ரோல்ஸ்-ராய்ஸ் நினைவுகள்!

ரோல்ஸ் ராய்ஸ். பெயரை உச்சரிக்கும்போதே புருவம் உயர வைக்கும் ராயல் வாகனம். கௌரவத்தின் அடையாளம். அழகும் கம்பீரமும் சரிவிகிதத்தில் கலந்த கட்டமைப்பு. வேகத்திலும் சளைக்காதது. RR என்று சுருக்கமாவும் கீழே Rolls Royce என்று முழுமையாகவும் பொறிக்கப்பட்ட முத்திரை. முகப்பில் வெள்ளியால் செய்யப்பட்ட சிறகு விரித்துப் பறக்கும் தேவதை. பளபளா உடல்.

இப்படிப்பட்ட ரோல்ஸ்-ராய்ஸ்களை வைத்துக் கொண்டு நம் இந்திய மகாராஜாக்கள் செய்த அழிச்சாட்டியங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.

Pearl of India என்று பெயரிடப்பட்ட ஒரு ரோல்ஸ்-ராய்ஸை குவாலியர் மகாராஜா இரண்டாம் மாதவ்ராவ் சிந்தியா வாங்கினார். அதுவே முதல் போணி. பெருமை பொங்க அதனைத் தன் சமஸ்தானமெங்கும் ஓட்டி பவுசு காட்டினார். பிற சமஸ்தான மகாராஜாக்களுக்கும் இந்தச் செய்தி பரவியது.

அது என்ன கார், எங்கு கிடைக்கும், விலை எவ்வளவு இருக்கும் என்று விசாரிக்க ஆரம்பித்தார்கள். ‘அதென்ன அவரால மட்டும்தான் வாங்க முடியுமா என்ன? நாங்களும் வாங்குவோம்ல!’ என்று தேடித் தேடி ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வாங்க ஆரம்பித்தனர். ஒரு கட்டத்தில் சமஸ்தானத்தின் மகாராஜாவாகப்பட்டவர் ரோல்ஸ் ராய்ஸ் கார் வைத்திருந்தால்தான் கௌரவம் என்ற நிலை உருவானது. மகாராஜாக்களைத் தவிர, பணக்காரர்களும் அந்தக் கார்களை வாங்க ஆரம்பித்தனர்.

அதனால் மகாராஜாக்களைத் தவிரவும் ரோல்ஸ் ராய்ஸ் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை பெருகியது. என்ன செய்யலாம் என்று யோசித்த மகாராஜாக்கள், ஒன்றுக்கு மேற்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கார்களை, தங்கள் விருப்பப்படி வடிவமைக்கச் சொல்லி ஆர்டர்கள் கொடுக்க ஆரம்பித்தார்கள்.

விருப்படியென்றால்? பொதுவாக ரோல்ஸ் ராய்ஸ் கார்களின் அலுமினியத்தால் செய்யப்பட்டன. அலுமினியமா சேச்சே, எனக்கு வெள்ளியால் செஞ்ச கார் வேணும். அந்த மகாராஜா வெள்ளிக் கார் வைச்சிருக்கானா, அப்படின்னா எனக்கு தங்க முலாம் பூசிய கார் வேணும். இப்படி டிசைன் டிசைனாக யோசித்து படு ஆடம்பரமாக, டாம்பீகமாக, தங்கள் விருப்பப்படி, வசதிப்படி ரோல்ஸ் ராய்ஸ் கார்களை இறக்குமதி செய்து, ஃபிலிம் காட்டினார்கள்.

ஒருமுறை லண்டனிலிருந்த ரோல்ஸ் ராய்ஸ் இந்தியப் பிரிவு அலுவலகத்துக்கு ஒரு பார்சல் வந்தது. அதைப் பிரித்துப் பார்த்த ஊழியருக்குக் கொஞ்சம் அதிர்ச்சி. காரணம் அதில் ஒரு செருப்பு இருந்தது. பிங்க் நிற வலதுகால் செருப்பு. கூடவே ஒரு கடிதமும்.

‘இந்த செருப்பின் நிறத்தில் எனக்கு ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கார் உடனே தேவை. என் மகாராணிக்கு பரிசளிக்க விரும்புகிறேன். எப்போது கிடைக்கும்?’

அனுப்பியிருந்தவர் ஜாம்நகர் சமஸ்தானத்தின் மகாராஜா.

அல்வார் மகாராஜா ஜெய்சிங், ஒருமுறை லண்டன் சென்றிருந்தபோது அங்கிருந்த ரோல்ஸ் ராய்ஸ் ஷோரூமுக்குச் சென்றார். புதிதாக கார் வாங்குவதுதான் அவரது எண்ணம். ஆனால் அங்கிருந்த விற்பனைப் பிரதிநிதி அவரைச் சரியாகக் கவனிக்கவில்லை. ‘இந்த ஆளெல்லாம் எங்க கார் வாங்கப் போறான்’ என்ற எண்ணம். ஜெய்சிங்கின் கேள்விகளுக்கு அலட்சியமாகப் பதில் சொன்னான்.

ஜெய்சிங் கடும்கோபக்காரர். விற்பனைப் பிரதிநிதி கூனிக் குறுகி மரியாதை கொடுக்கும்படியாக அந்த இடத்திலேயே ஏழு ரோல்ஸ் ராய்ஸ் கார்களுக்கு ஆர்டர் கொடுத்தார். அவரது சமஸ்தானத்துக்கு ஏழு கார்களும் அனுப்பப்பட்டன. அவற்றை உபயோகப்படுத்த ஜெய்சிங்கின் ஈகோ ஒப்புக்கொள்ளவில்லை. விலை உயர்ந்த அந்த ஏழு ரோல்ஸ் ராய்ஸ் கார்களையும் சமஸ்தானத்தில் குப்பை அள்ளும் வண்டிகளாக உபயோகிக்கச் சொல்லி கட்டளையிட்டார். அவை குப்பை அள்ளின.

நந்தகான் சமஸ்தான மகாராஜா சர்வேஸ்வர தாஸ் புலி வேட்டைப் பிரியர். அவரது ரோல்ஸ் ராய்ஸ் காரில் அடர்ந்த காட்டுக்குள் பதுங்கியிருக்கும் புலிகளைத் தேடுவதற்கேற்ற சிறப்பு விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன. காரின் வெளியே அம்மாவின் காருக்கு வெளியே அமைச்சர்கள் தொற்றிக் கொண்டு போவார்களே, அதுபோல பாதுகாவலர்கள் தொற்றிக் கொண்டு செல்வதற்கென வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

பாட்டியாலா மகாராஜா பூபிந்தர் சிங்கின் ரோல்ஸ் ராய்ஸ் கார்கள், அதி ஆடம்பரமானவை. தங்கம், வெள்ளியால் இழைத்து இழைத்து உருவாக்கப்பட்டவை. ஒவ்வொரு காருக்குமென்றே தனித்தனியாக ஏராளமான நகைகள் இருந்தன. அந்தக் கார்களை சர்வீஸுக்கு விடும்போது, அதைச் சுற்றி ஆயுதம் ஏந்திய காவலர்கள் பாதுகாப்புக்கு நின்று கொண்டிருப்பார்கள்.

பவல்பூர் சமஸ்தான மகாராஜாவுக்கோ ஒரு விநோதப் பழக்கம் இருந்தது. அவர் ரோல்ஸ் ராய்ஸில் சாலைகளில் பவனி வருவதற்கு முன்பாக ஒருவர் இன்னொரு வாகனத்தில் ‘மகாராஜா வருகிறார்’ என்று அறிவித்துக் கொண்டே செல்வார். மறுகணமே சாலையிலிருக்கும் மக்களெல்லாம் முதுகைக் காட்டியபடி திரும்பிவிடுவார்கள். மகாராஜா பவுசாகக் கடந்து சென்றபின் தங்கள் வேலைகளைத் தொடருவார்கள். கண்பட்டு விடக்கூடாது என்பதால் இந்த ஏற்பாடு.

சைக்கிளின் கேரியரில் பிராய்லர் கோழிகளைத் தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டுச் செல்வார்களே, அதேபோல தன் ரோல்ஸ் ராய்ஸ் காரில் கோழி, ஆடு, மான்களையெல்லாம் இறைச்சிக்காகக் கொண்டு செல்லும் பழக்கம் பம்பாயைச் சேர்ந்த அப்துல் அலி என்ற பெரும் பணக்காரருக்கு இருந்தது.

மைசூர் மகாராஜா வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ்களின் எண்ணிக்கை முப்பத்தைந்து. பாட்டியாலா மகாராஜாவிடமிருந்த கார்களின் எண்ணிக்கை முப்பத்தெட்டு. முதலிடம்? ஹைதராபாத் நிஜாம் ஒஸ்மான் அலிகானுக்கு. அவரிடமிருந்த ரோல்ஸ் ராய்ஸ் கார்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட ஐம்பது.

ஹைதராபாத்துக்குள் முதன் முதலில் ரோல்ஸ் ராய்ஸ் வாசம் வீசியது 1912ல். ஒஸ்மானின் தந்தை, நிஜாம் மெஹ்பூப் அலிகான் 1911ல் ஒரு காரை ஆர்டர் செய்தார். மெஹ்பூபின் விருப்பப்படி கார் பயணத்துக்குத் தயாராகி வந்தது. ஆனால் அதற்குள் அவரது வாழ்க்கைப் பயணம் முடிந்திருந்தது. அந்த மஞ்சள் நிற ரோல்ஸ் ராய்ஸ், மகன் ஒஸ்மானிடம் வந்து சேர்ந்தது.

கௌரவமாக அதனை வைத்துக் கொண்டார் ஒஸ்மான். எந்தவிதக் கஷ்டமும் அதற்குக் கொடுக்கவில்லை. அது பாட்டுக்கு அரண்மனை கார் ஷெட்டில் சிலை போல நின்றது. எடுத்து ஓட்டினால் டயர் தேய்ந்து விடுமே. 1947ல் அந்த மஞ்சள் நிற ரோல்ஸ் ராய்ஸ் காரின் ஸ்பீடோமீட்டர் காட்டிய மைல்கள் எவ்வளவு தெரியுமா?

வெறும் 347.

ஒரு எலக்கியவாதியின் எடக்குமடக்கு அனுபவங்கள்!

(இந்தக் கட்டுரை எதற்காக, யாருக்காக எழுதப்பட்டிருக்கிறது, எதற்கு இப்படி ஒரு தலைப்பு என்றெல்லாம் ஆழ்ந்து யோசிக்க வேண்டாம். யோசித்துத்தான் தீருவீர்கள் என்றால் பின் உங்கள் இஷ்டம்.)

அமானுஷ்ய ஜெயசாமி – தமிழ் எழுத்துலகின் உள்ளீடற்ற படைப்பாளி. இலக்கியத்தின் இருப்பை ஆதாரமாக்கும் வெப்பக் கவிஞர். படைப்புகளின் நகர்வில் ஊர்ந்து செல்லும் தாக மேகம். பின் நவீனத்துவத்தின் நவீன பின்னல். ‘ஓலைத்தகடு’ சிற்றிதழின் பேராசிரியர். யார் அவர் என்று எந்திரத்தின் எஞ்சிய சப்தத்தின் மீட்சியாகக் குரலெழுப்பாதீர். அது நான்தான்.

நான் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. பெயர் என்பதுகூட அடையாளங்களைத் தொலைத்த சில எழுத்துக்களின் முகம் தொலைத்த கூட்டணி. தன்னை அறிவித்துக் கொள்ள வெறி கொண்டு அலையும் அகங்காரம் பிடித்தவர்களின் பிடிவாதமே முற்றிய நிலையில் நெறிகட்டி அறிவிக்கப்படுகிறது பெயரென! இப்போது சொல்லுங்கள் மனிதனுக்கு பெயர் தேவையா?!

அப்போது பெயரை எங்கே உபயோகிக்க வேண்டும் என்று கிணற்று நீரின் வறட்சிக் குமிழாகக் கேட்கறீர்களா? உயிரற்ற கேள்வி. விஸ்தாரமான பாறைகளின் இடுக்கில் விதைகளை காகங்கள் ஒளித்து வைத்தாலும், தன்னை வெளிப்படுத்திக் கொள்ள தலை நீட்டும் தாவர சரீரம். இதயத்தின் நிழல் எங்கே விழும்? பிம்பங்களைச் சார்ந்திருத்தலின் வெளிநிலைக்கும் அவதானிப்புகள் வெட்டப்படும் பூரித்த நிலைக்கும் இடைப்பட்ட ஒரு அந்தர நிலையில் ‘பெயர்’ என்பது கட்டாயமாக்கப்படுகிறது.

சிலர் என்னிடம் கேட்பார்கள். இலக்கிய உலகில் என் பங்கு என்ன என்று.

கண்ணிவெடிகள் நிறைந்த நிலப்பரப்பில் நான் என் கால்களைத் தேடி நடந்து கொண்டிருக்கிறேன். இரகசியமாக ஊர்ந்து செல்லும் ஓநாய்கள் வாழும் காட்டில், என் ஒற்றைப் பேனா தீராத அபத்த நிலைகளின் ஊடாக குருதி தெளித்து இந்தப் பிரபஞ்சத்தைப் புனிதமாக்கிக் கொண்டுள்ளது. என் எழுத்துக்களின் கற்பிதங்களால் தமிழ் இலக்கியம் வாழ்விக்கப்பட்டு கொண்டிருக்கிறது.

ஆனால் மனநிலை பிழன்ற சிலர், என் படைப்புகளை ‘கழிவுகளின் இழிநிலை’ என்று சொத்தைப் பல் கண்ட சொப்பனம் போல் விமர்சிப்பார்கள். அவர்களுக்கு என் விஸ்தாரமான நுனி பதில் இதுதான்.

என்னை விமர்சிப்பவனின் குரல், முகமற்ற ஒரு டிராகுலாவின் குரலற்ற குரல். பிணவறையின் உள் ஒளிந்து கொண்டு தனக்குத் தானே ஒப்பாரி வைக்கும் நிழலற்ற காட்டேரியின் கதறல் அது. என் ஆழ்ந்த புனைவுகளின் சூடு தாங்காமல் மரங்களற்ற காட்டினில் போய் தன்னைத் தானே புதைத்துக் கொண்ட ரத்த அணுக்கள் இல்லாதவனின் பிதற்றல். சடலங்களைப் பற்றி இனி நான் பேசப் போவது இல்லை.

‘பின் நவீனத்துவ’த்தால் வெகுஜன மக்களுக்கு என்ன வாழ்வியல் பயன் என்று நீங்கள் சொல்லின் துணையோடு தூர்வாரிக் கேட்கலாம்.

இதற்கு எனது இந்த கவிதை பொத்தாம் பொதுவாக பதிலளிக்கும்.

குப்பை லாரிகளின்
சப்தமற்ற நகர்விலும்
நாசிகளுக்கு அறிவிக்கப்படும்
பால்வெளி வாசனைகள்…

நெருஞ்சி முள்ளின்
தொப்புள் கொடியில்
உபரியாய் முளைத்த
நீள் எலும்புகள்…

குருதிக்கோட்டின்
முள்ளங்கித் தீட்டில்
குதறிக் கொண்ட
ஒற்றை மயிறு…

அண்மைக்கு அப்பால்
ஈயின் நிழலில் ஓய்வுறும்போது
எதிர்கொள்கிறது
சிகரெட்டின் தித்திப்பு!

புரியவில்லையா? வாழ்வின் இருள்வெளிகள் புரிவதில்லை.

சென்றமாதம்தான் பிரபலம் என்று தன்னைக் கூறிக் கொள்ளும் அந்த எழுத்தாளருக்கு ‘சாதித்த அக்காடம்மி’ விருது கொடுத்தது பற்றி என்னிடம் ஒரு நிருபன் நேரே வந்து கருத்து கேட்டான்.

அறிவிலிகள். விருதுகள் வாங்குவதென்பது, மனித வெடிகுண்டை கட்டிப்பிடித்துக் கொண்டு தூங்குவதற்குச் சமம். பொதுவாக நான் விருதுகளை வடுக்களின் மேல் வடியும் புரை என நினைக்கிறேன் என்றேன்.

‘கோண பீட’ விருதுக்கு உங்கள் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் கிளம்பியிருக்கின்றனவே என்றான் எச்சிலின் எச்சக் குரலோடு.

நான் தீர்க்கத்தின் தீர்ப்பாகவே பதிலளித்தேன். எனக்கு விருது வழங்கும் தகுதி இங்கே எவனுக்கும் இல்லை. எனக்கு விருது வழங்க நினைப்பவன் தன்னைத்தானே ஒருமுறை நெருப்பால் எரித்து தன் கற்பின் ஸ்திரத்தை நிரூபிக்கக் கூடியவனாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட சமூக ஜீவி நான் மட்டுமே!

உங்களோட ‘ஓலைத்தகடு’ சிற்றிதழ் மொத்தம் எத்தனை பிரதிகளை எட்டியுள்ளது என்றான் அந்த நிருபன் கணக்குப்பிள்ளையின் கடைசிக் கேள்விபோல்.

என் எழுத்துக்களின் வாசிப்பாளர்கள் என் அக்குளில் இருந்து கிளம்பியவர்கள். நான், என் நிழல், என் நிழலின் பிம்பங்கள், அந்த பிம்பங்களின் பிரதி பிம்பங்கள் என சந்தாதாரர்களின் எண்ணிக்கை நூற்றுக்கணக்காக தாண்டவமாடுகிறது என்றேன் பெருமையின் பித்தமேறி.

என்னைப் புகைப்படம் எடுத்துக்கொள்ளலாமா என்றான் அவன் புதைகுழியின் பூரிப்பில் நின்றுகொண்டு.

நான் பொதுவாக உதட்டுச் சாயம் பூச மாட்டேன். என் உதடுகளுக்கு கிளுகிளுப்பாக புன்னகைக்கத் தெரியாது. எனக்கு அகண்ட கவர்ச்சியான உடலமைப்பு கிடையாது. இவற்கெல்லாம் ஒத்துழைக்கும் என் வீட்டு நாய்களை வேண்டுமென்றால் எடுத்துக் கொள்ளுங்கள் என்று கட்டி வைக்கப்பட்டிருந்த என் வீட்டு நான்கு கால் மனிதர்களை அவிழ்த்து விட்டேன்.

அவ்வளவுதான். வந்தேறிகளின் வியர்வை பொழியும் அத்துவானக்காட்டில், வயிறூதிக்கிடக்கும் குள்ளநரியைக் குறிபார்த்து இறகுதிர்க்கும் ஒவ்வாமைக் குருவிகளின் கூட்டை நோக்கி ஓடி விட்டான் அந்த நிருபன்.

எதற்கு இப்படி புழக்கத்தில் இல்லாத புரையேறிய வார்த்தைகளை மட்டுமே பேசியும் எழுதியும் கொண்டிருக்கிறேன் என்று கேட்கிறீர்களா?

ஒரு எலக்கியவாதின்னா இப்படித்தான் இருக்கணும்னு ஆகிப்போச்சு. அதான் இந்த மண்டைக் கர்வத்தோட, வார்த்தைக்கு வார்த்தை வன்முறை கலந்தே பேசிக்கிட்டிருக்கேன். சாயங்காலம் ‘பப்’புக்குப் போகணும். ஐசிஐசிஐ அக்கவுண்ட் நம்பர் தர்றேன். ஒரு டென் தௌஸண்ட் போட்டு விடுறீங்களா?

சினிமாவின் எதிர்காலம் – நம் கையில்!

இன்று பாடல் பதிவுடன் இனிதே ஆரம்பிக்கிறோம் – அடிக்கடி புதிய சுவரொட்டிகள்  கண்களில் தென்படும். வெகு சில போஸ்டர்களைப் பார்க்கும்போது மட்டும் ‘இந்தப் படம் வர்றப்போ கண்டிப்பா தியேட்டர்ல போய்ப் பார்க்கணும்’ என்று மனத்துக்குள் பச்சை விளக்கு எரியும். வெண்ணிலா கபடி குழுவின் படபூஜை போஸ்டரும் எனக்குள்  பச்சை ஒளி பரப்பியது. சென்ற வாரம் ஏவிஎம் ராஜேஸ்வரியில் குடும்பத்துடன் சென்று  பார்த்தேன்.

வெள்ளந்தி மனிதர்களின் வெகு இயல்பான வாழ்க்கை. ஆரம்ப காட்சிகளிலிருந்தே சின்னச் சின்னதாக நிசர்சனக் கவிதைகள். பார்த்துப் பழகிய பக்கத்து கிராம மனிதர்களின் மண்வாசனைப் பேச்சு.

பஸ் ஓட்டும் டிரைவர் அண்ணாச்சி. பஸ்ஸின் வேகத்துக்கு இணையாக ஒற்றையடிப் பாதையில் சைக்கிள் மிதிக்கும் கதாநாயகன். ஹார்ன், சைக்கிள் பெல்லால் சத்தம் எழுப்பி அவர்கள் பேசிக்கொள்ளும் அழகு. திருவிழாவுக்கு வரும் மதுரைப் பெண்ணின் வெட்கம். காதலுக்குரிய முதல் சலனத்தை உண்டாக்கும் தெருநாய். கதாநாயகன்  எதிரே வந்து சடாரென முகத்தில் மஞ்சளைப் பூசிவிட்டு ஓட, அதிர்ந்து, அடுத்தநொடி  வெட்கப்படும் கதாநாயகியின் நளினம். கதாநாயகியின் கொலுசின் ஓசையைக் காதில்  வாங்கியபடியே சரியாக நகர்ந்து வந்து உரியடிக்கும் கண்கள் கட்டப்பட்ட கதாநாயகன். இப்படி படம் நெடுகிலும் குட்டிக் குட்டியாக ரசிக்க நிறைய விஷயங்கள்.

படத்தில் கிட்டத்தட்ட எல்லாக் கதாபாத்திரங்களும் வந்து அவர்களது இயல்புக்கேற்ப  இருந்துவிட்டுப் போயிருக்கிறார்கள். யாருமே கேமராவை நேரடியாகப் பார்த்து சொடுக்குப் போட்டு தொண்டை கிழியக் கத்தவில்லை.

காட்சிகளோடு காட்சிகளாக நகைச்சுவையும் சென்டிமெண்டும் இரண்டறக் கலந்தி ருக்கின்றன. கிராமத்தில் மக்கள் சூழ்ந்துநிற்க கபடி விளையாடியே பழகியவர்கள், கேலரியில் ஆயிரக்கணக்கானோர் சூழ்ந்து இருக்கும் கபடி மைதானத்துக்குள் நுழையும்போது அவர்களது கண்களில் இருக்கும் மிரட்சி. ‘நம்மளையெல்லாம் இதுக்குள்ள விளையாட விடுவாய்ங்களா..’ என்று கேட்கும் யதார்த்தம். ஒரு போட்டியில் வெற்றி  பெற்றதும், மக்கள் எழுந்து நின்று ஆரவாரம் எழுப்ப, ‘இதெல்லாம் நமக்குதானாடா?’  என்று சந்தேகம் வழிய அழுதபடியே கேட்கும் அப்பாவித்தனம். இன்னும் நிறைய சொல்லலாம்.

இந்தப் படத்திலும் சில சினிமாத்தனங்கள் இருக்கவே செய்கின்றன. ஆனால் என்னைப்  பொருத்தவரையில் எல்லாமே ஜீரணிக்கக்கூடியவை. முதல்பாதி சற்றே நீளம்தான். இரண்டாவது பாதியில் கேலரியில் உட்கார்ந்து விளையாட்டைப் பார்க்கும் உணர்வைக் கொண்டுவந்துவிடுகிறார்கள். சற்றே நாடகத்தனம் பூசப்பட்ட க்ளைமேக்ஸ் என்றாலும் ஒரு சோகக்கவிதை படித்துமுடித்துவிட்டு, சற்றுநேரம் அமைதியாக இருப்போமே – அந்த மனநிலை வாய்க்கிறது.

உலகின் ஒட்டுமொத்த அபத்தங்களையெல்லாம் அள்ளிச் செதுக்கிய காட்சிகளால் மட்டுமே ஆன சினிமாக்கள்தானே  அதிகம் வருகின்றன. அவற்றோடு ஒப்பிடும்போது.. சேச்சே, தப்பு தப்பு. அந்த அபத்தங்களை இந்தக் குழுவோடு ஒப்பிடவே கூடாது.

இந்த மாதிரியான அழகான, எளிமையான, யதார்த்தமான படங்களை, தியேட்டருக்குச் சென்று, மனமார ரசிப்பது ஆதரிப்பதே, வருங்காலத்தில் நல்ல தமிழ் சினிமாக்களும் முளைப்பதற்கு நாம் விதைக்கும் விதை. இல்லையென்றால் வில்லு, சிலம்பாட்டம், பெருமாள், திருவண்ணாமலை ரக விஷச் செடிகள் மட்டுமே நமக்குக் கிடைக்கும் அபாயம் நிச்சயம்.

எம்.ஆர். ராதா கொடுத்த விருது

நான் வாங்கப்போகும் முதல் விருது இது. எம்.ஆர். ராதாயணம் புத்தகத்துக்காக. சென்ற வாரம் தகவல் வந்தது. விருதை வழங்குபவர்கள் – திருப்பூர் கலை இலக்கியப் பேரவை. புத்தகத்துக்கு ‘சிறப்பு விருது’ என்று அறிவித்துள்ளார்கள். மார்ச் இறுதியில் விழா இருக்கலாம்.

பரிசுக்குத் தேர்வாகியுள்ள கிழக்கு பதிப்பகத்தின் பிற நூல்களின் பட்டியல் : http://thoughtsintamil.blogspot.com/2009/02/blog-post_17.html

என்னோடு சேர்ந்து தங்களது நூல்களுக்காக விருது பெறவுள்ள ஆர். முத்துக்குமார், என். சொக்கன், ஜெ. ராம்கி, லிவிங் ஸ்மைல் வித்யா, குணசேகரன், ஜோதி நரசிம்மன் ஆகியோருக்கு என் வாழ்த்துகள்.

கோழிகளின் கவனத்துக்கு!

நாமக்கல், பிப். 17 – தன் மேல் நடத்தப்பட்ட முட்டைவீச்சுக்குக் காரணம் ஐஎஸ்ஐதான் என்று சு.சுவாமி தலைமறைவு அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் தன் அறிக்கையில் கூறியுள்ளதாவது –

‘சித்தம்பரம் தீட்சிர்ஸ்க்கு ஆதரவா நான் மனுதாக்கல் செய்ய போனுது. அப்போ வக்கீல்ஸ் முட்டைல என்ன தாக்னாங்க. அந்த முட்டைஸ் எங்கர்ந்து வந்த்துதுனு என்க்கு தெர்யும். எல்லாம் ஒஸாமா பின்லேடன் இஸ்லாமாபாத்லே சீக்ரட்டா நடத்துற ஒரு கோலி பண்ணேல இர்ந்து வந்தது. ஐஎஸ்ஐ மூல்மா இந்த்யாவுக்குள்ளே மும்பை வழ்யா சப்ளை ஆகியிருக்கு. முட்டே கடத்துன எல்லாவங்க பத்தியும் எல்லா டீடெய்லும் என் லேப்டாப்லே இருக்கு. இதுபத்தி எனக்கு ஏற்கென்வே ஒபாமா தக்வல் கொட்த்துட்டார்.

எலெக்‌ஷ்ன் முட்யற வர, இந்த்யாவுக்குள்ளே முட்டயே தடை செய்ணும்னு நான் கேஸ் போடப்போறேன். சத்துணவிலே முட்டே கொடுத்து ஸ்டூடன்ஸ்கிட்டே வன்முற வளர்க்கற கர்ணாநிதியே நான் கண்டிக்றேன். இந்த்யாவுக்குள்ள எல்லா கோலிக்கும் கருத்தடே செய்ய சென்ட்ரல் கவர்மெண்ட் உத்தர்வு போட்ணும். ஆம்லெட் சாப்டவறங்களே தேஸ்ய பாத்காப்பு சட்டத்லே கைது செய்ணும். எல்லா கோலிப்பண்ணே உரிமையாளர்களேயும் ‘பொடா’வுலே உள்ள போட்ணும்.

நூறு வாத்து முட்டே, வன்னிலே இர்ந்து ராமேஸ்வர்ம் வள்யா சப்ளை ஆகிருக்கு. அது சோ தலேல எர்யறதுக்காகன்னு என்க்கு காஞ்சி மட்லேர்ந்து இன்பர்மேஷ்ன் வந்த்ருக்கு. சோ, ஜாக்ரதயா இர்க்கணும்னு கேட்டுக்றேன்.’

இவ்வாறு அவர் தன் ரகசிய அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.