கமலஹாசனின் குடும்பப் பாடல்!

லக் – முதல் ஹிந்தித் திரைப்படத்தில் ஷ்ருதிஹாசனுக்கு பேட் லக். அடுத்த அவதாரம், தந்தையின் படத்தில் இசையமைப்பாளராக. பாடல்கள் எப்படி இருக்கின்றன?

ஷ்ருதிஹாசன், அக்சரா, சுப்புலட்சுமி, கமலஹாசன் என்று எல்லோருடைய குரல்களும் உன்னைப் போல் ஒருவன் பாடல்களில் இடம்பெற்றிருக்கின்றன. இதுதான் குடும்பப்பாடலோ என்று நினைக்கத் தோன்றுகிறது. கௌதமியின் குரல் மட்டும்தான் கேட்கவில்லை. அதுகூட எந்தப் பாடலிலாவது கோரஸாக ஒலித்திருக்கிறதா என்று பிரித்துணர முடியவில்லை.

அல்லா ஜானே… கமலஹாசனின் குரல். பல்லவி நன்றாக இருக்கிறது. முதல் சரணத்தில் கமல் பாடும்போது ஏதோ வேண்டுமென்றே குரல் மாற்றி பாடுவதுபோலத் தெரிகிறது. மொத்தத்தில் இந்தப் பாடல் இந்த ஆல்பத்தின் நெம்பர் ஒன் பாடல்.

அல்லா ஜானே ரீமிக்ஸ்… ஷ்ருதிஹாசனின் குரலில். சிக்னலில் ஆரஞ்சிலிருந்து ரெட்டுக்கு மாறுவதற்குமுன் வேகமாக வண்டியில் கடந்துபோவதுபோல உச்சரிப்புகளில் வேகம். ரசிப்புக்குரியதாகப் படவில்லை. ஆல்பத்தில் எண்ணிக்கைக்காகச் சேர்த்திருக்கிறார்கள்.

நிலை வருமா? – அடுத்த பாடல். பாம்பே ஜெயஸ்ரீ, கமலின் குரல்கள். கேட்கக் கேட்க ஒருவேளை பிடிக்கலாம். நின்றே கொல்லும் தெய்வங்களும் – இன்றே கொல்லும் மதப்பூசல்களும் – ஒன்றே செய்யும் என உணரும் – நன்றே செய்யும் நிலைவருமா? – யாருடைய வரிகள்? ஏதோ ஒரு பிரபல எழுத்தாளர் தான் ஷ்ருதிஹாசனின் இசையமைப்பில் பாடல் எழுதுவதாக குமுதத்தில் மகிழ்ச்சி பிதுங்க பேட்டி கொடுத்ததாக ஞாபகம். அது ‘அல்லா ஜானே’ என்று சக நண்பர்கள் சொல்கிறார்கள்.

உன்னைப் போல் ஒருவன் – தீம் மியூஸிக். சம்பவானி யுகே யுகே என அடிக்கடி ஒலிக்கிறது. ‘ஐ ஆம் தி நியூ ஃபேஸ் ஆஃப் டெரர்!’ என்று பல குரல்கள் வசனம் பேசுகின்றன. இது இந்து தீவிரவாதத்தைக் குறிக்கும் பாடல் என்று யாராவது களமிறங்கி பாடலுக்கு பாப்புலாரிட்டி கொடுக்காமலிருந்தால் சரி.

வானம் எல்லை – ப்ளாஸேவின் கரடுமுரடு RAP-ல் ஷ்ருதிஹாசனுக்கு அறிமுகம் கொடுத்து ஆரம்பமாகிறது பாடல். ஷ்ருதியின் குரல் ஸ்டைலிஷாக வெளிப்பட்டிருக்கிறது. மற்றபடி பாடல் பத்தோடு பதினொன்று.

கமலஹாசன் ஏதாவது ஒரு படத்தை ரீமேக் செய்கிறார் என்றால் முதலிலேயே அதன் மூலப்படத்தை பார்த்துவிடுவேன். வசூல்ராஜாவின் அறிவிப்பு வந்த உடனேயே முன்னா பாய் பார்த்து விட்டேன். வசூல்ராஜா எத்தனை முறை பார்த்தாலும் எனக்குச் சலிப்பு ஏற்படுத்தாத படம். காரணம் கிரேஸி மோகன். ஆனால் முன்னா பாய் அளவுக்கு வசூல் ராஜாவில் சில காட்சிகளில் அழுத்தம் இல்லை என்பதே என் கருத்து.

உன்னைப் போல் ஒருவனின் மூலப்படமான தி வெட்நெஸ்டே பார்த்துவிட்டேன். அது மிகவும் பிடித்தது. பார்க்கலாம். அது அதுவாகவே வருகிறதா அல்லது கமலின் வாசனையோடு புதிதாக வருகிறதா என்று.

குருதிப்புனல்போல இந்தப் படத்துக்கும் பாடல்கள் தேவையில்லை. ஆல்பத்தில் தீம் மியூஸிக், ரீமிக்ஸ் தவிர மூன்று பாடல்கள் இருக்கின்றன. A Shruthi hassan Musical என்று போடுவதற்காக இருக்கலாம். ரீரெகார்டிங் எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும்.

பாடல்களில் ஷ்ருதிஹாசன் ஈஸியாகப் பாஸ் செய்துவிட்டார். ஆனால் எந்தப் பாடலுமே உருக்கவும் இல்லை, அதே சமயம் உறுத்தவும் இல்லை.

‘தேர்தலில் எனது ஆதரவு அர்த்தமற்றது’ – கமலஹாசன் அதிரடி!

‘தேர்தல்ல எந்தக் கட்சியை நான் ஆதரிக்கேனோ அந்தக் கட்சிக்கு டெபாசிட் ‘டப்பா’சிட் ஆயிடுது. ஸோ, அனைத்துக் கட்சிகளின் வேண்டுகோளுக்கிணங்க, இந்தத் தேர்தல்ல என்னோட ஆதரவு யாருக்கும் கிடையாது’ன்னு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வழக்கம்போல அறிக்கை விடப்போறாரு. அதைக் கேட்டதுக்கு அப்புறம் எல்லாக் கட்சிக்காரங்களும் பெருமூச்சு உட்டு நிம்மதியா இருப்பாங்க. ஆனா பத்திரிகைக்காரங்களுக்கு பரபரன்னு பத்திக்கிறாப்ல நியூஸ் வேணுமே, என்ன செய்யன்னு யோசிச்ச, குறுகுறு நாளிதழின் குறும்புக்கார நிருபர் ஒருவர் சில வி.ஐ.பிக்களைத் தேடி ஓடுனாரு. ‘உங்க ஆதரவு யாருக்கு’ன்னு தோண்டித் துருவிக் கேட்டாரு. ‘இது என்னடா வம்பாப் போச்சு’ன்னு அவங்க திக்கித் திணறி, விக்கி விழுங்கி சொன்ன பதில்தான் இது.



(முதலில் அந்த நிருபர் சென்ற இடம் ஆழ்வார்பேட்டை ஆண்டவனின் வீடு.)

நிருபர் : சார் வணக்கம். நீங்க சொல்லிட்டிங்கன்னா தலைப்புச் செய்தியா தட்டி விட்டிரலாம்.
கமல் : ஹாங்.. வெல்.. ‘தலைவன் இருக்கிறான்’ அறிவிப்பு அடுத்த மாசம் வந்துரும். அதை நான் ரெண்டு லாங்குவேஜ்ல.. ஐ மீன் டூ மொழி.
நிருபர் : அதை விடுங்க சார். வர்ற தேர்தல்ல, நீங்க யாரை ஆதரிக்கப்போறீங்க?
கமல் : தேர்தல். யெஸ். ஆதரவுங்கிறது எல்லாத்துக்குமே வேணும். ஒரு குழந்தைகிட்ட போய் அம்மா பிடிக்குமா, அப்பா பிடிக்குமான்னு கேட்டா அது சாதுர்யம் இல்லாத குழந்தைன்னா திருதிருன்னு முழிச்சிக்கிட்டு என்ன சொல்லன்னு தெரியாம, அடுத்த நிமிஷமே அதை மறந்து போயிரும். அதே குழந்தை புத்திசாலியா இருந்தா, அம்மா, அப்பா ரெண்டு பேரையுமே பிடிக்கும். ஓடிப் போன சித்தப்பாவைக் கூட எனக்குப் பிடிக்கும்னு சிரிச்சுக்கிட்டே சொல்லும். நான் சாதுர்யம் இல்லாத குழந்தையும் இல்ல. புத்திசாலிக் குழந்தையும் இல்ல. ஏன்னா நான் குழந்தையே இல்ல. அரசியல் கர்ப்பப்பையில் நான் இன்னும் கருத்தரிக்கவே இல்லை. கருத்தரிக்கவும் வாய்ப்பில்லை.  பூமியில ஒரு செடி முளைச்சு, கொடியாப் படரணும்னா அதுக்கு ஒரு குச்சி இருந்தா ஆதரவா இருக்கும். அந்தக் கொடி…
நிருபர் : எந்தக் கொடி சார்?
கமல் : கொடின்னா துணியால ஆனதா இருக்கலாம். ஆனா கொடியில துணியும் காயப்போடலாம். வடிவம் முக்கியம். ஐ மீன் பரிமாணம். பரிணாம வளர்ச்சி அடைய அடைய பரிமாணங்கள் நிறைய மாறுது. மாற்றம்தான் வாழ்க்கை.
நிருபர் : அதனால அரசியல்ல, ஆட்சியில மாற்றம் வரணும்னு சொல்லுறீங்களா?
கமல் : இல்ல. ஐ நெவர் மீன் தட். வார்த்தைகளைவிட அதோட அர்த்தம் ரொம்ப முக்கியம். அர்த்தங்களில்லாத வார்த்தைகள் இருக்கலாம். ஆனா ‘அர்த்தம்’ங்கிறதே ஒரு வார்த்தைதான்.
நிருபர் : அர்த்தம் புரிஞ்சிடுச்சு. ஓ.கே. தாங்க்யூ சார்.

(அடுத்த நாள், அப்பத்திரிகையில் ‘தேர்தலில் எனது ஆதரவு அர்த்தமற்றது’ – கமலஹாசன் அதிரடி!’ – என செய்தி மின்னுகிறது.

நிருபரின் அடுத்த டார்கெட் – கவுண்டமணி.)

நிருபர் : சார், ஒருகாலத்துல நீங்க இல்லாம எந்தப் படமும் இல்ல. ஆனா இப்ப எந்தப் படத்துலயும் நீங்க இல்ல. இனியும் தமிழ்நாட்டுல பல்லு போன பெரிசுங்க டூ பல்லு முளைக்காத பொடிசுங்க வரைக்கும் உங்களை நியாபகம் வைச்சிருக்கணும்னா நீங்க தேர்தல்ல யாரை ஆதரிப்பீங்க?
க.மணி : அடேய்! நானே ஆதரவு இல்லாம இருக்கேன். என்ன நக்கலா? என் வாயைப் புடுங்கி வம்பிழுக்கத்தான் இந்த ஒண்ணரையனா நோட்டையும், ஒழுகுற பேனாவையும் தூக்கிட்டு வந்தியா?
நிருபர் : உங்க ‘அடி’ஆள் செந்திலைப் பத்தி என்ன நெனைக்கிறீங்க?
க.மணி : அவன் என்ன ‘செக்கிழுத்த செம்மலா’? நினைச்சுக்கிட்டே இருக்கறதுக்கு. அடேய் பொறக்கறப்பவே மண்டையில மசுரில்லாம பொறந்த லொள்ளு புடிச்ச பெரிசு சத்யராஜெல்லாம் நமீதாகூட இன்னும் லவ்ஸ் பண்ணிக்கிட்டிருக்காரு. என்னை மாதிரி வளர்ந்து வர்ற நடிகனை அதுக்குள்ள வி.ஆர்.எஸ். கொடுத்து வீட்டுக்கு அனுப்பிட்டீங்களேடா! இது உங்களுக்கே நல்லா இருக்கா?
நிருபர் : உங்க கூடப் பொறக்காத தம்பி கார்த்திக்கைத்தான் நீங்க தேர்தல்ல ஆதரிக்கப்போறதா பேச்சு வந்துதே?
க.மணி : எந்தக் கருமாந்திரம் புடிச்ச நாயோ சொல்லிருக்கு. எனக்கு கூடப் பொறக்காத தம்பி, குறையாப் பொறக்காத தம்பின்னு யாருமே கிடையாது. நானே எனக்குத் தம்பி. நானே எனக்கு அண்ணன். நோ மோர் பிரதர்ஸ். பால் குடிச்சுட்டு வீட்டு பால்கனில ஒக்காந்து நிம்மதியா பறாக்கப் பாத்துக்கிட்டிருக்கிற எனக்கு பாலிடிக்ஸ் தேவையா?
நிருபர் : நீங்க வெளியில இருந்து ஆதரவு கொடுக்கறதுன்னா யாருக்கு கொடுப்பீங்க?
க.மணி : வாங்கடா வாங்க. எத்தனை பேருடா இப்படி கிளம்பியிருக்கீங்க? வாய்ப்பு இருக்கறதா எவனையோ ஏத்திவுட்டு வருங்கால முதல்வர்னு சொல்லுவீங்க. வாக்கு வங்கி இருந்தா வாய்ஸ் கொடுக்கச் சொல்லி நோண்டி விடுவீங்க. வக்கத்துக் கிடக்குறவனை ஏண்டா பிச்சுப் பிறாண்டுறீங்க. என்னைக் கொலகாரனாக்காதீங்க..
(கவுண்டமணி ஹை-டெசிபலில் கத்த, நிருபர் காதை பொத்திக் கொண்டே அங்கிருந்து எஸ்கேப் ஆகிறார். அடுத்த நாள் நாளிதழில் “கார்த்திக்கை நான் ஆதரிக்கவில்லை” – கவுண்டமணி திட்டவட்ட அறிவிப்பு!’ என செய்தி இளிக்கிறது.)