சுவையை வசனங்கள் மூலமாகவே ஆங்காங்கே கிரீம்போல தடவியிருப்பது இறுக்கத்தைக் குறைக்கிறது.

* நடிப்பில் முதலிடம் பசுபதியாக வரும் சம்பத்துக்கு. அடுத்தது கொடுக்காப்புள்ளியாக அந்தச் சிறுவனுக்கு. மூன்றாவது கஜேந்திரன் பாத்திரத்தில் வரும் ராம்போ ராஜ்குமாருக்கும், சப்பையாக வரும் ரவிகிருஷ்ணாவுக்கும்.

* இந்தப் படம் தியேட்டரில் தாக்குப் பிடித்து ஓடினால் ரசனை மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று மகிழலாம். குழந்தைகளை அழைத்துப் போவதைத் தவிர்க்கலாம். ஆண்கள் மட்டுமே பார்க்கக்கூடிய படம் என்றெல்லாம் சொல்ல மாட்டேன். பெண்கள் இம்மாதிரி படங்களை ரசிக்க மாட்டார்கள் என்று நாம் என்ன சொல்வது?

* தியேட்டரில் சென்று பார்த்தால் மட்டுமே ஆரண்ய காண்டத்தை உணர்ந்து ரசிக்க முடியும். டிவிடியிலோ, பிற்காலத்தில் டீவியில் ஒளிபரப்பாகும்போதோ பார்த்தால் நிச்சயம் பொறுமையைச் சோதிக்கவே செய்யும். ஆகவே நல்ல சினிமா ரசிகர்களே…

140 எழுத்துப் பறவை!

ட்விட்டர், பேஸ்புக் வகையறாக்கள் மீது எனக்கு அவ்வளவாக ஆர்வம் இருந்ததில்லை. எனவே பலகாலமாக அதனுள் எனது வலதுகாலை வைக்கவில்லை. எல்லாமே நேரத்தை விழுங்கும் முதலைகளாக மட்டுமே தெரிந்தன.

இருந்தாலும் எளிதில் விஷயங்களை அப்-டேட் செய்துகொள்ள இந்த முதலைகள்தான் இன்றைக்கு உதவுகின்றன என்பதை மறுக்க முடியாதே. தவிர, இவ்விரண்டிலும் அக்கவுண்ட் இல்லாவிட்டால் வாழத் தகுதியில்லாதவர்கள் பட்டியலில் என்னையும் சேர்த்துவிடுவார்கள் என்ற பயத்தில், அவற்றினுள் என் இடதுகாலை எடுத்துவைத்தேன்.

இப்போது வரை முகப்புத்தகத்தில் எனக்கு அவ்வளவாக ஈடுபாடு ஏற்படவில்லை. அதனுள் செல்லும்போதெல்லாம் ஏதோ நடுத்தெருவில் நிற்பதுபோன்ற உணர்வு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. கல்லூரி நண்பர்கள் பலரும் அதில் இருப்பதால், அதில் அவ்வப்போது முகம் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

ஆனால் ட்விட்டரில் இருக்கும் சுவாரசியம் வேறெந்த சமூக வலைத்தளங்களிலும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. 140 எழுத்துப் பறவையைத் துரத்திச் செல்வது எனக்குப் பிடித்திருக்கிறது. ஒரு வருடத்துக்கும் மேல் ட்விட்டரில் இயக்கிக் கொண்டிருக்கிறேன். என் பின் தொடரும் நிழலின் குரலாக இருக்கும் ஆயிரம்+ நண்பர்களுக்கு நன்றி.

ட்விட்டரில் என்னைத் தொடர : http://twitter.com/writermugil

எனது சில ட்வீட்ஸ்:

சாருவின் எழுத்துகளைவிட ராமராஜனின் சட்டைகள் எனக்குப் பிடிக்கும்!

செய்தி :விஜயின் சுறாவுக்கு எந்தவெட்டும் இல்லாமல் கிளீன் யு சான்று வழங்கியுள்ளது சென்சார்போர்டு. # படத்தோட எடிட்டருக்கே எதை வெட்ட, எதை ஒட்டன்னு ஒரு எழவும் புரியலையாம்.

செல்பேசிக் கொண்டே வண்டி ஓட்டுபவர்களைக் கண்டால் கடுப்பாகிறது. # டிரைவிங்கில் செல்லடிக்கும் சலனம் – நடுரோட்டில் பெல்லடிக்கும் மரணம்.

வாழ்க்கையில் நிரந்தரமாக மறந்துவிட வேண்டும் என்று நினைத்த ஒரு விஷயம் திடீரென நினைவுக்கு வந்துவிட்டது # செம்மொழி பாடல் சுருதிகாசன் குரலு ;(

வரவர விஜய் படங்களில் கிராபிக்ஸ் செலவு அதிகம்ஆகிறதாம். அவர் உதடுகூட அசைக்காமல் வசனம்பேசுவதால் மெனக்கிட்டு கிராபிக்ஸ் செய்யவேண்டியதுள்ளதாம் 😉

நேற்று கலைஞருக்காக அண்ணா சாலையில் வைக்கப்பட்ட ப்ளக்ஸில் தமிழ் மிளிர்ந்தது – ‘குறலோவியமே!’

நந்தலாலா பார்த்துவிட்டேன். உடனே Kikujiro பார்க்கவேண்டும் போலிருக்கிறது. டிவிடி வாங்க வேண்டும். மிஷ்கினிடம் கிடைக்குமா?

என் ஹெட்போனில் விருதகிரி பாடல்கள்தான் காலையில் இருந்து ஓடிக் கொண்டிருக்கின்றன. நான் அதைக் காதில் மாட்டவில்லை.

அண்ணாசாலையில் தமிழர்களின் முகவரியே என்று கலைஞருக்கு பேனர் வைத்திருந்தார்கள். எனது பாஸ்புக் முதல் கேஸ் கனெக்‌ஷன்வரை அட்ரஸ் மாற்றவேண்டும்போல!

4வது முறை மதிமுக பொதுச் செயலரானார் வைகோ! – யாருமே இல்லாத கடையில் யாருக்கு டீ ஆற்றிக் கொண்டிருக்கிறாரோ?

மங்காத்தாவும் ஊத்திக்கிட்டா அஜித்துக்கு பிரச்னையே இல்ல, ‘தல’ப்பாக்கட்டு பிரியாணி கடை ஆரம்பிச்சுடலாம்.

சிவப்புகருப்புசிவப்பு கொடிபார்த்து நீண்டநேரம் எந்த கட்சி என்று யோசித்தேன். பின்பே தானேஅழிந்த தானைத்தலைவரின் சிரித்தமுகம் நினைவில்வந்தது.

லிபியாவில்தவிக்கும் இந்தியர்களைமீட்க 4கப்பல் 2விமானம் -ஜி கே வாசன்- அப்டியே தமிழக காங்.தலைகளை அதுலஏத்தி லிபியால விட்டுட்டு வந்தா நிம்மதி.

டிவிடியில் 3இடியட்ஸ் பார்த்தேன். இதன் தமிழ் வெர்ஸனில் அமீர்கான் பாத்திரத்தில் நடித்தால் விஜய்க்கு நல்லது நடிக்காவிட்டால் படத்துக்கு நல்லது.

கலைஞர் (துரைமுருகனிடம்) : காங்கிரஸ்காரங்களை கேலி பண்ணுனியா? துரைமுருகன் : என்ன கேலி பண்ணுனியா?

கொகதிசொகதிஆயீஇ நெரமொரஇகமொர ஒகதிஒயயியீஇயீஇ ஒலிஸிஒலிஸி மொகதஒயபீபீயீஇ #listening harrisjayaraj’s Song Chorus

திடீரென உங்கள் வங்கிக் கணக்கில் ஆயிரத்துச் சொச்ச ரூபாய் உயர்ந்திருந்தால் குழம்பாதீர்கள்… ஜி ஜி வாக்காளர்ஜி டூஜி த்ரீஜி டெக்னாலஜி…

எனக்கு கண்ணாலம் ஆனப்புறம்தான் இந்தியா உலகக்கோப்பை ஜெயிக்கிறதைக் கண்ணால பார்க்க முடிஞ்சது. தெரிஞ்சிருந்தா, 2007லயே கண்ணாலம் கட்டிருப்பேன்.

உரம் விநியோகம் சம்பந்தமா திங்கக்கிழமை அழகிரிக்கு டெல்லில மீட்டிங்காம். பாவம் அந்தப்புள்ளை, ‘விநியோகத்துலயே’ வாழ்க்கை போயிரும்போல!

இன்றைக்கு தேதியில், கோல்டுபாலு உருவபொம்மை விற்கும் வியாபாரம் ஆரம்பித்தால், ஒரே பாட்டில் பெரிய பணக்காரனாகிவிடலாம்.

ஏதோ ஓரிடத்தைக் கடக்கும்போது, உணரும் ஏதோ ஒரு மணம், மனத்தை ஏதோ ஒரு நினைவுக்குள் அழைத்துச் சென்றுவிடுகிறது. மனம்! மணம்!

பெத்தான் செத்தான் பாடல் FMல் கேட்ட, புதுசினிமா குறித்த அப்டேட் இல்லாத என் அம்மா சொன்னது: ‘இது என்ன கேவலமா இருக்குது. சிம்பு பாட்டா?’

2016ல் ஸ்டாலினின் நாற்காலிக் கனவு பலிக்க லேட்டஸ்ட்டாக செத்துப்போன சாய்பாபா அருள்புரிவார் என்ற நம்பிக்கையுடன்…

‘அ’வின் மாபெரும் வெற்றிக்கு அடித்தளம் போட்டவை இரண்டு ‘ஆ’க்கள். ஆராசா. ஆற்காட்டார்.

தும்மலை அடக்கிக் கொண்டிருக்கிறேன். அம்மா பதவியேற்கும் சமயம் வரும்போது சொல்லுங்கள் 😉

இனி டிராபிக் அதிகமுள்ள இடங்களில், டூவிலரை அணைத்து, உருட்டிச் செல்ல வேண்டியதுதான். நேரத்தைவிட, பெட்ரோலின் மதிப்பு அதிகம்!

புகை பிடித்தல் உடலுக்குத் தீங்கானது, நீங்கள் சூப்பர் ஸ்டாராகவே இருப்பினும்!

இப்போது அடிக்கடி கேட்கும் பாடல்கள் எங்கேயும் காதல். அடுத்து ஹாரிஸின் இசையில் வேறு ஜெராக்ஸ் பாடல்கள் வந்தபின், இதை நிச்சயம் கேட்கமாட்டேன்.

திமுகவின் விக்கெட்டுகளை ஒரேடியாக அள்ளிவிட்டதாக அதிமுக பவுலர்கள் கொண்டாட அவசியமில்லை. திமுக பேட்ஸ்மேன்கள் அவுட் எல்லாமே ஹிட் விக்கெட்.

இன்று எதுவுமே ட்வீட் செய்யத்தோன்றவில்லை என்பதை இங்கே ட்வீட் செய்யக் கடமைப்பட்டிருக்கிறேன்.