கண்டேன் பாட்டியை!

இளநீர்ப் பாட்டியை மீண்டும் கண்டுகொண்டேன். புரியாதவர்கள் சிரமம் பாராமல் இங்கே சென்று வரவும்.

அதே சிபி ஆர்ட் கேலரி பேருந்து நிறுத்தத்தில்தான் பார்த்தேன். காணாமல் போன இளநீர் வண்டிக்கு பதிலாக, பேருந்து நிறுத்தத்திலேயே தரையில் கடை விரித்திருந்தாள்.

ஸ்கூட்டியை விட்டு இறங்கி, ஹெல்மெட்டை கழட்டிவிட்டு ஆர்வமாக பாட்டியை நெருங்கினேன். மொட்டையடிக்கப்பட்டு, சற்றே முடிவளர்ந்த தலையோடு பாட்டி. நிமிர்ந்து பார்த்தாள். என்னைக் கண்டதும் அவள் முகத்தில் ஒரு பிரகாசம். ‘வந்துட்டியா ராசா. என்னைத் தேடுனியா?’ – குரலில் ஏக்கம்.

‘தேடுனேன் பாட்டி. ஆனா யார்கிட்ட விசாரிக்கிறதுன்னு தெரியல. என்ன ஆச்சு?’

‘அதயேன் கேக்குற. இந்தா மேலருந்து விளம்பர போர்டு என் தலைல வுழுந்து, அப்படியே சரிஞ்சுட்டேன். இங்கேயே ரெண்டு பாட்டில் ரத்தம் போயிருக்கும். ஆசுபத்திரில ரொம்ப நாள் கெடந்தேன். எம் புள்ளைங்க பாத்துக்கிட்டாங்க. திரும்ப வந்ததே மறுபொறப்புதான்.’

சொல்லிக்கொண்டே ஒரு பெரிய இளநீரை வெட்டி நீட்டினாள். பேருந்து நிறுத்தத்தின் மேலே பார்த்தேன். வெறும் கம்பிகள் மட்டும் நீட்டிக்கொண்டிருந்தன.

‘நான் வந்து நாலு நாளாச்சு. நீ ஏன் வரலை?’

‘இல்ல பாட்டி, இன்னிக்குத்தான் உங்களைப் பார்த்தேன்.’

பதினைந்து ரூபாயை நீட்டினேன். ஸ்கூட்டியில் ஏறி ஹெல்மெட்டை அணிந்தேன். ‘நீகூட வண்டிலலாம் போற. பாத்து கவனமா போ ராசா…’

புலி புராணம்!

தேசிய விலங்கு என்று சொல்லி பெருமைப்பட்டுக் கொள்ளலாம். ஆனால் எந்த மிருகக் காட்சியில் எப்போது புலி குட்டி போடும் என்று காத்துக் கொண்டிருக்க வேண்டியதிருக்கிறது. வண்டலூரில் வெள்ளைப்புலி அனு, மூன்று குட்டிகள் போட்டதாக செய்தி. கேக் வெட்டி கொண்டாட வேண்டும் என்று தோன்றுகிறது.

சரி, நம் முன்னோர்கள் புலிகளை எப்படியெல்லாம் அழித்தார்கள்? வேட்டை என்று சொல்லிக்கொண்டு மகாராஜாக்களும் பிரிட்டிஷாரும் செய்த அழிச்சாட்டியங்கள் என்னென்ன?

***

வேட்டையாடுதல் என்பது இந்திய மகாராஜாக்களின் பொழுதுபோக்குகளில் முக்கியமான ஒன்று. அதை ஒரு கௌரவமாகக் கருதினார்கள். ‘போன வருசம் மட்டும் நான் பதினேழு காட்டுப்பன்றி, ஒன்பது சிறுத்தை, நாலு புலி கொன்னுருக்கேன்’ என்று சக சமஸ்தான மகாராஜாக்களிடம் பட்டியலிட்டுப் பெருமைப்பட்டுக் கொள்வார்கள். அத்தோடு தாங்கள் வேட்டையாடிய விலங்குகளை பாடம் செய்துவைத்து ஓர் அறை முழுவதையும் நிரப்பியிருப்பார்கள்.

குவாலியர் மகாராஜா மாதவ் ராவ் சிந்தியா
குவாலியர் மகாராஜா மாதவ் ராவ் சிந்தியா

சமஸ்தானத்தில் வனப்பகுதி இருந்தால் போதும். அதற்குள் சகல சௌபாக்கியங்களும் நிறைந்த ஒரு வேட்டை அரண்மனையை கட்டி வைத்திருப்பார்கள். அவ்வப்போது அங்கு சென்று குடும்பத்தோடு தங்கி, டுமீல்.. டுமீல்! இன்றும் குவாலியரில் மாதவ் தேசியப் பூங்காவில், சிவ்புரி என்ற வேட்டை அரண்மனை அப்படியே இருக்கிறது. அது மகாராஜா மாதவ் ராவ் சிந்தியா கட்டியது.

பொதுவாக வைஸ்ராய், ஒரு சமஸ்தானத்துக்கு வருடத்துக்கு ஒருமுறைதான் செல்லுவார். செல்லும் நேரத்தில் பலே விருந்து உண்டு. அது காட்டை ஒட்டிய சமஸ்தானமாக இருந்தால் வேட்டையும் இருக்கும். ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு வேட்டை பிரசித்தம். உதய்பூர், ஜோத்பூர், குவாலியர், பஞ்சாப் பகுதிகளுக்குச் சென்றால் புலிகளை, புளியங்காய் அடிப்பது போல அடிக்கலாம். தோல்பூர், பரத்பூர் பகுதிகளுக்குச் சென்றால் விதவிதமான பறவைகளையும் கொத்துக் கொத்தாக வாத்துகளையும் அள்ளலாம். குஜராத் வனப்பகுதிகளில் சிறுத்தைகளுக்குக் குறிபார்க்கலாம். இந்தியா முழுவதிலுமே மான்களுக்குப் பஞ்சமிருந்ததில்லை. தெற்கே கேரள வனப்பகுதிகளுக்கு வந்தால் யானை வேட்டை சாத்தியம். இவைபோக கரடி, ஓநாய், மயில், காட்டுப்பன்றி, காட்டெருமை, காண்டாமிருக வேட்டைகளும் நடந்தன.

பிரிட்டிஷார், புலி வேட்டையாடுவதை கௌரவமான ஒன்றாகக் கருதினார்கள். சுட்ட புலியைக் குப்புறப்போட்டு, அதன்முன் லேடி வைஸ்ராயோடு நின்று, துப்பாக்கியுடன் சிரித்தாற்போல புகைப்படம் எடுத்துக் கொள்வது என்பதை அளப்பரிய சாதனையாக நினைத்தார்கள். தாங்கள் சுடும் புலி, குறைந்தபட்சம் பத்து அடி நீளமாவது இருக்க வேண்டும் என்பதிலும் கவனமாக இருப்பார்கள். புலி வேட்டையாடுவதில் மூன்று முறைகளைக் கடைபிடித்தார்கள்.

கர்ஸன், லேடி கர்ஸன், புலி
கர்ஸன், லேடி கர்ஸன், புலி

புலி நடமாட்டமுள்ள பகுதிகளை புக்கிகள் கண்டறிந்து சொல்லுவார்கள். அதற்கு அருகிலுள்ள பகுதியில் மகாராஜா, மரத்தில் மேலேறி மேடையில் துப்பாக்கியோடு காத்திருப்பார். கீழே சற்று தொலைவில் ஒரு ஆடோ, மாடோ, மானோ உயிரோடு கட்டப்பட்டிருக்கும். சாயங்கால வேளையில் புலிக்குப் பசி எடுக்க ஆரம்பிக்கும். தன் இடத்தில் இருந்து எழுந்து, சோம்பல் முறித்து, இரையை மோப்பம் பிடித்து வரும். கட்டப்பட்டிருக்கும் விலங்கு கத்த, புலி பாய, மகாராஜாவின் துப்பாக்கியிலிருந்து குண்டும் பாயும். இது முதல் முறை.

அதிகாலையிலேயே புலிக்கு இரை வைத்துக் காத்திருப்பார்கள். புலி, இரையை அடித்து இழுத்துச் சென்று சாப்பிட ஆரம்பிக்கும். அப்போது யானைமீது சென்று புலியைச் சுற்றி வளைத்துச் சுடுவது இரண்டாவது முறை. இந்த முறையில் மகாராஜாவின் குறி தப்பினால், வேறு யாராவது சுட்டு விடுவார்கள். ஏனெனில் புலி, பூ பறித்துக் கொண்டிருக்காதே.

மூன்றாவது முறை மகாராஜாக்கள் கொஞ்சமும் நோகாமல் நொங்கெடுக்கும் முறை. அதாவது மகாராஜா காட்டில் ஒரு பகுதியில் தனக்கான மேடையில் சௌகரியமாக உட்கார்ந்து கொள்ளுவார். யானைகளோடும் தீப்பந்தங்களோடும் முரசு கொட்டுபவர்களோடும் ஒரு படையினர் புலியின் இருப்பிடத்துக்கே சென்று, அதனை மிரள வைத்து மகாராஜா காத்திருக்கும் பகுதிக்கு ஓட்டி வருவார்கள். மகாராஜா அதை டுமீல் செய்வார்.

ஆனால் ரேவா சமஸ்தான மகாராஜா, புலி வேட்டைக்கு நான்காவதாக ஒரு புதிய முறையை உபயோகப்படுத்தினார். அவரிடம் பழக்கப்படுத்தப்பட்ட குரங்கு ஒன்று இருந்தது. வேட்டைக்கான மேடையில் அவர் இருக்கும்போது, அந்தக் குரங்கு மரத்தின் உச்சியில் இருக்கும். மகாராஜா, ஜாலியாக புத்தகங்கள் படித்துக் கொண்டிருப்பார். புலி அந்தப் பக்கமாக வந்தால், அந்தக் குரங்குக்குத் தெரிந்துவிடும். உடனே இறங்கிச் சென்று மகாராஜாவிடம் சத்தம் எழுப்பும். மகாராஜாவும் புத்தகத்தைக் கீழே வைத்துவிட்டு துப்பாக்கியைத் தூக்குவார்.

மிரள வைக்கும் வேட்டை புள்ளி விவரங்களில் சில. கூச் பிகார் மகாராஜா நிருபேந்திர நாராயண், தன் வாழ்நாளில் 365 புலிகள், 438 காட்டெருமைகள், 207 காண்டாமிருகங்கள், 311 சிறுத்தைகளை வேட்டையாடியிருக்கிறார். சர்குஜா சமஸ்தான ராஜா, ராமானுஜ் சரன் சிங், தம் வாழ்நாளில் சுட்ட புலிகளின் எண்ணிக்கை மட்டும் ஆயிரத்தைத் தாண்டும். ரேவா சமஸ்தான மகாராஜா குலாப் சிங்கில் புலி ஸ்கோர் தொள்ளாயிரத்துச் சொச்சம்.

(குமுதம் ரிப்போர்ட்டரில் எழுதி வரும் அகம் புறம் அந்தப்புரம் தொடரிலிருந்து ஒரு சிறு பகுதி.)

சிறையுதிர் காலம்

சென்னை மத்திய சிறைச்சாலை – சில புகைப்பட பதிவுகள்.

மேலும் புகைப்படங்களுக்கு இங்கே செல்லவும்.

ரோல்ஸ்-ராய்ஸ் நினைவுகள்!

ரோல்ஸ் ராய்ஸ். பெயரை உச்சரிக்கும்போதே புருவம் உயர வைக்கும் ராயல் வாகனம். கௌரவத்தின் அடையாளம். அழகும் கம்பீரமும் சரிவிகிதத்தில் கலந்த கட்டமைப்பு. வேகத்திலும் சளைக்காதது. RR என்று சுருக்கமாவும் கீழே Rolls Royce என்று முழுமையாகவும் பொறிக்கப்பட்ட முத்திரை. முகப்பில் வெள்ளியால் செய்யப்பட்ட சிறகு விரித்துப் பறக்கும் தேவதை. பளபளா உடல்.

இப்படிப்பட்ட ரோல்ஸ்-ராய்ஸ்களை வைத்துக் கொண்டு நம் இந்திய மகாராஜாக்கள் செய்த அழிச்சாட்டியங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.

Pearl of India என்று பெயரிடப்பட்ட ஒரு ரோல்ஸ்-ராய்ஸை குவாலியர் மகாராஜா இரண்டாம் மாதவ்ராவ் சிந்தியா வாங்கினார். அதுவே முதல் போணி. பெருமை பொங்க அதனைத் தன் சமஸ்தானமெங்கும் ஓட்டி பவுசு காட்டினார். பிற சமஸ்தான மகாராஜாக்களுக்கும் இந்தச் செய்தி பரவியது.

அது என்ன கார், எங்கு கிடைக்கும், விலை எவ்வளவு இருக்கும் என்று விசாரிக்க ஆரம்பித்தார்கள். ‘அதென்ன அவரால மட்டும்தான் வாங்க முடியுமா என்ன? நாங்களும் வாங்குவோம்ல!’ என்று தேடித் தேடி ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வாங்க ஆரம்பித்தனர். ஒரு கட்டத்தில் சமஸ்தானத்தின் மகாராஜாவாகப்பட்டவர் ரோல்ஸ் ராய்ஸ் கார் வைத்திருந்தால்தான் கௌரவம் என்ற நிலை உருவானது. மகாராஜாக்களைத் தவிர, பணக்காரர்களும் அந்தக் கார்களை வாங்க ஆரம்பித்தனர்.

அதனால் மகாராஜாக்களைத் தவிரவும் ரோல்ஸ் ராய்ஸ் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை பெருகியது. என்ன செய்யலாம் என்று யோசித்த மகாராஜாக்கள், ஒன்றுக்கு மேற்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கார்களை, தங்கள் விருப்பப்படி வடிவமைக்கச் சொல்லி ஆர்டர்கள் கொடுக்க ஆரம்பித்தார்கள்.

விருப்படியென்றால்? பொதுவாக ரோல்ஸ் ராய்ஸ் கார்களின் அலுமினியத்தால் செய்யப்பட்டன. அலுமினியமா சேச்சே, எனக்கு வெள்ளியால் செஞ்ச கார் வேணும். அந்த மகாராஜா வெள்ளிக் கார் வைச்சிருக்கானா, அப்படின்னா எனக்கு தங்க முலாம் பூசிய கார் வேணும். இப்படி டிசைன் டிசைனாக யோசித்து படு ஆடம்பரமாக, டாம்பீகமாக, தங்கள் விருப்பப்படி, வசதிப்படி ரோல்ஸ் ராய்ஸ் கார்களை இறக்குமதி செய்து, ஃபிலிம் காட்டினார்கள்.

ஒருமுறை லண்டனிலிருந்த ரோல்ஸ் ராய்ஸ் இந்தியப் பிரிவு அலுவலகத்துக்கு ஒரு பார்சல் வந்தது. அதைப் பிரித்துப் பார்த்த ஊழியருக்குக் கொஞ்சம் அதிர்ச்சி. காரணம் அதில் ஒரு செருப்பு இருந்தது. பிங்க் நிற வலதுகால் செருப்பு. கூடவே ஒரு கடிதமும்.

‘இந்த செருப்பின் நிறத்தில் எனக்கு ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கார் உடனே தேவை. என் மகாராணிக்கு பரிசளிக்க விரும்புகிறேன். எப்போது கிடைக்கும்?’

அனுப்பியிருந்தவர் ஜாம்நகர் சமஸ்தானத்தின் மகாராஜா.

அல்வார் மகாராஜா ஜெய்சிங், ஒருமுறை லண்டன் சென்றிருந்தபோது அங்கிருந்த ரோல்ஸ் ராய்ஸ் ஷோரூமுக்குச் சென்றார். புதிதாக கார் வாங்குவதுதான் அவரது எண்ணம். ஆனால் அங்கிருந்த விற்பனைப் பிரதிநிதி அவரைச் சரியாகக் கவனிக்கவில்லை. ‘இந்த ஆளெல்லாம் எங்க கார் வாங்கப் போறான்’ என்ற எண்ணம். ஜெய்சிங்கின் கேள்விகளுக்கு அலட்சியமாகப் பதில் சொன்னான்.

ஜெய்சிங் கடும்கோபக்காரர். விற்பனைப் பிரதிநிதி கூனிக் குறுகி மரியாதை கொடுக்கும்படியாக அந்த இடத்திலேயே ஏழு ரோல்ஸ் ராய்ஸ் கார்களுக்கு ஆர்டர் கொடுத்தார். அவரது சமஸ்தானத்துக்கு ஏழு கார்களும் அனுப்பப்பட்டன. அவற்றை உபயோகப்படுத்த ஜெய்சிங்கின் ஈகோ ஒப்புக்கொள்ளவில்லை. விலை உயர்ந்த அந்த ஏழு ரோல்ஸ் ராய்ஸ் கார்களையும் சமஸ்தானத்தில் குப்பை அள்ளும் வண்டிகளாக உபயோகிக்கச் சொல்லி கட்டளையிட்டார். அவை குப்பை அள்ளின.

நந்தகான் சமஸ்தான மகாராஜா சர்வேஸ்வர தாஸ் புலி வேட்டைப் பிரியர். அவரது ரோல்ஸ் ராய்ஸ் காரில் அடர்ந்த காட்டுக்குள் பதுங்கியிருக்கும் புலிகளைத் தேடுவதற்கேற்ற சிறப்பு விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன. காரின் வெளியே அம்மாவின் காருக்கு வெளியே அமைச்சர்கள் தொற்றிக் கொண்டு போவார்களே, அதுபோல பாதுகாவலர்கள் தொற்றிக் கொண்டு செல்வதற்கென வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

பாட்டியாலா மகாராஜா பூபிந்தர் சிங்கின் ரோல்ஸ் ராய்ஸ் கார்கள், அதி ஆடம்பரமானவை. தங்கம், வெள்ளியால் இழைத்து இழைத்து உருவாக்கப்பட்டவை. ஒவ்வொரு காருக்குமென்றே தனித்தனியாக ஏராளமான நகைகள் இருந்தன. அந்தக் கார்களை சர்வீஸுக்கு விடும்போது, அதைச் சுற்றி ஆயுதம் ஏந்திய காவலர்கள் பாதுகாப்புக்கு நின்று கொண்டிருப்பார்கள்.

பவல்பூர் சமஸ்தான மகாராஜாவுக்கோ ஒரு விநோதப் பழக்கம் இருந்தது. அவர் ரோல்ஸ் ராய்ஸில் சாலைகளில் பவனி வருவதற்கு முன்பாக ஒருவர் இன்னொரு வாகனத்தில் ‘மகாராஜா வருகிறார்’ என்று அறிவித்துக் கொண்டே செல்வார். மறுகணமே சாலையிலிருக்கும் மக்களெல்லாம் முதுகைக் காட்டியபடி திரும்பிவிடுவார்கள். மகாராஜா பவுசாகக் கடந்து சென்றபின் தங்கள் வேலைகளைத் தொடருவார்கள். கண்பட்டு விடக்கூடாது என்பதால் இந்த ஏற்பாடு.

சைக்கிளின் கேரியரில் பிராய்லர் கோழிகளைத் தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டுச் செல்வார்களே, அதேபோல தன் ரோல்ஸ் ராய்ஸ் காரில் கோழி, ஆடு, மான்களையெல்லாம் இறைச்சிக்காகக் கொண்டு செல்லும் பழக்கம் பம்பாயைச் சேர்ந்த அப்துல் அலி என்ற பெரும் பணக்காரருக்கு இருந்தது.

மைசூர் மகாராஜா வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ்களின் எண்ணிக்கை முப்பத்தைந்து. பாட்டியாலா மகாராஜாவிடமிருந்த கார்களின் எண்ணிக்கை முப்பத்தெட்டு. முதலிடம்? ஹைதராபாத் நிஜாம் ஒஸ்மான் அலிகானுக்கு. அவரிடமிருந்த ரோல்ஸ் ராய்ஸ் கார்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட ஐம்பது.

ஹைதராபாத்துக்குள் முதன் முதலில் ரோல்ஸ் ராய்ஸ் வாசம் வீசியது 1912ல். ஒஸ்மானின் தந்தை, நிஜாம் மெஹ்பூப் அலிகான் 1911ல் ஒரு காரை ஆர்டர் செய்தார். மெஹ்பூபின் விருப்பப்படி கார் பயணத்துக்குத் தயாராகி வந்தது. ஆனால் அதற்குள் அவரது வாழ்க்கைப் பயணம் முடிந்திருந்தது. அந்த மஞ்சள் நிற ரோல்ஸ் ராய்ஸ், மகன் ஒஸ்மானிடம் வந்து சேர்ந்தது.

கௌரவமாக அதனை வைத்துக் கொண்டார் ஒஸ்மான். எந்தவிதக் கஷ்டமும் அதற்குக் கொடுக்கவில்லை. அது பாட்டுக்கு அரண்மனை கார் ஷெட்டில் சிலை போல நின்றது. எடுத்து ஓட்டினால் டயர் தேய்ந்து விடுமே. 1947ல் அந்த மஞ்சள் நிற ரோல்ஸ் ராய்ஸ் காரின் ஸ்பீடோமீட்டர் காட்டிய மைல்கள் எவ்வளவு தெரியுமா?

வெறும் 347.

எம்.ஆர். ராதா கொடுத்த விருது

நான் வாங்கப்போகும் முதல் விருது இது. எம்.ஆர். ராதாயணம் புத்தகத்துக்காக. சென்ற வாரம் தகவல் வந்தது. விருதை வழங்குபவர்கள் – திருப்பூர் கலை இலக்கியப் பேரவை. புத்தகத்துக்கு ‘சிறப்பு விருது’ என்று அறிவித்துள்ளார்கள். மார்ச் இறுதியில் விழா இருக்கலாம்.

பரிசுக்குத் தேர்வாகியுள்ள கிழக்கு பதிப்பகத்தின் பிற நூல்களின் பட்டியல் : http://thoughtsintamil.blogspot.com/2009/02/blog-post_17.html

என்னோடு சேர்ந்து தங்களது நூல்களுக்காக விருது பெறவுள்ள ஆர். முத்துக்குமார், என். சொக்கன், ஜெ. ராம்கி, லிவிங் ஸ்மைல் வித்யா, குணசேகரன், ஜோதி நரசிம்மன் ஆகியோருக்கு என் வாழ்த்துகள்.