சினிமாவுக்குப் போன…

(ரொம்ப வருஷமாச்சு. இப்படி ஒரு நையாண்டிக் கட்டுரை எழுதி. இன்னிக்கு எழுதிப்பார்த்தேன். பரவாயில்ல, எதுவும் விட்டுப் போகல. நல்லாத்தான் வருது. ஆக, இந்த நையாண்டிக் கட்டுரையின் நோக்கம் யாரையும் புண்படுத்துவதோ, பண்படுத்துவதோ, டின்கட்டுவதோ அல்ல. இந்தக் கட்டுரையின் மூலம், அது உங்களுக்குத் தெரியாததா என்ன!)

தெலுங்கு தேஜஸ்வினி பத்திரிகையில் ரேணிகுண்டா ரெங்கநாயுடு (ரேரெ) தனது சினிமா  அனுபவங்களை கிசுகிசுக்களாக எழுதி வருகிறார். எதை எழுதினாலும் எவனுமே புரிந்துகொள்ளக்கூடாது என்ற பாணியில் எழுதுவதே ரேரெவின் வழக்கம். கிசுகிசுக்களின் சுவாரசியம்  பற்றி கேட்க வேண்டுமா? மர்ம நபர் இயக்கும் ரயில்போல காலம் கடந்துசெல்வதை  அதில்  உணர்ந்து பீதியடைய முடிகிறது.

பிரெட் பஜ்ஜி மடித்து வந்த காகிதத்தில் ரேரெவின் ஏப்ரல் மாதக் கட்டுரை அகப்பட்டது. தான் தங்கியிருந்த தெருவோரங்களை, உல்லாச விடுதிகள் குறித்து அதில் பீற்றியிருந்தார் ரேரெ. அவர் சிறுவயதில் திருட்டு தம் அடிக்க ஒதுங்கும் இடத்தில் தன் வாத்தியாரைத் திட்டி கரித்துண்டால்  எழுதுவாராம். குப்புறப்படுத்துக்கொண்டு ஹோம்வொர்க் எழுதுவாராம். அப்படியே  குறட்டைவிட்டு விடுவாராம். எழுத்துப் பிழை இல்லாமல் எழுதவேண்டும் என்பது அவரது நெடுங்கனவாக இருந்திருக்கிறது. சினிமாவுக்குள் நுழைந்த பிறகுதான் அது சாத்தியமாகியிருக்கிறது.  ஏறக்குறைய எனக்கும் அந்த அனுபவம் உண்டு. சினிமாவில்தான் யாரும் எழுத்துப் பிழைகளைக்  கண்டுகொள்வதில்லை.

எனக்குச் சிறுவயதில் கிறுக்குவதற்கென தனி இடமே இருந்ததில்லை. எதிர்வீட்டு போலீஸ்காரர்  வீட்டுச்சுவரில் கவிதை எழுதி ஏகப்பட்ட முறை அடி வாங்கியிருக்கிறேன். கோயில் பிரகாரம்  எனக்கு பிரசாதம் தரும் இடமாகத் தெரிந்ததே தவிர, எழுத்துப் பிரசவத்துக்குத் தோதான இடமாகத்  தோன்றவில்லை. வீட்டுக் கொல்லையில் மாமரம் மீது ஏறியமர்ந்து எழுதியிருக்கலாம். மாங்காயின்  சுவை என்னை எழுதவிடவில்லை.

பின்னர் நான் வேலைக்குச் சேர்ந்த உடன் செய்துகொண்ட வசதி, நான்கு கோடு போட்ட நோட்டு  ஒரு டஜன் வாங்கிக் கொண்டேன். கையெழுத்தைச் சரிசெய்ய. அதற்கு ஒரு மேஜை தேவை என்பதை உள்மனம் குத்திக்காட்டியது. தவணை முறையில் வாங்கினேன். ஒரு மேஜைமுன் அமர்ந்து  தப்பின்றி, எனக்குப் பிடித்த சினிமாப் பாடல்களை எழுதிப் பார்த்து குதூகலித்தது இன்றும் பசுமையாக, நாஞ்சில்நாட்டு பலாச்சுளையின் சுவைபோல நினைவில் நிற்கிறது.

பல வருடங்களாக வேறு வழியின்றி, வீட்டின் ஒற்றைப் படுக்கை அறையில் கணிப்பொறி வைத்து  அமர்ந்து டைப் அடித்துப் பழகினேன். தூங்க வேண்டும் என்றால் மானிட்டரை கட்டிலுக்கு அடியில் தள்ளிவிட வேண்டும். இந்த வசதியின்மைகள் என்னை ஓர் இலக்கியவாதியாக மாற்றியதில் ஆச்சரியமில்லை. வசதிகளைத் தேற்றுவதற்காக நான் திரைத்துறையை ‘அரைக்கண்’ணால்  வாஞ்சையோடு நோட்டமிட்டுக் கொண்டிருந்ததையும் மறுப்பதற்கில்லை.

சினிமாவுக்குள் நுழைவதற்கு முன்பாகவே எதை எதையெல்லாம் அடையலாம் என்று பகல் கனவு  காண்பது எனக்கு நாவல் எழுதுவதைவிட சுகானுபவமாக இருந்தது. சின்ன வாய்ப்பு ஒன்று  கிடைத்தபோதுகூட நான் என் கோரிக்கைகளை முன்னெடுத்து வைக்கத் தயங்கவே இல்லை. எழுதுவதற்குத்தான் யோசிக்க வேண்டும், பேசுவதற்கு அல்ல.

லால் பார்க், கப்பன் பார்க், நாகேஸ்வர ராவ் பார்க், மாநகராட்சி பார்க் என்று ஒரு பார்க்கைக்கூட  விடாமல் கொட்டாவி விட்டபடி காவியங்கள் படைத்த எனக்கு கீரின் பார்க்கில் ரூம்போட்டு எழுத  வேண்டும் என்பது வாழ்நாள் ஆசை. வெறி என்பதுகூட மிகையில்லாத சொல்தான். சினிமா வாய்ப்புகள் அனைத்தையும் சாத்தியமாக்கின. ஒரு நல்ல அறை ஓர் ஊற்றுக்கண். சுத்தமான கழிப்பறையோடு இணைந்த சௌகரியமான அறை, சொர்க்கம். கதைக்கான ஸீன் பிடிப்பது, கம்பா நதியில் மீன் பிடிப்பதற்கு ஒப்பானது. நாம் ஒரு நல்ல ஸீனைப் பிடித்துவிட்டோமென்றால் அந்த அறையும் ஸீனும் பின்னிப்பிணைந்து கொள்கின்றன. நினைவுகளின் ஏகாந்தக் கூட்டில் நிலைக்கின்றன.

‘கழுதைப்புலி’ எழுதும்போது சென்னையில் லொங்கடா ஓட்டல் ஒன்றில்தான் எனக்கு அறை  கொடுத்தார்கள். மாநகராட்சி பார்க்கைவிட அங்கே வசதிகள் குறைவுதான் என்றாலும் நறுமணங்களுக்குக் குறைவில்லை. வாடகையும் குறைவே. பஞ்சு இழந்த தலையணை, முடை நாற்றம் வீசும்  மெத்தை. நான்கில் ஒரு காலுக்குப் பதில் செங்கலால் அண்டை கொடுக்கப்பட்ட கட்டில்.  ஒருக்களித்துப் படுத்துக்கொண்டே பக்கத்து கட்டடத்தில் நடப்பதைப் பார்க்கும் சுதந்தரம்.  அனைத்தையும் சாத்தியப்படுத்திய அறைகூட எனக்கு சினிமாவின் கருவறையாகத்தான் தோன்றியது.

சமீபத்தில் தங்கிய தாஜ் கோரமண்டல் அறை என்னை வசீகரித்தது. எப்போதாவது இம்மாதிரி  விபத்துகளும் நேர்ந்துவிடுவது உண்டு. ஒருபக்கச் சுவர் முழுவதையும் என் முகத்தை எனக்கே  வெளிச்சம்போட்டுக் காட்டும் கண்ணாடி. பிடித்து கொதிக்கும் குழம்பில் போட்டுவிடலாமா என்று  நாக்கின் வெறியைத் தூண்டும் தொட்டி வண்ண மீன்கள். மார்கழி திருப்பாவைக் குளிரை ரிமோட்டில் கொண்டுவரும் ஏசி. இதையெல்லாம் இழந்து இத்தனைகாலம் அகம் பிரம்மாஸ்மி ருத்ரன்  போல தலைகீழாக நின்று தொலைத்த வாழ்க்கை உறுத்தலாக இருந்தது. தாஜில் என்னால் சிந்திக்கவே இயலவில்லை, வாழ்வைச் சுகித்துக் கிடந்தேன்.

வசதியான அறை ஒன்றை அனுபவித்துத் தீர்த்தபின் மனம் பூனைக்குட்டிபோல அதை நோக்கியே  பாய்கிறது. இப்போது மொட்டைமாடியில் எனக்கான அறையைக் கட்டிவிட்டேன். வீட்டின் கீழ்த்தளத்தில்  இருக்கும்போது நான் தக்காளி ரசம். மேல்தளத்தில் இருக்கும்போது பாதரசம். என்னை நானே  பிரித்துக் கொண்டேன். அறையில் இரண்டு புத்தக அலமாரிகள். ஒன்று குமுதம், விகடன், குங்குமத்துக்கானது. பரபரப்பை, சர்ச்சையைக் கிளப்ப ஏதாவது தூண்டுகோல் வேண்டுமே.  இன்னொரு அலமாரி எப்போதுமே பூட்டு கொண்டது. சாவி தொலைந்துவிட்டது. அது உலக  இலக்கியங்களுக்கானது.

என் அறையே சன்னல்களால் ஆனது போன்று பிரமிக்க வைக்கும். எப்போது வேண்டுமானாலும்  வெயிலும் வெள்ளை நிலாவும் வந்து போகலாம். இன்னும் கட்டுமானப்பணி முடியவில்லை. பக்கத்து  வீட்டு மரத்தில் காய்த்திருக்கும் கொய்யா அடிக்கடி கண்ணை உறுத்துகிறது. எதிர்வீட்டில் அலறும்  மெகா சீரியல் வசனங்கள். கேரளாவை நினைவுபடுத்தும் பக்கத்துவீட்டுப் பாட்டி. அவள் வளர்க்கும்  நாயின் நள்ளிரவு ஊளை. இயற்கையை இழக்க நான் விரும்புவதில்லை.

இந்த அறையின் வளர்ச்சியும் சினிமாவில் என் வளர்ச்சியும் ஒன்றுதான். வளர்ந்து கொண்டிருக்கி÷ றாம். எங்கு வேலை பார்த்தேன், என்ன வேலை பார்த்தேன் என்பதே நினைவிலிருந்து அழிந்து  கொண்டிருக்கிறது. சினிமா, ஒரு சமண முனிவனைப்போல என்னுள் தவமிருக்கிறது. சினிமா  எனக்கு வருமானம் தருகிறது. இரவு எனக்கு வெளிச்சத்தைத் தருகிறது. இரவெல்லாம் தூக்கத்தைத் தொங்கலில் விட்டுவிட்டு கூர்க்காவின் விசிலோசைகளை எண்ணிக் கொண்டிருக்கிறேன். இருளின் கருமை என் எழுத்துகளை,  பஞ்ச் டயலாக்குகளை கணிணியில் செதுக்குகிறது. இரவில் விழித்திருக்க விதிக்கப்பட்டவன், கத்திரி  வெயில் பல்லிளிக்கும் பட்டப்பகலில் தூங்கச் சபிக்கப்படுகிறான். கொசுக்கடியில் அவதிப் படுபவனும் கோடம்பாக்கத்துக்கு வாக்கப்பட்டவனும் இரவில் தூங்குவதில்லை.

இலக்கியம் நாயர் கடை பாக்கியைக்கூட தீர்க்க உதவவில்லை. அதில் கொஞ்சூண்டு பிராய்ந்து  எடுத்து கோடம்பாக்கத்தில் கடைவிரித்திருக்கிறேன். கல்லா நிறைகிறது. சினிமா என் நேசம் அல்ல.  எனக்கு சுவாசம் அல்ல. பேக்கரியைக் கடந்து செல்கையில் மூக்கைத் துளைக்கும் கேக்கின் வாசம்.  கேப்பைக்கூழும் இலக்கியமும் நல்லதுதான், நிலைத்த ருசி கொண்டதல்ல. எனக்கு கேக்தான் பிடித்திருக்கிறது. என்னால் கேக் இன்றி வாழ முடியாது.

இலக்குகள் இல்லாதவனுக்கு இலக்கியம் சுகம். எல்லாம் தேவைப்படுபவனுக்கு மசாலா சினிமாவே  முகம். அது வாழ்ந்து என்னை வாழ்விக்க!

எம்.ஜி.ஆரை அடக்கிய தேவர்!

‘அண்ணே யாரு உங்க படத்துல ஹீரோ?’

‘எம்.ஜி.ஆர்.’

‘நல்ல ஆளுண்ணே நீங்க. மொத மொதலாப் படம் எடுக்கறீங்க. ஒழுங்கா வேல நடக்க வேணாமா?’

‘ஏம்ப்பா, எம்.ஜி.ஆர். உனக்கென்ன கெடுதல் செஞ்சார்?’ – கோபத்தோடு சின்னப்பா தேவர் கேட்டார். சக தயாரிப்பாளர் அசரவே இல்லை. ‘அண்ணே நான் சொல்றேன்னு தப்பா எண்ணாதீங்க. நீங்க  எம்.ஜி.ஆர். காளையை அடக்குற மாதிரி நடிக்கணும்னு ஆசைப்படறீங்க. இன்னும் எம்.ஜி.ஆரை  நீங்க சரியாப் புரிஞ்சிக்கிடவே இல்ல. அவர் வரவே மாட்டார்.’
தேவர் பேசாமலிருந்தார். எம்.ஜி.ஆருக்கும் அவருக்குமான நட்பைப் பற்றித் தெரியாத அந்த சக தயாரிப்பாளர், ‘வரேங்க’ என்றபடி காரில் ஏறினார். எம்.ஜி.ஆர். மீதான குற்றச்சாட்டுகள் நெருப்பாகப் பரவியிருந்தன. எல்லோருமே குறை கூறினர். தயாரிப்பாளர்களோடு ஒத்துழைப்பது குறைவு. எம்.ஜி.ஆர். தன்னிச்சையாகச் செயல்படுகிறார். அவரால் படங்கள் வெளிவருவது தாமதமாகிறது.

அதற்கெல்லாம் காரணம் தி.மு.க.தான். ஒழுங்காக பக்தியோடு தொழில் செய்தவர்,  நாத்திகவாதிகளுடன் சேர்ந்து நாசமாகி விட்டார் என்பது போன்ற செய்திகள் எம்.ஜி.ஆரின் இமேஜைப் பாதித்தன. அலிபாபாவும் நாற்பது திருடர்களும் படத்தில் ‘அல்லா மீது ஆணையாக’ என்ற  வசனத்தைப் பேச மறுத்தார். அதை ‘அம்மா மீது ஆணையாக’ என்று மாற்றித் தரும்படி வசனகர்த்தா  ஏ.எல். நாராயணனை வற்யுறுத்தினார். முதலாளி டி.ஆர்.எஸ், ‘டயலாக் என்ன இருக்கோ, அதையே  பேசு ராமச்சந்திரா’ என்று உத்தரவே போட்டார். ஆனால் எம்.ஜி.ஆர். ஷூட்டிங்குக்கு தொடர்ந்து போகவில்லை. அவர் இல்லாமலேயே ஒரு சண்டைக் காட்சியையும் பாட்டு சீனையும் எடுத்து  டி.ஆர்.எஸ். படத்தை முடித்தார்.

எம்.ஜி.ஆர். மீண்டும் சேலம் சென்றார். ‘ராமச்சந்திரா படத்தை ஒரு தடவை பார்த்துட்டுப் போ’  என்று வழியனுப்பினார் டி.ஆர்.எஸ். கரடிமுத்து என்கிற நகைச்சுவை நடிகர், எம்.ஜி.ஆருக்கு  பதிலாக நடித்திருந்தார். எம்.ஜி.ஆர். அதிசயித்தபடி வெளியே வந்தார். அவருக்கே அசலையும் ÷ பாலியையும் பிரித்துப் பார்க்க முடியவில்லை.

குற்றச்சாட்டுகள் எதையும் தேவர் பொருட்படுத்தவில்லை. எம்.ஜி.ஆரை  நம்பினார். 1956 –  எம்.ஜி.ஆரின் ஆண்டாக இருந்தது. அதனாலேயே தாய்க்குப் பின் தாரம் படத்தையும் மிகுந்த  அக்கறையோடு தயாரித்துக் கொண்டிருந்தார்.

எம்.ஜி.ஆருக்காகவே சண்டைக் காட்சிகள் அதிகம் புகுத்தப்பட்டன. ஷூட்டிங் முடிய ஒரு  ஷெட்யூல் மட்டுமே பாக்கி. தேவர் உற்சாக நடை போட்டார். மருதமலை முருகன் அருளால் படம்  நல்லபடியாகவே தயாராகி விட்டது. காளைச் சண்டையை காமிராவில் பிடித்து விட்டால் வியாபாரம் முடிந்த மாதிரி. எம்.ஜி.ஆரிடம் பேசினார் தேவர்.

‘அண்ணே! உங்க தேதிக்கு காத்துக்கிட்டு இருக்கேன். வாகினில செட் தயார். வந்து பார்க்கறீங்களா?  பெரிய மைதானம். போதுமா சொல்லுங்க. வர்ற தை அமாவசை அன்னிக்கு வேலையை ஆரம்பி ச்சாப் பரவாயில்லயா?’

‘காளைக்கு நல்லா ட்ரெயினிங் கொடுத்தாச்சா?’ – எம்.ஜி.ஆர். கேட்டார்.

‘நீங்க அச்சப்படற மாதிரி விட்டுடுவேனா?’

‘பயமா, எனக்கா?’

‘இல்லண்ணே ஒரு பேச்சுக்கு…’
தேவருக்குச் சட்டென்று மனத்துக்குள் சிநேகித நூல் அறுவது போலிருந்தது. எம்.ஜி.ஆரின் உரையாடலும் நடவடிக்கையும் தட்டிக் கழிப்பதாகத் தெரிகிறதே. ஒழுங்காக முடித்துக்கொடுக்க மாட்டாரா?  எல்லோரும் சொன்னதெல்லாம் அனுபவித்து அவஸ்தையுற்று வெளியிட்ட சத்திய  வார்த்தைகள்தானா? என் எம்.ஜி.ஆர். இல்லையா இவர்?
தேவர், எம்.ஜி.ஆரை ஏறிட்டு நோக்கினார். மகிழ்ச்சி போனது. எனக்கு பதில் சொல்லிட்டுப் போ  என்கிற பிடிவாதமும் மிரட்டலும் கண்களில் அப்பட்டமாகத் தெரிந்தன.

‘அண்ணே…’

‘என் கால்ஷீட்டை இப்பப் பெரியவருதான் பார்க்குறாரு. நீங்க சக்ரபாணி அண்ணனைக் கேளுங்க’ –  எம்.ஜி.ஆர். சொன்னார்.

‘தாய்க்குப் பின் தாரத்துல சக்ரபாணி கிடையாதே. நான் எதுக்கு அவருகிட்டப் பேசணும்.’ – தேவர்  சூடானார்.

‘புரிஞ்சுக்குங்க அண்ணே. எல்லா முதலாளிகளும் அண்ணன்கிட்டதான் பேசறாங்க. எனக்கு அவரு  சொன்னா ஓகே. ஒரே குடும்பமா வாழறோம். பெரியவங்க வார்த்தையை மீற விரும்பல.’

தேவர் அமைதியாக வெளியேறி விட்டார்.

*******

தேவர் பிலிம்ஸின் முதல் தயாரிப்பான தாய்க்குப் பின் தாரமே தேவருக்குச் சுளையாக முப்பதாயிரம்  ரூபாயை லாபப் பங்காக அளித்தது. சொந்த சினிமா முயற்சி வெற்றி பெறாவிட்டால் தேவர் பிறந்த  ஊருக்கே போய்விடலாம் என்று முடிவு செய்திருந்தார். ஆனால் அவரது பேனரில் தாய்க்குப் பின்  தாரம் அள்ளிய வசூலை வேறு எந்தப் படமும் பெறவில்லை.
எம்.ஜி.ஆர். தேவரைச் சந்தித்தார். தன் சந்தோஷத்தைத் தெரியப்படுத்தினார். ‘அடுத்த ரிலீஸ் எப்ப  அண்ணே?’ என்றார் ஜாலியாக.

‘பார்க்கலாம்’ தேவர் சுருக்கமாக முடித்துக் கொண்டார்.

‘மனசுல எதையும் வெச்சுக்காதீங்கண்ணே. நீங்களே என்னைப் புரிஞ்சுக்கலண்ணா வேறு யார்  கிட்டப் போய் நிக்குறது?’

எம்.ஜி.ஆர். இறங்கி வந்தார். தேவர் பிடி கொடுக்கவில்லை. தாய்க்குப் பின் தாரம் தெலுங்கும் பேசியது. எம்.ஜி.ஆர்.  வீறுகொண்டு எழுந்தார். ‘யாரைக் கேட்டுப் படத்தை டப் செய்தீர்கள். எனக்கு எப்படி இன்னொரு வன் குரல் கொடுக்கலாம்?’ விளக்கங்கள் கேட்டு வக்கீல் நோட்டீஸ் பறந்தது தேவர் பிலிம்ஸுக்கு.

அலறியடித்துக் கொண்டு வாகினியில் நின்றார் தேவர். அதன் அதிபர்களில் ஒருவரான சக்ரபாணி சிநேகமாகச் சிரித்தார். தேவர் வசமிருந்த வழக்கறிஞரின் ஓலையை வாங்கி வாசித்துப் பார்த்தார். நாகிரெட்டி ஓடி வந்தார். அவரும் படித்துப் பார்த்து விட்டு கலகலப்பானார்.

சக்ரபாணி, எம்.ஜி.ஆருக்குத் தக்கபடி பதிலடி கொடுத்தார்.
‘காளையை நீங்கள் நிஜமாகவே அடக்கவில்லை. உங்களது டூப்தான் மோதி வெற்றி பெற்றார்.  ஆனால் அதற்கும் சேர்த்து ஊதியம் பெற்றுக் கொண்டீர்கள். உண்மையில் அக்கறையோடு நீங்களே  மாட்டை வென்றிருந்தால் இன்னும் எங்களுக்கு வசூல் அதிகரித்திருக்கும். அதற்கான நஷ்டத்தை  உங்களிடம் இருந்தே பெற விரும்புகிறோம்.’

எம்.ஜி.ஆர். அடங்கி விட்டார்.

********

சமீபத்தில் நான் மிகவும் ரசித்த, வியந்த, படித்து மகிழ்ந்த (எடிட் செய்த) புத்தகம் இது. சாண்டோ  சின்னப்பா தேவர். சினிமாவையும் சிவமைந்தனையும் வெறித்தனமாக நேசித்த ஒரு மாறுபட்ட  மனிதரின் வாழ்க்கை வரலாறு.

சினிமாவுக்குள் தேவர் எப்படி நுழைந்தார்? ஆரம்ப காலத்தில் எம்.ஜி.ஆருக்கும் தேவருக்கும் நட்பு  எப்படி இருந்தது? ஏன் முறிந்தது? மீண்டும் எப்படித் துளிர்த்தது? எம்.ஜி.ஆரை வைத்து ஒரு படம்  எடுப்பதற்குள்ளாகவே எத்தனையோ தயாரிப்பாளர்கள் நொடிந்து போயிருக்கிறார்கள். தேவரால்  மட்டும் எப்படி தொடர்ந்து இத்தனை படங்களைக் கொடுக்க முடிந்தது? ஒரே இனத்தைச் சார்ந்தவர்  என்றாலும் தேவர் ஏன் சிவாஜியை வைத்து படம் எடுக்கவில்லை? எம்.ஜி.ஆரையும் முருகனையும்  மட்டுமே நம்பி படம் எடுத்த தேவர், திடீரென மிருகங்களை நம்ப ஆரம்பித்தது ஏன்? மொழியே  தெரியாமல், பாலிவுட்டிலும் நுழைந்து தேவர் கலக்கியது எப்படி? இவை மட்டுமல்ல, இன்னும்  எத்தனையோ கேள்விகளுக்கு விடையளிக்கிறது இந்தப் புத்தகம்.

பூஜை போட்டு மூன்றே அமாவாசையில் படம் முடியவேண்டும். அடுத்த பௌர்ணமியில் படம்  ரிலீஸ் ஆக வேண்டும். இதுதான் தேவரின் கணக்கு. யாருக்காகவும் எதற்காகவும் தொழிலில்  சுணக்கம் வருவதை தேவர் ஒருபோதும் அனுமதித்ததில்லை, அது எம்.ஜி.ஆராகவே இருந்தாலு ம்கூட. கோலிவுட்டின் இடிஅமீன் இதுவே அவருக்கு வைக்கப்பட்ட பட்டப்பெயர்.

தேவர் பற்றியும் புத்தகம் பற்றியும் இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் நீ ங்கள் புத்தகத்தை வாசித்து அனுபவிக்கும் சுகத்தை நான் கெடுக்க விரும்பவில்லை.

தேவரது வாழ்க்கையிலேயே ஏகப்பட்ட சுவாரசியங்கள். புத்தகத்தை எழுதியிருக்கும் நண்பர் பா.  தீனதயாளனின் நடை அதை அதிசுவாரசியமாக்கியிருக்கிறது. புத்தகத்தைப் படிக்கும்போது நமக்கு தேவரது வசவுகளையும் பாசத்தையும் அனுபவித்துக் கொண்டே தேவர் பிலிம்ஸில் வேலை பார்க்கும் உணர்வு ஏற்படுகிறது. தேவரது வாழ்க்கையோடு அரைநூற்றாண்டு கால கோடம்பாக்கத்தின் வரலாற்றையும் பின்னிப் பிணைத்துக் கொடுத்திருக்கிறார் தீனத யாளன்.

கிழக்கில் வெளியாகியிருக்கும் சினிமா கலைஞர்கள் குறித்த புத்தகங்களிலேயே மிகச் சிறந்ததாக  நான் குறிப்பிடுவது இந்தப் புத்தகத்தைத்தான்.

புத்தகத்தை வாங்க.

தீனதயாளனின் பிற புத்தகங்கள்.

புத்தகம் குறித்த பாராவின் விமர்சனம்.

தேவர் குறித்த முரளிகண்ணனின் சமீபத்திய பதிவு.