இன்னிக்கு தீபாவளியா? பொங்கலா?

…என்று நினைக்குமளவுக்கு அத்தனை படங்கள் ரீலிஸ் ஆகின்றன. எனக்கு தெரிந்து ஐந்து. தமிழ்ப் படம், கோவா, ஜக்குபாய் (தியேட்டர் ரிலீஸ்), கதை, தைரியம். பொங்கல் படங்கள் வந்து இரண்டே வாரங்களே ஆன நிலையில், புது படங்களுக்குப் போதுமான தியேட்டர் இல்லாத நிலை. படங்களை இரண்டாவது ரவுண்ட் ரிலீஸ் செய்யும் சைதை ஸ்ரீநிவாசா தியேட்டரில்  இன்று ‘தைரியம்’ ரிலீஸ் ஆகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

தமிழ் படம் ஆக விளம்பரம் செய்யப்பட்டு, ஐந்து நாள்களுக்கு முன்பு தமிழ்ப் படம் ஆக மாறிய லொள்ளு சினிமாவைத்தான் முதலில் பார்க்க வேண்டும் நினைத்திருந்தேன். இன்றிலிருந்து மூன்று நாள்களுக்கு எங்கும் டிக்கெட் இல்லை. டிக்கெட் கிடைக்கும் என்பதற்காக அம்பத்தூர் மினிராக்கிக்கோ, ஈசிஆர் மாயாஜாலுக்கோ போக முடியாதே.

ஆன்லைனில் கோவா டிக்கெட்டுகளும் காலி. ஜக்குபாய் தியேட்டர்கள் அனைவரையும் இரு கரம் கூப்பி வரவேற்கின்றன. இன்றைக்குள் தெரிந்துவிடும், எவையெல்லாம் பிழைக்கும் என்று.

சரக்கு இல்லாத படங்கள், தியேட்டரை விட்டு துரத்தப்பட்டுவிடும் என்றே தோன்றுகிறது. ஏனென்றால் அடுத்தடுத்த வாரங்களில் ஏராளமான புதிய, பெரிய படங்கள் ரிலீஸுக்கு தயாராக நிற்கின்றன (அசல், பையா, விண்ணைத் தாண்டி வருவாயா). ‘வேட்டை ஆரம்பாயிருச்சு டோய்’ என்று தொடை தட்டிக்கொண்டு நீண்ட நாள்கள் மொக்கை போட முடியாது. வேட்டையாடிய வரைக்கும் போதும் என்று கிளம்ப வேண்டியதுதான். பார்க்கலாம், எத்தனை தேறும் என்று.

‘நெகட்டிவ் மார்கெட்டிங்’ – கடந்த இரண்டு படங்களைப் போல, தனது மூன்றாவது படத்துக்கும் வெங்கட் பிரபு அதே உத்தியைத்தான் பயன்படுத்துகிறார். அதாவது படத்தை, படத்தோடு தொடர்புடையவர்களை மட்டம் தட்டிப் பேசியே கவனம் ஈர்ப்பது. கோவாவுக்கும் அந்த உத்தி கைகொடுக்கிறதா என்று பார்ப்போம். கோவா, Hangover படத்தின் காப்பியாக இருக்குமோ என்று ட்விட்டரில் வள்ளிதாசன் சந்தேகம் எழுப்பியிருந்தார். எனக்கும் அப்படியொரு சந்தேகம் உண்டு.

தமிழ்ப் படம் குழுவினரும் சேனல்களில் அதே நெகட்டிவ் மார்கெட்டிங் உத்தியைத்தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். பாவம், ஜக்குபாய் குழுவினர். சன் டீவியில் கே.எஸ். ரவிக்குமார், சரத்குமார், ராதிகா மூவரும் படம் பற்றி பாசிட்டிவாக பேச முயற்சி செய்தார்கள். விரக்தியில் அவர்களையும் மீறி நெகட்டிவ் வார்த்தைகளே அதிகம் தென்பட்டன.

*

பொங்கல் ரிலீஸில் இரண்டு படங்கள் பார்த்தேன். முதலில் நாணயம். தூத்துக்குடியில் பார்த்தேன். படம் ரிலீஸ் ஆன இரண்டாவது நாள். காலைக் காட்சி. சூரிய கிரகணத்துக்கு பயந்து தியேட்டரில் சுமார் ஐம்பது பேர் மட்டும். டிக்கெட் விஷயத்தில் தூத்துக்குடி இன்னும் திருந்தவில்லை. என் பள்ளி நாள்களில் கௌண்டரில் பதினைந்து ரூபாய் கொடுத்துவிட்டு, கையில் 65 பைசாவுக்கு டிக்கெட் வாங்கியதாக ஞாபகம். இப்போது ஐம்பது ரூபாய் கொடுத்தேன். 14 ரூபாய்க்கு டிக்கெட் கொடுத்தார்கள். வளர்ச்சி இருக்கிறது.

படத்தின் விமரிசனம் எழுதவெல்லாம் தோன்றவில்லை. படம் போரடிக்கவில்லை. அதேசமயம் நினைத்து வியக்குமளவுக்கு காட்சி, ஒன்றுகூட படத்திலில்லை. வழக்கம்போல, பிரசன்னா ஸ்கோர் செய்திருக்கிறார். சிபி ம்ஹூம். ஹீரோ இமேஜையும் கெடுத்துக் கொண்டு, வில்லனாகவும் சோபிக்க முடியாமல்… பாவம். சத்யராஜ் போலவே நடிப்பதற்கு அவர் போதுமே, அவர் வாரிசு தேவையில்லையே.

நான் பார்த்த இன்னொரு படம் ஆயிரத்தில் ஒருவன். சோனியா அகர்வால் சத்தியமாக நான் அதற்கு விமரிசனம் எழுதப்போவதில்லை. ஆயிரத்தில் ஒருவன் பார்த்தேன் என்றுகூட சொல்ல முடியாது. எழுநூற்று ஐம்பதில் ஒருவன்தான் பார்த்தேன். படம் ஆரம்பித்து 20 நிமிடங்கள் தாமதமாகத்தான் தியேட்டருக்குச் சென்றேன். படத்தில் 25 நிமிடங்களுக்கு மேல் கத்தரி போட்டுவிட்டார்கள் போல. எனவே எனக்கு படம் மிக சீக்கிரம் முடிந்ததுபோல தோன்றியது.

ரீமா சென், தனது பாண்டிய குல ப்ளாஷ்பேக்கைச் சொல்லும்போது பாண்டிய குல மன்னனாக காட்டப்படும் புகைப்படம் (இதுவாகத்தான் இருக்கும் என்று நம்புகிறேன்.) ஒரு நொடியே வந்ததினால் எனக்கு சட்டென மனத்தில் பதியவில்லை. ஆனால் அதிர்ச்சியாக இருந்தது.

புகைப்படத்தில் இருப்பவர் யார்? ஆண்ட்ரியா சத்தியமாக, பாண்டிய குல மன்னன் அல்ல. ரேவா (மத்திய பிரதேசம்) சமஸ்தான மகாராஜா. 1854 முதல் 1880 வரை அதை ஆண்டவர். பெயர் ரகுராஜ் சிங். சிப்பாய் கலகத்தில் பிரிட்டிஷாருக்கு உதவியதன் மூலம் சில பிரதேசங்களை வெகுமதியாக பெற்றுக் கொண்டவர். மீன் கொடிக்கும் அவருக்கும் சம்பந்தமில்லை. ராஜபுத்திரர். இவரது முன்னோர்கள் சாளுக்கிய வம்சத்தைச் சேர்ந்தவர்கள். அவரது புகைப்படத்தோடு காட்டப்பட்ட மற்ற ‘பாண்டிய’ புகைப்படங்களையும் முன்பே பார்த்திருக்கிறேன். மனத்தில் நிற்கவில்லை. அவர்களும் பாண்டியர்களாக இருக்க வாய்ப்பே இல்லை. ஒரு நல்ல ஓவியரை வைத்து, கற்பனையாக ஓவியங்களை வரைந்து காட்டியிருக்கலாம்.

வாழ்க, செல்வராகவனின் வரலாற்றுத் தொண்டு.

டாப் ஒன்பதரை பாடல்கள்

தற்போது ரசித்துக் கொண்டிருக்கும் இனி வெளியாகவிருக்கும் தமிழ் பட பாடல்களின் தர வரிசை. அதென்ன ஒன்பதரை? சொல்கிறேன்.

குறிப்பு : சமீபத்தில் வெளியான் யுவனின் இசையில் தீராத விளையாட்டு, ஜிவி இசையில் இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம், இமான் இசையில் கச்சேரி ஆரம்பம் படங்களில் பாடல்கள் எதுவும் எனக்குப் பிடித்தமாதிரி இல்லை.

ஒன்பதரை

விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில், கார்த்திக்கின் இதமான குரலில் ‘ஊனே உயிரே உனக்காகத் துடித்தேன், விண்ணைத் தாண்டி வருவாயா…’ – சின்னதாக ஒரு பாடல் (அரைப்பாடல்தான். ரஹ்மான் முழு பாடலே போட்டிருக்கலாம்.) – கிடார் இசை சுகம்.

ஒன்பது

பழைய பரத்வாஜ் மீண்டும் கிடைக்கவே மாட்டார்போல. அசல் படத்தில் அசலான பாடல்கள் எதுவும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டியதிருக்கிறது. ஆஹா எஃப் எம் நண்பர் ஒருவர் எனக்கு ஒவ்வொரு பாடலையும் போட்டுக் காட்டி, எது எது எங்கிருந்து எடுத்தது என்று சொன்னார். இருந்தாலும் ஒரே ஒரு பாடல் மட்டும் எஃப் எம் புண்ணியத்தால் மனத்தில் நன்கு பதிந்துவிட்டது. துஷ்யந்தா – இதுவும் புதிய பறவையின் பார்த்த ஞாபகம் இல்லையோ பாடலின் ரீமிக்ஸ்தான். படம் அசலா, இல்லை ஏதாவது ஒரு படத்தின் நகலா என்று இனிமேல்தான் (முடிந்தால்) பார்க்க வேண்டும்.

எட்டு

தன் ‘குடும்ப’ படம் என்றால் மெனக்கிடல் அதிகம் இருக்கும்தானே. கோவாவில் யுவன் மீண்டும் விருந்து படைத்திருக்கிறார். அண்ணன், தம்பி, அப்பா, பெரியப்பா என குடும்பத்தினர் எல்லோரும் சேர்ந்து பாடியிருக்கும் ஏழேழு தலைமுறை பண்ணைபுர பாடல் ரசிக்கும்படியாக இருக்கிறது. பின்னால் அவர்கள் குடும்பத்தில் யாராவது அரசியலில் இறங்கினால் கட்சிப் பாடலாக உபயோகித்துக் கொள்ளலாம்.

ஏழு

சதீஷ் சக்கரவர்த்தியின் இசையில் லீலையின் பாடல்கள் காதுகளைப் பதம் பார்க்காமல், இதமாக இருப்பது சிறப்பு. உன்னைப் பார்த்த பின்பு – காதல் சோகப்பாடல் ஸ்பெஷலிஸ்ட் ஹரிசரனின் குரலில். நிச்சயமாக வரவேற்பைப் பெறும். இந்தப் படத்தின் நம்பர் 1 பாடல் இதுவே.

ஆறு

அரேபிக் ஸீ பாடல் அண்ட் ரீமிக்ஸ். கோவா. நல்ல ஸ்டைலான பாடல். பலரது ரிங்டோனாக இந்தப்பாடலில் ஆரம்ப இசை மாறிக் கொண்டிருக்கிறது.

ஐந்து

துளி துளி துளி மழையாய் வந்தாளே… ஹரிசரன் குரலில் யுவனின் இந்த வருடத்தின் முதல் ரொமாண்டிக் ஹிட். எங்கேயோ, ஏற்கெனவே கேட்டதுபோல லேசாக தோன்றினாலும் சலிக்கவே இல்லை. பையா பட ஆல்பத்தின் நம்பர் ஒன் பாடல். இந்த இடத்துக்கு என் காதல் சொல்ல நேரமில்லை (யுவன் குரலில்) பாடலையும் பகிர்ந்து கொடுக்கலாம்.

நான்கு

சித்து ப்ளஸ் டூ – பாடல் பூவே பூவே. தரணின் இசையில் யுவன் சங்கர் ராஜா, சின்மயி குரல்களில். பிற இசையமைப்பாளர்களின் ஆல்பத்தில் முன்னணி இசையமைப்பாளர்கள் பாடும் ஆரோக்கியமான டிரெண்ட் உருவாகி வருவதை வரவேற்கலாம் (பாடகர்கள் மன்னிக்க). எஃப் எம்களில் பாடல் ஏற்கெனவே ஹிட்! சித்து ப்ளஸ் டூ ஆல்பத்தின் நம்பர் ஒன் பாடல் இதுவே.

மூன்று

கோவாவில் இதுவரை இல்லாத உணர்விது – ஆன்ட்ரியா குரலில் கார்னெட்டோ கோனின் இனிமை. உடன் பாடும் அஜிஸுக்கு இது கன்னிப் பாடல். கேட்கும்போது விஜய் டீவி லோகோவோடு முகம் கண்ணில் தெரிவதைத் தவிர்க்க முடியவில்லை.

இரண்டு

முன்பே வா பாடலுக்குப் பிறகு ரஹ்மானின் இன்னொரு இசைக் கொடை. விண்ணைத் தாண்டி வருவாயாவில் மன்னிப்பாயா… ஷ்ரேயா கோஷல் உச்சரிக்கும்போது ஜிவ்வென்று இருக்கிறது. ரஹ்மானுக்கும் இளையராஜா போல ஷ்ரேயாவோடு டூயட் பாட நீண்ட நாள் ஆசை போல. இந்தப் பாடல் மூலம் அதை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். ரசனையான பாடல். அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்-ஐ உள்ளே நுழைத்திருப்பது அழகு. இந்த வருடத்தின் நம்பர் ஒன் மெலடி ஆகியிருக்க வேண்டிய பாடல் இது. ஆனால்… தாமரையின் வரிகள் முழுமையான கவிதையாக இல்லாமல் சில இடங்களில் உறுத்தலாக இருக்கிறது. அந்த (வசன) வரிகளை வளைத்து நெளித்துப் பாடுவதற்குப் பாடகர்கள் அதிகம் மெனக்கிட்டிருப்பார்கள் போல. இருந்தாலும் பலரது வாழ்நாள் விருப்பப் பாடலாக மாறிவிடும்.

ஒன்று

ஒரு படத்தில் பாடல்கள் கேட்கும்போதுகூட சிரித்துக் கொண்டே இருக்க முடியுமா? தமிழ் படம் பாடல்கள் அந்த இன்பத்தைக் கொடுக்கின்றன. இந்த வார இறுதியில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தை பொங்கலுக்கே எதிர்பார்த்தேன். ஹரிஹரன், ஸ்வேதா குரலில் ஓ மஹ ஸீயா பாடலை எக்கச்சக்கமாக ரசித்துக் கொண்டிருக்கிறேன். இத்தனை மெலடியான பாடலில்கூட எல்லோரையும் சிரிக்க வைத்திருக்கும் இசையமைப்பாளர் கண்ணனுக்கு வாழ்த்துகள். வார இறுதியில் இந்தப் படம் பார்க்கலாம் என்றிருக்கிறேன். கோவாவெல்லாம் பிறகுதான்.