எம்.ஆர். ராதாவின் ராவணன்

காமவல்லி (சூர்ப்பநகை) : யாரையா நீர்?
ராமன் : நான்.. நான்.. பெரிய வீரன்
கா.வ.: (சிரித்துக்கொண்டே) அதுதான் தெரியுதே நீ வில் பிடித்திருக்கிற லட்சணத்திலிருந்தே! (ராமன் வில்லைச் சரியாகப் பிடித்துக் கொள்கிறான்.)
ராம : நான் பெரிய அரசகுமாரன். எனக்கு இன்னும் (கழுத்தைக் காட்டி) அது… ஆகலே, அதுக்காக…
கா.வ.: ஏய் மரியாதையாகப் பேசு, நான் இந்த மண்டலத்து அரசப் பிரதிநிதி காமவல்லி. இப்பவாவது இந்த இடத்தை விட்டு அகன்றுவிடு. உம்…
ராம : நான் யார் தெரியுமா? ராமன்! தசரத மைந்தன். அயோத்திக்கே அரசனாக வேண்டியவன். நமது விவாகம் முடிந்ததும் பட்டம் சூட்ட வேண்டியதுதான் பாக்கி.
கா.வ.: (திகைத்து) ராமனா? நீ மணமானவன். மரியாதையாகப் போய்விடு. உனது ஆரிய அடாத வழக்கம் தமிழகத்தில் செல்லாது.
ராம : ஆரியர் வழக்கம்தான் ஆசைப்பட்டால் ஐந்து தாரங்களை மணக்கலாமே. அரசீ! அடியேனை உன் அன்பனாக ஏற்றுக்கொள்; அடிமையாக வாழ்கிறேன். கண்ணே உன்னைக் கண்டதுமே காதல்…
கா.வ.: காதல்! காமத்துக்கும் காதலுக்கும் வேறுபாடு தெரியாத கயவனே, என் நாட்டில் புகுந்ததுமல்லாது தகாத வார்த்தைகள் வேறு பேசுகிறாயா?
ராம : பொறுமைக்கும் அளவுண்டு… பொன்மானே!
கா.வ.: நீ எருமை
ராம : நான் ஆண்.. ஆரியன்!
கா.வ.: அசல் கோழை!
ராம : நீ தனிமையில் இருக்கிறாய்.
கா.வ.: நான் தமிழச்சி! தற்காக்கும் திறன் எனக்குண்டு.
ராம : உன்னை அடையாது விடமாட்டேன். (தாவிப் பிடிக்கிறான்)
கா.வ.: உதை வாங்காது போகமாட்டாய் போலிருக்கிறது. (எட்டி உதைக்கிறாள். ராமன் கத்துகிறான்.)
ராம : தம்பி லட்சுமணா ஓடிவாயேன். அந்த அசுரச் சிறுக்கி என்னை அடிச்சுட்டுப் போராளே, அவளை உருக்குலைத்து விடேன்; அவள் செருக்கு குலையட்டுமே; தம்பி.. தம்பி… (லட்சுமணன் ஓடிவந்து காமவல்லியைத் தடுக்கிறான்.)
லட்சுமணன் : ஏய் தடிச்சிறுக்கி! எனது தமையனைத் தள்ளிவிட்டா போகிறாய், நில்லடி…
கா.வ.: மானத்தை விட்டவனே, மரியாதையாகப் பேசு.
(இருவருக்கும் ஏற்பட்ட வாள் சண்டையில் லட்சுமணன் அவளது மூக்கையும் காதையும் வெட்டிவிடுகிறான்.)
கா.வ.: அய்யோ, அண்ணா! போய்விட்டதே தமிழன் பெருமை! ஆரியன் என்னை அவமானப்படுத்தி விட்டானே!
(காமவல்லி அங்கிருந்து அலறி ஓடுகிறாள். தான் சந்திக்கும் கரன், தூஷ்ணனிடம் ராமனும் லட்சுமணும் தனக்கு செய்த அவமானங்களைச் சொல்லிக் கதறுகிறாள்.
கா.வ.: என் அண்ணன் தென்னிலங்கை இறைவனிடம் இதைக் கூறுங்கள், பழிக்குப் பழி வாங்காது விடாதீர்கள். அய்யோ அண்ணா! (சாகிறாள்.)

**
மானைப் பிடிக்கச் சென்றிருக்கிறான் ராமன். சீதைக்குக் காவலிருக்கிறான் லட்சுமணன். ஒருகட்டத்தில் இருவருக்கும் வாக்குவாதம் முற்ற, லட்சுமணன் அங்கிருந்து வெளியேறுகிறான். அப்போது அங்கு வரும் ராவணனை சீதை வரவேற்கிறாள்.)

ராவணன் : பாழ் வெளியிலே பளிங்கு மண்டபம்.
சீதை : ஆமாம்… எங்கள் பர்ணகசாலை.
ராவ : இல்லை உன் உருவம். பேரழகி, நீ யாரோ?
சீதை : ஆரிய குலம்… ஜானகி என்பது நாமம்.
ராவ : ஜானகி… ராமனின் மனைவி.
சீதை : ஆமாம்.
ராவ : அழகின் அவதாரம்; உன் அங்கங்கள் அவற்றின் அமைப்புக்கே எடுத்துக்காட்டு!
சீதை : பெரியவரே! உங்கள் பிரியமொழிகள் என் செவியில் இன்ப கீதமாய் ஒலிக்கின்றன. உங்கள் மொழிதான் எவ்வளவு இனிமையானது!
ராவ : வேதனையோடு வந்திருக்கிறேன்… வேல்விழி…
சீதை : அதிதிக்கு உபசாரம் செய்ய அடியாள் காத்திருக்கிறேன் ஸ்வாமி; அன்போது உரையாடும் தாங்கள் யாரோ?
ராவ : நான் இலங்கையின் வேந்தன்… ராவணன்.
சீதை : (திடுக்கிட்டு) ராவணன்! ராட்சதன்!
ராவ : என்று மூடர்கள் சொல்லுவார்கள், நான் மனிதன்… மறத்தமிழர் மன்னன்.
சீதை : (நடுங்கிக்கொண்டே) காமவல்லியின் அண்ணன்.
ராவ : ஆமாம்.
சீதை : அய்யோ, மோசம் வந்துவிட்டதே, நாதா! லட்சுமணா! மாபெரும் பழியைத் தேடிக் கொண்டேனே!
ராவ : பிதற்றாதே பெண்ணே! உன்னைச் சேர்ந்தவர்களைப் போன்ற நிர்மூடன் அல்ல நானும் உன் அங்கங்களைச் சிதைக்க.
சீதை : ஏன் இங்கு வந்தாய் நான் தனிமையாக இருக்கும்போது?
ராவ : தகாத வேலை செய்த உன் கணவனுக்கு புத்தி கற்பிக்க.
சீதை : அதற்கு அவரிடம் போ.
ராவ : இல்லை, அவன் வரவேண்டும் என்னிடம்.
சீதை : அதற்காக.
ராவ : உன்னைச் சிறை செய்யப் போகிறேன்.
சீதை : அது அநீதி! (கத்துகிறாள்)
ராவ : இல்லை; அரச மரபு.
சீதை : நான் ஒரு பாவமும் அறியாதவள்.
ராவ : நீ பாவிகளின் மனைவி. என் தங்கையின் அங்கங்கள் சிதைக்கப்படுவது கண்டும்; நீ ஒரு பெண்ணாக இருந்தும் வாளாவிருந்தாய். அந்த ஒரு குற்றத்துக்காகவே உன்னைச் சித்திரவதைகூடச் செய்யலாம். ஆனால், நான் தண்டிக்க விரும்புவது உன்னை அல்ல; உன் கணவனை.
சீதை : அதற்கு?
ராவ : நீ ஒரு கருவி. வா, வந்துவிடு என்னோடு. (நெருங்கிப் பிடிக்கிறான். சீதை அலறுகிறாள்.)
சீதை : வேண்டாம்! என்னை விட்டுவிடு.
ராவ : விட்டுவிடலாம். அதனால் அந்த மட்ட ரகங்களுக்குப் புத்தி வந்துவிடாது. உம் வந்துவிடு.
(அவளது கூந்தலை ஒரு கையிலும் துடைகளை மற்றொரு கையாலும் பிடித்துத் தூக்கித் தன் மடியிலே வைத்துக்கொண்டு தேரிலே ஏறிப்போகிறான்.)

***

தன் படத்தில் ராவணனை நல்லவனாகக் காட்டுகிறார் மணிரத்னம் என்ற பேச்சு பரவலாக இப்போது எழுந்திருக்கிறது. இதற்கு முன்பே ஆர். எஸ். மனோகர் தனது லங்கேஸ்வரன் நாடகத்தில் அசல் ராவணனைக் காட்டியிருக்கிறார். இவர்கள் எல்லோருக்கும் முன்னோடியாக இருந்தவர்கள் பெரியார், எம்.ஆர். ராதா. எழுத்தின் மூலம் பெரியார், தமிழர்களுக்கான ஒரிஜினல் ராமாயணத்தை உலகத்துக்குக் கொடுத்திருக்கிறார். எம்.ஆர். ராதா, தனது ராமாயணம் நாடகம் மூலம் செய்த பகுத்தறிவுப் புரட்சி மிரட்டலானது. எம்.ஆர்.ராதா, ராமன் கதாபாத்திரத்தில் நடித்த ராமாயணம் நாடகத்தில் இடம்பெற்ற இரண்டு காட்சிகளுக்கான வசனங்களைத்தான் மேலே கொடுத்துள்ளேன்.

நாடகத்தில் ராமனாக எம்.ஆர். ராதா (குனிந்திருப்பவர்)

நாடகத்தின் முழு வசனமும் என்னிடம் உள்ளது. எம்.ஆர். ராதாயணம் புத்தகத்துக்காக தகவல் திரட்டும்போது பெரியார் திடல் நூலகத்தில் எனக்கு இந்த நாடகம் கிடைத்தது. நாடகத்தில் நடித்த, எம்.ஆர். ராதாவின் நாடகக்குழுவில் இருந்த சிலரோடு பேசியிருக்கிறேன். அவர்களது அனுபவங்களையும் என் புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறேன். ராதா நடித்து அந்த நாடகத்தைப் பார்க்கும் பாக்கியம்தான் எனக்குக் கிடைக்காமல் போய்விட்டது. ராதாவின் நாடகம் You Tubeல் கிடைத்தால் எப்படி இருக்கும்!

***

நாடகம் குறித்து அண்ணாதுரை

நடிகவேள் இராதா நடத்தும் ‘இராமாயணம்’ நாட்டிலே இன்று ஏற்பட்டிருக்கும் இன எழுச்சிக்கு ஓர் எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது. வால்மீகியின் ராமாயணத்தை மெருகளிப்பதாகக் கூறிக்கொண்டு, கம்பன் தமிழகத்தாருக்கு கரைபடிந்த காவியத்தை தந்து சென்றான். அதன் பயனாக இராமாயணம் தேவகதை ஆக்கப்பட்டது. இன்று நடைபெற்று வரும் ‘கலாச்சாரப் போரின்’ விளைவாக, ஆரிய காவியங்களின் உண்மைகளும் தன்மைகளும் விளக்கப்பட்டு வருகின்றன.

குத்தூசி எஸ். குருசாமி

வடநாட்டில் இராவணனைப் போன்ற உருவத்தைச் செய்து தீயிட்டுக் கொழுத்துகின்றனர். அதுபோல தென்னாட்டில் தமிழகத்தில் ஆரிய இராமனைப் போன்ற உருவஞ்செய்து கொழுத்தப்படும் நிலையை உண்டாக்க வேண்டும். தமிழன் வீட்டில் இராமன் படம் இருத்தல் கூடாது. இராமன் தமிழ் இனத்தின் எதிரி என்பதை உணர வேண்டும். இதுவே இந்நாடகத்தின் இலட்சியம்.

பெரியார்

நான் சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இராமாயண ஆராய்ச்சி செய்து அதன் தன்மையையும் உண்மையையும் சொற்பொழிவாலும் பத்திரிகையாலும் ஆராய்ச்சி நூல் என்பதினாலும் மக்களுக்கு வெளியிட்டு வந்தாலும் அவை மக்களிடையில் சாதாரணமாக பரவுவதற்கு முடியாமல் போய்விட்டது. இப்போது இராதா அவர்கள் பெரும்பாலும் எனது ஆராய்ச்சிக் கருத்துக்களையே தழுவி நாடக ரூபமாக்கி நடிக்க முன் வந்திருப்பது மிகவும் பாராட்டத்தக்கதாகும்.

வி. எஸ். சந்தானம் அய்யங்கார்

நண்பர் இராதா அவர்கள் நடத்தும் இராமாயணத்தைப் பார்க்கா ரொம்பவும் மகிழ்ச்சியடைந்தேன். பலர் சாஸ்திரத்துக்கு முரண்பாடாய் இருப்பதாக என் நண்பர்கள் சிலர் சொல்ல கேள்வியுற்றேன். அப்படி நினைப்பவர்கள் சாஸ்திர ஆராய்ச்சி செய்திருக்க மாட்டார்களென்பது திண்ணம். தற்காலம் இராதா அவர்கள் விபரமாக உண்மையை (இராமாயணம்) எடுத்துக் காட்டுகிறார்கள். இதை எவ்விதத்திலும் முறை தவறுதல் என்று பிராமணர்களும் பிராமணரல்லாதவர்களும் கூற ஞாயமில்லை.

‘இது என்ன கூத்தாடிகள் ராஜ்யமா?’ – பெரியார்

1967ல் விடுதலை நாளிதழில் பெரியார் தனது பொங்கல் செய்தியை வெளியிட்டார். கடந்த நாள்களில் நடந்த சம்பவங்களால் அவரது மனம் எவ்வளவு பாதிக்கப்பட்டிருந்தது என்பதை அந்த எழுத்துகளை வெளிப்படுத்தின. காகிதமே பொசுங்கிப் போகுமளவுக்குச் சூடாக இருந்தன அவரது வார்த்தைகள்.

‘………………… சாதாரணமாக ராதாவானாலும் ராமச்சந்திரன் ஆனாலும் இவர்களுக்கு பொது மக்கள் உலகத்தில் உள்ள மதிப்பு இவர்கள் கூத்தாடிகள், வேஷம்போட்டு நடிப்பவர்கள், காசுக்காக எந்த வேஷத்தையும், எப்படிப்பட்ட இழிமக்கள் தன்மையான கதையையும் எந்த உருவத்திலும் நடிப்பவர்கள் என்பதல்லாமல் இவர்களுக்கு பொதுநல யோக்கியதைக்கு ஏற்ற ஒழுக்கம் நாணயம் பொறுப்பு என்ன இருக்க முடியும்? இவர்கள் நடிப்பால் பொதுமக்களுக்கு பெரிதும் பல தீயகுணங்களும், ஒழுக்கக்கேடும் ஏற்படுவதல்லாமல் என்ன கலைஞானம் 100க்கு 90 மக்களுக்கு ஏற்பட்டு விடும்? ஏற்படக்கூடும்?

இக்காரியங்களில் ஈடுபட்ட இரண்டு கூத்தாடிக் கீழ்த்தர மக்களுக்குள் நடந்த மூர்க்கத்தனமான, காலித்தனமான சம்பவத்திற்காக எவ்வளவு ஆர்ப்பாட்டம், விளம்பரம், மக்கள் இடையில் உணர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது. அரசாங்க ஆக்கினைகள் எவ்வளவு என்று பார்த்தோமானால் சமுதாயத்தின், ஆட்சியின் கீழ்த்தரம் எந்த அளவுக்கு இறங்கிவிட்டது என்று கவலைப்படுகிறேன்.

இதற்காக அரசாங்கம் நாட்டு நிகழ்ச்சிகளை ரூ. 1000, ரூ. 2000 செலவு செய்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிகளை 144 உத்தரவு போட்டு தடுப்பது என்றால் இது என்ன கூத்தாடிகள் ராஜ்யமா? கூத்தாடிகள் அரசாங்கமா? என்றுதானே கேட்கத் தோன்றுகிறது.

நிலைமை இப்படியே மோசமாக வளர்ந்து வருகிறது என்றால், இந்த ஆட்சிக்கு ஆளத்தகுதி இல்லை அல்லது ஜனநாயகத்துக்கும் நம் நாட்டுக்கும் மக்களுக்கும் பொருத்தம் இல்லை. ராணுவமோ, சர்வாதிகாரமோ கொண்டுதான் சமதர்மத்தை அமுல்நடத்த முடியும் என்கிற முடிவுக்கு வரவேண்டும்.

ஏன் எனக்கு இப்படி விரக்தி முடிவு தோன்றுகிறது என்றால், இரண்டு கூத்தாடிகளுக்கு ஏற்பட்ட காலித்தன நிகழ்ச்சிக்காக, காங்கிரஸ் ஆபிசு கொளுத்தப்பட்டது, காமராசர் வீட்டுக்குக் காவல், பெரியார் வீட்டுக்குக் காவல், காமராஜருக்குக் காவல் என்றெல்லாம் காரியம் நடப்பதென்றால் பிறகு நாட்டில் யாருக்குத்தான் பாதுகாப்பு இருக்கமுடியும்? இந்த காலித்தனத்தின் பயனாக ஏற்பட்ட விளைவு இது என்றால் நாட்டில் உண்டாக்கப்பட்டிருக்கும் உணர்ச்சி எப்படிப்பட்டதாக இருக்கிறது என்பதை பொதுமக்கள், அறிஞர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே எழுதுகிறேன்.

காமராஜருக்கோ, காங்கிரஸ் கூட்டங்களுக்கோ, எனக்கோ, காமராஜர் தாயாருக்கோ, அவர் வீட்டிற்கோ என்னதான் கேடுவந்தாலும் அதனால் உலகம் முழுகியா போய்விடும்?
…………………’

***

இந்த ஞாயிறு (27 டிசம்பர்), கிழக்கு பாட்காஸ்டில் எம்.ஜி.ஆர். குறித்த நிகழ்ச்சி. பேசுபவர்கள் ஆர். முத்துக்குமார், பா. தீனதயாளன் – சித்ராவுடன். தவற விடாதீர்கள்.

இதுக்கும் அதுக்கும் சம்பந்தமில்லை!

எம்.ஆர். ராதா நடத்திய நாடகங்களுள் ஒன்று லஷ்மி காந்தன். சமூக அவலங்களை, கலைஞர்கள் அடித்த கூத்துகளை வெட்ட வெளிச்சம்போட்டுக் காண்பிக்க நினைத்த லஷ்மி காந்தனின் கதை. நாடகத்தில் காட்சிக்கு காட்சி குபீர் சிரிப்புதான். ராதாதான் லஷ்மி காந்தனாக வேடமேற்று நடித்தார்.

லஷ்மி காந்தன் தன் பத்திரிகையில் தோலுரித்துக் காட்டிய விஷயங்களைவிட, ராதா தன் நாடகத்தில் வைத்திருந்த காட்சிகளும் வசனங்களும் வீரியம் மிக்கவையாக இருந்தன.

லஷ்மி காந்தன் தன் உதவியாளருடன் பேசுவது போல ஒரு காட்சி.

‘கோவிந்தா, என்னடா இன்னிக்கு மேட்டரெல்லாம் வந்துருச்சா?’

‘வந்துருச்சுங்க.’

‘சரி, நான் கோர்ட்டுக்குப் போய்ட்டு வந்துடுறேன்.’

‘கோர்ட்டா?’

‘ஆமா கேஸு. இந்த ரமணி பாய் இருக்காளே, அவ என்மேல கேஸ் போட்டிருக்கா.’

‘என்ன கேஸு?’

‘ஏதோ மானம் போயிருச்சாம்.’

‘ஏதாவது வக்கீலை வைச்சுக்க வேண்டியதுதானே?’

‘ஏய். இதுக்குப் போய் வக்கீலா? இது நானே பேசி முடிச்சிட்டு வந்துருவேன்.’

‘எப்படி? புரியலையே…’

‘ஆமாடா. இப்ப அவ என்ன கேஸ் போட்டிருக்கா? மானம் போயிருச்சுன்னு. இப்ப என்னோட வாட்ச் போயிருச்சுன்னு சொல்லுறேன். அப்போ இதுக்கு முன்னாடி நான் வாட்ச் கட்டியிருந்தேன்னு நிரூபிக்கணும்ல. அப்போதானே போயிருச்சுன்னு சொல்ல முடியும். அவ என்ன கொடுத்திருக்கா? இதுக்கு முன்னே அவளுக்கு மானம் இருந்துச்சா? இருந்துச்சுன்னா எப்படிப் போச்சு? எந்தப் பக்கமா போச்சு?’

அடச்சே, ராதா இல்லாமல் போய்விட்டாரே!

லஷ்மி காந்தன் – எம்.ஆர். ராதா போட்ட நாடகங்களில் ஒன்று. சமூக அவலங்களை, கலைஞர்கள் அடித்த கூத்துகளை வெட்ட வெளிச்சம்போட்டுக் காண்பிக்க நினைத்த லஷ்மி காந்தனின் கதை. ராதாதான் காந்தன். நாடகத்தில் காட்சிக்கு காட்சி குபீர் சிரிப்புதான்.

அந்த நாடகத்தில் ஒரு பாடல் காட்சியில் பெண் வேடமிட்டும் வந்தார் ராதா. அந்தப் பாத்திரத்தின் பெயர் ரங்கூன் கமலம். அது ஒரு டப்பாங்குத்து நடனம். ‘சிங்கார லஹரி சித்த கண சுப ஹரி’ என்று நீளும் அந்தப் பாடலுக்கு ராதா ஆடும் தளுக்கு மினுக்கு நடனத்துக்கு விசில் ரசிகர்களிடையே விசில் பறக்கும்.

லஷ்மி காந்தன் தன் பத்திரிகையில் தோலுரித்துக் காட்டிய விஷயங்களைவிட, ராதா தன் நாடகத்தில் வைத்திருந்த காட்சிகளும் வசனங்களும் வீரியம் மிக்கவையாக இருந்தன.

பொதுவாக ராதா தன் நாடகங்களில் வரும் வேலைக்கார கதாபாத்திரங்களின் பெயர்களை ராமன் அல்லது முருகன் என்றே வைத்துக் கொண்டார். லஷ்மி காந்தனில் வேலைக்காரன் ராமனோடு ஒரு காட்சி. அவன் தன் நெற்றியில் மாபெரும் நாமம் ஒன்றைப் போட்டிருக்கிறான்.

‘டேய் என்னடா இது?’

‘பேங்கு.’

‘இங்க யாருடா வருவாங்க?’

‘பணம் போடறவங்க.’

‘ஏன்டா பணம் போடுறவங்க உள்ளாற வரும்போதே வாசல்ல நீ இப்படி இருந்தா, எவன்டா நம்பி பணத்தைப் போடுவான். எதுக்காகடா இதைப் போட்டுக்கிட்டிருக்கே?’

‘பாதம், எம்பெருமான் பாதம்.’

‘ஓ.. எம்பெருமான் பாதத்தை நீங்க நெத்தியில போட்டுக்கிட்டிருக்கீங்களா. ஆமா அந்த எம்பெருமான் நெத்தியில போட்டிருக்கே அது யார் பாதம்டா? தெரிஞ்சுக்க. தெரிஞ்சுக்கிட்டு வந்து அப்புறம் போடு.’

0

தூக்குமேடை நாடகத்தில் ஒரு காட்சி. ராதா ஒரு பெண்ணைத் தன்னுடன் வைத்திருப்பார். வேலைக்காரன் வருவான்.

‘யாருண்ணே இது?’

‘அண்ணிடா.’

‘அண்ணி காலைப் பாருங்க.’

‘என்ன?’

‘யானைக்கால் மாதிரி இருக்கு.’

‘போடா, பிள்ளையாருக்கே யானைத்தலை இருக்கு. இதுவரைக்கும் ஒருபயலும் கேட்கலை. கால் யானைக்காலா இருக்கறதை சொல்ல வந்துட்டான்.’

0

ராதா ரத்தக்கண்ணீர் நாடகம் தொடங்குவற்கு முன்னால் அன்றைய செய்தித்தாளை படிக்கச் சொல்லி கேட்பார். பின்பு மேக்-அப் ரூமுக்குச் செல்வார். மேக்-அப் போட்டு முடிந்தவுடன், உட்கார மாட்டார். குறுக்கும் நெடுக்குமாக அலைந்து கொண்டே இருப்பார். அவருக்குள் புதிய வசனம் ஒன்று உருவாகியிருக்கும்.

அதற்கு நியூஸ் பேப்பர் ஸீன் என்று பெயர். காந்தா வீட்டு வேலைக்காரன், மோகனிடம் நியூஸ் பேப்பரைக் கொடுப்பான். அதிலுள்ள செய்தியைப் படித்து கருத்து சொல்லுவான் மோகன். அது அன்றைய செய்தியாக இருக்கும். அதற்கு ராதா அடிக்கும் கமெண்ட், சம்பந்தப்பட்டவர்கள் நாக்கைப் பிடுங்கிக் கொள்வதுபோல இருக்கும். இந்த நியூஸ் பேப்பர் ஸீனைக் காண்பதற்காகவே தினமும் நாடகத்துக்கு வந்த ரசிகர்களும் உண்டு.

மோகன் தன் மாமனாரிடம் பேசும் காட்சி ஒன்று. ரத்தக்கண்ணீர் படத்தில் இந்த வசனங்கள் பல இடம் பெற்றிருக்காது. சென்ஸாரிடம் சிக்கியிருக்கலாம்.

‘என்ன மேன்?’

‘மேன் மேன்னு கூப்பிடாத தம்பி’

‘வொய்?’

‘நான் உன் மாமனாராச்சே.’

‘எந்த நாராயிருந்தாலும் நான் இப்படித்தான் கூப்பிடுவேன். என்ன மேன் உடம்பு பூரா கோடு கோடா போட்டிருக்க?’

‘இது பட்டை.’

‘ஓ… நீ பட்டை அடிக்கிற சாதியா?’

‘இல்லல்லை தம்பி, இது விபூதிப்பட்டை.’

‘ஓ… அது என்ன மேன் கழுத்துல கொட்டை?’

‘தம்பி தப்பாப் பேசாதே, இது ருத்திராட்சக் கொட்டை.’

‘இதை எதுக்கு மேன் போட்டுக்கிட்டிருக்கிறே?’

‘தம்பி உனக்குத் தெரியாது. இதுல கடவுள் இருக்காரு.’

(மோகன் பாய்ந்து தன் மாமனார் கழுத்தில் தொங்கு ருத்திராட்சக் கொட்டையைப் பிடித்துக் கொண்டே கத்துகிறான்)

‘ஏய்… போலிஸூக்குப் போன் பண்ணு. அவனவன் கடவுளைக் காணும், கடவுளைக் காணும்னு தேடிக்கிட்டிருக்கான். கடவுள் என்னடான்னா இந்தக் கொட்டையில ஒளிஞ்சிக்கிட்டு இருக்கான்.’

0

‘நாடக நடிகர்கள் எல்லாம் தூங்கக்கூடாது. தூங்கறப்பகூட காலாட்டிக்கிட்டே தூங்கணும். இல்லேன்னா செத்துப் போயிட்டான்னு வேற யாரையாவது போட்டுருவாங்க.’

இதுதான் ராதா தன் நாடகக்குழுவினரிடம் அடிக்கடி சொல்லும் வசனம். இன்றைய சூழலில் பல விஷயங்களில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த, பலரது முகத்திரைகளைக் கிழிக்க ராதா போன்ற ஒரு கலைஞர் இல்லையே என்று நினைக்கும்போது ஏக்கமாகத்தான் இருக்கிறது. இன்றைய தமிழக அரசியல் சூழலில் ராதா இருந்திருந்தால் நிஜமாகவே அவருக்குப் பல துப்பாக்கிக் குண்டுகள் தேவைப்பட்டிருக்கலாம்.

எம்.ஆர். ராதாயணம் – கிழக்கு வெளியீடு