திருப்பூர் தமிழ்ச் சங்கம் – விருதுகள் 2009

திருப்பூர் தமிழ்ச் சங்கம் இலக்கிய விருதுகள் 2009, பரிசளிப்பு விழா, நாளை (29 ஜனவரி, 2011) சனிக்கிழமை, புத்தகக் கண்காட்சி அரங்கத்தில் (டைமண்ட் தியேட்டர் திரையரங்கம் எதிரில், மங்கலம் ரோடு) நடைபெற இருக்கிறது. இன்று இரவு திருப்பூர் கிளம்புகிறேன். நாளை விழாவிலும், திருப்பூர் புத்தகக் கண்காட்சியிலும் இருப்பேன்.

விருது பெற்றவர்கள் பட்டியல்.

நேரடி அனுபவப் புனைவு!

நான் அந்தப் பேருந்தில் ஏறும்போது, அதிலிருந்து இறங்குவதற்கு முன் அப்படியொரு விஷயம் நடக்கும் என்று அறிந்திருக்கவில்லை. (Disclaimer: மேற்படி வரி சத்தியமாக ஆரம்ப பில்ட்-அப் மட்டுமே. தவிர பெரும்பாலானோர் உபயோகிக்கும் க்ளிஷே ஸ்டைலை எனக்கும் உபயோகித்துப் பார்க்க வேண்டும் என்று தோன்றியதால்…) பிராட்வே செல்லும் இலெவன் ஹெச் பேருந்து. அன்று குடியரசுத் தலைவி டெல்லியில் கொடியேற்றியதால் சென்னையில் சாலைகள் காலியாக இருந்தன. கண்ணில்பட்ட தேசியக் கொடிகளெல்லாம் நேராக இருக்கிறதா என்று மனம் அனிச்சையாகச் சோதனை செய்ததை ‘தேச பக்தி’ என்று Tag செய்யலாம்.

விலைவாசி, தமிழினத்தின் தாற்காலிக ஐகான்-ஆகக் கருதப்படும் சீமானின் கோபம் அளவுக்கு உயர்ந்துகொண்டே சென்றாலும், அதன் பிரதிபலிப்பு திநகர், பாண்டிபஜாரில் மட்டும் கிஞ்சித்தும் பிரதிபலிக்காதது சரித்திரப் பிழை. ‘இது ஆலையம்மன் கோயில், இது வானவில்…’ என பேருந்தில் அருகில் அமர்ந்திருந்த மனைவிக்கு, ஒவ்வொரு இடத்தையும்  சொல்லிக்கொண்டே வந்தேன். அவளுக்குப் புரிந்ததா என்று தெரியவில்லை. பன்னிரெண்டாம் வகுப்பு கணிதத்தில் கால்குலஸ் எனக்கு எப்போதுமே புரிந்ததில்லை.

புதிய சட்டப்பேரவை வளாகத்தைக் கடந்தபோது, வருங்காலத்தின் எதிர்காலத்தை நினைத்து மனத்தில் ஏதோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப்பேழை அழுத்தியது. சேப்பாக்கத்தைக் கடந்தபோது, ஐபிஎல்லில் புறக்கணிக்கப்பட்ட என் இனிய கங்குலியின் முகம், எதிரில் தெரிந்த ப்ளக்ஸில் தொல். திருமாவின் முகத்தில் ரீப்ளேஸ் ஆனது.

பாரீஸ். எனது அகம், புறம், அந்தப்புரத்தில்* வரும் சரித்திர கேரக்டரான பாட்டியாலா மகாராஜா பூபிந்தர் சிங், உல்லாசம் தேடி அடிக்கடி செல்லும் நகரம். நான் அங்கே இல்லை, இருப்பது சென்னை பாரீஸில் என்று உணர்ந்தபோது, பான்பராக்கைத் துப்பியபடியே ஒருவர் பல்ஸரில் கடந்துசென்றார். (*இதனை footnote என்று கருதி படித்துக் கொள்ளவும். அகம் புறம் அந்தப்புரம் நடந்து முடிந்த சென்னை புத்தகக் கண்காட்சியில் புத்தக விற்பனை மதிப்பளவில் முதலிடம் பிடித்தது என்பதை ஹரன் பிரசன்னா மூலம் அறிந்துகொண்டேன். இந்தத் தகவல் புனைவா இல்லையா என்பதையும் அவரிடமே கேட்டுக் கொள்ளவும். எனது புதிய புத்தகமான (ஏழாம்) கிளியோபாட்ரா, எண்ணிக்கை அளவில் ஏழாம் இடம் பிடித்தது. ஒருவேளை முதலாம் கிளியோபாட்ரா பற்றி எழுதியிருந்தால்…..  ம்ஹூம், யாருமே வாங்கியிருக்க மாட்டார்கள்.)

பிராட்வே பேருந்து நிலையத்திலிருந்து மணலி செல்ல வேண்டும். திருவொற்றியூருக்குத்தான் பேருந்து இருந்தது. ஏறி அமர்ந்தோம். ராயபுரத்தின் ஊடாக பேருந்து நகர்ந்தது. நான் ராயபுரத்தை முதன் முதலாகப் பார்த்தேன். கண்ணன் வரும் வேளை.. அந்தி மாலை.. என்று பாடியபடியே எங்கிருந்தோ ஓடிவந்த நடிகை பாவனா, என் கண் முன் ஆட ஆரம்பித்தார். ‘தீபாவளி’ முடிந்து, தலைப் பொங்கலும் முடிந்துவிட்டது என்று கடிந்துகொண்ட என் மனைவி, பாவனாவை பஸ்ஸிலிருந்து தள்ளிவிட்டார்.

‘அய்யோ, 2011ன் வருங்கால முதல்வர் இவரதானோ?’ என்று மனம் அநாவசியமாக, அர்த்தமில்லாமல், ஆதாரமில்லாமல் அச்சப்படுமளவுக்கு, ஜி.கே. வாசன்  பல இடங்களில் சிரித்துக் கொண்டிருந்தார். ஒவ்வொரு பட்ஜெட்டிலும் பாக்கு, புகையிலைப் பொருள்களின் விலை ஏற்றப்படுவது நினைவுக்கு வந்தது.

திருவொற்றியூர் பேருந்து நிலையத்தில் இறங்கும்போது, ஜனவரி மாதம்தான் நடக்கிறது என்ற நினைப்புகூட இல்லாமல் சூரியன் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. அங்கிருந்து மணலிக்கு பேருந்து எதுவும் இல்லை. ‘மணலி நியு டவுன் போகணும். வர்றீங்களா?’ என ஷேர் ஆட்டோவையோ,  ஆட்டோவையோ விசாரித்தால், ஏதோ கலைஞரின் இளைஞன் படத்துக்கு வலுக்கட்டாயமாக திமுகவினர் அழைப்பதுபோல அவர்கள் மிரண்டு ஓடினார்கள். என்ன காரணம் என்று எனக்குப் புரியவில்லை. ‘மீஞ்சூரு பஸ் வந்தா ஏறிக்கோங்க’ என்றார் ஒருவர். காத்திருப்பில் கடுப்பு வளர்ந்தது. மச்சான் உடையோன் ஆட்டோவுக்கு அஞ்சான் என்ற பழமொழியை நான் உருவாக்குவதற்காகவே, என் மச்சான் எங்கிருந்தோ ஒரு டாடா மேஜிக் ஆட்டோவை ‘வாடகை’ பேசி அழைத்து வந்தான். சந்தோஷமாக ஏறினோம்.

அடுத்த பத்தாவது நிமிடத்தில் மணலி நோக்கிச் செல்லும் எண்ணூர் துறைமுக நெடுஞ்(?)சாலையில் சிக்கிக் கொண்டோம். உலகம் கண்டெயினர்களால் ஆனது என்று தோற்ற மயக்கம் தெளிவாகத் தோன்றமளவுக்கு எங்கெங்கு காணினும் நீள லாரிகள். திருவொற்றியூர் ஆட்டோக்காரர்கள் அடைந்த பீதிக்கான ரீஸன் இப்போது புரிந்தது. அந்தச் சாலையை கடந்துசெல்ல ஒன்றரை மணி நேரம் பிடித்தது. இது அங்கே தினமும் நடக்கும் பிரச்னை. பல வருடங்களாக அப்பகுதிவாசிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில்தான் அதனை நான்கு வழிச்சாலையாக மாற்றுவதற்கு ஜி.கே. வாசன் அடிக்கல் நாட்டினாராம். அதற்கு இன்னும் எத்தனை வருடம் ஆகுமோ? அதற்குள் மதுரையாருக்கு சதாபிஷேகம் நடந்துவிடும்போல.

ஒருவழியாக மணலி சென்று அங்கே உறவினர் வீட்டில் விருந்து சாப்பிட்டுவிட்டு, மீண்டும் திருவொற்றியூர் திரும்பினோம். மாலை. ஆதிபுரீஸ்வரர் கோயிலுக்குள் நுழைந்தோம். எங்கு திரும்பினாலும் லிங்கம். சந்நிதிக்கு சந்நிதி சிவலிங்கம். பிள்ளையார்கூட தும்பிக்கை வைத்த லிங்கம் போலவே இருந்ததாக ஒரு தோற்ற மயக்கம். சுப்ரமணிய சுவாமி சந்நிதிக்குச் சென்றேன். அவர் அப்போதும் டீ பார்ட்டிக்குச் சென்றிருப்பதாகச் சொன்னார்கள். திரும்பிவிட்டேன்.

கோயில் வெளி பிரகாரத்தில் ஜகஜகவென ஒளிரும் தங்கத் தேரை யாரோ ஸ்பான்சர் செய்து இழுத்துக் கொண்டிருந்தார்கள். தேரில் வடிவுடை அம்மன். மெய்சிலிர்க்க வைக்கும் அழகு. ‘கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள் தலையா கடல் அலையா?
குழந்தைகள் பெரியவர் அனைவரை இழுக்கும் குமரனவன் கலையா?’
என உள்ளுக்குள் டி.எம்.எஸ்., சீர்காழியின் குரல்கள் ஒலித்தன. அந்த இடத்துக்குச் சம்பந்தமில்லாத பாடல் என்பதால் spam செய்துவிட்டேன்.

வெளியே வியாழக்கிழமைகளில் படு பிஸியாக இருக்கும் தட்சிணாமூர்த்திக்கென தனி கோயில் அமைத்திருந்தார்கள். கலைத்துறையினர் இங்கே வந்துவேண்டினால் அமோக வெற்றிகளைப் பெறலாம் என்று யாரோ ஒரு பழங்கால முனிவர், சமீபத்தில் ஃபார்வேர்ட் எஸ்எம்எஸ் அனுப்பியிருந்தாராம். கோயிலினுள் வளர்ந்து வரும் உயரம் குறைந்த இளம் நடிகர் ஒருவரைக் கண்டேன். ஆளுயர ‘வடைமாலை’யுடன் வந்திருந்தார். கோயில் மாறி வந்துவிட்டாரோ என அர்ச்சகர் அவரைக் கலவரத்துடன் நோக்கிக் கொண்டிருந்தார்.

பேருந்து நிறுத்தத்துக்கு வந்தோம். வீடு திரும்ப பேருந்து ஏறினோம். பிராட்வே செல்லும் பேருந்தில் ஏறினோம். ராயபுரம் கடல்பகுதி வழியாக கடந்துவந்த வழியெல்லாம் #tnfisherman ட்வீட்டுகள் மின்னிக் கொண்டிருந்தன. அன்று முழுவதும் ட்விட்டருக்குள் செல்லாத நான், ட்ரெண்டை உணர்ந்தேன். மெரீனாவைக் கடக்கும் வேளையில் ‘பீச்சுக்கு போகலாமா?’ என்று கேட்டார் மனைவி. ‘இலங்கை ஆர்மிக்காரன் சைனா துப்பாக்கியோட கடலோரமா அலையறனாம். கடற்கரையில யாரைப் பார்த்தாலும் சுடுறானாம்’ என்றேன். மன்மோகன் ஜிங் போலவே என் மனைவியும் பதில் பேசவில்லை.

தொண்ணூறு டிகிரி – பகுதி 3

தொண்ணூறு டிகிரி (பகுதி 1)

தொண்ணூறு டிகிரி (பகுதி 2)

அன்று கிறிஸ்துமஸ். அந்தக் குழுவினரது முகத்தில் உற்சாகமே இல்லை. 10570 அடி உயரத்தில் அந்தப் பனிமலையில் சுருண்டு கிடந்தார்கள். பனிக்காற்று முகத்தைக் குத்திக் கிழிக்குமாறு மூர்க்கமுடன் வீசிக் கொண்டிருந்தது. அந்தக் குழுவின் தலைவரான இங்கிலாந்தைச் சேர்ந்த ராபர்ட் பால்கன் ஸ்காட், மெள்ள எழுந்தார். உற்சாகமாக இருக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு. அப்போதுதான் குழுவினரை வழிநடத்த முடியும். வாழ்நாள் லட்சியமான ‘தொண்ணூறு டிகிரி’யில் கால் பதிக்க முடியும்.

இங்கிலாந்தின் ராபர்ட் பால்கன் ஸ்காட்டுக்கும், நார்வேயைச் சேர்ந்த ரோல்ட் அமுண்ட்செனுக்கும் அண்டார்டிகாவில் பயணம் செய்து, உலகின் தென் துருவமான தொண்ணூறு டிகிரியில் முதன்முதலில் காலடியைப் பதித்துவிட வேண்டும் என்பதுதான் வாழ்வின் லட்சியம், ஆசை, குறிக்கோள் எல்லாமே.

அமுண்ட்சென், ஸ்காட்

கி.பி. 1911ல் ஸ்காட், தனது குழுவினருடன் அண்டார்டிகாவில் தென் துருவத்தை நோக்கிய பயணத்தை ஆரம்பித்திருந்தார். அதே சமயத்தில் ரோல்ட் அமுண்ட்செனும் தன் குழுவினருடன் அண்டார்டிகாவின் இன்னொரு முனையிலிருந்து தென் துருவத்தை நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தார். அடுத்த ஒரு வார காலத்தில் ஸ்காட் குழுவினர் தினமும் சுமார் பதினைந்து மைல்கள் வரை பயணம் செய்தனர். அந்தப் பனிப்பிரதேசத்தில் அவ்வளவு தூரம் பயணம் செய்வதே பெரும் சாதனைதான்.

ஜனவரி 3, 1912. கைவசமிருந்த உணவுப் பொருள்கள் பெருமளவு கரைந்து போயிருந்தது. தென் துருவத்தைத் தொட்டுவிட்டு, மீண்டும் திரும்பிவர வேண்டும். கைவசமிருக்கும் உணவு இத்தனைபேருக்கு நிச்சயம் போதுமானதாக இருக்காது. என்ன செய்யலாம் என்று வெகு தீவிரமாக யோசித்த ஸ்காட், தன் குழுவில் இருந்து மூன்று பேரைக் கழட்டிவிட முடிவு செய்தார். ‘டெடி இவான்ஸ், க்ரீன், லாஷ்லி – என்னை மன்னித்துவிடுங்கள். நீங்கள் மூவரும் திரும்பிச் சென்றுவிடுங்கள்.

ஸ்காட்டும் மேலும் நான்கு பேரும் (ஓட்ஸ், வில்சன், டாஃப் இவான்ஸ், பௌவர்ஸ்) தென் துருவத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தார்கள். ஜனவரி 9, ஊளையிட்டுக் கொண்டே வீசிய பனிப்புயல் ஸ்காட் குழுவினரை கூடாரத்துக்குள்ளேயே முடக்கி விட்டது. ஜனவரி 10, அவர்கள் பயணத்தைத் தொடர்ந்தார்கள். இன்னும் சில மைல்கள்தான். சில  நாள்கள் பயணம்தான். தென் துருவம் கிட்டி விடும். கனவுகள் கண் முன் விரிய ஒரு வாரத்துக்கான உணவுப் பொருள்களை சேமித்து வைக்கும்படியான கூடாரம் ஒன்றை அந்த இடத்தில் அமைத்தனர். சுமக்க வேண்டாம். திரும்பி அதேபாதையில் வரும்போது உபயோகப்படுமல்லவா.

அடுத்தடுத்த நாள்களில் பத்து மைல்கள் கடப்பதென்பதே பெரும்பாடாகிப் போனது. இன்னும் நான்கு நாள்கள் இதேபோல் கடும் முயற்சி செய்தால் வெற்றி பெறலாம் என்ற நிலை. ஜனவரி 13ல் ஸ்காட் குழுவினர் 89டிகிரி தென் அட்ச ரேகைப் பகுதியைக் கடந்தனர். அடுத்த நாள் அவர்கள் தங்களது இறுதி சேமிப்புக் கூடாரத்தை அமைத்தனர். அதில் நான்கு நாள்களுக்கான உணவுப் பொருள்கள் வைக்கப்பட்டன. அன்று இரவு ஸ்காட், ‘இப்போதே என் லட்சியத்தை அடைந்துவிட வேண்டும்’ என எழுதினார். அவர் தன் டைரியில் எழுதிய சந்தோஷமான இறுதிவரி அதுதான்.

ஜனவரி 16, வழக்கத்தைவிட அதிக தூரம் பயணம் செய்ய முடிந்தது. நாளை கண்டிப்பாக தென் துருவத்தை தொட்டு விடலாம் என ஒவ்வொருவரின் மனதிலும் உற்சாகம் பீறிட்டது.

தொண்ணூறு டிகிரி

ஜனவரி 17, தங்கள் கனவு நிறைவேறப் போகிறதென்ற சந்தோஷத்தில் பயணத்தைத் தொடங்கினர். மதிய நேரம். பௌவர்ஸின் முகம் சுருங்கியது. காரணம், அந்தப் பகுதியில் ஏற்கெனவே பனிச்சறுக்கு வாகனமான ஸ்லெட்ஜ் கடந்து போன தடங்கள், நாய்களின் பாதச் சுவடுகள் தென்பட்டன. தூரத்தில் ஏதோ அடையாளக் கல் வைத்திருப்பது போல் தெரிந்தது. அவ்வளவுதான்.

ஒவ்வொருவரின் மனத்திலும் வெடிப்பதற்குக் காத்திருந்த உற்சாகம் அப்படியே அமுங்கிப் போனது. பதைபதைப்புடன் தங்களின் லட்சியமான தொண்ணூறு டிகிரியை நோக்கி தள்ளாடித் தள்ளாடிச் சென்றார்கள்.

தூரத்தில் ஒரு கொடி காற்றில் படபடத்துக் கொண்டிருந்தது. அது நார்வேயினுடையது.

***

மேலே நாம் பார்த்தது சென்ற நூற்றாண்டில் நிகழ்த்தப்பட்ட தென் துருவ சாகசப் பயணத்தின் ஒரு சிறு பகுதி. இதுவரை உலகில் மேற்கொள்ளப்பட்ட அதிமோசமான, மிக பயங்கரமான பயணம் இதுவே. தென் துருவத்தை அடைய ஸ்காட்டாலும் அமுண்ட்செனாலும் மேற்கொள்ளப்பட்ட அந்தப் பயணங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளும் எவருக்கும் உடல் நடுங்கி, உயிர் உறைவது உறுதி. உலகில் மக்களின் மனத்தை அதிகமாகப் பாதித்த பயணமும் அதுவே. இந்த ஆண்டு (2010- 2011) அந்த பயணங்களுக்கான நூற்றாண்டு விழா நடந்து கொண்டிருக்கிறது. ஸ்காட், அமுண்ட்சென் அமைத்துக் கொடுத்த பாதையால், அண்டார்டிகாவில் தற்போது பல்வேறு நாடுகளும் தங்களது ஆராய்ச்சி மையங்களை அமைத்துள்ளன. இந்தியாவும் மைத்ரி என்ற ஆராய்ச்சி மையத்தை அமைத்து சுமார் இருபது ஆண்டுகளாக அங்கே தீவிரமாக இயங்கிக் கொண்டு வருகிறது.

இதோ இந்த நாள்களில் உலகின் தென் துருவத்தில் பல்வேறு நாட்டு ஆய்வாளர்களும் சென்று ஸ்காட்டுக்கும் அமுண்ட்செனுக்கும் மரியாதை செய்து வருகிறார்கள். எனது அண்டார்டிகா புத்தகத்தைக்கூட நான் ஸ்காட், அமுண்ட்சென் மற்றும் தென் துருவத்தைக் கடக்க முயற்சி செய்த இன்னொரு பயணியான ஷாகெல்டன் ஆகிய மூன்று பனிப்போராளிகளுக்குத்தான் சமர்ப்பணம் செய்திருக்கிறேன்.

நடந்துமுடிந்த புத்தகக் கண்காட்சியில் அண்டார்டிகா புத்தகம் விற்பனையில் இல்லை. புத்தகத்தை விரும்புபவர்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம்.

என்னை என்ஆர்ஐ ஆக்கிய துக்ளக்!

லொள்ளு விருதுகள் 2010 – பதிவுக்கு ஏகோபித்த ஆதரவளித்த எல்லோருக்கும் நன்றி. மிகச் சிறந்த தொகுப்பு. அச்சு இதழில் முக்கியப் பக்கத்தில் இடம் பெற வேண்டியது – என்று நண்பர் பரிசல்காரன் சொல்லியிருந்தார். யாராவது எடுத்து உபயோகிப்பார்கள் என்றும் நினைத்திருந்தேன். (வாட்டர்மார்க் பயன்படுத்தவில்லை.) இந்த முறை உபயோகித்திருப்பது துக்ளக் (19.01.2011 இதழ்).

இண்டர்நெட் செய்திகள் என்று தலைப்பிட்டு ஏழு படங்களை உபயோகித்திருக்கிறார்கள். (தகவல் அளித்த நண்பர் சதிஷுக்கும், உண்மைத் தமிழனுக்கும் நன்றி). இந்தப் பக்கத்தைத் தொகுத்துள்ள எஸ்.ஜே. இதயா, அதற்குக் கொடுத்துள்ள விளக்கம்தான் செம காமெடியாக இருக்கிறது.

இந்த விருதுகள் தற்போது மெயில் வழியே பல குரூப்களில் ஃபார்வேர்ட் ஆகிக் கொண்டே இருக்கிறது. அதன்படி இதயாவுக்கும் கிடைத்திருக்கலாம் என்று நம்புவோமாக! 😉

துக்ளக், என்னை என்ஆர்ஐ ஆக்கிய காரணத்தினால் இந்த வருடமாவது நான் பாஸ்போர்ட் எடுக்க முயற்சி செய்கிறேன்.

முகலாயர்கள் – திருப்பூர் தமிழ்ச் சங்கம் விருது

2009 டிசம்பரில் கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட எனது முகலாயர்கள் புத்தகத்துக்கு திருப்பூர் தமிழ்ச் சங்கம் ‘இலக்கிய விருது 2009’ கிடைத்திருக்கிறது என்பதை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

2009 திருப்பூர் தமிழ்ச் சங்க விருது பெற்றுள்ள இன்னொரு புத்தகம், இலந்தை சு. ராமசாமி எழுதியுள்ள மகாகவி பாரதி. அவருடைய எடிசனும் ஹென்றி ஃபோர்டும் என் மனத்துக்குப் பிடித்த புத்தகங்கள். வாழ்த்துகள் இலந்தை சார்.

தமிழக அரசு விருதுகள் பெற்றுள்ள காப்பிரைட் நூல் ஆசிரியர் சொக்கலிங்கத்துக்கும், சந்திராயன் புத்தக ஆசிரியர் சரவண கார்த்திகேயனுக்கும் வாழ்த்துக்கள். என்.ஹெச்.எம் ரைட்டர் + கணியன் பூங்குன்றனார் விருது புகழ் நண்பர் நாகராஜுக்கு சிறப்பு வாழ்த்துகள்.