ஜெயலலிதாவின் அங்கிள்! எம்.ஜி.ஆரின் கோபம்
‘குலேபகாவலி’யில் நடித்த போது எம்.ஜி.ஆருடன் நண்பரானார் சந்திரபாபு. ஆனால் அது சுலபமாக நடந்துவிடவில்லை. நட்பு எப்படி மலர்ந்து என்பதைச் சந்திரபாபுவே விவரித்திருக்கிறார்.
‘…செட்டில் ரொம்ப வேடிக்கையாகப் பேசிக் கொண்டிருப்போம். எங்கள் குழுவில் இல்லாத ஒரே நபர் மிஸ்டர் எம்.ஜி.ஆர்.தான். தனிமையில் ஒரு நாற்காலியைப் போட்டுக் கொண்டு அமர்ந்திருப்பார். அன்றும் அப்படித்தான் அவர் ஒரு புத்தகத்தை வைத்துப் படித்துக் கொண்டிருந்தார். நான், டைரக்டர் ராமண்ணா, நடிகர் தங்கவேலு, மற்றும் பலர் அமர்ந்து சிரித்து பேசிக் கொண்டிருந்தோம். ராமண்ணா மிஸ்டர் எம்.ஜி.ஆரை அழைத்து அவர் அருகே அமரச் சொன்னார். உடனே நான் ஒரு ஜோக் அடித்தேன். எல்லோரும் சிரித்தார்கள். ஆனால் மிஸ்டர். எம்.ஜி.ஆர். மட்டும் சிரிக்கவில்லை.
‘என்ன மிஸ்டர் எம்.ஜி.ஆர்! சிரிச்சா முத்தா உதிர்ந்து போகும்? இப்படி உம்முன்னு இருக்கீங்களே’ என்றேன்.
‘உங்க ஜோக்குக்கு சிரிப்பா வரும்? கிச்சு கிச்சு மூட்டினாத்தான் சிரிப்பு வரும்’ என்றார் பட்டென்று.
எல்லோரும் என்னேயே பார்த்தார்கள் எனக்கு அவமானமாகப் போய் விட்டது. பிறகுதான் எனக்கு மிஸ்டர் எம்.ஜி.ஆரைப் பற்றிச் சொன்னார்கள். ‘அவர் எப்போதும், எதிலும் தான் மட்டுமே பிரபலமாகத் தெரிய வேண்டும் என்று நினைப்பார். கூட்டத்தோடு சேர மாட்டார். தனிமையில்தான் அமர்ந்திருப்பார். அவருடன் பேச வேண்டுமானால் அவர் இருக்குமிடம் தேடித்தான் போக வேண்டும். உங்க ஜோக்குக்கு அவர் சிரிக்காததற்குக் காரணமே இதுதான். அவர் சிரிச்சுட்டார்னா, அந்தக் கூட்டத்தில நீங்க உயர்ந்திடுவீங்க இல்லையா, அதனாலதான் அப்படிச் சொன்னார் அவர்’ என்றார்கள்.
ஒரு சாதாரண விஷயத்தில்கூட இந்த மனிதர் இப்படி நடந்து கொள்கிறாரே என்று நினைத்தேன். அன்று ஒரு சிறிய குழுவில் கூட தான் மட்டும்தான் பெரியவன் என்று காட்டிக் கொள்ள ஆசைப்பட்டார். அன்றிலிருந்து அவர் வளர்த்துக் கொண்ட அந்த ‘தான்’ என்ற அகந்தை இன்று அவர் வளர்ந்ததைப் போலவே வளர்ந்திருப்பதை நான் கண்கூடாகக் காணுகிறேன். அந்த ஒரு நிகழ்ச்சியில் இருந்து நான் அவரை விட்டு ஒதுங்கியே இருப்பேன். ஒவ்வொரு முறை என்னைப் பார்க்கும்போதும் சிரிப்பார். பதிலுக்கு நானும் ஒரு அசட்டுச் சிரிப்பு சிரிப்பேன்.
டைரக்டர் ராமண்ணா படப்பிடிப்பன்று ‘இன்று நான் புலிச் சண்டையைப் படமாக்கப் போகிறேன். நீங்கள் அதற்குத் தக்கவாறு பழகிக் கொள்ளூங்கள்’ என்றார் மிஸ்டர் எம்.ஜி.ஆரிடம்.
புலிச் சண்டைக்கான கூண்டுகள் போடப்பட்டன. எல்லோரும் மிஸ்டர் எம்.ஜி.ஆரின் வருகைக்காகக் காத்திருந்தோம். அவர் வரவில்லை. ஒரு மணி நேரமாயிற்று. இரண்டு மணி நேரமாயிற்று. பிறகு வந்தார்.
ஸ்டண்ட மாஸ்டரிடம் ‘ஒன்றும் ஆபத்தில்லையே’ என்றார்.
‘இல்லை சார். மயக்க மருந்து கொடுக்கிறோம்’ என்றார் மாஸ்டர்.
மிஸ்டர். எம்.ஜி.ஆர். புலிக் கூண்டிற்குள் நுழைந்தார். இரு பக்கங்களில் இரு காமிராக்கள் சுழலத் தொடங்கின. புலி படுத்து பாய்வதற்குத் தயாரானது.
நாங்கள் பயத்துடன் மிஸ்டர். எம்.ஜி.ஆரைப் பார்த்தோம். புலி மீது வைத்த கண்ணை அவர் எடுக்கவில்லை.
குபீரென அது பாய்ந்தது. எம்.ஜி.ஆர். லாகவமாக கீழே குனிந்து பதுங்கிக் கொண்டார். புலி தொப்பென்று விழுந்தது.
‘கட்’ என்றார் ராமண்ணா.
சமயோசிதமாக எம்.ஜி.ஆர். குனிந்ததை எல்லோரும் பாராட்டினார்கள். அவருக்கும் முகத்தில் ஒரு மகிழ்ச்சி. உடம்பெல்லாம் வேர்க்க விறுவிறுக்க வந்து அமர்ந்தார். அவரை நான் பாராட்டினேன். என் கையைப் பிடித்து அருகில் அமரச் சொன்னார். வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தார். பிறகு ராமண்ணா பல கோணங்களில் புலிச் சண்டையைப்படமாக்கினார். அதை நான் விவரிக்கக்கூடாது. அது தொழில் ரகசியம். என் அருகிலேயே எம்.ஜி.ஆர். இருந்தார். ஆனால் புலிச் சண்டை மட்டும் படமாகிக் கொண்டிருந்தது.
அன்றிலிருந்து நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களானோம். ‘பாபு இன்று முதல் நீங்கள் என் குடும்பத்தில் ஒருவர்” என்றார் எம்.ஜி.ஆர். நானும் ஏற்றுக் கொண்டேன்…’
0
பத்மினி ப்ரொடக்ஷன்ஸ் பி.ஆர். பந்தலு, ப. நீலகண்டன் ஆகியோர் ‘சபாஷ் மீனா’ என்ற முழுநீள நகைச்சுவைப் படத்தை எடுக்க விரும்பினார்கள்.
கதாநாயகனாக நடிக்க சிவாஜியிடம் பேசினார்கள். கதையைக் கேட்டார் சிவாஜி. அதில் நாயகன் பாத்திரத்துக்கு இணையாக படம் முழுவதும் வரும் மற்றொரு நகைச்சுவை கலந்த முக்கிய கதாபாத்திரம் ஒன்று இருந்தது. அதற்கு சிவாஜி, ‘அந்த கேரக்டருக்கு சந்திரபாபுவைப் போட்டா ரொம்ப நல்லா வரும்’ என்றார் அவர்களிடம்.
ப. நீலகண்டன் தமது அலுவலகத்துக்குச் சென்று சந்திரபாபுவைத்தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அவரைச் சந்திக்க வருவதாகக் கூறினார். அதற்குச் சந்திரபாபு, ‘நீங்க அங்கேயே இருங்க. நான் கிளம்பி வர்றேன்’ என சொல்லிவிட்டு தன் காரில் கிளம்பி வந்தார் மயிலாப்பூர் திருவள்ளுவர் சிலை அருகிலிருந்த பத்மினி பிக்சர்ஸ் அலுவலகத்துக்கு.
‘சபாஷ் மீனா’ படத்தின் கதை, சந்திரபாபுவின் கதாபாத்திரம், சிவாஜி சொன்ன கருத்து ஆகியவற்றை சந்திரபாபுவிடம் சொன்னார் நீலகண்டன்.
‘மிஸ்டர் சிவாஜி ஒரு நல்ல, பிரமாதமான ஆக்டர். என் திறமைய புரிஞ்சுக்கிட்டிருக்கார். அதான் என்னை சிபாரிசு பண்ணியிருக்கார்’ என சந்திரபாபு சொல்ல, நீலகண்டனுக்குக் கொஞ்சம் அதிர்ச்சி. சுதாரித்துக்கொண்டு, ‘உங்களுக்கு எவ்வளவு சம்பளம் வேணும்’ என கேட்டார் நீலகண்டன்.
‘சிவாஜி கணேசனுக்குக் கொடுக்கறதை விட கூட ஒரு ரூபாய் கொடுங்க!’ என்றார் சந்திரபாபு.
நீலகண்டனுக்கு என்ன பதில் பேசுவதென்றே புரியவில்லை. சிவாஜியிடம் நடந்ததைச் சொன்னார் நீலகண்டன்.
‘அவன்கிட்ட விஷயம் இருக்கு. இது காமெடிப் படம். சில ஸீன்களில அவன் நடிப்புதான் நிக்கும். நான்தான் பார்த்து நடிக்கணும். சில சமயங்களில் இப்படித்தான் லூசுத்தனமா பேசுவான். விடுங்க.’ – சிவாஜி சொன்னார்.
0
எம்.ஜி.ஆரும் சந்திரபாபுவும் ‘அடிமைப் பெண்’(1969) படத்தில் நடித்தனர். இருவரும் இணைந்து நடித்த இறுதிப் படம் இதுதான்.
சுமார் நாலடி உள்ள ஒரு சுவர் மீது ஏறி, ஓடி சந்திரபாபுவும் ஜெயலலிதாவும் தப்பிப்பது போல் காட்சி. ஷாட்டின் போது, சுவர் மிகவும் சேதப்பட்டிருந்ததால், முன்னால் ஓடிய சந்திரபாபு நிலை தடுமாறி கீழே விழப் போக தாங்கிப் பிடித்தார் ஜெயலலிதா. அதோடு படப்பிடிப்பில் பிரேக் விடப்பட்டது.
உணவு இடைவேளையில் சந்திரபாபு, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மூவரும் ஒன்றாக அமர்ந்திருந்தனர். எம்.ஜி.ஆர். எதுவும் பேசாமல் மௌனமாகவே இருந்தார். அவருக்கு வீட்டிலிருந்து உணவு வந்துவிட்டது. சந்திரபாபுவுக்கு வரவேண்டிய உணவு வரவே இல்லை.
“என்ன சாப்பிடலையா?” என்றார் எம்.ஜி.ஆர் சந்திரபாபுவிடம்.
“சாப்பாடு இன்னும் வரலை!”
“அது வரட்டும். நீங்க என்னோட சாப்பாட்டை சாப்பிடுங்கள்” என தன் சாப்பாட்டை சந்திரபாபுவுக்கு பரிமாறச் சொன்னார் எம்.ஜி.ஆர்.
“எத்தனையோ தடவை உங்க வீட்டுல விருந்து சாப்பிட்டிருக்கேன். ஆனா இன்னிக்கு சாப்பாடு ரொம்ப சுவையா இருந்தது” என்றார் உண்டு முடித்த சந்திரபாபு.
அதன்பிறகு எம்.ஜி.ஆர். சாப்பிடவில்லை. பசியில்லை என்று கூறிவிட்டார். முகத்தை ஒரு மாதிரியே வைத்திருந்தார். படப்பிடிப்பும் துவங்கவில்லை.
சந்திரபாபு ஜெயலலிதாவிடம் என்ன விஷயம் என தனியாக விசாரித்தார். அதற்கு அவர் சொன்ன பதிலைக் கேட்டு அதிர்ச்சியானார் சந்திரபாபு.
படப்பிடிப்பில் தடுமாறி விழப் போன சந்திரபாபுவை ஜெயலலிதா தாங்கிப் பிடித்ததை எம்.ஜி.ஆர். விரும்பவில்லையாம். அதுதான் அவர் மூட்-அவுட் ஆகக் காரணமென தெரிந்து கொண்ட சந்திரபாபுவும் சங்கடத்துக்குள்ளானார். காரணம் ஜெயலலிதாவின் தாயாரின் சகோதரியான வித்யாவதி, சந்திரபாபு எல்லோரும் குடும்ப நண்பர்கள். அவர்களின் வீட்டுக்கு சந்திரபாபு செல்லும் போது, ‘அங்கிள்’ என அழைத்தபடி ஓடி வந்து சந்திரபாபுவுடன் பேசுவார், சிறு குழந்தையாக இருந்த ஜெயலலிதா. இதைப் புரிந்து கொள்ளாமல் எம்.ஜி.ஆர். தவறாக நினைத்துக் கொண்டாரே என வருந்தினார் சந்திரபாபு.
0
சந்திரபாபு பற்றி புத்தகம் எழுதுகிறேன் என்றதும் எல்லோரின் புருவமும் அனிச்சையாக உயர்ந்தது. தகவல் திரட்டச் சென்றபோது ஒரு சிலர் மட்டும் சண்டை போட்டனர். சிலர் ஒதுங்கிப் போயினர். சிலர் அலைய வைத்தனர். ‘என்ன மிஸ்டர் பாபு, இப்படி படுத்துறீங்க’ன்னு நான் கோபமான நேரத்துல ‘அட பொதுவாழ்க்கைன்னு வந்துட்டா இதெல்லாம் சகஜமப்பா. நான் படாத கஷ்டத்தையா நீ பட்டிருக்கப் போற’ன்னு சந்திரபாபுவே என் மனசுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பினாரு. அதுக்கப்புறம் என் செல்போன் ரிங் டோன்கூட ‘குங்குமப் பூவே’ன்னு கூவ ஆரம்பிச்சிடுச்சு!
2006 ஜனவரியில் வெளியான கண்ணீரும் புன்னகையும் புத்தகத்துக்கு இன்றுவரை வரவேற்பு குறையவில்லை. சந்திரபாபு குறிஞ்சிப்பூ.
Posted: January 3rd, 2009 under சினிமா, புத்தகம், மனிதர்கள்.
Tags: எம்.ஜி.ஆர், கண்ணீரும் புன்னகையும், சந்திரபாபு, சிவாஜி கணேசன், ஜெயலலிதா, முகில்
Comments
Comment from சரவணகுமரன்
Time January 3, 2009 at 4:53 pm
நான் உங்களது இந்த புத்தகத்தை படித்திருக்கிறேன். நன்றாக இருந்தது.
Comment from உண்மைத்தமிழன்
Time January 3, 2009 at 9:03 pm
முகில் நான் இன்னும் இந்தப் புத்தகத்தைப் படிக்கவில்லை. விரைவில் படிக்கிறேன்.. நகைச்சுவை நடிகர்களின் வாழ்க்கையில் இன்பம் இருக்காது. சோகம்தான் அப்பியிருக்கும் என்பார்கள். அது நமது பெரும்பாலான நகைச்சுவை நடிகர்களுக்கு பொருத்தமாகவே உள்ளது. அதில் சந்திரபாபு முதல் இடத்தில் உள்ளார்.
புத்தகத்தைப் படித்துவிட்டு வருகிறேன்.. நிறைய பேசுவோம்.
Comment from janaramu
Time January 4, 2009 at 12:21 pm
ந்னறாக இரு்நதது
Comment from Vijay.R
Time January 6, 2009 at 8:22 pm
முகில், நினைவிருக்கிறதா??? கொட்டுகிற மழையில் நாம் இருவரும் மனோரமா ஆச்சி வீட்டிற்கு சென்றது!!! டீ அருந்திக்கொண்டே சந்திரபாபுவைப் பற்றி ஆச்சி சில நினைவுகளை பகிர்ந்தது…கிழக்கில் மறக்க முடியாத நாளில் இதுவும் ஒன்று.!! Thanks for those moments…
Comment from R. Selvakkumar
Time January 8, 2009 at 5:46 pm
நான் (மறைந்தும் மறையாத) நடிகர் ஐ.எஸ்.ஆரின் மகன். எனது தந்தை சந்திரபாபுவின் தீவிர ரசிகர். நாங்கள் தேனாம்பேட்டையிலிருந்த நடிகர் சுருளிராஜன்(மாமா) வீட்டில் தங்கியிருந்தபோது சுருளியும், என்னுடைய அப்பாவும் ‘நான் ஒரு முட்டாளுங்க’ மற்றும் ‘ஒண்ணுமே புரியல உலகத்துல’ பாடலை டேப் ரெக்கார்டரில் பாடி ரெக்கார்டு செய்து இரசிப்பார்கள்.
எனக்கு அப்போதிலிருந்தே சந்திரபாபுவின் மேல் தனி இரசனை உருவாக ஆரம்பித்துவிட்டது. இன்று வரை அவருடைய குரலுக்கும், இசைக்கும், நடனத்துக்கும், நடிப்புக்கும் இணையில்லை.
He is evergreen!
Comment from surya
Time April 30, 2009 at 2:47 pm
படிக்க வேண்டும்.
“Selva Speaking” இந்த விஷயம் உங்கள் வலையில் இல்லையே செல்வா..
வாழ்த்துகள் முகில்
Pingback from சந்திரபாபு II « அவார்டா கொடுக்கறாங்க?
Time May 1, 2009 at 2:54 am
[...] சந்திரபாபுவின் பயாக்ரஃபியை எழுதிய முகில் அவர்களுடையது. படித்து [...]
Comment from ஆர்.செல்வக்குமார்
Time May 1, 2009 at 3:12 pm
திறமையிருந்தும், உரிய இடம் கிடைக்காமல் போன எத்தனையோ திரைக்கலைஞர்களில் எனது தந்தை ஐ.எஸ்.ஆரும் ஒருவர். நல்ல வேளையாக தொலைக்காட்சி இருக்கிறது. அவரை ஞாபகம் வைத்துக் கொள்ளவும், அவரைப் பற்றித் தெரியாத (என் மகள் போன்ற) இன்றைய தலைமுறையினருக்கு அவரை அடையாளம் காட்டவும் தொலைக்காட்சிகளில் வந்து போகும் திரைப்படங்கள் ஒரு வரப்பிரசாதம்.
இணையத்தில் என் தந்தையைப் பற்றிய செய்திகள் ஏறக்குறைய இல்லவே இல்லை. அந்தக் குறையைப் போக்க அவர் நடித்த படங்களின் குறுந்தகடுகளையும், பழைய செய்திகளையும் சேகரித்துக் கொண்டிருக்கிறேன். விரைவில் அவரைப் பற்றிய செய்தி இனி இணையத்தில் கிடைக்கும்.
என்னை என் தந்தையின் நினைவுகளில் கரைத்ததற்கு நன்றி முகில்!
Comment from karuna
Time January 11, 2010 at 10:28 am
nice
Comment from karuna vice president marakottai
Time January 11, 2010 at 10:30 am
super MGR
Comment from S.SANKARANARAYANAN
Time January 12, 2010 at 2:47 pm
ISR FANTASTUIC COMEDIAN OF SIXTEES. I WAS SHOCKED WHEN I FOUND HIS DEMISE NOTE AT RAILWAY OFFICE WHEN I VISITED IN YEAR 1991
Pingback from சந்திரபாபுவும் புதுமைப்பித்தனும் « அவார்டா கொடுக்கறாங்க?
Time May 4, 2010 at 8:50 am
[...] பற்றி எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் சந்திரபாபு பற்றி எழுத்தாளர் முகில் சந்திரபாபு சபாஷ் மீனா படத்துக்கு [...]






Comment from goinchami
Time January 3, 2009 at 2:40 pm
மக்கா, பின்னுதுடே. அந்தப் பயபுள்ளக்கி அடியுறச்ச தண்டேடமல்லே? பெரிய கலைஞண்டே.