மார்கெட்டிங் – 91.9

நாளை (ஆகஸ்ட் 30), கிழக்கு பாட்காஸ்ட், ஆஹா 91.9ல் ஒலிபரப்பாகவிருக்கும் நிகழ்ச்சி ‘மார்கெட்டிங் துறை’ குறித்தது.

கிழக்கில் ‘மார்கெட்டிங் மாயாஜாலம்’ என்ற புத்தகத்தை எழுதிய சதீஷ் கிருஷ்ணமூர்த்தி பேசவிருக்கிறார். மார்கெட்டிங் என்றால் என்ன என்பது முதல், மார்கெட்டிங்கின் அவசியம், பல நிறுவனங்களின் மார்கெட்டிங் நுட்பங்கள் குறித்த சுவாரசியமான தகவல்கள் வரை இந்த நிகழ்ச்சியில் இடம்பெறுகின்றன. கேட்டு உங்கள் கருத்துகளைத் தெரிவியுங்கள்.

சதீஷ் குறித்து ஓர் அறிமுகம் : அமெரிக்காவில் உள்ள ஃபிலடெல்பியா டெம்பிள் யுனிவர்சிடியில் எம்.பி.ஏ. படித்தவர். மெக்கான் எரிக்சன், முத்ரா போன்ற விளம்பர நிறுவனங்களில் பணியாற்றியவர். கவின் கேர், கிரிக்கின்ஃபோ போன்ற நிறுவனங்களில் மார்க்கெட்டிங் துறையில் மேலாளராகப் பணி புரிந்தவர். தற்போது பல தமிழக நிறுவனங்களுக்கு மார்க்கெட்டிங் ஆலோசகராகப் பணிபுரிகிறார். அத்துடன் IIPM – சென்னை, ITM – சென்னை, அம்ரிதா ஸ்கூல் ஆஃப் பிசினஸ் – கோவை ஆகிய நிர்வாகவியல் கல்லூரிகளில் மார்க்கெட்டிங் துறையில் பாடங்கள் நடத்துகிறார்.

இந்த நிகழ்ச்சியின் மூலம் அறியப்படும் நீதி யாதெனில், வன் ஒருவனுக்குத் தன்னைத் தானே மார்கெட்டிங் செய்யத் தெரிந்திருக்கிறதோ அவனே வெற்றியாளனாகிறான்.

கந்தல்சாமி!

ஓப்பனிங் ஷாட்ல ஒரு கோபுரத்தைக் காட்டுறோம். கட் பண்ணுனா வேல். அடுத்த கட்ல தோகை விரிச்சாடுற மயில். அது திருப்போரூர் முருகன் கோயில். கட் பண்ணுனா பக்தர்களோட காவடியாட்டம். எல்லாத்தையும் மஞ்சக் கலர் டோன்ல காட்டணும். மங்களகரமா இருக்கும். கேமரா தரையோட தரையா உராசிட்டுப் போக நடந்துபோற ஒருத்தனோட கால்களைக் காண்பிக்கிறோம். அவன் ஒரு திண்டு மேல ஏறுறான். அங்க ஒரு மரம் இருக்குது. மரம் முழுக்க, பக்தர்கள் தங்கள் வேண்டுதலை பேப்பர்ல எழுதிக் கட்டி வைச்சிருக்காங்க. நடந்துபோனவனும் தன் சட்டைப்பையில இருந்து மடிச்ச ஒரு பேப்பரை எடுத்து மரத்துல கட்டுறான். கண்ணை மூடி கையெடுத்துக் கும்பிட்டு கடவுளை வேண்டிக்கிறான். அவன் மூஞ்சை க்ளோஸப்ல காட்டுறோம். அட, அது நாந்தான்.

சரி, என்ன வேண்டுதல் அது?

‘அப்பனே, கடவுளே கந்தசாமி! கலைப்புலியை ரசிகர்கள் கண்டிப்பா காப்பாத்த மாட்டாங்க. நீதாம்பா அவருக்கு இனிமேலாவது நல்லவழி காட்டணும்.’

*

தன்னை ஷங்கர் என்று நினைத்து சுசி கணேசன் போட்டுக் கொண்ட சூடு – கந்தசாமி. (அதற்காக ஷங்கர் புலியா என்ற விவாதத்துக்குள் இப்போது இறங்க வேண்டாம்.)

என்ன கதை?

அந்தப் புடலங்காயில் பெரிய வித்தியாசமோ, அழுத்தமோ எந்த எழவுமில்லை. மக்களுக்கு நல்லது செய்யும் சூப்பர் ஹீரோ. (சமூகத்துக்கு அவன் ஒரு சிபிஜ ஆபிஸர்.) சூப்பர் ஹீரோ யார் என விழி பிதுங்கத் தேடும் போலீஸ். யார் என்று தெரியாமலே அவனைக் கடவுளாக நினைக்கும் அப்பாவி ஜனம். வில்லன்களின் தில்லாலங்கடிகள். வில்லன் மகளின் (ஷ்ரேயா) காதல் கண்றாவிகள். சூப்பர் ஹீரோவின் முகமூடி கிழியும்போது, ‘அவரைக் கைது பண்ணாதீங்க. எங்களைக் கைது பண்ணுங்க’ என்று மக்களாகிய துணைநடிகர்கள் காலம் காலமாகப் பேசும் அதே புளித்த டயலாக். ஹீரோவுக்குச் சேதாரமில்லாமல் நீதி காப்பாற்றப்படுவது. கட்டக் கடைசி காட்சியில்கூட புதிதாக எதுவும் யோசிக்காத டைரக்டருக்கு சபாஷ்!

விக்ரம் என்ற ஒரு நல்ல நடிகர், இப்படிப்பட்ட மெகா சொதப்பல் படங்களில் மாட்டிக் கொண்டு கால விரயம் செய்வதை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது. ஒரு சூப்பர் ஹீரோவாக, கொக்கரக்கோ சேவல் மனிதனாக அவர் அறிமுகமாகும் ஆரம்பக் காட்சி – அசத்தல் எல்லாம் கிடையாது. அதில் மனிதர் சேவலின் உடலசைவு மொழியை தன் நடிப்பில் அச்சு அசலாகக் கொண்டு வந்திருப்பார். அப்புறம் பெண் வேடத்தில் நடனமாடிக் கொண்டே ஒரு சண்டைக் காட்சி. அம்புட்டுதான். கந்தசாமியில் விக்ரமின் ஃபெர்பார்மென்ஸ் என்று குப்புறப்படுத்து கொட்டாவியை அடக்கிக் கொண்டு யோசித்தால்கூட வேறு ஒன்றும் நினைவுக்கு வரவில்லை.

ஷ்ரேயா? ஒரு காட்சியில் பாத்-டப்பில் இருந்து எழுந்து வருவார். அந்தக் காட்சியில் மட்டும்தான் அவருக்கு உடை ஜாஸ்தி. கட்டிக் கொள்ள சற்றே பெரிய டர்க்கி டவலாகக் கொடுத்திருக்கிறார்கள். அதுபோக படம் முழுக்க பல காட்சிகளில் (வில்லியாக, கதாநாயகியாக) வருகிறார். என்ன, அந்த மொகரக்கட்டையில் என்னமோ சொல்வாங்களே, அதாம்பா.. சட்டுனு மறந்துபோச்சே… ஆங்… எக்ஸ்பிரஸன்ஸ்… ஜென்மத்துக்கும் வராதுபோல.

பிரபு இந்தப் படத்திலும் இருக்கிறார். பில்லாவில் வருவதுபோல ஒரு கேரக்டர். வெறுப்பாக இருக்கிறது. Behind the Screen காமெடியனாக தயாரிப்பாளர் இருக்க, திரையில் காமெடி வேண்டுமென வடிவேலுவைத் திணித்திருக்கிறார்கள். ஐந்து காட்சிகள். அதில் போலீஸ் விசாரணையில் அவர் செய்யும் காமெடி மட்டும் டபுள் ஓகே. படத்தின் நான் ரசித்த ஒரே ஸீன் அதுமட்டுமே.

திரைக்கதையில் ஏகப்பட்ட திருப்பங்கள் வைத்திருப்பதாக இயக்குநர் நினைத்திருக்கிறார். அட போங்க சார், காசு கொடுத்து படத்துக்கு வர்ற ரசிகர்களை இனிமேலாவது கேணையானா நினைக்காதீங்க. படத்துல நீங்க (சுசி கணேசன்) வர்ற (வெட்டி) ஸீன்ஸ் முதற்கொண்டு எதுலயுமே சஸ்பென்ஸ் சத்தியமா இல்லை.

படத்துல ஏதாவது நல்ல விஷயங்களைச் சொல்லுவோம்னு யோசிச்சா… ஆங்.. மேக்கிங்? அதுவும் வேஸ்ட். எம்புட்டோ செலவுன்னு சொன்னாங்க, ஒரு ஸீன்லகூட பிரம்மாண்டம், பணக்காரத்தனம், மிரட்டல் – ம்ஹூம். கேமரா? அய்யோ, கண் வலிக்குது. பத்து செகண்டுக்குள்ள முப்பது ப்ரேம் மாறுனா கடுப்புதான் வருது. படத்துல அங்கங்க கலர்டோனும் மாறுது. என்னாத்துக்குன்னு தெரியல. குறிப்பா மெக்சிகோல படம் அரைமணி நேரம் போவுது. அங்க நடக்குற பல காட்சிகள் மஞ்ச கலர் டோன்ல வருது. படுத்தல். (இப்படி ஒரு தயாரிப்பாளர் கிடைச்சா அவரு செலவுல மெக்சிகோல போய் மஞ்சக் குளிக்கலாம்னு சொல்லாம சொல்லுறாங்க போல!) பாடல்? கேட்க மட்டும்தான் நல்லாருக்கு. தேவிஸ்ரீபிரசாத்தின் உழைப்பு, காட்சிகளைப் படமாக்குவதில் பஞ்சர் ஆக்கப்பட்டிருக்கிறது. சண்டை? அட, விக்ரம் பாதி நேரம் வில்லன்களை அடிக்கவே மாட்டேங்கிறாரு. அவனுங்களா ஓடி வந்து விக்ரம்மேல பாயறாங்க. இவரு புத்திசாலித்தனமா நகர்ந்துக்கிறாரு. விழுந்து மூஞ்சிய உடைச்சுக்கிறாங்களாம்.

கரி பூசப்பட்டது இவர்கள் முகத்தில் மட்டுமல்ல...
கரி பூசப்பட்டது இவர்கள் முகத்தில் மட்டுமல்ல...

நிறையவே எழுதிட்டேன். போதும்னு நினைக்கிறேன். மொத்தத்தில் கந்தசாமி – கந்தல்சாமி. (ஆளவந்தான் என்னை அழிக்கவந்தான்னு தாணு ஒரு காலத்துல குமுறனது நினைவிருக்கலாம். கந்தசாமியால் நான் நொந்தசாமி ஆகிவிட்டேன்னு இன்னொரு பேட்டி கொடுத்தாலும் கொடுப்பாரு.)

*

சற்று நேரத்துக்கு முன்புதான் என் வீட்டில் தினசரி காலண்டரைப் பார்த்தேன். காலை 11.30 முதல் மாலை 3.15 வரை ராகுகாலம் என்று இருந்தது. யோசித்துப் பார்த்தேன். அந்த நேரத்தில் நான் அபிராமி தியேட்டரில் இருந்தது நினைவுக்கு வந்தது. சாமியோவ், மூணேகால் மணிநேரம் உள்ள வைச்சு… வேணாம், அழுதுருவேன்.

*

(படத்தின் பப்ளிசிட்டிக்காக) இரண்டு கிராமங்களைத் தத்தெடுத்தது எல்லாம் நல்ல விஷயம்தான். இப்படி ஒரு படத்தை எடுக்காமலிருந்தால் எத்தனையோ கிராமங்களைத் தத்தெடுத்திருக்கலாமே!

*
தாணு சார், என்கிட்டகூட முதல்வன், ரமணா, அந்நியன், இந்தியன் பட டிவிடிலாம் இருக்குது. நானும் ஒரு படம் டைரக்ட் பண்ண ஆசைப்படறேன். நீங்க ரொம்ப நல்லவராச்சே. ஒரு சான்ஸ் கொடுத்துப் பாருங்களேன்.

*

எக்ஸ்க்யூஸ் மீ, மிஸ்டர் கந்தசாமி – தியேட்டருக்கு வந்ததற்காக!

ஏன் இந்த கொல வெறி!

………………….

அழகிய தமிழ் மகன், வில்லு, குருவின்னு தொடர்ந்து கொலைவெறி கலைப்படங்களாக கொடுத்து ரசிகர்களை மகிழ்வித்த விஜய்க்கு வைக்கப்பட்டுள்ள பேனர். அய்யோ.. அய்யோ! அடுத்த படம் என்னதுபா?

வேட்டைக்காரன் – பொருத்தமான டைட்டில்தான்.

படம் நன்றி : kalakkalcinema.com

சல்மாவும் பாஸ்ட் பெர்பெஃக்ட் டென்ஸும்

நேற்று இரவு பத்து மணிக்கு மேல் இருக்கும். வீட்டில் டீவியில் NDTV Hindu சேனல் ஓடிக் கொண்டிருந்தது. நைட் விஷன் என்றொரு நிகழ்ச்சி. ஓர் அதீத லிப்ஸ்டிக் ஆன்ட்டியும், வழுக்கைக்கு முந்தைய நிலையில் கேச அமைப்பு கொண்ட முதிர் இளைஞரும் நுனி நாக்கு ஆங்கிலத்தில் நுரைபொங்கப் பேசிக் கொண்டிருந்தார்கள். கூடவே அந்தச் சூழலுக்குப் பொருத்தமில்லாதது போல ஓர் அம்மணி.

எங்கோ அந்த அம்மணியைப் பார்த்ததாக ஞாபகம். யோசித்துப் பார்த்தேன். அட, கவிஞர் சல்மா. அந்த இரண்டு ஆங்கில அதிமேதாவிகளும் எதைப் பற்றி, சல்மாவிடம் கேட்டுக் கொண்டிருந்தார்கள் என்று என்னால் சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. கவுன்சிலிங், போலீஸ் ஸ்டேஷன், டிவோர்ஸ், பெண்கள் – போன்ற வார்த்தைகள் அடிக்கடி பரிமாறப்பட்டன. என்ன விஷயம் என்றே புரியவில்லை. (பிறகு நெட்டில் தேடி படித்துக் கொண்டேன்.)

ஆனால் நேற்று சல்மாவின் பேட்டியைப் பார்த்த ஒவ்வொருவருக்கும் ஒன்று அவர் மீதோ அல்லது சேனல் மீதோ நிச்சயம் கோபமோ, வருத்தமோ வந்திருக்கும். என் வருத்தம் சல்மா மீதுதான். அறியப்பட்ட தமிழ் கவிஞர். தமிழில் நன்றாகப் பேசவும் கூடியவர். ஆனால் அந்த பேட்டியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் பதில் சொல்வதற்குள் திணறிப் போய்விட்டார்.

மனத்துக்குள் ஒரு வார்த்தையை யோசித்து அதை அப்படியே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் சொல்லி, பின் இடைவெளிவிட்டு அடுத்த வார்த்தையை யோசித்து மொழிபெயர்த்து பதிலைச் சொல்லி முடிப்பதற்குள் – நிஜமாகவே பரிதாபமாக இருந்தது. டென்ஷனில் டென்ஸ் தெரியாமல் பெரும்பாலும் பாஸ்ட்டிலும் பாஸ்ட் பெர்பெஃக்ட் டென்ஸிலுமே சல்மா பேசியதைக் கேட்கும்போது எதற்கு இவ்வளவு கஷ்டப்பட வேண்டும் என்றே நினைக்கத் தோன்றியது.

‘தமிழில்தான் பேசுவேன். ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும் என்று கட்டாயப்படுத்தாதீர்கள்’ – என்று ஆங்கில சேனல்காரர்களிடம் ஒரு தமிழ் கவிஞரால் நேரடியாகச் சொல்ல முடியாதா என்ன? தேவைப்பட்டால் சேனல்காரர்கள் ஆங்கிலத்தில் சப்-டைட்டில் போட்டுக் கொள்ளட்டும். எல்லா ஹிந்திக்காரர்களும் சேனல் பேட்டிகளில் ஆங்கிலத்தில்தான் பேசுகிறார்களா என்ன? தான் சொல்ல வந்ததைக்கூட சரியாகச் சொல்லமுடியாமல், சல்மா இப்படி ஒரு பேட்டி கொடுக்க வேண்டுமா?

அடச்சே, ஒரு விஷயத்தை மறந்து விட்டேன். முதலிலேயே ஞாபகம் இருந்திருந்தால் இந்தக் கட்டுரையை எழுதியிருக்க மாட்டேன். தி ஹிந்து எப்போதுமே தமிழர்களுக்கு எதிரானதுதானே.

சக்கர இனிக்குற சக்கர!

சர்க்கரை நோய்னா என்ன? அது யார் யாருக்குல்லாம் வர வாய்ப்பு அதிகம் இருக்குது, யாருக்கெல்லாம் வாய்ப்பு கம்மியா இருக்குது, வந்தா என்ன பண்ணனும், என்ன பண்ணக்கூடாது? அது உயிர்க்கொல்லி நோயா, அல்லது ஐஸ்ட் லைக் தட் கையாள முடியுமா, எய்ட்ஸை பத்தி மக்கள் தெரிஞ்சுகிட்ட அளவுக்கு டயாபடீஸ் பத்தி தெரிஞ்சு வைச்சுருக்காங்களா?

எல்லா கேள்விகளுக்கும் விடை தர்றதுக்காகவே பேசியிருக்கிறார் ஒரு சர்க்கரை நோய் நிபுணர் – டாக்டர் எஸ். முத்துசெல்லக்குமார்.

இது கண்டிப்பா ஒவ்வொருவரும் தவறவிடாம கேட்க வேண்டிய நிகழ்ச்சி, வர்ற ஞாயித்துக்கிழமை (ஆகஸ்ட் 16) – பகல் 12.00 – 1.00 மணி – 91.9 ஆஹா FMல – கிழக்கு பாட்காஸ்ட் நிகழ்ச்சில.

சென்னைல இல்லாதவங்களோ, அன்னிக்கு நிகழ்ச்சியைக் கேட்க முடியாதவங்களோ கோவிச்சுக்காதீங்க! பத்ரியோட எண்ணங்கள்ல ஒலி வடிவம் வெளிவரும்.

சக்கர இனிக்குற சக்கர… 😉