நாகேஷ்!

தீனதயாளு தெருவில் நான் தங்கியிருந்த அறையில், என்னுடைய உடைமைகள் என்று சொல்லிக் கொள்ளும்படியாக பெரிசாக ஏதும் கிடையாது. வயிற்று வலி நோயாளியாக நடித்து, எம்.ஜி.ஆர். கையால் வாங்கிய கோப்பையை மட்டும், அறையின் அலமாரியில் பெருமையோடு வைத்திருந்தேன்.

அந்தக் கோப்பையின் முகத்தில்தான் நான் தினமும் கண் விழிப்பேன் என்றாலும்கூட அது மிகையில்லை. அவ்வப்போது, அந்தக் கோப்பை என்னுடைய கற்பனைக் குதிரையைத் தட்டி விடத் தவறவில்லை.

எனக்குக் கோப்பையைக் கொடுத்தபின், என் நடிப்புத் திறமையால் பெரிதும் கவரப்பட்ட எம்.ஜி.ஆர். எங்கே போனாலும், தன்னுடன் என்னையும் அழைத்துக்கொண்டு போவது போலவும் பார்க்கிற ரசிகர்கள் எல்லாம், என்னைப் பார்த்து கையசைத்து ஆரவாரம் செய்வது போலவும், கும்பிடு போடுவது போலவும், அதைப் பார்த்து நான் முதலில் சந்தோஷப்பட்டாலும் உடனே, ‘அடேய்! இந்த வரவேற்பெல்லாம் எம்.ஜி.ஆருக்குத்தான்; உனக்கில்லை. புரிந்து கொள்!’ என்று என் மனச்சாட்சி என்னை இடிப்பது போலவும்கூட நான் கற்பனை செய்து கொள்ளுவேன்.

இதைப் படிக்கிறபோது, நான் ஒரு கோயில் முன் உட்கார்ந்து பிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறபோது, கோயில் முன் நின்று கையெடுத்துக் கும்பிட்டு விட்டுப் போகிற பக்தர்கள் எனக்குக் கும்பிடு போடுவதாக நான் நினைத்துக்கொண்டு சந்தோஷப்பட, ஒரு பக்தர், என்னைப் பார்த்து, ‘யோவ்! பிச்சைக்காரா! சாமி பார்க்க விடாமல் குறுக்கே உட்கார்ந்து மறைக்கிறியே!’ என்று திட்டும்போது உண்மையை உணர்வது போலவும் நான் நடித்த சினிமாக் காட்சி உங்கள் நினைவுக்கு வருகிறதா?

எனக்கு ஒரு ராசி உண்டு. எனக்கு ஓர் அங்கீகாரம் கிடைக்கிறபோது அதைப் பற்றி மற்றவர்கள் விசாரிக்க வேண்டும் என்று என் மனசு நினைக்கும். ஆனால், ஒருவரும் அதைக் கண்டு கொள்ளவே மாட்டார்கள்.

உதாரணத்துக்கு, எம்.ஜி.ஆர். கொடுத்த கோப்பையையே சொல்லலாம். நாடகத்தில் வயிற்று வலிக்காரராக நடித்து, எம்.ஜி.ஆரே பாராட்டி கோப்பையைக் கொடுத்து விட்டார். அதை எடுத்துக்கொண்டு, நாடகம் நடந்த டவுன் கோகலே ஹாலிலிருந்து நடந்தே புறப்பட்டேன். கோப்பையை ரோட்டில் போகிறவர்கள் கண்ணில் படும்படி பிடித்துக்கொண்டு மவுண்ட் ரோடு முழுக்க நடந்தே வந்தேன்.

‘அட! என்ன கோப்பை இது? யார் கொடுத்தாங்க? எதற்காகக் கொடுத்தாங்க’ என்ற யாராவது கேட்க வேண்டும் என்று எதிர்பார்த்தேன். அப்படி யாராவது கேட்கும் பட்சத்தில், நாடகத்தில் ஒரே காட்சியில் நடித்து, எம்.ஜி.ஆர். கையால் கோப்பை வாங்கின விஷயத்தைச் சொல்லத் துடித்தேன். கேட்பவர் பொறுமையோடும், ஆர்வத்தோடும் இருந்தால் நடு ரோட்டிலேயே வயிற்று வலிக்காரராக நடித்துக் காட்டவும் தயாராக இருந்தேன். ஆனால், என் துரதிருஷ்டம்! ஒரு பயல் கோப்பையைப் பற்றி விசாரிக்கவில்லை.

வழியில் ஒரு போலீஸ்காரர் தலையைக் கண்டதும் பயம். இவர், ‘ஏது கோப்பை?’ என்று கேட்டு நான் ‘நடிப்புக்காக எம்.ஜி.ஆர். கையால் வாங்கிய பரிசு’ என்று சொன்னால், அவர் நம்பாமல் ‘டேய்! நல்லா நடிக்கிறியே! எங்கே திருடினே? சொல்லு!’ என்று இரண்டு தட்டுத் தட்டி விடுவாரோ என்று பயம் பிடித்துக்கொண்டது. கோப்பையைச் சட்டைக்குள் மறைத்துக்கொண்டேன்.

யாருமே கோப்பையைப் பற்றிக் கேட்கவில்லையே என்ற வருத்தத்துடன் அறைக்கு எடுத்துக்கொண்டு வந்து பரிசுக் கோப்பையை அலமாரியில் கம்பீரமாக நிறுத்தி வைத்தேன். தினமும் ரசித்தேன். கற்பனையில் மிதந்தேன்.

***

ஒருநாள் வாகினி ஸ்டூடியோவுக்குள் நடந்து போய்க்கொண்டு இருந்தேன். ஜகன்னாதன் என்கிற புரொடக்ஷன் மேனேஜர் என்னைப் பார்த்துவிட்டு ‘நாகேஷ்! வாகினியிலே தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழிகளில் ஒரு படம் எடுக்கிறோம். ஜெமினி கணேசன் ஹீரோ. இன்னிக்கு எடுக்கப் போகிற காட்சியின் துவக்கத்தில், டேபிள்களை ஒரு சர்வர் துடைப்பது போல ஒரு ஷாட் இருக்கிறது. அந்த ஒரு சீனில் நீ நடிக்கணும். எவ்வளவு பணம் வேணும்? ஐந்நூறு ரூபாய் போதுமில்லையா?’ என்றார்.

நான் ‘சரி’ என்றேன். காத்திருக்கச் சொன்னார். அப்போது, நடந்து போய்க்கொண்டிருந்த ஒருவர் என் கவனத்தை ஈர்த்தார். வயதான மனிதர். அவர் வில் போல உடலை பின்னுக்கு வளைத்து, நடந்து போய்க்கொண்டு இருந்தார். அவரது கையில் ஒரு சிகரெட் பெட்டியும், ஒரு தீப்பெட்டியும்தான் இருந்தது.

என் குசும்பு புத்தி சும்மா இருக்குமா? கிடுகிடுவென்று அவரிடம் போனேன். அவரது தோள் பட்டையைத் தொட்டு, ‘ரொம்பக் கஷ்டப்பட்டு சிகரெட் பெட்டியைத் தூக்கிட்டுப் போறாப்போல இருக்கு. என்கிட்ட வேணும்னா கொடுங்க. நான் எடுத்துக்கிட்டு வரேன்!’ என்றேன்.

அவர், ‘ஹ… ஹ…’ என்று சுருக்கமாகச் சிரித்து விட்டு, தன் பின்னோக்கிய வில் நடையைத் தொடர்ந்தார்.

சிறிது நேரத்தில் எனக்கு அழைப்பு வந்தது. செட்டுக்குள் போனேன். ஜகன்னாதன் ‘ஒரு முறை ஒத்திகை பார்த்துக் கொள்ளலாம்’ என்றார்.

நான் ஒரு சிறு டவலை வாங்கி, தோளில் போட்டுக் கொண்டேன். தட்டு, டம்ளர்கள் போடுகிற பக்கெட்டை எடுத்துக்கொண்டேன். டேபிளில் இருந்த ஒரு தம்ளரை மேலே தூக்கிப் போட்டுவிட்டு, அந்த டேபிளைச் சுத்தம் செய்துவிட்டு, மறுபக்கம் வந்ததும் கீழே வந்த டம்ளரை லாகவமாகப் பக்கெட்டில் பிடித்துக்கொண்டேன்.
‘சபாஷ்! ரொம்ப நல்லா பண்ணறியேப்பா!’ என்று ஒரு குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தால் பேரதிர்ச்சி! நான் சற்று முன், செட்டுக்கு வெளியே நடையைக் கேலி பண்ணினேனே அதே மனிதர்! வாகினி ஸ்டூடியோவின் அதிபரான சக்ரபாணி!

‘சார்! கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி, நீங்க நடந்து வந்துக்கிட்டிருந்தபோது யாருன்னு தெரியாம உங்களைக் கிண்டல் பண்ணிட்டேன். தயவு செஞ்சு என்னை மன்னிச்சிடுங்க’ என்று காலில் விழாத குறையாக அவரைக் கெஞ்சினேன்.

‘அதை நான் எப்பவோ மறந்தாச்சு! நீ ரொம்ப நல்லா நடிக்கிறியே!’ என்றவர், அடுத்தபடியாக, ‘உனக்கு எவ்வளவு பணம் பேசியிருக்கு?’ என்று கேட்டார்.

‘ஐந்நூறு ரூபாய்!’

‘தமிழ்ல நடிக்கத்தானே ஐந்நூறு பேசியிருக்கு? நீயே தெலுங்குலயும், இந்த சீனைப் பண்ணிடு. இரண்டுத்துக்குமா சேர்த்து ஆயிரம் ரூபாய் வாங்கிக்கோ’ என்றார்.

எனக்கு நடப்பது எல்லாம் கனவா? நிஜமா என்ற சந்தேகமே வந்து விட்டது.

தமிழ், தெலுங்கு இரண்டு படங்களின் காட்சிகளும் எடுக்கப்பட்டன.
புரொடக்ஷன் மேனேஜர் ஜகன்னாதனைக் கூப்பிட்டு, ஆயிரம் ரூபாய்க்குச் செக் எழுதிக்கொண்டு வரச் சொன்னார்.

நான், ‘சார்! சார்! செக்கெல்லாம் வேணாம்’ என்றேன்.

என்னைப் பார்த்துச் சிரித்தபடி, ‘வாகினி பெரிய கம்பெனி. செக்கெல்லாம் திரும்பி வராது. பயப்படாதே!’ என்றார்.

‘அதுக்கு இல்லை சார்! எனக்கு அவசரமா பணம் தேவைப்படுது. அதனால, கேஷா கொடுத்தீங்கன்னா ரொம்ப சௌகரியமா இருக்கும்’ என்றேன்.

‘அப்படியா! சரி!’ என்று சொல்லி விட்டு, ஜகன்னாதனிடம், ‘காரில் இவரை அழைச்சுக்கிட்டு நேரே பாங்குக்குப் போய், செக்கைப் பணமா மாத்தி இவரிடம் கொடுத்து விட்டு, இவரையும் அவரது இடத்தில் கொண்டுபோய் விட்டுவிட்டு வந்து விடு!’ என்றார்.

அந்த ஆயிரம் ரூபாயை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது. அந்தப் பணத்தில்தான் ஒரு பட்டுப் புடவை, ஒரு தாலி, பிரவுன் கலரில் ஒரு பாண்ட் மூன்றும் வாங்கிக்கொண்டு நான் காதலித்த ரெஜினாவைப் பதிவுத் திருமணம் செய்துகொண்டேன்.

***

நடிகர் நாகேஷின் வாழ்க்கை அனுபவங்கள், கல்கியில் சிரித்து வாழ வேண்டும் என்ற பெயரில் தொடராக வெளிவந்தது. எழுதியவர் எஸ். சந்திரமௌலி. தற்போது ‘நான் நாகேஷ்’ என்ற பெயரில் கிழக்கு வெளியீடாக வந்துள்ளது. எம்.ஜி.ஆர்., வாசன், சிவாஜி, திருவிளையாடல், கமல்ஹாசன் (கமா, கமா போட்டு இன்னும் சேர்க்கலாம்) என்று தன் வாழ்வின் மறக்கமுடியாத மனிதர்களையும் சம்பவங்களையும் நாகேஷ் இதில் பிரத்யேகமாக நினைவுகூர்கிறார். இதுவரை நாம் சந்தித்திராத ஒரு புதிய நாகேஷ் இந்த அனுபவங்களின் வாயிலாக உருப்பெற்று நிற்கிறார். சென்னை புத்தகக் கண்காட்சியில் வரவேற்பைப் பெற்றுள்ள இந்தப் புத்தகம், தமிழ் சினிமா ரசிகர்கள் தவற விடக்கூடாத பொக்கிஷம்.

அங்காடித் தெரு

அங்காடித் தெரு – விமரிசனங்களால் முன் நிறுத்தப்பட வேண்டிய படம் அல்ல; தியேட்டருக்குச் சென்று உணர்ந்து நெகிழ வேண்டிய படம். இதுவரை வெளிவந்த சிறந்த தமிழ்ப் படங்களில் இது மிக முக்கியமானது. எதனோடும் ஒப்பிட முடியாத தனித்துவமான படம். வசந்தபாலன், இனி தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத முக்கியமான (தைரியமான) இயக்குநர். அங்காடித் தெரு, உலக அளவில் தமிழ் சினிமாவுக்கு மாறுபட்ட அடையாளம் பெற்றுத்தரப் போகிறது. ரங்கநாதன் தெருவில் கூடும் கூட்டத்தில் ஒரு பங்கு அங்காடித் தெரு ஓடும் தியேட்டர்களில் நிறைந்தால், தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனை மேம்பட்டுவிட்டது என்று மகிழலாம்.

படத்தின் உருவாக்கத்தில் பங்குபெற்ற ஒவ்வொருவருக்கும் வாழ்த்துகள் அல்ல, நன்றி.

வேட்டைக்காரன்!

‘வேட்டைக்காரனில்’ எம்.ஜி.ஆரை ‘கௌபாய்’ டிரஸ்ஸிலும் நாலு வயது பையனுக்கு அப்பா வேஷத்திலும் நடிக்க வைக்க முடிவு செய்தார் தேவர். அத்தனை வருடங்கள் எம்.ஜி.ஆரின் தாயாக, பாசம் பொழிந்த கண்ணாம்பா காலமாகியிருந்தார். புதிய அன்னை எம்.வி. ராஜம்மா.

விஸ்வநாதன் – ராமமூர்த்தி இருவரும் பாவமன்னிப்பு, பாசமலர், பாலும் பழமும் பாடல்களால் உச்சாணிக் கொம்பில் இருந்தனர். தேவர் பிலிம்ஸிலும் அவர்கள் இசை அமைக்கட்டும் என்றார் எம்.ஜி.ஆர். கே.வி.மகாதேவன் இசையில் ட்யூன்கள் ஏறக்குறைய ஒரே மாதிரி கேட்பதாக ரசிகர்கள் அபிப்ராயம் சொன்னார்கள். எந்தப் பாட்டு எந்தப் படத்திலிருந்து ஒலிக்கிறது என்று சட்டென்று உணரமுடியாதபடி தேவரின் ‘தா’ வரிசைப் பாடல்கள் இருந்தன.

எதிலும் ஒரு மாற்றத்தை விரும்பியவர் எம்.ஜி.ஆர். அவர் கருத்தை மறுக்கும் சூழலில் தேவர் அன்று இல்லை. எம்.எஸ்.விஸ்வநாதனைப் பார்க்கச் சென்றார். விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசைக்கு விநியோகஸ்தர்களும் அதிக விலை கொடுத்தார்கள். அதை ஏன் இழக்க வேண்டும். தேவர் தன் மடியிலிருந்த பணம் முழுவதையும் விஸ்வநாதன் முன்பு வாரி இறைத்தார். ‘ஆண்டவனே என் முதல் படத்துலருந்து உங்களுக்காகக் காத்துக்கிட்டு இருக்கேன். இப்ப வேட்டடைக்காரனுக்கும் வந்துருக்கேன். நீங்கதான் இசையமைச்சித் தரணும்.’

ஏற்கெனவே விஸ்வநாதனுக்கு அகன்ற கண்கள். அவை இன்னும் பெரிதாகி விரிந்தன. எவ்வளவு பணம்! அதற்கு முன்பு யாரும் அப்படிக் கொண்டு வந்து கொட்டியது கிடையாது. தேவரின் மடி என்ன குபேர விலாஸா? ஒப்புக் கொள்ளலாம் என்று அவர் நினைத்த தருணத்தில் ‘அடேய் விசு’ என்று உள்ளிருந்து தாயார் அழைக்கும் குரல். விஸ்வநாதன் உள்ளே சென்றார். அவர் திரும்பி வந்தபோது தேவர் காணாமல் போய் விட்டார்.

‘நம்ம மாமாதான் (கே.வி. மகாதேவன்) உனக்கு குரு. அவர் செய்த உதவிகளை மறந்துட்டு அவர் பொழப்பை நீ கெடுக்கலாமான்னு விசுவநாதன் கன்னத்துல அவங்க அம்மா ஓங்கி அறைஞ்சுட்டாங்கண்ணே!’
தேவர் சொல்லச் சொல்ல எம்.ஜி.ஆர். அதிர்ந்தார். தன் கன்னங்களைப் பதறியபடி தடவிக் கொண்டார். ‘சரிங்கண்ணே, இது நமக்குள்ளயே இருக்கட்டும்’ எம்.ஜி.ஆர். தேவருக்கு உத்தரவிட்டார்.

மகாதேவன், வேட்டைக்காரன் படத்தில் மெட்டுப் போட்ட பாடல்கள் எம்.ஜி.ஆருக்கு நிரந்தரப் புகழையும் பெருமையையும் தேடித் தந்தன. எம்.ஜி.ஆர். அவரே முயன்றும் வற்புறுத்தியும்கூட விஸ்வநாதன் கடைசி வரையில் தேவர் பிலிம்சில் இசை அமைக்கவில்லை. ஆனால் எம்.ஜி.ஆரே எதிர்பாராமல் அவரது சிறந்த ஜோடியாக ரசிகர்கள் கொண்டாடிய சரோஜா தேவி வேட்டைக்காரன் படத்தில் நடிக்க முடியாமல் போனது.
தமிழ் சினிமாவில் பத்மினி, பானுமதி, அஞ்சலிதேவி, சாவித்ரி போன்ற சிறந்த கதாநாயகிகளுக்குப் பாமர மக்களின் மனத்தில் நிரந்தர இடம் கிடைக்காமல் போய்விட்டது. ஒட்டுமொத்த பாட்டாளித் தமிழர்களும் தங்களின் கனவுக் கன்னியாகக் கருதியது சரோஜா தேவியை மட்டுமே. அதனால் எம்.ஜி.ஆரும், சரோஜா தேவி தாமதமாக வந்தால் கோபிக்க மாட்டார்.

நிலைமை அப்படியிருக்க சரோஜா தேவியின் தாயாரிடம் வேட்டைக்காரன் படத்துக்காக கால்ஷீட் கேட்டார் தேவர். எப்போதும்போல் மொத்தமாகத் தேதிகளைத் தனக்கு ஒதுக்கி வைத்திருப்பார்கள் என்று எண்ணினார். நம்பிக்கையோடு அடையாறு காந்தி நகருக்குப் புறப்பட்டார். சரோஜா தேவி தேவர் மீது அளவில்லாத மதிப்பு உடையவர். தேவருக்கு ஜனவரி 7 முக்கியம். அன்று அவரது ஆஸ்தான கதாநாயகி சரோவின் பிறந்த நாள்! தேவர் ஒவ்வொரு ஆண்டும் அத்தினத்தில் சரோஜா தேவிக்குப் பொற்காசுகளால் அபிஷேகம் செய்வார். அத்தனைச் சிறந்த நட்பும் பரஸ்பர மரியாதையும் அவர்களுக்குள் நிலவியது.
வேட்டைக்காரன், அந்த சிநேகத்தில் விரிசல் விழ வைத்து விட்டது. சரோஜா தேவியின் தாயார் ருத்ரம்மா. கண்டிப்புக்கும், கறாருக்கும் புகழ் பெற்றவர். அவர் சரோஜா தேவியின் வாழ்க்கையை கால்ஷீட்டுகளாகவே கணக்கெடுத்தார். தேவருக்கும் ருத்ராம்மாவுக்கும் நடைபெற்ற காரசாரமான மோதலை சரோஜா தேவி பயந்தபடியே நோக்கினார்.

‘வேட்டைக்காரன் கதை வசனமெல்லாம் ரெடியாயிடுச்சு. ஆரூர்தாசு எழுதிக்கிட்டு வராரு. உங்க தேதி தெரிஞ்சா பூஜையை நடத்திடுவேன்.’

‘முன்ன மாதிரி ஒரேயடியா கொடுக்க முடியாதுங்க. பாப்பாவுக்கு நிறைய படம் புக் ஆகுது. டே அன்ட் நைட் வேல செஞ்சாலும் போதல. நாகி ரெட்டியார் கூடக் கேட்டிருந்தார். எம்.ஜி.ஆர். மேனேஜர் வீரப்பன் படம் ஆரம்பிச்சிருக்காரு.’

‘எம்.ஜி.ஆர். கால்ஷீட்டை மொத்தமாக் கொடுத்திட்டாரு. வர்ற பொங்கலுக்குப் படம் ரிலீஸ். அவர் தேதியை நான் வேஸ்ட்டு செய்ய முடியாதே.’

‘சரவணா பிலிம்ஸ் படம் வேறே கலர்ல முதன்முதலா எடுக்கறாங்க. யார் கலர்ல தயாரிக்கணும்னாலும் எடுத்தவுடன் பாப்பாகிட்ட வந்து கால்ஷீட் கேக்குறாங்க’ – ருத்ரம்மாவின் குரலில் அலட்சியம். தேவர் அதை எதிர்பார்க்கவில்லை.

தேவருக்குப் புரிந்தது. சினிமா உலகில் கண்ணதாசனிடம் சென்று பலர் புகார் செய்திருந்தார்கள். அவர் மாடர்ன் தியேட்டர்ஸ் காட்டு ரோஜா படத்துக்காக எழுதிய பல்லவியை மாற்றி எழுதும் படி. ‘ஏனடி ரோஜா என்னடி சிரிப்பு – எவரைக் கண்டாயோ’ என்கிற பல்லவியைத் தங்கள் எரிச்சலைத் தணித்துக் கொள்ளும் விதமாக, ‘ஏனடி சரோஜா என்னடி கொழுப்பு – எவரைக் கண்டாயோ’ என்று. அந்த அளவு சரோஜா தேவியின் மார்க்கெட் ஓஹோ. சரோவின் மார்க்கெட்டில் தனக்கு இல்லாத உரிமையா என்று எண்ணினார் தேவர். அதில் சிறுத்தை விழுந்தது.

‘எம்.ஜி.ஆர். கொடுத்த கால்ஷீட்டுல சரோஜா வந்து நடிக்குமா, இல்லையா?’ – தேவர் வழவழா ஆசாமி கிடையாது.

‘இப்படிப் பேசினா எம் பொண்ணு உங்க படத்துல நடிக்காது.’

தேவருக்குக் கொதிப்பு. ‘உங்க மக என் படத்துல நடிக்கறதா வேணாமான்னு நீங்க முடிவு செய்யக்கூடாது. அதைத் தீர்மானிக்க வேண்டியவன் நான்.’ எரிமலையாக வெடித்தபடியே தன் அங்க வஸ்திரத்தை இழுத்துப் போர்த்திக் கொண்டு வெளியேறினார். சினிமா காட்சிபோல் சரோஜா தேவி ஓடிவந்து தடுத்தார். அதைச் சட்டை செய்யாமல் கார் கிளம்பியது.

எம்.ஜி.ஆரே வந்து வற்புறுத்தினாலும் இனி சரோ நடிக்க மாட்டார் என்று திட்டவட்டமாக அறிவித்தார் தேவர். 1963 தீபாவளி அன்று வெளியானது ‘பரிசு’. எம்.ஜி.ஆரும், சாவித்ரியும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணைந்து நடித்து படம் வெற்றிகரமாக ஓடியது. டி. யோகானந்தின் படம் அது. தேவரும் வேட்டைக்காரனில் அதே ஜோடியைப் பயன்படுத்த முடிவு செய்தார். சரோவுக்குப் பதில் சாவித்ரி வந்தார்.

வேட்டைக்காரன் படத்தில் சாவித்ரி நடிப்பதற்காகக் காட்சிகள் வலுவூட்டப்பட்டன. அதை எம்.ஜி.ஆர். வரவேற்றார். சரோஜா தேவிக்கும் கூடுதலாகவே கவர்ச்சியாக எம்.ஜி.ஆருடன் சாவித்ரி ஆடிப்பாடினார். ‘மெதுவா மெதுவா தொடலாமா – உன் மேனியிலே என் கை படலாமா…’

தேவருக்கு அதிலும் திருப்தி இல்லை. அப்போதுதான் திரையுலகில் தடம் பதிக்க ஆரம்பித்திருந்த  நாகேஷுக்கு முக்கியத்துவம் கொடுத்து மனோரமாவுடன் ஒரு காமெடி பாடல் வைத்தார். ஒரே நாளில் ஊட்டியில் முழுப் பாடலையும் எடுத்து முடித்தார். மனோரமாவுக்கு முதன் முதலில் பத்தாயிரம் ரூபாய் சம்பளம் தந்து அதிரச் செய்தார். சீட்டுக்கட்டு ராஜா என்ற பாடல் பட்டி தொட்டி முதற்கொண்டு எங்கும் பிரபலம்.

எம்.ஜி.ஆரின் புதிய கெட்-அப் அவரது ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருந்தது. சென்னை சித்ரா தியேட்டர் அல்லோலகல்லோலப்பட்டது. திரையிலும் தியேட்டருக்குள்ளேயும் எல்லாம் தொப்பிகளாகவே தெரிந்தன.

தேவர் எம்.ஜி.ஆருக்காகவும் தன் எண்ணங்களை மாற்றிக் கொள்ளாதவர். பிரமாண்டமான செட்களில் அவரது படங்களில் ‘கனவு’ பாடல் காட்சிகள் வரவே வராது. ‘செட்டை எவன்டா பாக்குறான், அண்ணனத்தான்டா ரசிக்க வரான்’ என்பார்.

வேட்டைக்காரனுக்காக சித்ரா தியேட்டர் வாசலில் ரசிகர்களே காடும் மலையும் சூழ்ந்த அரங்கம் அமைத்தார்கள். அதில் வேட்டைக்காரன் தோற்றத்தில் எம்.ஜி.ஆருக்குச் சிலை. ஏறக்குறைய ஒன்றே கால் லட்சம் ரூபாய் செலவானது. தீ அணைப்பு எஞ்சின்களுக்கு மட்டும் ஏழாயிரம் கொடுத்தார்கள்.
வாள் வீச மட்டுமே எம்.ஜி.ஆருக்குத் தெரியும். அவர் பேன்ட் ஷர்ட் அணிந்து நடித்தால் படம் ஓடாது என்கிறக் கருத்து கோடம்பாக்கத்தில் நிலைபெற்றிருந்தது. தேவர் அதை மாற்றிக் காட்டினார். சமூகப் படங்களிலும் எம்.ஜி.ஆர். சாதிக்க முடியும் என்று நிரூபித்தார்.

(பா. தீனதயாளன் எழுதிய சாண்டோ சின்னப்பா தேவர் புத்தகத்திலிருந்து)

ஜெமினி vs சிவாஜி : கணேசன்கள் சண்டைக்கோழிகளா?

சிவாஜி கணேசன் வெற்றியும் புகழும் அடைந்த காலத்தில் நடிப்பில் அவருக்கு இணையாகவும் அவரைக் காட்டிலும் மகத்தான புகழும் வெற்றியும் பெற்று பிரபலமாக திகழ்ந்தவர் ஜெமினி கணேசன் மட்டுமே.

சிவாஜி கணேசன் மட்டுமே தனிக்காட்டு ராஜாவாக நடிப்புக்காக புகழ் பெற்ற காலத்தில் நடிக மன்னன் என்று ஜெமினியும் கீர்த்தி பெற்றது அபாரமானது. கணவனே கண் கண்ட தெய்வம், மிஸ்ஸியம்மா போன்ற படங்களின் இந்தி ரீமேக்கிலும் ஜெமினியைப் போல் நடிக்க மும்பையில் ஆள் இல்லாததால்தான் ஜெமினியே நடித்து அகில இந்தியப் புகழ் பெற்றார்.

நிஜத்தில் கால்ஷீட் இல்லாத காரணங்களினாலோ தயாரிப்பாளரின் பணத்தட்டுப்பாடு காரணமாகவோ சிவாஜி கணேசன் நடிக்க இயலாத வேடங்களில் ஜெமினி கணேசனைத் தான் நடிக்க வைத்தார்கள். அப்படி ஜெமினி நடித்தப் படங்கள் அத்தனையும் மிகச் சிறந்த ‘க’ வரிசை வெற்றிப் படங்களாக அமைந்தன. கணவனே கண் கண்ட தெய்வம், கற்பகம், காவியத் தலைவி என்று வெவ்வேறு ஆண்டுகளில் ஒரு வெள்ளிவிழா கால கட்டம் முழுவதும் ஜெமினி கணேசன் சிவாஜி கணேசனின் நடிப்புப் போட்டியாளராக இருந்தார்.

நடிப்பில் சிவாஜிக்கு நேர் எதிர் ஜெமினி. எப்போதும் ஷாட்டுக்கு ஷாட் அரட்டை, லூட்டி செட்டை விட்டு வெளியேறுதல் எல்லாம் உண்டு.

‘சந்தர்ப்ப வசத்தாலே நான் நடிகன் ஆனேன். நீங்க எதிர்பார்க்கிற மாதிரி நடிகன் நான் இல்லை’ என்று சிவாஜியை மனத்தில் வைத்து ஸ்கூல் மாஸ்டர் ஷுட்டிங்கில் பந்துலுவிடம் கூறினார் ஜெமினி.

மிக மென்மையான நடிப்புக்கு ஜெமினியை விட்டால் ஆளில்லை. ஆனால் ஜெமினி கணேசனுக்கு நடிப்பு ஹாபியாகவே இருந்தது. அதனால் அவர் தன் படங்களில் ஏ.வி.எம். ராஜன் போன்ற அடுத்த வரிசை கதாநாயகர்களுக்குத் தன்னை விடவும் வலுவுள்ள, நடிக்க வாய்ப்புள்ள கதாபாத்திரங்களில் வாய்ப்பு கிடைத்தபோதுகூட அதை வரவேற்றார்.

அவ்வளவு ஏன், பட டைட்டில், போஸ்டர், சம்பளம், அதிக காட்சிகள், டூயட் பாடல்கள் என்று எல்லாவற்றிலும் விட்டுக் கொடுத்து நடித்தவர் ஜெமினி கணேசன் மட்டுமே! இது தமிழ் சினிமாவில் இன்றுவரை எந்த நடிகரிடமும் காணப்படாத அரிய குணம்.

சிவாஜி கணேசனும் ஜெமினி கணேசனும் சேர்ந்து பதிமூன்று படங்களில் ஒன்றாக நடித்துள்ளார்கள். அவை பெண்ணின் பெருமை, பதிபக்தி, வீரபாண்டிய கட்டபொம்மன், பாவமன்னிப்பு, பாசமலர், கப்பலோட்டிய தமிழன், பார்த்தால் பசி தீரும், பந்தபாசம், சரஸ்வதி சபதம், கந்தன் கருணை, திருவருட்செல்வர், உனக்காக நான், நாம் பிறந்த மண்.

இவற்றில் பெரும்பாலானவை தமிழ் சினிமா சரித்திரத்தில் தலையாய இடம் பிடித்தவை. சமூகம், சரித்திரம், புராணம் என்று ஒன்றுக்கொன்று மாறுபட்டவை. அந்தப் படங்களில் சிவாஜியை விட முக்கியத்துவம் குறைந்த கதாபாத்திரமாக இருந்தால்கூட அவருக்குக் கொஞ்சம் கூட சளைக்காமல் நடித்திருந்தார் ஜெமினி கணேசன். ஆனால் அதை சிவாஜி ரசிகர்கள் ஏற்கவில்லை.

ஆதலால் ஜெமினியின் ரசிகர்கள் அவர், சிவாஜி உடன் படங்களில் சேர்ந்து நடிப்பதையே விரும்பவில்லை. அதனால் 1962-க்குப் பிறகு நீண்ட இடைவெளி ஏற்பட்டது.

உனக்காக நான் படத்தில் சிவாஜி ஓவர் ஆக்டிங் செய்து படத்தை கெடுத்து விட்டதாக ஜெமினி ரசிகர்கள் கருதினார்கள். மேலும் ஆரம்பத்திலிருந்தே வெற்றிகரமான ஹீரோவாக வலம் வந்த ஜெமினி, சிவாஜியுடன் இணைந்து நடித்ததை ஜெமினி ரசிகர்கள் அறவே வெறுத்து வந்தார்கள்.

ஆனால் ஜெமினி கணேசன், சிவாஜி கணேசனோடு நெருஙகிய நட்பு கொண்டு இருந்தார். சிவாஜி, ஜெமினி கணேசன் – சாவித்ரி ஒன்றாக குடும்பம் நடத்தியபோது அவர்கள் வீட்டுக்குச் சாப்பிட செல்வார். சாவித்ரியிடம் தனக்கு வேண்டியதை செய்து தரச் சொல்லி சாப்பிடுவார். சாவித்ரியும் சிவாஜி கணேசன் கேட்டவற்றை செய்து கொடுப்பார். அவர் சாப்பிடும் போது அருகில் இருந்து பரிமாறுவார். அந்த அளவு ‘பாசமலர்’களாக நிஜத்திலும் விளங்கினார்கள்.

பெண்ணின் பெருமை படம்தான் இரண்டு கணேசன்களும் முதன் முதலாக இணைந்து நடித்த படம். அந்தப் படத்தில்தான் சிவாஜியைவிட நல்ல கதாபாத்திரம் ஜெமினி கணேசனுக்குக் கிடைத்தது.

புத்திசுவாதீனமில்லாத மூத்த சகோதரன் வேடமும், அவனைத் துன்புறுத்தும் இளைய சகோதரன் வேடமும் இருந்தன. ‘உங்களுக்கு எந்த வேடம் வேண்டுமோ அதை நீங்களே தேர்வு செய்து கொள்ளுங்கள்’ என்று ஜெமினியின் விருப்பத்திற்கே விட்டுவிட்டார் சிவாஜி.

ஜெமினி புத்தி சுவாதீனமில்லாத அண்ணனாகவும் அவரைத் திருத்துகிற அண்ணியாக சாவித்ரியும் நடித்தார்கள். படத்தில் ஜெமினி கணேசனின் நடிப்பே அற்புதமாக இருந்தது. ஜெமினி பேசப்பட்ட அளவு சிவாஜி பேசப்படவில்லை.

ஜெமினியின் தேர்வும் நடிப்பும் சிறப்பாக இருந்ததை உணர்ந்தார் சிவாஜி. மீண்டும் ஜெமினியுடன் நடிக்கும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்திருக்க வேண்டும் அவர். ‘பதிபக்தி முதல் பந்தபாசம் வரையிலான படங்களில் சிவாஜியின் வேடமும் நடிப்புமே பிரதானமாக அமைந்தது.

முதலும் கடைசியுமாக சிவாஜியும் ஜெமினியும் இணைந்து பந்தபாசம் படத்தில் அண்ணன் தம்பியாக நடித்தார்கள். பந்தபாசத்துக்குப் பிறகு சிவாஜி – ஜெமினி வெற்றிக் கூட்டணி பிரிந்து விட்டது. ஏ.பி. நாகராஜனின் சில புராணப் படங்களில் ஜெமினி சிவாஜியுடன் இருந்தார் அவ்வளவே.

நன்றி : காதலன் : ஜெமினி கணேசனின் வாழ்க்கை வரலாறு (பா. தீனதயாளன்)

இன்று (மார்ச் 22) காதல் மன்னனுக்கு நினைவு நாள்

வில்லு லொள்ளு!

வில்லு இன்று ரிலீஸ். பொதுவாக எனக்கு விஜய்-ன் சமீபகால மசாலா படங்களில் விருப்பமில்லை. ஆதி என்றொரு படத்தை கல்கியில் விமரிசனம் எழுதுவதற்காக பார்த்தேன். அதற்குபின் விஜய் படங்களோடு உறவை முறித்துக்கொண்டேன். கெட்-அப் மாற்றக்கூட தயங்கும் விஜய், மாறாத ஒரே கமர்ஷியல் ஃபார்முலா, காது ஜவ்வைக் கிழிக்கும் தமிழ்க்கொலை பாடல்கள் – இளைய தளபதி என்னைப் பொருத்தவரையில் என்றும் தளபதியாக மட்டும்தான் இருப்பார்போல.

சரி. இனி கற்பனை. (நிஜமாகக்கூட நடந்திருக்கலாம்.) விஜய் படம் ஒன்றின் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு எப்படி ஸீன் டிஸ்கஷன் நடந்திருக்கும்? பார்க்கலாமா.

(‘மது, புகை வீட்டுக்கு நாட்டுக்கு உயிருக்கு கேடு’ என்ற வாசகத்தை தேவைப்படும் இடங்களில் உபயோகித்துக் கொள்ளவும்.)

கொத்துப் பரோட்டா டைரக்டர் பிரபுதேவா (அ) பேரரசு, அக்மார்க் மசாலா ஹீரோ விஜய், ஸ்டண்ட் மாஸ்டர் பவர் பங்காரு, தயாரிப்பாளர் சேட் லாலாஜி – இவங்க எல்லாம் சேர்ந்து.. என்ன சமூக சேவையாப் பண்ணப் போறாங்க. ஐந்து நட்சத்திர ஹோட்டல்ல ரூம் போட்டு உட்காந்து ‘ஸ்டண்ட் ஸீன்’ டிஸ்கஷன் பண்ணுறாங்க. தெலுங்குப் படத்தோட தமிழ் ரீமேக். படத்தோட பேரு (பெத்த பேரு) ‘காரியாப்பட்டி’ (தெலுங்குல ‘பிரேம கொடுக்கு’). நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீந்துவதுவேன்னு சகல ஜீவராசிகளும் ஆந்திராக் காரத்தோட, மசாலா பூசிக்கிட்டு படுத்துக்கிடக்க, ஆல்கஹால், நிக்கோடின் ‘கப்’போட ஸ்டண்ட டிஸ்கஷன்ல பரபரன்னு பொறி பறக்குது. அப்படியே அந்த ‘மூடு’க்கு வந்துட்டீங்களா.. போலாம் ரை ரைட்!

இயக்குநர் : இது க்ளைமாக்ஸ் பைட்டு.
ஸ்டண்ட் : ஆங்.. அது எப்ப வரும்?
இயக்குநர் : இண்டர்வெல் முடிஞ்சதும் ஆரம்பிக்குது. க்ளைமாக்ஸ் வரைக்கும் விடாம உதைக்கிறோம். ஸ்கீரின்ல அப்படியே ரத்தவாடை அடிக்கணும். படம் முடிஞ்சு வெளிய போற ஒவ்வொருத்தணும் உடம்புல மாவுக்கட்டோடத்தான் வீட்டுக்கே போகணும்.
ஸ்டண்ட் : அத்த நம்ம கைல வுடு கண்ணு. புச்சா நெறைய மேட்டர் திங்க் பண்ணி வச்சிக்கீறேன். ஒவ்வொன்னத்தயும் எட்த்து வுட்டேன் வெச்சுக்கோ, ரசிகனுங்க பீஸ் பீஸ் ஆயிடுவானுங்க. நம்ம ஹீரோக்கு மாஸ் மாஸ் பிச்சுக்கும். ஆஹ்ஹாங்!
விஜய் : இல்லீங்ணா, என்னோட மார்க்கெட் போன படத்துல குத்தாட்டம் போட்டு குப்புறப்படுத்துக்கிச்சு. என்னோட ஆக்ஷன் பருப்பு சுத்தமா வேகல. இந்தப் படத்துலயும் பல்லிளிச்சிது வெச்சுக்கோங்க, நானும் ‘குடிச்சுக்கோ முழிச்சுக்கோ’னு காபித்தூள் வெளம்பரத்துக்கு மூஞ்சைக் காட்ட போக வேண்டியதுதான்.
லாலாஜி : ஹீரோ ஸாப், கவலயை வுடுறான். நிம்பள் இந்த பட்துக்கு துட்டை தண்ணியா இறைக்கிறான். டைரக்டர் ஸாப், பட்த்துல பைட்டை பகோத் அச்சா பண்ணுறான்.
இயக்குநர் : ஸீனைச் சொல்லுறேன் கேளுங்க. ஹீரோயினைக் கடத்திட்டு வில்லன் நூறு அடியாட்களோட  பத்து கார்கள்ல 120 கிலோமீட்டர் ஸ்பீடுல போறான்.
ஸ்டண்ட் : இன்னாபா நீ ஸீன் சொல்ற. நான் சொல்றேன் கேட்டுக்கோ. ஹீரோயினை வலிச்சிக்கினு வில்லங்காரன், ஒரு ஆயிரம் அடியாட்களோட, நூறு குவாலிஸ், சுமோவுல, 200 கிலோ மீட்டர் வேகத்துல போறான்.
விஜய் : அப்படிப் போடுங்ணா அருவாளை! இங்க நான் என்ன பண்ணனும்? பரபரன்னு ஆக்ஷன் துள்ளுற மாதிரி அள்ளிவிடுங்கண்ணா.
இயக்குநர் : இதைக் கேள்விப்பட்ட நீங்க, சரசரன்னு உங்க அக்காப் பொண்ணு நடை பழகுற வண்டியில ஏறி வேகமாத் தொரத்த ஆரம்பிக்கிறீங்க.
விஜய் : நடை பழகுற வண்டில்லாம், ரொம்ப லோ பட்ஜெட்டா இருக்கே?
லாலாஜி  : நீங்க கவலே படாதீங்கஜி. நாமே படா காஸ்ட்லியா மூணு சக்ர சைகிள் வெச்சுக்கலாம்.
ஸ்டண்ட் : சூப்பரப்பு. அப்டியே நீங்க மூணு சக்கர சைக்கிள்ல ஏறி ஒக்காந்துக்கினு, 300 கி.மீ. ஸ்பீடுல வில்லன் குரூப்பை சேஸ் பண்ணுறீங்க.
விஜய் : மூணு சக்கர சைக்கிள்ல ஸேஸிங். ஐடியா நியூவா, ப்ரெஷ்ஷா இருக்கு. மேல பில்ட் அப் பண்ணுங்ண்ணா.
இயக்குநர் : ஸேஸ் பண்ணிட்டுப் போறப்பவே, சைட்ல வில்லன் குரூப் ஆஃப் கம்பெனி கார்களையெல்லாம், அப்படியே காலால லேசா எட்டி உதைக்கிறீங்க. ஒவ்வொரு காரும் உயர உயரப் பறந்து நானூறு அடி தள்ளிப் போய் தள்ளாடி விழுது.
ஸ்டண்ட் : பின்னலா இருக்கு. இதுலயும் இன்னும் கொஞ்சம் பில்ட் அப் பண்ணி, சைக்கிள்ல வேகமாப் போற நீங்க, வில்லனோட கார் முன்னால போய் ஸ்டைலா பதினெட்டு போட்டு நிறுத்துறீங்க. வில்லன் கார் டிரைவர் வேகமா சடன் பிரேக் போட, பின்னால வர்ற அத்தனை வண்டியும் ஒண்ணுக்கு மேல் ஒண்ணு முட்டி ஏறி எல்.ஐ.சி. பில்டிங் ஹைட்டுக்கு நட்டுக்கிட்டு நிக்குது.
லாலாஜி : (‘ஜெர்க்’காகி மனத்துக்குள்) என்னாது, எல்.ஐ.சி. ஹைட்க்கு பில்ட் அப் பண்றான். நம்மள் துட்டை கிட்நாப் பண்ணப் பாக்குறான். அரே பாப்ரே!
விஜய் : இந்த இடத்துல என்னைப் பாத்து நடுநடுங்கி வில்லன் கோஷ்டியே பின்னங்கால் உச்சந்தலையில உரச உரச ஓடணும்ணா. அப்படியொரு டுவிஸ்ட்டைச் சொல்லுங்க.
இயக்குநர் : அவ்ளோதானே. இந்தா வைச்சுக்கோங்க. பக்கத்துல இருக்குற பனை மரத்தைப் புடுங்கி 360 டிகிரிக்கு சுழட்டோ சுழட்டுன்னு சுழட்டுறீங்க. அந்து நொந்து போற வில்லன் ஹீரோயினை இழுத்துக்கிட்டு பக்கத்துல இருக்குற வயக்காட்டுல இறங்கி ஓட ஆரம்பிக்கிறான். விடாம நீங்களும் மூணு சக்கர சைக்கிள்லயே மானாவாரியாத் துரத்துறீங்க.
ஸ்டண்ட் : அப்பாலிக்கா நடக்குறதை நாஞ் சொல்லுறேன் கேட்டுக்கோ சார். அப்டிக்கா ஓடி பக்கத்துல இருக்குற ரயில்வே ஸ்டேஷன்ல பூந்துடுறான். அப்போ டிரெயின் கரீக்டா வருது. இன்ஜின் டிரைவரை க்ளோஸ் பண்ணிக்கினு, வில்லன் தன் கூட்டாளிங்களோடயும் ஹீரோயினோடயும் டிரெயினை ஓட்ட ஆரம்பிக்கிறான்.
இயக்குநர் : அப்ப நீங்க சைக்கிளை உதறிட்டு, டிரெயினைத் துரத்த ஆரம்பிக்கிறீங்க. வேகமா ஒத்தைத் தண்டவாளம் மேல ஸ்லிப் ஆகாம உங்க ஷூவால ஸ்கேட்டிங் போற மாதிரி சறுக்கிட்டே போறீங்க.
விஜய் : நம்மளோட போன படத்துல வில்லன் ஆட்கள் துப்பாக்கியால சுடறப்போ, எங் கையால குண்டுகளைக் கேட்ச் பிடிக்கற மாதிரி பண்ணுனேன். இந்தப் படத்துல அந்த ஸீனை தூக்கிச் சாப்பிடுற மாதிரி ஏதாவது சொல்லுங்ண்ணா.
ஸ்டண்ட் : ஓடுற டிரெயின்ல இர்ந்து வில்லன் ஆள்கள் டுமீல் டுமீல்னு சுடுறாங்க. நீங்க அசால்ட்டா துப்பாக்கி குண்டுகளை கேட்ச் புடிக்கிறீங்க. அதை அப்படியே உங்க உள்ளங்கையில வெச்சு வில்லன் ஆட்களைப் பாத்து ஊதி விடுறீங்க. அது துப்பாக்கில இருந்து வெளிய போறதோட படா ஸ்பீடாப் போயி அவங்களைத் தாக்கி அழிக்குது. எப்படி?
விஜய் : அரிக்குதுங்ண்ணா! இத நம்ம ரசிகனுங்க தியேட்டர்ல பாக்குறப்போ அப்படியே ஆனந்தக் கண்ணீர் வுட்டு கதறுவாங்கண்ணா.
லாலாஜி : (மனதுக்குள் நொந்தபடி) நிம்பள் வட்டி மேலே வட்டி போட்டு குட்டி போட்ட துட்டை, இவங்கோ குண்டு போட்டே அழிச்சுடுவாங்கோ. ஹே பஹ்வான்!
விஜய் : இதுக்கு மேலே மசாலாத்தனமா ஒண்ணும் பண்ண முடியாதுங்கண்ணா. உச்சத்துக்குப் போயிட்டீங்க.
இயக்குநர் : யாரு சொன்னா? இப்பத்தான் மசாலா அரைக்கவே ஆரம்பிச்சிருக்கோம். இன்னும் இருக்கு பாருங்க.
விஜய் : அசத்துறீங்கண்ணா. மேல மீட்டரைப் போடுங்க.
இயக்குநர் : இதே நேரத்துல இன்னொரு வில்லன் பக்கத்து ஊருல இருந்து உங்க அம்மாவையும் தங்கச்சியையும் கடத்திட்டு வாரான். அவனும் அந்த ஊரு ரயில்வே ஸ்டேஷனுக்கு வர்ற இன்னொரு டிரெயினைக் கடத்திட்டு உங்களுக்கு எதிர்த்தாப்ல வேகமா வர்றான்.
ஸ்டண்ட் : ஸேஸிங் ‘செம ஸீனா’ப் போவுது நைனா. இப்பவே என் கையி காலெல்லாம் ச்சும்மா ஜிவ்வுங்குது. ஸ்பாட்டுக்கு எப்ப போலாம்னு மண்டைக்குள்ள பட்சி படபடக்குது.
விஜய் : மேல என்ன ஆவும்? டாப் கியர்ல சொல்லுங்கண்ணா!
லாலாஜி : (டென்ஷனில் வியர்வை வழிய வழிய மனதுக்குள்) இதுக்கு மேலே என்னே ஆவும். ஒண்ணுக்கு ரெண்டு டிரெயினா செலவு பண்ணி, நம்பள் கஜானா காலி ஆவும்.
இயக்குநர் : விஜய் சார், நீங்க உங்க லவ்வர் இருக்குற டிரெயினை நிறுத்த முயற்சி பண்ணுறீங்க. அதுக்கு டிரெயின் பின்னாலயே ஸ்கேட்டிங் போற நீங்க, உங்ககிட்ட இருக்குற பம்பரம் விடுற கயிறை யூஸ் பண்ணுறீங்க.
விஜய் : அது எப்டிங்கண்ணா?
ஸ்டண்ட் : வில்லுக்கு ஃபுல்லும் ஆயுதம்!
இயக்குநர் : அதான் மேட்டரு. பம்பரம் விடுற கயிறை யூஸ் பண்ணி டிரெயினை இழுத்துப் பிடிச்சுக் கட்டி நிறுத்துறீங்க.
விஜய் : சூப்பருங்கோ!
லாலாஜி : (கிட்டத்தட்ட அழுதபடி மௌனமாக) நம்பள் மோசம் போயிட்டான், நம்பள் மோசம் போயிட்டான்.
இயக்குநர் : அதே நேரத்துல இன்னொரு வில்லன் டிரெயின், அதான் உங்க அம்மா, தங்கச்சி வர்ற டிரெயின் கொஞ்சம் தள்ளி வேகமா இதே தண்டவாளத்துல தடக்கு தடக்குன்னு வருது. உடனே நீங்க வேகமா அந்த டிரெயினை நோக்கி ஓடுறீங்க. தடக் தடக் தடக் தடக்.. படக் படக் படக் படக்.. படம் பாக்குறவன் எல்லாவனுக்கு பிபி எகிறணும். வேகமா வர்ற டிரெயின் ஓட்டுற வில்லன், பிரேக் பிடிக்கத் தெரியாம தொபீர்னு குதிச்சுடுறான். உங்க அம்மாவுக்கும் பிரேக் போடத் தெரியாது. ரெண்டு டிரெயினும் மோதப் போற அந்த மில்லி செகண்ட். நீங்க ரெண்டு டிரெயின்களுக்கும்  இடையில போயி ரெண்டையும் மோத விடாம உங்க கைகளால தடுத்து நிறுத்துறீங்க.
ஸ்டண்ட் : டாப்போ டாப்பு! ஆக்ஷன் ஆப்பு!
விஜய் : இந்த ஒரு ஸீனுக்கே படம் இருநூறு நாள் ஓடுங்ணா!
லாலாஜி : (வியர்த்து விறுவிறுத்து) ஹே… ராம்ம்ம்! (மயக்கமாகிறார்.)