லொள்ளு விருதுகள் 2010

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

தங்கம், தக்காளி, சிலிண்டர், சீயக்காய் தூள், வெங்காயம், வெளக்கெண்ணெய், பெட்ரோல், பெருங்காயம் என எது விலையுயர்ந்தாலும் சகிப்புத் தன்மை ததும்ப வாழப் பழகிக் கொண்டிருக்கும் நாம் எல்லாம்…

16

சிலரது முகம் பரிச்சயம் இல்லை என்று நண்பர்கள் சிலர் சொன்னதற்காக போட்டோ கேப்ஷன்ஸ் :
1. நித்யானந்தா, 2. மன்மோகன் சிங் 3. ஒபாமா 4. சுரேஷ் கல்மாடி 5. பிரபுதாரா 6. விக்கிலீக்ஸ் அசாஞ்சே 7. எடியூரப்பா 8. ஜெகன்மோகன் ரெட்டி 9. லலித் மோடி 10. ஈவிகேஎஸ் இளங்கோவன் 11. ராகுல் காந்தி 12. விஜய்-சானியா- லாலு 13. நீரா ராடியா 14. ஆ. ராசா 15. செம்மொழி மாநாடு 2010 16. பொதுஜனம்

பாக்யராஜின் முதுகு!

சென்னை நுங்கம்பாக்கத்திலிருந்த பாக்யா பத்திரிகை அலுவலகத்தின் பிரகாசமான விளக்குகள் அணைக்கப்பட்டன. இரவு மணி சரியாக 12.00. ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றிவைத்த கையோடு நடிகர் பாண்டியராஜன் கொத்தாக ஒரு கட்டு ஊதுபத்தியை ஏற்றி வைத்தார்.

கோலப்பன் என்ற மீடியம், அந்தப் பளபளப்பான ஆவிகளுடன் பேச உதவும்  பிரான்சட் போர்டை மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் வைத்தார்.
‘ஒரு 10 செகன்ட் எல்லாரும் உங்களுக்குப் பிரியமா இருந்து ஏதோ ஒரு காரணத்துனாலே இறந்து போன அந்த நபரை மனசார நெனைச்சு கண்ணை மூடிட்டுப் பிரார்த்தனை பண்ணுங்க.’
மீடியம் கட்டைக்குரலில் வேண்டுகோள் விடுத்தார். அந்த விஸ்தரமான அறையில் மீடியத்தையும் சேர்த்து ஐந்து பேர் மட்டுமே இருந்தோம். எல்லோரும் மீடியத்தின் பேச்சுக்குக் கட்டுப்பட்டு கண்மூடிப் பிரார்த்தனை செய்தோம்.
கண்ணைத் திறந்தபோது – ஒரு நிமிடம் ஆடி அதிர்ந்து போனேன்.
பாக்யராஜின் தலைக்குமேலே வெள்ளை வெளேர் நிறத்தில் இரண்டு ஆவிகள் கை கோர்த்து மிதந்து போய்க் கொண்டிருந்தன. அது வேறொன்றும் இல்லை. பாண்டியராஜன் ஆவியோடு இன்றைக்குப் பேசியே ஆகவேண்டும் என்ற ஆர்வத்தில் கொத்தாகக் கொளுத்தி வைத்த ஊதுபத்திப் புகைதான் என்பதை உணர்வதற்குள் என் முகத்தில் பேய் பயம்.

அதைக் கவனித்த பாக்யராஜ், ‘ஆவிகளோட பேசறதுக்கு முன்னாடியே ரொம்ப டென்சன் ஆயிட்டீங்களே. பேசி முடிச்சிட்டீங்கன்னா எல்லாஞ் செரியாப் போயிரும். ப்ரபசர் சார், நீங்களும் சஞ்சீவியும் மொதல்லெ ஆவி போர்டுலெ கைவைங்க. சஞ்சீவிக்கு ஏதாவது வித்தியாசமா வந்து சேரும்!’

எனக்கும் சரி, ப்ரபசருக்கு சரி, இந்த மாதிரியான விஷயங்களில் அவ்வளவு நம்பிக்கை கிடையாது. இப்படி நம்பிக்கை இல்லாத இரண்டு பேரும் சேர்ந்து பிளான்சட் போர்டு ஸ்ட்ரைகரில் விரல் வைத்தாலோ என்னவோ, வெகு நேரம் ஸ்ட்ரைகர் இருந்த இடம் விட்டு நகரவேயில்லை.

அதற்குப் பிறகு ஸ்ட்ரைகர் மெதுவாக நகர ஆரம்பித்தது. ஆனால், பிளான்சட் போர்டில் அச்சடித்த ஆங்கில எழுத்துகளில் எந்த சம்பந்தமும் இல்லாமல், அர்த்தமும் இல்லாமல் அந்த ‘பிளாஸ்டிக் வில்லை’ நின்று நின்று நகர்ந்தது. சிலசமயம் பிளான்சட் போர்டின் சதுரம் தாண்டி வழுக்கிக் கொண்டு போய் தரையிறங்கியது.

மீடியம் அப்போது நம்பிக்கையூட்டும் வகையில் ஓர் அறிவிப்பு செய்தார்.
‘சார்! ஏதோ ஆவி ஒண்ணு, இப்போ இங்க வந்திருச்சு. இல்லாட்டி ஸ்ட்ரைகர் நகரவே நகராது. இதுல இன்னொரு விஷயமும் இருக்கு. இப்போ இங்க வந்திருக்கிற ஆவிக்கு இங்கிலீஸ் எழுத்துகள் படிக்கத் தெரியலேன்னு வெச்சுக்குங்க. அப்போ இது மாதிரிதான் வெளையாட்டு காட்டிட்டுப் போயிரும்.’

பாக்யராஜ் அப்போது என்னிடம் கேட்டார். ‘ஏங்க சஞ்சீவி, நீங்க கூப்புட்ட ஆவிக்கு இங்கிலீஸ் தெரியுமா? தெரியாதா?’
‘இல்லில்லே, நான் மனசிலே நெனைச்ச ஆவி ஒரு ஸ்கூல் டீச்சர். இங்கிலீஸ் ப்ராப்ளம் எல்லாம் இல்லே’ என்று நான் சொல்லி முடிக்கும்போது ஸ்ட்ரைகர் பிளான்சட் போர்டின் நடுவில் சென்று நின்றது.

முன்பு இல்லாத ஒரு வைபரேசனை என் விரல்கள் உணர்ந்தன. அதை ஆமோதிப்பது போல் இங்கிலீஷ் ப்ரபசர் என்னைப் பார்த்து லேசாகத் தலையாட்டினார். அதற்குப் பிறகு ஸ்ட்ரைகர், M – என்ற எழுத்துக்குச் சென்று ஒரு செகண்ட் நின்று, பின் A, Y – அடுத்து A  என்று அங்கேயே நங்கூரம் பாய்ச்சிக் கொண்டது.

‘மாயாவோட ஆவி வந்திருச்சுங்க ஏன் சார்… நீங்க மாயாவைத்தான் நெனைச்சீங்களா?’ – பாண்டியராஜன் கேட்டார். உண்மைதான் அந்த ஸ்கூல் டீச்சரின் பெயர் மாயாதான். ஒப்புக்கொண்டேன் இருந்தாலும் மீடியமாக வந்திருப்பது நான் கூப்பிட்ட டீச்சரின் ஆவிதான் என்பதை ஊர்ஜிதப்படுத்திக் கொள்ளும் வகையில் ‘எங்க பிரார்த்தனைய மதிச்சு இந்த ராத்திரி நேரத்துல இங்க வந்திருக்கற மாயா ஆவிக்கு எங்க வணக்கம். நீங்க பிறந்த ஊரைச் சொல்லமுடியுமா ப்ளீஸ்’ – என்று கேட்டேன்.

இப்போது நானும் ப்ரபசரும் மீண்டும் பிளாஸ்டிக் வில்லையில் விரல் வைத்தோம்.
S
A
L
E
M – என்று ஸ்டைகர் நிலைகொண்டது. பாண்டியராஜன் அதை சலீம் என படித்து வாய் விட்டுச் சிரித்தார்.

‘அது சலீம் அல்ல…‘சேலம்’தான். ஸ்கூல் டீச்சர் வாழ்ந்து, சின்ன வயதிலேயே மறைந்தது சேலத்தின்தான். அதன் ஸ்பெல்லிங்கும் SALEMதான்!’ என்றேன். அதற்குப் பிறகு நான் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டிருக்க வேண்டும். என்னால் தொடர்ந்து மாயாவுடன் பேச முடியவில்லை. நிலைமையை உணர்ந்துகொண்ட பாக்யராஜ், என்னை ஆறுதல்படுத்தினார். அறிவுபூர்வமாக சில விளக்கங்களையும் சொன்னார்.

‘இதுல பெருசா ஒண்ணும் இல்லீங்க. எல்லாமே உங்க சப்கான்சியஸ்லெ இருந்ததுதான். உங்க விரல் மூலமா வெளிப்பட்டிருக்கு. மத்தபடி ஆவி வந்து போறதெல்லாம் நம்பறமாதிரி இல்லே. ஒரு ஆவி வந்து தன்னோட ஊரு பேரைச் சொல்றதுல என்ன அதிசயமிருக்கு. நாளைக்கு இதே இடத்துல இதே மணிக்கு என்ன நடக்கும்னு சொன்னா அது அதிசயம்.’
பாக்யராஜின் யதார்த்தத்தை வந்திருந்த மீடியம் ஒப்புக்கொள்வதாக இல்லை. ‘வீணாக நாம் இப்போ எந்த ஒரு ஆவியோட கோபத்துக்கும் ஆளாக வேண்டாம். இதோட பூஜையை முடிச்சுக்குவோம். அதுதான் எல்லாருக்கும் நல்லது.’

மீண்டும் அந்த இடத்தில் இருட்டுமாறி வெளிச்சம் வந்தது.

மறுநாள். நான் பாக்யா பத்திரிகையின் நிர்வாக ஆசிரியர் பொறுப்பில் இருந்ததால் அன்றும் இரவு 12 மணி அளவில் பத்திரிகை தொடர்பாக சந்திக்க வேண்டி வந்தது. அப்போது பாக்யராஜ் தான் போட்டிருந்த சட்டையைக் கழட்டினார். தனது முதுகை என் பக்கம் திருப்பிக் காட்டினார்.

முதுகில் யாரோ கூரிய நகங்களால் கீறிய ரத்தச் சுவடுகள் தெரிந்தன.

எனக்கு அதிர்ச்சி. நேற்று வந்த ஏதாவது வந்து பிராண்டிவிட்டுப் போனதா? பாக்யராஜும் அப்படி ஒரு பில்ட்-அப்தான் கொடுத்தார். மேலே நடந்த சம்பவங்களை எல்லாம் பாக்யாவில் எழுதலாம் என்னுமளவுக்கு நான் தயாராகி விட்டேன். கடைசியில் பாக்யராஜ் உண்மையைப் போட்டுடைத்தார்.

‘சஞ்சீவி, நான் சரியா நகம் வெட்டலை. குளிக்கும்போது முதுகு தேய்க்கறப்போ கீறல் விழுந்திருக்குது. ஒரு சுவாரசியத்துக்காக உங்ககிட்ட ஸ்கீரின் ப்ளே பண்ணி சொன்னேன். இப்படித்தான் இந்த பேய், ஆவி சமாசாரங்களை எல்லாம் இஷ்டத்துக்குப் பரவியிருக்கும்னு நினைக்கிறேன்.’

***

உண்டா, இல்லையா? கடவுளுக்கு அடுத்து அதிகம் விவாதிக்கப்படும் விஷயம் பேய்தான். ஆதி காலம் தொட்டு அறிவியல் ஆட்சி செய்யும் இந்தக் காலம் வரை அமானுஷ்யங்கள் மீதான அச்சமும் நம்பிக்கையும் அதிகரித்துக் கொண்டேதான் செல்கின்றன. பல தனியார் சேனல்கள் இரவு பத்து மணிக்கு மேல் இந்த பேயை ஹீரோவாக வைத்துத்தான் நிகழ்ச்சிகளை ஒப்பேற்றிக் கொண்டிருக்கின்றன. பரபரப்பு வாரமிருமுறை இதழ்களிலும் ஆவி, பேய் செய்திகள் என்றாலே அதற்கு தனி மவுசுதான்.

ஆவி, பேய், பூதம், மோகினி, கொள்ளிவாய்ப் பிசாசு, காட்டேரி, காத்து, கருப்பு என்று பல வடிவங்களில் மனிதனின் மனத்தை ஆக்கிரமித்திருக்கும் பேய், நிஜமா, கற்பனையா? பில்லி, சூனியம், ஏவல் போன்ற மாந்திரீக விஷயங்களில் எவ்வளவு உண்மை உள்ளது? பேசப் பேச, எழுத எழுத தீராத சந்தேகங்களும் சுவாரசியமும் கொண்ட டாபிக் இது. உள்ளூரில் மட்டுமல்ல, முன்னேறிய நவீன நாடுகளிலும் பேய்கள் உலாவிக்கொண்டுதான் இருக்கின்றன. அறிவியலுக்கு பொருந்தாது என்று சொல்லி பேயை நிராகரிப்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால், பேயின் இருப்பை மறுதலிக்க முடிந்தது போல், பேய் பயத்தை ஒழிக்க அறிவியலாலும் முடியவில்லை என்பதுதான் நிஜம்.

அறிவியல், அமானுஷ்யம் இரண்டின் கலவையாக ‘பேய்’ என்ற புத்தகம், கிழக்கு வெளியீடாக சென்னை புத்தகக் கண்காட்சிக்கு வர இருக்கிறது. இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கும் சஞ்சீவியை, பாக்யா வாசகர்கள் ஏற்கெனவே அறிந்திருப்பீர்கள். சஞ்சீவி, ஓவிய ஆசிரியராகப் பணியாற்றியவர். ‘பாக்யா’ வார இதழின் நிர்வாக ஆசிரியராக பதினான்கு ஆண்டுகள் இருந்தவர். கண்ணன் சர்வதேச அறிவியல் ஆய்வு மையத்தின் நிறுவனர். அமானுஷ்ய விஷயங்கள் குறித்து அறிவியல்பூர்வமாக தொடர்ந்து எழுதி வருபவர். இந்தப் புத்தகத்தை எடிட் செய்த விதத்தில் என் கருத்து – மிக மிக சுவாரசியமான விஷயங்களும் கதைகளும் சம்பவங்களும் நிறைந்துள்ள, அறிவியல்பூர்வமான விளக்கங்களும் கொண்ட விறுவிறு புத்தகம்.

தொண்ணூறு டிகிரி (பகுதி 2)

(தொண்ணூறு டிகிரி பகுதி 1 படிக்க.)

‘திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் போற ரோட்டுல அந்த சென்டர் இருக்குது’ என்றான் பாலாஜி.

‘அதோட பேரு என்ன தெரியுமா?’ – நான் கேட்டேன்.

‘ஏதோ ஜியோமேக்னடிக் சென்டர்னு வரும்.’

‘நீ சொல்றபடி உண்மையிலேயே அங்க அப்படிப்பட்ட ஆள்கள் இருக்காங்களா?’

‘எம்எஸ்சி பிஸிக்ஸ் நான் படிக்கிறப்போ என்னோட பிரெண்ட்ஸ் அங்க ப்ராஜெக்ட் பண்ணிருக்காங்க. அவங்க சொல்லிருக்காங்க.’

பாலாஜி என் நண்பனின் சகோதரன், எனக்கும்தான். திருநெல்வேலியில் இருக்கும் ஒரு மையத்தில் உள்ள ஆய்வாளர்கள், அடிக்கடி அண்டார்டிகாவுக்குச் சென்று வந்திருக்கிறார்கள். அவர்களிடம் பேசினால், அண்டார்டிகா குறித்த பல தகவல்கள், அனுபவங்கள் கிடைக்கும் என்று பாலாஜி தகவல் கொடுத்தான்.

கூகுள், அந்த திருநெல்வேலி மையத்தின் தொடர்பு எண்ணை எனக்குக் கொடுத்தது. பேசினேன். விஷயத்தைச் சொன்னேன். நேரில் வாருங்கள், பேசலாம் என்றார்கள். பாராவிடம் சொல்லிவிட்டு சென்னையிலிருந்து கிளம்பினேன்.

அது Indian Institute of Geomagnetism – திருநெல்வேலி கிருஷ்ணாபுரத்தில் இயங்கிவரும் பூமத்திய புவி இயற்பியல் ஆராய்ச்சி மையம். ஊரைவிட்டு வெளியே பாளையங்கோட்டையிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் கிருஷ்ணாபுரம் என்ற ஊருக்கு அருகில் அமைந்துள்ள மையம் அது. பேருந்து நிறுத்தப்படும் இடத்திலிருந்து சில கி.மீ. நடந்துதான் செல்ல வேண்டும். மினி நெய்வேலி டவுன்ஷிப் போல, அலுவலர் குடியிருப்புடன் அந்த மையம் அமைந்திருந்தது.

அதன் தலைவர் குருபரன் அவர்களைச் சந்தித்தேன். ‘எந்த மாதிரியான விவரங்கள் வேண்டும் என்று கேளுங்கள். இங்கே உள்ள தொழில்நுட்ப அலுவலர்கள் பலரும் அண்டார்டிகாவுக்கு சென்று வருபவர்கள்தாம். அநேக பேர் ஷார்ட் டிரிப்  சென்று வருபவர்கள். ஜீவா என்று ஒருவர் இருக்கிறார். அண்டார்டிகாவுக்கு சிலமுறை லாங் டிரிப் சென்றிருக்கிறார் அவர். நீங்கள் அவரிடம் பேசினால் சரியாக இருக்கும்’ என்று எனக்கு வழிகாட்டினார் குருபரன்.

ஜீவா, மென்மையான மனிதர். பல விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளக்கூடிய குணம் கொண்டவர். அண்டார்டிகா குறித்து ஒரு புத்தகம் எழுதப்பட வேண்டும் என்ற எண்ணம் அவருக்கும் இருந்தது. எனக்கு உதவுவதற்கு ஒப்புக்கொண்டார். ஓரிரு சந்திப்புகளிலேயே நண்பரும் ஆனார்.

சொந்த ஊரான தூத்துக்குடியில் தங்கிக் கொண்டேன். தினமும் கிருஷ்ணாபுரத்துக்குச் சென்றுவர ஆரம்பித்தேன். பேச வேண்டிய விஷயத்தை, கேள்விகளை முன்னதாகவே தயார் செய்துகொள்வேன். ஜீவா, தன் பணிகளுக்கிடையில் கிடைக்கும் நேரங்களில் என்னுடன் பேசினார். மற்ற நேரங்களில் மையத்தில் உள்ள அண்டார்டிகா அனுபவம் கொண்ட பிற நபர்களிடம் பேசி தகவல்களைச் சேகரித்தேன்.

நண்பர் ஜீவா என்னிடம் பகிர்ந்துகொண்ட தகவல்கள் அண்டார்டிகாவுக்குச் சென்று வந்ததைப் போன்ற உணர்வைத் தந்தன. அண்டார்டிகாவின் வானிலை, காலநிலை எப்படிப்பட்டது, எந்த மாதிரியான ஆராய்ச்சிகளை இந்தியர்கள் அங்கே மேற்கொள்கிறார்கள், அங்குள்ள மைத்ரி இந்திய ஆராய்ச்சி மையத்தில் தின வாழ்க்கையின் நிகழ்வுகள் என்னென்ன, குளிர்காலம் எப்படிப்பட்டது, அங்கே விளைபவை என்று எதுவும் கிடையாதே, மாதக்கணக்கில் தங்கியிருப்பவர்கள் உணவுக்கு என்ன செய்கிறார்கள், காலையில் எழுந்ததும் சுடச்சுட டிகிரி காபி சாத்தியம்தானா என்பது முதற்கொண்டு யாரெல்லாம் அண்டார்டிகாவுக்குச் சென்று தங்க முடியும் என்பது வரையிலான பல்வேறு விஷயங்களைக் கேட்டு அறிந்துகொண்டேன். சென்னைக்குத் திரும்பினேன்.

அண்டார்டிகாவின் இந்திய ஆராய்ச்சி நிலையம் ‘மைத்ரி'

தொண்ணூறு டிகிரி தென் துருவத்தை முதன் முதலில் தொட வேண்டும் என்ற வெறியில், பயணம் செய்த இங்கிலாந்தைச் சேர்ந்த ராபர்ட் ஸ்காட், நார்வேயைச் சேர்ந்த ரோல்ட் அமுன்ட்சென், இன்னொரு முக்கிய பனிப்போராளியான அயர்லாந்தைச் சேர்ந்த ஷாகெல்டன் ஆகியோரது பயணங்கள் குறித்த புத்தகங்களைப் படித்தேன். அவை குறித்து கிடைக்கும் ஆவணப் படங்களைப் பார்த்தேன். அண்டார்டிகாவின் புவியியல், அறிவியல் விஷயங்கள், அதன் வரலாறு, தென் துருவத்தை அடைவதற்காக நடந்த பந்தயங்கள் என பிரித்துக் கொண்டு புத்தகத்தை எழுத ஆரம்பித்தேன். தயாரிப்புகளுக்கு இரண்டு மாதங்கள் பிடித்தன. எழுதுவதற்கு இரண்டு மாதங்கள். இடைப்பட்ட காலத்தில் மீண்டும் நண்பர் ஜீவாவைச் சென்று சந்தித்து, சில விஷயங்கள் குறித்த சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொண்டேன்.

ஒரு மாலை. புத்தகம் எழுதி முடித்து ஸ்கிரிப்டை பாராவுக்கு அனுப்பினேன். மாலை வீட்டுக்குக் கிளம்புவதாக இருந்தவர், ஸ்கிரிப்ட் வந்ததும் அன்று இரவு கிழக்கிலேயே தங்குவதாக முடிவு செய்தார், எடிட் செய்வதற்காக. முத்துக்குமார், ச.ந. கண்ணன், முத்துராமன், மருதன் உடன் நானும் அன்று இரவு அலுவலகத்திலேயே தங்கினேன்.

பாரா, மாலை ஆறு மணிபோல ஸ்கிரிப்டை வாசிக்க ஆரம்பித்தார். இரவு ஏழரை மணி இருக்கும். இரவு சாப்பாட்டுக்கு என்ன டிபன் வேண்டும் என்று கேட்பதற்காக அவரது அறைக்குள் நுழைந்தேன். மடிக் கணிணிக்குள் மூழ்கியிருந்தார். முகம் சாதாரணமாக இல்லை. இரண்டு முறை அழைத்தேன். பதிலில்லை. அருகில் சென்று தோளைத் தொட்டு அழைத்தேன். சட்டென நிமிர்ந்தார். முகத்தில் ஒருவிதமான மிரட்சி. முன் நிற்பது நான்தான் என்று அவர் உணர்வதற்குக்கூட சில நொடிகள் பிடித்தன.

‘சார் டிபன் வாங்கணுமா?’

‘அப்புறம் சொல்றேன்…’

அறையிலிருந்து வெளியில் வந்துவிட்டேன். வருவதற்கு முன் அவர் லேப்டாப்பின் திரையில் பார்த்தேன். ஸ்காட்டும் அமுண்ட்சென்னும் தென் துருவத்தைத் தொட போராடிக் கொண்டிருந்தார்கள். அடுத்த ஒருமணி நேரத்தில் புத்தகத்தை எடிட் செய்துமுடித்துவிட்டு பாரா அறையிலிருந்து வெளியே வந்தார்.

‘ஸ்காட், அமுண்ட்சென் – ரெண்டு பேருமே என்னை மிரட்டிட்டாங்க. உன்னோட பெஸ்ட் புக் இது. இனி நீ என்ன எழுதுனாலும் இதுக்கு நிகரா வராது.’

(பாரா பரிந்துரைக்கும் Top 100 புத்தகங்களில் எனது அண்டார்டிகாவுக்கும், கண்ணீரும் புன்னகைக்கும் எப்போதும் இடம் உண்டு என்பதில் மகிழ்ச்சி )

அண்டார்டிகா புத்தகம், கடும்குளிரை வெளிப்படுத்தும் வார்த்தையான  ‘ஸ்…’ என்ற தலைப்பில் வெளிவந்தது. 2007 சென்னை புத்தகக் கண்காட்சியில் ஓரளவு விற்பனையானது.

அதற்குப் பின்?

நான் எழுதி வெளியான புத்தகங்களிலேயே மிகக் குறைவான எண்ணிக்கையில் விற்பனையான புத்தகம் அண்டார்டிகாதான். கிழக்கின் சேல்ஸ் டிபார்ட்மெண்டில் கேட்டால் ‘Failure’ புத்தக வரிசையில் சொல்வார்கள். யூதர்கள், செங்கிஸ்கான போன்ற ஹிட் புத்தகங்கள் எழுதியிருந்தாலும், அகம் புறம் அந்தப்புரம், முகலாயர்கள் போன்ற மெகா சைஸ் புத்தகங்கள் எழுதியிருந்தாலும், என் மனத்துக்கு அதிக சந்தோஷம் கொடுக்கும் புத்தகம் ‘அண்டார்டிகா’தான். எழுதும்போதே என் மனத்தை அதிகம் பாதித்த புத்தகமும் இதுதான். இன்று வரையில், என் எழுத்தை புதிதாக வாசிக்கப் போகிறவர்களுக்கு நான் முதலில் பரிந்துரைக்கும் புத்தகம் அண்டார்டிகாதான். இந்தப் புத்தகத்தின் மூலம் எனக்கு அறிமுகமான நண்பர்களும் அநேகம்.

கடந்த மூன்று ஆண்டுகளாகவே ‘ஸ்…’, சென்னை புத்தகக் கண்காட்சியில் கிழக்கின் இலக்கியப் புத்தக ஸ்டாலில் இடம்பெற்றிருந்தது. (ஏன் என்று புரியவிலலை. ஒருவேளை இலக்கியம் படைத்துவிட்டேனோ?) இந்தமுறையும் விற்பனைக்குக் கிடைக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் ‘ஸ்..’ என்ற பழைய தலைப்பில் கிடைக்குமா, அல்லது ‘அண்டார்டிகா’ என்று தலைப்பும் அட்டையும் மாற்றப்பட்ட புதிய பதிப்பாகக் கிடைக்குமா என்று என்னால் உறுதியாகக் கூறமுடியவில்லை. விருப்பப்பட்டால் வாங்கிப் படித்துவிட்டு உங்கள் விமரிசனங்களை முன் வையுங்கள்.

நண்பர் ஜீவாவும் எனது அண்டார்டிகா புத்தகத்தை மிகவும் ரசித்தார். தற்போதுகூட அண்டார்டிகாவில் ஆராய்ச்சி நிமித்தமாக தங்கியிருக்கும் (இந்த முறை குழுவுக்குத் தலைமையேற்று சென்றிருக்கும்) நண்பர் ஜீவாவுக்கு அவர் செய்த உதவிகளுக்காக என் நன்றிகளை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தொண்ணூறு டிகிரி மூன்றாம் பாகத்தில் பனிப்போராளிகளான ஸ்காட், அமுன்ட்சென், ஷாகெல்டன் ஆகியோரோடு சந்திக்கிறேன்.

மன்மத அம்பு

கூடம் முழுக்க ஆண் வாசனை. கமல் வயதை (பதினைந்து) ஒத்தப் பையன்கள் வியர்க்க விறுவிறுக்க ஆடிக் கொண் டிருந்தார்கள். ஒன்றரை டஜன் தேறும். டான்ஸ் ரிகர்ஸல். தமிழ்நாட்டில் கமலை யாரும் சட்டை செய்யவில்லை. மஹாராஷ்டிரா வரவேற்றது. அம்மாவின் கை வளையல்களே முதலீடு. மும்பை தவிர மற்ற இடங்களிளெல்லாம் கமலின் நடனக்குழு பறந்து பறந்து ஆடியது – பாங்க்ரா, கதக், மயில் டான்ஸ். மகாராஷ்டிரா காவல்துறை சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சிகள்.
‘கமல் புதுசா ஒரு பொண்ணு உன்னைப் பார்க்கணும்னு வந்ததிருக்கா’ – சத்யப்ரியா கமலிடம் கூறினார். (பின்னாளில் கமலுடன் ஜோடியாக‘மனிதரில் இத்தனை நிறங்களா?’ படத்தில் நடித்தவர். இப்போது அம்மா நடிகை.)
கமலுக்கு அப்போது மராத்தியோ, இந்தியோ தெரியாது. அந்தப் புதிய பெண்ணை முதன் முதலில் பார்த்தபோது எதுவுமே பேசத் தோன்றவில்லை. சந்தித்த வேளையிலேயே கமல் தனக்குள் காதல் அரும்பிவிட்டதை உணர்ந்தார்.
பெயரைக்கூட கேட்டுத் தெரிந்து கொள்ளவில்லை. அவளை கிருஷ்ணகுமாரி என்று அழைத்தார்கள். அந்த அழகை வருணிக்க வார்த்தைகளைத் தேடுவதிலேயே கமல் நேரத்தை செலவிட்டார். கமலின் நடனக்குழுவில் ஆட விருப்பம் தெரிவித்து வந்திருந்தாள். அவளை மனதார வரவேற்றார்.
‘என்னடா இவன் கிருஷ்ணகுமாரியோடயே சுத்தறான் எப்பவும். மச்சான், மச்சம்டா உனக்கு. இன்னும் முளைச்சு வெளியில வரல மீசை. அதுக்குள்ள லவ்வு!’ – குழுவினர் கமலைக் கலாய்த்தனர்.
உதிர்வதற்காகவே மலரும் பூபோல கமலோடு ஆடத் தொடங்கிய சில வாரங்களிலேயே அகால மரணம் அடைந்தாள் கிருஷ்ணகுமாரி.
கமலின் காதல் சோகத்தைக் கால்கள் பேசின. தன்னையே மறந்து ஆடத் தொடங்கினார். எம்பி எம்பி குதித்து ஆடியதில் பந்து கிண்ண மூட்டு விலகி மேடைக்கு வெளியே விழுந்தார். உயிரைப் பிழியும் வலி. சிவாலயா நடனக் குழு பாதியிலேயே சென்னைக்குத் திரும்பியது.

*

தங்கப்பன் மாஸ்டரிடம் நடன உதவியாளர் வேலை. கமல் சம்பாதிக்க ஆரம்பித்தார். ஒரு பாடலுக்கு இருநூறு, முன்னூறு என்று கம்பெனிக்கு ஏற்றவாறு கிடைத்தது. குட்டி நடிகனாக கமலைக் கொஞ்சிய கலைஞர்கள் அவரை இப்போது நடன உதவியாளராகவேப் பார்த்தார்கள். கமலும் தன் எல்லையில் எட்டி நின்று அவர்களுக்கு ஆடக் கற்றுத் தந்தார்.

கமலின் மூட் இப்போது திசைமாறி இருந்தது. நிறையவே ரகம் ரகமாகப் பெண்கள் அவரைப் பாதித்தார்கள். திரையுலகில் மிக இயல்பாக அமைகிற சுகம் அது.

‘டெம்ப்டேஷன்ஸ் ரொம்ப ஜாஸ்தி இந்த ஃபீல்டுல. ஜாக்கிரதையா இருக்கணும்னு சொல்வார் தங்கப்பன் மாஸ்டர். ஏதாவது பெண்ணோட ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தா ‘டேய் அரட்டை அடிக்காத. வேலையைப் பாரு’ன்னு சொல்வார்.’

*

‘நான் சொல்றதைக் கேளு. ஒரு மந்திரம் கத்துத் தரேன். திரும்பத் திரும்பச் சொல்லு.’
‘அது சான்ஸ் வாங்கித் தருமா?’
கமல் தந்தையிடம் ஆவேசமாகக் கேட்டார். அப்பா அழுத்தம் திருத்தமாக அந்த வாசகத்தைக் கூறினார்.
‘நான் தேய்ந்து அழிவேனேயன்றி துருப்பிடித்து அழிய மாட்டேன். இதைச் சொல்லிண்டே இரு. படம் வரலன்னாலும் பக்குவம் கிடைக்கும். உன் அம்மா கருத்துப்படி எதைச் செய்யறியோ அதைத் திருந்த செய். சிறந்த டான்ஸ் மாஸ்டர்னு பேர் வாங்கு முதல்ல’
‘நான் மைசூர் கிளம்பறேன். நான் அவனில்லை ஷூட்டிங்’.
‘இன்னொரு விஷயம்…’ அப்பா தயங்கினார்.
‘சொல்லுங்க சீக்கிரம்…’
‘பீடி-சிகரெட், பொண்ணு, தண்ணி எதுலயும் ஈடுபட மாட்டேன்னு சத்தியம் செய்.’
‘காந்தி கதையா மறுபடியும்’
‘ஆமாம். வீணா கெட்டுப் போகாதே. இன்னும் ஒழுங்கா நடிக்கவே ஆரம்பிக்கல. உடம்பு முக்கியம்.’
‘நான் ஏன் பிறந்தேன் ஷூட்டிங்லயே எம்.ஜி.ஆர் சொல்லி எக்சர்சைஸ் பண்ணத் தொடங்கினேன். அவர் எனக்கு வாத்தியார் இதுல. நீங்க சொன்னதுல ரெண்டு ஓகே. சிகரெட், தண்ணி ‘கப்பு’ – விட்டுடலாம். மூணாவது முடியும்னு படல. வரட்டுமா.’
‘யூ டோன்ட் நோ’ இது கமலின் பன்ச் டயலாக். ராகத்தோடு பெண்களிடம் சொல்லத்தான் நினைக்கிறேனில் பேசினார். போன் நம்பர் கொடுப்பார். அது கமலின் நிஜமான தொலைபேசி எண் என்று மார்கழி இரவுகளில் எட்டரை மணியிலிருந்து ரசிகைகள் மாறி மாறிப் பேசி அழைத்தனர். அது உதயம் புரொடக்ஷன்ஸ் போன் நம்பர். சில விஐபி விசிறிகளுக்கு கமலின் நிஜமான எண் தெரியும். அவர்களும் உரிமையுடன் கமலிடம் உறவாடினார்கள்.

‘ரசிகைகள் எனக்கே புல்லரிக்க கன்னம் சிவக்க போனிலேயே முத்தமிட்டுப் பேசியது ஆசை மொழிகள்.’

*

கமல் பாலசந்தரின் ஆள் என்ற முத்திரை பலமாகக் குத்தப்பட்டது. அவருக்கு வேலை இருந்தாலும் இல்லையென்றாலும் கலாகேந்திராவுக்குப் போய் வந்தார். கமலுக்கு வாய்த்த மற்ற படங்களில் அவர் மேனி அழகை மட்டுமே காட்ட முயற்சித்தனர்.
‘Girls Hero, Sex Symbolனு என்னைச் சொல்றாங்க. அது எனக்குப் பிடிக்கலை. பொம்பிளை ஜெயமாலினி மாதிரி ஆம்பிளை ஜெயமாலினியா நினைக்க ஆரம்பிச்சிட்டாங்களோன்னுகூட நினைச்சேன். இந்த இமேஜ் அட்டை மாதிரி என்னோட ஒட்டிட்டு இருக்கு. இது போய் நான் ஆக்டர்னு பேர் வாங்கணும்.’

*

வாணியுடனான காதலும் நாளொரு நளினமும் பொழுதொடு பொலிவுமாக வளர்ந்தது.
‘முதல் பரிசு Brute Perfume. அதற்குப் பின் ரெகுலரா கொலோன்கள் சட்டைகள் வாங்கி அனுப்புவேன். வெளி நாடுகளுக்குப் போகும் போதும் நிறைய வாங்கி வந்து தந்திருக்கிறேன். Elite of Madras என்று சொல்லக் கூடிய நண்பர்கள் மூலம். ‘அவருக்கு ஒரு பார்சல் தரணும். எனக்காக ப்ளீஸ் எடுத்துண்டு போறீங்களா’ என்பேன்.
கமல், அவர்கள் வீட்டுக்குப் போய் கிஃப்ட் பார்சல்களை வாங்கிக் கொள்வார்.’
சென்னையில் கிடைக்காத சராஹ் சட்டைகள் மும்பையில் மேல்தட்டு மக்களிடையே பிரபலம். அந்த ஷர்ட் வகைகளில் CD என்று போட்டிருக்கும். கமலுக்கென அவற்றை அனுப்பிக் கொண்டே இருந்தார் வாணி. கமலுக்கும் ‘சராஹ்’ பிடித்துவிட்டது. சதா சர்வ காலம் வாணியின் சராஹ் சட்டைகள் கமலைத் தழுவிய படியே வலம் வந்தன. வாணி சென்னைக்கு வரும்போதெல்லாம் மன்னி கலாட்டா செய்தார்.
‘இதோ பார். உன் ஷர்ட் தொங்குது. இதன் பேர் வாணி ஷர்ட். கவச குண்டலம் மாதிரி இதையே அவன் நாலு நாளாப் போட்டுண்டு இருக்கான். அது கிழியற வரைக்கும் விடமாட்டான் போலிருக்கு.’
இடையில் அவள் ஒரு தொடர்கதையின் வங்காள வடிவத்துக்காக கல்கத்தா போனார். இரண்டு நாள்களில் சென்னையில் பிலிம் ஃபேர் விருது நிகழ்ச்சி. கமல் – ஸ்ரீப்ரியா நடிக்க கே. பாலசந்தர் இயக்கும் நாடகம் ஒன்றும் அதில் இடம் பெறவிருந்தது. அதற்கான ஒத்திகை வேறு.

கல்கத்தாவில் மாலா சின்ஹாவுக்கு கமலை விடவே மனசு வரவில்லை. மிக மூத்த நடிகை. ஆனாலும் சவுகார் ஜானகி போல் இளமையாக வாழ நிறைய முயற்சிகள் மேற்கொண்டார். அதில் ஒரு பகுதியாக கமலை Can I kiss you? என்று மாலா சின்ஹா மரியாதை நிமித்தமாகக் கேட்டார்.

மறுக்க மனம் வரவில்லை கமலுக்கு. சரி என்றார். இச் என்ற சத்தத்தோடு அவர் நெற்றியில் மாலாவின் லிப்ஸ்டிக் வளர்பிறையாகி பதிந்தது.

*

‘திருமணம் என்ற பழைய சட்டத்தின் மீது அவ்வளவு நம்பிக்கை இல்லாதவன் நான். ஒரு பெண்ணின் நட்பும் உறவும் அவசியப்படும்போது மட்டும் கூடுவது நம் சமுதாயத்தைப் பொறுத்தவரை காட்டுமிராண்டித்தனமானது. நான் மணக்கப் போகும் பெண்ணுக்கும் எனக்கும் உள்ள உறவுக்கு அகராதியில் நட்பு, காதல் என்ற இரண்டு விளக்கங்களே காணப்பட்டன.
‘நட்புத் திருமணம்’ என்ற வழக்கமில்லாத வார்த்தையைவிட காதல் என்பது பத்திரிகைகாரர்களுக்கு வசதியாக இருந்தது. ஆகவே அந்தப் பழையப் பெயர் பலகையையே நானும் கழுத்தில் கட்டிக் கொண்டு விட்டேன்.
மொத்தத்தில் இது என் சகஜீவிகளையும் என்னையும் சண்டை இல்லாமல் திருப்திப்படுத்தும் ஏற்பாடு. எனக்குப் பிடித்திருக்கிறது.’
கமலின் வாணியுடனான திருமண அறிவிப்பு கட்டுரை அது.

*

சரிகாவைக் கண்டதும் எஸ்.பி.எம். யூனிட்டில் ஆச்சர்யம் காட்டினார்கள். திடீரென்று ஓர் இளம்நடிகையுடன் கமல் செட்டுக்கு வந்திருக்கிறாரே, நமக்கெல்லாம் அவரை அறிமுகப்படுத்துவாரா என்று ஆர்வம் தலை தூக்கியது. எட்டாவது ஃப்ளோர் எதிர்பார்ப்பில் இருக்க கமல் கிண்டல் அடித்தார்.

‘உங்க யாருக்கும் அவங்கள அறிமுகப்படுத்தமாட்டேன். அவங்க எனக்கு மட்டும் ஃப்ரண்டு.’

*

2002ல் கமலின் இரு படங்களிலும் சிம்ரன் கதாநாயகி. பஞ்ச தந்திரத்தில் நகைச்சுவையாக சிம்ரனுக்கு சக்களத்திப் போர். போட்டிப் பாடல், அதைவிட கமல் – சிம்ரன் ரகசியக் காதலை குழந்தைகளும் உணரும் வகையில் ஒரு டூயட்.
‘என்னோடு காதல் என்று பேச வைத்தது
நீயா இல்லை நானா?
ஊரெங்கும் வதந்திகாற்று வீச வைத்தது
நானா இல்லை நீயா?
வளைக்க முயன்றது யாரு
நீயா நானா?
வளைந்து கொடுத்தது யாரு
நீயா நானா?
உன்னோடு லவ் என்று ஊர் சொன்னது
நீ வேறு நான் வேறு யார் சொன்னது.’
சிம்ரனோடு தொடர்ந்தது தோழமையா அல்லது காதலா என்பதை கமல் மட்டுமே அறிவார். அது இரண்டும் அற்றதாகவும் இருந்திருக்கலாம். ஆனால் பஞ்சதந்திரம் படத்துக்கு விளம்பர பரபரப்பை ஏற்படுத்தியது.

*

‘ஹலோ நான் டைரக்டர் கே.எஸ். ரவிகுமார் பேசறேன். பஞ்ச தந்திரம்னு ஒரு படம் பண்றேன். கமல் சார் நடிக்கிறாரு. சிம்ரன் கதாநாயகி. உங்களுக்கு ஒரு கெஸ்ட் ரோல் இருக்கு. நீங்க செஞ்சா நல்லா இருக்கும்னு நினைக்கிறோம்.’
‘ஸாரி மிஸ்டர் ரவி. கமல் சாரோட ஹீரோயினா நாலு பெமிலியர் மூவில நடிச்சுட்டேன், மறுபடியும் சின்ன வேஷம் பண்ணா சரி வராது. ப்ளீஸ் எக்ஸ்க்யூஸ் மீ. எனிவே என்னை ஞாபகம் வெச்சிருந்து கூப்பிட்டதுக்கு நன்றி.’

ரவிகுமாருக்கு ஏமாற்றமாகிவிட்டது. கவுதமி வீட்டில் மீண்டும் போன் ஒலித்தது. இந்த முறை கமல் லைனில் இருந்தார்.
‘வை டோன்ட் வீ மீட் அகெயின் கவுதமி?’

மந்திரம்போல் ஒலித்தது. கமலின் குரல். சந்தித்தார்கள். இணைந்தார்கள். வழக்கமான காஸ்ட்யூம் டிஸைனர் போஸ்ட், குடும்பத் தலைவி அந்தஸ்து இரண்டும் காலியாகவே
இருந்தது. கவுதமி பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். கவுதமி, கமலின் பெண்களுக்கும் அம்மா ஆனார். சுப்புலட்சுமி கமலை அப்பா என்று அழைத்தார்.

வேட்டையாடு விளையாடு படப்பிடிப்பு அமெரிக்காவில் நடைபெற்றது. கவுதமியும் கமலுக்காக வழக்கம்போல் மேக்-அப் சாமான்கள் வாங்கினார். கவுதமியுடனான உறவு மகிழ்ச்சியையும் மனநிறைவையும் கமலுக்கு வழங்கியது.

*

பா. தீனதயாளன் எழுதி சென்ற வருடம் வெளியாகி ஹிட் ஆன கமல் புத்தகத்திலிருந்து சில பகுதிகள்.

படங்கள் நன்றி : எஸ்.வி. ஜெயபாபு.

ஈசன் – முருகேசன்

முருகேஷ் என் நெருங்கிய நண்பன். நல்ல படைப்புத்திறன் உள்ளவன். எனக்கும் அவனுக்குமான ரசனை அலைவரிசை ஒன்றே. கல்லூரி நாள்கள் தொடங்கி இன்று வரை எங்களுக்கிடையேயான உரையாடல்களில் சினிமாவே அதிகம் இடம்பெறும். தற்போது அவன் ஹைதரபாத்தில் சாஃப்ட்வேரில் (வேண்டா வெறுப்புடன்) கல்லுடைத்துக் கொண்டிருக்கிறான். அவன் பார்த்த, அவனைக் கவர்ந்த படங்களுக்கான விமரிசனம் எழுதி எனக்கு அனுப்புவான். அவனுடைய நண்பர் வட்டத்துக்கும் அனுப்புவான். அதிலுள்ள பெரும்பாலான கருத்துகளில் எனக்கு உடன்பாடு இருக்கும். இதோ இன்றுதான் ஈசன் விமரிசனம் அனுப்பினான். நானும் ஈசன் பார்த்துவிட்டேன். அதற்கான விமரிசனத்தை நான் எழுதவில்லை. பதிலாக, நண்பன் முருகேஷின் கருத்துகளுடன் என்னுடைய சில கருத்துகளும் இணைந்த ஈசன் விமரிசனம் இதோ.

***

பார்த்துப் பார்த்து பழகிப்போன பாடாவதியான பழிவாங்கும் கதைதான். ஆனா, ‘வைக்கிறவ வச்சா ரசம் கூட திராச்சை ரசம்’ மாதிரியான கைப்பக்குவ மேட்டர்தான் ஈசனை ரசிக்க வைக்கிறது.

முக்கிய மந்திரி ஏ.எல் அழகப்பனின் (திமுகவின் ஒரு முக்கிய அமைச்சரின் மேனரிஸங்களை பிரதிபலிக்கிறார்) மகன் வைபவ் (கதாபாத்திரத்தின் பெயர் ‘செழியன்’). மந்திரிக்கே உரிய எல்லா தந்திரங்கள் கொண்ட தந்தை. மந்திரி பிள்ளைக்கே உரிய எல்லா ‘நல்ல்ல்ல’ பழக்கங்களுடன் பிள்ளை. அந்த தங்கமான புள்ள அங்கமெல்லாம் அடிவாங்கி கொலை செய்யப்படுகிறார். ஏன்? எப்படி? நடந்தது என்ன என்று விளக்குவதுதான் இரண்டாம் பாதி.

இது, அக்மார்க் அரசியல்வாதிக்கும், பொளந்து கட்டுற போலீஸுக்கும் நடக்கப் போற மோதல் கதையா? இல்லை, கோடீஸ்வரன் மகளுக்கும் கேடி மகனுக்கும் நடக்கிற காதல் கதையா? இல்லை, பண பலத்தையும் பதவி பலத்தையும் மோதவிட்டு வேடிக்கை பார்க்கிற வாடிக்கையான கதையா? ஒரு தெளிவே இல்லாமல் போகிறது திரைக்கதை, ஆனால் தெளிவான காட்சிகளுடன். சரியாகச் சொல்லவேண்டுமென்றால், இலக்கே இல்லாமல் வீசுகிற காற்று மாதிரி, எங்கே போகிறதென்று தெரியவில்லை. இருந்தும், சில்லென்றுதான் இருக்கிறது.

இரண்டாம் பாதியில், ஃப்ளாஸ்பேக் ஓப்பன் பண்ணும்போதே, விக்டிம் யாரு, கல்ப்ரிட் யாரு, இப்போது பழிவாங்குவது யார் என எல்லா விஷயங்களும் ரசிகர்களுக்கு முன்னமே தெளிவாகப் புரிந்துவிடுகிறது. சசிகுமாரும் அதில் பெரிதாக எந்த டிவிஸ்டும் வைக்க விரும்பவில்லை. இப்படித்தான் கதை போகுமெனத் தெரிந்தபின், ரசிகர்களை கட்டிப்போட்டு உட்கார வைப்பது ரொம்ப சிரமம். ஆனால், அந்த வேலையை சுலபமாகச் செய்துள்ளது சசிகுமாரின் மூளை. கேமரா ஆங்கிள், கதையோட பின்னணி, அங்கங்கே பார்க்க புதுசாக ஒரு சில காட்சிகள், நடிகை அபிநயா மேல் ரசிகர்களுக்கு இருக்கிற பிரியம், இப்படி எல்லாம் சேர்ந்து இழுவையான இரண்டாம் பாதிக்கு வலிமை சேர்க்கிறது.

அரசியல்வாதியில் ஆரம்பித்து அல்லக்கை வரைக்கும் அப்படியொரு அட்டகாசமான நடிகர் தேர்வு. ஈசன் கேரக்டர் ‘துஷ்யந்த்’, இந்த படத்துக்காகவே பிறந்த மாதிரி ஒரு அமைப்பு (‘பசங்க’ வாத்தியார் ஜெயபிரகாஷின் இரண்டாவது பையன். முதல் பையனும் இதில் நடித்திருக்கிறார், வைபவின் நண்பன் வினோத் பாத்திரத்தில்.). கொஞ்சம்கூட மீறாத மிரட்டல்.

அபிநயாவின் ஒவ்வொரு உணர்வையும் ரசிகர்களின் முகத்திலே பார்த்துவிடலாம். அவர் சிரிக்கும் போது மகிழ்ச்சியும், அழும்போது துயரமும் நம்மோடு ஒட்டிக்கொள்வதை மறுக்க முடியாது. அதுதான் அவரதும் வெற்றியும் கூட. குடிப்பது காபி இல்லை எனத் தெரிந்ததும், இயல்பாக நடிக்கிறது அவரது முகம்.

ஒரு சில காட்சிகளில் பார்வையாளர்களைக் கையைப் பிடித்து கூட்டி போகிற யுக்தி தெரிகிறது. நல்ல விஷயம்தான் என்றாலும், தேவைக்கும் அதிகமான நீளமாகத் தெரிகிறது. சுப்ரமணியபுரத்தில் சில முக்கியமான விஷயங்களைக்கூட கதாபாத்திரங்கள் பேசும் ஒருவரி டயலாக்கில் சொல்லிக் கொண்டுபோன சசிகுமார்தானா இது என்ற உறுத்தல் ஏற்படுகிறது. பல ஊர்களில் படத்தின் இரண்டாவது பாதியில் சுமார் இருபத்தைந்து நிமிடங்கள் கத்தரித்துவிட்டார்களாம். சந்தோஷம்.

ஈசனோட அறிமுகக் காட்சியில் இருக்கும் த்ரில், அமைச்சர் கேரக்டர் வழியாக கிழிக்கப்படும் நிகழ்கால திராவிட அரசியல்வாதிகளின் முகங்கள், அங்கங்கே பட்டாசாகச் சிதறுகிற காமெடி ஒன் லைனர்ஸ், பல இடங்களில் பளிச்சிடும் கூர்மையான வசனங்கள் – இன்னும் நிறைய இருக்கிறது நிறை என்று சொல்ல.
இருந்தாலும், பொழுதுபோக்குக்காக அரங்கினுள் நுழையும் ஜனரஞ்சக சினிமா ரசிகனின் பார்வையில் பார்க்கும்போது, ‘பழைய கதை, பபுள்கம் காட்சிகள், எதிர்பார்த்த ஃபிளாஸ்பாக்’ என்பதெல்லாம் பெரும் குறைகள்தாம்.

‘ராம்’ ஜீவாவுக்கும் ‘ஜித்தன்’ ரமேஷுக்கும் உள்ள சம்மந்தம்தான், ஈசனின் முதல் பாதிக்கும், இரண்டாம் பாதிக்கும். ஒரே டிக்கெட்டில் இரண்டு படம் பார்த்த மாதிரி ஓர் உணர்வு. இருந்தாலும் ஈசன், எந்த உலகப் படத்தையும் நினைவுபடுத்தவில்லை. சசிகுமாரும் தான் ஓர் உலகப் படத்தைப் படைத்துவிட்டதாக சேனல்களில் சொகுசு சோபாக்களில் அமர்ந்து மார்தட்டிக் கொள்லவில்லை. புதிய கதைக் களத்தில் ஒரிஜினலாக ஒரு படம் பார்த்த திருப்தி ஈசனில் கிடைக்கிறது.

படம் பார்க்க வந்திருந்தவர்களில் பெரும்பாலோனோர் சசிகுமாரும் நடித்திருக்கிறார் என்ற நினைப்போடு வந்து ஏமாந்துபோனார்கள். எல்லாம் டிரெய்லர் செய்த வேலை. ஒருவேளை, பாதிக்கப்பட்ட அக்காவுக்காக பழிவாங்கும் தம்பி என்பதற்குப் பதிலாக, பழிவாங்கும் அண்ணனாக சசிகுமார் நடித்திருந்தால் படம் பெரிய ஹிட் ஆகியிருக்கலாம். ஏனென்றால் நட்சத்திர வேல்யூ இல்லாத ஒரு படத்துக்கு இத்தனை பெரிய ஓப்பனிங் கிடைக்கிறதென்றால், அதற்கான ஒரே காரணம் சசிகுமார் மட்டுமே.

ஈசன் – சிற்பி கொத்தியிருக்கும் அம்மி. என் பார்வையில் சிலையாகத்தான் தெரிகிறது.

– முருகேஷ்