மன்னர் மானிய ஒழிப்பு

இந்திரா காந்தி அரசு, மன்னர் மானிய ஒழிப்பில் தீவிரம் காட்டியது. அப்போது அதிகபட்ச ஆண்டு மானியமாக வரிவிலக்கோடு ரூ. 26,00,000 பெற்றவர் மைசூர் மகாராஜா ஜெய சாமராஜேந்திர உடையார். குறைந்தபட்சமாக சௌராஷ்டிராவிலிருந்த குட்டி சமஸ்தானமான கட்டோடியாவின் ராஜா ரூ. 192 பெற்றுக் கொண்டிருந்தார். எதற்கு அநாவசியச் செலவு என்று இந்திரா, மன்னர் மானிய ஒழிப்புத் தீர்மானத்தை அந்த செப்டெம்பரில் பாராளுமன்றத்தில் கொண்டுவந்தார். கீழவையில் நிறைவேறியது. ஆனால் மேலவையில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
‘மானியத்தை மட்டும் ஒழித்தால் போதாது. மன்னர்களின் பின் ஒட்டிக்கொண்டிருக்கும் வெற்றுப்பட்டங்களையும் ஒழிக்கவேண்டும்.’ இந்திரா, அவசரச் சட்டம் ஒன்றை நிறைவேற்ற முடிவுசெய்தார். ஹைதராபாத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த அப்போதைய ஜனாதிபதி வி.வி. கிரி, இந்திராவின் விருப்பத்துக்கேற்ப அரசாணையில் கையொப்பமிட்டார். மன்னர்கள் தரப்பில் நீதிமன்றத்துக்குச் சென்றார்கள். தீர்ப்பு மன்னர்களுக்குச் சாதகமாக அமைந்தது. ‘இந்தச் சட்டம் செல்லாது.’
இந்திராவின் அடுத்த காய் நகர்த்தலை யாருமே எதிர்பார்க்கவில்லை. ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை அறிவித்தார் (1971). பங்களாதேஷ் போரில் கிடைத்த வெற்றியினால் இந்திராவுக்கு அந்தத் தேர்தலில் பூரண ஜெயம். மீண்டும் பிரதமரானார். இந்திய அரசியலமைப்பின் இருபத்தாறாவது சட்டதிருத்தத்தைக் கொண்டு வந்தார் இந்திரா. அது மன்னர் மானிய ஒழிப்பு. தீர்மானம் இரு அவைகளிலும் நிறைவேறியது. 1971, டிசம்பரில் அது சட்டமாகியது. அவர்களின் பட்டங்களும் பறிக்கப்பட்டன. ‘நாங்கள் மன்னர்களில் ஆடம்பரத்தைப் பறித்துவிட்டோம். ஆனால் அவர்கள் மனிதர்களாக வாழ வாய்ப்பு கொடுத்திருக்கிறோம்’ – இந்திரா சொன்னார். ‘சுதந்தரத்தின்போது இந்தியாவைக் கட்டமைக்கும் சக சிற்பிகள் என்று சொன்னீர்கள். இப்போது ஏதுமில்லாதவர்களாக்கி விட்டீர்கள்’ – பரோடா மகாராஜா பஃதேசிங் புலம்பினார். ‘எங்களைத் தீண்டத்தகாதவர்களாக்கி விட்டீர்கள்’ – கதறினார் ஜோத்பூர் மகாராஜா கஜ்சிங்.
வருடம் 192 ரூபாய் மானியமாகப் பெற்றுவந்த கட்டோடியா ராஜா, அதையும் இழந்தபின் சோற்றுக்கு என்ன செய்தார்? ஓர் அலுவலகத்தில் குமாஸ்தாவாக வேலைக்குச் சேர்ந்திருந்தார். ராஜா, தனது ஓட்டை சைக்கிளில் அலுவலகத்துக்குச் செல்லும்போது யாரும் அவருக்கு வணக்கம் வைக்கவில்லை.

 

உணவு சரித்திரம்

(உணவு சரித்திரம் புத்தகத்துக்கான எனது முன்னுரை)

ருசிக்கும் முன்…
எமக்குத் தொழில் இனி எழுத்து மட்டுமே என்று முடிவெடுத்து முழு நேர எழுத்தாளன் ஆன பிறகு, வரலாற்று நூல்கள் எழுதுவதில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். பிற மொழிகளில் எத்தனையோ வரலாற்று நூல்கள் செழித்துக் கிடக்கின்றன. தமிழில் சரித்திர நாவல்களுக்குப் பஞ்சமில்லை. ஆனால், வரலாற்று நூல்கள் அவ்வளவாக இல்லை என்ற ஆதங்கம் எனக்கு உண்டு. அதுவும் ஒரு காரணமே. பயணம் மனத்திருப்தியுடன் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
எவை குறித்த வரலாறுகளை வருங்காலத்தில் எழுத வேண்டும் என்று மனத்தினுள் விதைத்திருக்கும் திட்டங்கள் நிறைய. அதில் ஒன்றுதான் உணவின் சரித்திரம் குறித்து விரிவான புத்தகம் எழுதுவது. ஓர் எழுத்தாளனுக்கு, எந்த ஒரு விஷயம் குறித்தும் தொடர்ந்து எழுத, மிகச் சரியான களம் அமைதல் அவசியம். எனக்கு அப்படி அமைந்த களம் – புதிய தலைமுறை குழும சேனல்கள். அவற்றில் ஒளிபரப்பாகி வரும் ‘கொஞ்சம் சோறு, கொஞ்சம் வரலாறு’ என்ற உணவின் வரலாறும் சமையலும் கலந்த நிகழ்ச்சி.
அந்த நிகழ்ச்சிக்கான ஆய்வு – எழுத்துப் பணியை நான்காவது வருடமாகச் செய்து கொண்டிருக்கிறேன். என் எழுத்தின் மேல் பரிபூரண நம்பிக்கை வைத்து அதற்கான வாய்ப்பு வழங்கிய அமரர். திரு. பாலகைலாசத்துக்கு என் மானசீக நன்றி. நண்பர் ஹரி கிருஷ்ணன் உள்ளிட்ட கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு குழுவினருக்கு என் மனமார்ந்த நன்றி.
எனில், இந்தப் புத்தகம் அந்நிகழ்ச்சியின் எழுத்து வடிவமா? ‘இல்லை’. அந்நிகழ்ச்சிக்காக செய்த ஆய்வு, இந்த நூலை எழுதுவதற்குப் பெரிதும் உதவியாக இருந்தது. அந்த ஆய்வுகளின் அடிப்படையில் ஒவ்வொரு உணவினது சரித்திரம் குறித்தும் இந்தப் புத்தகத்தில் விரிவாகப் பேசியிருக்கிறேன். இது ‘முதல் பாகம்’ மட்டுமே. இன்னும் பேசப்பட வேண்டிய வரலாறு ஏராளம். அவை அடுத்தடுத்த பாகங்களில் தொடரும்.
மற்றுமொரு விளக்கத்தையும் வாசகர்கள் முன் வைக்கக் கடமைப்பட்டிருக்கிறேன். எந்த விஷயத்தைப் பற்றி எழுதினாலும் விறுவிறுப்பும் சுவாரசியமும் எங்கும் குறையாதபடி எழுதுவதில் கூடுதல் கவனம் செலுத்துவேன். ஆனால், இந்தப் புத்தகம் அந்த வகையில் சேராது. மனத்துக்குப் பிடித்த நபருடன், அற்புதமான சூழலில், மெழுகுவர்த்தி வெளிச்சத்தில், மென்மையான இசையோடு, நாவிற்குப் பிடித்தமான உணவு வகைகளை, ரசித்து ருசித்து நிதானமாகச் சாப்பிடும் சுகம் எப்படிப்பட்டதோ, இந்தப் புத்தகத்தை வாசிக்கும் அனுபவமும் அப்படிப்பட்டதாக இருக்கும் என்று நம்புகிறேன்.
உணவு சரித்திரம் – அடுத்த பாகத்தில் சந்திப்போம்.
அன்புடன்,
முகில்

புலி வேட்டை

இந்தியாவை ஆண்டு கொண்டிருந்த பிரிட்டிஷார், புலி வேட்டையாடுவதை கௌரவமான ஒன்றாகக் கருதினார்கள். சுட்ட புலியைக் குப்புறப்போட்டு, அதன்முன் லேடி வைஸ்ராயோடு நின்று, துப்பாக்கியுடன் சிரித்தாற்போல புகைப்படம் எடுத்துக் கொள்வது என்பதை அளப்பரிய சாதனையாக நினைத்தார்கள். தாங்கள் சுடும் புலி, குறைந்தபட்சம் பத்து அடி நீளமாவது இருக்க வேண்டும் என்பதிலும் கவனமாக இருப்பார்கள். புலி வேட்டையாடுவதில் மூன்று முறைகளைக் கடைபிடித்தார்கள்.

புலி நடமாட்டமுள்ள பகுதிகளை புக்கிகள் கண்டறிந்து சொல்லுவார்கள். அதற்கு அருகிலுள்ள பகுதியில் மகாராஜா, மரத்தில் மேலேறி மேடையில் துப்பாக்கியோடு காத்திருப்பார். கீழே சற்று தொலைவில் ஒரு ஆடோ, மாடோ, மானோ உயிரோடு கட்டப்பட்டிருக்கும். சாயங்கால வேளையில் புலிக்குப் பசி எடுக்க ஆரம்பிக்கும். தன் இடத்தில் இருந்து எழுந்து, சோம்பல் முறித்து, இரையை மோப்பம் பிடித்து வரும். கட்டப்பட்டிருக்கும் விலங்கு கத்த, புலி பாய, மகாராஜாவின் துப்பாக்கியிலிருந்து குண்டும் பாயும். இது முதல் முறை.

அதிகாலையிலேயே புலிக்கு இரை வைத்துக் காத்திருப்பார்கள். புலி, இரையை அடித்து இழுத்துச் சென்று சாப்பிட ஆரம்பிக்கும். அப்போது யானைமீது சென்று புலியைச் சுற்றி வளைத்துச் சுடுவது இரண்டாவது முறை. இந்த முறையில் மகாராஜாவின் குறி தப்பினால், வேறு யாராவது சுட்டு விடுவார்கள். ஏனெனில் புலி, பூ பறித்துக் கொண்டிருக்காதே.

மூன்றாவது முறை மகாராஜாக்கள் கொஞ்சமும் நோகாமல் நொங்கெடுக்கும் முறை. அதாவது மகாராஜா காட்டில் ஒரு பகுதியில் தனக்கான மேடையில் சௌகரியமாக உட்கார்ந்து கொள்ளுவார். யானைகளோடும் தீப்பந்தங்களோடும் முரசு கொட்டுபவர்களோடும் ஒரு படையினர் புலியின் இருப்பிடத்துக்கே சென்று, அதனை மிரள வைத்து மகாராஜா காத்திருக்கும் பகுதிக்கு ஓட்டி வருவார்கள். மகாராஜா அதை டுமீல் செய்வார்.

ஆனால், ரேவா சமஸ்தான மகாராஜா, புலி வேட்டைக்கு நான்காவதாக ஒரு புதிய முறையை உபயோகப்படுத்தினார். அவரிடம் பழக்கப்படுத்தப்பட்ட குரங்கு ஒன்று இருந்தது. வேட்டைக்கான மேடையில் அவர் இருக்கும்போது, அந்தக் குரங்கு மரத்தின் உச்சியில் இருக்கும். மகாராஜா, ஜாலியாக புத்தகங்கள் படித்துக் கொண்டிருப்பார். புலி அந்தப் பக்கமாக வந்தால், அந்தக் குரங்குக்குத் தெரிந்துவிடும். உடனே இறங்கிச் சென்று மகாராஜாவிடம் சத்தம் எழுப்பும். மகாராஜாவும் புத்தகத்தைக் கீழே வைத்துவிட்டு துப்பாக்கியைத் தூக்குவார்.

வேட்டை குறித்த மிரள வைக்கும் புள்ளிவிவரங்கள் சில. கூச் பிகார் மகாராஜா நிருபேந்திர நாராயண், தன் வாழ்நாளில் 365 புலிகள், 438 காட்டெருமைகள், 207 காண்டாமிருகங்கள், 311 சிறுத்தைகளை வேட்டையாடியிருக்கிறார். சர்குஜா சமஸ்தான ராஜா, ராமானுஜ் சரன் சிங், தம் வாழ்நாளில் சுட்ட புலிகளின் எண்ணிக்கை மட்டும் ஆயிரத்தைத் தாண்டும். ரேவா சமஸ்தான மகாராஜா குலாப் சிங்கில் புலி ஸ்கோர் தொள்ளாயிரத்துச் சொச்சம்.

(அகம் புறம் அந்தப்புரம் நூலில் இருந்து.)

ஹிட்லர் – சொல்லப்படாத சரித்திரம்

ஹிட்லர் – சொல்லப்படாத சரித்திரம் – இது எனது புதிய புத்தகம். சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பக வெளியீடாக வந்திருக்கிறது. 448 பக்கங்கள். 300 ரூபாய். கடைகளில், ஆன்லைன் விற்பனைத் தளங்களில் கிடைக்கிறது.

இந்தப் புத்தகத்துக்காக நான் எழுதிய முன்னுரை இங்கே.

மீண்டும் ஹிட்லர்?
ஹிட்லரைப் பற்றிய புத்தகமா? ஏற்கெனவே சந்தையில் பல புத்தகங்கள் இருக்கிறதே. இன்னொரு புத்தகம் எதற்கு எழுதப்படவேண்டும்?

இந்தப் புத்தகத்தை எழுதத் தொடங்கும்முன் எனக்கான அடிப்படைக் கேள்விகூட இதுதான்.

பேசப் பேசத் தீராத விஷயங்கள் கொண்ட வாழ்க்கை – பல்வேறு பரிமாணங்களில் ஆராய்ந்து எழுதினாலும் வீரியமும் சுவாரசியமும் குறையாத பாத்திரம் – இன்னும் சில நூற்றாண்டுகள் கழித்து வரப்போகும் தலைமுறையினரையும் ‘இப்படிக்கூட ஒருவன் வாழ்ந்திருக்க முடியுமா?’ என்று நடுநடுங்க வைக்கும் குணாதிசயம் – கொடூரங்களைத் தாண்டியும் நம்மையறியாமலேயே நமக்குள் நம்பிக்கையை விதைக்கும் பிறவி ஹிட்லர். ஆகவே, ஹிட்லரில் மையம் கொண்டேன்.

சாமானியன் ஒருவன், தேச மக்களின் ஆதரவை, நம்பிக்கையைப் பெற்று, நாஜி என்ற மதத்தை வளர்த்து, தன்னைக் கடவுளாக வழிபடும் ஒரு பெருங்கூட்டத்தை உருவாக்கி, ஜெர்மனி என்ற மாபெரும் தேசத்தின் தலைவிதியைத் தன் சுண்டு விரலால் எழுதும் வலிமை கொண்ட சர்வாதிகாரியாக சிம்மாசனத்தில் அமர்வது சாதாரண விஷயமில்லை. எனில், அப்போதைய ஜெர்மனியில் ஒரு சர்வாதிகாரிக்கான தேவை இருந்திருக்கிறது. சர்வ வல்லமை கொண்ட ஒரு மீட்பர் வரமாட்டாரா என்று ஜெர்மானியர்களுக்கு ஏக்கமும் இருந்திருக்கிறது. அது ஏன்? பின்னணி என்ன? இந்தப் புள்ளியிலிருந்துதான் தொடங்குகிறது இப்புத்தகம்.

வளமிக்கக் குடும்பத்தில், பலமானவாகப் பிறந்தவன் அல்ல ஹிட்லர். தாயின் அன்புக்குக் கட்டுப்பட்டு, இறைபக்தியுடன் நல்லொழுக்கம் போதிக்கப்பட்டு வளர்ந்த சாதாரணச் சிறுவன்தான். படிப்பிலும் கெட்டி அல்ல. தலைசிறந்த ஓவியனாக உருவாக வேண்டும் என்ற மென்மையான லட்சியத்துடன் வளர்ந்த இயல்பான இளைஞனே. ஆனால், ஒரு கட்டத்தில் தூரிகையைத் தூக்கிக் கடாசிவிட்டு, துப்பாக்கியை நம்பி, ரத்தம் தொட்டு குரூரங்களைக் காட்சிப்படுத்தும் கொடுங்கோலனாக மாறியிருக்கிறான் எனில் அது எந்த மாதிரியான சூழ்நிலை? என்ன மாதிரியான மனநிலை?

இந்தப் புத்தகத்தில் ஹிட்லருக்குள்ளிருந்தும் பேசியிருக்கிறேன். ஹிட்லருக்கு வெளியிலிருந்தும் பேசியிருக்கிறேன். அறிந்த நிகழ்வுகளின் அறியப்படாத ரகசியங்களைப் விவரித்திருக்கிறேன். சொல்லப்பட்ட சரித்திரத்தின் சொல்லப்படாத பின்புலத்தைத் தந்திருக்கிறேன். பதியப்பட்ட காட்சிகளின் பதியப்படாத கோணங்களைக் காட்டியிருக்கிறேன். மறைக்கப்பட்ட உண்மைகளை, மறுக்கப்பட்ட சர்ச்சைகளைப் பதிந்திருக்கிறேன். அன்பர் ஹிட்லரின் அந்தரங்கத்தையும் அதனளவில் அணுகியிருக்கிறேன்.

தமிழ் வாசகர்களுக்கு ஹிட்லர் குறித்த புதிய தரிசனங்களை இந்தப் புத்தகம் நிச்சயம் அளிக்கும் என்ற நம்பிக்கையுடன்…

முகில்
26.07.2014

*

புத்தகத்தை வாங்க :

SixthSense Publication :

10/2(8/2), Police Quarters Road

T.Nagar,Chennai-600017

(Backside of Nathella,South Usman Road)

Phone: 044-24342771, 044-65279654, 7200050073

10 % சலுகையில் வாங்க : chennaishopping.com

http://bit.ly/1sqTSiH

Dial For Books :

+91-94459 01234 | +91-9445 97 97 97

 

 

 

கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு 100

அல்வா.

இந்த ஒரு  வார்த்தையை வைத்துக் கொண்டு உங்கள் மனத்தில் தோன்றும் அர்த்தமுள்ள கேள்விகளைக் கேளுங்கள்.

உதாரணத்துக்கு…

அல்வாவைக் கண்டுபிடித்தது யாராக இருக்கும்? அல்வாவின் ஆதி வடிவம் எப்படி இருந்திருக்கும்? அது வேறு நாட்டின் இனிப்பு பதார்த்தம் என்றால் இந்தியாவுக்குள், தமிழ்நாட்டுக்குள் எப்படி புகுந்திருக்கும்? இல்லை, இங்கு நம்மவர்களின் பாரம்பரிய பதார்த்தம் என்றால், இங்கிருந்து இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கும், பிற கண்டங்களுக்கும் எப்படி பரவியிருக்கும்? உலகில் இன்று எத்தனை விதமான அல்வாக்கள் உள்ளன?

இன்னும் பல கேள்விகள் உதிக்கலாம்.

இந்தக் கேள்விகளுக்கான விடையைத் தேடுவதே, தேடித் தொகுப்பதே, தொகுத்ததைக் காட்சிப்படுத்துவதே ‘கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு’ நிகழ்ச்சியின் மையக்கரு. அல்வாவையே எடுத்துக் கொள்வோம். அல்வா என்றதும் நமக்கு திருநெல்வேலியின் நினைவும் நெய்யாக ஒட்டிக் கொண்டு வரும். ஆக, திருநெல்வேலிக்கு அல்வா எப்படி நுழைந்தது, எவ்விதம் பெயர் பெற்றது, திருநெல்வேலியில் அல்வா எப்படி தயாராகிறது என்பதையும் சேர்த்து காட்சிப்படுத்துவது கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு நிகழ்ச்சியின் சிறப்பு.

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சி இது. ஆரம்பமான முதல் எபிசோடிலிருந்தே பெருத்த வரவேற்பைப் பெற்றது. நிகழ்ச்சியின் ஆரம்ப எபிசோடுகளின் ‘ஆய்வு – எழுத்து’ பணியை அன்பிற்குரிய பா. ராகவன் மேற்கொண்டார். 31-வது எபிசோடிலிருந்து நிகழ்ச்சிக்கான ‘ஆய்வு – எழுத்து’ப் பணியை நான் மேற்கொண்டு வருகிறேன். இதோ நாளைய எபிசோட் (16 மார்ச் 2014, ஞாயிறு) கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு நிகழ்ச்சியின் 100வது எபிசோட். இந்த சிறப்பு எபிசோடில் பிஸ்கட்டின் வரலாறு பேசப்படுகிறது.

புதிய தலைமுறை டீவியில் வாரம் ஒருமுறை ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சி, கடந்த சில மாதங்களாக புதுயுகம் டீவியில் வாரம் இருமுறை ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. அல்வா, பிஸ்கட், கத்தரிக்காய் என ஏதாவது ஓர் உணவுப்பொருளை எடுத்துக் கொண்டு அதன் வரலாற்றை, உணவுக் குறிப்புகளை கொடுப்பது ஒருவிதம். அல்லது, கும்பகோணம், தூத்துக்குடி, கோவா என்று ஊர்களுக்குச் சென்று அந்தந்த ஊரின் வரலாற்றைப் பேசியபடி, அந்தந்த மண்ணுக்கான பாரம்பரிய உணவுகளை, சிறப்பு சுவையைப் பேசுவது இன்னொரு விதம். இந்த இரண்டு விதங்களிலும் கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது.

எபிசோடுகள் வளர வளர, இந்த நிகழ்ச்சிக்கான எழுத்துப்பணி மிகவும் சவாலானது. காரணம் ‘கூறியது கூறல்’ ஆகிவிடக்கூடாதல்லவா. அதே சமயம், நாம் கருவாக எடுத்துக் கொண்டிருக்கும் உணவு குறித்து வரலாறு பேசலாம். ஆனால், அதைக் கொண்டு சமையல் செய்ய அதிகம் வாய்ப்பிருக்காது. உதாரணம், நாவல் பழம் குறித்த வரலாறு பேசலாம். ஆனால், அதைக் கொண்டு பதார்த்தங்கள் அதிக அளவில் செய்ய இயலாது. ஆரஞ்சு என்று எடுத்துக் கொண்டால், அதன் வரலாறு பேசலாம், அதைக் கொண்டு பதார்த்தங்களும் செய்யலாம். ஆனால், நினைத்த நேரத்தில் ஆரஞ்சைப் படம் பிடிக்க முடியாது. அதற்கான சீஸன் வரும்வரை காத்திருக்க வேண்டும் – அதற்கான நல்ல தோட்டம் கிடைக்க வேண்டும். தவிர, படப்பிடிப்பு குழுவினர் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு ஊருக்கு ஓட வேண்டும். நேர நெருக்கடி. ஆக, அதற்கு ஏற்றாற்போலும் ‘பாடுபொருளைத்’ தேர்ந்தெடுக்க வேண்டும்.  இப்படிப் பல சவால்கள்.

ஒவ்வொரு எபிசோடுக்கும் புதுப்புது விஷயங்களை யோசிப்பது, வரலாற்றைத் தேடிப் பிடிப்பது, அந்தந்த பாடுபொருளுக்கேற்ப விதவிதமான சுவாரசியமான வரலாற்றைச் சேர்ப்பது என மிகுந்த மனமகிழ்வுடன் இந்த ‘ஆய்வு – எழுத்துப்’ பணியை செய்து வருகிறேன். ‘அடை’ என்பதற்கான வரலாறு என்னவாக இருக்க முடியும்? டபரா செட் எப்படி உருவாகியிருக்கும்? சட்னியின் வரலாறு என்ன? அம்மிக்கு வரலாறு உண்டா? இந்திய சமையலறைகளுக்கு மிக்ஸி வந்த வரலாறு என்ன? இப்படிப் பலப்பல சுவாரசியமான கேள்விகளுக்கான விடைகளைத் தேடுவது என்பது… எனக்குப் பிடித்திருக்கிறது.

இதோ நூறைத் தொட்டுவிட்டோம் என்று எண்ணும்போது திருப்தி. மகிழ்ச்சி. மனநிறைவு. உணவும் வரலாறும் பேசும் தமிழின் முதல் நிகழ்ச்சி இதுவே. இனி இதுபோன்ற நிகழ்ச்சிகளை உருவாக்கலாமே தவிர, இதைவிடச் சிறந்த நிகழ்ச்சியை உருவாக்குவது என்பது ஆகப்பெரிய சவால்.

கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு குழுவினருக்கு (நான் அறிந்த/அறியாத ஒவ்வொருவருக்கும் என்) வாழ்த்துகள். நிகழ்ச்சியின் அகமாகவும் புறமாகவும் இயங்கிக் கொண்டிருக்கும் ஹரிக்கு என் வாழ்த்துகள். புதிய தலைமுறை, புதுயுகம் சேனல்களுக்கு என் நன்றி.

இன்னும் பேசப்பட வேண்டிய சுவையான வரலாறு ஏராளம் இருக்கிறது. பணி தொடர்கிறது.