கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு 100

அல்வா.

இந்த ஒரு  வார்த்தையை வைத்துக் கொண்டு உங்கள் மனத்தில் தோன்றும் அர்த்தமுள்ள கேள்விகளைக் கேளுங்கள்.

உதாரணத்துக்கு…

அல்வாவைக் கண்டுபிடித்தது யாராக இருக்கும்? அல்வாவின் ஆதி வடிவம் எப்படி இருந்திருக்கும்? அது வேறு நாட்டின் இனிப்பு பதார்த்தம் என்றால் இந்தியாவுக்குள், தமிழ்நாட்டுக்குள் எப்படி புகுந்திருக்கும்? இல்லை, இங்கு நம்மவர்களின் பாரம்பரிய பதார்த்தம் என்றால், இங்கிருந்து இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கும், பிற கண்டங்களுக்கும் எப்படி பரவியிருக்கும்? உலகில் இன்று எத்தனை விதமான அல்வாக்கள் உள்ளன?

இன்னும் பல கேள்விகள் உதிக்கலாம்.

இந்தக் கேள்விகளுக்கான விடையைத் தேடுவதே, தேடித் தொகுப்பதே, தொகுத்ததைக் காட்சிப்படுத்துவதே ‘கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு’ நிகழ்ச்சியின் மையக்கரு. அல்வாவையே எடுத்துக் கொள்வோம். அல்வா என்றதும் நமக்கு திருநெல்வேலியின் நினைவும் நெய்யாக ஒட்டிக் கொண்டு வரும். ஆக, திருநெல்வேலிக்கு அல்வா எப்படி நுழைந்தது, எவ்விதம் பெயர் பெற்றது, திருநெல்வேலியில் அல்வா எப்படி தயாராகிறது என்பதையும் சேர்த்து காட்சிப்படுத்துவது கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு நிகழ்ச்சியின் சிறப்பு.

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சி இது. ஆரம்பமான முதல் எபிசோடிலிருந்தே பெருத்த வரவேற்பைப் பெற்றது. நிகழ்ச்சியின் ஆரம்ப எபிசோடுகளின் ‘ஆய்வு – எழுத்து’ பணியை அன்பிற்குரிய பா. ராகவன் மேற்கொண்டார். 31-வது எபிசோடிலிருந்து நிகழ்ச்சிக்கான ‘ஆய்வு – எழுத்து’ப் பணியை நான் மேற்கொண்டு வருகிறேன். இதோ நாளைய எபிசோட் (16 மார்ச் 2014, ஞாயிறு) கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு நிகழ்ச்சியின் 100வது எபிசோட். இந்த சிறப்பு எபிசோடில் பிஸ்கட்டின் வரலாறு பேசப்படுகிறது.

புதிய தலைமுறை டீவியில் வாரம் ஒருமுறை ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சி, கடந்த சில மாதங்களாக புதுயுகம் டீவியில் வாரம் இருமுறை ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. அல்வா, பிஸ்கட், கத்தரிக்காய் என ஏதாவது ஓர் உணவுப்பொருளை எடுத்துக் கொண்டு அதன் வரலாற்றை, உணவுக் குறிப்புகளை கொடுப்பது ஒருவிதம். அல்லது, கும்பகோணம், தூத்துக்குடி, கோவா என்று ஊர்களுக்குச் சென்று அந்தந்த ஊரின் வரலாற்றைப் பேசியபடி, அந்தந்த மண்ணுக்கான பாரம்பரிய உணவுகளை, சிறப்பு சுவையைப் பேசுவது இன்னொரு விதம். இந்த இரண்டு விதங்களிலும் கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது.

எபிசோடுகள் வளர வளர, இந்த நிகழ்ச்சிக்கான எழுத்துப்பணி மிகவும் சவாலானது. காரணம் ‘கூறியது கூறல்’ ஆகிவிடக்கூடாதல்லவா. அதே சமயம், நாம் கருவாக எடுத்துக் கொண்டிருக்கும் உணவு குறித்து வரலாறு பேசலாம். ஆனால், அதைக் கொண்டு சமையல் செய்ய அதிகம் வாய்ப்பிருக்காது. உதாரணம், நாவல் பழம் குறித்த வரலாறு பேசலாம். ஆனால், அதைக் கொண்டு பதார்த்தங்கள் அதிக அளவில் செய்ய இயலாது. ஆரஞ்சு என்று எடுத்துக் கொண்டால், அதன் வரலாறு பேசலாம், அதைக் கொண்டு பதார்த்தங்களும் செய்யலாம். ஆனால், நினைத்த நேரத்தில் ஆரஞ்சைப் படம் பிடிக்க முடியாது. அதற்கான சீஸன் வரும்வரை காத்திருக்க வேண்டும் – அதற்கான நல்ல தோட்டம் கிடைக்க வேண்டும். தவிர, படப்பிடிப்பு குழுவினர் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு ஊருக்கு ஓட வேண்டும். நேர நெருக்கடி. ஆக, அதற்கு ஏற்றாற்போலும் ‘பாடுபொருளைத்’ தேர்ந்தெடுக்க வேண்டும்.  இப்படிப் பல சவால்கள்.

ஒவ்வொரு எபிசோடுக்கும் புதுப்புது விஷயங்களை யோசிப்பது, வரலாற்றைத் தேடிப் பிடிப்பது, அந்தந்த பாடுபொருளுக்கேற்ப விதவிதமான சுவாரசியமான வரலாற்றைச் சேர்ப்பது என மிகுந்த மனமகிழ்வுடன் இந்த ‘ஆய்வு – எழுத்துப்’ பணியை செய்து வருகிறேன். ‘அடை’ என்பதற்கான வரலாறு என்னவாக இருக்க முடியும்? டபரா செட் எப்படி உருவாகியிருக்கும்? சட்னியின் வரலாறு என்ன? அம்மிக்கு வரலாறு உண்டா? இந்திய சமையலறைகளுக்கு மிக்ஸி வந்த வரலாறு என்ன? இப்படிப் பலப்பல சுவாரசியமான கேள்விகளுக்கான விடைகளைத் தேடுவது என்பது… எனக்குப் பிடித்திருக்கிறது.

இதோ நூறைத் தொட்டுவிட்டோம் என்று எண்ணும்போது திருப்தி. மகிழ்ச்சி. மனநிறைவு. உணவும் வரலாறும் பேசும் தமிழின் முதல் நிகழ்ச்சி இதுவே. இனி இதுபோன்ற நிகழ்ச்சிகளை உருவாக்கலாமே தவிர, இதைவிடச் சிறந்த நிகழ்ச்சியை உருவாக்குவது என்பது ஆகப்பெரிய சவால்.

கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு குழுவினருக்கு (நான் அறிந்த/அறியாத ஒவ்வொருவருக்கும் என்) வாழ்த்துகள். நிகழ்ச்சியின் அகமாகவும் புறமாகவும் இயங்கிக் கொண்டிருக்கும் ஹரிக்கு என் வாழ்த்துகள். புதிய தலைமுறை, புதுயுகம் சேனல்களுக்கு என் நன்றி.

இன்னும் பேசப்பட வேண்டிய சுவையான வரலாறு ஏராளம் இருக்கிறது. பணி தொடர்கிறது.

சென்னை புத்தகக் கண்காட்சி 16.01.2014

விற்க அதற்குத் தக!

பொதுவாக காணும் பொங்கல் அன்று சென்னை புத்தகக் கண்காட்சி களைகட்டும். மாலை ஆறு மணிக்கு மேல் உள்ளே நுழையும்போதே மூச்சு முட்டும். ஆனால், இன்று?

புத்தகக் கண்காட்சி அரங்கினுள்ளே ஒரு புட்ஃபால் கோல் போஸ்ட்டையும் உள்ளடக்கி கடைக்கள் அமைத்துள்ளார்கள். அந்த கோல் போஸ்ட்டைக் குறிவைத்து சில கடைக்காரர்கள் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். (வயிற்றெரிச்சலை வேறு எப்படிச் சொல்ல?)

‘வருடந்தோறும் கூட்டம் அதிகரித்துக் கொண்டே வருகிறது, வாசிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருகிறது’ என்பது பொதுவாகச் சொல்லப்படும் ஸ்டேட்மெண்ட். ‘அது பொய்’ என்று சொல்கிறது நிகழ்காலம்.

‘சுத்தமா விளம்பரமே இல்லை. வழக்கத்தைவிட விளம்பரம் ரொம்பக் குறைவு. மக்களுக்கு புக்ஃபேர் நடக்குறதே தெரியலை’ என்பது ஒரு பதிப்பகத்தாரின் கருத்து. ‘பொருளாதார மந்தம். புக் விலையெல்லாம் அதிகமாயிட்டே போகுது. அதான் மக்கள் வாங்குறதைக் குறைச்சுக்கிட்டாங்க’ என்பது ஒரு கடைக்காரரின் ஸ்டேட்மெண்ட். ‘பொங்கலுக்கு வெளியூருக்குச் சென்றிருக்கும் தமிழ்நாட்டின் பிற மாவட்ட சென்னைவாசிகளெல்லாம் நாளைக்குள் ஊர் திரும்பிவிடுவார்கள். சனி, ஞாயிறு தினங்களில் கூட்டம் சந்தோஷப்பட வைக்கும்’ என்பது என் எண்ணம்.

இன்று, இரண்டு புத்தகங்கள் மட்டும் வாங்கினேன். எம்.ஜி.ஆர். பேட்டிகள் தொகுப்பு. கிருபாகரன் என்பவர் தொகுத்துள்ள இந்தப் புத்தகத்துக்காக பல பேட்டிகளைக் கொடுத்து உதவியவர், எனது நீண்ட நாளைய நண்பரான ஜெயபாபு. இவர் பழைய பத்திரிகைகள், புகைப்படங்கள் சேகரிப்பாளர். புத்தகம் பல இடங்களில் கிடைக்கிறது.

வாங்கிய இரண்டாவது புத்தகம், அடைபட்ட கதவுகளின் முன்னால். பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளின் அனுபவங்களைச் சொல்லும் புத்தகம். அந்தத் தாயார் ஸ்டாலில் இருந்தார்கள். பில் போட்டுக் கொடுத்தார்கள். (திருவள்ளுவர் பெரியார் மானுட ஒன்றிய பதிப்பகம் ஸ்டால் எண் 273 – 94430 58565.)

டிஸ்கவரி புக் பேலஸில் சட்டென ஒரு புத்தகத்தின் தலைப்பு கவர்ந்திழுத்தது. ‘விற்க அதற்குத் தக!’ – விற்பனையாளர்களுக்கான கையேடு. ஆனால், அட்டை வடிவமைப்பும், புத்தக வடிவமைப்பும் ஆக மோசம். விற்பனை குறித்த அந்தப் புத்தகம் தன்னைத் தானே விற்றுக்கொள்ளும் தரத்தில் இல்லாதது சோகமே.

டிஸ்கவரி புக் பேலஸில் கண்ட இன்னொரு விஷயம், பொன்னியின் செல்வன் ஆடியோ சிடி. எம்பி3 வடிவில். ஆறு சிடிக்கள் என்று நினைக்கிறேன். சுமார் 78 மணி நேரம் ஓடக்கூடியது. நல்ல முயற்சி. (ஸ்டால் எண் 700)

என்னுடைய புத்தகங்களில் சென்ற வருட வெளியீடான வெளிச்சத்தின் நிறம் கருப்பு – இந்த வருடமும் நல்ல வேகத்தில் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. இன்று அதை வாங்கிய ஒரு தம்பதி என்னிடம் பேசினார்கள். ‘உங்க புக்ல கிளியோபாட்ராதான் முதல்ல படிச்சோம். கீழ வைக்கவே முடியாம படிச்சு முடிச்சுட்டுதான் எழுந்தோம். வரலாறை இவ்வளவு சுவாரசியமா சொல்றது ஆச்சரியமான விஷயம்’ என்று தங்கள் கருத்தைச் சொன்னார்கள். இது போன்ற வாசகர்கள்தான் அடுத்த ஒரு வருடத்துக்கு இயங்கத் தேவையான சக்தியை, உற்சாகத்தைக் கொடுக்கிறார்கள். எதற்கு உழைக்கிறோம், யாருக்காக உழைக்கிறோம் என்பதற்கு ஓர் அர்த்தம் வேண்டுமே.

 

 

மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்குத்தான் தெரியும்…

முத்துநகர் எக்ஸ்பிரஸ். மூன்றாம் வகுப்பு குளிர்சாதனப் பெட்டி. நேற்றிரவு சென்னை நோக்கி மனைவி, மகள், மனைவியின் பெற்றோருடன் பயணம். எத்தனையோ வருடங்கள் இதே ரயிலில்தான் சென்று வந்து கொண்டிருக்கிறேன். இரண்டாம் வகுப்பில் டிக்கெட் கிடைக்கவில்லையென்றால், அடுத்த நாளில் டிக்கெட் கிடைக்குமா என்று மனம் அனிச்சையாக யோசிக்குமே தவிர, மூன்றாம் வகுப்பு ஏசி என்றொரு பிரிவு உண்டு என்றெல்லாம் என்றைக்குமே நினைவில் தோன்றியதில்லை. அதென்னமோ தெரியவில்லை, மகள்கள் வந்து அப்பாக்களின் இயல்பை எல்லாம் இல்லாமல் செய்து விடுகிறார்கள். மகளுக்கு என்றால் மனம் கணக்குப் பார்ப்பதை மறந்துவிட்டு மகளை மட்டுமே பார்க்கிறது.

சரி விஷயம் அதுவல்ல. எங்களோடு வந்த சக பயணிகள் குறித்தது. புதிதாக திருமணம் ஆன இளம்ஜோடி, உடன் அந்தப் பெண்ணின் அண்ணன் என மூவர். வழியனுப்ப வந்த குடும்பத்தினரின் தலையை எண்ண முடியவில்லை. தூத்துக்குடியில் நேற்றிரவு 7.50 அளவில் ரயில் நிலைய நடைமேடையில் மட்டும் 2 மிமீ மழை பதிவாகியிருக்கக் கூடும். புதுப்பெண்ணும் ரயில் பெட்டிக்குள் மழை பொழிந்தாள். அந்த சோக மேகங்கள் எல்லாம் கலைந்து ஜோடி இயல்பு நிலைக்குத் திரும்ப சில நிமிடங்கள் பிடித்தன. குழந்தை ஒன்று எதிரில் ஏதேதோ பேசி விளையாடிக் கொண்டிருந்தால் மனம் எந்தக் கஷ்டத்தில் தத்தளித்துக் கொண்டிருந்தாலும் கரையேறி விடுமல்லவா!

இங்கு நான் பேச விரும்பும் குணசித்திரம் அந்தப் பெண்ணின் அண்ணன். தன் தங்கையையும், தனது புதிய பளபளா அத்தானையும் விழுந்து விழுந்து கவனிக்க ஆரம்பித்தார் அந்த அண்ணன். உணவுப் பொட்டலத்தைப் பிரித்து வைத்து, அதில் சப்பாத்திக்கான ‘தொட்டுக்க’ வகையறாக்களை ஊற்றோ ஊற்றென்று ஊற்றி, தரம், சுவை, திடம், மணம் பற்றியெல்லாம் அக்கறையுடன் விசாரித்து… ஊட்டித்தான் விடவில்லை. அதற்கும் அவர் தயாராகத்தான் இருந்தார். ‘அப்பா உங்களை கவனிக்கச் சொன்னாங்க…’ – இந்த வார்த்தைகள் அவ்வப்போது அண்ணனிடமிருந்து ஒலித்தன. சப்பாத்திக்குப் பின் ஜாம் பன், அதற்குப் பின் பழம். (இத்தனையையும் நான் வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருக்கவில்லை என்பது இங்கே தகவலுக்காக.) ஏவ்வ்வ்… சாப்பிடாமலேயே எனக்கு பசி அடங்கியது.

தன் தங்கையும், தகதகா அத்தானும் அடுத்து உறங்கச் செல்ல வேண்டும் அல்லவா. நாங்கள் எத்தனை மணிக்கு உறங்குவோம், குழந்தை எப்போது தூங்கும், தொட்டில் கட்டுவீர்களா?, எந்த இடத்தில், எந்தக் கோணத்தில், எதைக் கொண்டு கட்டுவீர்கள்?, லைட்டை எப்போது அணைப்பீர்கள்? ஏசி ஓடுவதால் ஃபேன் இரவில் தேவையா? – சீரான இடைவெளியில் இப்படி கேள்விகளைத் தொடுத்துக் கொண்டே இருந்தார். என் தங்கைக்குக் குளிரும், லைட் எரிந்தால் அத்தானுக்குத் தூக்கம் வராது – ஆக அத்தனையும் அணைத்துவிட்டு படுங்கள் போன்ற பாசக் குறிப்புகளுக்கும் குறைவில்லை. ஆயிரம் குறிப்புகள் கொடுத்தாலும் குழந்தை, குழந்தையாகத்தான் இருக்குமென்பது பாவம் அவருக்குப் புரியவில்லை. ஆனால், அந்த இளம்ஜோடி அந்த தெய்வ மச்சானின் பாசப் போராட்டம் குறித்து பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. சைட் லோயர் பர்த்துக்கு இடம் மாறி, விண்ணைத் தாண்டி வருவாயா சிம்பு – த்ரிஷாவைப் பிரதிபலிக்க முயன்று கொண்டிருந்தார்கள்.

தொட்டிலைத் தயார் செய்தேன். சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு மகளைத் தூங்க வைத்தேன். (’நல்லாப் பாத்துக்கோங்க… நீங்கதான் நம்ம குழந்தையையும் தூங்க வைக்கணும். என்னால பாட்டெல்லாம் பாட முடியாது’ என்று அந்த புதுப்பெண், தன் கணவனிடம் சொல்லிக் கொண்டாள் என்பது இங்கே கொசுறு. மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்குத்தான் தெரியும்….)

என் குடும்பத்தினர் ஒவ்வொருவராக தூங்க ஆரம்பித்தார்கள். அந்த அண்ணன், தன் தங்கைக்கு, அத்தானுக்கு தொட்டில் கட்ட மனத்தளவில் ஏங்கியிருக்க பிரகாச வாய்ப்புள்ளது. அவர்களுக்கு விரித்துக் கொடுத்து படுக்கச் சொன்னார். அவர்கள் சைட் லோயர் ரொமாண்டிக் கடலை மூடில் இருந்து மாறுவதாக இல்லை. ‘அப்பா உங்களைச் சீக்கிரம் தூங்க வைக்கச் சொன்னார்’ என்றும் சொல்லிப் பார்த்தார் அண்ணன். அவர்கள் அசரவில்லை. அண்ணன் வேறு வழியின்றி தன் அத்தானுக்கான மிடில் பர்த்தில் வந்து படுத்துக் கொண்டார். ‘அவங்க வந்து படுத்ததும் லைட் அணைச்சிடனும். ஃபேன் அணைச்சிடனும்’ என்று எனக்கு மீண்டும் குறிப்பு கொடுத்தார். ஃபேன் இல்லாவிட்டால் குழந்தைக்கு காற்று வராது. விடிவிளக்கு எதுவும் இல்லாததால் ட்யூப் லைட்டை அணைத்தபோது கும்மிருட்டு. மகள் சிணுங்கினாள். லைட்டைப் போட்டுக் கொண்டேன். அந்த அண்ணனது தங்கை பாசம் பெரியதா, அல்லது இந்த அப்பாவின் மகள் பாசம் பெரியதா என்று ஒரு போராட்டம் நள்ளிரவில் வெடிக்கக்கூடும் என்று மனம் எச்சரித்தது.

ஒரு மணி நேரம் கடந்திருக்கும். அந்த இளம் ஜோடி தத்தம் பெர்த்களில் வந்து அடைக்கலமாகினர். அண்ணன் நான் லைட்டை அணைக்கிறேனா என்று பார்த்துவிட்டு, தனக்கான சைட் லோயருக்கு இடம் பெயர்ந்தார். குழந்தை அசந்து தூங்கிவிட்டதால் லைட் அணைப்பதில் எனக்குச் சங்கடம் இருக்கவில்லை. அந்தத் தங்கையும், தளதளா மச்சானும் படுத்த அடுத்த நொடி அப்படி இப்படி அசையவில்லை. லைட்டோ, ஃபேனோ, காய்கறி விலை உயர்வோ, காங்கிரஸ் அரசின் கணக்கு வழக்கில்லாத ஊழல்களோ எதுவும் அவர்களைத் தொந்தரவு செய்ய வாய்ப்பில்லாத அசல் உறக்கம். எங்கள் பகுதிக்கான திரை போட்டுக் கொண்டேன்.

மகளுடனான பயணங்களில் நான் பெரும்பாலும் உறங்குவதில்லை. என் மகள் நள்ளிரவு ஒன்றிலிருந்து இரண்டுக்குள் தொட்டிலிலிருந்து தனது அம்மாவின் அரவணைப்புக்குத் தாவுவாள். அது நிகழ்ந்தது. அச்சமயம் முதல் லைட் தேவைப்பட்டது. ஃபேனும். அன்பு அண்ணனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. திரைக்குள் தலையை விட்டார். என்ன நடக்கிறதென்று பார்த்தார். குழந்தையின் அழுகை, அருமை அத்தானின் துயிலை, பாச மலரின் கண்ணுறக்கத்தைத் தொந்தரவு செய்துவிடுமோ என்ற பயம் அவருக்கு. ஆனாலும் குழந்தை என்பதால் அவர் தம் கட்டுக்கடங்காத பாசத்தைக் கட்டுப்படுத்தி கக்கத்தில் சொருகிக் கொண்டு என்னைப் பார்த்தார். நானும் பதிலுக்கு வெறும் பார்வை ஒன்றை வீசினேன். தலை மறைந்தது.

அடுத்த மூன்று மணி நேரமும், குழந்தை சிணுங்க, அழ, கத்த – லைட்டை அணைக்க முடியவில்லை. அண்ணனின் தலை திரைக்குள் அடிக்கடி நுழைந்தது. என் பார்வையைச் சந்தித்துக் குரலின்றி வெளியேறியது. ஆனால், என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்கிற ரீதியில்தான் அந்த ஜோடி தூங்கிக் கொண்டிருந்தது என்பதே உண்மை. ஆக எனக்கும் உறுத்தல் இல்லை. ஐந்து மணிக்குமேல் குழந்தை மீண்டும் தொட்டிலுக்கு மாறி, அசந்து தூங்க ஆரம்பிக்க, ரயில் இரைச்சலையும் தாண்டி அண்ணனின் பெருமூச்சு என் செவிகளில் மோதியது, கூடவே அத்தானின் தேன்மதுரக் குறட்டையொலியும்.

விடிந்தது. அண்ணனின் முகத்தில் தூங்காத களைப்பு. இருந்தாலும் தங்கையும் அத்தானும் ஃப்ரெஷ்ஷாக எழுந்ததில் அவருக்கு ராஜ்யசபா எம்.பி. ஆன திருப்தி.

அம்மூவரும் சென்னைக்கு வந்து யாரையோ பார்த்துவிட்டு, பின் பெங்களூர் செல்கிறார்கள். ஜோடி இனி வசிக்கப் போவது பெங்களூரில்தான். அண்ணன் குடிவைக்கச் செல்கிறார். இன்னும் சில தினங்களில் பெங்களூரில் ஏதாவது ரயில் நிலையத்தில் மட்டும் மழை பொழியக் கூடும்.

 

மாலை மலர் ஸ்பெஷல் எடிஸன்…

ப்ளஸ் டூ ரிசல்ட்… டென்த் ரிசல்ட்…

ஒன்பது மணிக்கே பொட்டிக்கடை வாசல்ல காத்திருப்போம். ஏஜெண்ட் அண்ணாச்சி சைக்கிள்ல வேகமா வந்து, கேரியர்ல இருந்துஅம்பது அறுபது பேப்பரை எடுத்துக் கொடுத்துட்டு அடுத்த கடைக்கு ஓடுவாரு. மாலை மலர் ஸ்பெஷல் எடிஷன். பொட்டிக்கடைக்காரர் கையில காசைத் திணிச்சிட்டு, பேப்பரை வாங்கிட்டு அங்கிட்டும் இங்கிட்டும் பொரட்டுவோம்.

அவ்ளோ நேரம் மனப்பாடமா இருந்த ரெஜிஸ்டர் நம்பரு, அப்பத்தான் மறந்துபோன மாதிரி இருக்கும். ‘தூத்துக்குடில பாருலே… நீ என்ன கோவில்பட்டிய வெச்சுக்கிட்டிருக்க…’ – நண்பன் பதறுவான். கொட்டை எழுத்தில் அச்சிடப்பட்டிருக்கும் ‘தூத்துக்குடி’, அப்போது நம் கண்ணில் படாது.

ஒருவழியாக பேப்பரின் சகல பரிமாணங்களையும் ஆராய்ந்த பிறகு, தூத்துக்குடி கண்ணில் படும். ‘ஏலேய்… நானூத்து பத்தொம்பது சீரியலை மட்டும் காணல’ – பதட்டம் மேலும் தொடரும்.

சில நொடிகள் நெஞ்சு அடைப்பதுபோல தோன்றும் உணர்வுக்குப் பிறகு, ‘419’ல் தொடங்கும் சீரியல் எண் அகப்படும். ‘இந்தாருக்கு என் நம்பரு… நான் பாஸூ’ என்று குதூகலிப்பான் ஒரு நண்பன்.

‘எங்கிட்டுலே?’ – பதட்டம் அதிகமாகும்.

‘அந்தா.. கீழ பாருலே…’

419344…. கண்கள் தேடும். முந்நூறில் தேடும்போது, 42, 43க்குப் பிறகு 44 மட்டும் காணாமல் போனதாக ஒரு தோற்ற மயக்கம் சட்டென வந்து காணாமல் போகும். ‘நாப்பத்து நாலு… நானும் பாஸு’ – முகத்தில் சங்கமித்திருந்த பதட்டம், பரவசமாக உருமாறிக் கொண்டிருக்கும் தருணம் அது. இருந்தாலும் அது தூத்துக்குடிதானா, சீரியல் நம்பரை ஒழுங்காகப் பார்த்திருக்கிறோமா என்ற பயம் ஒருமுறை வந்துபோக, மீண்டும் ரிசல்டைச் சரி பார்ப்போம். நம் எண்ணைச் சுற்றி பேனாவால் வட்டமிடுவோம்.

‘நம்பர் நாப்பத்தேழு இல்லேல… நம்ம கிளாஸுல யாருலே அது… சுதர்ஸனா, சுடலையா?’

‘எனக்கு அடுத்து சுடலை, அப்புறம் சுதர்ஸன்… நாப்பத்தேழு சுரேஷ்ல… பாவம்… சைன்ஸ் அன்னிக்கு அவனுக்கு காய்ச்சல் வந்துருச்சுல்ல….’

கடையில் மிட்டாய் பாக்கெட்டுகளை வாங்கிக் கொண்டு வீடுகளுக்குக் கிளம்புவோம். அப்பா, அம்மாக்களின் முகத்திலும் நம் முக பரவசம் பரவும். பக்கத்து வீடுகள், உறவினர் வீடுகளுக்கெல்லாம் மிட்டாய் சப்ளை.

பாஸ் ஆயாச்சு. மார்க் என்ன வரும்? கொஞ்ச நேரத்திலேயே அடுத்தகட்ட டென்ஷன் மனத்தை ஆக்கிரமித்திருக்கும். அன்றிரவு தூக்கம் வராது. காலை எழுந்தவுடன், பரபரவெனக் கிளம்பி பள்ளிக்கு ஓடுவோம்.

ஒரு ஹால். ஹாலுக்கு வெளியிலிருந்து ஜன்னல் வழியாக மார்க்குகளைப் பார்க்கலாம். ஜன்னல் எப்போது திறக்கும் என காத்திருக்க வேண்டும். இதில் என்ன கொடுமை என்றால், மாணவர்களின் தலையைவிட ஜன்னல் உயரமானது. அது திறக்கப்பட்டவுடன், ஜன்னல் கம்பியைப் பிடித்து குரங்கு போல ஏறி, நெரிசலில் கீழே விழாமல்தான் மார்க்குகளைத் தேடிப் பிடித்துப் பார்க்க வேண்டும். அது தேர்வு எழுதுவதைவிட கஷ்டமான வேலை. ஒருவேளை இதன் மூலம் ‘வாழ்க்கைப் பாடம்’ எதையாவது உணர்த்துவதற்காக, பள்ளி நிர்வாகம் அந்த ஜன்னலைத் தேர்ந்தெடுத்திருப்பார்கள்போல.

ஜன்னல் எப்போது திறக்கும்? நேரம் ஆக ஆக காதுக்குள் சம்பந்தமில்லாமல் ‘நிலை மாறும் உலகில்…’ பாடல் எல்லாம் கேட்கும். ‘தோல்வி நிலையென நினைத்தால்…’ என்று செந்தில் வந்து தைரியம் கொடுத்துச் செல்வார். ஜன்னல் வெளிப்பக்கமாகத் திறக்கப்பட்ட நொடியில் பலமானவர்கள் தாவி ஜன்னல் கம்பிகளை ஆக்கிரமிப்பார்கள்.

பல நிமிட தள்ளு முள்ளு போராட்டங்களுக்குப் பிறகு, மார்க்கை அறிந்து கொண்ட நிமிடத்தில் குறைந்தபட்சம் சட்டைப் பையாவது கிழிந்திருக்கும். அடுத்தவன் மார்க் என்ன என்ற விசாரிப்புகளில் அன்றைய பொழுது போகும். ஸ்டேட் பர்ஸ்ட் எவனாக இருந்தால் என்ன? ஸ்கூல் பர்ஸ்ட் பற்றியும் கவலையில்லை. கிளாஸ் பர்ஸ்ட் யார், வகுப்பில் என்னென்ன சப்ஜெட்டில் யார் யார் பர்ஸ்ட் என்ற விதமான புள்ளிவிவர ஆராய்ச்சியில் பொழுது கழியும்.

வேறென்ன சொல்ல… ‘அந்தக் காலத்துல நாங்கள்ளாம்…’னு நானும் பேச ஆரம்பிச்சுட்டேன். வயசாயிருச்சு போல!

சென்னை புத்தகக் காட்சி 2012 – சில அனுபவங்கள் (2)

11 ஜனவரி, புதன்கிழமை

* இன்றைக்கு பிளாட்பார வியாபாரிகள் மட்டுமல்ல; புத்தகக் காட்சி வியாபாரிகளுமே மழையைச் சபித்துக் கொண்டிருந்தார்கள். மாலை ஆறு மணிபோல ஆரம்பித்த மழை அடுத்த 45 நிமிடங்களுக்கு தாண்டவமாடியது. கண்காட்சிக் கூரையில் பல இடங்களில் ஒழுக ஆரம்பிக்க, புத்தகங்கள் நனைய ஆரம்பிக்க, வியாபாரிகளெல்லாம் புத்தகங்களைக் காப்பாற்ற அங்குமிங்கும் ஓட… பபாசி அடுத்த முறையாவது ஒழுகாத வண்ணம் கூரைகள் அமைக்கப் பாடம் கற்றுக் கொண்டால் சரி.

* பிளாட்பாரத்தில் இந்தமுறை இதுவரை எனக்கு எந்தப் பொக்கிஷமும் கிட்டவில்லை. இன்னும் ஓரிரு முறை சென்று மேய வேண்டும். காவ்யாவின் பல புத்தகங்கள் ரூ 20க்கும் ரூ 30க்கும் கூறுகட்டி விற்றுக் கொண்டிருந்தார்கள்.

* இந்தியாவுக்கு முதல் தேவை என்ன? விவசாயத்தில் வளர்ச்சிதான் என்று எடுத்துச் சொல்வதுபோல கண்காட்சியின் முதல் ஸ்டாலாக ‘நவீன வேளாண்மை’ அமைந்திருப்பது சிறப்பு. அந்த ஸ்டாலுக்குள் சென்று புத்தகங்களைப் புரட்டும்போது, எங்கிட்டாவது குக்கிராமத்துல துண்டு நெலம் வாங்கி, சோளம் கம்புன்னு பயிறு செஞ்சு… அப்படியே கயித்துக் கட்டில்ல படுத்துக்கிட்டு காத்து வாங்கிட்டு… கூழு குடிச்சிட்டு…  நடந்தா நல்லாயிருக்கும்!

* நற்றிணை பதிப்பகத்தில் சட்டெனக் கவரும் அழகான அட்டைகளுடன் இந்த முறை பல புதிய வெளியீடுகளைக் கொண்டு வந்துள்ளார்கள். பிரபஞ்சனின் இரண்டு நூல்கள் வெளிவந்துள்ளன. புதிய தலைமுறை இதழில் அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக ’மயிலிறகு குட்டி போட்டது’ புத்தகமும், ‘துறவாடைக்குள் மறைந்த காதல் மனம்’ என்ற புத்தகமும் கவனம் கவருகின்றன.

* கோலிவுட்டில் அதிகப் பாடல்களை எழுதும் ரேஸில் சமீப வருடங்களில் முன்னணியில் இருக்கும் நா. முத்துக்குமாரின் புத்தகங்கள், அவரது ‘பட்டாம்பூச்சி’ பதிப்பகத்தில் கிடைக்கின்றன. அவருடைய பழைய கவிதைப் புத்தகங்களும் புதிய அட்டைகளுடன் ஈர்க்கின்றன.

* பொன்னியின் செல்வன் – கல்கி – இளைஞர் பதிப்பு – என்ற அந்த நூலைப் பார்த்ததும் எனக்கு ஒன்றும் புரியவில்லை. அட்டையில் விஜயும் சூர்யாவும் ராஜா கெட்-அப்பில் பல்லைக் காட்டிக் கொண்டிருந்தார்கள். எல்லா விழாக்களிலும் பரிசளித்து மகிழ மலிவு விலையில் மகத்தான காவியம் – என்று வேறு அட்டையில் போட்டிருந்தார்கள். (விலை ரூ. 100 என நினைவு.) அதாவது பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களைச் சுருக்கி, இளைஞர்கள் சட்டென படித்து முடித்து வகையில் ஒரே பாகமாக வெளியிட்டிருக்கிறார் ஆர்.கே. சுப்பிரமணியன் என்பவர். ஓய்வுபெற்ற ஆசிரியராம். இன்றைய தலைமுறை இளைஞர்களிடமும் பொன்னியின் செல்வனைக் கொண்டு செல்ல இந்த முயற்சியாம்! லாப நோக்கின்றி சேவை நோக்கில் செய்யப்பட்டதாம்! அவரை வாழ்த்துவதா, திட்டுவதா?

* இன்றும் வாழும் சோழ மன்னர்கள், இன்றும் வாழும் பல்லவ மன்னர்கள் – என சோழ, பல்லவ வாரிசுகள் குறித்த ஆவணப் படங்கள் ரூ. 50 விலையில் இரண்டு சிடிக்களாக தென்பட்டன.

 

 

 

 

 

 

 

* எல்லா புத்தகக் காட்சியிலும் ஹீரோவாக வலம் வரும் சே குவாரா, இந்த முறை படக்கதை வடிவில் (மொழி பெயர்ப்பு புத்தகம்) நல்ல ஓவியங்களுடன் கிடைக்கிறார். கவனம் கவர்ந்த இன்னொரு படப் புத்தகம் – கார்டூனாயணம். அண்ணா குறித்து வெளிவந்துள்ள கார்ட்டூன்களின் தொகுப்பு. தொகுப்பாளர்களில் ஒருவர் டிராஸ்கி மருது.

* மதி நிலையத்தில் பாராவின் குற்றியலுலகம் முதல் 1000 பிரதிகளைக் கடந்துவிட்டதாக ட்விட்டர் மூலம் அறிந்துகொண்டேன். சொக்கன் எழுதிய விண்டோஸ் 7 கையேடு – பலரது கவனத்தையும் ஈர்க்கும் புத்தகமாக அமைந்துள்ளது.

* விகடனில் டாப்பில் இருப்பது பொன்னியின் செல்வன். அடுத்தடுத்த இடங்களை சுகாவின் மூங்கில் மூச்சு, நா. முத்துக்குமாரின் அணிலாடும் முன்றில், விகடன் பொக்கிஷம், காலப்பெட்டகம் போன்றவை பிடித்த்துள்ளன. கிழக்கிலும் சுகாவின் தாயார் சந்நிதி வேகமாக விற்று வருகிறது. நல்ல எழுத்தாளர்களின் ஊர் சார்ந்த அனுபவங்களை வாசகர்கள் மிகவும் ரசித்துப் படிக்கிறார்கள் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

* சென்ற முறை கிழக்கில் 80 பிரதிகளுக்கும் மேல் விற்ற அகம் புறம் அந்தப்புரம் (ரூ. 950), இந்தமுறை விற்பனைக்கு இல்லை. ஸ்டாக்கில் இருந்த ஐந்து புத்தகங்களும் ஓரிரு நாள்களிலேயே விற்றுவிட்டன.

* தென்னிந்தியப் பதிப்பகத்தில் – காமிக்ஸ் பிரியர்களின் ஆதரவால் எப்போதும் கூட்டம்தான். கிங் விஸ்வா மொத்தமாக அள்ளிச் செல்வோர் அனைவரையும் போட்டோ எடுத்துக் கொள்கிறார். நானும் ஒரு செட் வாங்கிவிட்டேன். உங்கள் பிரதிகளுக்கு முந்துங்கள். லயன் ComeBack எடிசனும் வந்துவிட்டது.

* இந்தப் புத்தகக் காட்சியில் நான் கவனித்த ஒரு பொதுவான விஷயம் : வாசகர் கூட்டம் குறையவில்லை. அவர்கள் வாங்கும் புத்தகங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கொஞ்சம் மாற்றியும் சொல்லலாம். அதாவது கடந்த ஆண்டுகளில் ஒரு வாசகரால் 500 ரூபாய்க்கு 5 புத்தகங்கள் வாங்க முடிந்ததென்றால், இந்த ஆண்டு அதே 500 ரூபாய்க்கு 3 புத்தகங்கள்தான் வாங்க முடிகிறது. புத்தகங்களின் விலையேற்றம்தான் காரணம். புத்தகங்களின் விலையேற்றத்துக்குப் பல காரணங்கள்.

* ஒரு ஸ்டாலில் நடந்த உரையாடல் :
‘ஆர்னிகா நாசரோட விஞ்ஞான நாவல்லாம் உங்ககிட்ட இருக்கா?’
‘ஆர்னிகா நாசர், எங்ககிட்டதான் எல்லா கதையும் கொடுத்து வைச்சிருக்காரு. விஞ்ஞான கதைகள் நாங்க போடல. யோசிக்கணும்.’
‘எப்போ கொண்டு வருவீங்க?’
‘யாரு வாங்குவா? அவரென்ன சுஜாதாவா? அந்தளவு மார்க்கெட் இல்லியே.’
‘ஓ… சரி, எந்திரன் கதை தன்னோடதுன்னு கேஸ் போட்டாரே. என்னாச்சு?’
‘சங்கரு தாத்தாவாகுற வரை அந்தக் கேஸு நடக்கும்.’