இன்னிக்கு தீபாவளியா? பொங்கலா?

…என்று நினைக்குமளவுக்கு அத்தனை படங்கள் ரீலிஸ் ஆகின்றன. எனக்கு தெரிந்து ஐந்து. தமிழ்ப் படம், கோவா, ஜக்குபாய் (தியேட்டர் ரிலீஸ்), கதை, தைரியம். பொங்கல் படங்கள் வந்து இரண்டே வாரங்களே ஆன நிலையில், புது படங்களுக்குப் போதுமான தியேட்டர் இல்லாத நிலை. படங்களை இரண்டாவது ரவுண்ட் ரிலீஸ் செய்யும் சைதை ஸ்ரீநிவாசா தியேட்டரில்  இன்று ‘தைரியம்’ ரிலீஸ் ஆகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

தமிழ் படம் ஆக விளம்பரம் செய்யப்பட்டு, ஐந்து நாள்களுக்கு முன்பு தமிழ்ப் படம் ஆக மாறிய லொள்ளு சினிமாவைத்தான் முதலில் பார்க்க வேண்டும் நினைத்திருந்தேன். இன்றிலிருந்து மூன்று நாள்களுக்கு எங்கும் டிக்கெட் இல்லை. டிக்கெட் கிடைக்கும் என்பதற்காக அம்பத்தூர் மினிராக்கிக்கோ, ஈசிஆர் மாயாஜாலுக்கோ போக முடியாதே.

ஆன்லைனில் கோவா டிக்கெட்டுகளும் காலி. ஜக்குபாய் தியேட்டர்கள் அனைவரையும் இரு கரம் கூப்பி வரவேற்கின்றன. இன்றைக்குள் தெரிந்துவிடும், எவையெல்லாம் பிழைக்கும் என்று.

சரக்கு இல்லாத படங்கள், தியேட்டரை விட்டு துரத்தப்பட்டுவிடும் என்றே தோன்றுகிறது. ஏனென்றால் அடுத்தடுத்த வாரங்களில் ஏராளமான புதிய, பெரிய படங்கள் ரிலீஸுக்கு தயாராக நிற்கின்றன (அசல், பையா, விண்ணைத் தாண்டி வருவாயா). ‘வேட்டை ஆரம்பாயிருச்சு டோய்’ என்று தொடை தட்டிக்கொண்டு நீண்ட நாள்கள் மொக்கை போட முடியாது. வேட்டையாடிய வரைக்கும் போதும் என்று கிளம்ப வேண்டியதுதான். பார்க்கலாம், எத்தனை தேறும் என்று.

‘நெகட்டிவ் மார்கெட்டிங்’ – கடந்த இரண்டு படங்களைப் போல, தனது மூன்றாவது படத்துக்கும் வெங்கட் பிரபு அதே உத்தியைத்தான் பயன்படுத்துகிறார். அதாவது படத்தை, படத்தோடு தொடர்புடையவர்களை மட்டம் தட்டிப் பேசியே கவனம் ஈர்ப்பது. கோவாவுக்கும் அந்த உத்தி கைகொடுக்கிறதா என்று பார்ப்போம். கோவா, Hangover படத்தின் காப்பியாக இருக்குமோ என்று ட்விட்டரில் வள்ளிதாசன் சந்தேகம் எழுப்பியிருந்தார். எனக்கும் அப்படியொரு சந்தேகம் உண்டு.

தமிழ்ப் படம் குழுவினரும் சேனல்களில் அதே நெகட்டிவ் மார்கெட்டிங் உத்தியைத்தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். பாவம், ஜக்குபாய் குழுவினர். சன் டீவியில் கே.எஸ். ரவிக்குமார், சரத்குமார், ராதிகா மூவரும் படம் பற்றி பாசிட்டிவாக பேச முயற்சி செய்தார்கள். விரக்தியில் அவர்களையும் மீறி நெகட்டிவ் வார்த்தைகளே அதிகம் தென்பட்டன.

*

பொங்கல் ரிலீஸில் இரண்டு படங்கள் பார்த்தேன். முதலில் நாணயம். தூத்துக்குடியில் பார்த்தேன். படம் ரிலீஸ் ஆன இரண்டாவது நாள். காலைக் காட்சி. சூரிய கிரகணத்துக்கு பயந்து தியேட்டரில் சுமார் ஐம்பது பேர் மட்டும். டிக்கெட் விஷயத்தில் தூத்துக்குடி இன்னும் திருந்தவில்லை. என் பள்ளி நாள்களில் கௌண்டரில் பதினைந்து ரூபாய் கொடுத்துவிட்டு, கையில் 65 பைசாவுக்கு டிக்கெட் வாங்கியதாக ஞாபகம். இப்போது ஐம்பது ரூபாய் கொடுத்தேன். 14 ரூபாய்க்கு டிக்கெட் கொடுத்தார்கள். வளர்ச்சி இருக்கிறது.

படத்தின் விமரிசனம் எழுதவெல்லாம் தோன்றவில்லை. படம் போரடிக்கவில்லை. அதேசமயம் நினைத்து வியக்குமளவுக்கு காட்சி, ஒன்றுகூட படத்திலில்லை. வழக்கம்போல, பிரசன்னா ஸ்கோர் செய்திருக்கிறார். சிபி ம்ஹூம். ஹீரோ இமேஜையும் கெடுத்துக் கொண்டு, வில்லனாகவும் சோபிக்க முடியாமல்… பாவம். சத்யராஜ் போலவே நடிப்பதற்கு அவர் போதுமே, அவர் வாரிசு தேவையில்லையே.

நான் பார்த்த இன்னொரு படம் ஆயிரத்தில் ஒருவன். சோனியா அகர்வால் சத்தியமாக நான் அதற்கு விமரிசனம் எழுதப்போவதில்லை. ஆயிரத்தில் ஒருவன் பார்த்தேன் என்றுகூட சொல்ல முடியாது. எழுநூற்று ஐம்பதில் ஒருவன்தான் பார்த்தேன். படம் ஆரம்பித்து 20 நிமிடங்கள் தாமதமாகத்தான் தியேட்டருக்குச் சென்றேன். படத்தில் 25 நிமிடங்களுக்கு மேல் கத்தரி போட்டுவிட்டார்கள் போல. எனவே எனக்கு படம் மிக சீக்கிரம் முடிந்ததுபோல தோன்றியது.

ரீமா சென், தனது பாண்டிய குல ப்ளாஷ்பேக்கைச் சொல்லும்போது பாண்டிய குல மன்னனாக காட்டப்படும் புகைப்படம் (இதுவாகத்தான் இருக்கும் என்று நம்புகிறேன்.) ஒரு நொடியே வந்ததினால் எனக்கு சட்டென மனத்தில் பதியவில்லை. ஆனால் அதிர்ச்சியாக இருந்தது.

புகைப்படத்தில் இருப்பவர் யார்? ஆண்ட்ரியா சத்தியமாக, பாண்டிய குல மன்னன் அல்ல. ரேவா (மத்திய பிரதேசம்) சமஸ்தான மகாராஜா. 1854 முதல் 1880 வரை அதை ஆண்டவர். பெயர் ரகுராஜ் சிங். சிப்பாய் கலகத்தில் பிரிட்டிஷாருக்கு உதவியதன் மூலம் சில பிரதேசங்களை வெகுமதியாக பெற்றுக் கொண்டவர். மீன் கொடிக்கும் அவருக்கும் சம்பந்தமில்லை. ராஜபுத்திரர். இவரது முன்னோர்கள் சாளுக்கிய வம்சத்தைச் சேர்ந்தவர்கள். அவரது புகைப்படத்தோடு காட்டப்பட்ட மற்ற ‘பாண்டிய’ புகைப்படங்களையும் முன்பே பார்த்திருக்கிறேன். மனத்தில் நிற்கவில்லை. அவர்களும் பாண்டியர்களாக இருக்க வாய்ப்பே இல்லை. ஒரு நல்ல ஓவியரை வைத்து, கற்பனையாக ஓவியங்களை வரைந்து காட்டியிருக்கலாம்.

வாழ்க, செல்வராகவனின் வரலாற்றுத் தொண்டு.

சரித்திரத்தின் அஞ்சறைப் பெட்டி!

‘மாமா, நீங்க ஏன் சாஃப்ட்வேர்ல வேலை பார்க்கல?’ – சில நாள்களுக்கு முன் எனது அக்காவின் ஏழு வயது மகள் கேட்டாள். ‘கெமிஸ்ட்ரி, இன்ஃபர்மேஷன் டெக்னாலஜின்னு படிச்சதுக்கு பதிலா, நீ ஹிஸ்டரி எடுத்துப் படிச்சிருக்கலாம்.’ எனக்கு நெருக்கமானவர்கள் என்னிடம் அடிக்கடி சொல்வது இது.

சில சமயங்களில் நான் யோசித்துப் பார்த்திருக்கிறேன். ஏன் எனக்கு வரலாற்றின் மீது ஆர்வம் வந்தது? பள்ளி நாள்களில் வரலாறை விரும்பிப் படித்திருக்கிறேனா?

நிச்சயமாக இல்லை. அதை ஒரு பாடமாக மட்டுமே நினைத்துப் படித்திருக்கிறேன். சொல்லப்போனால் கொட்டாவி விட வைக்கும் அல்லது மனனம் செய்யும் மனநிலைக்குத் தள்ளும் பள்ளி வரலாற்று நூல்கள்மீது என்னையறியாமலேயே எனக்குள் வெறுப்புதான் வளர்ந்து வந்திருக்கிறது.

பிற மொழிகளில் ஏராளமான வரலாற்று புத்தகங்கள் இருக்கின்றன. தமிழில்? அதுவும் ரசிக்கத் தகுந்த நடையில்? மிக மிக மிகக் குறைவே. எல்லோரும் விரும்பி படிக்கும் வகையில் சுவாரசியமான வரலாற்றுப் புத்தகங்களை எழுத வேண்டும் என்ற எனது இன்றைய நோக்கத்துக்கு காரணம், இவைதான்.

ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம் – கதைகள் சிறுவயதில் கேட்டதுண்டு, படித்ததுண்டு. பட்டுடையில், படோடோப நகைகளோடு தலையில் கீரிடம் கவிழ்த்த ராஜாக்களை நாடகங்களில், திரைப்படங்களில் கண்டதுண்டு. ‘மனசுல பெரிய மைசூரு மகாராசான்னு நினைப்பு’ – யாரோ யாரையோ திட்டுவதை ரசித்ததுண்டு. சரி, உண்மையில் நம் மகாராஜாக்கள் எப்படி இருந்தார்கள்? எந்த மாதிரி வாழ்ந்தார்கள்? ‘யாரங்கே?’, ‘மாதம் மும்மாரி பொழிந்ததா?’ என்று நிஜமாகவே வசனம் பேசினார்களா? மாறுவேடமணிந்து இரவில் நகர்வலம் வந்தார்களா? குதிரைகள் பூட்டிய ரதத்தில் ராணிகளோடு டூயட் பாடிக்கொண்டு சென்றார்களா? அவர்கள் வேங்கையை வீழ்த்திய வீரர்களா அல்லது வெத்துவேட்டு கோமாளிகளா?

நிஜத்தை அறிந்துகொள்ள இந்தியாவிலிருந்த சமஸ்தானங்களை ஆண்ட மகாராஜாக்கள் குறித்த விஷயங்களைத் தேட ஆரம்பித்தேன். படிக்க ஆரம்பித்தேன். லயித்துப் போனேன். இதைவிட சுவாரசியமான வரலாறு வேறெதுவுமே கிடையாது என்று தோன்றியது. மகாராஜாக்கள் குறித்த புத்தகம் ஒன்றை எழுதிவிட வேண்டுமென்று நினைத்தேன். அதைத் தொடராகவே எழுதும் வாய்ப்பு குமுதம் ரிப்போர்ட்டரில் அமைந்தது.

தொடருக்கு ‘அகம் புறம் அந்தப்புரம்’ என்ற பொருத்தமான தலைப்பை வழங்கிய நண்பர் பாலு சத்யாவுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது எனது முதல் சரித்திரத் தொடர். எப்படியும் ஐம்பது அத்தியாயங்கள் எழுதிவிட முடியும் என்ற நம்பினேன். ஆரம்பித்த சில வாரங்களிலேயே நூறு அத்தியாயங்கள் தாராளமாக எழுதலாம் என்று தெரிந்தது. வாசகர்களின் ஏகோபித்த வரவேற்பு என் நம்பிக்கையை பிரகாசமாக்கியது. எனது தேடல் அதிகமானது. படிக்கப் படிக்கத் தீராத விஷயங்கள். நான் குதித்திருப்பது சமுத்திரத்தில் என்று உணர்ந்துகொண்டேன்.

மகாராஜாக்கள் என மனத்துக்கு நெருக்கமானவர்களாகிப் போனார்கள். இரண்டு வருடங்கள். வாரம் இரண்டு அத்தியாயங்கள். ஒரு தவம் போலத்தான் செய்தேன்.

மகாராஜாக்களிடம் பிரிட்டிஷார் எப்படி நடந்துகொண்டார்கள்? சமஸ்தானங்களின் அரசியல் நடவடிக்கையில் ஐரோப்பியர்களின் ஆதிக்கம் எவ்வளவு அழுத்தமாக இருந்தது? அன்றைய சமூகத்தில் எப்படிப்பட்ட ஏற்றத்தாழ்வுகள் இருந்தன? அந்தப்புரத்தின் மயக்கத்தினால் சீரழிந்த மகாராஜாக்கள் யார் யார்? அந்தப்புரத்தில் கவனம் செலுத்தாமல் தன் சமஸ்தான மக்களின் வீட்டில் அடுப்பு எரிகிறதா என்று நிஜமாகவே கவலைப்பட்ட மகாராஜாக்கள் இருந்திருக்கிறார்களா? சமஸ்தானங்களில் வரலாறோடும் மகாராஜாக்களின் வாழ்க்கையோடும் நிறுத்திக் கொள்ளாமல் அப்படியே அவற்றோடு தொடர்புடைய பல விஷயங்களையும் பதிவுசெய்ய ஆரம்பித்தேன்.

மகாராஜாக்களின் வெளிநாட்டுப் பயணங்கள் எப்படி இருந்தன என்று எழுதும்போது அவர்கள் அப்போது சென்ற இடங்கள் குறித்த வரலாற்றையும் சிறிய அளவில் பதிய முடிந்தது. மகாராஜா போலோ, கிரிக்கெட் விளையாடுவாரா? சரி, இந்தியாவுக்குள் போலோவும் கிரிக்கெட்டும் எப்போது, எப்படி வந்தது, எந்த சமஸ்தானங்களிலெல்லாம் போலோ அணி இருந்தது, எந்த மகாராஜாக்களெல்லாம் கிரிக்கெட் வீரர்கள் போன்ற விஷயங்களையும் தொகுத்துத் தர முடிந்தது. மகாராஜா, வேட்டையாடுவதற்கென்றே காட்டுக்குள் அரண்மனை கட்டினாரா? சரி, எப்படி வேட்டையானார்கள், எவ்வளவு வேட்டையாடினார்கள், யாராவது வேட்டையாடுவதைத் தடுக்க விரும்பினார்களா – என்பன போன்ற தகவல்களை அளிக்க முடிந்தது. இப்படி எத்தனையோ உப வரலாறுகளைச் சேர்த்து மொத்தமாகப் பார்க்கும்போது, ‘சரித்திரத்தின் அஞ்சறைப் பெட்டி’ ஒன்றை உருவாக்கிக் கொடுத்த திருப்தி.

நிறைவு அத்தியாயம் வெளிவந்ததும், ‘ஏன் அதற்குள் நிறுத்தி விட்டீர்கள்?’ என்று என்னை உரிமையோடு கோபித்துக் கொண்ட வாசகர்களுக்கு நான் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறேன்.

இனி இவர்களுக்கு என் நன்றிகள். குமுதம் ரிப்போர்ட்டரில் எனக்காக இடம் ஒதுக்கிக் கொடுத்த ஆசிரியர் இளங்கோவன் அவர்களுக்கு. தொடருக்காக என்னைப் பல்வேறு விதங்களில் ஊக்கப்படுத்திய என் ஆசிரியர் பா. ராகவனுக்கு. பிரம்மாண்டமாக இந்தப் புத்தகத்தைப் பதிப்பித்துள்ள பதிப்பாளர் பத்ரிக்கு.

தொடருக்கான அறிவிப்பு விளம்பரம் முதல், இந்தப் புத்தகம் வரை நயத்தோடு வடிவமைத்துக் கொடுத்த நண்பர் குமரனுக்கு. புத்தக ஆக்கத்தில் உற்சாகமாக ஒத்துழைத்த கதிர், முத்துகணேசன், ஆனந்துக்கு. ரிப்போர்ட்டரில் வெளிவருவதற்கு முன்பாகவே என்னிடமிருந்து அத்தியாயங்களை வாங்கிப் படித்து கருத்துகள் சொல்லிய நண்பர்கள் உமா சம்பத், பாலுசத்யா, ஜானகிராமனுக்கு. அடிக்கடி தொலைபேசியில் வாழ்த்திய ஆடிட்டர் ரவிகுமாருக்கு. மற்றும் இந்தத் தொடரை வாசித்த முகமறியாத வாசகர்களுக்கு.

ரிப்போர்ட்டரில் வெளிவந்த அத்தியாயங்களின் சற்றே மேம்படுத்தப்பட்ட வடிவம் இந்த நூல். அடுத்தடுத்த தலைமுறைகளுக்காக, தமிழில் ஒரு முக்கியமான பதிவைக் கொடுத்துவிட்டேன் என்று நினைக்கும்போது மனநிறைவு. ஆனால் இன்னமும் பதிவு செய்யப்படாத வரலாறுகளை நினைக்கும்போது… காலமும் சூழலும் அமையுமென நம்புகிறேன்.

சென்னை புத்தகக் கண்காட்சியில் அகம் – புறம் – அந்தப்புரத்தோடு சந்திக்கிறேன்.

பக்கங்கள் : 1392. விலை ரூ. 750.

ஆஹா – முகலாயர்கள்!

முகலாயர்கள். இந்த வருடத்தில் வெளியாகவிருக்கும் என்னுடைய புத்தகங்களில் ஒன்று.

முகலாயர்களுக்கு முந்தைய டெல்லி சுல்தான்களின் ஆட்சியிலிருந்து இரண்டாம் பகதூர் ஷா ரங்கூனில் இறந்துபோனது வரை இந்தப் புத்தகத்தில் எழுதியுள்ளேன். மொத்தம் 330 ஆண்டு வரலாறு. வரும் வாரத்தில் புத்தகம் வெளிவந்துவிடும் என்று நினைக்கிறேன். 500 பக்கங்கள் கொண்ட புத்தகம் – விலை ரூ. 250.

முகலாயர்கள் குறித்த நான் பேசிய நிகழ்ச்சி, நாளை ஆஹா 91.9 பண்பலையில் பகல் 12.00 முதல் 1.00 வரை ஒலிபரப்பாகவிருக்கிறது. கேட்டு கருத்துகளைச் சொல்லுங்கள்.

வாழ்த்துகள்

நண்பர்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துகள்.

உங்கள் வெளியூர் பயணங்கள் இனிதாகுக!

அக்டோபர் 18, ஞாயிறு கிழக்கு பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் நண்பர் பா. தீனதயாளனோடு நானும் பேசுகிறேன். சாண்டோ சின்னப்பா தேவர், எம்.ஆர். ராதா இருவரது வாழ்க்கை குறித்த நிகழ்ச்சி. சென்னையில் இருப்பவர்கள் கேட்டுவிட்டு கருத்துகளைச் சொல்லுங்கள்.

விரைவில்….

அந்த காலத்து ஐஸ்வர்யா ராய்!

‘போலோ மேட்சுக்காக ஜெய்ப்பூர் மகாராஜா கல்கத்தா வர்றார். உட்லேண்ட்ஸ் ஹோட்டல்ல இடமில்லை. நம்ம மாளிகைல, உங்க அறையிலதான் தங்கப்போறார். அதனால நீங்க அறையைக் காலி பண்ணிக்கொடுத்துடுங்க. சரியா?’ – கூச்பிகார் மகாராணி இந்திரா சொல்லிவிட்டுப் போனாள். பன்னிரண்டு வயது இளவரசி காயத்ரி தேவிக்கு தன் அறையை விட்டுக் கொடுப்பதில் பூரண சம்மதமில்லை. அம்மா சொல்லிவிட்டாள். வேறு வழியில்லை. போலோ விளையாட்டில் ஜெய் கில்லாடி என்பதை பத்திரிகைச் செய்திகளில் படித்திருந்தாள். பேரழகர் என்றும் கேள்விப்பட்டிருந்தாள். ஆகவே அவரது வருகையை எதிர்நோக்கினாள் (1931).

ஜெய் வந்தார். கூச் பிகார் இளவரசர்களோடு கூடிக் குலாவினார். இளவரசிகளையும் நேர்பார்வையில் நோட்டமிட்டுக் கொண்டார். ‘ஆளு அழகாத்தான் இருக்காருடி’ – இளவரசிகள் கிசுகிசுத்துக் கொண்டார்கள். ‘அவருக்குக் கல்யாணமாயிருச்சு தெரியுமா?’

ஜெய்யுடன் காயத்ரி
ஜெய் உடன் காயத்ரி

‘தெரியும்டி. மிக்கின்னு ஒரு பொண்ணும், பபிள்ஸ்னு ஒரு பையனும்கூட இருக்காங்க. ஆனா இவரைப் பார்த்தா அப்படியா தெரியுது?’ பருவத்தின் வாசலில் நின்று கொண்டிருந்த காயத்ரிக்கு ஜெய்யின் மீது ஒருவித ஈர்ப்பு வந்திருந்தது. மேட்ச் எல்லாம் முடிந்து ஜெய் கிளம்பிச் சென்றிருந்தார். ஆனாலும் அடிக்கடி வந்துகொண்டிருந்தார், காயத்ரியின் நினைவில்.

அடுத்த ஆண்டும் கல்கத்தாவுக்கு வந்தார், போலாவுக்காக. அப்போதுதான் அவருக்கு இரண்டாம் கல்யாணம் நடந்திருந்தது. ‘அவரோட புது மனைவி போட்டோவை அனுப்பச் சொல்லேன்’ – தனது அம்மாவிடம் நச்சரித்தாள் காயத்ரி. இந்திராவும் ஜெய்யிடம் கேட்டாள். சரியென்று சொல்லிய அவர், அனுப்பவில்லை.

இந்திரா, குடும்பத்தோடு அவ்வப்போது பரோடாவுக்குச் செல்வாள். தாய் வீட்டுக்கு. அந்தமுறை, ‘போகும் வழியில் ஜெய்ப்பூருக்குச் செல்லலாம்’ என்றாள். காயத்ரியின் மனத்துக்குள் இனம்புரியாத சந்தோஷம். ஜெய்ப்பூரின் அரண்மனை அழகை ரசித்தாள், அவளையறியாமலேயே ஜெய்யையும். அந்தப்புரம் சென்று அவரது மனைவிகளைச் சந்தித்தாள். குழந்தைகளோடு விளையாடினாள்.

‘நான் காயத்ரியை வெளியில் அழைத்துக் கொண்டு போகிறேன்’ – ஜெய், திடீரென இப்படிக் கேட்டதும் அவளுக்குள் பரவச ஊற்று. மகாராஜா கேட்டு மறுப்பது நாகரிகமில்லையே. இந்திரா சம்மதித்தாள். ஜெய்யோடு காரில் சென்ற நிமிடங்களில் பறப்பதுபோல உணர்ந்தாள் காயத்ரி.

‘நீ கார் ஓட்டுகிறாயா?’

ஓட்டினாள். ஜெய் உதவி செய்தார். வெட்கமும் புன்னகையும் ஸ்பரிசங்களும் கலந்த நொடிகள். அரண்மனைக்குத் திரும்பினார்கள். ‘உங்க பொண்ணு நல்லாத்தான் ஓட்டுறா. ஆனா வண்டி ஓட்டத் தெரிஞ்சவங்க சொல்றதைத்தான் கேக்குறதில்ல’ – ஜெய், இந்திராவிடம் சொல்லிவிட்டு நகர்ந்தார். இந்திரா, காயத்ரியைப் பார்த்தாள். ‘நான் அவர் சொல்றபடிதான் ஓட்டினேன். ஆனா அவர்தான் ஒரு நிலையில இல்லை.’ காயத்ரி சிரித்தாள்.

ஜெய்ப்பூரிலிருந்து கிளம்பும்போது எதையோ விட்டுச் செல்வதுபோல உணர்ந்தாள் காயத்ரி. இரவிலும் பகலிலும் அவளது கனவுகளில் ஜெய், போலோ விளையாடிக் கொண்டிருந்தார். ஜெய்யைப் பற்றி பத்திரிகைகளில் எந்தச் செய்தி வந்தாலும் அது அவளைக் குதூகலமடைய வைத்தது. அவரது பெயர்மீது விரல்வைத்து ஆசையாக வருடிக் கொடுத்தாள். ஜெய் கழற்றிப்போட்ட ஒரு கையுறையிலிருந்து இரண்டு நூல்களை எடுத்து வைத்திருந்தாள். நூல்களைத் தனது கை பிரெஸ்லெட்டோடு சுற்றிக்கொண்டாள். அழகாகத் தெரிந்தது. ஜெய்யின் முதலிரண்டு மனைவிகள், குழந்தைகள் – எதுவுமே காயத்ரிக்கு உறுத்தவில்லை. ‘நான் ஜெய்யைக் காதலிக்கிறேன்’ – தனிமையில் சொல்லிப் பார்த்துச் சந்தோஷப்பட்டுக் கொண்டாள். அப்போது அவளுக்கு வயது பதினான்கு.

***

‘காயத்ரி காங்கிரஸில் இணைந்துவிட்டார்’ என்ற கிசுகிசு பலகாலமாகவே வலம் வந்துகொண்டிருந்தது. அழைப்பு வந்ததென்னவோ உண்மைதான். ஆனால் காயத்ரி காங்கிரஸில் இணையவில்லை. அதற்கு எதிர்க்கட்சியாக, ராஜாஜியின் தலைமையில் உருவான சுதந்தரா கட்சியில் இணைந்தார் (1960). காரணம்? வலுவான எதிர்க்கட்சி ஏதுமின்றி காங்கிரஸ் அதுவரை செலுத்தி வந்த அதிகாரம் பல மட்டங்களில் அதிருப்தியை உருவாக்கியிருந்தது. ராஜஸ்தான் காங்கிரஸார், முன்னாள் ராஜ ஆட்சியாளர்களுக்கு மதிப்பு கொடுக்காமல் எடுத்திருந்த சில நடவடிக்கைகள் காயத்ரியைக் களமிறங்க வைத்தன.

‘அரசியலில் இறங்கி பதவிக்கு வர நினைக்கிற ராஜகுடும்பத்தினருக்கு மன்னர் மானியத்தொகை கிடையாது’ என்று சட்டசபையில் திருவாய் மலர்ந்தார் ராஜஸ்தான் காங்கிரஸ் முதல்வர் மோகன்லால் சுகாடியா. ‘அப்படியென்றால் காங்கிரஸில் இருக்கும் மன்னர்களுக்கு?’ என்று எதிர்க்கேள்வி எழ, சுகாடியா வாய்பொத்திக் கொண்டார். தங்களுக்குக் கிடைக்கும் மானியத் தொகைக்கு எதுவும் ஆபத்து வந்துவிடக்கூடாது என்றே பல மகாராஜாக்கள், இளவரசர்கள் காங்கிரஸில் அடைக்கலம் புகுந்திருந்தனர். ஆனால் எதிர்க்கட்சிகளில் இருந்த ராஜகுடும்பத்தினருடைய ‘மக்கள் செல்வாக்கை’ காலிபண்ணும் வேலையை காங்கிரஸ் தொடர்ந்தது.

1962 தேர்தல். ஜெய்ப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கு வேட்பாளராக காயத்ரியை அறிவித்தார் ராஜாஜி. ‘நான் உங்கள் மகாராஜாவின் மனைவி என்பதால் என்னை ஆதரிக்கிறீர்களா?’ – காயத்ரி மக்களிடம் நேரடியாகவே கேட்டார். பாதிக்கூட்டம் ‘ஆம்’ என்றது. ‘இல்லை, நீங்கள் எங்களுக்கு ஏற்கெனவே நிறைய செய்திருக்கிறீர்கள். இனியும் செய்வீர்கள்’ என்றது மீதிக்கூட்டம். பிரசாரத்தின் இறுதிநாள். ஜெய்ப்பூரில் காங்கிரஸ், ஜனசங்கம், சுதந்தரா – மூன்று கட்சிகளும் ஒரே நேரத்தில் பொதுக்கூட்டம் போட்டன. ஜெய் பேச்சைக் கேட்க திரண்ட சுமார் இரண்டு லட்சம் ஜனங்களைக் கண்டு எதிர்க்கட்சிகளுக்கு மூச்சடைத்தது.

தேர்தலில் ஜெய்ப்பூர் தொகுதியில் பதிவான ஓட்டுகள் 1,92,909. அதில் காயத்ரி வாங்கிய ஓட்டுகள் 1,57,692. கின்னஸ் புத்தகம் புதிய சாதனையைப் பதிவு செய்துகொண்டது.

*****

மன்னர் மானிய ஒழிப்புக்குப் பின்னும் இந்திரா காந்தி, எதிர்க்கட்சிகளிலிருந்த ராஜ பரம்பரையினரை விட்டுவைக்கவில்லை. வருமான வரி சோதனை முதல் பல விஷயங்களில் துன்பத்துக்கு ஆளானார் காயத்ரி. 1975ல் அவசரநிலை பிரகடனம். நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடருக்குச் சென்ற காயத்ரிக்கு அதிர்ச்சி. அவையில் காங்கிரஸார் மட்டும் இருந்தார்கள். அன்று மதியமே காயத்ரி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். உள்ளே இன்னொரு மகாராணி ‘ஹாய்’ சொன்னார், குவாலியரின் விஜயராஜே சிந்தியா.

கொசுக்கடி, எலித்தொல்லை, இருள் அறை இன்னல்கள். ஆறுமாத சிறைவாசத்துக்குப் பிறகு வெளியே வந்த காயத்ரி, தீவிர அரசியலிலிருந்து விலகிக்கொண்டார். இன்றுவரை ஜெய்ப்பூரின் ராஜமாதாவாக மக்கள் அபிமானத்தோடு அங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

*****

மேலே சொன்ன கடைசி வரி, இந்த ஏப்ரல் மாதத்தில் நான் எழுதியது. (குமுதம் ரிப்போர்ட்டர், அகம் புறம் அந்தப்புரம் தொடருக்காக.) அதை அடுத்த மூன்று மாதங்களுக்குள்ளாகவே மாற்ற வேண்டியது வரும் என்று எதிர்பார்க்கவில்லை.

அந்தக்காலத்து ஐஸ்வர்யாராய். மக்களோடு நெருங்கிப் பழகிய மகாராணி. இந்திரா காந்தியின் அரசியல் எதிரி. பெரு வாழ்க்கை வாழ்ந்த நல்ல மனுஷி. அடுத்த சில வருடங்களுக்குள் ஜெய்ப்பூருக்குச் சென்று காயத்ரி தேவியைச் சந்திக்க வேண்டும் ஆசை வைத்திருந்தேன். நேற்று மறைந்துவிட்டார்.

A Princess Remembers – The Memoirs of the Maharani of Jaipur
by Gayatri Devi

மகாராணி காயத்ரி தேவியின் நினைவுகளைச் சொல்லும் புத்தகம். அது மட்டும் இப்போது என்னிடம், பொக்கிஷமாக.