மயிலாப்பூரில் மார்க்கோ போலோ!

‘தன்னைத் தானே பலி கொடுக்கத் துணிந்த மாவீரன்!’

இந்தக் கோஷம் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருந்தது. அழகாக வடிவமைக்கப்பட்ட தேர், மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதில் நடுநாயகமாக ஒருவன் அமர்ந்திருந்தான். பார்த்தால் அரசன் போலவோ, முக்கிய அமைச்சர் போலவோ, வசதிமிகுந்த செல்வந்தன் போலவோ தெரியவில்லை. சாதாரணமான ஆள்தான். அவன் கையில் கத்திகளை ஏந்தியிருந்தான். பலரும் ஒன்றுகூடி அந்தத் தேரை வீதி வீதியாக இழுத்துச் சென்றார்கள். அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மார்க்கோ போலோவுக்கு அவர்கள் எழுப்பிய அந்த கோஷத்துக்கான அர்த்தம் விளங்கவில்லை. விசாரித்தார்.

அவன் ஒரு குற்றவாளி. அவனுக்கு மரண தண்டனை விதித்திருக்கிறார்கள். இங்கே மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள், இஷ்ட தெய்வத்துக்குத் தம்மைப் பலி கொடுக்குமாறு விண்ணப்பம் வைக்கலாம். அதற்கான அனுமதி கிடைத்தால், குற்றவாளியின் சொந்த பந்தங்கள் அவனை இதுபோல தேரில் வைத்து நகரம் முழுவதும் ஊர்வலம் கொண்டு செல்வார்கள். தெய்வத்துக்காக, தன்னைத் தானே பலி கொடுக்க முன்வந்த அவனை வாழ்த்தி கோஷமிடுவார்கள். அவன் கையில் பன்னிரண்டு கூரிய கத்திகள் வழங்கப்பட்டிருக்கும். தேர், பலி பீடத்துக்குச் சென்றதும் குற்றவாளியே முதலில் இரு கத்திகளால் தன் தொடைகள் இரண்டில் குத்திக் கொள்வான். வலிமிகுதியில் தெய்வத்தின் பெயரைச் சொல்லி அலறுவான். பின் உடலில் பிற பாகங்களில் மற்ற கத்திகளை இறக்க ஆரம்பிப்பான். பேரலறலோடு பன்னிரண்டாவது கத்தியை இதயத்தில் இறக்கி, இறந்து போவான்.

பின் சொந்த பந்தங்களால் அவனது உடல், தகனம் செய்ய எடுத்துச் செல்லப்படும். தகன நெருப்பில் அவனது மனைவியும் விழுந்து தன் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டும்
(சதி). அப்படி நெருப்பில் இறங்க மறுப்பவளை, எல்லோரும் திட்டுவார்கள். அடித்து உதைத்து வலுக்கட்டாயமாக நெருப்பில் தள்ளிவிட்டு விடுவார்கள். கணவனுக்காக மனைவி மட்டுமல்ல, அரசன் இறந்தால் அவருக்கு நெருக்கமான சில நூறு வீரர்களும் இதுபோல நெருப்பில் விழுந்து இறக்க வேண்டும். இவ்வாறு நெருப்புக்கு அர்ப்பணிக்கப்பட்டவர்கள், இறந்தவர்களுடைய மறுபிறப்பில் அவர்களுடனேயே பிறந்து பணிவிடை செய்வார்கள் என்பது இங்குள்ள நம்பிக்கை.

அன்றைய தமிழகத்தில் நடைமுறையில் இருந்த இதுபோன்ற சில விஷயங்களைக் கண்டு, வெலவெலத்துப் போனார் மார்க்கோ போலோ. அதே சமயம் இன்னொரு விஷயம் அவரை ஆச்சரியப்படுத்தியது. அது தமிழர்களின் சுத்தம். ‘இங்குள்ளவர்கள் தினமும் இருவேளை குளிக்கிறார்கள். குளித்த பின்பே உணவருந்துகிறார்கள். அதுவும் வலக்கையால் மட்டும். இடது கையை உடலின் மறைவு உறுப்புகளைச் சுத்தம் செய்யவும், மற்ற விரும்பத்தகாத வேலைகள் செய்ய மட்டுமே உபயோகிக்கிறார்கள். குவளைகளில் உதடுகளை வைத்து உறிஞ்சி நீரை அருந்துவதில்லை. தலைக்கு மேலே உயர்த்தி வாயினுள் ஊற்றுகிறார்கள். அந்நியர்களுக்குத் தம் குவளைகளில் நீர் கொடுக்க மறுக்கிறார்கள். பதிலாக அவர்களுடைய பாத்திரங்களிலோ, கைகளைக் குவிக்க வைத்தோ நீரை ஊற்றுகிறார்கள்.’

வெத்தலையைப் போட்டேன்டி.. புத்தி கொஞ்சம் மாறுதடி என்பதுபோல ரசித்து ரசித்து ‘தாம்பூலம்’ குறித்து எழுதி வைத்துள்ளார் மார்க்கோ போலோ. பொதுவாக அனைவருமே ஒருவகை பச்சை இலையோடு, வாசனை பொருள்கள், கற்பூரம், நீர்த்த சுண்ணாம்பு சேர்த்து மென்றபடி இருக்கிறார்கள். அது புத்துணர்வு கொடுப்பதோடு உடல் நலத்திற்கும் நன்மை செய்கிறது. அவ்வப்போது அதன் மூலம் சுரக்கும் எச்சிலைத் துப்புகிறார்கள். எதிரியை அவமானத்தப்படுத்த வேண்டுமென்றால், அந்நபரைத் தேடிச் சென்று முகத்திலேயே உமிழ்கிறார்கள். அவமானப்படுத்தப்பட்ட நபர் அரசரிடம் சென்று முறையிடலாம். அரசர், சம்பந்தப்பட்ட இருவரையும் வரவழைத்து கையில் வாள், கேடயத்தை வழங்குவார். மைதானத்தில் இருவரும் போரிட ஆரம்பிப்பார்கள். மக்கள் ஆர்ப்பரிக்க, ‘சபாஷ் சரியான போட்டி’ என்று அரசர் மகிழ, இருவரில் யாராவது ஒருவர் கொல்லப்படும்வரை சண்டை தொடரும்.

தமிழகத்தில் மார்க்கோ போலோ சுற்றிய இடங்களில் முக்கியமானது மயிலாப்பூர். இந்தியா முழுவதும் பரவியுள்ள பிராமணர்களின் பூர்விக இடம் அதுதான் என்கிறார். தோள் வழியே மார்பின் முன்பும் முதுகுக்குப் பின்பும் தொங்கும் பருமனான ஒரு பருத்தி நூலை வைத்து அவர்களை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் கண்டுகொள்ளலாம். அவர்கள் நேர்மையானவர்கள். வெளி வியாபாரிகள், புதியவர்கள் அவர்களை நம்பி பொருள்களை ஒப்படைத்தால் அதை நல்ல முறையில் வியாபாரம் செய்து முறையாக கணக்கை ஒப்படைப்பார்கள். வெளியே கிளம்பும்போது ஏதாவது விஷச் சிலந்தி கண்ணில் தென்பட்டால் அது எந்தத் திசையை நோக்கிச் செல்கிறது என்பதைப் பார்த்து அதற்கேற்ப வியாபார முடிவுகளை எடுப்பார்கள். அதேபோல வெளியே கிளம்பும் சமயத்தில் யாராவது தும்மிவிட்டால் அவ்வளவுதான். வேலையைக் கைவிட்டு மீண்டும் வீட்டுக்குள் சென்று விடுவார்கள்.

மார்க்கோ போலோ மயிலை கபாலீஸ்வரரைத் தரிசித்தாரா, தெப்பக்குளத்தில் முதுகு தேய்த்துக் குளித்தாரா, கற்பகாம்பாள் மெஸ்ஸில் மெதுவடை சாப்பிட்டாரா என்றெல்லாம் தெரியவில்லை. அப்படியே மயிலையிலிருந்து பொடிநடையாக சாந்தோம் புனித தாமஸ் தேவாலயத்துக்குச் சென்றிருக்கிறார் என்பது மட்டும் அவரது குறிப்புகளில் இருந்து தெரிகிறது.

தாமஸ், இந்துக்களால் கொல்லப்பட்டார், எதிரிகளால் கொல்லப்பட்டார் என்று ஏகப்பட்ட சர்ச்சைகள் உண்டு. ஆனால் மார்க்கோ போலோ, அதுகுறித்த வேறொரு தகவலை எழுதி வைத்துள்ளார். இயேசுவின் பன்னிரண்டு சீடர்களுள் ஒருவரான தாமஸ், கி.பி. 72 சமயத்தில் சென்னை, சின்ன மலை (Little Mount) பகுதிக்கு வந்துள்ளார். அங்கே மயில்கள் அதிகம். கௌவி என்ற பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒருவன், மயிலை வேட்டையாட ஈட்டி ஒன்றை எறிய, அது தாமஸைத் தாக்கியது. அவர் ஆண்டவருக்கு நன்றி சொன்னபடியே இறந்தார். அவரது உடல் மயிலையில்தான் அடக்கம் செய்யப்பட்டது. பத்தாம் நூற்றாண்டில் அந்த இடத்தில் சிறிய ஆலயம் ஒன்று கட்டப்பட்டது.

அந்த ஆலயத்தில் புனித தாமஸின் கல்லறையைத் தரிசித்ததாக மார்க்கோ போலோ குறிப்பிட்டுள்ளார். அது கி.பி. 1292 சமயத்தில் இருந்திருக்கலாம். (பின் பதினாறாம் நூற்றாண்டில் போர்ச்சுக்கீசியர்கள் அங்கே பெரிய ஆலயத்தை எழுப்பியுள்ளனர். காலப்போக்கில் அது சிதைந்து போனது. தற்போதுள்ள சாந்தோம் தேவாலயம், 1893ல் பிரிட்டிஷாரால் கட்ட ஆரம்பிக்கப்பட்டது என்பதெல்லாம் உபரி விஷயங்கள்.)

கிறித்துவர்களும் இஸ்லாமியர்களும், புனித தாமஸ் கொல்லப்பட்ட தலத்திற்குப் பாதயாத்திரையாக வருவதை மார்க்கோ போலோ கண்டார். செந்நிறமாக அங்கே காணப்படும் மண்ணை பயபக்தியுடன் அள்ளிக் கொண்டு சென்றார்கள். எதற்கு என்று விசாரித்தார். ‘நோய்வாய்ப்பட்டவர்களுக்கு இந்த மண்ணை நீரில் கலந்து கொடுத்தால் அவர்களுடைய நோயெல்லாம் குணமாகிவிடும்.’

தமிழகத்திலேயே மர்பிலி என்ற மலைப்பிரதேச மக்களுடைய ‘வைர வேட்டை’ குறித்து மார்க்கோ சொல்லியுள்ள தகவல்கள் விநோதமானவை. செங்குத்தான பாறைகளும், ஆழமான பள்ளத்தாக்குகளும் கொண்ட இந்தப் பிரதேசத்தில் வைரங்கள் செழித்துக் கிடக்கின்றன. ஆனால் அங்கே மனிதனால் செல்ல முடியாது. விஷப் பாம்புகளும் அதிகம். அவற்றை வேட்டையாடவே கழுகுகளும் பருந்துகளும் நிறைந்துள்ளன. இந்தச் சூழலிலும் அந்தப் பறவைகள் மூலமாகவே வைர வேட்டை நடத்தப்படுகிறது. எப்படி?

வைர வேட்டைக்காரர்கள், உயரமான இடங்களில் நின்று கொண்டு, வைரங்கள் கிடக்கும் பள்ளத்தாக்குகளில் இறைச்சித் துண்டுகளை எறிகிறார்கள். கழுகுகளும் பருந்துகளும் அந்தத் துண்டுகளை எடுத்துக் கொண்டு உயரமான இடங்களுக்கு வருகின்றன. பின் வேட்டைக்காரர்கள் பறவைகளை விரட்டிவிட்டு, அந்த இறைச்சித் துண்டுகளைக் கைப்பற்றுகிறார்கள். அதில் வைரங்கள் ஒட்டியிருக்கும். பறவைகள் இறைச்சித் துண்டுகளைச் சாப்பிட்டுவிடும் பட்சத்தில், அவை எச்சமிடுவதற்காகக் காத்திருக்கிறார்கள். அவை வைரம் நிறைந்த கழிவுகள். நம்பவே முடியாத இந்த ‘வைர வேட்டை’ நிகழ்ந்த இடமான மர்பிலி பிரதேசம் எங்கே இருக்கிறது என்பது குறித்த குழப்பங்கள் இன்றும் உள்ளன.

பழைய காயல். இன்றைய தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஒரு ஊர். அங்கே சென்ற மார்க்கோ போலோ, காயல் என்ற பெயரில் அதைக் குறிப்பிட்டுள்ளார். ‘மாபரின் (தமிழகம்) மிக முக்கியமான துறைமுக, வணிக நகரம் இது. ஏடன், அரேபிய நாடுகளிலிருந்து இங்கே வரும் கப்பல்கள் மூலமாக குதிரைகளும் பிற பொருள்களும் இறக்குமதி செய்யப்படுகின்றன. வெளி தேசங்களிலிருந்து இந்தியாவுக்கு வரும் கப்பல்கள் அனைத்துமே காயலுக்கு வராமல் சென்றதில்லை.’

(மார்க்கோ போலோவின் பயணக் குறிப்புகளில் இருந்து)

 

வாகை சூட வா – விமரிசனம்

செங்கலோடு செங்கலாக சூளையில் வெந்து கொண்டிருக்கும் பாவப்பட்ட மக்களின் அறிவுக் கண்களை, கல்விக் கண்களைத் திறக்கப் போராடும் ஓர் இளைஞனின் கதையை செஃபியா டோனில் செதுக்கியிருக்கும் அற்புதப் படைப்பு.

கிராமத்துக்குச் சென்று பாடம் சொல்லிக் கொடுப்பதன் மூலம் கிடைக்கும் சர்டிபிகேட்டை வைத்து ‘சர்க்கார்’ வேலை வாங்கிவிடலாம் என்ற நிர்பந்தத்தால் ‘கண்டெடுத்தான்காடு’ கிராமத்துக்குள் வாத்தியாராக நுழைகிறார் விமல். அந்த அப்பாவி மக்கள், சூளை முதலாளியிடம் (பொன்வண்ணன்) வாங்கிய கடனுக்காக அடிமைப்பட்டு, அவரைக் கடவுளாக நினைத்துக்கொண்டு காலமெல்லாம் பிள்ளை குட்டிகளோடு கல் அறுத்துக் கொண்டிருக்கும் அவலத்தைப் பார்க்கிறார். அவர்கள் ஏமாற்றப்படுவதை ப் பெரும்பாடுபட்டு உணர வைக்கிறார். குழந்தைகளைக் கல்வியின் பக்கம் இழுக்கிறார். அதனால் ஏற்படும் விளைவுகளும் திருப்பங்களும், அந்த மக்களின் வாழ்க்கையில் மலர்ச்சியை உருவாக்குவதுதான் கதை.

கண்டெடுத்தான்காடு சூளையின் சூட்டை, ஏசி தியேட்டரின் ரசிகனும் உணருமளவுக்கு இயல்பான திரைப்படத்தைத் தந்த இயக்குநர் சற்குணத்தை காலத்துக்கும் பாராட்டலாம். களவாணியில் கிடைத்த வெற்றியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக இரண்டாவது படத்தில் கமர்ஷியலாக இறங்காமல், குழந்தைத் தொழிலாளர்கள் மேல் அக்கறை கொண்டு படம் எடுத்ததற்காக அவருக்கு ஓராயிரம் பூங்கொத்து. பாரதிராஜாவைப் போல, கிராமத்துக் காவியங்களைப் படைக்க கோலிவுட்டுக்கு இன்னொரு இயக்குநர் கிடைத்துவிட்டார்.

‘விவரங்கெட்டவர்’ என வெள்ளந்தி மக்களிடமே பெயரெடுக்கும் அச்சுபிச்சு வாத்தியார் கதாபாத்திரத்தில் பிசகின்றிப் பொருந்துகிறார் விமல். தன்னிடம் குறும்பு செய்யும் சிறுவர்களிடம் மாட்டிக் கொண்டு விழிப்பது, ஆடு துரத்த பயந்து ஓடுவது, கதாநாயகியிடம் சாப்பாட்டுக்கு காசு கொடுத்துவிட்டு ஏமாந்து தவிப்பது என எந்தவித ஹூரோயிஸமும் இல்லாத கேரக்டர். உடல்மொழியில் ஜெமினியை நினைவுபடுத்துகிறார். டயலாக் டெலிவரியிலும் வெரைட்டி காட்டினால் அடுத்தடுத்த உயரங்களுக்குச் செல்லலாம்.

அழகைக் குறைக்கும் ஒப்பனையிலும் அழகழகான பாவனைகளால் அம்சமாகக் கண்களில் நிறைகிறார் அறிமுக நாயகி இனியா. சோறு கொடுக்காமல் விமலைச் சுற்ற விட்டு, பின் காதல்கொண்டு விமலையே சுற்றிச் சுற்றி வரும் கிராமத்துக் குறும்புப்பெண் பாத்திரத்தில் அசத்தியிருக்கிறார். விருதுகள் நிச்சயம்.

கதாநாயகனின் அப்பாவாக வெகுசில காட்சிகளில் வந்து போனாலும் பாக்யராஜுக்கு நினைவில் நிற்கும் பாத்திரம். குருவிக்காரர், டூநாலெட்டு, வைத்தியர் என சின்னச் சின்ன கேரக்டர்களிலும் அத்தனை இயல்பு. இவர்கள் எல்லோருக்கும் மேலே போட்டியே இன்றி முதலிடம் பெறுபவர்கள் படத்தில் வாழ்ந்துள்ள சிறுவர்கள்தாம்.

1966ன் கிராமம் அச்சு அசலாகத் திரையில் விரிகிறது. களிமண் காடு, பனையேறும் மீன், அழுக்கு மக்கள், அகண்ட ஆகாயம், மின்சாரமறியாத இரவு, பாடல் காட்சிகள் என கேமராமேன் ஓம்பிரகாஷ் ரசித்து ரசித்துப் படமாக்கியிருக்கிறார். ரேடியோ, ஷேவிங் கத்தி, பவுடர் டப்பா, பாத்திர பண்டங்கள், தூண்டில், டப்பா பஸ் என ஒவ்வொரு விஷயத்தையும் உருவாக்கிய கலை இயக்குநர் சீனுவுக்கு இது முதல் படமாம். அசத்தல்.

‘செங்கசூளைக்காரா…’ என்ற ஆரம்பப் பாடலிலேயே தனித்துத் தெரிகிறார் அறிமுக இசையமைப்பாளர் ஜிப்ரான். எந்தப் பாடலும் சோடைபோகவில்லை. ‘போறானே’, ‘சாரக்காத்து’ பாடல்கள் எல்லாம் ‘என்றும் இனியவை’ பட்டியலில் இடம்பிடிக்கின்றன.

ப்ளாக் அண்ட் ஒயிட் பழைய பாடல்களை சூழ்நிலைக்கேற்ப பயன்படுத்தியிருப்பது ரசனை. ‘நான் பேச நினைப்பதெல்லாம்…’  – காதல் தூதுப் பாடலாகியிருப்பது கவிதை. சுட்டுவைக்கப்பட்டிருக்கும் செங்கல்களுக்கிடையில் ஒரே ஒரு செங்கலில் மட்டும் ‘அ’ எழுதப்பட்டிருப்பதைப் பார்க்கும்போது சிலிர்ப்பு. எந்தக் காட்சிகளும் ‘க்ளிஷே’வாக இல்லாமலிருப்பது பெரிய ப்ளஸ். ஆனால் சற்றே வேகம் குறைவான திரைக்கதையின் போக்கு மட்டும் மைனஸ். குழந்தைகளின் படிப்பறிவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ‘பளீர்’ காட்சிகள் இல்லையென்பது ஏமாற்றம்.

இருந்தாலும் ஆயிரம் கருப்பு வெள்ளை சினிமாக்கள் செய்யாத தமிழர்களின் கலாசாரப் பதிவை இந்த ஒற்றைப் படம் அருமையாகச் செய்திருக்கிறது. சென்ற நூற்றாண்டில் தமிழ் கிராமங்கள் இப்படித்தான் இருந்தன என்று காட்சிப்படுத்தும் செல்லுலாய்ட் ஆவணம் இனி இதுவே. கமர்ஷியலாக ‘வாகை சூடா விட்டாலும்’, நல்ல திரைப்படம் என்ற வகையில் ரசிகர்களின் மனத்தில் நீங்காத இடம் பிடித்துவிட்டது.