கதவை மூடு! கடன்காரன் போகட்டும்!

(இந்தக் கட்டுரையைப் படிக்கும்போது உங்களுக்கு மைன்டே ரிலாக்ஸ் ப்ளீஸ், டோரைத் திற – காற்று ‘கம்’மட்டும், ALL-க்கும் ஆசைப்படு – போன்றவை ஞாபகத்துக்கு வந்தால் அதற்கு அடியேன் பொறுப்பல்ல, அது உங்கள் ஞாபக சக்தியின் கோளாறு!)

மனம் ஒரு மங்காத்தா! உள்ளே வெளியே உள்ளே வெளியே எனத் துள்ளிக்குதிக்கும் புனிதச் சாத்தான்! மனம் ஒரு பத்தி மானாவாரியா பேசலாம்!  இது (கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்லாமல்) உங்கள் உள்ளங்களின் உள்ளே வந்து எட்டிப்பார்க்கும் உற்சாகத் தொடர். உங்கள் இதயக் கதவைப் படாரெனத் திறந்து சடாரென (தொறந்த வீட்டில் வாலாட்டிக் கொண்டே) நுழையும் டானிக் தொடர். ஆனால் இது தொடரல்ல!

உங்களை நீங்களே உற்றுப் பார்க்க வேண்டிய தருணம் இது. நன்றாகப் பாருங்கள். ஆழமாகப் பாருங்கள். அழுத்தமாகப் பாருங்கள். எவ்வளவு முடியுமோ அவ்வளவு பாருங்கள். பார்த்துக் கொண்டே இருங்கள். அதற்கு மேலும் உங்களை உங்களாலேயே பார்க்க முடியாது. வெறுப்பு வந்து விடும். செருப்பைக் கழற்றி விடு! அடுப்பை அணைத்து விடு! பழைய சோற்றைத் தின்னுவிட்டு பரலோகத்தை அடைந்துவிடு!

ஒரு குட்டிக்கதை! ஷங்கன் பிள்ளை ரொம்ப நல்லவர். ஆனால் தன்னை அறியாமல் கெட்டவராக வாழ்ந்து வந்தார் நல்லவிதமாக! அவருக்கு ‘அல்வா’ சாப்பிட ஆசை வந்தது. ஒரு கடையில் சென்று அல்வா சாப்பிட்டுவிட்டு வந்தார். ஆனால் காசு கொடுக்கவில்லை. அது தவறில்லை. ஏனென்றால் அது வெற்றிலை பாக்குக் கடை. அங்கு அல்வா கிடைக்காது. யாருக்காகவோ வாங்கி வைக்கப்பட்டிருந்த அல்வாவை ஷங்கன் பிள்ளை எடுத்துச் சாப்பிட்டார். நீதி : இருக்கும் என்று நினைத்துப் போகுமிடத்தில், இல்லாத பொருள் இருக்கும்போது, அதை இல்லாமல் செய்துவிடுதல் தவறில்லை. ஷங்கன் பிள்ளை அதைச் செய்தார். அவர் நல்லவர்தான். கெட்டவராகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளார். அதனால் உங்களை நீங்களே புரிந்துகொள்ளுங்கள். அறிந்து கொள்ளுங்கள். அரிப்பெடுத்தால் சொறிந்து கொள்ளுங்கள்!

பார். கண்ணால் பார். கண்டதை அகக் கண்ணால் நோக்கு. ‘கண்டதை’யெல்லாம் காணாதே! பசியுள்ளவன் கண்ணுக்கு இடியாப்பம், பாயா தான் தெரியும்; அதை விற்கும் இடுப்பொடிஞ்ச ‘ஆயா’ தெரியாது. தூக்கம் உள்ளவன் கண்ணுக்குப் பாய்தான் தெரியும். பக்கத்துல கிடக்குற நாய் தெரியாது. கண்ணாடி போட்டவன் கண்ணுக்கு முதலில் அந்தக் கண்ணாடிதான் தெரியவேண்டும். ஆனால், கண்ணடிக்கிற ஃபிகர் தெரிஞ்சா அது வயசுக் கோளாறு. தெரியாவிட்டால் வாயுக் கோளாறு! வாஸ்துக் கோளாறு!

ஒரு ‘ஸென்’ கதை! அவருக்கு வாழ்வில் எப்படியாவது தான் விரும்பிய ‘அதை’ வாங்கி விட ஆசை. அதனால் தன்னிடமிருந்த விமானத்தை விற்றார். சொகுசுப் பேருந்துகளை விற்றார். ஆடம்பர பங்களாக்களை விற்றார். எல்லாவற்றையும் செலவழித்துவிட்டு, மீதித் தொகையில் தான் வாங்க விரும்பியதை, அந்த ‘ஸென்’ காரை வாங்கினார். இந்தக் கதை விளக்குவது என்ன?

உன் லட்சியம் என்னவோ அதை நோக்கி ஓடு; முடியவில்லையா, ஆட்டோ வைத்துப் போ. அவ்வளவு காசில்லையா? லட்சியத்தை மாற்றிக் கொள்! ஏனெனில் மாற்றம் மட்டுமே மாற்றமில்லாதது!
யார் நீ? எங்கிருந்து வந்தாய்? ஏன் வந்தாய்? எப்படி வந்தாய்? எதற்காக வந்தாய்? இப்படி கேள்விகள் நிறைந்தது வாழ்க்கை. பதில் சொல்லிக்கொண்டிருந்தால் பஸ் போய் விடும். பல்லை விளக்கிவிட்டுப் பள்ளிக்கூடம் கிளம்பு. அது தான் வாழ்க்கை என்று யாரும் சொல்லிவிட முடியாது. ஏனெனில் அதுதான் வாழ்க்கை.

அந்தக் கதையில் ஷங்கன் பிள்ளை என்ன சொன்னார்? என்னென்னமோ சொன்னார். அவர் அங்கு சொன்னதைத்தான் இங்கு நான் மீண்டும் சொல்கிறேன். என்னவென்று கேட்கிறீர்களா? கேட்பது சுலபம். எதைச் சுலபமாக நினைக்கிறீர்களோ அதைச் செய்யாதீர்கள். அது அந்நியருக்கு நம்மை நாமே அடிமைப்படுத்தும் செயல். யார் அந்நியன்? நாம்தான் அந்நியன்! நமக்குள் ஒரு அந்நியன்! உன்னைத் திற. ஒரு எழவும் பொங்காது! பீர் டின்னைத் திற. உற்சாகம் பொங்கும்!

ஒரு சிஷ்யன் என்னைத் தேடி வந்தான். ‘சாமி! முக்தி நிலையை அடைய என்ன செய்ய வேண்டும்?’ என்றான். சொன்னேன். விளக்கமாகச் சொன்னேன். ‘முதலில் இரண்டு கைகளையும் நன்றாய் விரி. பற. கைகளைச் சிறகாய்ப் பாவித்து வேகமாக அசை. அசைத்துக்கொண்டே மொட்டை மாடிக்குப் போ. நீ இப்போது உயரத்திலிருப்பாய்! பல படிகள் உயர்ந்திருப்பாய்! கால்களால் ஓட ஆரம்பி. சுற்றிச் சுற்றி ஓடு. கண்களை மூடிக்கொண்டு ஓடு. மோனத்தைத் தேடி ஓடு. கண்ணு மண்ணு தெரியாமல் ஓடு. கட்டாயம் முக்தி நிலை கிடைக்கும். மோட்ச நிலை கிடைக்கும்’ என்றேன். செய்தான். ‘கபால’ மோட்சம் பெற்றான்.

‘பற்று’ என்பது வேண்டும். எப்பொழுதும் வேண்டும். எங்கேயும் வேண்டும். பற்று இல்லாவிட்டால் வாழ்க்கையை வாழ முடியாது. டீக்கடை முதல் மளிகைக் கடை வரை பற்றின்றி வாழுதல் உற்றதல்ல உடம்புக்கு! உனக்கு எப்போதெல்லாம் தேவையோ அப்போதெல்லாம் ‘பற்று’ வை. முடியவில்லையா ஓரமா உட்கார்ந்து ஒரு ‘தம்’மை பற்ற வை!

நடப்பதுதான் நடக்கும். நாற்காலி நடக்காது. மலை மீது மழை பொழியும். மழை மீது மலை பொழியுமா? ‘எண்ணு’வதெல்லாம் எண்ணமாகாது. சில்லறையாகக் கூட இருக்கலாம். சம்சாரம் மீது மின்சாரம் பாய்வதற்கும், மின்சாரம் மீதும் சம்சாரம் பாய்வதற்கும் குறைந்தபட்சம் ஆறு வித்தியாசங்கள் உள்ளதே! லுங்கி கட்டிக்கொண்டு வங்கி போகலாம். வங்கியைக் கட்டியவன் லுங்கி கட்டிக்கொண்டு இருந்திருக்கலாம். இதில் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டியது, ஒன்றுமில்லை! ஒன்றுமில்லாததுதான் பூஜ்யம்! ஆனால் பூஜ்யத்திற்கு மதிப்பு உண்டு. அதுதான் மனம்.

மனதைத் திறந்து வை! மூடி வைப்பதற்கு அது முந்திரிப்பருப்பு அல்ல! கதவைத் திறந்தால் காற்று வரலாம். காத்து, கருப்புக் கூட வரலாம்! பன்றிக் காய்ச்சலும் வரலாம்! முதலில் மூடி வை! கடன்காரன் வந்துவிடப்போகிறான்! ஏனெனில் மனம் ஒரு கடன்காரன்!

சார், வண்டி இருவது நிமிசம் நிக்கும் சார்…

சார்… வண்டி இருவது நிமிசம் நிக்கும் சார்… டீ, காப்பி, டிப்பன் சாப்பிடுறவங்கள்ளாம் எறங்கி சாப்பிடலாம் சார்..’

ஏய்… எந்திரிடா வெண்ணை… நைட்டு ரெண்டு மணிக்கு கொட்டுற பனியில ஒருத்தன் கா கா-னு கத்திக்கிட்டிருக்கேன். பஸ்சுல சன்னலோரமா சீட்டு கிடைச்சவுடனே, எதோ பரலோகத்துலயே சீட்டு கிடைச்சாப்புல பவுசா தூங்கிருவீங்களே.. அடச்சீ எந்திரி…

தப்பா நெனைச்சுக்காதீங்க. இந்த சாலையோர ஓட்டலுதான் எனக்கு எல்லாம். இந்த ரூட்டுல ஒரு மணி நேரத்துக்கு அம்பது வண்டி போச்சுதுன்னா, அதுல பத்து, பதினைஞ்சுதான் எங்க மொபசல் ஓட்டலுக்குள்ள வருது. ஏன்னா போட்டிக்கு நிறைய ஓட்டலு பக்கத்துலயே இருக்கு. பஸ்சு டிரைவரு, கண்டக்டரை சரிகட்டி, வண்டியை நம்ம ஓட்டலு பக்கமா நிப்பாட்ட வைக்குறதுக்குள்ள நாங்க படுற பாடு எங்களுக்குத்தான தெரியும். நிக்குற வண்டியில பாதி பேரு, உள்ளே ஒக்காந்து உலக மகா தூக்கம் தூங்கிட்டு இருந்தாங்கன்னா, எங்க பொழைப்பு என்னாவறது?

அதான் தூங்குறவனை எழுப்புறதுல தயவு தாட்சண்யமே பாக்குறது கிடையாது. வண்டி வந்து நின்னாப் போதும். உலக்கையை வைச்சு இடிக்குற மாதிரி என் கையால பஸ்ஸைச் சுத்தித் தடதடனு தட்டிக்கிட்டே ‘டீ… காப்பி… டிப்பன்’னு கத்த ஆரம்பிச்சுருவேன். தட்டுற, தட்டுல அவனவன் அரண்டு, மிரண்டு பதறி அடிச்சுக்கிட்டு முழிப்பான். ஒண்ணுமே புரியாம இறங்கி வந்துருவான்.

ஆனா, சில பேரு இருக்கான் பாருங்க, ஏதோ வாழ்க்கையில அன்னிக்குத்தான் மொத மொதலா தூங்குறாப்புல போஸ் கொடுத்துட்டு இருப்பானுங்க! அது என்னை அவமானப்படுத்துற மாதிரி இருக்கும். விடுவேனா… என்னோட வால்யூமை ஃபுல்லா ஏத்திக்கிட்டு, பஸ் சன்னல்கிட்ட போயி கத்தோ கத்துன்னு கத்துவேன். பஸ்சு மேல முட்டோ முட்டுன்னு முட்டுவேன். அப்புறமென்ன, எவனாயிருந்தாலும் இறங்கித்தான் ஆவணும்.

இந்த மொபசல் ஓட்டல் வளாகத்துல சம்பந்தமேயில்லாத ஆடியோ கேசட் கடை ஒண்ணு துருத்திக்கிட்டிருக்கும். அது எதுக்குன்னு தெரியுமா! தூங்குறவங்களை எழுப்ப இன்னொரு டெக்னிக். கேசட்டைப் போட்டு, பெருசாக் கத்த விட்டுருவோம்.

‘பார்த்த முத நாளே.. உன் மூஞ்ச
பார்த்த முத நாளே..
டாஸ்மாக் போனேனே – நாந்தான்
டாஸ்மாக் போனேனே!’

இந்த ரேஞ்சுலதான் பாட்டெல்லாம். இதைப் பாடுறதுக்குன்னே கொடூர குரல்களோட ஒரு குரூப் இருக்குது. இதைக் கேட்டா, செத்துப்போனவனே கூட எந்திரிக்க சான்ஸ் இருக்கு. இந்தக் கேசட்டையும் சில ‘நல்ல மனுசங்க’ காசு கொடுத்து வாங்கிட்டுப் போவானுங்க தெரியுமா!

பஸ்சை விட்டு இறங்குன உடனே பாதி பேரு அப்படியே அங்கிட்டும் இங்கிட்டு நோட்டம் விடுவாங்க. அதாவது டாய்லெட்டுக்குப் போகாம, அப்படியே ஓரமா ஒதுங்கிடலாம், ஒரு ரூவாயை மிச்சப்படுத்தலாமுன்னு உலக மகா திட்டம் போடுவாங்க. வா மவனே வா, நீ உற்சாகமா திறந்தவெளி புல்கலைக்கழகத்துல போறதுக்கா, நாங்க காசைப் போட்டு கருமத்தைக் கட்டி வெச்சிருக்கோம்னு மரியாதையாச் சொல்லுவேன். அப்படியும் சில பேரு கேட்க மாட்டான். இன்னும் கொஞ்சம் தள்ளிப் போயி இருக்கலாமுன்னு அறிவுபூர்வமா திட்டம் போடுவானுங்க. நான் விடுவேனா.

‘எப்பா.. நீ உள்ள போயி இருக்க வேணாம். எங்கிட்டு வேணும்னாலும் போய் இரு. ஆனா ஒரு ரூவாக் காசைக் கொடுத்துரு’ன்னு கட் அண்டு ரைட்டாச் சொல்லுவேன். அப்புறமென்ன, ஒரு ரூவாயக் கொடுத்துட்டு, மூக்கைப் புடிச்சிக்கிட்டு உள்ளயே போயிருவான்.

பக்கத்துல நாலு மைலு தொலைவுல இருக்குற பசுமரத்துப்பட்டிதான் என் சொந்த ஊரு. நான் இந்த ஓட்டல்ல எட்டு வருசமா இப்படி எடுபுடி வேலைகளைப் பாத்துக்கிட்டிருக்கேன். எல்லா வேலையும் செய்வேன். இப்படி வந்து நிக்குற வண்டிங்க மத்தியிலதான் இந்த டேவிட்டோட வாழ்க்கை ஓடிக்கிட்டிருக்கு.

நேத்து வடநாட்டுக்காரன் ஒருத்தன் வந்தான். செம கடுப்பைக் கிளப்பிட்டான். ஆம்னி பஸ்ல இருந்து இறங்குனான். கேவலமா ஒரு கொட்டாவி விட்டுக்கிட்டே படு பங்கரையா சோம்பல் முறிச்சான். இளநி எவ்ளோன்னு இங்கிலீஷ்ல விசாரிச்சான். வாங்கல. அடுத்து கூல்டிரிங்ஸ் எவ்ளோன்னு ஹிந்தியில விசாரிச்சான். வாங்கல. அடுத்து டீ எவ்ளோன்னு சைகையிலேயே விசாரிச்சான். அதையும் குடிக்கல. இப்படி கொலை கேஸை விசாரிக்க வந்த இன்ஸ்பெக்டர் மாதிரி எல்லாத்தையும் விசாரிச்சிட்டு ஓரமா போய் ஒக்காந்துட்டான்.

எனக்குள்ள டென்ஷன் தாண்டவமாடிடுச்சு. அவன்கிட்ட போய், ஒரு ரசீதை நீட்டி ‘டென் ரூபிஸ்’னு மிரட்டலா சொன்னேன். ‘கியா?’ன்னு முழிச்சான். ‘டிக்கி பார்க்கிங் சார்ஜ்’னு சொன்னேன். ஒண்ணும் புரியாம பத்து ரூபாயைக் கொடுத்துட்டு பஸ்சுக்குள்ள ஏறிப் பதுங்கிட்டான்.

போன வாரம் இன்னொரு காமெடி நடந்துச்சு. ஒரு கவர்மெண்டு பஸ்சு வந்துச்சு. உள்ளயிருந்து வந்த ஆம்பிளைங்க எல்லாம், படு சோகமா நாலு நாள் தாடியோட இறங்குனாங்க. ஒருத்தர் மட்டும் எங்கிட்ட வந்து, ‘ஏம்ப்பா, இங்க சலூன்லாம் கெடையாதா?’ன்னு கேட்டாரு. ‘இல்லை’ன்னு சொன்னவுடனே, ‘முடிஞ்சா ஒரு சலூனையும் வைச்சிருங்க அப்பு. பாதயாத்திரையா கெளம்பியிருந்தாக் கூட இந்நேரம் ஊரு போய்ச் சேர்ந்திருப்பேன். கட்டையில போறவன்… இந்த பஸ்சுல நான் என்னிக்கு ஏறி ஒக்காந்துன்னு எனக்கே நியாபகத்துல இல்ல. இன்னும் ஊரு போய்ச் சேரல’ன்னு கண்ணீர் மல்க கதறிட்டாரு. அப்ப, அந்த பஸ் கண்டக்டரு வந்து, ‘ஏம்ப்பா, எல்லாரும் வண்டியில ஏறியாச்சா? நேராவுது. காலாகாலத்துல போய்ச் சேர வேணாமா’ன்னாரே பாக்கலாம்.

ஒரு வழியா அந்தக் கட்டை வண்டி கெளம்பிப் போச்சுது. அடுத்த அஞ்சு நிமிஷம் கழிச்சு, ஒரு ஆளு ‘குய்யோ முய்யோ’ன்னு கத்திக்கிட்டே ஓடியாந்தாரு. ‘இங்கிட்டுருந்த மஞ்சக் கலரு வண்டியெங்க? அய்யய்யோ.. நான் அதுல போனுமே’ன்னு அழுதாரு. ‘அதான் போயிருச்சே. போனும் போனும்னா என்னாத்த பண்ணுறது’ன்னு கேட்டேன்.

‘அய்யா.. வவுத்தக் கலக்குச்சுன்னு வெளிய போனேன். போயிட்டு வந்தவுடனே, பசிக்குற மாதிரி இருந்துச்சேன்னு போய்ச் சாப்பிட்டேன். மறுபடியும் வவுத்தக் கலக்குச்சுதுன்னு வெளிய போய்ட்டு வந்தேன். மறுபடியும் பசிச்சிருமோன்னு பயந்து இன்னொரு தடவைக் கொஞ்சமா சாப்பிட்டேன். பஸ்ல ஏறினா திரும்ப வவுத்தக் கலக்குமோன்னு பயம் வந்துருச்சு. அதான் மறுபடியும் வெளிய போய்ட்டு வந்து, பார்சல் ஒண்ணு வாங்கிட்டு வந்து பாக்குறேன். பஸ்சைக் காணோமே’ன்னு அழுதாரு.

‘யோவ்.. நீ உன் இஷ்டத்துக்கு ‘உள்ளே-வெளியே’ விளையாண்டுக்கிட்டு இருந்தேன்னா பஸ்சு வெயிட் பண்ணுமா? சரி, அடுத்த வண்டி இந்தா நிக்குது. டிக்கெட் வெச்சிருக்கேல்ல. சொல்லி ஏத்தி உடுறேன். கவலைப்படாத, நீ வந்த வண்டி போற ஸ்பீடுக்கு அங்கப்பிரதட்சணம் பண்ணிக்கிட்டே போனாக்கூட ஓவர்டேக் பண்ணிடலாம்’னு சமாதானப்படுத்தி அடுத்த வண்டியில அனுப்பி விட்டேன்.

ம்.. இப்படியே ‘டீ.. காப்பி.. டிப்பன்’னு கூவிக்கிட்டு, வர்ற வண்டிக்கெல்லாம் கண்ணாடி துடைச்சு விட்டுக்கிட்டே பொழைப்பை எவ்வளவு நாள்தான் ஓட்ட முடியும்? நானும் எனக்குன்னு சில கனவுகளை வெச்சிருக்கேன். எடுபிடியா நான் வேலை பாக்குற இந்த ஓட்டல் வளாகத்துலயே ஒரு சின்னக் கடையைப் போடணும். அப்படியே சினிமாவுல வர்ற மாதிரி மளமளன்னு முன்னேறணும். கடைசியில ஒருநாள் இந்த ஓட்டல் வளாகமே எனக்குச் சொந்தமா இருக்கணும். எப்படி, சூப்பரா இருக்குல்ல!

வருங்காலத்துல நான் நடத்தப்போற ஓட்டல்ல பஸ்சு மட்டும் வந்து நிக்காது. ஸ்பெஷலா டிராக்கு போட்டு டிரெயினெல்லாம் உள்ளாற வந்து டீ சாப்பிட்டு போற மாதிரி வசதி செய்வேன். அவ்வளவு ஏன், ரன் வே-லாம் போட்டு ஏரோ-ப்ளேனே வந்து இறங்கி இட்லி சாப்பிட்டுட்டு போகும்னா பாத்துக்கோங்க! அவ்வளவு ஹை-டெக்! நான் முதலாளியாவே இருந்தாலும், வர்றது ஏரோ-ப்ளேனாவே இருந்தாலும், பழசை மறக்க மாட்டேன். அப்பவும் நான் தட்டி எழுப்புவேன்.

‘சார்… ஏரோப்ளேன் பதினைஞ்சு நிமிசம் நிக்கும் சார்… டீ, காப்பி, டிப்பன் சாப்பிடுறவங்களெல்லாம் இறங்கி வந்து சாப்பிடலாம் சார்…’

வில்லு லொள்ளு!

வில்லு இன்று ரிலீஸ். பொதுவாக எனக்கு விஜய்-ன் சமீபகால மசாலா படங்களில் விருப்பமில்லை. ஆதி என்றொரு படத்தை கல்கியில் விமரிசனம் எழுதுவதற்காக பார்த்தேன். அதற்குபின் விஜய் படங்களோடு உறவை முறித்துக்கொண்டேன். கெட்-அப் மாற்றக்கூட தயங்கும் விஜய், மாறாத ஒரே கமர்ஷியல் ஃபார்முலா, காது ஜவ்வைக் கிழிக்கும் தமிழ்க்கொலை பாடல்கள் – இளைய தளபதி என்னைப் பொருத்தவரையில் என்றும் தளபதியாக மட்டும்தான் இருப்பார்போல.

சரி. இனி கற்பனை. (நிஜமாகக்கூட நடந்திருக்கலாம்.) விஜய் படம் ஒன்றின் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு எப்படி ஸீன் டிஸ்கஷன் நடந்திருக்கும்? பார்க்கலாமா.

(‘மது, புகை வீட்டுக்கு நாட்டுக்கு உயிருக்கு கேடு’ என்ற வாசகத்தை தேவைப்படும் இடங்களில் உபயோகித்துக் கொள்ளவும்.)

கொத்துப் பரோட்டா டைரக்டர் பிரபுதேவா (அ) பேரரசு, அக்மார்க் மசாலா ஹீரோ விஜய், ஸ்டண்ட் மாஸ்டர் பவர் பங்காரு, தயாரிப்பாளர் சேட் லாலாஜி – இவங்க எல்லாம் சேர்ந்து.. என்ன சமூக சேவையாப் பண்ணப் போறாங்க. ஐந்து நட்சத்திர ஹோட்டல்ல ரூம் போட்டு உட்காந்து ‘ஸ்டண்ட் ஸீன்’ டிஸ்கஷன் பண்ணுறாங்க. தெலுங்குப் படத்தோட தமிழ் ரீமேக். படத்தோட பேரு (பெத்த பேரு) ‘காரியாப்பட்டி’ (தெலுங்குல ‘பிரேம கொடுக்கு’). நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீந்துவதுவேன்னு சகல ஜீவராசிகளும் ஆந்திராக் காரத்தோட, மசாலா பூசிக்கிட்டு படுத்துக்கிடக்க, ஆல்கஹால், நிக்கோடின் ‘கப்’போட ஸ்டண்ட டிஸ்கஷன்ல பரபரன்னு பொறி பறக்குது. அப்படியே அந்த ‘மூடு’க்கு வந்துட்டீங்களா.. போலாம் ரை ரைட்!

இயக்குநர் : இது க்ளைமாக்ஸ் பைட்டு.
ஸ்டண்ட் : ஆங்.. அது எப்ப வரும்?
இயக்குநர் : இண்டர்வெல் முடிஞ்சதும் ஆரம்பிக்குது. க்ளைமாக்ஸ் வரைக்கும் விடாம உதைக்கிறோம். ஸ்கீரின்ல அப்படியே ரத்தவாடை அடிக்கணும். படம் முடிஞ்சு வெளிய போற ஒவ்வொருத்தணும் உடம்புல மாவுக்கட்டோடத்தான் வீட்டுக்கே போகணும்.
ஸ்டண்ட் : அத்த நம்ம கைல வுடு கண்ணு. புச்சா நெறைய மேட்டர் திங்க் பண்ணி வச்சிக்கீறேன். ஒவ்வொன்னத்தயும் எட்த்து வுட்டேன் வெச்சுக்கோ, ரசிகனுங்க பீஸ் பீஸ் ஆயிடுவானுங்க. நம்ம ஹீரோக்கு மாஸ் மாஸ் பிச்சுக்கும். ஆஹ்ஹாங்!
விஜய் : இல்லீங்ணா, என்னோட மார்க்கெட் போன படத்துல குத்தாட்டம் போட்டு குப்புறப்படுத்துக்கிச்சு. என்னோட ஆக்ஷன் பருப்பு சுத்தமா வேகல. இந்தப் படத்துலயும் பல்லிளிச்சிது வெச்சுக்கோங்க, நானும் ‘குடிச்சுக்கோ முழிச்சுக்கோ’னு காபித்தூள் வெளம்பரத்துக்கு மூஞ்சைக் காட்ட போக வேண்டியதுதான்.
லாலாஜி : ஹீரோ ஸாப், கவலயை வுடுறான். நிம்பள் இந்த பட்துக்கு துட்டை தண்ணியா இறைக்கிறான். டைரக்டர் ஸாப், பட்த்துல பைட்டை பகோத் அச்சா பண்ணுறான்.
இயக்குநர் : ஸீனைச் சொல்லுறேன் கேளுங்க. ஹீரோயினைக் கடத்திட்டு வில்லன் நூறு அடியாட்களோட  பத்து கார்கள்ல 120 கிலோமீட்டர் ஸ்பீடுல போறான்.
ஸ்டண்ட் : இன்னாபா நீ ஸீன் சொல்ற. நான் சொல்றேன் கேட்டுக்கோ. ஹீரோயினை வலிச்சிக்கினு வில்லங்காரன், ஒரு ஆயிரம் அடியாட்களோட, நூறு குவாலிஸ், சுமோவுல, 200 கிலோ மீட்டர் வேகத்துல போறான்.
விஜய் : அப்படிப் போடுங்ணா அருவாளை! இங்க நான் என்ன பண்ணனும்? பரபரன்னு ஆக்ஷன் துள்ளுற மாதிரி அள்ளிவிடுங்கண்ணா.
இயக்குநர் : இதைக் கேள்விப்பட்ட நீங்க, சரசரன்னு உங்க அக்காப் பொண்ணு நடை பழகுற வண்டியில ஏறி வேகமாத் தொரத்த ஆரம்பிக்கிறீங்க.
விஜய் : நடை பழகுற வண்டில்லாம், ரொம்ப லோ பட்ஜெட்டா இருக்கே?
லாலாஜி  : நீங்க கவலே படாதீங்கஜி. நாமே படா காஸ்ட்லியா மூணு சக்ர சைகிள் வெச்சுக்கலாம்.
ஸ்டண்ட் : சூப்பரப்பு. அப்டியே நீங்க மூணு சக்கர சைக்கிள்ல ஏறி ஒக்காந்துக்கினு, 300 கி.மீ. ஸ்பீடுல வில்லன் குரூப்பை சேஸ் பண்ணுறீங்க.
விஜய் : மூணு சக்கர சைக்கிள்ல ஸேஸிங். ஐடியா நியூவா, ப்ரெஷ்ஷா இருக்கு. மேல பில்ட் அப் பண்ணுங்ண்ணா.
இயக்குநர் : ஸேஸ் பண்ணிட்டுப் போறப்பவே, சைட்ல வில்லன் குரூப் ஆஃப் கம்பெனி கார்களையெல்லாம், அப்படியே காலால லேசா எட்டி உதைக்கிறீங்க. ஒவ்வொரு காரும் உயர உயரப் பறந்து நானூறு அடி தள்ளிப் போய் தள்ளாடி விழுது.
ஸ்டண்ட் : பின்னலா இருக்கு. இதுலயும் இன்னும் கொஞ்சம் பில்ட் அப் பண்ணி, சைக்கிள்ல வேகமாப் போற நீங்க, வில்லனோட கார் முன்னால போய் ஸ்டைலா பதினெட்டு போட்டு நிறுத்துறீங்க. வில்லன் கார் டிரைவர் வேகமா சடன் பிரேக் போட, பின்னால வர்ற அத்தனை வண்டியும் ஒண்ணுக்கு மேல் ஒண்ணு முட்டி ஏறி எல்.ஐ.சி. பில்டிங் ஹைட்டுக்கு நட்டுக்கிட்டு நிக்குது.
லாலாஜி : (‘ஜெர்க்’காகி மனத்துக்குள்) என்னாது, எல்.ஐ.சி. ஹைட்க்கு பில்ட் அப் பண்றான். நம்மள் துட்டை கிட்நாப் பண்ணப் பாக்குறான். அரே பாப்ரே!
விஜய் : இந்த இடத்துல என்னைப் பாத்து நடுநடுங்கி வில்லன் கோஷ்டியே பின்னங்கால் உச்சந்தலையில உரச உரச ஓடணும்ணா. அப்படியொரு டுவிஸ்ட்டைச் சொல்லுங்க.
இயக்குநர் : அவ்ளோதானே. இந்தா வைச்சுக்கோங்க. பக்கத்துல இருக்குற பனை மரத்தைப் புடுங்கி 360 டிகிரிக்கு சுழட்டோ சுழட்டுன்னு சுழட்டுறீங்க. அந்து நொந்து போற வில்லன் ஹீரோயினை இழுத்துக்கிட்டு பக்கத்துல இருக்குற வயக்காட்டுல இறங்கி ஓட ஆரம்பிக்கிறான். விடாம நீங்களும் மூணு சக்கர சைக்கிள்லயே மானாவாரியாத் துரத்துறீங்க.
ஸ்டண்ட் : அப்பாலிக்கா நடக்குறதை நாஞ் சொல்லுறேன் கேட்டுக்கோ சார். அப்டிக்கா ஓடி பக்கத்துல இருக்குற ரயில்வே ஸ்டேஷன்ல பூந்துடுறான். அப்போ டிரெயின் கரீக்டா வருது. இன்ஜின் டிரைவரை க்ளோஸ் பண்ணிக்கினு, வில்லன் தன் கூட்டாளிங்களோடயும் ஹீரோயினோடயும் டிரெயினை ஓட்ட ஆரம்பிக்கிறான்.
இயக்குநர் : அப்ப நீங்க சைக்கிளை உதறிட்டு, டிரெயினைத் துரத்த ஆரம்பிக்கிறீங்க. வேகமா ஒத்தைத் தண்டவாளம் மேல ஸ்லிப் ஆகாம உங்க ஷூவால ஸ்கேட்டிங் போற மாதிரி சறுக்கிட்டே போறீங்க.
விஜய் : நம்மளோட போன படத்துல வில்லன் ஆட்கள் துப்பாக்கியால சுடறப்போ, எங் கையால குண்டுகளைக் கேட்ச் பிடிக்கற மாதிரி பண்ணுனேன். இந்தப் படத்துல அந்த ஸீனை தூக்கிச் சாப்பிடுற மாதிரி ஏதாவது சொல்லுங்ண்ணா.
ஸ்டண்ட் : ஓடுற டிரெயின்ல இர்ந்து வில்லன் ஆள்கள் டுமீல் டுமீல்னு சுடுறாங்க. நீங்க அசால்ட்டா துப்பாக்கி குண்டுகளை கேட்ச் புடிக்கிறீங்க. அதை அப்படியே உங்க உள்ளங்கையில வெச்சு வில்லன் ஆட்களைப் பாத்து ஊதி விடுறீங்க. அது துப்பாக்கில இருந்து வெளிய போறதோட படா ஸ்பீடாப் போயி அவங்களைத் தாக்கி அழிக்குது. எப்படி?
விஜய் : அரிக்குதுங்ண்ணா! இத நம்ம ரசிகனுங்க தியேட்டர்ல பாக்குறப்போ அப்படியே ஆனந்தக் கண்ணீர் வுட்டு கதறுவாங்கண்ணா.
லாலாஜி : (மனதுக்குள் நொந்தபடி) நிம்பள் வட்டி மேலே வட்டி போட்டு குட்டி போட்ட துட்டை, இவங்கோ குண்டு போட்டே அழிச்சுடுவாங்கோ. ஹே பஹ்வான்!
விஜய் : இதுக்கு மேலே மசாலாத்தனமா ஒண்ணும் பண்ண முடியாதுங்கண்ணா. உச்சத்துக்குப் போயிட்டீங்க.
இயக்குநர் : யாரு சொன்னா? இப்பத்தான் மசாலா அரைக்கவே ஆரம்பிச்சிருக்கோம். இன்னும் இருக்கு பாருங்க.
விஜய் : அசத்துறீங்கண்ணா. மேல மீட்டரைப் போடுங்க.
இயக்குநர் : இதே நேரத்துல இன்னொரு வில்லன் பக்கத்து ஊருல இருந்து உங்க அம்மாவையும் தங்கச்சியையும் கடத்திட்டு வாரான். அவனும் அந்த ஊரு ரயில்வே ஸ்டேஷனுக்கு வர்ற இன்னொரு டிரெயினைக் கடத்திட்டு உங்களுக்கு எதிர்த்தாப்ல வேகமா வர்றான்.
ஸ்டண்ட் : ஸேஸிங் ‘செம ஸீனா’ப் போவுது நைனா. இப்பவே என் கையி காலெல்லாம் ச்சும்மா ஜிவ்வுங்குது. ஸ்பாட்டுக்கு எப்ப போலாம்னு மண்டைக்குள்ள பட்சி படபடக்குது.
விஜய் : மேல என்ன ஆவும்? டாப் கியர்ல சொல்லுங்கண்ணா!
லாலாஜி : (டென்ஷனில் வியர்வை வழிய வழிய மனதுக்குள்) இதுக்கு மேலே என்னே ஆவும். ஒண்ணுக்கு ரெண்டு டிரெயினா செலவு பண்ணி, நம்பள் கஜானா காலி ஆவும்.
இயக்குநர் : விஜய் சார், நீங்க உங்க லவ்வர் இருக்குற டிரெயினை நிறுத்த முயற்சி பண்ணுறீங்க. அதுக்கு டிரெயின் பின்னாலயே ஸ்கேட்டிங் போற நீங்க, உங்ககிட்ட இருக்குற பம்பரம் விடுற கயிறை யூஸ் பண்ணுறீங்க.
விஜய் : அது எப்டிங்கண்ணா?
ஸ்டண்ட் : வில்லுக்கு ஃபுல்லும் ஆயுதம்!
இயக்குநர் : அதான் மேட்டரு. பம்பரம் விடுற கயிறை யூஸ் பண்ணி டிரெயினை இழுத்துப் பிடிச்சுக் கட்டி நிறுத்துறீங்க.
விஜய் : சூப்பருங்கோ!
லாலாஜி : (கிட்டத்தட்ட அழுதபடி மௌனமாக) நம்பள் மோசம் போயிட்டான், நம்பள் மோசம் போயிட்டான்.
இயக்குநர் : அதே நேரத்துல இன்னொரு வில்லன் டிரெயின், அதான் உங்க அம்மா, தங்கச்சி வர்ற டிரெயின் கொஞ்சம் தள்ளி வேகமா இதே தண்டவாளத்துல தடக்கு தடக்குன்னு வருது. உடனே நீங்க வேகமா அந்த டிரெயினை நோக்கி ஓடுறீங்க. தடக் தடக் தடக் தடக்.. படக் படக் படக் படக்.. படம் பாக்குறவன் எல்லாவனுக்கு பிபி எகிறணும். வேகமா வர்ற டிரெயின் ஓட்டுற வில்லன், பிரேக் பிடிக்கத் தெரியாம தொபீர்னு குதிச்சுடுறான். உங்க அம்மாவுக்கும் பிரேக் போடத் தெரியாது. ரெண்டு டிரெயினும் மோதப் போற அந்த மில்லி செகண்ட். நீங்க ரெண்டு டிரெயின்களுக்கும்  இடையில போயி ரெண்டையும் மோத விடாம உங்க கைகளால தடுத்து நிறுத்துறீங்க.
ஸ்டண்ட் : டாப்போ டாப்பு! ஆக்ஷன் ஆப்பு!
விஜய் : இந்த ஒரு ஸீனுக்கே படம் இருநூறு நாள் ஓடுங்ணா!
லாலாஜி : (வியர்த்து விறுவிறுத்து) ஹே… ராம்ம்ம்! (மயக்கமாகிறார்.)

லொள்ளு அவார்ட்ஸ் 2008

2008ன் லொள்ளு அவார்ட்களுக்காக, பல்வேறு பிரிவுகளின்கீழ் போட்டியின்றித் தேர்வுசெய்யப்பட்டவர்கள்.

சிறந்த குடும்பச் சித்திரம்

சிறந்த உண்மை விளம்பி

சிறந்த சுய விளம்பரதாரர்

சிறந்த ஆக்‌ஷன் காட்சி

சிறந்த உலகம் சுற்றும் வாலிபி & புடைவைக் கடை மாடல்

சிறந்த உலக சினிமா

சிறந்த ரங்க ராட்டினம்

சிறந்த காதல் காட்சி

சிறந்த ட்யூப் லைட்

வாழ்நாள் சாதனையாளர் விருது

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்! (இவ்விடம் புத்தாண்டுப் பரிசுகள் மொத்தமாகவும் சில்லறையாகவும் ஏற்றுக்கொள்ளப்படும்.)