ஆயிரம் வேலை நெருக்கடிகள் இருந்தாலும், சென்னை புத்தகக் காட்சி ஜெகஜ்ஜோதியாக நடந் துகொண்டிருந்தாலும் பொங்கலுக்கு தூத்துக்குடிக்கு ஓடிவிடுவேன். இழக்க விரும்பாத பண்டிகை அது. தீபாவளி, பொங்கல் அன்று தூத்துக்குடியில் சொந்தவீட்டில் இருந்தால்தான் எனக்குச் சந்தோஷம்.
விடிந்துகொண்டிருக்கும் வேளையில் வீட்டுவாசலில் பனைஓலை மணத்துடன் அம்மாவோடு ÷ சர்ந்து பொங்கல் விடும் அனுபவம், சுகம். 2006ல் மட்டும் பாரா என்னைக் கொஞ்சம் மிரட்டி வைத்திருந்தார். ‘பொங்கலுக்கா? ஊருக்கா? அதெல்லாம் கூடாது. புக் ஃபேர்லதான் இருக்கணும்.’ அப்போது மிகுந்த மனவருத்தத்தோடு ரயில் ஏறச் செல்லவில்லை. டிக்கெட்டை கேன்சல்கூடச் செய்யவில்லை. பின்பு என்ன நினைத்தாரோ தெரியவில்லை. ‘போய்ட்டு வா’ என்றார். அடித்துப் பிடித்து கோயம்பேடுக்கு ஓடினேன். பகீரதப் பிரயத்தனங்களுக்குப் பின் பஸ் ஒன்றில் ஏறி சுமார் பதினாறு மணி நேரங்கள் பயணம் செய்து தூத்துக்குடியை அடைந்தேன். வீட்டு வாசலில் பானை பொங்கிக்கொண்டிருந்தது. ‘பொங்கலோ பொங்கல்!’
சென்னையில் எங்கள் குடியிருப்பில் பொங்கல் எப்படிக் கொண்டாடுவார்கள் என்று தெரிய வில்லை. இனியும் தெரிந்துகொள்ள விருப்பமில்லை. ஊரில் எங்கள் வீட்டில் இரண்டு பானையில் பொங்கல் வைப்பார்கள். ஒன்றில் சர்க்கரைப் பொங்கல். இன்னொன்றில் சம்பா பச்சரிசி சாதம். கா ய்கறிகள், கிழங்கு வகைகள் நிறைந்த அம்மாவின் அவியல் ஸ்பெஷல். அப்புறம் குண்டா நிறைய சாம்பார். என் உயரத்தில் பாதி இருக்கும் இலையில் மதிய உணவு சாப்பிட்டுவிட்டு எழுந்து கைகழுவகூட முடியாது. எனக்கே தொப்பை தெரியும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
சாயங்காலம் பனங்கிழங்கு வேகும் வாசம் அடிக்கும். கூடவே இன்னொரு அடுப்பில் புளிக்குழம்பு கொதிக்கும். பின் ஒரு பெரிய வாணலியில் அவியல், பச்சடி, புளிக்குழம்பு எல்லாம் கொட்டிக் கிளறப்படும். கொதித்து வற்றி கெட்டியாகும் கலவைக்குப் பொதுவான பெயர் பழையகறி. எங்கள் ஊரில் சொல்லப்படும் பெயர் – மறுமாத்தம். (உச்சரிக்கப்படுவது இப்படித்தான். நிஜ ஸ்பெல்லிங் தெரியவில்லை. மறுமாற்றமாக இருக்குமோ?)
என் அம்மா செய்யும் மறுமார்த்தத்துக்கு நிகர் எனக்கு ஏதுமில்லை. மாட்டுப் பொங்கல் அன்று, தண்ணீர் விட்டு வைத்த சம்பா பச்சரிசி சாதத்தில் மறுமாத்தத்தைப் போட்டு பிசைந்து சாப்பிட்டால்.. ஆஹா!
மாட்டுப்பொங்கல் தினத்துக்கு தென்தமிழ்நாட்டில் வழங்கப்படும் சிறப்புப்பெயர் – கருநாள் (அ) கரிநாள். அன்று குடும்பத்தோடு சிற்றுலா செல்வார்கள். பழைய சோற்றையும் பழைய கரியையும் பாத்திரங்களில் எடுத்துக்கொண்டு சென்று சாப்பிட்டு வருவார்கள். தூத்துக்குடியிலும் அதனைச் சுற்றிலும் உள்ள சில பிரசித்திபெற்ற பகுதிகள் – முயல்தீவு, பாஞ்சாலக்குறிச்சி, அய்யனார் சுணை, ரோச் பூங்கா, தண்ணீர் தாங்கி, திருச்செந்தூர். பலர் வேன், கார்களை அமர்த்திக் கொண்டு பத்மநாபபுரம் அரண்மனை, கன்னியாகுமரி, பாபநாசம் அணை, மணிமுத்தாறு, குற்றாலம்,
கொற்கை பகுதிகளுக்கும் செல்வார்கள்.
சிறுவயதில் பொங்கலன்றே நானும் அக்காவும் அப்பாவை நச்சரிக்க ஆரம்பித்துவிடுவோம். ‘அப்பா, இந்த கருநாளைக்கு எங்க போகலாம்?’ சில சமயங்களில் அப்பா அசைந்துகொடுப்பதில்லை. சில வருடங்கள் மேற்கூறிய பகுதிகளுக்குச் சென்றிருக்கிறோம். இப்போதெல்லாம் அப்பா என்னிடம் ஆர்வமாகக் கேட்கிறார்கள் – ‘கருநாளைக்கு எங்க போகலாம்?’
என்னால்தான் இயலவில்லை. காரணம் அன்று மாலை சென்னைக்கு ரயில் ஏறிவிடும் காரணத்தினால்.
(வெள்ளியன்று புத்தகக்காட்சியில் சந்திக்கலாம். அனைவருக்கும் எனது இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள்.)