‘இந்த எண்ணம் மிஸ்டர் எம்.ஜி.ஆருக்கு இருக்குமா?’

காலையிலேயே சேகர் என்ற நண்பர் தொலைபேசியில் அழைத்தார். அவர் ஜே.பி. சந்திரபாபுவின் குரலில் பாடும் மேடைப் பாடகர். எனது கண்ணீரும் புன்னகையும் புத்தகத்தின் ரசிகர். அவ்வப்போது அழைத்து சந்திரபாபு குறித்து பேசுவார். அவர் பேசி முடித்ததிலிருந்து எனக்குள் சந்திரபாபுவின் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

*

‘நான் குடிகாரன் என்பது ஊரறிந்த உலகறிந்த ஒரு விஷயம். ஒவ்வொரு மனிதனையும் அழைத்து அவனுக்கு மதுவை ஊற்றிக் கொடுத்துப் பாருங்கள். அவன் தன் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளை ஒளிவு மறைவின்றி கூறிவிடுவான். அழுது விடுவான். மதுவை நான் அளவோடு தினமும் குடிப்பேன். ஆனால் என்று ‘மாடி வீட்டு ஏழை’ படமெடுக்கத் துணிந்தேனோ அன்று முதல் ‘மொடாக்குடி’ என்று கூறுவீர்களே, அப்படிக் குடிக்க ஆரம்பித்தேன். அந்த மயக்கமும் போதாமல்தான் ‘பெத்தடினுக்கு’ வந்தேன். நடிகனுக்கு மதிப்பும் மரியாதையும் உயரும்போது, ஊதியமும் சேர்ந்து உயரத்தான் செய்யும்.

மனிதன் எதற்காக உழைக்கிறான்? ஊதியத்திற்காகத்தானே? அது கிடைக்காதபோது ஷூட்டிங்குக்கு போகாமலிருக்கிறேன். பணம் தராத படத் தயாரிப்பாளர்களின் படங்களில் சில சமயங்களில் நடிக்கப் போகாமலிருந்ததுண்டு. பிறகு நானே வருத்தப்பட்டு போகிறது பாவம் கஷ்டப்படுகிறார் என்றுணர்ந்து நடிக்கச் சென்று விடுவேன். உண்மையான ஒரு கலைஞன் ஷூட்டின் இருக்கிறது என்றறிந்த பிறகும் போகாமல் இருக்கமாட்டான்.

அவரது ஊதியத்தை பேசியபடி கொடுக்காத தயாரிப்பாளர்களுண்டா?
நல்ல கறவை மாடு என்றறிந்தால்தான் மிஸ்டர் எம்.ஜி.ஆர். நடிக்கவே ஒப்புக் கொள்வார். இதுதான் உண்மை. நான் எந்தத் தயாரிப்பாளரையும் சரி செட் போடுங்கள் என லட்ச ரூபாய்க்கு செட் போடச் சொல்லிவிட்டு, பிறகு செட்டைப் போய்ப் பார்த்து, இது நன்றாக இல்லை கலைந்து விடுங்கள் என்று சொன்னதில்லை.

உடன் நடிக்கும் நடிகையைக் கூப்பிட்டு நாளை நான் கால்ஷீட் கொடுத்திருக்கிறேன். நீ இல்லாமல் படமெடுக்க முடியாது. உன்னை அழைக்க வந்தால், மாத விலக்கு என்று கூறிவிடு என சொல்லிவிட்டு நான் தப்பித்துக் கொண்டதில்லை.

ஷூட்டிங் இருக்கும் நாளில் கண்வலி என்று சொல்லி கன்னியருடன் விளையாடிக்கொண்டிருந்ததில்லை. முக்கியமாக எடிட்டிங் அறைக்குப் போனதே இல்லை. போனாலும் என் காட்சிகள் தவிர மற்றவர் காட்சிகளை நீக்கச் சொல்லிவிட்டு, எடிட்டர் மீது பழி போட்டதே இல்லை. தொழிலில் நான் அன்றும் சரி, இன்றும் சரி, மிகவும் நாணயமாக நடந்து கொள்ள முயற்சித்து வருகிறேன்.

நான் ரசிகர்களை மதிக்கிறேன். நீங்கள் எனக்களித்த ஏகோபித்த வரவேற்பால்தான் சாதாரண மீனவக் குடிமகனான நான் உயர்ந்த நிலைக்கு வந்தேன். வாழ்ந்தேன். இன்றும் உங்களால் தான் ஏதோ வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இந்த எண்ணம் மிஸ்டர் எம்.ஜி.ஆருக்கு இருக்குமா?

கட்சிக்காரர்கள், ரசிகர்கள் தொல்லை தருகிறார்கள். அதனால்தான் அயல்நாடுகளில், பிற மாநிலங்களில் படப்பிடிப்பு நடத்துகிறேன் என்றல்லவா கூறியிருக்கிறார். நான் என்றும் அப்படி கூறியதில்லை. அவுட்டோர் ஷூட்டிங் என்றால் எனக்கு ஒரே ‘குஷி’யாக இருக்கும். நமது திறமையை மக்களுக்கு நேரில் காட்டுவோம் என்றெண்ணி உற்சாகமாக உழைப்பேன்.

என்னிடமும் சில குறைபாடுகள் உண்டு. ஆனால் அது பிறருக்குத் தீங்கு விளைவிக்காது.
ஆனால் மிஸ்டர் எம்.ஜி.ஆரிடம் உள்ள குறைபாடுகள், என்னைப் போன்ற ஏமாளிகளைத் தெருவில் நிறுத்தி விடும்.

சமீபத்தில் எனது நண்பரான ஸ்டண்ட் மாஸ்டர் ஒருவரின் திருமணத்திற்காக நான் சென்றிருந்தேன். முன் வரிசையில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கும்போது வழக்கத்திற்கு மாறாக பரபரப்பு ஏற்பட்டது. பலர் என்னையே பார்த்தார்கள். என்ன விஷயம் என்று தெரியாமல் நான் திகைக்க, முன் வரிசைக்கருகே மிஸ்டர். எம்.ஜி.ஆர். வந்து கொண்டிருந்தார்.

கை கூப்பி வணங்க கையைத் தூக்கியவர் என்னைக் கண்டதும் எதையோ பார்த்தவர் போலானார். விருட்டென்று அருகிருந்த கதவுப் பக்கம் ஓட்டமும் நடையுமாக ஓடி கதவைத் தட்டினார். அது திறக்கப்படவில்லை.

பின் வேகமாக என் பாதை வழியாக முகத்தை திருப்பியபடி சென்று மறைந்தார்.
என்னைக் கண்டு ஏன் இப்படி ஓடி மறைய வேண்டும்? நானென்ன பேயா.. பூதமா.. நான் உண்மையை எழுதுகிறேன் என்ற ஆத்திரமா.. பணத்தையும் கொடுத்து விட்டு, பரிதாபத்திற்குரிய காட்சிப் பொருளாக ஆனவன் நானல்லவா! ஆத்திரப் படவேண்டிய நான் அமைதி அடைந்து விட்டேன். தர்மத்தை கண்டு பொறுக்காமல் அதர்மம் ஆத்திரப்படுகிறது. இப்படித்தான் நான் அன்று எண்ணிக் கொண்டேன்.’

‘இது என்ன கூத்தாடிகள் ராஜ்யமா?’ – பெரியார்

1967ல் விடுதலை நாளிதழில் பெரியார் தனது பொங்கல் செய்தியை வெளியிட்டார். கடந்த நாள்களில் நடந்த சம்பவங்களால் அவரது மனம் எவ்வளவு பாதிக்கப்பட்டிருந்தது என்பதை அந்த எழுத்துகளை வெளிப்படுத்தின. காகிதமே பொசுங்கிப் போகுமளவுக்குச் சூடாக இருந்தன அவரது வார்த்தைகள்.

‘………………… சாதாரணமாக ராதாவானாலும் ராமச்சந்திரன் ஆனாலும் இவர்களுக்கு பொது மக்கள் உலகத்தில் உள்ள மதிப்பு இவர்கள் கூத்தாடிகள், வேஷம்போட்டு நடிப்பவர்கள், காசுக்காக எந்த வேஷத்தையும், எப்படிப்பட்ட இழிமக்கள் தன்மையான கதையையும் எந்த உருவத்திலும் நடிப்பவர்கள் என்பதல்லாமல் இவர்களுக்கு பொதுநல யோக்கியதைக்கு ஏற்ற ஒழுக்கம் நாணயம் பொறுப்பு என்ன இருக்க முடியும்? இவர்கள் நடிப்பால் பொதுமக்களுக்கு பெரிதும் பல தீயகுணங்களும், ஒழுக்கக்கேடும் ஏற்படுவதல்லாமல் என்ன கலைஞானம் 100க்கு 90 மக்களுக்கு ஏற்பட்டு விடும்? ஏற்படக்கூடும்?

இக்காரியங்களில் ஈடுபட்ட இரண்டு கூத்தாடிக் கீழ்த்தர மக்களுக்குள் நடந்த மூர்க்கத்தனமான, காலித்தனமான சம்பவத்திற்காக எவ்வளவு ஆர்ப்பாட்டம், விளம்பரம், மக்கள் இடையில் உணர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது. அரசாங்க ஆக்கினைகள் எவ்வளவு என்று பார்த்தோமானால் சமுதாயத்தின், ஆட்சியின் கீழ்த்தரம் எந்த அளவுக்கு இறங்கிவிட்டது என்று கவலைப்படுகிறேன்.

இதற்காக அரசாங்கம் நாட்டு நிகழ்ச்சிகளை ரூ. 1000, ரூ. 2000 செலவு செய்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிகளை 144 உத்தரவு போட்டு தடுப்பது என்றால் இது என்ன கூத்தாடிகள் ராஜ்யமா? கூத்தாடிகள் அரசாங்கமா? என்றுதானே கேட்கத் தோன்றுகிறது.

நிலைமை இப்படியே மோசமாக வளர்ந்து வருகிறது என்றால், இந்த ஆட்சிக்கு ஆளத்தகுதி இல்லை அல்லது ஜனநாயகத்துக்கும் நம் நாட்டுக்கும் மக்களுக்கும் பொருத்தம் இல்லை. ராணுவமோ, சர்வாதிகாரமோ கொண்டுதான் சமதர்மத்தை அமுல்நடத்த முடியும் என்கிற முடிவுக்கு வரவேண்டும்.

ஏன் எனக்கு இப்படி விரக்தி முடிவு தோன்றுகிறது என்றால், இரண்டு கூத்தாடிகளுக்கு ஏற்பட்ட காலித்தன நிகழ்ச்சிக்காக, காங்கிரஸ் ஆபிசு கொளுத்தப்பட்டது, காமராசர் வீட்டுக்குக் காவல், பெரியார் வீட்டுக்குக் காவல், காமராஜருக்குக் காவல் என்றெல்லாம் காரியம் நடப்பதென்றால் பிறகு நாட்டில் யாருக்குத்தான் பாதுகாப்பு இருக்கமுடியும்? இந்த காலித்தனத்தின் பயனாக ஏற்பட்ட விளைவு இது என்றால் நாட்டில் உண்டாக்கப்பட்டிருக்கும் உணர்ச்சி எப்படிப்பட்டதாக இருக்கிறது என்பதை பொதுமக்கள், அறிஞர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே எழுதுகிறேன்.

காமராஜருக்கோ, காங்கிரஸ் கூட்டங்களுக்கோ, எனக்கோ, காமராஜர் தாயாருக்கோ, அவர் வீட்டிற்கோ என்னதான் கேடுவந்தாலும் அதனால் உலகம் முழுகியா போய்விடும்?
…………………’

***

இந்த ஞாயிறு (27 டிசம்பர்), கிழக்கு பாட்காஸ்டில் எம்.ஜி.ஆர். குறித்த நிகழ்ச்சி. பேசுபவர்கள் ஆர். முத்துக்குமார், பா. தீனதயாளன் – சித்ராவுடன். தவற விடாதீர்கள்.

வேட்டைக்காரன்!

‘வேட்டைக்காரனில்’ எம்.ஜி.ஆரை ‘கௌபாய்’ டிரஸ்ஸிலும் நாலு வயது பையனுக்கு அப்பா வேஷத்திலும் நடிக்க வைக்க முடிவு செய்தார் தேவர். அத்தனை வருடங்கள் எம்.ஜி.ஆரின் தாயாக, பாசம் பொழிந்த கண்ணாம்பா காலமாகியிருந்தார். புதிய அன்னை எம்.வி. ராஜம்மா.

விஸ்வநாதன் – ராமமூர்த்தி இருவரும் பாவமன்னிப்பு, பாசமலர், பாலும் பழமும் பாடல்களால் உச்சாணிக் கொம்பில் இருந்தனர். தேவர் பிலிம்ஸிலும் அவர்கள் இசை அமைக்கட்டும் என்றார் எம்.ஜி.ஆர். கே.வி.மகாதேவன் இசையில் ட்யூன்கள் ஏறக்குறைய ஒரே மாதிரி கேட்பதாக ரசிகர்கள் அபிப்ராயம் சொன்னார்கள். எந்தப் பாட்டு எந்தப் படத்திலிருந்து ஒலிக்கிறது என்று சட்டென்று உணரமுடியாதபடி தேவரின் ‘தா’ வரிசைப் பாடல்கள் இருந்தன.

எதிலும் ஒரு மாற்றத்தை விரும்பியவர் எம்.ஜி.ஆர். அவர் கருத்தை மறுக்கும் சூழலில் தேவர் அன்று இல்லை. எம்.எஸ்.விஸ்வநாதனைப் பார்க்கச் சென்றார். விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசைக்கு விநியோகஸ்தர்களும் அதிக விலை கொடுத்தார்கள். அதை ஏன் இழக்க வேண்டும். தேவர் தன் மடியிலிருந்த பணம் முழுவதையும் விஸ்வநாதன் முன்பு வாரி இறைத்தார். ‘ஆண்டவனே என் முதல் படத்துலருந்து உங்களுக்காகக் காத்துக்கிட்டு இருக்கேன். இப்ப வேட்டடைக்காரனுக்கும் வந்துருக்கேன். நீங்கதான் இசையமைச்சித் தரணும்.’

ஏற்கெனவே விஸ்வநாதனுக்கு அகன்ற கண்கள். அவை இன்னும் பெரிதாகி விரிந்தன. எவ்வளவு பணம்! அதற்கு முன்பு யாரும் அப்படிக் கொண்டு வந்து கொட்டியது கிடையாது. தேவரின் மடி என்ன குபேர விலாஸா? ஒப்புக் கொள்ளலாம் என்று அவர் நினைத்த தருணத்தில் ‘அடேய் விசு’ என்று உள்ளிருந்து தாயார் அழைக்கும் குரல். விஸ்வநாதன் உள்ளே சென்றார். அவர் திரும்பி வந்தபோது தேவர் காணாமல் போய் விட்டார்.

‘நம்ம மாமாதான் (கே.வி. மகாதேவன்) உனக்கு குரு. அவர் செய்த உதவிகளை மறந்துட்டு அவர் பொழப்பை நீ கெடுக்கலாமான்னு விசுவநாதன் கன்னத்துல அவங்க அம்மா ஓங்கி அறைஞ்சுட்டாங்கண்ணே!’
தேவர் சொல்லச் சொல்ல எம்.ஜி.ஆர். அதிர்ந்தார். தன் கன்னங்களைப் பதறியபடி தடவிக் கொண்டார். ‘சரிங்கண்ணே, இது நமக்குள்ளயே இருக்கட்டும்’ எம்.ஜி.ஆர். தேவருக்கு உத்தரவிட்டார்.

மகாதேவன், வேட்டைக்காரன் படத்தில் மெட்டுப் போட்ட பாடல்கள் எம்.ஜி.ஆருக்கு நிரந்தரப் புகழையும் பெருமையையும் தேடித் தந்தன. எம்.ஜி.ஆர். அவரே முயன்றும் வற்புறுத்தியும்கூட விஸ்வநாதன் கடைசி வரையில் தேவர் பிலிம்சில் இசை அமைக்கவில்லை. ஆனால் எம்.ஜி.ஆரே எதிர்பாராமல் அவரது சிறந்த ஜோடியாக ரசிகர்கள் கொண்டாடிய சரோஜா தேவி வேட்டைக்காரன் படத்தில் நடிக்க முடியாமல் போனது.
தமிழ் சினிமாவில் பத்மினி, பானுமதி, அஞ்சலிதேவி, சாவித்ரி போன்ற சிறந்த கதாநாயகிகளுக்குப் பாமர மக்களின் மனத்தில் நிரந்தர இடம் கிடைக்காமல் போய்விட்டது. ஒட்டுமொத்த பாட்டாளித் தமிழர்களும் தங்களின் கனவுக் கன்னியாகக் கருதியது சரோஜா தேவியை மட்டுமே. அதனால் எம்.ஜி.ஆரும், சரோஜா தேவி தாமதமாக வந்தால் கோபிக்க மாட்டார்.

நிலைமை அப்படியிருக்க சரோஜா தேவியின் தாயாரிடம் வேட்டைக்காரன் படத்துக்காக கால்ஷீட் கேட்டார் தேவர். எப்போதும்போல் மொத்தமாகத் தேதிகளைத் தனக்கு ஒதுக்கி வைத்திருப்பார்கள் என்று எண்ணினார். நம்பிக்கையோடு அடையாறு காந்தி நகருக்குப் புறப்பட்டார். சரோஜா தேவி தேவர் மீது அளவில்லாத மதிப்பு உடையவர். தேவருக்கு ஜனவரி 7 முக்கியம். அன்று அவரது ஆஸ்தான கதாநாயகி சரோவின் பிறந்த நாள்! தேவர் ஒவ்வொரு ஆண்டும் அத்தினத்தில் சரோஜா தேவிக்குப் பொற்காசுகளால் அபிஷேகம் செய்வார். அத்தனைச் சிறந்த நட்பும் பரஸ்பர மரியாதையும் அவர்களுக்குள் நிலவியது.
வேட்டைக்காரன், அந்த சிநேகத்தில் விரிசல் விழ வைத்து விட்டது. சரோஜா தேவியின் தாயார் ருத்ரம்மா. கண்டிப்புக்கும், கறாருக்கும் புகழ் பெற்றவர். அவர் சரோஜா தேவியின் வாழ்க்கையை கால்ஷீட்டுகளாகவே கணக்கெடுத்தார். தேவருக்கும் ருத்ராம்மாவுக்கும் நடைபெற்ற காரசாரமான மோதலை சரோஜா தேவி பயந்தபடியே நோக்கினார்.

‘வேட்டைக்காரன் கதை வசனமெல்லாம் ரெடியாயிடுச்சு. ஆரூர்தாசு எழுதிக்கிட்டு வராரு. உங்க தேதி தெரிஞ்சா பூஜையை நடத்திடுவேன்.’

‘முன்ன மாதிரி ஒரேயடியா கொடுக்க முடியாதுங்க. பாப்பாவுக்கு நிறைய படம் புக் ஆகுது. டே அன்ட் நைட் வேல செஞ்சாலும் போதல. நாகி ரெட்டியார் கூடக் கேட்டிருந்தார். எம்.ஜி.ஆர். மேனேஜர் வீரப்பன் படம் ஆரம்பிச்சிருக்காரு.’

‘எம்.ஜி.ஆர். கால்ஷீட்டை மொத்தமாக் கொடுத்திட்டாரு. வர்ற பொங்கலுக்குப் படம் ரிலீஸ். அவர் தேதியை நான் வேஸ்ட்டு செய்ய முடியாதே.’

‘சரவணா பிலிம்ஸ் படம் வேறே கலர்ல முதன்முதலா எடுக்கறாங்க. யார் கலர்ல தயாரிக்கணும்னாலும் எடுத்தவுடன் பாப்பாகிட்ட வந்து கால்ஷீட் கேக்குறாங்க’ – ருத்ரம்மாவின் குரலில் அலட்சியம். தேவர் அதை எதிர்பார்க்கவில்லை.

தேவருக்குப் புரிந்தது. சினிமா உலகில் கண்ணதாசனிடம் சென்று பலர் புகார் செய்திருந்தார்கள். அவர் மாடர்ன் தியேட்டர்ஸ் காட்டு ரோஜா படத்துக்காக எழுதிய பல்லவியை மாற்றி எழுதும் படி. ‘ஏனடி ரோஜா என்னடி சிரிப்பு – எவரைக் கண்டாயோ’ என்கிற பல்லவியைத் தங்கள் எரிச்சலைத் தணித்துக் கொள்ளும் விதமாக, ‘ஏனடி சரோஜா என்னடி கொழுப்பு – எவரைக் கண்டாயோ’ என்று. அந்த அளவு சரோஜா தேவியின் மார்க்கெட் ஓஹோ. சரோவின் மார்க்கெட்டில் தனக்கு இல்லாத உரிமையா என்று எண்ணினார் தேவர். அதில் சிறுத்தை விழுந்தது.

‘எம்.ஜி.ஆர். கொடுத்த கால்ஷீட்டுல சரோஜா வந்து நடிக்குமா, இல்லையா?’ – தேவர் வழவழா ஆசாமி கிடையாது.

‘இப்படிப் பேசினா எம் பொண்ணு உங்க படத்துல நடிக்காது.’

தேவருக்குக் கொதிப்பு. ‘உங்க மக என் படத்துல நடிக்கறதா வேணாமான்னு நீங்க முடிவு செய்யக்கூடாது. அதைத் தீர்மானிக்க வேண்டியவன் நான்.’ எரிமலையாக வெடித்தபடியே தன் அங்க வஸ்திரத்தை இழுத்துப் போர்த்திக் கொண்டு வெளியேறினார். சினிமா காட்சிபோல் சரோஜா தேவி ஓடிவந்து தடுத்தார். அதைச் சட்டை செய்யாமல் கார் கிளம்பியது.

எம்.ஜி.ஆரே வந்து வற்புறுத்தினாலும் இனி சரோ நடிக்க மாட்டார் என்று திட்டவட்டமாக அறிவித்தார் தேவர். 1963 தீபாவளி அன்று வெளியானது ‘பரிசு’. எம்.ஜி.ஆரும், சாவித்ரியும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணைந்து நடித்து படம் வெற்றிகரமாக ஓடியது. டி. யோகானந்தின் படம் அது. தேவரும் வேட்டைக்காரனில் அதே ஜோடியைப் பயன்படுத்த முடிவு செய்தார். சரோவுக்குப் பதில் சாவித்ரி வந்தார்.

வேட்டைக்காரன் படத்தில் சாவித்ரி நடிப்பதற்காகக் காட்சிகள் வலுவூட்டப்பட்டன. அதை எம்.ஜி.ஆர். வரவேற்றார். சரோஜா தேவிக்கும் கூடுதலாகவே கவர்ச்சியாக எம்.ஜி.ஆருடன் சாவித்ரி ஆடிப்பாடினார். ‘மெதுவா மெதுவா தொடலாமா – உன் மேனியிலே என் கை படலாமா…’

தேவருக்கு அதிலும் திருப்தி இல்லை. அப்போதுதான் திரையுலகில் தடம் பதிக்க ஆரம்பித்திருந்த  நாகேஷுக்கு முக்கியத்துவம் கொடுத்து மனோரமாவுடன் ஒரு காமெடி பாடல் வைத்தார். ஒரே நாளில் ஊட்டியில் முழுப் பாடலையும் எடுத்து முடித்தார். மனோரமாவுக்கு முதன் முதலில் பத்தாயிரம் ரூபாய் சம்பளம் தந்து அதிரச் செய்தார். சீட்டுக்கட்டு ராஜா என்ற பாடல் பட்டி தொட்டி முதற்கொண்டு எங்கும் பிரபலம்.

எம்.ஜி.ஆரின் புதிய கெட்-அப் அவரது ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருந்தது. சென்னை சித்ரா தியேட்டர் அல்லோலகல்லோலப்பட்டது. திரையிலும் தியேட்டருக்குள்ளேயும் எல்லாம் தொப்பிகளாகவே தெரிந்தன.

தேவர் எம்.ஜி.ஆருக்காகவும் தன் எண்ணங்களை மாற்றிக் கொள்ளாதவர். பிரமாண்டமான செட்களில் அவரது படங்களில் ‘கனவு’ பாடல் காட்சிகள் வரவே வராது. ‘செட்டை எவன்டா பாக்குறான், அண்ணனத்தான்டா ரசிக்க வரான்’ என்பார்.

வேட்டைக்காரனுக்காக சித்ரா தியேட்டர் வாசலில் ரசிகர்களே காடும் மலையும் சூழ்ந்த அரங்கம் அமைத்தார்கள். அதில் வேட்டைக்காரன் தோற்றத்தில் எம்.ஜி.ஆருக்குச் சிலை. ஏறக்குறைய ஒன்றே கால் லட்சம் ரூபாய் செலவானது. தீ அணைப்பு எஞ்சின்களுக்கு மட்டும் ஏழாயிரம் கொடுத்தார்கள்.
வாள் வீச மட்டுமே எம்.ஜி.ஆருக்குத் தெரியும். அவர் பேன்ட் ஷர்ட் அணிந்து நடித்தால் படம் ஓடாது என்கிறக் கருத்து கோடம்பாக்கத்தில் நிலைபெற்றிருந்தது. தேவர் அதை மாற்றிக் காட்டினார். சமூகப் படங்களிலும் எம்.ஜி.ஆர். சாதிக்க முடியும் என்று நிரூபித்தார்.

(பா. தீனதயாளன் எழுதிய சாண்டோ சின்னப்பா தேவர் புத்தகத்திலிருந்து)

எம்.ஜி.ஆரை அடக்கிய தேவர்!

‘அண்ணே யாரு உங்க படத்துல ஹீரோ?’

‘எம்.ஜி.ஆர்.’

‘நல்ல ஆளுண்ணே நீங்க. மொத மொதலாப் படம் எடுக்கறீங்க. ஒழுங்கா வேல நடக்க வேணாமா?’

‘ஏம்ப்பா, எம்.ஜி.ஆர். உனக்கென்ன கெடுதல் செஞ்சார்?’ – கோபத்தோடு சின்னப்பா தேவர் கேட்டார். சக தயாரிப்பாளர் அசரவே இல்லை. ‘அண்ணே நான் சொல்றேன்னு தப்பா எண்ணாதீங்க. நீங்க  எம்.ஜி.ஆர். காளையை அடக்குற மாதிரி நடிக்கணும்னு ஆசைப்படறீங்க. இன்னும் எம்.ஜி.ஆரை  நீங்க சரியாப் புரிஞ்சிக்கிடவே இல்ல. அவர் வரவே மாட்டார்.’
தேவர் பேசாமலிருந்தார். எம்.ஜி.ஆருக்கும் அவருக்குமான நட்பைப் பற்றித் தெரியாத அந்த சக தயாரிப்பாளர், ‘வரேங்க’ என்றபடி காரில் ஏறினார். எம்.ஜி.ஆர். மீதான குற்றச்சாட்டுகள் நெருப்பாகப் பரவியிருந்தன. எல்லோருமே குறை கூறினர். தயாரிப்பாளர்களோடு ஒத்துழைப்பது குறைவு. எம்.ஜி.ஆர். தன்னிச்சையாகச் செயல்படுகிறார். அவரால் படங்கள் வெளிவருவது தாமதமாகிறது.

அதற்கெல்லாம் காரணம் தி.மு.க.தான். ஒழுங்காக பக்தியோடு தொழில் செய்தவர்,  நாத்திகவாதிகளுடன் சேர்ந்து நாசமாகி விட்டார் என்பது போன்ற செய்திகள் எம்.ஜி.ஆரின் இமேஜைப் பாதித்தன. அலிபாபாவும் நாற்பது திருடர்களும் படத்தில் ‘அல்லா மீது ஆணையாக’ என்ற  வசனத்தைப் பேச மறுத்தார். அதை ‘அம்மா மீது ஆணையாக’ என்று மாற்றித் தரும்படி வசனகர்த்தா  ஏ.எல். நாராயணனை வற்யுறுத்தினார். முதலாளி டி.ஆர்.எஸ், ‘டயலாக் என்ன இருக்கோ, அதையே  பேசு ராமச்சந்திரா’ என்று உத்தரவே போட்டார். ஆனால் எம்.ஜி.ஆர். ஷூட்டிங்குக்கு தொடர்ந்து போகவில்லை. அவர் இல்லாமலேயே ஒரு சண்டைக் காட்சியையும் பாட்டு சீனையும் எடுத்து  டி.ஆர்.எஸ். படத்தை முடித்தார்.

எம்.ஜி.ஆர். மீண்டும் சேலம் சென்றார். ‘ராமச்சந்திரா படத்தை ஒரு தடவை பார்த்துட்டுப் போ’  என்று வழியனுப்பினார் டி.ஆர்.எஸ். கரடிமுத்து என்கிற நகைச்சுவை நடிகர், எம்.ஜி.ஆருக்கு  பதிலாக நடித்திருந்தார். எம்.ஜி.ஆர். அதிசயித்தபடி வெளியே வந்தார். அவருக்கே அசலையும் ÷ பாலியையும் பிரித்துப் பார்க்க முடியவில்லை.

குற்றச்சாட்டுகள் எதையும் தேவர் பொருட்படுத்தவில்லை. எம்.ஜி.ஆரை  நம்பினார். 1956 –  எம்.ஜி.ஆரின் ஆண்டாக இருந்தது. அதனாலேயே தாய்க்குப் பின் தாரம் படத்தையும் மிகுந்த  அக்கறையோடு தயாரித்துக் கொண்டிருந்தார்.

எம்.ஜி.ஆருக்காகவே சண்டைக் காட்சிகள் அதிகம் புகுத்தப்பட்டன. ஷூட்டிங் முடிய ஒரு  ஷெட்யூல் மட்டுமே பாக்கி. தேவர் உற்சாக நடை போட்டார். மருதமலை முருகன் அருளால் படம்  நல்லபடியாகவே தயாராகி விட்டது. காளைச் சண்டையை காமிராவில் பிடித்து விட்டால் வியாபாரம் முடிந்த மாதிரி. எம்.ஜி.ஆரிடம் பேசினார் தேவர்.

‘அண்ணே! உங்க தேதிக்கு காத்துக்கிட்டு இருக்கேன். வாகினில செட் தயார். வந்து பார்க்கறீங்களா?  பெரிய மைதானம். போதுமா சொல்லுங்க. வர்ற தை அமாவசை அன்னிக்கு வேலையை ஆரம்பி ச்சாப் பரவாயில்லயா?’

‘காளைக்கு நல்லா ட்ரெயினிங் கொடுத்தாச்சா?’ – எம்.ஜி.ஆர். கேட்டார்.

‘நீங்க அச்சப்படற மாதிரி விட்டுடுவேனா?’

‘பயமா, எனக்கா?’

‘இல்லண்ணே ஒரு பேச்சுக்கு…’
தேவருக்குச் சட்டென்று மனத்துக்குள் சிநேகித நூல் அறுவது போலிருந்தது. எம்.ஜி.ஆரின் உரையாடலும் நடவடிக்கையும் தட்டிக் கழிப்பதாகத் தெரிகிறதே. ஒழுங்காக முடித்துக்கொடுக்க மாட்டாரா?  எல்லோரும் சொன்னதெல்லாம் அனுபவித்து அவஸ்தையுற்று வெளியிட்ட சத்திய  வார்த்தைகள்தானா? என் எம்.ஜி.ஆர். இல்லையா இவர்?
தேவர், எம்.ஜி.ஆரை ஏறிட்டு நோக்கினார். மகிழ்ச்சி போனது. எனக்கு பதில் சொல்லிட்டுப் போ  என்கிற பிடிவாதமும் மிரட்டலும் கண்களில் அப்பட்டமாகத் தெரிந்தன.

‘அண்ணே…’

‘என் கால்ஷீட்டை இப்பப் பெரியவருதான் பார்க்குறாரு. நீங்க சக்ரபாணி அண்ணனைக் கேளுங்க’ –  எம்.ஜி.ஆர். சொன்னார்.

‘தாய்க்குப் பின் தாரத்துல சக்ரபாணி கிடையாதே. நான் எதுக்கு அவருகிட்டப் பேசணும்.’ – தேவர்  சூடானார்.

‘புரிஞ்சுக்குங்க அண்ணே. எல்லா முதலாளிகளும் அண்ணன்கிட்டதான் பேசறாங்க. எனக்கு அவரு  சொன்னா ஓகே. ஒரே குடும்பமா வாழறோம். பெரியவங்க வார்த்தையை மீற விரும்பல.’

தேவர் அமைதியாக வெளியேறி விட்டார்.

*******

தேவர் பிலிம்ஸின் முதல் தயாரிப்பான தாய்க்குப் பின் தாரமே தேவருக்குச் சுளையாக முப்பதாயிரம்  ரூபாயை லாபப் பங்காக அளித்தது. சொந்த சினிமா முயற்சி வெற்றி பெறாவிட்டால் தேவர் பிறந்த  ஊருக்கே போய்விடலாம் என்று முடிவு செய்திருந்தார். ஆனால் அவரது பேனரில் தாய்க்குப் பின்  தாரம் அள்ளிய வசூலை வேறு எந்தப் படமும் பெறவில்லை.
எம்.ஜி.ஆர். தேவரைச் சந்தித்தார். தன் சந்தோஷத்தைத் தெரியப்படுத்தினார். ‘அடுத்த ரிலீஸ் எப்ப  அண்ணே?’ என்றார் ஜாலியாக.

‘பார்க்கலாம்’ தேவர் சுருக்கமாக முடித்துக் கொண்டார்.

‘மனசுல எதையும் வெச்சுக்காதீங்கண்ணே. நீங்களே என்னைப் புரிஞ்சுக்கலண்ணா வேறு யார்  கிட்டப் போய் நிக்குறது?’

எம்.ஜி.ஆர். இறங்கி வந்தார். தேவர் பிடி கொடுக்கவில்லை. தாய்க்குப் பின் தாரம் தெலுங்கும் பேசியது. எம்.ஜி.ஆர்.  வீறுகொண்டு எழுந்தார். ‘யாரைக் கேட்டுப் படத்தை டப் செய்தீர்கள். எனக்கு எப்படி இன்னொரு வன் குரல் கொடுக்கலாம்?’ விளக்கங்கள் கேட்டு வக்கீல் நோட்டீஸ் பறந்தது தேவர் பிலிம்ஸுக்கு.

அலறியடித்துக் கொண்டு வாகினியில் நின்றார் தேவர். அதன் அதிபர்களில் ஒருவரான சக்ரபாணி சிநேகமாகச் சிரித்தார். தேவர் வசமிருந்த வழக்கறிஞரின் ஓலையை வாங்கி வாசித்துப் பார்த்தார். நாகிரெட்டி ஓடி வந்தார். அவரும் படித்துப் பார்த்து விட்டு கலகலப்பானார்.

சக்ரபாணி, எம்.ஜி.ஆருக்குத் தக்கபடி பதிலடி கொடுத்தார்.
‘காளையை நீங்கள் நிஜமாகவே அடக்கவில்லை. உங்களது டூப்தான் மோதி வெற்றி பெற்றார்.  ஆனால் அதற்கும் சேர்த்து ஊதியம் பெற்றுக் கொண்டீர்கள். உண்மையில் அக்கறையோடு நீங்களே  மாட்டை வென்றிருந்தால் இன்னும் எங்களுக்கு வசூல் அதிகரித்திருக்கும். அதற்கான நஷ்டத்தை  உங்களிடம் இருந்தே பெற விரும்புகிறோம்.’

எம்.ஜி.ஆர். அடங்கி விட்டார்.

********

சமீபத்தில் நான் மிகவும் ரசித்த, வியந்த, படித்து மகிழ்ந்த (எடிட் செய்த) புத்தகம் இது. சாண்டோ  சின்னப்பா தேவர். சினிமாவையும் சிவமைந்தனையும் வெறித்தனமாக நேசித்த ஒரு மாறுபட்ட  மனிதரின் வாழ்க்கை வரலாறு.

சினிமாவுக்குள் தேவர் எப்படி நுழைந்தார்? ஆரம்ப காலத்தில் எம்.ஜி.ஆருக்கும் தேவருக்கும் நட்பு  எப்படி இருந்தது? ஏன் முறிந்தது? மீண்டும் எப்படித் துளிர்த்தது? எம்.ஜி.ஆரை வைத்து ஒரு படம்  எடுப்பதற்குள்ளாகவே எத்தனையோ தயாரிப்பாளர்கள் நொடிந்து போயிருக்கிறார்கள். தேவரால்  மட்டும் எப்படி தொடர்ந்து இத்தனை படங்களைக் கொடுக்க முடிந்தது? ஒரே இனத்தைச் சார்ந்தவர்  என்றாலும் தேவர் ஏன் சிவாஜியை வைத்து படம் எடுக்கவில்லை? எம்.ஜி.ஆரையும் முருகனையும்  மட்டுமே நம்பி படம் எடுத்த தேவர், திடீரென மிருகங்களை நம்ப ஆரம்பித்தது ஏன்? மொழியே  தெரியாமல், பாலிவுட்டிலும் நுழைந்து தேவர் கலக்கியது எப்படி? இவை மட்டுமல்ல, இன்னும்  எத்தனையோ கேள்விகளுக்கு விடையளிக்கிறது இந்தப் புத்தகம்.

பூஜை போட்டு மூன்றே அமாவாசையில் படம் முடியவேண்டும். அடுத்த பௌர்ணமியில் படம்  ரிலீஸ் ஆக வேண்டும். இதுதான் தேவரின் கணக்கு. யாருக்காகவும் எதற்காகவும் தொழிலில்  சுணக்கம் வருவதை தேவர் ஒருபோதும் அனுமதித்ததில்லை, அது எம்.ஜி.ஆராகவே இருந்தாலு ம்கூட. கோலிவுட்டின் இடிஅமீன் இதுவே அவருக்கு வைக்கப்பட்ட பட்டப்பெயர்.

தேவர் பற்றியும் புத்தகம் பற்றியும் இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் நீ ங்கள் புத்தகத்தை வாசித்து அனுபவிக்கும் சுகத்தை நான் கெடுக்க விரும்பவில்லை.

தேவரது வாழ்க்கையிலேயே ஏகப்பட்ட சுவாரசியங்கள். புத்தகத்தை எழுதியிருக்கும் நண்பர் பா.  தீனதயாளனின் நடை அதை அதிசுவாரசியமாக்கியிருக்கிறது. புத்தகத்தைப் படிக்கும்போது நமக்கு தேவரது வசவுகளையும் பாசத்தையும் அனுபவித்துக் கொண்டே தேவர் பிலிம்ஸில் வேலை பார்க்கும் உணர்வு ஏற்படுகிறது. தேவரது வாழ்க்கையோடு அரைநூற்றாண்டு கால கோடம்பாக்கத்தின் வரலாற்றையும் பின்னிப் பிணைத்துக் கொடுத்திருக்கிறார் தீனத யாளன்.

கிழக்கில் வெளியாகியிருக்கும் சினிமா கலைஞர்கள் குறித்த புத்தகங்களிலேயே மிகச் சிறந்ததாக  நான் குறிப்பிடுவது இந்தப் புத்தகத்தைத்தான்.

புத்தகத்தை வாங்க.

தீனதயாளனின் பிற புத்தகங்கள்.

புத்தகம் குறித்த பாராவின் விமர்சனம்.

தேவர் குறித்த முரளிகண்ணனின் சமீபத்திய பதிவு.

ஜெயலலிதாவின் அங்கிள்! எம்.ஜி.ஆரின் கோபம்

‘குலேபகாவலி’யில் நடித்த போது எம்.ஜி.ஆருடன் நண்பரானார் சந்திரபாபு. ஆனால் அது சுலபமாக நடந்துவிடவில்லை. நட்பு எப்படி மலர்ந்து என்பதைச் சந்திரபாபுவே விவரித்திருக்கிறார்.

‘…செட்டில் ரொம்ப வேடிக்கையாகப் பேசிக் கொண்டிருப்போம். எங்கள் குழுவில் இல்லாத ஒரே நபர் மிஸ்டர் எம்.ஜி.ஆர்.தான். தனிமையில் ஒரு நாற்காலியைப் போட்டுக் கொண்டு அமர்ந்திருப்பார். அன்றும் அப்படித்தான் அவர் ஒரு புத்தகத்தை வைத்துப் படித்துக் கொண்டிருந்தார். நான், டைரக்டர் ராமண்ணா, நடிகர் தங்கவேலு, மற்றும் பலர் அமர்ந்து சிரித்து பேசிக் கொண்டிருந்தோம். ராமண்ணா மிஸ்டர் எம்.ஜி.ஆரை அழைத்து அவர் அருகே அமரச் சொன்னார். உடனே நான் ஒரு ஜோக் அடித்தேன். எல்லோரும் சிரித்தார்கள். ஆனால் மிஸ்டர். எம்.ஜி.ஆர். மட்டும் சிரிக்கவில்லை.

‘என்ன மிஸ்டர் எம்.ஜி.ஆர்! சிரிச்சா முத்தா உதிர்ந்து போகும்? இப்படி உம்முன்னு இருக்கீங்களே’ என்றேன்.

‘உங்க ஜோக்குக்கு சிரிப்பா வரும்? கிச்சு கிச்சு மூட்டினாத்தான் சிரிப்பு வரும்’ என்றார் பட்டென்று.

எல்லோரும் என்னேயே பார்த்தார்கள் எனக்கு அவமானமாகப் போய் விட்டது. பிறகுதான் எனக்கு மிஸ்டர் எம்.ஜி.ஆரைப் பற்றிச் சொன்னார்கள். ‘அவர் எப்போதும், எதிலும் தான் மட்டுமே பிரபலமாகத் தெரிய வேண்டும் என்று நினைப்பார். கூட்டத்தோடு சேர மாட்டார். தனிமையில்தான் அமர்ந்திருப்பார். அவருடன் பேச வேண்டுமானால் அவர் இருக்குமிடம் தேடித்தான் போக வேண்டும். உங்க ஜோக்குக்கு அவர் சிரிக்காததற்குக் காரணமே இதுதான். அவர் சிரிச்சுட்டார்னா, அந்தக் கூட்டத்தில நீங்க உயர்ந்திடுவீங்க இல்லையா, அதனாலதான் அப்படிச் சொன்னார் அவர்’ என்றார்கள்.

நான் வியந்தேன்.

ஒரு சாதாரண விஷயத்தில்கூட இந்த மனிதர் இப்படி நடந்து கொள்கிறாரே என்று நினைத்தேன். அன்று ஒரு சிறிய குழுவில் கூட தான் மட்டும்தான் பெரியவன் என்று காட்டிக் கொள்ள ஆசைப்பட்டார். அன்றிலிருந்து அவர் வளர்த்துக் கொண்ட அந்த ‘தான்’ என்ற அகந்தை இன்று அவர் வளர்ந்ததைப் போலவே வளர்ந்திருப்பதை நான் கண்கூடாகக் காணுகிறேன். அந்த ஒரு நிகழ்ச்சியில் இருந்து நான் அவரை விட்டு ஒதுங்கியே இருப்பேன். ஒவ்வொரு முறை என்னைப் பார்க்கும்போதும் சிரிப்பார். பதிலுக்கு நானும் ஒரு அசட்டுச் சிரிப்பு சிரிப்பேன்.

டைரக்டர் ராமண்ணா படப்பிடிப்பன்று ‘இன்று நான் புலிச் சண்டையைப் படமாக்கப் போகிறேன். நீங்கள் அதற்குத் தக்கவாறு பழகிக் கொள்ளூங்கள்’ என்றார் மிஸ்டர் எம்.ஜி.ஆரிடம்.

புலிச் சண்டைக்கான கூண்டுகள் போடப்பட்டன. எல்லோரும் மிஸ்டர் எம்.ஜி.ஆரின் வருகைக்காகக் காத்திருந்தோம். அவர் வரவில்லை. ஒரு மணி நேரமாயிற்று. இரண்டு மணி நேரமாயிற்று. பிறகு வந்தார்.
ஸ்டண்ட மாஸ்டரிடம் ‘ஒன்றும் ஆபத்தில்லையே’ என்றார்.

‘இல்லை சார். மயக்க மருந்து கொடுக்கிறோம்’ என்றார் மாஸ்டர்.

மிஸ்டர். எம்.ஜி.ஆர். புலிக் கூண்டிற்குள் நுழைந்தார்.  இரு பக்கங்களில் இரு காமிராக்கள் சுழலத் தொடங்கின. புலி படுத்து பாய்வதற்குத் தயாரானது.

நாங்கள் பயத்துடன் மிஸ்டர். எம்.ஜி.ஆரைப் பார்த்தோம். புலி மீது வைத்த கண்ணை அவர் எடுக்கவில்லை.
குபீரென அது பாய்ந்தது. எம்.ஜி.ஆர். லாகவமாக கீழே குனிந்து பதுங்கிக் கொண்டார். புலி தொப்பென்று விழுந்தது.

‘கட்’ என்றார் ராமண்ணா.

சமயோசிதமாக எம்.ஜி.ஆர். குனிந்ததை எல்லோரும் பாராட்டினார்கள். அவருக்கும் முகத்தில் ஒரு மகிழ்ச்சி. உடம்பெல்லாம் வேர்க்க விறுவிறுக்க வந்து அமர்ந்தார். அவரை நான் பாராட்டினேன். என் கையைப் பிடித்து அருகில் அமரச் சொன்னார். வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தார். பிறகு ராமண்ணா பல கோணங்களில் புலிச் சண்டையைப்படமாக்கினார். அதை நான் விவரிக்கக்கூடாது. அது தொழில் ரகசியம். என் அருகிலேயே எம்.ஜி.ஆர். இருந்தார். ஆனால் புலிச் சண்டை மட்டும் படமாகிக் கொண்டிருந்தது.

அன்றிலிருந்து நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களானோம். ‘பாபு இன்று முதல் நீங்கள் என் குடும்பத்தில் ஒருவர்” என்றார் எம்.ஜி.ஆர். நானும் ஏற்றுக் கொண்டேன்…’

0

பத்மினி ப்ரொடக்ஷன்ஸ் பி.ஆர். பந்தலு, ப. நீலகண்டன் ஆகியோர் ‘சபாஷ் மீனா’ என்ற முழுநீள நகைச்சுவைப் படத்தை எடுக்க விரும்பினார்கள்.

கதாநாயகனாக நடிக்க சிவாஜியிடம் பேசினார்கள். கதையைக் கேட்டார் சிவாஜி. அதில் நாயகன் பாத்திரத்துக்கு இணையாக படம் முழுவதும் வரும் மற்றொரு நகைச்சுவை கலந்த முக்கிய கதாபாத்திரம் ஒன்று இருந்தது. அதற்கு சிவாஜி, ‘அந்த கேரக்டருக்கு சந்திரபாபுவைப் போட்டா ரொம்ப நல்லா வரும்’ என்றார் அவர்களிடம்.

ப. நீலகண்டன் தமது அலுவலகத்துக்குச் சென்று  சந்திரபாபுவைத்தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அவரைச் சந்திக்க  வருவதாகக் கூறினார். அதற்குச் சந்திரபாபு, ‘நீங்க அங்கேயே இருங்க. நான்  கிளம்பி வர்றேன்’ என சொல்லிவிட்டு தன் காரில் கிளம்பி வந்தார் மயிலாப்பூர் திருவள்ளுவர் சிலை அருகிலிருந்த பத்மினி பிக்சர்ஸ் அலுவலகத்துக்கு.

‘சபாஷ் மீனா’ படத்தின் கதை, சந்திரபாபுவின் கதாபாத்திரம், சிவாஜி சொன்ன கருத்து ஆகியவற்றை சந்திரபாபுவிடம் சொன்னார் நீலகண்டன்.

‘மிஸ்டர் சிவாஜி ஒரு நல்ல, பிரமாதமான ஆக்டர். என் திறமைய புரிஞ்சுக்கிட்டிருக்கார். அதான் என்னை சிபாரிசு பண்ணியிருக்கார்’ என சந்திரபாபு சொல்ல, நீலகண்டனுக்குக் கொஞ்சம் அதிர்ச்சி. சுதாரித்துக்கொண்டு, ‘உங்களுக்கு எவ்வளவு சம்பளம் வேணும்’ என கேட்டார் நீலகண்டன்.

‘சிவாஜி கணேசனுக்குக் கொடுக்கறதை விட கூட ஒரு ரூபாய் கொடுங்க!’ என்றார் சந்திரபாபு.

நீலகண்டனுக்கு என்ன பதில் பேசுவதென்றே புரியவில்லை. சிவாஜியிடம் நடந்ததைச் சொன்னார் நீலகண்டன்.

‘அவன்கிட்ட விஷயம் இருக்கு. இது காமெடிப் படம். சில ஸீன்களில அவன் நடிப்புதான் நிக்கும். நான்தான் பார்த்து நடிக்கணும். சில சமயங்களில் இப்படித்தான் லூசுத்தனமா பேசுவான். விடுங்க.’ – சிவாஜி சொன்னார்.

0

எம்.ஜி.ஆரும் சந்திரபாபுவும் ‘அடிமைப் பெண்'(1969) படத்தில் நடித்தனர். இருவரும் இணைந்து நடித்த இறுதிப் படம் இதுதான்.

சுமார் நாலடி உள்ள ஒரு சுவர் மீது ஏறி, ஓடி சந்திரபாபுவும் ஜெயலலிதாவும் தப்பிப்பது போல் காட்சி. ஷாட்டின் போது, சுவர் மிகவும் சேதப்பட்டிருந்ததால், முன்னால் ஓடிய சந்திரபாபு நிலை தடுமாறி கீழே விழப் போக தாங்கிப் பிடித்தார் ஜெயலலிதா. அதோடு படப்பிடிப்பில் பிரேக் விடப்பட்டது.

உணவு இடைவேளையில் சந்திரபாபு, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மூவரும் ஒன்றாக அமர்ந்திருந்தனர். எம்.ஜி.ஆர். எதுவும் பேசாமல் மௌனமாகவே இருந்தார். அவருக்கு வீட்டிலிருந்து உணவு வந்துவிட்டது. சந்திரபாபுவுக்கு வரவேண்டிய உணவு வரவே இல்லை.

“என்ன சாப்பிடலையா?” என்றார் எம்.ஜி.ஆர் சந்திரபாபுவிடம்.

“சாப்பாடு இன்னும் வரலை!”

“அது வரட்டும். நீங்க என்னோட சாப்பாட்டை சாப்பிடுங்கள்” என தன் சாப்பாட்டை சந்திரபாபுவுக்கு பரிமாறச் சொன்னார் எம்.ஜி.ஆர்.

“எத்தனையோ தடவை உங்க வீட்டுல விருந்து சாப்பிட்டிருக்கேன். ஆனா இன்னிக்கு சாப்பாடு ரொம்ப சுவையா இருந்தது” என்றார் உண்டு முடித்த சந்திரபாபு.

அதன்பிறகு எம்.ஜி.ஆர். சாப்பிடவில்லை. பசியில்லை என்று கூறிவிட்டார். முகத்தை ஒரு மாதிரியே வைத்திருந்தார். படப்பிடிப்பும் துவங்கவில்லை.

சந்திரபாபு ஜெயலலிதாவிடம் என்ன விஷயம் என தனியாக விசாரித்தார். அதற்கு அவர் சொன்ன பதிலைக் கேட்டு அதிர்ச்சியானார் சந்திரபாபு.

படப்பிடிப்பில் தடுமாறி விழப் போன சந்திரபாபுவை ஜெயலலிதா தாங்கிப் பிடித்ததை எம்.ஜி.ஆர். விரும்பவில்லையாம். அதுதான் அவர் மூட்-அவுட் ஆகக் காரணமென தெரிந்து கொண்ட சந்திரபாபுவும் சங்கடத்துக்குள்ளானார். காரணம் ஜெயலலிதாவின் தாயாரின் சகோதரியான வித்யாவதி, சந்திரபாபு எல்லோரும் குடும்ப நண்பர்கள். அவர்களின் வீட்டுக்கு சந்திரபாபு செல்லும் போது, ‘அங்கிள்’ என அழைத்தபடி ஓடி வந்து சந்திரபாபுவுடன் பேசுவார், சிறு குழந்தையாக இருந்த ஜெயலலிதா. இதைப் புரிந்து கொள்ளாமல் எம்.ஜி.ஆர். தவறாக நினைத்துக் கொண்டாரே என வருந்தினார் சந்திரபாபு.

0

சந்திரபாபு பற்றி புத்தகம் எழுதுகிறேன் என்றதும் எல்லோரின் புருவமும் அனிச்சையாக உயர்ந்தது. தகவல் திரட்டச் சென்றபோது ஒரு சிலர் மட்டும் சண்டை போட்டனர். சிலர் ஒதுங்கிப் போயினர். சிலர் அலைய வைத்தனர். ‘என்ன மிஸ்டர் பாபு, இப்படி படுத்துறீங்க’ன்னு நான் கோபமான நேரத்துல ‘அட பொதுவாழ்க்கைன்னு வந்துட்டா இதெல்லாம் சகஜமப்பா. நான் படாத கஷ்டத்தையா நீ பட்டிருக்கப் போற’ன்னு சந்திரபாபுவே என் மனசுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பினாரு. அதுக்கப்புறம் என் செல்போன் ரிங் டோன்கூட ‘குங்குமப் பூவே’ன்னு கூவ ஆரம்பிச்சிடுச்சு!

2006 ஜனவரியில் வெளியான கண்ணீரும் புன்னகையும் புத்தகத்துக்கு இன்றுவரை வரவேற்பு குறையவில்லை. சந்திரபாபு குறிஞ்சிப்பூ.