‘இதில் என்ன பிரதர் தப்பு?’ – ஜெமினி

ஜெமினி ஸ்டூடியோவில் வெறும் காஸ்டிங் அசிஸ்டெண்ட்டாக இருந்தபோதே, ஜெமினி ஸ்டூடியோவின் படங்களில் கதாநாயகியாகப் புகழ்பெற்றிருந்த புஷ்பவல்லியை தன் காதல் வலையில் சிக்க வைத்தார் ஜெமினி கணேசன்.

புஷ்பவல்லி பார்க்க ரொம்ப அழகாக இருப்பார். தாசி அபரஞ்சி, பால நாகம்மா ஆகிய படங்களில் ரொம்பவும் வசீகரமாக நடித்துப் புகழ் பெற்றிருந்த நடிகை அவர். தென்னக சினிமாவில் ஏன் இந்திய சினிமாவிலேயே அழகுக்குப் புகழ்பெற்ற கதாநாயகிகளில் ஒருவர் பத்மினி. அவரே வியக்க நோக்கிய புஷ்பவல்லி தான் சினிமா உலகில் ஜெமினி கணேசனுக்குக் கிடைத்த முதல் காதலி.

புஷ்பவல்லி

‘நடிகை சூர்யபிரபா என்னுடன் நடித்துக் கொண்டிருந்தார். அவரது சகோதரியே புஷ்பவல்லி. நான் புஷ்பவல்லியின் காதலில் சிக்கினேன். புஷ்பவல்லி வயிற்றில் என்னால் கருவும் உருவானது. நான் கலங்கி நின்றேன்.

அவள் என் குழந்தையைச் சுமப்பது தனக்குக் கிடைத்த அதிர்ஷ்டம் என்றாள். பிறக்கப்போகும் குழந்தைக்கு முழுமையான அப்பாவாக இருக்கமுடியாது என்பதை உணர்ந்தேன். எத்தனையோ எடுத்துச் சொல்லியும் புஷ்பவல்லி ஏற்றுக் கொள்ளவேயில்லை.

1954-ம் வருஷம் அக்டோபர் மாதம் 10-ம் தேதி ரேகா என்ற பெண் குழந்தை எனக்கும் புஷ்பவல்லிக்கும் பிறந்தாள். என் மீது தனக்குள்ள உரிமையை உறவை உறுதிப்படுத்திக்கொள்ள நினைத்தாள் புஷ்பவல்லி. அதற்கு அடுத்த வருஷமே ராதா என்ற பெண் குழந்தையையும் பெற்றுக் கொண்டாள்.

என் பிறந்தநாள் பரிசாக ராதா பிறந்தாள். என்னை அடைவதிலும் ஆட்கொள்வதிலும் இருந்த அவசரம் என்னைப் பிரிவதிலும் அவளுக்கு இருந்தது. நான்கு வருஷ நட்பை என்னைப் புரிந்து கொள்ளாமல் முறித்துக்கொள்ள புஷ்பவல்லி முற்பட்டாள்.’

என்று புஷ்பவல்லி பிரிந்த சமயத்தில் ஜெமினி கணேசன் வருந்திக் கூறினார். ஆனால் சில வருடங்கள் கழித்து ஜெமினி, புஷ்பவல்லி பற்றிப் பேசும்போது அதில் வருத்தம் இம்மியளவு கூட இல்லை.

‘இதில் என்ன பிரதர் தப்பு? ஜெமினியில் நானும் புஷ்பவல்லியும் நடித்துக்கொண்டு இருந்தபோது இருவருக்கும் காதல் பிறந்தது ஒட்டிப் பழகினோம். திருமணத்தைப் பற்றி நாங்கள் எண்ணவே இல்லை.

மனம் விரும்பிப் பழகுபவர்களுக்குத் திருமணம் தடையில்லைதான்!

எங்கள் இருவர் உயிரும் கலந்து மூன்றாவது உயிர் தோன்றியது பானுரேகா பிறந்தாள் காலபோக்கில் இருவரும் வேறு பாதையில் செல்ல வேண்டி இருந்ததால் பிரிந்தோம்.

எங்களுக்குள் திருமணமாகாததால் விவாகரத்து பிரச்னையும் எழவில்லை.’

புஷ்பவல்லி ஜெமினி கணேசனை விட்டு முற்றிலும் விலகிய நேரத்தில், அவரது இடத்தை சாவித்ரி பிடித்துக் கொண்டிருந்தார்.

(நன்றி : பா. தீனதயாளன், புத்தகம் : காதலன் – ஜெமினி கணேசனின் வாழ்க்கை வரலாறு)

தேசிய விருது

ராஷ்ட்ரிய விஞ்ஞான் ஏவம் பிரதியோகிகி சஞ்சார் பரிஷத் என்ற மத்திய அரசின் அமைப்பு அறிவியல் வளர்ச்சிக்குப் பங்காற்றுபவர்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் விருது அளிக்கிறது.

இதில் இந்த ஆண்டு, புத்தகம் மற்றும் இதழ்கள் மூலம் அறிவியல், தொழில்நுட்ப தகவல் தொடர்பில் தனித்துவ ஈடுபாட்டு முயற்சிக்கான தேசிய விருது என்ற பிரிவின்கீழ் எழுத்தாளர் என். ராமதுரைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதுமாக இந்தத் துறையில் அனைத்து மொழிகளும் சேர்த்து ஒருவருக்கு மட்டும்தான் இந்த விருது என்பது கவனிக்கப்பட வேண்டியது.

கிழக்கு, பிராடிஜி என்ற இரண்டு பதிப்புகளிலும் ராமதுரை எழுதியுள்ள அறிவியல் புத்தகங்கள் காரணமாக இந்த தேசிய விருது அவருக்குக் கிடைத்துள்ளது.

மகிழ்ச்சி. கடினமான விஷயங்களை எளிய தமிழில் எழுதுவது எப்படி என்று ராமதுரையிடம்தான் ஒவ்வொருவரும் கற்றுக் கொள்ள வேண்டும்.

கிழக்கு பாட்காஸ்ட் நிகழ்ச்சிக்காக ‘அணு – அதிசயம், அற்புதம், அபாயம்’ புத்தகம் குறித்து ராமதுரை பேசினார். 50 நிமிடங்கள் அணு குறித்து இத்தனை சுவாரசியமான பேச்சை கேட்டிருக்கவே முடியாது. ராமதுரை போன்ற ஒருவர் எனக்கு பள்ளி, கல்லூரியில் அறிவியல் சொல்லிக் கொடுத்திருந்தால் அது இனித்திருக்கலாம்.

ராமதுரை பேசிய நிகழ்ச்சியைக் கேட்க & டௌன்லோட் செய்ய.

ராமதுரையின் புத்தகங்கள் வாங்க.

முகலாயர்கள் – கிழக்கு பாட்காஸ்ட்

முகலாயர்கள் குறித்து கிழக்கு பாட்காஸ்ட்டில் நான் பேசியது. உடன் உரையாடுபவர் சித்ரா.

கேட்க & டௌன்லோட் செய்ய

ரஜினியை மிஞ்சிய கமல்!

அதிரடியான, பாக்ஸ் ஆபிஸ் ஹிட் படங்களையும் அமைதியான கலாபூர்வமான படங்களையும் ஒருங்கே ஒருவரால் அளிக்கமுடியும் என்பதை கமல்ஹாசன் அளவுக்கு ஆணித்தரமாக நிரூபித்த இன்னொரு நடிகர் இங்கே இல்லை.

கோடம்பாக்கத்தின் விதிகளை மிகக் கறாராகக் கடைபிடித்த அதே கமலால் அந்த விதிகள் ஒவ்வொன்றையும் அடுத்தடுத்து உடைக்கவும் முடிந்தது. உடைபட்ட ஒவ்வொன்றும் சாதனை படைத்தது. தமிழ்த் திரையுலகில் கமல் மேற்கொண்ட பரீட்சார்த்த முயற்சிகளுக்குப் பின்னால், அவற்றின் வெற்றி, தோல்விகளுக்குப் பின்னால், புதிய விஷயங்களைக் கண்டுபிடிக்கத் துடிக்கும் ஒரு விஞ்ஞானியின் ஆர்வத்தைக் காணலாம்.

நடிப்பின் இலக்கணத்தை நிர்ணயித்தவர் சிவாஜி என்றால் அதை வெற்றிகரமாக நடைமுறைக்குப் பழக்கியவர் கமல். அதனால்தான், இந்த இருவரையும் பல சமயம் ஒரே நேர் வரிசையில் நிற்க வைத்து பெருமிதம் கொள்கிறது திரையுலகம்.

கமலின் சாதனைகள் அவர் நடிப்பிலோ அவர் பெற்ற விருதுகளிலோ, பாராட்டுகளிலோ அடங்கியிருக்கவில்லை. தமிழ் திரையுலகை அதன் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல அவர் கொண்டிருக்கும் ஏக்கத்தில், அதற்காக எதையும் செய்ய தயாராக இருக்கும் அவர் நெஞ்சுறுதியில் அடங்கியிருக்கிறது.

சிவாஜி, ஜெமினி, சின்னப்பா தேவர் வரிசையில் பா. தீனதயாளனின் அடுத்த விறுவிறுப்பான புத்தகம் இது.

*

நேற்றுதான் புத்தகக் கண்காட்சிக்கு கமல் புத்தகம் வெளிவந்தது. வந்த நிமிடத்திலிருந்தே வாசகர்கள் விரும்பி எடுத்துப் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். திரையுலகத்தினர் மட்டுமல்ல, வெகுஜன வாசகர்களும் வாங்கிச் சென்றார்கள். கமல் கிழக்கின் ஹிட் புத்தக வரிசையில முதல் நாளே சேர்ந்துவிட்டது.

எடிட் செய்யும்போதே நினைத்தேன், கமல் புத்தகம் நல்ல கவனத்தைப் பெறும் என்று. ஆனால் நான் எதிர்பார்த்தைவிட, நல்ல வரவேற்பு பெற்றது குறித்து மகிழ்ச்சி. விமரிசனங்களுக்காகக் காத்திருக்கிறேன்.  நான் அறிந்து கிழக்கின் ரஜினி புத்தகம் இந்த அளவுக்கு விறுவிறுப்பான விற்பனையில் இடம்பெறவில்லை. (நண்பர் ராம்கி கோபித்துக் கொள்ளமாட்டார் என்ற உரிமையில் சொல்கிறேன்.)

‘இது என்ன கூத்தாடிகள் ராஜ்யமா?’ – பெரியார்

1967ல் விடுதலை நாளிதழில் பெரியார் தனது பொங்கல் செய்தியை வெளியிட்டார். கடந்த நாள்களில் நடந்த சம்பவங்களால் அவரது மனம் எவ்வளவு பாதிக்கப்பட்டிருந்தது என்பதை அந்த எழுத்துகளை வெளிப்படுத்தின. காகிதமே பொசுங்கிப் போகுமளவுக்குச் சூடாக இருந்தன அவரது வார்த்தைகள்.

‘………………… சாதாரணமாக ராதாவானாலும் ராமச்சந்திரன் ஆனாலும் இவர்களுக்கு பொது மக்கள் உலகத்தில் உள்ள மதிப்பு இவர்கள் கூத்தாடிகள், வேஷம்போட்டு நடிப்பவர்கள், காசுக்காக எந்த வேஷத்தையும், எப்படிப்பட்ட இழிமக்கள் தன்மையான கதையையும் எந்த உருவத்திலும் நடிப்பவர்கள் என்பதல்லாமல் இவர்களுக்கு பொதுநல யோக்கியதைக்கு ஏற்ற ஒழுக்கம் நாணயம் பொறுப்பு என்ன இருக்க முடியும்? இவர்கள் நடிப்பால் பொதுமக்களுக்கு பெரிதும் பல தீயகுணங்களும், ஒழுக்கக்கேடும் ஏற்படுவதல்லாமல் என்ன கலைஞானம் 100க்கு 90 மக்களுக்கு ஏற்பட்டு விடும்? ஏற்படக்கூடும்?

இக்காரியங்களில் ஈடுபட்ட இரண்டு கூத்தாடிக் கீழ்த்தர மக்களுக்குள் நடந்த மூர்க்கத்தனமான, காலித்தனமான சம்பவத்திற்காக எவ்வளவு ஆர்ப்பாட்டம், விளம்பரம், மக்கள் இடையில் உணர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது. அரசாங்க ஆக்கினைகள் எவ்வளவு என்று பார்த்தோமானால் சமுதாயத்தின், ஆட்சியின் கீழ்த்தரம் எந்த அளவுக்கு இறங்கிவிட்டது என்று கவலைப்படுகிறேன்.

இதற்காக அரசாங்கம் நாட்டு நிகழ்ச்சிகளை ரூ. 1000, ரூ. 2000 செலவு செய்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிகளை 144 உத்தரவு போட்டு தடுப்பது என்றால் இது என்ன கூத்தாடிகள் ராஜ்யமா? கூத்தாடிகள் அரசாங்கமா? என்றுதானே கேட்கத் தோன்றுகிறது.

நிலைமை இப்படியே மோசமாக வளர்ந்து வருகிறது என்றால், இந்த ஆட்சிக்கு ஆளத்தகுதி இல்லை அல்லது ஜனநாயகத்துக்கும் நம் நாட்டுக்கும் மக்களுக்கும் பொருத்தம் இல்லை. ராணுவமோ, சர்வாதிகாரமோ கொண்டுதான் சமதர்மத்தை அமுல்நடத்த முடியும் என்கிற முடிவுக்கு வரவேண்டும்.

ஏன் எனக்கு இப்படி விரக்தி முடிவு தோன்றுகிறது என்றால், இரண்டு கூத்தாடிகளுக்கு ஏற்பட்ட காலித்தன நிகழ்ச்சிக்காக, காங்கிரஸ் ஆபிசு கொளுத்தப்பட்டது, காமராசர் வீட்டுக்குக் காவல், பெரியார் வீட்டுக்குக் காவல், காமராஜருக்குக் காவல் என்றெல்லாம் காரியம் நடப்பதென்றால் பிறகு நாட்டில் யாருக்குத்தான் பாதுகாப்பு இருக்கமுடியும்? இந்த காலித்தனத்தின் பயனாக ஏற்பட்ட விளைவு இது என்றால் நாட்டில் உண்டாக்கப்பட்டிருக்கும் உணர்ச்சி எப்படிப்பட்டதாக இருக்கிறது என்பதை பொதுமக்கள், அறிஞர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே எழுதுகிறேன்.

காமராஜருக்கோ, காங்கிரஸ் கூட்டங்களுக்கோ, எனக்கோ, காமராஜர் தாயாருக்கோ, அவர் வீட்டிற்கோ என்னதான் கேடுவந்தாலும் அதனால் உலகம் முழுகியா போய்விடும்?
…………………’

***

இந்த ஞாயிறு (27 டிசம்பர்), கிழக்கு பாட்காஸ்டில் எம்.ஜி.ஆர். குறித்த நிகழ்ச்சி. பேசுபவர்கள் ஆர். முத்துக்குமார், பா. தீனதயாளன் – சித்ராவுடன். தவற விடாதீர்கள்.