‘இது என்ன கூத்தாடிகள் ராஜ்யமா?’ – பெரியார்

1967ல் விடுதலை நாளிதழில் பெரியார் தனது பொங்கல் செய்தியை வெளியிட்டார். கடந்த நாள்களில் நடந்த சம்பவங்களால் அவரது மனம் எவ்வளவு பாதிக்கப்பட்டிருந்தது என்பதை அந்த எழுத்துகளை வெளிப்படுத்தின. காகிதமே பொசுங்கிப் போகுமளவுக்குச் சூடாக இருந்தன அவரது வார்த்தைகள்.

‘………………… சாதாரணமாக ராதாவானாலும் ராமச்சந்திரன் ஆனாலும் இவர்களுக்கு பொது மக்கள் உலகத்தில் உள்ள மதிப்பு இவர்கள் கூத்தாடிகள், வேஷம்போட்டு நடிப்பவர்கள், காசுக்காக எந்த வேஷத்தையும், எப்படிப்பட்ட இழிமக்கள் தன்மையான கதையையும் எந்த உருவத்திலும் நடிப்பவர்கள் என்பதல்லாமல் இவர்களுக்கு பொதுநல யோக்கியதைக்கு ஏற்ற ஒழுக்கம் நாணயம் பொறுப்பு என்ன இருக்க முடியும்? இவர்கள் நடிப்பால் பொதுமக்களுக்கு பெரிதும் பல தீயகுணங்களும், ஒழுக்கக்கேடும் ஏற்படுவதல்லாமல் என்ன கலைஞானம் 100க்கு 90 மக்களுக்கு ஏற்பட்டு விடும்? ஏற்படக்கூடும்?

இக்காரியங்களில் ஈடுபட்ட இரண்டு கூத்தாடிக் கீழ்த்தர மக்களுக்குள் நடந்த மூர்க்கத்தனமான, காலித்தனமான சம்பவத்திற்காக எவ்வளவு ஆர்ப்பாட்டம், விளம்பரம், மக்கள் இடையில் உணர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது. அரசாங்க ஆக்கினைகள் எவ்வளவு என்று பார்த்தோமானால் சமுதாயத்தின், ஆட்சியின் கீழ்த்தரம் எந்த அளவுக்கு இறங்கிவிட்டது என்று கவலைப்படுகிறேன்.

இதற்காக அரசாங்கம் நாட்டு நிகழ்ச்சிகளை ரூ. 1000, ரூ. 2000 செலவு செய்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிகளை 144 உத்தரவு போட்டு தடுப்பது என்றால் இது என்ன கூத்தாடிகள் ராஜ்யமா? கூத்தாடிகள் அரசாங்கமா? என்றுதானே கேட்கத் தோன்றுகிறது.

நிலைமை இப்படியே மோசமாக வளர்ந்து வருகிறது என்றால், இந்த ஆட்சிக்கு ஆளத்தகுதி இல்லை அல்லது ஜனநாயகத்துக்கும் நம் நாட்டுக்கும் மக்களுக்கும் பொருத்தம் இல்லை. ராணுவமோ, சர்வாதிகாரமோ கொண்டுதான் சமதர்மத்தை அமுல்நடத்த முடியும் என்கிற முடிவுக்கு வரவேண்டும்.

ஏன் எனக்கு இப்படி விரக்தி முடிவு தோன்றுகிறது என்றால், இரண்டு கூத்தாடிகளுக்கு ஏற்பட்ட காலித்தன நிகழ்ச்சிக்காக, காங்கிரஸ் ஆபிசு கொளுத்தப்பட்டது, காமராசர் வீட்டுக்குக் காவல், பெரியார் வீட்டுக்குக் காவல், காமராஜருக்குக் காவல் என்றெல்லாம் காரியம் நடப்பதென்றால் பிறகு நாட்டில் யாருக்குத்தான் பாதுகாப்பு இருக்கமுடியும்? இந்த காலித்தனத்தின் பயனாக ஏற்பட்ட விளைவு இது என்றால் நாட்டில் உண்டாக்கப்பட்டிருக்கும் உணர்ச்சி எப்படிப்பட்டதாக இருக்கிறது என்பதை பொதுமக்கள், அறிஞர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே எழுதுகிறேன்.

காமராஜருக்கோ, காங்கிரஸ் கூட்டங்களுக்கோ, எனக்கோ, காமராஜர் தாயாருக்கோ, அவர் வீட்டிற்கோ என்னதான் கேடுவந்தாலும் அதனால் உலகம் முழுகியா போய்விடும்?
…………………’

***

இந்த ஞாயிறு (27 டிசம்பர்), கிழக்கு பாட்காஸ்டில் எம்.ஜி.ஆர். குறித்த நிகழ்ச்சி. பேசுபவர்கள் ஆர். முத்துக்குமார், பா. தீனதயாளன் – சித்ராவுடன். தவற விடாதீர்கள்.

காலை 7:25 ;'(

ஆல் இந்தியா ரேடியோ

நேரம் காலை ஏழு மணி இருபந்தைந்து நிமிடம்

இன்று ஒரு தகவல்

வழங்குபவர்…

தன் எளிமையான பேச்சினால் எல்லோருடைய இதயத்திலும் இடம்பிடித்த மனிதர் தென்கச்சி சுவாமிநாதனுக்கு அஞ்சலி.

Alt + Ctrl + Del ஆகாஷ்!

(இந்தக் கட்டுரைகளில் வரும் பாத்திரங்கள், சம்பவங்கள், உரையாடல்கள் யாவும் கற்பனை அல்ல. உங்களைக் குறிப்பிடுவதாகக் கூட இருக்கலாம். ஹிஹிஹி… )
1998

‘சுளையா… சுளை சுளையா செமஸ்டருக்கு செமஸ்டர் முப்பதாயிரம் ரூவா கட்டிருக்குலே… எப்படியாவது அரியர்ஸையெல்லாம் க்ளியர் பண்ணிருலே’ன்னு உள்மனசு கிடந்து குய்யோ முய்யோன்னு கதறுது! இப்பத்தான் பிஎஸ்சி மேத்ஸ் முடிச்சு, எம்சிஏ சேர்ந்தாப்புல இருக்குது. ஆனா வெட்டியா விமலாகிட்ட கடலை போட்டதுலயே ரெண்டரை வருசம் ஓடிப்போச்சு.

மவனே இதுவரைக்கும் அஞ்சு அரியர்ஸ் வைச்சிருக்க. இந்த அஞ்சாவது செமஸ்டர்லயும் எண்ணிக்கையைக் கூட்டிடாத, நெஞ்சு தாங்காது. நாளைக்கு ஆரக்கிள் பேப்பர் இருக்குடா, படிடா மவனே… படிடா… அய்யோ இன்னிக்குன்னு பார்த்து கிரிக்கெட் மேட்ச் நடக்குதே. ஒரு ரெண்டு நிமிஷத்துக்கு டீவியைப் போடலாமா..?

1999

என்னடா இவங்க நமக்கு மேல ஃப்ராடா இருக்கானுங்க. இது எனக்கு பைனல் செமஸ்டர். ஏதாவது ப்ராஜெக்ட் தேடலாம்னு சென்னைக்குக் கிளம்பி வந்தேன். பெரிய கம்பெனிக்காரங்க எல்லாம் ‘நோ என்ட்ரி’ன்னு தொரத்துனான். சரி, எதாவது சின்ன கம்பெனியாப் பாத்து பட்டறையைப் போடலாமுன்னு ‘ப்ராஜெக்ட்ஸ் அவைலபிள்’ பேப்பர் வெளம்பரம் பார்த்து இந்த இடத்துக்கு வந்தேன். இனிக்க இனிக்கப் பேசி பத்தாயிரம் குடுன்னு பதவிசா கேட்டான். சரி, இப்பவாவது ஏதாவது கத்துக்கலாமேன்னு சொல்லி நானும் கொடுத்தேன். வீக்லி டென் ஹவர்ஸ். அதுல டூ ஹவர்ஸ் சிஸ்டம் யூஸ் பண்ணலாமுன்னு சொன்னாங்க. ஆனா அவங்க கொடுத்த சிஸ்டத்துல வீபி, ஆரக்கிள்னு ஒரு எலவும் இன்ஸ்ட்டாலே பண்ணலை. வெறுமன கம்ப்யூட்டர்ல சீட்டு விளையாண்டுகிட்டு இருந்தேன்.

ரெண்டு மாசம் முடிஞ்சே போச்சு. இன்னிக்கு மூஞ்சிக்கு முன்னாடி, ‘ஹாஸ்பிடல் மேனேஜ்மென்ட்’, ‘லைப்ரரி மேனேஜ்மென்ட்’, ‘பில்லிங் மேனேஜ்மென்ட்’னு மூணு சர்ட்டிபிகேட்டைத் தூக்கிப் போட்டு, ‘உன் ப்ராஜெக்ட் முடிஞ்சுது. இதுதான் சர்ட்டிபிகேட். எது வேணுமோ எடுத்துக்கோ’ன்னு சொல்லுறான். அடங்கொக்கமக்கா… ப்ராஜெக்ட் வைவா-ல எப்படிச் சமாளிக்கப் போறேன்னு தெரியலயே?

2000

வேலை தேடப் போறேன்னு சென்னைக்கு வந்து செங்கல்லை நட்டியாச்சு. மூணு மாசமாச்சு. வீட்டுல இருந்து வர்ற பணத்துல, பக்கத்துல இருக்கு மெஸ் புண்ணியத்துல வாழ்க்கை சுமுகமா ஓடிக்கிட்டிருக்கு. திநகரு, ஸ்பென்ஸர் ப்ளாசா, பெசண்ட் நகர் பீச்சுன்னு எதோ ஃபிகரும் பீருமா டைம் பாஸாகுது.

ஆனா எதாவது கம்பெனில இன்டர்வியூக்குன்னு போனா, முத ரவுண்டுலயே நம்ம முகமூடி டார்டாரா டர்ராயிடுது. வீபி, ஆரக்கிள், சி++… இதெல்லாம் படிச்சிருக்கேன்னு சொல்லி வெளிய தலைகாட்ட முடியல. எவனாவது ஒருத்தன் வீபி கத்துக்குறதுக்குன்னு சம்பளம் இல்லாம வேலை கொடுத்தாக் கூட சேர்ந்துரலாம். அவனவன் கேக்குற கேள்வியைப் பார்த்தா, ஜப்பான்காரன் பாஷை மாதிரி புரியவே மாட்டிங்குது.

இப்படியே போய்க்கிட்டிருந்தா சென்னைல நீ கிழிச்சது போதும், ஊரு பக்கமா வந்து நம்ம கடையிலேயே உக்காந்து வியாபாரத்தைப் பாருன்னு உத்தரவு போட்டுருவாரு எங்கய்யா. இப்போதைக்கு பிஎஸ்சின்னு குவாலிபிகேஷனைக் காட்டி, ஏதாவது டேட்டா என்ட்ரி வேலைக்குப் போகலாம். மாசம் ரெண்டாயிரம் ரூவா கிடைக்கும்.

2001

அரியர்ஸ் கணக்கை அப்படி இப்படி பார்டர்ல பைசல் பண்ணியாச்சு. ஆகாஷ் எம்சிஏன்னு வருங்காலத்துல என் கல்யாணப் பத்திரிகைல வக்கணையாப் போட்டுக்கலாம். கூடிய சிக்கீரம் இந்த எழவு டேட்டா என்ட்ரியை விட்டு வெளிய வரணும். விட்டா, இதுலயே சிக்கிச் சீரழிஞ்சு முன்னேறிறுவேனோன்னு பயமா இருக்கு.

பீல்டு மாறணும். ஆங்.. அது என்ன.. ஆரக்கிள்… ஆரக்கிள்… அதுல அட்வான்ஸ் கோர்ஸ் ஏதாவது சேர்ந்து, அதையாவது ஒழுங்காப் படிச்சு, நல்ல வேலைக்குப் போகணும். கூட படிச்சவனெல்லாம் பத்தாயிரம், பதினைஞ்சாயிரம் சம்பாதிக்கிறேன்னு மெயில் அனுப்பி வயிறெரிய வைக்குறானுங்க. விமலாக்கு வேற கல்யாணம் ஆயிருச்சு. அடுத்த வாரம் புருஷனோட யுஎஸ் போறாளாம். டேய் ஆகாஷு, உன் வாழ்க்கை என்னடா இன்னும் boot ஆகாத சிஸ்டமாவே இருக்கு?

2002

‘டேட்டாவேர்ல்ட் கம்பெனில சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டரா ஒரு வருஷம், ஜே&ஜே பிரைவேட் லிமிடெட்ல ப்ரோகிராமரா ஒன்றரை வருஷம், அப்புறம் அது என்ன, ஆங் ஸ்வஸ்திக் சாஃப்ட்வேர்ஸ்ல ஆரக்கிள் ப்ரோகிராமரா கடந்த ரெண்டு வருசமா வேலை பார்த்துக்கிட்டிருக்கேன். இப்போ நான் வாங்குற சம்பளம் எட்டாயிரம்’ – இந்த டயலாக்கை நியாபகப்படுத்தி சொல்லிப் பார்த்துக்குவேன். ஏன்னா அப்படித்தான் என்னோட ரெஸ்யூம்ல போட்டிருக்கேன்.

ஆமாங்க… Fake-தான். 100% சுத்தமான பொய்களால் நிரப்பப்பட்ட ரெஸ்யூம்தான். ‘Fake போட்டு வாழ்வாரே வாழ்வார் –  மற்றோரெல்லாம் பிழைக்கத் தெரியாதவர்’-னு வள்ளுவரே சொல்லியிருக்காரே! ஆரக்கிள்ல அட்வான்ஸ்  கோர்ஸ் ஒண்ணு படிச்சிட்டு நானும் கடந்த ஆறு மாசமா, இதே Fake ரெஸ்யூமோட கம்பெனி கம்பெனியா ஏறி இறங்கிட்டிருக்கேன். எதாவது கன்டிஷனைச் சொல்லி, query எழுதச் சொல்லுறான். worry ஆகிப் போகுது. எப்படி ஒரு டேட்டாபேஸை backup எடுப்பேன்னு கேக்குறான். அதுல நான் pack-up ஆயிடுறேன். பிள்ளையாரே, எனக்கு மட்டும் ஒரு வேலை கிடைச்சுட்டா, 1008 ஆரக்கிள் query எழுதி உனக்கு மாலையாப் போடுறேன்.

2003

டேய் ஆகாஷு… உன்னையும் நல்லவன்னு நம்பி ஒருத்தன் வேலை கொடுத்துட்டான்டா! சம்பளம் வேற 15000-னு சொல்லிட்டான். ஜாய்ன் பண்ணி ஒரு வாரமாச்சு. எந்த ப்ராஜெக்ட்ல போடப் போறாங்கன்னு தெரியல. ஏதோ சமாளிக்கிற அளவுக்கு ஆரக்கிள் தெரியும், எடக்குமடக்கா ஏதாவது வேலை கொடுத்து, கோக்குமாக்க நான் முழிச்சி, இவன் Fake-தான் கண்டுபிடிச்சிருவாங்களோன்னு அடிவயிறு ரிமைண்டர் வைச்சு அரை மணி நேரத்துக்கு ஒருமுறை கலங்கிக்கிட்டே இருக்கு.

இவ்வளவு நாள், மாசம் ரெண்டாயிரத்தை வைச்சே இன்பமா வாழ்ந்துட்டேன். இனிமே மாசம் 15000 ரூபா வரப் போகுதே.. அவ்வளவு பணத்தை எப்படிச் செலவழிக்க? பீட்ஸா, பீட்டர் இங்கிலான்ட், கிரெடிட் கார்டு, டிஸ்கோதேன்னு உன் வாழ்க்கையே மாறப் போகுதுடா மச்சான்!

2004

ங்கொய்யால… பதினைஞ்சாயிரம் சம்பளம் கொடுத்துட்டு, முப்பதாயிரத்துக்கு வேலை வாங்குறானுங்க. கடைசியா என்னிக்கு வீட்டுக்குப் போனேன்னு மறந்து போச்சு. தீவாளிக்கு லீவு தர மாட்டேனுட்டானுங்க. கேட்டா, யுஎஸ் க்ளையண்ட். தீவாளி அன்னிக்கி முக்கியமான call வரும். இருந்தே ஆகணுங்கிறாரு என்னோட ப்ராஜெக்ட் மேனேஜர். நான் எப்படியோ போராடி ஒருநாள் லீவு வாங்கி, ஊருக்குக் கிளம்பிட்டேன்.

பஸ், டிரெயினு எதுலயும் டிக்கெட் இல்லாம கஷ்டப்பட்டு, ஒரு டப்பா ப்ரைவேட் பஸ் புடிச்சு ஊர் பக்கத்துல போறேன். கம்பெனில இருந்து போன் வருது. ‘ஆகாஷ், உடனே கிளம்பி வாங்க. கோடிங்ல நிறைய bugs இருக்கு’ன்னு ப்ராஜெக்ட் மேனேஜர் மிரட்டுறாரு. ‘சார் இப்பத்தான் ஊருக்குள்ளேயே போகப் போறேன்’னு பரிதாபமா சொல்லுறேன். ‘நோ ப்ராப்ளம். அடுத்த பஸ்ஸைப் பிடிச்சு வந்திருங்க’ன்னு கூலா சொல்லுறாரு. ம்ஹூம்… இனிமே தாங்காது. கம்பெனி மாறிட வேண்டியதுதான்.

2005

இந்த வருசத்துலேயே ரெண்டாவது கம்பெனி மாறப்போறேன். வருசத்துக்கு நாலு லட்சம் தர்றேன்னு சொல்லிருக்கான். லாப்டாப் தர்றதாவும் சொல்லிருக்கான். ரெண்டு வருசத்துக்கு முன்னாடி 50 கிலோ இருந்த நான், இப்ப 80-ஐத் தொடப் போறேன். தொப்பையைக் குறைக்கணும். ஜிம் போகணும். ஏன்னா வீட்டுல பொண்ணு பாக்குறாங்க.

2006

நான் இப்போ பிஎம் ஆகிட்டேன். அதான் ப்ராஜெக்ட் மேனேஜர். இப்ப கொஞ்ச பேரை இண்டர்வியூ எடுத்துக்கிட்டிருக்கேன்.

‘பேரு என்ன, சுபாஷா? ஓகே… SQL-ல உங்க ஸ்டிரென்த் என்ன? இப்ப எங்க வொர்க் பண்ணுறீங்க? ஆரக்கிள் ப்ரொகிராமரா எத்தனை வருஷம் எக்ஸ்பீரியன்ஸ்? ஓகே வீ வில் கால் யூ லேட்டர்’

அந்தப் பையன் போயிட்டான். நான் அவனை செலக்ட் பண்ணப் போறதில்லை. முசப் புடிக்குற நாயை மூஞ்சப் பார்த்தா தெரியாதா! ரெஸ்யூம் சுத்த Fake. அதை வெச்சிக்கிட்டு என்கிட்டயே டகால்டி வேலை காட்டுறான். இன்டர்வியூல எப்படியெல்லாம் நடிக்கணும்னு அவன் இன்னும் பழகல. போகப் போக கத்துக்குவான். நாங்கள்ளாம் எவ்ளோ கஷ்டப்பட்டோம் தெரியும்ல?

# கிழக்கு வெளியீடு : லொள் காப்பியம்

அந்த காலத்து ஐஸ்வர்யா ராய்!

‘போலோ மேட்சுக்காக ஜெய்ப்பூர் மகாராஜா கல்கத்தா வர்றார். உட்லேண்ட்ஸ் ஹோட்டல்ல இடமில்லை. நம்ம மாளிகைல, உங்க அறையிலதான் தங்கப்போறார். அதனால நீங்க அறையைக் காலி பண்ணிக்கொடுத்துடுங்க. சரியா?’ – கூச்பிகார் மகாராணி இந்திரா சொல்லிவிட்டுப் போனாள். பன்னிரண்டு வயது இளவரசி காயத்ரி தேவிக்கு தன் அறையை விட்டுக் கொடுப்பதில் பூரண சம்மதமில்லை. அம்மா சொல்லிவிட்டாள். வேறு வழியில்லை. போலோ விளையாட்டில் ஜெய் கில்லாடி என்பதை பத்திரிகைச் செய்திகளில் படித்திருந்தாள். பேரழகர் என்றும் கேள்விப்பட்டிருந்தாள். ஆகவே அவரது வருகையை எதிர்நோக்கினாள் (1931).

ஜெய் வந்தார். கூச் பிகார் இளவரசர்களோடு கூடிக் குலாவினார். இளவரசிகளையும் நேர்பார்வையில் நோட்டமிட்டுக் கொண்டார். ‘ஆளு அழகாத்தான் இருக்காருடி’ – இளவரசிகள் கிசுகிசுத்துக் கொண்டார்கள். ‘அவருக்குக் கல்யாணமாயிருச்சு தெரியுமா?’

ஜெய்யுடன் காயத்ரி
ஜெய் உடன் காயத்ரி

‘தெரியும்டி. மிக்கின்னு ஒரு பொண்ணும், பபிள்ஸ்னு ஒரு பையனும்கூட இருக்காங்க. ஆனா இவரைப் பார்த்தா அப்படியா தெரியுது?’ பருவத்தின் வாசலில் நின்று கொண்டிருந்த காயத்ரிக்கு ஜெய்யின் மீது ஒருவித ஈர்ப்பு வந்திருந்தது. மேட்ச் எல்லாம் முடிந்து ஜெய் கிளம்பிச் சென்றிருந்தார். ஆனாலும் அடிக்கடி வந்துகொண்டிருந்தார், காயத்ரியின் நினைவில்.

அடுத்த ஆண்டும் கல்கத்தாவுக்கு வந்தார், போலாவுக்காக. அப்போதுதான் அவருக்கு இரண்டாம் கல்யாணம் நடந்திருந்தது. ‘அவரோட புது மனைவி போட்டோவை அனுப்பச் சொல்லேன்’ – தனது அம்மாவிடம் நச்சரித்தாள் காயத்ரி. இந்திராவும் ஜெய்யிடம் கேட்டாள். சரியென்று சொல்லிய அவர், அனுப்பவில்லை.

இந்திரா, குடும்பத்தோடு அவ்வப்போது பரோடாவுக்குச் செல்வாள். தாய் வீட்டுக்கு. அந்தமுறை, ‘போகும் வழியில் ஜெய்ப்பூருக்குச் செல்லலாம்’ என்றாள். காயத்ரியின் மனத்துக்குள் இனம்புரியாத சந்தோஷம். ஜெய்ப்பூரின் அரண்மனை அழகை ரசித்தாள், அவளையறியாமலேயே ஜெய்யையும். அந்தப்புரம் சென்று அவரது மனைவிகளைச் சந்தித்தாள். குழந்தைகளோடு விளையாடினாள்.

‘நான் காயத்ரியை வெளியில் அழைத்துக் கொண்டு போகிறேன்’ – ஜெய், திடீரென இப்படிக் கேட்டதும் அவளுக்குள் பரவச ஊற்று. மகாராஜா கேட்டு மறுப்பது நாகரிகமில்லையே. இந்திரா சம்மதித்தாள். ஜெய்யோடு காரில் சென்ற நிமிடங்களில் பறப்பதுபோல உணர்ந்தாள் காயத்ரி.

‘நீ கார் ஓட்டுகிறாயா?’

ஓட்டினாள். ஜெய் உதவி செய்தார். வெட்கமும் புன்னகையும் ஸ்பரிசங்களும் கலந்த நொடிகள். அரண்மனைக்குத் திரும்பினார்கள். ‘உங்க பொண்ணு நல்லாத்தான் ஓட்டுறா. ஆனா வண்டி ஓட்டத் தெரிஞ்சவங்க சொல்றதைத்தான் கேக்குறதில்ல’ – ஜெய், இந்திராவிடம் சொல்லிவிட்டு நகர்ந்தார். இந்திரா, காயத்ரியைப் பார்த்தாள். ‘நான் அவர் சொல்றபடிதான் ஓட்டினேன். ஆனா அவர்தான் ஒரு நிலையில இல்லை.’ காயத்ரி சிரித்தாள்.

ஜெய்ப்பூரிலிருந்து கிளம்பும்போது எதையோ விட்டுச் செல்வதுபோல உணர்ந்தாள் காயத்ரி. இரவிலும் பகலிலும் அவளது கனவுகளில் ஜெய், போலோ விளையாடிக் கொண்டிருந்தார். ஜெய்யைப் பற்றி பத்திரிகைகளில் எந்தச் செய்தி வந்தாலும் அது அவளைக் குதூகலமடைய வைத்தது. அவரது பெயர்மீது விரல்வைத்து ஆசையாக வருடிக் கொடுத்தாள். ஜெய் கழற்றிப்போட்ட ஒரு கையுறையிலிருந்து இரண்டு நூல்களை எடுத்து வைத்திருந்தாள். நூல்களைத் தனது கை பிரெஸ்லெட்டோடு சுற்றிக்கொண்டாள். அழகாகத் தெரிந்தது. ஜெய்யின் முதலிரண்டு மனைவிகள், குழந்தைகள் – எதுவுமே காயத்ரிக்கு உறுத்தவில்லை. ‘நான் ஜெய்யைக் காதலிக்கிறேன்’ – தனிமையில் சொல்லிப் பார்த்துச் சந்தோஷப்பட்டுக் கொண்டாள். அப்போது அவளுக்கு வயது பதினான்கு.

***

‘காயத்ரி காங்கிரஸில் இணைந்துவிட்டார்’ என்ற கிசுகிசு பலகாலமாகவே வலம் வந்துகொண்டிருந்தது. அழைப்பு வந்ததென்னவோ உண்மைதான். ஆனால் காயத்ரி காங்கிரஸில் இணையவில்லை. அதற்கு எதிர்க்கட்சியாக, ராஜாஜியின் தலைமையில் உருவான சுதந்தரா கட்சியில் இணைந்தார் (1960). காரணம்? வலுவான எதிர்க்கட்சி ஏதுமின்றி காங்கிரஸ் அதுவரை செலுத்தி வந்த அதிகாரம் பல மட்டங்களில் அதிருப்தியை உருவாக்கியிருந்தது. ராஜஸ்தான் காங்கிரஸார், முன்னாள் ராஜ ஆட்சியாளர்களுக்கு மதிப்பு கொடுக்காமல் எடுத்திருந்த சில நடவடிக்கைகள் காயத்ரியைக் களமிறங்க வைத்தன.

‘அரசியலில் இறங்கி பதவிக்கு வர நினைக்கிற ராஜகுடும்பத்தினருக்கு மன்னர் மானியத்தொகை கிடையாது’ என்று சட்டசபையில் திருவாய் மலர்ந்தார் ராஜஸ்தான் காங்கிரஸ் முதல்வர் மோகன்லால் சுகாடியா. ‘அப்படியென்றால் காங்கிரஸில் இருக்கும் மன்னர்களுக்கு?’ என்று எதிர்க்கேள்வி எழ, சுகாடியா வாய்பொத்திக் கொண்டார். தங்களுக்குக் கிடைக்கும் மானியத் தொகைக்கு எதுவும் ஆபத்து வந்துவிடக்கூடாது என்றே பல மகாராஜாக்கள், இளவரசர்கள் காங்கிரஸில் அடைக்கலம் புகுந்திருந்தனர். ஆனால் எதிர்க்கட்சிகளில் இருந்த ராஜகுடும்பத்தினருடைய ‘மக்கள் செல்வாக்கை’ காலிபண்ணும் வேலையை காங்கிரஸ் தொடர்ந்தது.

1962 தேர்தல். ஜெய்ப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கு வேட்பாளராக காயத்ரியை அறிவித்தார் ராஜாஜி. ‘நான் உங்கள் மகாராஜாவின் மனைவி என்பதால் என்னை ஆதரிக்கிறீர்களா?’ – காயத்ரி மக்களிடம் நேரடியாகவே கேட்டார். பாதிக்கூட்டம் ‘ஆம்’ என்றது. ‘இல்லை, நீங்கள் எங்களுக்கு ஏற்கெனவே நிறைய செய்திருக்கிறீர்கள். இனியும் செய்வீர்கள்’ என்றது மீதிக்கூட்டம். பிரசாரத்தின் இறுதிநாள். ஜெய்ப்பூரில் காங்கிரஸ், ஜனசங்கம், சுதந்தரா – மூன்று கட்சிகளும் ஒரே நேரத்தில் பொதுக்கூட்டம் போட்டன. ஜெய் பேச்சைக் கேட்க திரண்ட சுமார் இரண்டு லட்சம் ஜனங்களைக் கண்டு எதிர்க்கட்சிகளுக்கு மூச்சடைத்தது.

தேர்தலில் ஜெய்ப்பூர் தொகுதியில் பதிவான ஓட்டுகள் 1,92,909. அதில் காயத்ரி வாங்கிய ஓட்டுகள் 1,57,692. கின்னஸ் புத்தகம் புதிய சாதனையைப் பதிவு செய்துகொண்டது.

*****

மன்னர் மானிய ஒழிப்புக்குப் பின்னும் இந்திரா காந்தி, எதிர்க்கட்சிகளிலிருந்த ராஜ பரம்பரையினரை விட்டுவைக்கவில்லை. வருமான வரி சோதனை முதல் பல விஷயங்களில் துன்பத்துக்கு ஆளானார் காயத்ரி. 1975ல் அவசரநிலை பிரகடனம். நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடருக்குச் சென்ற காயத்ரிக்கு அதிர்ச்சி. அவையில் காங்கிரஸார் மட்டும் இருந்தார்கள். அன்று மதியமே காயத்ரி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். உள்ளே இன்னொரு மகாராணி ‘ஹாய்’ சொன்னார், குவாலியரின் விஜயராஜே சிந்தியா.

கொசுக்கடி, எலித்தொல்லை, இருள் அறை இன்னல்கள். ஆறுமாத சிறைவாசத்துக்குப் பிறகு வெளியே வந்த காயத்ரி, தீவிர அரசியலிலிருந்து விலகிக்கொண்டார். இன்றுவரை ஜெய்ப்பூரின் ராஜமாதாவாக மக்கள் அபிமானத்தோடு அங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

*****

மேலே சொன்ன கடைசி வரி, இந்த ஏப்ரல் மாதத்தில் நான் எழுதியது. (குமுதம் ரிப்போர்ட்டர், அகம் புறம் அந்தப்புரம் தொடருக்காக.) அதை அடுத்த மூன்று மாதங்களுக்குள்ளாகவே மாற்ற வேண்டியது வரும் என்று எதிர்பார்க்கவில்லை.

அந்தக்காலத்து ஐஸ்வர்யாராய். மக்களோடு நெருங்கிப் பழகிய மகாராணி. இந்திரா காந்தியின் அரசியல் எதிரி. பெரு வாழ்க்கை வாழ்ந்த நல்ல மனுஷி. அடுத்த சில வருடங்களுக்குள் ஜெய்ப்பூருக்குச் சென்று காயத்ரி தேவியைச் சந்திக்க வேண்டும் ஆசை வைத்திருந்தேன். நேற்று மறைந்துவிட்டார்.

A Princess Remembers – The Memoirs of the Maharani of Jaipur
by Gayatri Devi

மகாராணி காயத்ரி தேவியின் நினைவுகளைச் சொல்லும் புத்தகம். அது மட்டும் இப்போது என்னிடம், பொக்கிஷமாக.

சார், வண்டி இருவது நிமிசம் நிக்கும் சார்…

சார்… வண்டி இருவது நிமிசம் நிக்கும் சார்… டீ, காப்பி, டிப்பன் சாப்பிடுறவங்கள்ளாம் எறங்கி சாப்பிடலாம் சார்..’

ஏய்… எந்திரிடா வெண்ணை… நைட்டு ரெண்டு மணிக்கு கொட்டுற பனியில ஒருத்தன் கா கா-னு கத்திக்கிட்டிருக்கேன். பஸ்சுல சன்னலோரமா சீட்டு கிடைச்சவுடனே, எதோ பரலோகத்துலயே சீட்டு கிடைச்சாப்புல பவுசா தூங்கிருவீங்களே.. அடச்சீ எந்திரி…

தப்பா நெனைச்சுக்காதீங்க. இந்த சாலையோர ஓட்டலுதான் எனக்கு எல்லாம். இந்த ரூட்டுல ஒரு மணி நேரத்துக்கு அம்பது வண்டி போச்சுதுன்னா, அதுல பத்து, பதினைஞ்சுதான் எங்க மொபசல் ஓட்டலுக்குள்ள வருது. ஏன்னா போட்டிக்கு நிறைய ஓட்டலு பக்கத்துலயே இருக்கு. பஸ்சு டிரைவரு, கண்டக்டரை சரிகட்டி, வண்டியை நம்ம ஓட்டலு பக்கமா நிப்பாட்ட வைக்குறதுக்குள்ள நாங்க படுற பாடு எங்களுக்குத்தான தெரியும். நிக்குற வண்டியில பாதி பேரு, உள்ளே ஒக்காந்து உலக மகா தூக்கம் தூங்கிட்டு இருந்தாங்கன்னா, எங்க பொழைப்பு என்னாவறது?

அதான் தூங்குறவனை எழுப்புறதுல தயவு தாட்சண்யமே பாக்குறது கிடையாது. வண்டி வந்து நின்னாப் போதும். உலக்கையை வைச்சு இடிக்குற மாதிரி என் கையால பஸ்ஸைச் சுத்தித் தடதடனு தட்டிக்கிட்டே ‘டீ… காப்பி… டிப்பன்’னு கத்த ஆரம்பிச்சுருவேன். தட்டுற, தட்டுல அவனவன் அரண்டு, மிரண்டு பதறி அடிச்சுக்கிட்டு முழிப்பான். ஒண்ணுமே புரியாம இறங்கி வந்துருவான்.

ஆனா, சில பேரு இருக்கான் பாருங்க, ஏதோ வாழ்க்கையில அன்னிக்குத்தான் மொத மொதலா தூங்குறாப்புல போஸ் கொடுத்துட்டு இருப்பானுங்க! அது என்னை அவமானப்படுத்துற மாதிரி இருக்கும். விடுவேனா… என்னோட வால்யூமை ஃபுல்லா ஏத்திக்கிட்டு, பஸ் சன்னல்கிட்ட போயி கத்தோ கத்துன்னு கத்துவேன். பஸ்சு மேல முட்டோ முட்டுன்னு முட்டுவேன். அப்புறமென்ன, எவனாயிருந்தாலும் இறங்கித்தான் ஆவணும்.

இந்த மொபசல் ஓட்டல் வளாகத்துல சம்பந்தமேயில்லாத ஆடியோ கேசட் கடை ஒண்ணு துருத்திக்கிட்டிருக்கும். அது எதுக்குன்னு தெரியுமா! தூங்குறவங்களை எழுப்ப இன்னொரு டெக்னிக். கேசட்டைப் போட்டு, பெருசாக் கத்த விட்டுருவோம்.

‘பார்த்த முத நாளே.. உன் மூஞ்ச
பார்த்த முத நாளே..
டாஸ்மாக் போனேனே – நாந்தான்
டாஸ்மாக் போனேனே!’

இந்த ரேஞ்சுலதான் பாட்டெல்லாம். இதைப் பாடுறதுக்குன்னே கொடூர குரல்களோட ஒரு குரூப் இருக்குது. இதைக் கேட்டா, செத்துப்போனவனே கூட எந்திரிக்க சான்ஸ் இருக்கு. இந்தக் கேசட்டையும் சில ‘நல்ல மனுசங்க’ காசு கொடுத்து வாங்கிட்டுப் போவானுங்க தெரியுமா!

பஸ்சை விட்டு இறங்குன உடனே பாதி பேரு அப்படியே அங்கிட்டும் இங்கிட்டு நோட்டம் விடுவாங்க. அதாவது டாய்லெட்டுக்குப் போகாம, அப்படியே ஓரமா ஒதுங்கிடலாம், ஒரு ரூவாயை மிச்சப்படுத்தலாமுன்னு உலக மகா திட்டம் போடுவாங்க. வா மவனே வா, நீ உற்சாகமா திறந்தவெளி புல்கலைக்கழகத்துல போறதுக்கா, நாங்க காசைப் போட்டு கருமத்தைக் கட்டி வெச்சிருக்கோம்னு மரியாதையாச் சொல்லுவேன். அப்படியும் சில பேரு கேட்க மாட்டான். இன்னும் கொஞ்சம் தள்ளிப் போயி இருக்கலாமுன்னு அறிவுபூர்வமா திட்டம் போடுவானுங்க. நான் விடுவேனா.

‘எப்பா.. நீ உள்ள போயி இருக்க வேணாம். எங்கிட்டு வேணும்னாலும் போய் இரு. ஆனா ஒரு ரூவாக் காசைக் கொடுத்துரு’ன்னு கட் அண்டு ரைட்டாச் சொல்லுவேன். அப்புறமென்ன, ஒரு ரூவாயக் கொடுத்துட்டு, மூக்கைப் புடிச்சிக்கிட்டு உள்ளயே போயிருவான்.

பக்கத்துல நாலு மைலு தொலைவுல இருக்குற பசுமரத்துப்பட்டிதான் என் சொந்த ஊரு. நான் இந்த ஓட்டல்ல எட்டு வருசமா இப்படி எடுபுடி வேலைகளைப் பாத்துக்கிட்டிருக்கேன். எல்லா வேலையும் செய்வேன். இப்படி வந்து நிக்குற வண்டிங்க மத்தியிலதான் இந்த டேவிட்டோட வாழ்க்கை ஓடிக்கிட்டிருக்கு.

நேத்து வடநாட்டுக்காரன் ஒருத்தன் வந்தான். செம கடுப்பைக் கிளப்பிட்டான். ஆம்னி பஸ்ல இருந்து இறங்குனான். கேவலமா ஒரு கொட்டாவி விட்டுக்கிட்டே படு பங்கரையா சோம்பல் முறிச்சான். இளநி எவ்ளோன்னு இங்கிலீஷ்ல விசாரிச்சான். வாங்கல. அடுத்து கூல்டிரிங்ஸ் எவ்ளோன்னு ஹிந்தியில விசாரிச்சான். வாங்கல. அடுத்து டீ எவ்ளோன்னு சைகையிலேயே விசாரிச்சான். அதையும் குடிக்கல. இப்படி கொலை கேஸை விசாரிக்க வந்த இன்ஸ்பெக்டர் மாதிரி எல்லாத்தையும் விசாரிச்சிட்டு ஓரமா போய் ஒக்காந்துட்டான்.

எனக்குள்ள டென்ஷன் தாண்டவமாடிடுச்சு. அவன்கிட்ட போய், ஒரு ரசீதை நீட்டி ‘டென் ரூபிஸ்’னு மிரட்டலா சொன்னேன். ‘கியா?’ன்னு முழிச்சான். ‘டிக்கி பார்க்கிங் சார்ஜ்’னு சொன்னேன். ஒண்ணும் புரியாம பத்து ரூபாயைக் கொடுத்துட்டு பஸ்சுக்குள்ள ஏறிப் பதுங்கிட்டான்.

போன வாரம் இன்னொரு காமெடி நடந்துச்சு. ஒரு கவர்மெண்டு பஸ்சு வந்துச்சு. உள்ளயிருந்து வந்த ஆம்பிளைங்க எல்லாம், படு சோகமா நாலு நாள் தாடியோட இறங்குனாங்க. ஒருத்தர் மட்டும் எங்கிட்ட வந்து, ‘ஏம்ப்பா, இங்க சலூன்லாம் கெடையாதா?’ன்னு கேட்டாரு. ‘இல்லை’ன்னு சொன்னவுடனே, ‘முடிஞ்சா ஒரு சலூனையும் வைச்சிருங்க அப்பு. பாதயாத்திரையா கெளம்பியிருந்தாக் கூட இந்நேரம் ஊரு போய்ச் சேர்ந்திருப்பேன். கட்டையில போறவன்… இந்த பஸ்சுல நான் என்னிக்கு ஏறி ஒக்காந்துன்னு எனக்கே நியாபகத்துல இல்ல. இன்னும் ஊரு போய்ச் சேரல’ன்னு கண்ணீர் மல்க கதறிட்டாரு. அப்ப, அந்த பஸ் கண்டக்டரு வந்து, ‘ஏம்ப்பா, எல்லாரும் வண்டியில ஏறியாச்சா? நேராவுது. காலாகாலத்துல போய்ச் சேர வேணாமா’ன்னாரே பாக்கலாம்.

ஒரு வழியா அந்தக் கட்டை வண்டி கெளம்பிப் போச்சுது. அடுத்த அஞ்சு நிமிஷம் கழிச்சு, ஒரு ஆளு ‘குய்யோ முய்யோ’ன்னு கத்திக்கிட்டே ஓடியாந்தாரு. ‘இங்கிட்டுருந்த மஞ்சக் கலரு வண்டியெங்க? அய்யய்யோ.. நான் அதுல போனுமே’ன்னு அழுதாரு. ‘அதான் போயிருச்சே. போனும் போனும்னா என்னாத்த பண்ணுறது’ன்னு கேட்டேன்.

‘அய்யா.. வவுத்தக் கலக்குச்சுன்னு வெளிய போனேன். போயிட்டு வந்தவுடனே, பசிக்குற மாதிரி இருந்துச்சேன்னு போய்ச் சாப்பிட்டேன். மறுபடியும் வவுத்தக் கலக்குச்சுதுன்னு வெளிய போய்ட்டு வந்தேன். மறுபடியும் பசிச்சிருமோன்னு பயந்து இன்னொரு தடவைக் கொஞ்சமா சாப்பிட்டேன். பஸ்ல ஏறினா திரும்ப வவுத்தக் கலக்குமோன்னு பயம் வந்துருச்சு. அதான் மறுபடியும் வெளிய போய்ட்டு வந்து, பார்சல் ஒண்ணு வாங்கிட்டு வந்து பாக்குறேன். பஸ்சைக் காணோமே’ன்னு அழுதாரு.

‘யோவ்.. நீ உன் இஷ்டத்துக்கு ‘உள்ளே-வெளியே’ விளையாண்டுக்கிட்டு இருந்தேன்னா பஸ்சு வெயிட் பண்ணுமா? சரி, அடுத்த வண்டி இந்தா நிக்குது. டிக்கெட் வெச்சிருக்கேல்ல. சொல்லி ஏத்தி உடுறேன். கவலைப்படாத, நீ வந்த வண்டி போற ஸ்பீடுக்கு அங்கப்பிரதட்சணம் பண்ணிக்கிட்டே போனாக்கூட ஓவர்டேக் பண்ணிடலாம்’னு சமாதானப்படுத்தி அடுத்த வண்டியில அனுப்பி விட்டேன்.

ம்.. இப்படியே ‘டீ.. காப்பி.. டிப்பன்’னு கூவிக்கிட்டு, வர்ற வண்டிக்கெல்லாம் கண்ணாடி துடைச்சு விட்டுக்கிட்டே பொழைப்பை எவ்வளவு நாள்தான் ஓட்ட முடியும்? நானும் எனக்குன்னு சில கனவுகளை வெச்சிருக்கேன். எடுபிடியா நான் வேலை பாக்குற இந்த ஓட்டல் வளாகத்துலயே ஒரு சின்னக் கடையைப் போடணும். அப்படியே சினிமாவுல வர்ற மாதிரி மளமளன்னு முன்னேறணும். கடைசியில ஒருநாள் இந்த ஓட்டல் வளாகமே எனக்குச் சொந்தமா இருக்கணும். எப்படி, சூப்பரா இருக்குல்ல!

வருங்காலத்துல நான் நடத்தப்போற ஓட்டல்ல பஸ்சு மட்டும் வந்து நிக்காது. ஸ்பெஷலா டிராக்கு போட்டு டிரெயினெல்லாம் உள்ளாற வந்து டீ சாப்பிட்டு போற மாதிரி வசதி செய்வேன். அவ்வளவு ஏன், ரன் வே-லாம் போட்டு ஏரோ-ப்ளேனே வந்து இறங்கி இட்லி சாப்பிட்டுட்டு போகும்னா பாத்துக்கோங்க! அவ்வளவு ஹை-டெக்! நான் முதலாளியாவே இருந்தாலும், வர்றது ஏரோ-ப்ளேனாவே இருந்தாலும், பழசை மறக்க மாட்டேன். அப்பவும் நான் தட்டி எழுப்புவேன்.

‘சார்… ஏரோப்ளேன் பதினைஞ்சு நிமிசம் நிக்கும் சார்… டீ, காப்பி, டிப்பன் சாப்பிடுறவங்களெல்லாம் இறங்கி வந்து சாப்பிடலாம் சார்…’