அதே கண்கள்

இதற்காகத்தான் நீண்ட நாள்களாகக் காத்திருந்தோம். இறுதியில் அருமையான, எங்கள் கதைக்குப் பொருத்தமான தலைப்பு ஒன்று முடிவாகிவிட்டது.

திருக்குமரன் எண்டெர்டெய்ன்மெண்ட் சி.வி. குமார் தயாரிப்பில், நண்பர் ரோஹின் இயக்கத்தில், கலையரசன், ஷிவதா, ஜனனி, பாலசரவணன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘அதே கண்கள்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

ஒளிப்பதிவு ரவிவர்மன் நீலமேகம். இசை ஜிப்ரான். எடிட்டிங் லியோ ஜான் பால். ரோஹினும் நானும் இணைந்து கதை, திரைக்கதை உருவாக்கியுள்ளோம். படத்துக்கு வசனம் எழுதியிருக்கிறேன். விரைவில் First Look உடன் சந்திக்கிறேன். 🙂

உணவு சரித்திரம்

(உணவு சரித்திரம் புத்தகத்துக்கான எனது முன்னுரை)

ருசிக்கும் முன்…
எமக்குத் தொழில் இனி எழுத்து மட்டுமே என்று முடிவெடுத்து முழு நேர எழுத்தாளன் ஆன பிறகு, வரலாற்று நூல்கள் எழுதுவதில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். பிற மொழிகளில் எத்தனையோ வரலாற்று நூல்கள் செழித்துக் கிடக்கின்றன. தமிழில் சரித்திர நாவல்களுக்குப் பஞ்சமில்லை. ஆனால், வரலாற்று நூல்கள் அவ்வளவாக இல்லை என்ற ஆதங்கம் எனக்கு உண்டு. அதுவும் ஒரு காரணமே. பயணம் மனத்திருப்தியுடன் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
எவை குறித்த வரலாறுகளை வருங்காலத்தில் எழுத வேண்டும் என்று மனத்தினுள் விதைத்திருக்கும் திட்டங்கள் நிறைய. அதில் ஒன்றுதான் உணவின் சரித்திரம் குறித்து விரிவான புத்தகம் எழுதுவது. ஓர் எழுத்தாளனுக்கு, எந்த ஒரு விஷயம் குறித்தும் தொடர்ந்து எழுத, மிகச் சரியான களம் அமைதல் அவசியம். எனக்கு அப்படி அமைந்த களம் – புதிய தலைமுறை குழும சேனல்கள். அவற்றில் ஒளிபரப்பாகி வரும் ‘கொஞ்சம் சோறு, கொஞ்சம் வரலாறு’ என்ற உணவின் வரலாறும் சமையலும் கலந்த நிகழ்ச்சி.
அந்த நிகழ்ச்சிக்கான ஆய்வு – எழுத்துப் பணியை நான்காவது வருடமாகச் செய்து கொண்டிருக்கிறேன். என் எழுத்தின் மேல் பரிபூரண நம்பிக்கை வைத்து அதற்கான வாய்ப்பு வழங்கிய அமரர். திரு. பாலகைலாசத்துக்கு என் மானசீக நன்றி. நண்பர் ஹரி கிருஷ்ணன் உள்ளிட்ட கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு குழுவினருக்கு என் மனமார்ந்த நன்றி.
எனில், இந்தப் புத்தகம் அந்நிகழ்ச்சியின் எழுத்து வடிவமா? ‘இல்லை’. அந்நிகழ்ச்சிக்காக செய்த ஆய்வு, இந்த நூலை எழுதுவதற்குப் பெரிதும் உதவியாக இருந்தது. அந்த ஆய்வுகளின் அடிப்படையில் ஒவ்வொரு உணவினது சரித்திரம் குறித்தும் இந்தப் புத்தகத்தில் விரிவாகப் பேசியிருக்கிறேன். இது ‘முதல் பாகம்’ மட்டுமே. இன்னும் பேசப்பட வேண்டிய வரலாறு ஏராளம். அவை அடுத்தடுத்த பாகங்களில் தொடரும்.
மற்றுமொரு விளக்கத்தையும் வாசகர்கள் முன் வைக்கக் கடமைப்பட்டிருக்கிறேன். எந்த விஷயத்தைப் பற்றி எழுதினாலும் விறுவிறுப்பும் சுவாரசியமும் எங்கும் குறையாதபடி எழுதுவதில் கூடுதல் கவனம் செலுத்துவேன். ஆனால், இந்தப் புத்தகம் அந்த வகையில் சேராது. மனத்துக்குப் பிடித்த நபருடன், அற்புதமான சூழலில், மெழுகுவர்த்தி வெளிச்சத்தில், மென்மையான இசையோடு, நாவிற்குப் பிடித்தமான உணவு வகைகளை, ரசித்து ருசித்து நிதானமாகச் சாப்பிடும் சுகம் எப்படிப்பட்டதோ, இந்தப் புத்தகத்தை வாசிக்கும் அனுபவமும் அப்படிப்பட்டதாக இருக்கும் என்று நம்புகிறேன்.
உணவு சரித்திரம் – அடுத்த பாகத்தில் சந்திப்போம்.
அன்புடன்,
முகில்

ஹிட்லர் – சொல்லப்படாத சரித்திரம்

ஹிட்லர் – சொல்லப்படாத சரித்திரம் – இது எனது புதிய புத்தகம். சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பக வெளியீடாக வந்திருக்கிறது. 448 பக்கங்கள். 300 ரூபாய். கடைகளில், ஆன்லைன் விற்பனைத் தளங்களில் கிடைக்கிறது.

இந்தப் புத்தகத்துக்காக நான் எழுதிய முன்னுரை இங்கே.

மீண்டும் ஹிட்லர்?
ஹிட்லரைப் பற்றிய புத்தகமா? ஏற்கெனவே சந்தையில் பல புத்தகங்கள் இருக்கிறதே. இன்னொரு புத்தகம் எதற்கு எழுதப்படவேண்டும்?

இந்தப் புத்தகத்தை எழுதத் தொடங்கும்முன் எனக்கான அடிப்படைக் கேள்விகூட இதுதான்.

பேசப் பேசத் தீராத விஷயங்கள் கொண்ட வாழ்க்கை – பல்வேறு பரிமாணங்களில் ஆராய்ந்து எழுதினாலும் வீரியமும் சுவாரசியமும் குறையாத பாத்திரம் – இன்னும் சில நூற்றாண்டுகள் கழித்து வரப்போகும் தலைமுறையினரையும் ‘இப்படிக்கூட ஒருவன் வாழ்ந்திருக்க முடியுமா?’ என்று நடுநடுங்க வைக்கும் குணாதிசயம் – கொடூரங்களைத் தாண்டியும் நம்மையறியாமலேயே நமக்குள் நம்பிக்கையை விதைக்கும் பிறவி ஹிட்லர். ஆகவே, ஹிட்லரில் மையம் கொண்டேன்.

சாமானியன் ஒருவன், தேச மக்களின் ஆதரவை, நம்பிக்கையைப் பெற்று, நாஜி என்ற மதத்தை வளர்த்து, தன்னைக் கடவுளாக வழிபடும் ஒரு பெருங்கூட்டத்தை உருவாக்கி, ஜெர்மனி என்ற மாபெரும் தேசத்தின் தலைவிதியைத் தன் சுண்டு விரலால் எழுதும் வலிமை கொண்ட சர்வாதிகாரியாக சிம்மாசனத்தில் அமர்வது சாதாரண விஷயமில்லை. எனில், அப்போதைய ஜெர்மனியில் ஒரு சர்வாதிகாரிக்கான தேவை இருந்திருக்கிறது. சர்வ வல்லமை கொண்ட ஒரு மீட்பர் வரமாட்டாரா என்று ஜெர்மானியர்களுக்கு ஏக்கமும் இருந்திருக்கிறது. அது ஏன்? பின்னணி என்ன? இந்தப் புள்ளியிலிருந்துதான் தொடங்குகிறது இப்புத்தகம்.

வளமிக்கக் குடும்பத்தில், பலமானவாகப் பிறந்தவன் அல்ல ஹிட்லர். தாயின் அன்புக்குக் கட்டுப்பட்டு, இறைபக்தியுடன் நல்லொழுக்கம் போதிக்கப்பட்டு வளர்ந்த சாதாரணச் சிறுவன்தான். படிப்பிலும் கெட்டி அல்ல. தலைசிறந்த ஓவியனாக உருவாக வேண்டும் என்ற மென்மையான லட்சியத்துடன் வளர்ந்த இயல்பான இளைஞனே. ஆனால், ஒரு கட்டத்தில் தூரிகையைத் தூக்கிக் கடாசிவிட்டு, துப்பாக்கியை நம்பி, ரத்தம் தொட்டு குரூரங்களைக் காட்சிப்படுத்தும் கொடுங்கோலனாக மாறியிருக்கிறான் எனில் அது எந்த மாதிரியான சூழ்நிலை? என்ன மாதிரியான மனநிலை?

இந்தப் புத்தகத்தில் ஹிட்லருக்குள்ளிருந்தும் பேசியிருக்கிறேன். ஹிட்லருக்கு வெளியிலிருந்தும் பேசியிருக்கிறேன். அறிந்த நிகழ்வுகளின் அறியப்படாத ரகசியங்களைப் விவரித்திருக்கிறேன். சொல்லப்பட்ட சரித்திரத்தின் சொல்லப்படாத பின்புலத்தைத் தந்திருக்கிறேன். பதியப்பட்ட காட்சிகளின் பதியப்படாத கோணங்களைக் காட்டியிருக்கிறேன். மறைக்கப்பட்ட உண்மைகளை, மறுக்கப்பட்ட சர்ச்சைகளைப் பதிந்திருக்கிறேன். அன்பர் ஹிட்லரின் அந்தரங்கத்தையும் அதனளவில் அணுகியிருக்கிறேன்.

தமிழ் வாசகர்களுக்கு ஹிட்லர் குறித்த புதிய தரிசனங்களை இந்தப் புத்தகம் நிச்சயம் அளிக்கும் என்ற நம்பிக்கையுடன்…

முகில்
26.07.2014

*

புத்தகத்தை வாங்க :

SixthSense Publication :

10/2(8/2), Police Quarters Road

T.Nagar,Chennai-600017

(Backside of Nathella,South Usman Road)

Phone: 044-24342771, 044-65279654, 7200050073

10 % சலுகையில் வாங்க : chennaishopping.com

http://bit.ly/1sqTSiH

Dial For Books :

+91-94459 01234 | +91-9445 97 97 97