செ.பு.கா.நா.வா.பு.

எந்தப் புண்ணியவான் என்ன காரணத்துக்காக ஆரம்பித்து வைத்தானோ தெரியவில்லை. பலரும்  செய்கிறார்கள். ஆகவே நீண்ட யோசனைக்குப் பிறகு நானும் அதைச் செய்வதாக முடிவெடுத்து  துணிந்து இறங்கிவிட்டேன். என்ன நோக்கத்தில் அவர்கள் செய்கிறார்கள் என்று தெரியவில்லை.  ஆனால் உள்நோக்கம் ஏதுமின்றி நானும் செய்கிறேன். இந்தச் செயலும் கொட்டாவி போலத்தான். பரவுகிறது. யாராவது ஒருவர் திடீரென சும்மா மேலே பார்த்தால்கூட மற்றவர்களுக்கும் மேலே பார்க்கத் தோன்றுமே அப்படிப்பட்டதுதான். ஆகவே நானும்…

நடந்து முடிந்த சென்னை புத்தகக் காட்சியின் உள்ளேயும் வெளியேயும் நான் (காசு கொடுத்து)  வாங்கிய புத்தகங்களின் பட்டியல்.

* அங்க இப்ப என்ன நேரம் – அ. முத்துலிங்கம் – தமிழினி
* சதுரங்கக் குதிரை – நாஞ்சில் நாடன் – விஜயா பதிப்பகம்
* Istanbul – Memories of a city – Orhan Pamuk – faber and faber
* ஸ்ரீதர் ஜோக்ஸ் – விகடன்
* மதன் ஜோக்ஸ் பாகம் 3 – விகடன்
* தமிழ் இலக்கிய வரலாறு – மு.வரதராசன் – சாகித்திய அகாதெமி
* களம் பல கண்ட ஹைதர் அலி – ஜெகாதா
* ஜூலியஸ் சீஸர், அந்தோணியும் கிளியோபட்ராவும், ரோமியோவும் ஜூலியட்டும் – ஏ.ஜி.எஸ்.  மணி – புத்தக உலகம் (மூன்றும் குறுவெளியீடுகள்)
* செட்டிநாட்டு வட்டார வழக்குச் சொல்லகராதி – பழநியப்பா சுப்பிரமணியன் – தமிழினி
* நாஞ்சில் வட்டார வழக்குச் சொல்லகராதி – அ.கா. பெருமாள் – யுனைடெட் ரைட்டர்ஸ்
* நெல்லை வட்டார வழக்குச் சொல்லகராதி – கவிஞர் ப. முருகையா – அமுதா பதிப்பகம்
* கடலோடி – நரசய்யா – அலர்மேல்மங்கை
* Private life of the mughals of india – R. Nath
* Malgudi days – RK Narayan
* மாணவச் செல்வங்களுக்கு போப்பாண்டவர் – கவியழகன் – சோமு புத்தக நிலையம்
* India since independence – Publication Division
* விடுதலைப்புலி திப்புசுல்தான் – டாக்டர் வெ. ஜீவானந்தம் – பாரதி புத்தகாலயம்
* புதுச்சேரி தந்த நாட்குறிப்புகள் – ஓர் அறிமுகம் – பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன் – பாரதி  புத்தகாலயம்
* என்ன செய்கிறேன் கண்டுபிடி – நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா
* என்ன மிருகம் சொல் – நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா
* உலகம் மாற்றிய புதுப் புனைவுகள் – நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா
* குழந்தை மொழியும் ஆசிரியரும் – ஒரு கையேடு – நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா
* நமது பூமி – நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா
* விடுதலைப் போராட்டகாலப் பாடல்கள் – தொகுப்பு : அறந்தை நாராயணன் – நேஷனல் புக்  டிரஸ்ட், இந்தியா

(பின்குறிப்பு : சென்னை புத்தகக் காட்சியில் முகிலுக்கு நான் வாங்கிக் கொடுத்த புத்தகங்கள்  என்று யாராவது பட்டியலிட்டால் நம்பாதீர்கள். அது பொய்.)

வில்லு லொள்ளு!

வில்லு இன்று ரிலீஸ். பொதுவாக எனக்கு விஜய்-ன் சமீபகால மசாலா படங்களில் விருப்பமில்லை. ஆதி என்றொரு படத்தை கல்கியில் விமரிசனம் எழுதுவதற்காக பார்த்தேன். அதற்குபின் விஜய் படங்களோடு உறவை முறித்துக்கொண்டேன். கெட்-அப் மாற்றக்கூட தயங்கும் விஜய், மாறாத ஒரே கமர்ஷியல் ஃபார்முலா, காது ஜவ்வைக் கிழிக்கும் தமிழ்க்கொலை பாடல்கள் – இளைய தளபதி என்னைப் பொருத்தவரையில் என்றும் தளபதியாக மட்டும்தான் இருப்பார்போல.

சரி. இனி கற்பனை. (நிஜமாகக்கூட நடந்திருக்கலாம்.) விஜய் படம் ஒன்றின் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு எப்படி ஸீன் டிஸ்கஷன் நடந்திருக்கும்? பார்க்கலாமா.

(‘மது, புகை வீட்டுக்கு நாட்டுக்கு உயிருக்கு கேடு’ என்ற வாசகத்தை தேவைப்படும் இடங்களில் உபயோகித்துக் கொள்ளவும்.)

கொத்துப் பரோட்டா டைரக்டர் பிரபுதேவா (அ) பேரரசு, அக்மார்க் மசாலா ஹீரோ விஜய், ஸ்டண்ட் மாஸ்டர் பவர் பங்காரு, தயாரிப்பாளர் சேட் லாலாஜி – இவங்க எல்லாம் சேர்ந்து.. என்ன சமூக சேவையாப் பண்ணப் போறாங்க. ஐந்து நட்சத்திர ஹோட்டல்ல ரூம் போட்டு உட்காந்து ‘ஸ்டண்ட் ஸீன்’ டிஸ்கஷன் பண்ணுறாங்க. தெலுங்குப் படத்தோட தமிழ் ரீமேக். படத்தோட பேரு (பெத்த பேரு) ‘காரியாப்பட்டி’ (தெலுங்குல ‘பிரேம கொடுக்கு’). நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீந்துவதுவேன்னு சகல ஜீவராசிகளும் ஆந்திராக் காரத்தோட, மசாலா பூசிக்கிட்டு படுத்துக்கிடக்க, ஆல்கஹால், நிக்கோடின் ‘கப்’போட ஸ்டண்ட டிஸ்கஷன்ல பரபரன்னு பொறி பறக்குது. அப்படியே அந்த ‘மூடு’க்கு வந்துட்டீங்களா.. போலாம் ரை ரைட்!

இயக்குநர் : இது க்ளைமாக்ஸ் பைட்டு.
ஸ்டண்ட் : ஆங்.. அது எப்ப வரும்?
இயக்குநர் : இண்டர்வெல் முடிஞ்சதும் ஆரம்பிக்குது. க்ளைமாக்ஸ் வரைக்கும் விடாம உதைக்கிறோம். ஸ்கீரின்ல அப்படியே ரத்தவாடை அடிக்கணும். படம் முடிஞ்சு வெளிய போற ஒவ்வொருத்தணும் உடம்புல மாவுக்கட்டோடத்தான் வீட்டுக்கே போகணும்.
ஸ்டண்ட் : அத்த நம்ம கைல வுடு கண்ணு. புச்சா நெறைய மேட்டர் திங்க் பண்ணி வச்சிக்கீறேன். ஒவ்வொன்னத்தயும் எட்த்து வுட்டேன் வெச்சுக்கோ, ரசிகனுங்க பீஸ் பீஸ் ஆயிடுவானுங்க. நம்ம ஹீரோக்கு மாஸ் மாஸ் பிச்சுக்கும். ஆஹ்ஹாங்!
விஜய் : இல்லீங்ணா, என்னோட மார்க்கெட் போன படத்துல குத்தாட்டம் போட்டு குப்புறப்படுத்துக்கிச்சு. என்னோட ஆக்ஷன் பருப்பு சுத்தமா வேகல. இந்தப் படத்துலயும் பல்லிளிச்சிது வெச்சுக்கோங்க, நானும் ‘குடிச்சுக்கோ முழிச்சுக்கோ’னு காபித்தூள் வெளம்பரத்துக்கு மூஞ்சைக் காட்ட போக வேண்டியதுதான்.
லாலாஜி : ஹீரோ ஸாப், கவலயை வுடுறான். நிம்பள் இந்த பட்துக்கு துட்டை தண்ணியா இறைக்கிறான். டைரக்டர் ஸாப், பட்த்துல பைட்டை பகோத் அச்சா பண்ணுறான்.
இயக்குநர் : ஸீனைச் சொல்லுறேன் கேளுங்க. ஹீரோயினைக் கடத்திட்டு வில்லன் நூறு அடியாட்களோட  பத்து கார்கள்ல 120 கிலோமீட்டர் ஸ்பீடுல போறான்.
ஸ்டண்ட் : இன்னாபா நீ ஸீன் சொல்ற. நான் சொல்றேன் கேட்டுக்கோ. ஹீரோயினை வலிச்சிக்கினு வில்லங்காரன், ஒரு ஆயிரம் அடியாட்களோட, நூறு குவாலிஸ், சுமோவுல, 200 கிலோ மீட்டர் வேகத்துல போறான்.
விஜய் : அப்படிப் போடுங்ணா அருவாளை! இங்க நான் என்ன பண்ணனும்? பரபரன்னு ஆக்ஷன் துள்ளுற மாதிரி அள்ளிவிடுங்கண்ணா.
இயக்குநர் : இதைக் கேள்விப்பட்ட நீங்க, சரசரன்னு உங்க அக்காப் பொண்ணு நடை பழகுற வண்டியில ஏறி வேகமாத் தொரத்த ஆரம்பிக்கிறீங்க.
விஜய் : நடை பழகுற வண்டில்லாம், ரொம்ப லோ பட்ஜெட்டா இருக்கே?
லாலாஜி  : நீங்க கவலே படாதீங்கஜி. நாமே படா காஸ்ட்லியா மூணு சக்ர சைகிள் வெச்சுக்கலாம்.
ஸ்டண்ட் : சூப்பரப்பு. அப்டியே நீங்க மூணு சக்கர சைக்கிள்ல ஏறி ஒக்காந்துக்கினு, 300 கி.மீ. ஸ்பீடுல வில்லன் குரூப்பை சேஸ் பண்ணுறீங்க.
விஜய் : மூணு சக்கர சைக்கிள்ல ஸேஸிங். ஐடியா நியூவா, ப்ரெஷ்ஷா இருக்கு. மேல பில்ட் அப் பண்ணுங்ண்ணா.
இயக்குநர் : ஸேஸ் பண்ணிட்டுப் போறப்பவே, சைட்ல வில்லன் குரூப் ஆஃப் கம்பெனி கார்களையெல்லாம், அப்படியே காலால லேசா எட்டி உதைக்கிறீங்க. ஒவ்வொரு காரும் உயர உயரப் பறந்து நானூறு அடி தள்ளிப் போய் தள்ளாடி விழுது.
ஸ்டண்ட் : பின்னலா இருக்கு. இதுலயும் இன்னும் கொஞ்சம் பில்ட் அப் பண்ணி, சைக்கிள்ல வேகமாப் போற நீங்க, வில்லனோட கார் முன்னால போய் ஸ்டைலா பதினெட்டு போட்டு நிறுத்துறீங்க. வில்லன் கார் டிரைவர் வேகமா சடன் பிரேக் போட, பின்னால வர்ற அத்தனை வண்டியும் ஒண்ணுக்கு மேல் ஒண்ணு முட்டி ஏறி எல்.ஐ.சி. பில்டிங் ஹைட்டுக்கு நட்டுக்கிட்டு நிக்குது.
லாலாஜி : (‘ஜெர்க்’காகி மனத்துக்குள்) என்னாது, எல்.ஐ.சி. ஹைட்க்கு பில்ட் அப் பண்றான். நம்மள் துட்டை கிட்நாப் பண்ணப் பாக்குறான். அரே பாப்ரே!
விஜய் : இந்த இடத்துல என்னைப் பாத்து நடுநடுங்கி வில்லன் கோஷ்டியே பின்னங்கால் உச்சந்தலையில உரச உரச ஓடணும்ணா. அப்படியொரு டுவிஸ்ட்டைச் சொல்லுங்க.
இயக்குநர் : அவ்ளோதானே. இந்தா வைச்சுக்கோங்க. பக்கத்துல இருக்குற பனை மரத்தைப் புடுங்கி 360 டிகிரிக்கு சுழட்டோ சுழட்டுன்னு சுழட்டுறீங்க. அந்து நொந்து போற வில்லன் ஹீரோயினை இழுத்துக்கிட்டு பக்கத்துல இருக்குற வயக்காட்டுல இறங்கி ஓட ஆரம்பிக்கிறான். விடாம நீங்களும் மூணு சக்கர சைக்கிள்லயே மானாவாரியாத் துரத்துறீங்க.
ஸ்டண்ட் : அப்பாலிக்கா நடக்குறதை நாஞ் சொல்லுறேன் கேட்டுக்கோ சார். அப்டிக்கா ஓடி பக்கத்துல இருக்குற ரயில்வே ஸ்டேஷன்ல பூந்துடுறான். அப்போ டிரெயின் கரீக்டா வருது. இன்ஜின் டிரைவரை க்ளோஸ் பண்ணிக்கினு, வில்லன் தன் கூட்டாளிங்களோடயும் ஹீரோயினோடயும் டிரெயினை ஓட்ட ஆரம்பிக்கிறான்.
இயக்குநர் : அப்ப நீங்க சைக்கிளை உதறிட்டு, டிரெயினைத் துரத்த ஆரம்பிக்கிறீங்க. வேகமா ஒத்தைத் தண்டவாளம் மேல ஸ்லிப் ஆகாம உங்க ஷூவால ஸ்கேட்டிங் போற மாதிரி சறுக்கிட்டே போறீங்க.
விஜய் : நம்மளோட போன படத்துல வில்லன் ஆட்கள் துப்பாக்கியால சுடறப்போ, எங் கையால குண்டுகளைக் கேட்ச் பிடிக்கற மாதிரி பண்ணுனேன். இந்தப் படத்துல அந்த ஸீனை தூக்கிச் சாப்பிடுற மாதிரி ஏதாவது சொல்லுங்ண்ணா.
ஸ்டண்ட் : ஓடுற டிரெயின்ல இர்ந்து வில்லன் ஆள்கள் டுமீல் டுமீல்னு சுடுறாங்க. நீங்க அசால்ட்டா துப்பாக்கி குண்டுகளை கேட்ச் புடிக்கிறீங்க. அதை அப்படியே உங்க உள்ளங்கையில வெச்சு வில்லன் ஆட்களைப் பாத்து ஊதி விடுறீங்க. அது துப்பாக்கில இருந்து வெளிய போறதோட படா ஸ்பீடாப் போயி அவங்களைத் தாக்கி அழிக்குது. எப்படி?
விஜய் : அரிக்குதுங்ண்ணா! இத நம்ம ரசிகனுங்க தியேட்டர்ல பாக்குறப்போ அப்படியே ஆனந்தக் கண்ணீர் வுட்டு கதறுவாங்கண்ணா.
லாலாஜி : (மனதுக்குள் நொந்தபடி) நிம்பள் வட்டி மேலே வட்டி போட்டு குட்டி போட்ட துட்டை, இவங்கோ குண்டு போட்டே அழிச்சுடுவாங்கோ. ஹே பஹ்வான்!
விஜய் : இதுக்கு மேலே மசாலாத்தனமா ஒண்ணும் பண்ண முடியாதுங்கண்ணா. உச்சத்துக்குப் போயிட்டீங்க.
இயக்குநர் : யாரு சொன்னா? இப்பத்தான் மசாலா அரைக்கவே ஆரம்பிச்சிருக்கோம். இன்னும் இருக்கு பாருங்க.
விஜய் : அசத்துறீங்கண்ணா. மேல மீட்டரைப் போடுங்க.
இயக்குநர் : இதே நேரத்துல இன்னொரு வில்லன் பக்கத்து ஊருல இருந்து உங்க அம்மாவையும் தங்கச்சியையும் கடத்திட்டு வாரான். அவனும் அந்த ஊரு ரயில்வே ஸ்டேஷனுக்கு வர்ற இன்னொரு டிரெயினைக் கடத்திட்டு உங்களுக்கு எதிர்த்தாப்ல வேகமா வர்றான்.
ஸ்டண்ட் : ஸேஸிங் ‘செம ஸீனா’ப் போவுது நைனா. இப்பவே என் கையி காலெல்லாம் ச்சும்மா ஜிவ்வுங்குது. ஸ்பாட்டுக்கு எப்ப போலாம்னு மண்டைக்குள்ள பட்சி படபடக்குது.
விஜய் : மேல என்ன ஆவும்? டாப் கியர்ல சொல்லுங்கண்ணா!
லாலாஜி : (டென்ஷனில் வியர்வை வழிய வழிய மனதுக்குள்) இதுக்கு மேலே என்னே ஆவும். ஒண்ணுக்கு ரெண்டு டிரெயினா செலவு பண்ணி, நம்பள் கஜானா காலி ஆவும்.
இயக்குநர் : விஜய் சார், நீங்க உங்க லவ்வர் இருக்குற டிரெயினை நிறுத்த முயற்சி பண்ணுறீங்க. அதுக்கு டிரெயின் பின்னாலயே ஸ்கேட்டிங் போற நீங்க, உங்ககிட்ட இருக்குற பம்பரம் விடுற கயிறை யூஸ் பண்ணுறீங்க.
விஜய் : அது எப்டிங்கண்ணா?
ஸ்டண்ட் : வில்லுக்கு ஃபுல்லும் ஆயுதம்!
இயக்குநர் : அதான் மேட்டரு. பம்பரம் விடுற கயிறை யூஸ் பண்ணி டிரெயினை இழுத்துப் பிடிச்சுக் கட்டி நிறுத்துறீங்க.
விஜய் : சூப்பருங்கோ!
லாலாஜி : (கிட்டத்தட்ட அழுதபடி மௌனமாக) நம்பள் மோசம் போயிட்டான், நம்பள் மோசம் போயிட்டான்.
இயக்குநர் : அதே நேரத்துல இன்னொரு வில்லன் டிரெயின், அதான் உங்க அம்மா, தங்கச்சி வர்ற டிரெயின் கொஞ்சம் தள்ளி வேகமா இதே தண்டவாளத்துல தடக்கு தடக்குன்னு வருது. உடனே நீங்க வேகமா அந்த டிரெயினை நோக்கி ஓடுறீங்க. தடக் தடக் தடக் தடக்.. படக் படக் படக் படக்.. படம் பாக்குறவன் எல்லாவனுக்கு பிபி எகிறணும். வேகமா வர்ற டிரெயின் ஓட்டுற வில்லன், பிரேக் பிடிக்கத் தெரியாம தொபீர்னு குதிச்சுடுறான். உங்க அம்மாவுக்கும் பிரேக் போடத் தெரியாது. ரெண்டு டிரெயினும் மோதப் போற அந்த மில்லி செகண்ட். நீங்க ரெண்டு டிரெயின்களுக்கும்  இடையில போயி ரெண்டையும் மோத விடாம உங்க கைகளால தடுத்து நிறுத்துறீங்க.
ஸ்டண்ட் : டாப்போ டாப்பு! ஆக்ஷன் ஆப்பு!
விஜய் : இந்த ஒரு ஸீனுக்கே படம் இருநூறு நாள் ஓடுங்ணா!
லாலாஜி : (வியர்த்து விறுவிறுத்து) ஹே… ராம்ம்ம்! (மயக்கமாகிறார்.)

மறுமாத்தம் தெரியுமா?

ஆயிரம் வேலை நெருக்கடிகள் இருந்தாலும், சென்னை புத்தகக் காட்சி ஜெகஜ்ஜோதியாக நடந் துகொண்டிருந்தாலும் பொங்கலுக்கு தூத்துக்குடிக்கு ஓடிவிடுவேன். இழக்க விரும்பாத பண்டிகை  அது. தீபாவளி, பொங்கல் அன்று தூத்துக்குடியில் சொந்தவீட்டில் இருந்தால்தான் எனக்குச் சந்தோஷம்.

விடிந்துகொண்டிருக்கும் வேளையில் வீட்டுவாசலில் பனைஓலை மணத்துடன் அம்மாவோடு ÷ சர்ந்து பொங்கல் விடும் அனுபவம், சுகம். 2006ல் மட்டும் பாரா என்னைக் கொஞ்சம் மிரட்டி  வைத்திருந்தார். ‘பொங்கலுக்கா? ஊருக்கா? அதெல்லாம் கூடாது. புக் ஃபேர்லதான் இருக்கணும்.’  அப்போது மிகுந்த மனவருத்தத்தோடு ரயில் ஏறச் செல்லவில்லை. டிக்கெட்டை கேன்சல்கூடச்  செய்யவில்லை. பின்பு என்ன நினைத்தாரோ தெரியவில்லை. ‘போய்ட்டு வா’ என்றார். அடித்துப் பிடித்து கோயம்பேடுக்கு ஓடினேன். பகீரதப் பிரயத்தனங்களுக்குப் பின் பஸ் ஒன்றில் ஏறி சுமார்  பதினாறு மணி நேரங்கள் பயணம் செய்து தூத்துக்குடியை அடைந்தேன். வீட்டு வாசலில் பானை  பொங்கிக்கொண்டிருந்தது. ‘பொங்கலோ பொங்கல்!’

சென்னையில் எங்கள் குடியிருப்பில் பொங்கல் எப்படிக் கொண்டாடுவார்கள் என்று தெரிய வில்லை. இனியும் தெரிந்துகொள்ள விருப்பமில்லை. ஊரில் எங்கள் வீட்டில் இரண்டு பானையில்  பொங்கல் வைப்பார்கள். ஒன்றில் சர்க்கரைப் பொங்கல். இன்னொன்றில் சம்பா பச்சரிசி சாதம். கா ய்கறிகள், கிழங்கு வகைகள் நிறைந்த அம்மாவின் அவியல் ஸ்பெஷல். அப்புறம் குண்டா நிறைய  சாம்பார். என் உயரத்தில் பாதி இருக்கும் இலையில் மதிய உணவு சாப்பிட்டுவிட்டு எழுந்து  கைகழுவகூட முடியாது. எனக்கே தொப்பை தெரியும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

சாயங்காலம் பனங்கிழங்கு வேகும் வாசம் அடிக்கும். கூடவே இன்னொரு அடுப்பில் புளிக்குழம்பு  கொதிக்கும். பின் ஒரு பெரிய வாணலியில் அவியல், பச்சடி, புளிக்குழம்பு எல்லாம் கொட்டிக்  கிளறப்படும். கொதித்து வற்றி கெட்டியாகும் கலவைக்குப் பொதுவான பெயர் பழையகறி. எங்கள்  ஊரில் சொல்லப்படும் பெயர் – மறுமாத்தம். (உச்சரிக்கப்படுவது இப்படித்தான். நிஜ ஸ்பெல்லிங்  தெரியவில்லை. மறுமாற்றமாக இருக்குமோ?)

என் அம்மா செய்யும் மறுமார்த்தத்துக்கு நிகர் எனக்கு ஏதுமில்லை. மாட்டுப் பொங்கல் அன்று,  தண்ணீர் விட்டு வைத்த சம்பா பச்சரிசி சாதத்தில் மறுமாத்தத்தைப் போட்டு பிசைந்து சாப்பிட்டால்..  ஆஹா!

மாட்டுப்பொங்கல் தினத்துக்கு தென்தமிழ்நாட்டில் வழங்கப்படும் சிறப்புப்பெயர் – கருநாள் (அ)  கரிநாள். அன்று குடும்பத்தோடு சிற்றுலா செல்வார்கள். பழைய சோற்றையும் பழைய கரியையும்  பாத்திரங்களில் எடுத்துக்கொண்டு சென்று சாப்பிட்டு வருவார்கள். தூத்துக்குடியிலும் அதனைச்  சுற்றிலும் உள்ள சில பிரசித்திபெற்ற பகுதிகள் – முயல்தீவு, பாஞ்சாலக்குறிச்சி, அய்யனார் சுணை,  ரோச் பூங்கா, தண்ணீர் தாங்கி, திருச்செந்தூர். பலர் வேன், கார்களை அமர்த்திக் கொண்டு  பத்மநாபபுரம் அரண்மனை, கன்னியாகுமரி, பாபநாசம் அணை, மணிமுத்தாறு, குற்றாலம்,
கொற்கை பகுதிகளுக்கும் செல்வார்கள்.

சிறுவயதில் பொங்கலன்றே நானும் அக்காவும் அப்பாவை நச்சரிக்க ஆரம்பித்துவிடுவோம். ‘அப்பா, இந்த கருநாளைக்கு எங்க போகலாம்?’ சில சமயங்களில் அப்பா அசைந்துகொடுப்பதில்லை.  சில வருடங்கள் மேற்கூறிய பகுதிகளுக்குச் சென்றிருக்கிறோம். இப்போதெல்லாம் அப்பா  என்னிடம் ஆர்வமாகக் கேட்கிறார்கள் – ‘கருநாளைக்கு எங்க போகலாம்?’

என்னால்தான் இயலவில்லை. காரணம் அன்று மாலை சென்னைக்கு ரயில் ஏறிவிடும்  காரணத்தினால்.

(வெள்ளியன்று புத்தகக்காட்சியில் சந்திக்கலாம். அனைவருக்கும் எனது இனிய தமிழர் திருநாள்  வாழ்த்துகள்.)

ஒரு லிட்டர் காபியின் விலை ரூ.100

88.89

திருமங்கலத்தில் பதிவான வாக்கு சதவீதம் பற்றி சொல்லவில்லை. இரண்டாவது நாளின் இறுதியில் சென்னை புத்தகக் காட்சியின் ஏற்பாடுகள் அத்தனை சதவீதம் முடிந்திருக்கின்றன. இன்னமும் தச்சர்கள் ரம்பாவோடு (ரம்பத்தோடு என்றும் சொல்லலாம்) திரிந்துகொண்டிருக்கிறார்கள்.

மணிகண்டன் மரியாதையாக இங்கே வரவும். எலெக்ட்ரீசியன் யாராவது எகிறிக்குதித்துவரவும். எழுத்தாளர் இன்பராஜா பப்பாசி அலுவலகத்துக்கு அலுத்துக்கொள்ளாமல் வரவும். ஒலிபெருக்கியில் கூவிக்கொண்டே இருக்கிறார்கள் – இடைவிடாமல். ‘முகிலைக் காணவில்லை’ என்று நானே நேரடியாகச் சென்று அறிவிப்பு கொடுத்துப்பார்க்கலாம் என்று ஒரு யோசனை.

உருப்படியாகப் புத்தகங்களை அடுக்கி வைத்திருப்பவர்கள் – பாரதி புத்தகாலயம். உருப்படியில்லாத புத்தகங்களை அடுக்கி வைத்திருக்கும் பலரைப் பற்றி ஹிஹி.. நோ கமெண்ட்ஸ்.

நக்கீரன் ஸ்டாலில் நீயா நானா கோபியைச் சந்தித்தேன். சிரித்துக்கொண்டே இருந்தார், தனது கவிதைப் புத்தகம் ஒன்றின் அட்டையில். நண்பர்களின் தூண்டுதலால் இப்படி ஒரு புத்தகம் வெளியிட்டுள்ளதாக முன்னுரையில் அழுத்தமாகக் குறிப்பிட்டிருந்தார். வாசகர்களின் ஆசிர்வாதம் இருந்தால் அடுத்தடுத்த கவிதைத் தொகுப்புகளை வழங்குவேன் என்று அருள்வாக்கு சொல்லியிருந்தார். கிடைக்காமல் போகட்டும்.

இந்தமுறை அரங்குக்கு உள்ளேயே அம்சமான டீ (ரூ.5), அருமையான காபி (ரூ.7), அட போட வைக்கும் பஜ்ஜி, அழகழகான பழக்கலவை, அடிநாக்கில் இனிக்கும் பழச்சாறுகள் கிடைக்கின்றன. அரங்குக்கு வெளியே இருக்கும் கேண்டீனில் பாதியை மைசூர் பாகுக்காரர்கள் குத்தகைக்கு எடுத்திருக்கிறார்கள். 100மிலி அட்டு காபியின் விலை ரூ.10 என்றால் மற்ற பதார்த்தங்களின் விலைகளைக் கணக்கிட்டுக் கொள்ளவும்.

இந்த வருடம் வாங்க வேண்டிய புத்தகங்களை நோட்டமிட்டுக் கொண்டிருக்கிறேன். அடுத்த வார இறுதியில் வாங்க வேண்டும். என் அக்காவுக்கு சமையல் குறிப்பு புத்தகங்களில் ஆர்வம் அதிகம். கண்ணதாசனில் அய்யங்கார் சமையல் என்று ஒன்று (அரதப்பழசாக) கண்ணில்பட்டது. எடுத்து பில்போடச் சென்றேன். அருகில் இன்னொரு புத்தகத்தோடு இருந்த நபர், ‘அவரே எழுதியிருக்கிறாரா?’ என்று கேட்டார். ‘எவர்?’ என்று சமையல் புத்தகத்தின் அட்டையைப் பார்த்தேன், ‘எல். சுஜாதா’ என்றிருந்தது.

‘கூத்தடிக்க வேண்டாம்’ – எஸ்.எஸ். வாசன்

ஆனந்த விகடனில் வேலை பார்த்தவர்கள் சிலருக்கு ஒரு நாடகக் குழு ஆரம்பித்தால் என்ன என்ற ஓர் எண்ணம் தோன்றியது. ஆனந்த விகடன் ஃபைன் ஆர்ட்ஸ் கிளப் என்ற பெயரில் ஒரு  நாடகக் குழுவை ஆரம்பித்தார்கள். முதல் முயற்சியாக தேவன் எழுதிய மிஸ்.மைதிலியை அரங்கேற்றுவது என முடிவு செய்யப்பட்டது.

நாரதர் ஸ்ரீனிவாச ராவ்தான் நாடகத்தின் கதாநாயகன், எழுத்தாளர் எஸ்.வி.வி.யின் மகன் எஸ். வி. ரங்கா, விகடனில் சர்குலேஷன் இலாக்கா மேனேஜராக  பணியாற்றினார். அவருக்கு வில்லன் வேடம். கதை எழுதிய தேவனுக்கும் ஒரு கேரக்டர் கொடுக்கப்பட்டது. அவர்தான் கதாநாயகி  மிஸ். மைதிலியின் தந்தை.

விகடன் ஆர்ட் ஸ்டூடியோ இருந்த  பங்களாவின் மாடியில் உதய சங்கரின் கல்பனா படத்தின் நடன ஒத்திகை நடக்கும்  என்று சொன்னேன் அல்லவா? அவர் படப்பிடிப்பு முடிந்து புறப்பட்டுப் போய்விட்டதால்,  அந்த மாடி காலியாகத்தான் இருந்தது. அங்கேதான் எங்களுடைய நாடகத்தின் ஒத்திகை நடக்கும் எல்லோரும் தினமும் அலுவலக வேலை நேரம் முடிந்தவுடன் கரெக்ட்டாக ஒத்திகைக்கு ஆஜராகி விடுவார்கள். எங்களின்  தவறாத வருகைக்கு எங்களுடைய நடிப்பு ஆர்வம் மட்டுமே காரணமில்லை. தினமும் ரிகர்சலின் போது சுடச்சுட போண்டா சப்ளை ஆகும். அந்த போண்டாவும் சேர்த்துதான் எங்களை ஒத்திகைக்கு இழுத்தது.

நாடக அரங்கேற்ற தேதி நெருங்க நெருங்க எங்களுக்கு ஆர்வம் அதிகரித்தது. எல்லாரும்  ஈடுபாட்டுடன் நாடக அரங்கேற்றத்துக்காக உழைத்தோம். ஜெமினி, விகடன் அதிபரான வாசனைத்தான் அரங்கேற்றத்துக்கு தலைமை தாங்க அழைத்திருந்தோம். குடும்பத்துடன் வந்திருந்து நாடகத்தைப் பார்த்து  ரசித்து, எங்களை ஊக்கு விக்க  வேண்டும் என்று அவரைக்  கேட்டுக் கொண்டோம். சம்மதித்தார். அரங்கேற்ற நாள் வந்தது.

சென்னை மைலாப்பூர் ரசிக ரஞ்சனி சபாவில்தான் அரங்கேற்றம். குறித்த நேரத்தில் வாசன் தனது குடும்பத்தினருடன்  நிகழ்ச்சிக்கு வந்துவிட்டார். நாடகக் குழு ஆரம்பிக்க ஆர்வம் காட்டி, முன்னின்று ஏற்பாடுகளைச் செய்தவர்  விகடன் அக்கவுன்ட்ஸ் டிபார்ட்மென்ட்டில் இருந்த   வைத்யநாதன். நாடகம் ஆரம்பித்தது. நடிகர்கள் அனைவருக்கும் மேடை நடிப்பில் முன் அனுபவம் ஏதுமில்லை என்பதால் சிலர் வசனம் பேசத் தடுமாறினார்கள். சிலர் வசனங்களை ஒப்பிப்பதுபோலப் பேசினார்கள். இன்னும் சிலரது நடிப்பு மிகவும் செயற்கையாக இருந்தது. நாடகத்தைப் பார்த்த வாசன், மேடை ஏறி ஏதோ இரண்டொரு வார்த்தைகள் சம்பிரதாயமாகப் பேசிவிட்டுப் புறப்பட்டுப் போய்விட்டார்.

மறுநாள் அலுவலகத்துக்கு வந்தவுடன் நாடகக் குழுவினர் அனைவரையும் கூப்பிட்டு அனுப்பினார். நேற்று எங்கள் நாடக முயற்சியைப் பற்றி பப்ளிக்காக ரொம்ப பாராட்டாவிட்டாலும், இப்போது நாலு வார்த்தை பாராட்டிச் சொல்லப்போகிறார்  என்ன நினைப்போடு சென்றோம். அனைவரும் வாசன் முன்னால் நின்று கொண்டிருந்தோம்.  பேச ஆரம்பித்தார் வாசன்.

‘ஆனந்த விகடன் மக்களுக்குச் செய்து கொண்டிருக்க நகைச்சுவைத் தொண்டே போதுமானது. நீங்கள் இப்படி எல்லாம் நடித்து, மேடையில் நகைச்சுவை என்று கூத்தடிக்க வேண்டாம். இத்துடன்  நாடகம் போடுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்.’

****

விகடனில் எல்லாமுமாக நிறைந்து விளங்கியவர் கோபுலு.  சொல்லப்போனால் தமிழ் வாசகர்கள் பலர், ஹாஸ்யத்தை உணர்ந்துகொண்டதே கோபுலுவின் கார்ட்டூன்களில் இருந்துதான் என்றுசொல்லலாம்.

ஓவியத்தில் ஆர்வமுள்ள குறும்பான சிறுவன், கும்பகோணம் ஓவியக்கல்லூரியின் மாணவன், மாலியின் சீடர், ஜோக் காட்டூனிஸ்ட், பக்தி ரசம் சொட்டும் ஓவியர், அரசியல் கார்ட்டூனிஸ்ட், வாசனின் மனம் கவர்ந்தவர், அட்வர்டைசிங் ஆர்ட் டைரக்டர், அட்வேவ் நிறுவனர், மென்மையான மனிதர் – கோபுலுவின் வாழ்க்கையை இப்படி தசாவதாரமாகப் பிரிக்கலாம். ஒவ்வொரு அவதாரத்திலும் அவரது அனுபவங்கள் அனைத்தும் மறக்க முடியாத இனிமையான பதிவுகள். வரலாறு என்றுகூட சொல்லலாம்.

ஓவியர் கோபுலுவின் வாழ்க்கையை அவரது எழுத்திலேயே படிப்பதென்பது, ஓர் அருமையான கருப்பு-வெள்ளை திரைப்படத்தை நீண்ட நாள் கழித்துப் பார்க்கும் ஏகானுபவம்! 2009 சென்னை புத்தகக் கண்காட்சிக்கு கிழக்கு பதிப்பகம் கொண்டுவரும் மிக முக்கியமான பதிவு – எஸ். சந்திரமௌலி தொகுத்துள்ள ஓவியர் கோபுலுவின் கோடுகளால் ஒரு வாழ்க்கை!