ஒரு லிட்டர் காபியின் விலை ரூ.100

This entry was posted by Mugil on Saturday, 10 January, 2009 at

88.89

திருமங்கலத்தில் பதிவான வாக்கு சதவீதம் பற்றி சொல்லவில்லை. இரண்டாவது நாளின் இறுதியில் சென்னை புத்தகக் காட்சியின் ஏற்பாடுகள் அத்தனை சதவீதம் முடிந்திருக்கின்றன. இன்னமும் தச்சர்கள் ரம்பாவோடு (ரம்பத்தோடு என்றும் சொல்லலாம்) திரிந்துகொண்டிருக்கிறார்கள்.

மணிகண்டன் மரியாதையாக இங்கே வரவும். எலெக்ட்ரீசியன் யாராவது எகிறிக்குதித்துவரவும். எழுத்தாளர் இன்பராஜா பப்பாசி அலுவலகத்துக்கு அலுத்துக்கொள்ளாமல் வரவும். ஒலிபெருக்கியில் கூவிக்கொண்டே இருக்கிறார்கள் – இடைவிடாமல். ‘முகிலைக் காணவில்லை’ என்று நானே நேரடியாகச் சென்று அறிவிப்பு கொடுத்துப்பார்க்கலாம் என்று ஒரு யோசனை.

உருப்படியாகப் புத்தகங்களை அடுக்கி வைத்திருப்பவர்கள் – பாரதி புத்தகாலயம். உருப்படியில்லாத புத்தகங்களை அடுக்கி வைத்திருக்கும் பலரைப் பற்றி ஹிஹி.. நோ கமெண்ட்ஸ்.

நக்கீரன் ஸ்டாலில் நீயா நானா கோபியைச் சந்தித்தேன். சிரித்துக்கொண்டே இருந்தார், தனது கவிதைப் புத்தகம் ஒன்றின் அட்டையில். நண்பர்களின் தூண்டுதலால் இப்படி ஒரு புத்தகம் வெளியிட்டுள்ளதாக முன்னுரையில் அழுத்தமாகக் குறிப்பிட்டிருந்தார். வாசகர்களின் ஆசிர்வாதம் இருந்தால் அடுத்தடுத்த கவிதைத் தொகுப்புகளை வழங்குவேன் என்று அருள்வாக்கு சொல்லியிருந்தார். கிடைக்காமல் போகட்டும்.

இந்தமுறை அரங்குக்கு உள்ளேயே அம்சமான டீ (ரூ.5), அருமையான காபி (ரூ.7), அட போட வைக்கும் பஜ்ஜி, அழகழகான பழக்கலவை, அடிநாக்கில் இனிக்கும் பழச்சாறுகள் கிடைக்கின்றன. அரங்குக்கு வெளியே இருக்கும் கேண்டீனில் பாதியை மைசூர் பாகுக்காரர்கள் குத்தகைக்கு எடுத்திருக்கிறார்கள். 100மிலி அட்டு காபியின் விலை ரூ.10 என்றால் மற்ற பதார்த்தங்களின் விலைகளைக் கணக்கிட்டுக் கொள்ளவும்.

இந்த வருடம் வாங்க வேண்டிய புத்தகங்களை நோட்டமிட்டுக் கொண்டிருக்கிறேன். அடுத்த வார இறுதியில் வாங்க வேண்டும். என் அக்காவுக்கு சமையல் குறிப்பு புத்தகங்களில் ஆர்வம் அதிகம். கண்ணதாசனில் அய்யங்கார் சமையல் என்று ஒன்று (அரதப்பழசாக) கண்ணில்பட்டது. எடுத்து பில்போடச் சென்றேன். அருகில் இன்னொரு புத்தகத்தோடு இருந்த நபர், ‘அவரே எழுதியிருக்கிறாரா?’ என்று கேட்டார். ‘எவர்?’ என்று சமையல் புத்தகத்தின் அட்டையைப் பார்த்தேன், ‘எல். சுஜாதா’ என்றிருந்தது.

Trackbacks/Pingbacks

  1. சென்னை புத்தகக் கண்காட்சி 2009- ஜனவரி 8-18 வரை « …மற்றுமொரு துளையுள்ள பானை!

Leave a Reply