எம்.ஆர். ராதா என்ன சொல்வார்?

கடந்த ஞாயிறு (ஆக.2, 2015) காலையிலிருந்து இன்று (ஆக.8, 2015) காலை வரை, குறைந்தபட்சம் 300 அறிமுகமில்லாத நபர்களிடமாவது போன் வழியாகப் பேசியிருப்பேன். எல்லாம் எம்.ஆர்.ராதா செய்த மாயம்.

கடந்த 25 வாரங்களாக எனது எம்.ஆர்.ராதா – கலகக்காரனின் கதை – நூல், தொடர் வடிவில் வாரமலரில் வெளியானது. சென்ற ஞாயிறன்று நிறைவடைந்தது. அதன் விளைவாக இத்தனை அழைப்புகள். பெரும்பான்மையானவை சந்தோஷ அழைப்புகள். விதவிதமான மனிதர்களிடம் பேசும் வாய்ப்பு. நல்ல அனுபவம்.

செங்கல்பட்டிலிருந்து ஒரு பள்ளியின் முதல்வர் பேசினார். அவர்களது மாணவர்கள் மத்தியில் வந்து வாசிப்பார்வத்தைத் தூண்டும்படி உரையாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். நிச்சயம் செய்வதாகச் சொல்லியிருக்கிறேன். ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஒருவரும், அவரது மனைவியும் அத்தனை அன்பைக் கொட்டி பேசினார்கள். நெகிழ்வு. பணி நேரத்தில் கான்ஸ்டபிள் ஒருவர் வயர்லெஸ் இரைய பேசி, என் புத்தகங்கள் எங்கு வாங்க முடியும் என்று கேட்டுத் தெரிந்து கொண்டார். அதேசமயம், ஓய்வு பெற்ற எஸ்.ஐ. ஒருவர், ‘என் அட்ரஸ் நோட் பண்ணிக்கோங்க. எங்க குடும்பம் டீஸண்டான குடும்பம். உங்க புத்தகத்தை எல்லாம் அனுப்பி வையுங்க’ என்று குழைந்தார். பாவம், ஓஸிக்கே பழகிவிட்டார்போல. அவருக்கு என் பரிதாபங்கள்.

அந்தக் கால நாடக நடிகர்கள் சிலர் பேசினார்கள். எம்.ஆர். ராதாவைச் சந்தித்த, அவரது நாடகங்களைக் கண்டுகளித்த நினைவுகளைச் சந்தோஷமாகப் பகிர்ந்து கொண்டார்கள். குடும்பத்தலைவிகள் பலரும் பேசினார்கள். ‘எம்.ஆர்.ராதா படிச்சதுல இருந்து டீவில எம்.ஆர்.ராதா நடிச்ச படம் வந்தாலே விரும்பி பார்க்குறோம்’ என்று மகிழ்ந்தார்கள். வாரமலரில் தொடர்ந்து எழுதச் சொல்லி கேட்டுக் கொண்டார்கள். பேசியவர்களில் பெரும்பான்மையானோர் 50+ கடந்தவர்களே. பலரும் எழுப்பிய கேள்வி, ‘நீங்கள் ஏன், எம்.ஜி.ஆரைச் சுட்ட விஷயத்தைப் பற்றி மிக விரிவாகப் பேசவில்லை?’

அதற்கு என்னுடைய பதில் இதுவே. எம்.ஜி.ஆரைச் சுட்டதென்பதும் ராதாவின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம். ஆனால், அது மட்டுமே ராதாவின் அடையாளமாக முன்னிறுத்தப்படுவது, மக்களின் மனங்களில் பதிந்திருப்பது வருத்தத்திற்குரிய விஷயம். ராதாவின் பன்முக ஆளுமையை அழுத்தமாகப் பதிவு செய்வதே என் ஒரே நோக்கம். ராதாவின் அடையாளங்களாகப் பேச அவரது தனித்துவமான நடிப்பு, நாடகத் துறையில் அவரது அர்ப்பணிப்பு, பெரியாரின் சீடராக அவர் செய்த பகுத்தறிவுப் பிரசாரம், திராவிட அரசியலில் அவரது பங்கு, மனிதநேயம் உள்ளிட்ட ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. ஆக, எம்.ஜி.ஆரைச் சுட்டதற்கு என்ன முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமோ அதனளவில் அதைச் சுட்டிக் காட்டியிருக்கிறேன். அவ்வளவே.

பேசியவர்களில் பலரும் பொதுவாகச் சொன்ன விஷயம், ‘நாங்க தீவிர எம்.ஜி.ஆர். ரசிகர்கள். எம்.ஆர்.ராதான்னாலே பிடிக்காது. அவரு எம்.ஜி.ஆரைச் சுட்டவரு. வில்லன். ஆனா, இந்தத் தொடரைப் படிச்சதுக்கு அப்புறம்தான் எம்.ஆர்.ராதா எவ்வளவு பெரிய ஆளு, எவ்வளவு உயர்ந்த மனிதர், நல்லவர்னு புரிஞ்சுக்கிட்டோம்.’

கலைத்துறையிலும் சரி, அரசியலிலும் சரி எம்.ஆர். ராதாவின் பங்களிப்பு மிகப்பெரியது. எம்.ஆர். ராதா நூற்றாண்டு நிகழும் இந்தச் சமயத்தில் என் எழுத்து மூலம் அவரது வாழ்க்கையும், அவரது உயரிய பண்புகளும் மனித நேயமும் பலரையும் சென்றடைந்ததில் பெருமகிழ்ச்சி. கூடவே மனத்தில் அதீத கற்பனை ஒன்றும் தோன்றுகிறது. டைம் மிஷின் ஒன்று கிடைத்தால், அதில் ஏறி ராதா வாழ்ந்த காலத்துக்குச் சென்று அவரிடம் கலகக்காரனின் கதை புத்தகத்தைக் கொடுக்க வேண்டும் என்று. அப்படி நிகழ்ந்தால் ராதா என்ன சொல்லுவார்?

‘நாட்லே எவ்வளவோ பெரிய பெரிய மனுஷங்க, மேதைகள், அறிஞர்கள், மகான்கள் எல்லாம் வாழ்ந்துட்டுப் போயிருக்காங்க. நீ அவங்களை பத்தி எழுதாம, என்னைப் பத்தி எழுதி உன் டைம் வேஸ்ட் பண்ணிருக்க. பரவாயில்ல மேன். இனிமேலாவது நல்ல விஷயங்களை எழுத முயற்சி பண்ணு.’

 

மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்குத்தான் தெரியும்…

முத்துநகர் எக்ஸ்பிரஸ். மூன்றாம் வகுப்பு குளிர்சாதனப் பெட்டி. நேற்றிரவு சென்னை நோக்கி மனைவி, மகள், மனைவியின் பெற்றோருடன் பயணம். எத்தனையோ வருடங்கள் இதே ரயிலில்தான் சென்று வந்து கொண்டிருக்கிறேன். இரண்டாம் வகுப்பில் டிக்கெட் கிடைக்கவில்லையென்றால், அடுத்த நாளில் டிக்கெட் கிடைக்குமா என்று மனம் அனிச்சையாக யோசிக்குமே தவிர, மூன்றாம் வகுப்பு ஏசி என்றொரு பிரிவு உண்டு என்றெல்லாம் என்றைக்குமே நினைவில் தோன்றியதில்லை. அதென்னமோ தெரியவில்லை, மகள்கள் வந்து அப்பாக்களின் இயல்பை எல்லாம் இல்லாமல் செய்து விடுகிறார்கள். மகளுக்கு என்றால் மனம் கணக்குப் பார்ப்பதை மறந்துவிட்டு மகளை மட்டுமே பார்க்கிறது.

சரி விஷயம் அதுவல்ல. எங்களோடு வந்த சக பயணிகள் குறித்தது. புதிதாக திருமணம் ஆன இளம்ஜோடி, உடன் அந்தப் பெண்ணின் அண்ணன் என மூவர். வழியனுப்ப வந்த குடும்பத்தினரின் தலையை எண்ண முடியவில்லை. தூத்துக்குடியில் நேற்றிரவு 7.50 அளவில் ரயில் நிலைய நடைமேடையில் மட்டும் 2 மிமீ மழை பதிவாகியிருக்கக் கூடும். புதுப்பெண்ணும் ரயில் பெட்டிக்குள் மழை பொழிந்தாள். அந்த சோக மேகங்கள் எல்லாம் கலைந்து ஜோடி இயல்பு நிலைக்குத் திரும்ப சில நிமிடங்கள் பிடித்தன. குழந்தை ஒன்று எதிரில் ஏதேதோ பேசி விளையாடிக் கொண்டிருந்தால் மனம் எந்தக் கஷ்டத்தில் தத்தளித்துக் கொண்டிருந்தாலும் கரையேறி விடுமல்லவா!

இங்கு நான் பேச விரும்பும் குணசித்திரம் அந்தப் பெண்ணின் அண்ணன். தன் தங்கையையும், தனது புதிய பளபளா அத்தானையும் விழுந்து விழுந்து கவனிக்க ஆரம்பித்தார் அந்த அண்ணன். உணவுப் பொட்டலத்தைப் பிரித்து வைத்து, அதில் சப்பாத்திக்கான ‘தொட்டுக்க’ வகையறாக்களை ஊற்றோ ஊற்றென்று ஊற்றி, தரம், சுவை, திடம், மணம் பற்றியெல்லாம் அக்கறையுடன் விசாரித்து… ஊட்டித்தான் விடவில்லை. அதற்கும் அவர் தயாராகத்தான் இருந்தார். ‘அப்பா உங்களை கவனிக்கச் சொன்னாங்க…’ – இந்த வார்த்தைகள் அவ்வப்போது அண்ணனிடமிருந்து ஒலித்தன. சப்பாத்திக்குப் பின் ஜாம் பன், அதற்குப் பின் பழம். (இத்தனையையும் நான் வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருக்கவில்லை என்பது இங்கே தகவலுக்காக.) ஏவ்வ்வ்… சாப்பிடாமலேயே எனக்கு பசி அடங்கியது.

தன் தங்கையும், தகதகா அத்தானும் அடுத்து உறங்கச் செல்ல வேண்டும் அல்லவா. நாங்கள் எத்தனை மணிக்கு உறங்குவோம், குழந்தை எப்போது தூங்கும், தொட்டில் கட்டுவீர்களா?, எந்த இடத்தில், எந்தக் கோணத்தில், எதைக் கொண்டு கட்டுவீர்கள்?, லைட்டை எப்போது அணைப்பீர்கள்? ஏசி ஓடுவதால் ஃபேன் இரவில் தேவையா? – சீரான இடைவெளியில் இப்படி கேள்விகளைத் தொடுத்துக் கொண்டே இருந்தார். என் தங்கைக்குக் குளிரும், லைட் எரிந்தால் அத்தானுக்குத் தூக்கம் வராது – ஆக அத்தனையும் அணைத்துவிட்டு படுங்கள் போன்ற பாசக் குறிப்புகளுக்கும் குறைவில்லை. ஆயிரம் குறிப்புகள் கொடுத்தாலும் குழந்தை, குழந்தையாகத்தான் இருக்குமென்பது பாவம் அவருக்குப் புரியவில்லை. ஆனால், அந்த இளம்ஜோடி அந்த தெய்வ மச்சானின் பாசப் போராட்டம் குறித்து பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. சைட் லோயர் பர்த்துக்கு இடம் மாறி, விண்ணைத் தாண்டி வருவாயா சிம்பு – த்ரிஷாவைப் பிரதிபலிக்க முயன்று கொண்டிருந்தார்கள்.

தொட்டிலைத் தயார் செய்தேன். சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு மகளைத் தூங்க வைத்தேன். (’நல்லாப் பாத்துக்கோங்க… நீங்கதான் நம்ம குழந்தையையும் தூங்க வைக்கணும். என்னால பாட்டெல்லாம் பாட முடியாது’ என்று அந்த புதுப்பெண், தன் கணவனிடம் சொல்லிக் கொண்டாள் என்பது இங்கே கொசுறு. மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்குத்தான் தெரியும்….)

என் குடும்பத்தினர் ஒவ்வொருவராக தூங்க ஆரம்பித்தார்கள். அந்த அண்ணன், தன் தங்கைக்கு, அத்தானுக்கு தொட்டில் கட்ட மனத்தளவில் ஏங்கியிருக்க பிரகாச வாய்ப்புள்ளது. அவர்களுக்கு விரித்துக் கொடுத்து படுக்கச் சொன்னார். அவர்கள் சைட் லோயர் ரொமாண்டிக் கடலை மூடில் இருந்து மாறுவதாக இல்லை. ‘அப்பா உங்களைச் சீக்கிரம் தூங்க வைக்கச் சொன்னார்’ என்றும் சொல்லிப் பார்த்தார் அண்ணன். அவர்கள் அசரவில்லை. அண்ணன் வேறு வழியின்றி தன் அத்தானுக்கான மிடில் பர்த்தில் வந்து படுத்துக் கொண்டார். ‘அவங்க வந்து படுத்ததும் லைட் அணைச்சிடனும். ஃபேன் அணைச்சிடனும்’ என்று எனக்கு மீண்டும் குறிப்பு கொடுத்தார். ஃபேன் இல்லாவிட்டால் குழந்தைக்கு காற்று வராது. விடிவிளக்கு எதுவும் இல்லாததால் ட்யூப் லைட்டை அணைத்தபோது கும்மிருட்டு. மகள் சிணுங்கினாள். லைட்டைப் போட்டுக் கொண்டேன். அந்த அண்ணனது தங்கை பாசம் பெரியதா, அல்லது இந்த அப்பாவின் மகள் பாசம் பெரியதா என்று ஒரு போராட்டம் நள்ளிரவில் வெடிக்கக்கூடும் என்று மனம் எச்சரித்தது.

ஒரு மணி நேரம் கடந்திருக்கும். அந்த இளம் ஜோடி தத்தம் பெர்த்களில் வந்து அடைக்கலமாகினர். அண்ணன் நான் லைட்டை அணைக்கிறேனா என்று பார்த்துவிட்டு, தனக்கான சைட் லோயருக்கு இடம் பெயர்ந்தார். குழந்தை அசந்து தூங்கிவிட்டதால் லைட் அணைப்பதில் எனக்குச் சங்கடம் இருக்கவில்லை. அந்தத் தங்கையும், தளதளா மச்சானும் படுத்த அடுத்த நொடி அப்படி இப்படி அசையவில்லை. லைட்டோ, ஃபேனோ, காய்கறி விலை உயர்வோ, காங்கிரஸ் அரசின் கணக்கு வழக்கில்லாத ஊழல்களோ எதுவும் அவர்களைத் தொந்தரவு செய்ய வாய்ப்பில்லாத அசல் உறக்கம். எங்கள் பகுதிக்கான திரை போட்டுக் கொண்டேன்.

மகளுடனான பயணங்களில் நான் பெரும்பாலும் உறங்குவதில்லை. என் மகள் நள்ளிரவு ஒன்றிலிருந்து இரண்டுக்குள் தொட்டிலிலிருந்து தனது அம்மாவின் அரவணைப்புக்குத் தாவுவாள். அது நிகழ்ந்தது. அச்சமயம் முதல் லைட் தேவைப்பட்டது. ஃபேனும். அன்பு அண்ணனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. திரைக்குள் தலையை விட்டார். என்ன நடக்கிறதென்று பார்த்தார். குழந்தையின் அழுகை, அருமை அத்தானின் துயிலை, பாச மலரின் கண்ணுறக்கத்தைத் தொந்தரவு செய்துவிடுமோ என்ற பயம் அவருக்கு. ஆனாலும் குழந்தை என்பதால் அவர் தம் கட்டுக்கடங்காத பாசத்தைக் கட்டுப்படுத்தி கக்கத்தில் சொருகிக் கொண்டு என்னைப் பார்த்தார். நானும் பதிலுக்கு வெறும் பார்வை ஒன்றை வீசினேன். தலை மறைந்தது.

அடுத்த மூன்று மணி நேரமும், குழந்தை சிணுங்க, அழ, கத்த – லைட்டை அணைக்க முடியவில்லை. அண்ணனின் தலை திரைக்குள் அடிக்கடி நுழைந்தது. என் பார்வையைச் சந்தித்துக் குரலின்றி வெளியேறியது. ஆனால், என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்கிற ரீதியில்தான் அந்த ஜோடி தூங்கிக் கொண்டிருந்தது என்பதே உண்மை. ஆக எனக்கும் உறுத்தல் இல்லை. ஐந்து மணிக்குமேல் குழந்தை மீண்டும் தொட்டிலுக்கு மாறி, அசந்து தூங்க ஆரம்பிக்க, ரயில் இரைச்சலையும் தாண்டி அண்ணனின் பெருமூச்சு என் செவிகளில் மோதியது, கூடவே அத்தானின் தேன்மதுரக் குறட்டையொலியும்.

விடிந்தது. அண்ணனின் முகத்தில் தூங்காத களைப்பு. இருந்தாலும் தங்கையும் அத்தானும் ஃப்ரெஷ்ஷாக எழுந்ததில் அவருக்கு ராஜ்யசபா எம்.பி. ஆன திருப்தி.

அம்மூவரும் சென்னைக்கு வந்து யாரையோ பார்த்துவிட்டு, பின் பெங்களூர் செல்கிறார்கள். ஜோடி இனி வசிக்கப் போவது பெங்களூரில்தான். அண்ணன் குடிவைக்கச் செல்கிறார். இன்னும் சில தினங்களில் பெங்களூரில் ஏதாவது ரயில் நிலையத்தில் மட்டும் மழை பொழியக் கூடும்.

 

லொள்ளு விருதுகள் 2011

 

mounaguru

 

mayakam enna
 

pulivesham
 

aaranyakandam
 
AZKuthirai
 
paranormal activity
 
mankatha
 
DTM
 
nadunisinai
 
sattapadi
 
vaagaiSva
 
KungFu Panda
 
vanthan vendran
 
MI4
 
kullanarik
 
the hangover
 
singampuli
 
tintin
 
osthe
 
yudham sei
 

சுற்றி நடக்கும் எல்லாவற்றையும் பல சமயங்களில் வேறு வழியில்லாமல் சகித்துக் கொண்டு வாழும் பொதுமக்களுக்கான விருது:

porali

றிடிறிஏ விக்டோரியா ஆரம்பப் பாடசாலை, தூத்துக்குடி.

 

1985

வீட்டு வாசல் கதவைப் பிடித்து அடம்பிடித்தபடி கொஞ்சநேரம், செல்லும் வழியெல்லாம் கொஞ்சநேரம், பள்ளிக்கூட கேட் அருகில் கொஞ்சநேரம் – அழுது தீர்ப்பேன். பள்ளிக்கூடம் என்றால் அவ்வளவு பயம். அந்த பயத்துக்கான காரணம் என்னவென்று சிறுகுறிப்பெல்லாம் வரைய முடியாது. பயந்தேன். அவ்வளவுதான்.

நான் படிப்பை ஆரம்பித்தது பிரிகேஜி, எல்கேஜியில் அல்ல; பேபி கிளாஸில். தமிழ் வழிக் கல்வி. எனது (தந்தை வழி) தாத்தா சுப்ரமணியன், தம் பேரப்பிள்ளைகளை தமிழ் வழியில் மட்டுமே படிக்க வைக்க வேண்டும் என்பதில் கொள்கைப் பிடிப்போடு இருந்துள்ளார்கள். (தாத்தாவுக்கு என் மனபூர்வமான நன்றி.) என் அக்காவைக்கூட ஆங்கில மீடியத்தில் சேர்த்துவிட்டு பின், தாத்தாவின் கட்டளையால் ஓரிரு வருடங்களில் தமிழ் மீடியம் பள்ளிக்கு மாற்றிவிட்டனர்.

பெற்றோர், என்னைப் பள்ளியில் கொண்டு சேர்த்த அந்த நிமிடங்கள் எல்லாம் நினைவில் இல்லை. ஆனால் பேபி கிளாஸ் எடுத்த கல்யாணி டீச்சரின் முகம் மட்டுமல்ல, குரல்கூட எனக்கு என்றைக்கும் மறக்காது. அந்தப் பள்ளிக்கூட ஆசிரியைகள் அனைவருக்குமே எங்கள் குடும்பம் பரிச்சயம். ஆக, என்மேல் அவர்களுக்குத் தனிப் பிரியம். கல்யாணி டீச்சரது மகனான மாரிமுத்துவும் என் க்ளாஸ்மேட்தான். மாரிமுத்துவுக்கு அடுத்தபடியாக டீச்சர், அன்பாகக் கவனித்தது என்னைத்தான் இருக்கும். (நன்றி டீச்சர்!)

பேபி கிளாஸ் - 1985

டீச்சர் அன்போடு இருந்தால் மட்டும் போதுமா? ஹெட்மிஸ்டரஸ் பாசத்தோடு பேசினால் மட்டும் போதுமா? என்னைப் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் ‘அரளக்கா’ (ஆயாவை அப்படித்தான் கூப்பிடுவோம்; அவர்கள் முழுப்பெயர் ’அருளம்மாள்’ என ஞாபகம்.) என்னைப் பள்ளியில் பரிவாகக் கவனித்துக் கொண்டால் மட்டும் போதுமா; எனக்கும் பள்ளிக்கூடம் மீது பிடிப்பு, பிரியம், காதல், கெமிஸ்டரி எல்லாம் வர வேண்டாமா? அதெல்லாம் வருவதற்குப் பல காலம் பிடித்தது. அதிகம் பயந்தால், பள்ளி நடந்து கொண்டிக்கும்போதே அழுதபடியே என் வகுப்பிலிருந்து எழுந்து மூன்றாம் வகுப்பு ‘B’ செக்ஷனுக்குச் செல்வேன். அது என் அக்காவின் வகுப்பு. அவளருகில் உட்கார்ந்து கொள்வேன். அதற்காக அந்த மூன்றாம் வகுப்பு டீச்சர் என்னை ஒருபோதும் அதட்டவில்லை, விரட்டவில்லை. அவ்வகுப்பில் நடத்தப்படும் ‘ஏ ஃபார் ஆப்பிள்… பி ஃபார் பால்’ பாடத்தைக் கவனிப்பேன். (மூன்றாம் வகுப்பில்தான் ஆங்கிலம் ஒரு சப்ஜெக்ட்டாக எங்களுக்கு அறிமுகமானது.)

மதியம் உணவு இடைவேளையில், அரளக்கா என்னையும் அக்காவையும் (மேலும் சிலரையும்) வீட்டில் கொண்டு போய் விடுவார்கள். வீட்டுக்கும் பள்ளிக்கும் அதிக தூரமெல்லாம் இல்லை. உடல் நோகமால் அங்கப்பிரதட்சணம் செய்யும் தூரம்தான். முதல் வாய் சாப்பிடும்போதே எனக்கு வயிறு வலிக்க ஆரம்பித்துவிடும். தயிர் சாதத்துக்குச் செல்லும் முன்பாகவே தலைவலிக்க ஆரம்பித்துவிடும். அரளக்கா மீண்டும் பள்ளிக்கு அழைத்துப் போக வரும்போது பெருங்குரலெடுத்து அழ ஆரம்பிப்பேன். என் வீட்டுக் கதவில் இறுகியிருக்கும் எனது உடும்புப் பிடியை விடுவிக்க அம்மா மல்லுக்கட்டுவார்கள்.

பேபி கிளாஸில் பர்ஸ்ட் ரேங்க் எல்லாம் எடுக்க ஆரம்பித்தவுடன், எனது பயம் மறைய ஆரம்பித்திருக்கும் என்று நினைக்கிறேன். பள்ளி செல்வதில் ஆர்வம் வந்தது. இங்கே என்னைப் பற்றிய ஒரு சுயதம்பட்ட குறிப்பு: நான் றிடிறிஏ (TDTA) விக்டோரியா ஆரம்பப் பாடசாலையில் படித்தபோது (பேபி கிளாஸ் முதல் ஐந்தாம் வகுப்பு வரை) முதல் அல்லது இரண்டாம் ரேங்க் மட்டுமே வாங்கியிருக்கிறேன். நான் முதல் ரேங்க் என்றால் இரண்டாவதாக புவனேஸ்வரி இருப்பாள். நான் இரண்டாவது எனில் முதலிடத்தில் அவள் இருப்பாள். ஸ்கூல் டீமில் பெரிய பேட்ஸ்மேனாக இருப்பவன், மாவட்ட அணிக்குச் செல்லும்போது தடுமாறுவதில்லையா. மேற்படிப்புக்குச் செல்லச் செல்ல கட்டெறும்பு தேய்ந்து கால் தூசாக நான் ஆனதெல்லாம் வரலாறு!

காலையில் தினமும் பிரேயர் உண்டு. ஒவ்வொரு நாளும் தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பின் பழைய ஏற்பாட்டிலிருந்து ஏசையாவோ, யோவானோ பேசுவார்கள் அல்லது சங்கீதம் ஒலிக்கும். அதற்குப் பின் கிறித்துவப் பாடல் ஒன்றைப் பாட வேண்டும்.

சருவ லோகாதிபா, நமஸ்காரம்!
சருவ சிருஷ்டிகனே, நமஸ்காரம்!
தரை, கடல், உயிர், வான் சகலமும் படைத்த
தயாபர பிதாவே, நமஸ்காரம்…

என்ற பாடல் செவ்வாய்க்கிழமைக்கானது. மற்ற கிழமைக்கான பாடல்கள் நினைவில் இல்லை. அதன் அர்த்தம், யாரைப் போற்றும் பாடல் என்றெல்லாம் தெரியாது. எல்லோருடனும் சேர்ந்து அதிக சத்தம் போடுவது பாடுவதில் அவ்வளவு சந்தோஷம். (மற்ற பாடல்களை நினைவுக்குக் கொண்டு வருவதற்காக எல்லாம் வல்ல பரமபிதா கூகுளைச் சரண்புக வேண்டும்.)

பாட்டு முடிந்ததும் வகுப்பறைக்குச் செல்ல வேண்டும். முதல் பீரியடில், டீச்சரிடம் எழுதி வந்த ஹோம்-வொர்க்கைக் காண்பிக்க வேண்டும். அதற்கெனத் தனி நோட்டெல்லாம் கிடையாது. சிலேட்டுதான். (கல் சிலேட், சுற்றிலும் மரச்சட்டம் – ஞாபகமிருக்கிறதா?) எழுதுவதைவிட, அது அழியாமல் அரும்பாடுபட்டு பள்ளிக்குக் கொண்டுவருவதே ஆகப் பெரிய சவால். சிலேட்டில் இரு பக்கங்களுக்குள் அடங்கும் வகையில்தான் ஹோம்-வொர்க் சுமை இருக்கும் என்பது வசதி. ஹோம்-வொர்க் எழுதாத சமயங்களில் ‘பையில் வைத்திருந்தேன், அழிந்துவிட்டது’, ‘மழையில் அழிந்துவிட்டது’ என்று காரணம் சொல்லலாம். எந்த டீச்சரும் அவ்வளவு சுலபத்தில் ‘அடி ஸ்கேலை’த் தூக்க மாட்டார்கள்.

காலை, மதிய இடைவேளைகளில் கல்யாணி டீச்சர் தம்மிடம் இருக்கும் மிட்டாய் பாக்கெட்டுகளைப் பிரிப்பார்கள். பிரித்து ஒரு பச்சை டப்பாவில் போடுவார்கள். கடலை மிட்டாய், மிளகாய் மிட்டாய், கல்கோனா, பாக்கு மிட்டாய், ஆரஞ்சு மிட்டாய், சூடம் மிட்டாய், தேன் மிட்டாய், சீரக மிட்டாய் – இப்படி பல ரகங்கள். ஐந்து பைசாவுக்கு ஒரு மிட்டாய். எனக்கோ அக்காவுக்கோ வீட்டில் பாக்கெட் மணி கொடுக்க மாட்டார்கள். மிட்டாய் என்பது எங்களுக்குக் கண்களால் சாப்பிடும் சமாசாரம் மட்டுமே.

கொடிநாளுக்காக, பள்ளியில் எல்லோருக்கும் கொடி கொடுத்து 25 பைசா கேட்பார்கள். ஒருமுறை கொடிக்காகக் கொண்டுவந்த 50 பைசாவில் நானும் அக்காவும் ஆசைப்பட்டு மிட்டாய் வாங்கித் தின்றுவிட்டோம். கொடிக்குப் பைசா?

அம்மாவிடம் தயங்கித் தயங்கிச் சொல்ல, அப்புறமென்ன, தாராளமாக அடி கிடைத்தது. மீண்டும் மிட்டாய் வாங்கித் தின்னும் எண்ணம் வராதது போனஸ்.

பெரிய மைதானமெல்லாம் என் பள்ளியில் கிடையாது. ‘L’ போல நீளமாக அமைந்த வகுப்பறைகள். அதில் நடுவே ஹெட் மிஸ்ட்ரஸ் அறையும் பேபி கிளாஸும். அந்த வகுப்புகளுக்கு இருபுறமும் உள்ள இடம்தான் மைதானம். அங்கே மொத்தம் ஏழு மரங்கள் இருந்ததாக நினைவு. வேர்களைத் தரையில் அகலமாகப் பரப்பிய அந்த அரச மரம் மற்ற மரங்களுக்கெல்லாம் அரசனாக கம்பீரமாக நிற்கும். அது தரையில் பரப்பிய அந்த வேர் சிம்மாசனத்தில் உட்கார புதன்கிழமைகளில் போட்டா போட்டி நடக்கும்.

காரணம், புதன்கிழமை மாலையில் ‘பாட்டக்கா’ வருவார்கள். (பாட்டுப் பாடி, கதைகள் சொல்லி, பைபிள் வாசிக்கும் இனிய குரலுடைய அக்கா. கிறித்துவ மதபோதகர்.) பள்ளியின் சிறிய மைதானத்தில் எல்லோரும் குழுமியிருக்க கூட்டம் ஆரம்பமாகும். பாட்டக்கா கையில் என்ன எடுத்து வருகிறார்கள் என்பதில்தான் எங்கள் அனைவருடைய கவனமும் இருக்கும். முதலில் பைபிள் வாசிப்பார்கள். பின் சில பாடல்கள். அடுத்தது கதை. நிற்க வைக்கப்பட்டிருக்கும் கரும்பலகைமேல், வெல்வெட் போன்ற துணி ஒன்றை விரித்து, அதில் விதவிதமான, வண்ணமயமான படங்களை ஒட்டி, கதை சொல்வார்கள். இன்றைய குழந்தைகளுக்கு கார்ட்டூன் சேனல்போல, எனக்கு அன்றைக்கு பாட்டக்கா சேனல். எல்லா கதைகளிலும் இறுதியில் இயேசுதான் ஜெயிப்பார் என்று எனக்குத் தெரியும். இருந்தாலும் பாட்டக்கா கதை சொல்லும் அழகுக்காகவே புதன்கிழமை மாலைகளுக்காகக் காத்திருந்திருக்கிறேன்.

ஐந்தாம் வகுப்பில் நான் படித்தது A செக்‌ஷன். ஹெட்-மிஸ்ட்ரஸ்தான் எனக்கு வகுப்பாசிரியர். பாதி வகுப்புகள் ஹெட்-மிஸ்ட்ரஸ் அறையிலேயே நடக்கும். அறைக்கு வெளியேதான் பள்ளிக்கூட மணி தொங்க விடப்பட்டிருக்கும். ஒரு பெரிய உலோக வட்டு, அதைத் தட்டுவதற்கென பெரிய சைஸ் ஆணி. மாணவர்கள்தான் மணியடிக்க வேண்டும். கிட்டத்தட்ட அது ‘ஸ்கூல் லீடர்’ போன்ற கௌரவத்துக்குரிய பதவி. பலமுறை முதல் ரேங்க் எடுக்கும் மாணவனால் மட்டுமே அப்பதவியை வகிக்க முடியும் என்பதால்…

ஒரு பீரியடுக்கும் இன்னொரு பீரியடுக்கும் இடைப்பட்ட நேரத்தில் ‘டிங்’ என ஒரே ஒரு முறை தட்ட வேண்டும். இண்டர்வெலில் நான்கைந்து ’டிங்’குகள். மதிய இடைவேளையிலும், சாயங்காலம் பள்ளி முடியும்போதும் இஷ்டம்போல ‘டிங்டிங்’கலாம். மணியடிப்பதற்காகவே கடிகாரத்தில் மணியைப் பார்த்துக் கொண்டு காத்திருப்பதில் அத்தனை சந்தோஷம்!

’மாணவர் சங்கம்’ – என்பது பள்ளியில் நடக்கும் கலைவிழா. ஒவ்வொரு வகுப்பிலிருந்தும் ஏதாவது நிகழ்ச்சி நடத்த வேண்டும். குழுவாக ஆடலாம், சேர்ந்து பாடலாம், கதை சொல்லலாம். நம் இஷ்டம்தான். ஐந்தாம் வகுப்பில் நண்பர்களோடு சேர்ந்து நாடகம் ஒன்றை ஏற்பாடு செய்தேன். சபாபதி ரக வேலைக்காரனும் (மையா), அவனால் அல்லல்படும் முதலாளியும்.

முதலாளி : மையா மையா!

வேலைக்காரன் : என்ன ஐயா?

முதலாளி : வீட்டுக்கு விருந்தாளிகள் வர்றாங்க. சோப்புத்தண்ணியால வீட்டைக் கழுவி விட்டுட்டு, எண்ணையில வடை சுட்டு வை.

’சரி’ என்பதாகத் தலையாட்டும் வேலைக்காரன், வீட்டை எண்ணெயால் கழுவி விட்டு, சோப்புத் தண்ணீரில் வடை செய்து வைப்பான். இப்படியாக சில காட்சிகளைக் கற்பனை செய்து அரங்கேற்றினோம். வசனம் மறந்து, ரியாக்‌ஷன்ஸ் மறந்து பல இடங்களில் சொதப்பினாலும் நாடகத்தை சிறிய வகுப்பு மாணவர்கள் கைதட்டி ரசித்ததாக நினைவு.

பொங்கலுக்கு முன்பாக, தீபாவளிக்கு முன்பாக, மேலும் சில விசேஷ நாள்களுக்கு முன்பாக – சத்துணவில் சாயங்கால வேளையில் ‘புளியோதரை’ கொடுப்பார்கள். சத்துணவு சாப்பிடும் நண்பர்கள் சிலர் அதில் எனக்கும் பங்கு கொடுப்பார்கள். அந்தச் சுவை நினைவில் இல்லை. ஆனால் அந்தப் புளியோதரையை நினைத்தால் இனிக்கிறது.

றிடிறிஏ பள்ளி இன்றைக்கும் தூத்துக்குடியில் இருக்கிறது. ஆனால் முற்றிலும் தோற்றத்தில் மாறுபட்டு, அந்த அரச மரத்தையும் பிற மரங்களையும் இழந்து…

2010ல் எனது பள்ளி

இப்போதும் ஊருக்குச் சென்றால் பள்ளிக்கூடத்தைக் கடக்கும்போது மதிய இடைவேளையில் எல்லா மாணவர்களும் கூடி உட்கார்ந்து உரக்கச் சொல்லும் அந்தச் சத்தம் மட்டும் எனக்குள் கேட்கிறது.

‘எட்டா எட்டா அறுவத்துநாலு…

ஒம்பித்தெட்டு எழுவத்திரண்டு..

பைத்தெட்டு எண்பது…’

(புகைப்படத்தில் நடுவரிசையில் கல்யாணி டீச்சருக்கு அருகில் நிற்பது நான். என்னருகில் மாரிமுத்து. மேல் வரிசையில் மூன்றாவது ஆண்டாள் கொண்டையுடன் நிற்பவள் புவனேஸ்வரி. அரளக்காவும் இருக்கிறார்கள்.)

ரஜினிகாந்த் 1982

‘புதியவர்கள் சிலர் வந்து என்னை நடிக்க அழைத்தார்கள். நீங்கள் நடிப்பதாகச் சம்மதம் தெரிவித்தால் போதும், பிறகு எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளலாம் என்றார்கள். இதற்கு என்ன அர்த்தம்?

என் பெயரை விளம்பரப்படுத்தி என்னைக் கொண்டு ஆதாயம் பெற வேண்டும் என்பது இவர்களது முதல் குறிக்கோள். எனக்கு ஆதாயமாக இருக்கக்கூடிய பெரிய பேனர்களை நான் தேர்ந்தெடுப்பதில் என்ன தப்பு? டென்ஷன் எல்லாம் எனக்குப் பிடிக்காது. என் படத்தை இடைஞ்சல்கள், தகராறு இல்லாமல் ஒழுங்காக எடுத்து முடிப்பார்களா என்பதில்தான் நான் அக்கறை செலுத்துவேன். என் பட முதலாளிகளுக்கு எப்படிப்பட்ட கேரக்டரில் என்னை நடிக்க வைக்க வேண்டும் என்பது தெரியாமல் போகுமா.

என்னைப் பொறுத்தவரை வித்தியாசமான காரெக்டர்கள், லட்சியப் படம், புதுமைப் படைப்பு என்றெல்லாம் நான் வீணே அலட்டிக் கொள்வதில்லை.’

-ரஜினிகாந்த் (மே 1982-பொம்மை)

(நன்றி: பா. தீனதயாளன்)