தொண்ணூறு டிகிரி! (பகுதி 1)

அண்டார்டிகா – 2006ல் நான் எழுதிய புத்தகம். ‘அண்டார்டிகா குறித்த ஒரு புத்தகம் எழுதப்பட வேண்டும். நீ எழுது’ என்று யோசனை கொடுத்தது பாராதான்.

கொஞ்சம்கூட யோசிக்கவில்லை. எழுத ஒப்புக்கொண்டேன். அண்டார்டிகா குறித்து பெரிதாக எனக்கு எதுவும் தெரியாது. அண்டார்டிகாவுக்கான ஆங்கில ஸ்பெல்லிங்கில்கூட சந்தேகம் இருந்தது.

அந்தச் சவாலான சூழ்நிலைதான் அண்டார்டிகா குறித்து எழுதுவதற்கான உந்துசக்தியாக என்னை வழிநடத்தியது. இங்கே தமிழ்நாட்டில் வாழும் நாம் எந்தச் சூழ்நிலையிலும் அண்டார்டிகா குறித்து கொஞ்சம்கூட யோசித்துப் பார்த்திருக்க மாட்டோம். அது ஒன்றும் அமெரிக்கா இல்லையே. அந்தக் கண்டம் குறித்த கவலைகள் நமக்கு அநாவசியமே. எனில், தமிழ் வாசகர்களுக்கு அண்டார்டிகா என்ற ஒரு கண்டத்தை புதிதாக, எளிதாக அறிமுகப்படுத்த வேண்டும். அதன் வரலாறு, புவியியல், அறிவியல் விஷயங்களை நான் அறிந்து கொள்ள வேண்டும். அதை புத்தகத்தில் சுவாரசியம் குறையாமல் கொண்டுவர வேண்டும். முடிவு செய்து கொண்டேன். உடனே அண்டார்டிகா குறித்த தகவல்களை, புத்தகங்களைத் தேடி ஓடவில்லை.

அண்டார்டிகா குறித்து நான் அறிந்த ஒரு சில பொதுவான செய்திகளைக் கொண்டு, அந்தப் புத்தகத்துக்கான அறிமுக அத்தியாயத்தை எழுதினேன். அதுதான் இது.

***

படிக்க ஆரம்பிக்கும் முன் முதலில் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுங்கள். இது அவசியம்.

குறைந்த பட்சம் இரண்டு ஸ்வெட்டர்கள் அணிந்து கொள்ளுங்கள். அப்புறம் கை கால்களை முற்றிலும் மூடும் படி உறை அணிந்து கொள்ளுங்கள். மப்ளர், தலையில் குல்லா மிகவும் அவசியம். ஹலோ ஹலோ ஒரு நிமிஷம். குல்லா அணியும் முன் காதினில் பஞ்சு வைத்துக் கொள்ளுங்கள். ஆச்சா? முடிந்தால் ஒரு கம்பளிப் போர்வையால் போர்த்திக் கொள்ளுங்கள். உங்கள் கண்கள் மட்டும் வெளியே தெரிந்தால் போதுமானது. ஓ.கே. இப்பொழுது நீங்கள் ரெடி. ஆரம்பிக்கலாம்.

ஒரு வளவளப்பான கூடைப் பந்தில் ஒருபுறம் ஒரு கப் வெண்ணிலா ஐஸ்கீரிமை கொட்டினால் எப்படி இருக்கும். கற்பனை செய்து பாருங்கள். அப்படித்தான் பூமிப் பந்தின் தென் துருவத்தில் அண்டார்டிகா ‘என் கடன் பனியால் உறைந்து கிடப்பதே’ என ஜில்லிட்டுக் கிடக்கிறது.

அண்டார்டிகா என்ற சொன்னால், புது வெள்ளை மழை நம் கற்பனைக் கண் முன்னால் பொழியும். தத்தக்கா பித்தக்கா என நடக்கும் பென்குயின்கள் நினைவுக்கு வரும். பக்கத்து வீட்டு குண்டு மாமா போல மீசை வைத்த ஸீல்கள் ஞாபகத்துக்கு வரும். வேறென்ன? ‘வேறென்ன இருக்கிறது, அவ்வளவுதான்’ என்பது பெரும்பான்மையானோரின் பதிலாக இருக்கும். ஆனால் உண்மையில் இன்னும் சொல்லப்படாதவை, கண்டுபிடிக்கப்படாதவை நிறைய நிறைய இருக்கின்றன.

பூமியின் மற்ற பகுதிகளில் காண முடியாதவற்றை, உணர முடியாதவற்றை பூமியின் இறுதிப் பகுதியான அண்டார்டிகாவில் காணலாம்.

கொஞ்சம் நிதானமாக சிந்தித்து கேள்வி கேட்க ஆரம்பித்தாலே போதும். அண்டார்டிகா பற்றி மேலும் மேலும் அறிந்து கொள்ள வேண்டுமென்ற ஆர்வம் நமக்குள் எரியத் தொடங்கி விடும்.

முதலில் ஒரு கேள்வி. அண்டார்டிகாவும் பூமியில் ஒரு கண்டம்? அது யாருக்குச் சொந்தம்? இன்னும் சில கேள்விகள்.

அது தனி நாடா? எந்த நாடு அண்டார்டிகாவை ஆட்சி புரியும் அதிகாரத்தை வைத்துள்ளது?

இல்லை, மக்களே இல்லாத பிரதேசமா? அங்கு மக்கள் அபார்ட்மெண்ட்ஸ் கட்டி வாழ முடியுமா? குறைந்த பட்சம் குடிசையாவது போட முடியுமா? இப்போது அங்கு மனிதர்கள் நிரந்தரமாக வசித்துக் கொண்டிருக்கிறார்களா?

வாழ முடியுமென்றால், அங்கு உணவு கிடைக்குமா? விவசாயம் செய்ய முடியுமா? என்னென்ன இயற்கை வளங்கள் உண்டு? நல்ல நீர் ஆதாரம் உண்டா? இல்லை, ஐஸ்கட்டிதான் எல்லாமுமா?

அங்கு டீவி, வானொலி, தொலைபேசி வசதிகளுக்கு சாத்தியமுண்டா? விமான சேவை வசதியுண்டா? நிரந்தர கப்பல் போக்குவரத்து வசதிகள், நிரந்தர துறைமுகங்கள் உண்டா?

இப்படி இன்னும் எத்தனை எத்தனையோ கேள்விகள் பனிப்புயலாய் வீசத் தொடங்கி விட்டதல்லவா. எதையும் விட்டு வைக்க வேண்டாம். ஒவ்வொன்றாகப் பார்த்து விடலாம்.

***

அண்டார்டிகா புத்தகம் எழுதிய அனுபவத்தை அடுத்த பதிவில் பகிர்ந்து கொள்கிறேன்.

Leave a Comment