சென்னை புத்தகக் காட்சி 2012 – சில அனுபவங்கள்

ஜனவரி 06, 2012 வெள்ளிக்கிழமை

* தானே புயலால் எந்தவிதத்திலும் பாதிக்கப்படாத புத்தகக் கண்காட்சி நேற்று (ஜன. 5, வியாழன்) இனிதே ஆரம்பித்தது. ஆரம்பித்து வைத்த சபாநாயகர் ஜெயக்குமார், சட்டசபையைவிட, நேற்றைய கூட்டத்தில் அதிக வார்த்தைகள் பேசியிருக்கிறார் என்பதை பத்திரிகைகள் மூலமாகத் தெரிந்துகொண்டேன்.

* வழக்கம்போல புத்தகக் காட்சிக்கு வெளிப் பக்கம் தரை சமதளமில்லை. பார்த்துத்தான் நடக்க வேண்டும். காட்சி அரங்கினுள் இந்தமுறை ஓரளவு கச்சிதமாக தரைவிரிப்புகள் அமைந்துள்ளன. கட்டுமானப் பணிகள் எல்லாம் நாளை வரை நடக்கும்போல. தற்போது வரை திறந்தவெளி புல்வெளிக் கழகம்தான்.

* கிழக்கு F7, F20 என்ற இரண்டு இடங்களில் அமைந்துள்ளது. உடையும் இந்தியா, கிழக்கு இந்திய கம்பெனி, பஞ்சம் பட்டினி படுகொலை கம்யூனிஸம், நல்ல கட்டமைப்புடன் கூடிய பொன்னியின் செல்வன், வலைவிரிக்கும் இந்துத்துவம், எக்ஸைல், ஓப்பன் சோர்ஸ், அறியப்படாத அண்ணா ஹசாரே என வேறு விதமான புத்தகங்களுடன் கிழக்கு களமிறங்கியுள்ளது. இவற்றில் சில புத்தகங்களில் இன்னும் ஓரிரு நாள்களில் விற்பனைக்கு வந்துவிடும்.

* சட்டென என்னைக் கவர்ந்தது – சில்ட்ரன் புக் டிரஸ்ட் வெளியிட்டுள்ள கெட்டி அட்டை ஆங்கிலக் கதைப் புத்தகங்கள். ரூ 50 லிருந்து ரூ. 150க்குள் நல்ல காகிதம், அழகான பைண்டிங்குடன் கதைப் புத்தகங்கள் பல தலைப்புகளில் கிடைக்கின்றன.

* விகடனில் இந்தமுறை பல புதிய தலைப்புகள் வெளிவந்துள்ளன. கலைஞரின் அரிய புகைப்படங்கள், ஜெயலலிதாவின் அரிய புகைப்படங்கள் அடங்கிய தனித்தனி புத்தகங்கள் வரவிருக்கின்றன. விலை ரூ. 150 இருக்கலாம். ஆர்ட் பேப்பரா என்று தெரியவில்லை. மருத்துவ நூல்கள் அதிகம் விற்பனையாவதாகச் சொன்னார்கள். எல்லாவற்றையும் தாண்டி, விகடனில் இந்த வருட டாப் புத்தகமாக கல்கியும் மணியமும் மீண்டும் கைகோர்த்துள்ள கெட்டி அட்டை பொன்னியின் செல்வன்தான் இருக்கப் போகிறது.

* ஸ்டால் எண் F10ல் ஓம் சக்தி புக் டிரேடர்ஸ் அமைந்துள்ளது. சென்ற வருட கண்காட்சியிலேயே செகண்ட் ஹேண்ட் ஆங்கிலப் புத்தகங்கள் மூலம் கலக்கியவர்கள் இவர்கள். ஐநூற்றுச் சொச்ச விலையில் காபி டேபிள் புத்தகங்கள் சிலவும், குண்டு என்சைக்ளோபீடியாக்கள் சிலவும் தற்போது விற்பனைக்கு இருக்கின்றன. முந்துங்கள்.

* மதி நிலையத்தில் குற்றியலுலகமாக பாரா தன் சைஸுக்குப் பொருந்தாத புத்தகத்துடன் ப்ளக்ஸில் சிரித்தார். கைக்கடக்கமான ட்விட்டர் தொகுப்பு. அதை நான் புரட்டிக் கொண்டிருந்தபோது, ஒரு வயதானவர் அதே புத்தகத்துடன் என்னருகில் வந்து ஒரு சந்தேகம் கேட்டார். ‘இதுல டைனோன்னு இருக்குதே. அப்படின்னா?’ – ‘டைனோன்னா ஒருத்தரோட பெயர்.’ – ‘ஓ… நான் டைனோஸரோன்னு குழம்பிட்டேன்’ – ‘சேச்சே, டைனோ ரொம்ப சாது. இந்த புத்தகத்தை எழுதியிருக்கிறவர்தான் ட்விட்டர்ல டைனோஸர்’ என்றேன் சிரித்தபடி. அவருக்கு என்ன புரிந்ததோ, என்னிடமிருந்து நகர்ந்து விட்டார்.

* இந்த முறை கேண்டீன் வழக்கத்தை விட பளபளப்பாக, தோட்டாதரணி செட்டுடன் இருக்கும்போதே மனத்தில் ஏதோ உறுத்தியது. நண்பர்கள் மருதனும் முத்துக்குமாரும் வேண்டாம் என்று சொன்னபோதும் கேட்காமல், அவர்களை இழுத்துக் கொண்டு உள்ளே நுழைந்துவிட்டேன். மெனு போர்டைப் பார்த்து மினி சமோசா என்றேன். 50 ரூபாய் கேட்டார்கள். ஒரு பிளேட் போதும் என்றேன். அதுதான் 50 ரூபாய் என்றார்கள். கொடுத்தேன். அதற்கான இடத்துக்குத் தேடிப் போய் கூப்பனை நீட்டினேன். பத்து மினி சமோசாவது தருவார்கள் என்பது என் எதிர்பார்ப்பு. எள்ளுருண்டை சைசில் நான்கே நான்கு மைக்ரோ சமோசாக்கள். கொஞ்சூண்டு சாஸ். அதுதான் ஐம்பது ரூபாயாம். சமோசாவுக்குள் பெருங்காயம் பேரரசு நடத்திக் கொண்டிருந்தது. சகிக்கவில்லை. காபி இருபது ரூபாயாம். தோசை எல்லாம் ரூபாய் ஐம்பதுக்கும் மேல்… ஏதோ சரஸ்வதி கேட்டரிங் சர்வீஸாம்… ஹரஹர சங்கர – ஜெய ஜெய சங்கர என பாடல் வேறு ஒலித்துக் கொண்டிருந்தது. என் பர்ஸுக்குள்ளிருந்து ‘அரோகரா அரோகரா’வென சத்தம் கேட்டது. தண்ணீர் மட்டும் இலவசமாகத் தருகிறார்கள் (இன்றைக்குத் தந்தார்கள்). கொடுத்த ஐம்பது ரூபாய்க்காக தினமும் அங்கே சென்று தண்ணீர் குடிக்கலாம் என்றிருக்கிறேன்.

லொள்ளு விருதுகள் 2011

 

mounaguru

 

mayakam enna
 

pulivesham
 

aaranyakandam
 
AZKuthirai
 
paranormal activity
 
mankatha
 
DTM
 
nadunisinai
 
sattapadi
 
vaagaiSva
 
KungFu Panda
 
vanthan vendran
 
MI4
 
kullanarik
 
the hangover
 
singampuli
 
tintin
 
osthe
 
yudham sei
 

சுற்றி நடக்கும் எல்லாவற்றையும் பல சமயங்களில் வேறு வழியில்லாமல் சகித்துக் கொண்டு வாழும் பொதுமக்களுக்கான விருது:

porali

யதார்த்த சனிப்பெயர்ச்சி பலன்கள்

* மத்திய அரசை அன்னா ஹசாரே போன்ற தனி நபர்கள் யாரும் கட்டுப்படுத்த முடியாது என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

* அரசு சமர்ப்பித்துள்ள லோக்பால் வரைவு மசோதாவை ஏற்க அன்னா குழவினர் மறுத்துள்ளனர். இதையடுத்து தனது அதிருப்தியை தெரிவிக்கும் வகையில் அன்னா ஹசாரே வரும் 27ம் தேதி முதல் 3 நாட்களுக்கு உண்ணாவிரதமும், அதையடுத்து வரும் 30ம் தேதி முதல் சிறை நிரப்பும் போராட்டமும் நடத்தவிருக்கிறார்.

* முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கை ஜனவரி 18ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த வழக்கில் சசிகலாவின் மேல்முறையீடு மனு மீதான விசாரணை ஜனவரி 12ம் தேதி நடைபெறுவதால் ஜெயலலிதாவின் வழக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

* சென்னையின் இன்றைய வானிலை

அதிகபட்சம்  34C – குறைந்தபட்சம் 27C – காற்றில் ஈரப்பதம் 12%

* சென்னையில் ஆபரண தங்கத்தின் இன்றைய விலை 22 கேரட் – ரூ. 2622.00 ஆக உள்ளது. 24 கேரட் – ரூ. 2804.00 ஆக உள்ளது. இன்று வெள்ளியின் விலை அதிகரித்துள்ளது. பார் வெள்ளியின் விலைகிலோவுக்கு ரூ. 51705ல் இருந்து ரூ. 52610 ஆக அதிகரித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.56.40 ஆக இருக்கிறது.

* எக்ஸேஞ்ச் ரேட் :

1 US Dollar     Rs. 52.87
1 GB Pound     Rs. 82.13
1 EUR Euro     Rs. 68.92
1 SG Dollar     Rs. 40.62

* பங்குச் சந்தை நிலவரம்

Sensex 15,440.13 uparrow 265.05(1.7%)

Nifty4,619.95 uparrow 75.75(1.7%)

Sintex Inds. 70.45 6.6
Jain Irrigation 81.15 6.6
Titan Inds. 165.90 6.3
ICICI Bank 692.00 6.1
Guj NRE Coke 15.95 6.0

ஐ சி ஐ சி ஐ வங்கி பங்குகளை இன்றைய தினமே வாங்கி இன்றே விற்று விடவும். ஸ்டாப் லாஸ் 672.25.

* சென்னை கோயம்பேட்டில் காய்கறி வரத்து அதிகரித்துள்ளதால், விலைகள் வெகுவாகக் குறைந்துள்ளன. தற்போதைய காய்கறி விலை நிலவரம்:

உருளைக்கிழங்கு ரூ. 13 (ரூ. 15), ஆந்திர வெங்காயம் ரூ. 10 (ரூ. 12), மகாராஷ்டிர வெங்காயம் ரூ. 15 (ரூ. 18), பீன்ஸ் ரூ. 15 (ரூ. 18), கேரட் ரூ. 22 (ரூ. 30), செளசெள ரூ. 8 (ரூ. 10), முட்டைக்கோஸ் ரூ. 8 (ரூ. 10), கத்தரிக்காய் ரூ. 6 முதல் ரூ. 8 வரை (ரூ. 12 முதல் 15 வரை), அவரைக்காய் ரூ. 20 (ரூ. 25), முள்ளங்கி ரூ. 8 (ரூ. 10), தக்காளி ரூ. 7 (ரூ. 10), பெங்களூர் தக்காளி ரூ. 8 (ரூ. 12), பாகற்காய் ரூ. 15 (ரூ. 18), காலிபிளவர் (ஒன்று) ரூ. 5 முதல் ரூ. 8 வரை (ரூ. 12 முதல் ரூ. 20 வரை), புடலங்காய் ரூ. 10 (ரூ. 12), மொச்சை ரூ. 25 முதல் 30 வரை, சின்ன வெங்காயம் ரூ. 25 (ரூ. 32).

லோடியின் கையாலாகாத்தனம்!

தூத்துக்குடி ரயில்வே ஸ்டேஷனில் இதற்கு முன்பு இத்தனை போலீஸை நான் பார்த்ததில்லை. ‘பயணிகள் தவிர யாருக்கும் உள்ளே அனுமதி கிடையாது’ என்ற அறிவிப்பு இரு நிமிடங்களுக்கு ஒருமுறை ஒலித்துக் கொண்டிருந்தது. யாருக்கும் பிளாட்பார டிக்கெட் வழங்கப்படவில்லை. பயணிகளின் மெகா பெட்டிகள் முதற்கொண்டு சாப்பாட்டுப் பொட்டலங்கள் வரை, ‘ மெட்டல் நாய்கள்’ மோப்பம் பிடித்துக் கொண்டிருந்தன.

வயதான பெண்மணி ஒருவர், இரண்டு கனமான பெட்டிகளை வைத்துக் கொண்டு தவித்துக் கொண்டிருந்தார். ரயிலேற்றி விட வந்த பெண்மணியின் டிரைவர் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. போர்ட்டர்களும் கண்களில் தென்படவில்லை.

‘எங்க தாத்தாவுக்கு பெட்டி நம்பரு, சீட் நம்பெரல்லாம் சரியா பாத்து ஏறத் தெரியாதுங்க … ஏத்தி விட்டுட்டு உடனே வந்துடுறேன்’ என ஒரு பேரன் போலீஸிடன் கெஞ்சிக் கொண்டிருந்தான்.

என் முதுகில் ஒரு பை; கைகளில் இரண்டு. முதல் பை சோதனையிடப்பட்டது. பீப் பீப் பீப்….

‘என்ன இருக்கு உள்ள?’ – மீசைக்கார போலீஸ் முறைத்தபடி கேட்டார்.

‘ஹேண்டி கேமரா…’

அடுத்தது முதுகுப்பை. மீண்டும் பீப் பீப் பீப்….

‘இதுல என்ன?’

‘லேப்-டாப் இருக்கு.’

மீண்டும் முறைப்பு. மூன்றாவது பை. பிரித்து மேய்ந்தார்.

‘இது என்னப்பா ஒரே வயரா இருக்குது?’

‘லேப்-டாப் சார்ஜர். அது கேமரா சார்ஜர்…’

‘ஏம்ப்பா ஒரே வயரா கொண்டு வந்து தாலியறுக்கிறீங்க… ரெண்டு நாளைக்கு யாரும் வயர் கியர்லாம் கொண்டு வராதீங்க. ரோதனையா இருக்குது. எடுத்துட்டுப் போங்க…’

என் மூன்று பைகளும் அள்ளிக் கொண்டு பிளாட்பாரத்தில் நடக்க ஆரம்பித்தேன். எனக்கான பெட்டி கட்டக்கடைசியில் இருந்ததால் நன்கு பழகிய முத்துநகர் எக்ஸ்பிரஸே முதன் முதலாக மிக பிரமாண்டமாகத் தெரிந்தது. எனக்கான  பெட்டியில் ஏறினேன். உள்ளே, பயணிகளின் எண்ணிக்கையைவிட போலீஸாரின் எண்ணிக்கை அதிகமாகத் தெரிந்தது. ரயில் கிளம்பியது. பொதுவாக மதுரையில்தான் பெட்டிகள் பயணிகளால் பூரணத்துவம் அடையும். அதுவரை பல இருக்கைகள் காலியாகத்தான் கிடக்கும்.

‘…வானத்து இந்திரரே  வாருங்கள் வாருங்கள்… பெண்ணுக்குள் என்ன இன்பம் கூறுங்கள் கூறுங்கள்…’  – நான் அமர்ந்திருந்த பெட்டிக்கு அருகிலிருந்து பாடல் சத்தமாக ஒலித்துக் கொண்டிருந்தது. ஒரு போலீஸ்கார இளைஞரின்  மொபைல் அது. கால் மேல் போட்டு படுத்தபடி ஏகாந்தமாக பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்தார். நரை மீசை போலீஸ் ஒருவர் கையில் சாப்பாட்டு பார்சலுடன் அங்கே வந்தார். ‘..இப்பவே தின்னுருவோம். சாத்தூர் தாண்டியாச்சுனா கூட்டம் குமிய ஆரம்பிச்சுரும்.’

பயணச்சீட்டு பரிசோதகர் வந்தார். ஒவ்வொருத்தர் பெயராக வாசித்து ‘அட்டெண்டெஸ்’ எடுத்தார். ‘உள்ளேன் ஐயா’ உச்சரித்தோம். எல்லோரிடமும் அடையாள அட்டை கேட்டு நிதானமாகப் பரிசோதனை செய்தார். ‘ஒரிஜினலா?’ என்ற துணைக் கேள்வியையும் கேட்கத் தவறவில்லை.  கொஞ்ச நேரத்தில்இன்னொரு அதிகாரி வந்தார். அவரும்  அடையாள அட்டையைப் பிடுங்கிப் பிடுங்கிப் பார்த்தார். இன்னும் கொஞ்ச நேரத்தில் முறுக்கு மீசை ரயில்வே போலீஸ் ஒருவர் வந்து சம்பந்தமில்லாமல் அடையாள அட்டை கேட்டார். ஒரு கயிறு கிடைத்திருந்தால் எனது PAN அட்டையை கழுத்தில் கட்டித் தொங்க விட்டிருப்பேன் (என் கழுத்தில்தான்).

சில பெட்டிகள் கடந்து சென்று இன்னொரு நண்பனைப் பார்த்துவிட்டு வந்தேன். எந்தப் பெட்டியிலுமே இஸ்லாமியர்கள் யாரும் தென்படவில்லை. ஒரு பெட்டியின் வாசலுக்கருகில் வட இந்திய இளைஞன் ஒருவனிடம் பரிசோதகர் கத்திக் கொண்டிருந்தார். ‘யுவர் டிக்கெட் ஈஸ் இன்வேலிட். இட் ஈஸ் ஈடிக்கெட். அண்ட் இட் ஈஸ் இன் வெயிட்டிங் லிஸ்ட் தேர்ட்டி ஃபைவ்…’

அந்த இளைஞன் என்னென்னமோ சொல்லிப் பார்த்தான். இன்னொரு போலீஸ்காரர் அங்கே வந்தார். பரிசோதகரிடம் இருந்து டிக்கெட்டை வாங்கி, இளைஞன் கையில் திணித்தார்.

‘நோ மோர் ஸ்பீச்… கெட் டவுன் கம்மிங்  ஸ்டேஷன்…’

இளைஞன் வாயடைத்துப் போனது அவரது மிரட்டலினாலா அல்லது ஆங்கிலத்தாலா என்பது எனக்குப் புரியவில்லை.

சாப்பிட்டு முடித்தேன். விருதுநகரில் நின்ற ரயில் புறப்பட்டது. ஓர் அம்மணி என் இருக்கைக்கு அருகிலுள்ள சைட் லோயரில் வந்து அமர்ந்தார். பரிசோதகர் வந்தார். அம்மணி டிக்கெட்டையும் தனது அடையாள அட்டையையும் அவசரமாக நீட்டினார்.

‘குணசீலன் யாரு?’

‘என் வீட்டுக்காரரு. அவரு வரலை.’

‘இது தட்கல் டிக்கெட். அவரு ஐடிதான் ரிசர்வ் பண்றப்ப கொடுத்திருக்காரு. அவரு வரலேன்னா இந்த டிக்கெட் செல்லாது.’

‘அவரால வர முடியல. நான் வந்திருக்கேன். என்கிட்ட ஐடி கார்ட் இருக்குது.’

‘என்னமா நீ புரியாம பேசற? அவருல்ல வரணும்’ – பரிசோதகரின் குரல் உயர்ந்தது.

‘அவரால வர முடியலீங்க. அதான் நான் வந்திருக்கேன்ல. டிக்கெட்ல எம்பேரு இருக்குல ‘ – அம்மணியின் குரலும் அதிர்ந்தது.

‘ரூல்ஸ்லாம் மாத்தியாச்சு. அவரு வந்தாத்தான் டிக்கெட்டு செல்லும்’

‘அதென்னங்க அநியாயம்? ஒருத்தர் வரமுடியேலேன்னா அதுக்கான காசையும் பிடுங்கிக்கீறீங்க. மத்தவங்களும் அந்த டிக்கெட்ல போவ முடியாதுன்னா என்ன அர்த்தம்?’

‘ரூல்ஸ் ரூல்ஸ்தான். நான் ஒண்ணும் பண்ண முடியாது’

வாக்குவாதம் தொடர்ந்தது.

*

சமீபத்தில் ரயில் தட்கல் டிக்கெட் முன்பதிவில் சில பொன்னான, அருமையான, மெச்சத்தகுந்த விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

* பயணத்துக்கு முந்தைய தினத்தில்தான் பதிவு செய்ய முடியும். (அன்றைக்கு ரயில் கிடைக்கவேண்டுமென்றால் நாம் பூர்வஜென்மத்தில் சில டன்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும் அல்லது உங்களுக்கு உச்சநடிகரின் மருமகன்போல அதிர்ஷ்டம் இருக்கவேண்டும் அல்லது குறைந்தபட்சம்  ஏழுமலையானுக்கு ஒரு மொட்டையாவது வேண்டிக் கொள்ள வேண்டும். தட்கலில்  டிக்கெட் கிடைக்காத பட்சத்தில் நாம் மீட்டர் வட்டிக்குக் கடன்வாங்கிக் கொண்டோ அல்லது சொந்த வீட்டை அடமானம் வைத்துவிட்டோ பேருந்து நிலையத்துக்கு ஓட வேண்டியதுதான். டிக்கெட் வாங்க வக்கிருக்க  வேண்டுமல்லவா!)

* தட்கலில் ஒரு டிக்கெட்டில் அதிகபட்சம் நான்கு பயணிகள் பயணம் செய்ய முடியும். (ஐந்தோ, ஆறோ நபர்கள் பயணம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படக்கூடாது. ஏற்பட்டால் ஐந்தாவது ஆறாவது நபரைக் கழட்டி விடுங்கள்; முடிந்தால் கொன்று விடுங்கள். அந்த ஐந்தாவது நபருக்கு தனி டிக்கெட் எடுத்துக் கொள்ளலாம் என்று நினைத்தீர்கள் என்றால் அந்த ஆணவமே உங்களை அழித்துவிடும்.)

* தட்கல் டிக்கெட் எடுக்கும்போது எந்தப் பயணியின் அடையாள அட்டையின் பிரதியை சமர்ப்பித்திருக்கிறோமோ அந்நபர் நிச்சயம் பயணம் செய்ய வேண்டும். அந்தப் பயணி வராதபட்சத்தில் அந்த டிக்கெட் செல்லாது. பிற பயணிகளும் அந்த டிக்கெட் மூலம் பயணம் செய்ய முடியாது. (ஆகவே முன்பதிவில் அடையாள அட்டை சமர்ப்பித்துள்ள பிரகஸ்பதி, ரயில் ஏறுவதற்கு முன் கோமாவில் விழுந்தாலோ, லாரியில் அடிபட்டுச் செத்தாலோகூட பிரச்னையில்லை. அடையாள அட்டையுடன் சேர்த்து அந்நபரையும் தூக்கிக் கொண்டு போய்விடுங்கள். அந்தப் பிரகஸ்பதி ரயில் ஏறுவதற்கு முன் காணாமல் போய்விட்டால்கூட எப்படியோ தேடிப் பிடித்து இழுத்துவந்துவிடுங்கள். இல்லையேல் உங்கள் டிக்கெட் செல்லாது. நீங்கள் அந்த ரயிலில் பயணம் செய்ய அருகதை அற்றவர். தேசத் துரோகி!)

*

வாக்குவாதம் ஒருவழியாக முடிவுக்கு வந்தது.

பரிசோதகர், சில நூறு ரூபாய் அபராதம் எழுதி, ரசீது நீட்டி, அம்மணியிடம் பணத்தை வாங்கிக் கொண்டு நகர்ந்தார். அம்மணி என்பதால் இந்தக் கரிசனம். ஒருவேளை வேறு ஆணாக இருந்திருந்தால் அடுத்த ரயில் நிலையத்தில் இறக்கிவிடப்பட்டிருக்கலாம்.

ரயில் மதுரையை அடைந்தது. பத்து நிமிடங்களாவது நிற்கும் என்பதால் பிளாட்பாரத்தில் இறங்கி நின்றேன். பக்கத்து பெட்டிக்கு உள்ளேயும் வெளியேயும் போலீஸாரும் ரயில்வே ஊழியர்களும் பரபரப்புடன் நின்று கொண்டிருந்தார்கள்.

‘எவனோ ஒருத்தன் டாய்லெட்குள்ள போய்ட்டு ரொம்ப நேரம் வெளிய வரலியாம்.’ ஒரு பயணி சொன்னார்.

‘வர்றப்பவே என்னத்தையாவது இழுத்துக்கிட்டு வாங்க… இருக்கற பிரஷர் போதாதுன்னு இது வேறயா!’ – ஒரு போலீஸ்காரர் அங்கலாய்த்தார்.

‘ரயிலைக் கிளப்பிற வேணாம். சொன்னதுக்கு அப்புறம் கெளப்புனா போதும்’ – ஒரு போலீஸ்காரர் சொல்ல,  ஊழியர் ஒருவர் ஓடினார்.

அந்த டாய்லெட்டின் கதவு தட்டு தட்டென்று தட்டப்பட்டது. திறக்கப்படவில்லை. நல்லவேளை, இடைப்பட்ட நேரத்தில் ‘ரயிலில் தீவிரவாதி பதுங்கல்’ என்ற ப்ளாஷ்நியூஸ் எந்த சேனலிலும் ஓடியிருக்காது என்று நம்புகிறேன்.

பெட்டிக்கு வெளியே இருந்த சன்னல் வழியாக, உள்ளே இருக்கும் நபரை நோட்டம் விட்டார்கள்.

‘ஏ.. போதைல கெடக்குறாம்பா… எழவு…’

‘ஒரு பெரிய கொம்பா எடுத்துட்டு வாப்பா’

‘இரும்புத் தடி ஏதாவது இருக்குமா?’

‘கதவை ரெண்டு தட்டு தட்டி, நெம்பித் தெறங்கப்பா..’

சில நிமிட போராட்டத்துக்குப் பிறகு கதவு திறக்கப்பட்டது. போதை ஆசாமியை இழுத்துக் கொண்டு வந்து வெளியே தள்ளினார்கள். ரயில் கிளம்புவதற்கான ஹார்ன் ஒலித்தது. ஏறினேன். போலீஸார் அவனது போதையைத் தெளிவிக்க மண்டகப்படியை ஆரம்பித்திருந்தனர்.

அதற்கு மேலும் கண் விழித்திருந்தால் உலகம் என்னைச் சந்தேகக் கண்கொண்டு பார்க்கும் என்பதால் எனக்கான அப்பர்-பெர்த்தில் ஏறி படுத்துக் கொண்டேன். தூக்கம் வரவில்லை. மணி பன்னிரண்டைத் தொட்டது. என் கைக்கடிகாரத்தில் தேதி மாறியது. டிசம்பர் 6.

சிறிது நேரத்தில் என்னையறியாமலேயே தூங்கிப் போனேன்.

திடீரென ஓர் உருவம் என் கண் முன் தோன்றியது. அந்நபரை எங்கேயோ, ஏதோ ஓவியத்தில் பார்த்தது போல இருந்தது. யாரென்று பிடிபடவில்லை. என் முன் வந்த அவர், குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தார். ‘யார் நீங்கள்?’ – கேட்டேன்.

‘என்னைத்தான் உனக்குத் தெரியுமே. உனது முகலாயர்கள் புத்தகத்தில்கூட எழுதியிருக்கிறாயே. டெல்லியின் கடைசி சுல்தான்…’

‘இப்ராஹிம் லோடியா நீங்கள்?’

‘ம்…

‘ஏன் அழுகிறீர்கள்?’

‘என்னை மன்னித்து விடு. நான் மட்டும் அன்றைக்கு பானிபட் போரில் தோற்றுப் போகாமல் இருந்திருந்தால், பாபர் உள்ளே வந்து கோலோச்சியிருக்க முடியாது. இந்தியாவில் முகலாயப் பேரரசே அமைந்திருக்காது. மசூதியும் கட்டியிருக்க மாட்டார்கள். டிசம்பர் ஆறுக்காக பலரும் அவதிப்படும் நிலை உருவாகியிருக்காது.’

லோடியின் அழுகை நிற்கவில்லை. அவருக்கு ஆறுதல் சொல்லலாம் என்று அருகில் சென்றேன்…

தாம்பரம் வந்துவிட்டதென நண்பன் எழுப்பினான்.

நாய்களின் தற்கொலை முனை!

இதை நீங்கள் படிக்க ஆரம்பிக்கும் நேரத்தில், அங்கே அந்தப் பாலத்தில் ஏதோ ஒரு நாய் தற்கொலை செய்துகொள்ளலாம். அதன் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டிக் கொண்டு மேற்கொண்டு தொடருங்கள்.
ஒரு நாய் எதற்காகத் தற்கொலை செய்துகொள்ள வேண்டும்?
தேர்வுத் தோல்வி, காதல் தோல்வி, பிஸினஸ் தோல்வி, தேர்தல் தோல்வி உள்ளிட்ட மனிதனுக்கான காரணங்கள் எதுவும் நாய்களுக்கு இருக்கப் போவதில்லை. தனது பாசத்துக்குரிய எஜமானரை இழந்து வாடும் சில நாய்கள், நாள்கணக்கில் எதுவும் உண்ணாமல் செத்துப் போன சம்பவங்கள் உண்டு. ஆனால் தற்கொலை எல்லாம் செய்துகொள்ளாது என்கிறீர்களா. எதையும் உறுதியாகச் சொல்வதற்குமுன் ஒருமுறை ஸ்காட்லாந்து வரை சென்று பார்த்துவிட்டு வந்துவிடுவோம். அதுவும் அங்கேயுள்ள மேற்கு டன்பர்ட்டன்ஷைர் நகரத்திலுள்ள ஓவர்டவுன் எஸ்டேட்டுக்கு. அதிலும் முக்கியமாக எஸ்டேட்டில் அமைந்துள்ள மர்மமான அந்தப் பாலத்துக்கு. வாருங்கள்.
ஓவர்டவுன் எஸ்டேட்டுக்கும், அதில் அமைந்திருக்கும் மேன்சனுக்கும், சுற்றியிருக்கும் அழகான தோட்டத்துக்கும் நூற்றாண்டு கால வரலாறு உண்டு. 1893ல் அந்த எஸ்டேட்டை வாங்கிய முதலாளியான லார்ட் ஓவர்டவுன், அதனை கிழக்கு, மேற்கு என பிரித்து விரிவுபடுத்தினார். இடைப்பட்ட பகுதியில் ஓர் அருவி விழுந்து நீரோடையாக ஓடியது. பாறைகளால் நிரம்பிய அந்தப் பகுதியில், நீரோடையைக் கடக்கும் விதமாக பாலம் ஒன்றையும் கட்டினார்.
கருங்கற்களாலும் கிரானைட்டாலும் உருவாக்கப்பட்ட இந்தப் பாலம் அதிக அகலமோ, பெரும் நீளமோ கிடையாது. சுமார் இரண்டடி உயர, தடிமனான கைப்பிடிச் சுவர். சுவரின் குறிப்பிட்ட இடைவெளிகளில் பாலத்திலிருந்து வெளியே நீட்டிக் கொண்டிருப்பதாக அரைவட்ட வளைவுகள். இருபக்கமும் சேர்த்து மொத்தம் எட்டு வளைவுகள். பாலத்தைக் கடந்தால் அந்தப் பக்கம் மேன்சன். ஒரு நாய் தன் பின்னங்கால்களைத் தரையில் ஊன்றி, முன்னங்கால்களை பாலத்தின் கட்டைச் சுவர் மேலே வைத்துக்கொண்டு, கீழே ஓடும் நீரோட்டத்தை ரசிக்கலாம். சுற்றியிருக்கும் இயற்கையில் திளைக்கலாம். அப்படியே பின்னங்கால்களால் உந்தித் தாவி, சுமார் 50 அடி பள்ளத்தில் குதித்து, பாறைகளில் மோதி தற்கொலையும் செய்து கொள்ளலாம்.
அப்படித்தான் குதித்து விட்டது பென், அக்டோபர் 2005ல். நீண்ட மூக்கும் புசுபுசு முடியும் கொண்ட இணிடூடூடிஞு ரக பெண் நாய் அது. அந்த ஊருக்கு வந்திருந்த டோனா தன் கணவருடனும், இரண்டு வயது மகனுடனும் செல்ல நாய் பென்னுடனும் வாக்கிங் சென்றாள். அன்று சூரியன் முழுமுகம் காட்டிச் சிரித்தது.
ஓவர்டவுன் பாலத்துக்கு அருகில் வந்தார்கள். பென் துள்ளலோடு பாலத்தின் மீது ஓடியது. பாதி பாலத்தைத் தாண்டி வலதுபுறமுள்ள கடைசி இரு வளைவுகளுக்கு இடையே வந்த பென், சட்டென கைப்பிடிச் சுவர் தாண்டி கீழே குதித்துவிட்டது.
‘ஓ மை காட்!’ அலறோடு அவர்கள், பாலத்தின் கீழே பார்க்க, பாறைகளின் மேல் விழுந்து அலங்கோலமாகக் கிடந்தது பென். தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடினார்கள். அதன் கால்கள் முறிந்திருந்தன. தாடை எலும்புகள், பின்பக்க எலும்புகள் என பல்வேறு முறிவுகள். வலியில் பென், கதறிக் கொண்டிருந்தது. ‘அதனைச் சாக அனுமதிப்பதே உத்தமம்’ என்றார் டாக்டர்.
பென் உயிரைவிட்டது. டோனாவின் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்ல கென்னத் என்பவர் வந்திருந்தார், அதுவும் தனது செல்ல நாயுடன். அது நீண்ட மூக்கும் தகதக முடியும் கொண்ட Golden Retriever ரகம். கென்னத்தும் தன் நாய் பற்றிய சம்பவத்தை அப்போது சொன்னார். ‘இவன்கூட இப்படித்தான். போன வருடம் ஒருநாள் அந்தப் பாலத்தின் மீதிருந்து குதித்துவிட்டான். நீங்கள் சொன்ன அதே இடத்தில்தான். நல்லவேளை. பாறைமேல் விழவில்லை. மிகவும் பாதுகாப்பாக ஒரு புதர்மேல் விழுந்திருந்தான். அடி பலமில்லை. ஓரிரு நாள்கள் பயந்ததுபோலஇருந்தான். எதுவும் சாப்பிடவில்லை. பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சரியாகிவிட்டான். என்ன, நாங்கள் இப்போது இவனை அழைத்துக் கொண்டு அந்தப் பாலத்தின்மீது செல்வதில்லை.’
கென்னத் சொல்லச் சொல்ல, டோனாவுக்கு அதிர்ச்சி. ‘நிஜமாகத்தான் சொல்கிறீர்களா?’
‘நீங்கள் மட்டுமல்ல, இந்நகரில் வசிக்கும் பலரும் தங்கள் செல்ல நாய்களை அங்கே பறிகொடுத்திருக்கிறார்கள். நாய்களோடு அங்கே செல்லவே எல்லோரும் பயப்படுகிறார்கள். அதை நாய்கள் தற்கொலை செய்துகொள்ளும் இடம் என்றுதான் அறிவித்திருக்கிறார்கள்.’
டோனா வாயடைத்துப் போனாள்.
சென்ற நூற்றாண்டிலிருந்து இன்றைய தேதி வரை நூற்றுக்கணக்கான நாய்கள், ஓவர்டவுன் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்திருக்கின்றன. அதுவும் குறிப்பாக வலதுபக்கத்தில். கடைசி இரு அரைவட்ட வளைவுகளுக்கு இடையில். இன்ன வருடம், மாதம், தேதியில் இந்த ரக நாய் ஒன்று, முதல் முறையாகக் குதித்து இந்த அமங்கள காரியத்தை ஆரம்பித்து வைத்தது என்று பக்காவான புள்ளிவிவரத்தை யாராலும் சொல்ல முடியவில்லை. 1950-லிருந்து வருடத்துக்கு குறைந்தது டஜன் நாய்களாவது இவ்விடம் தற்கொலை செய்து கொள்கின்றன. ஒருமுறை குதித்து உயிர் பிழைத்த சில நாய்கள், உடல்நிலை சீராகிய பின், மீண்டும் இதே பாலத்துக்கு முன்பு அட்டெம்ப்ட் செய்த அதே இடத்துக்கு வந்து இன்னொரு முறை குதித்து ஆனந்தமாகத் தம் உயிரை விட்ட அதிர்ச்சியான சம்பவங்கள் நடந்திருக்கின்றன.
ஏன்? பாலத்தில் அப்படி என்னதான் மர்மம் இருக்கிறது? அதுவும் அந்தக் குறிப்பிட்ட இடத்தில் அமானுஷ்ய சக்தி ஏதேனும் இருக்கிறதா? அந்த சக்திதான் நாய்களைச் ‘செத்து செத்து விளையாடக்’ கூப்பிடுகிறதா?
சென்ற நூற்றாண்டின் மத்தியில் உலகத்தின் கவனம் இந்தப் பாலத்தின் மேல் குவிந்தது. நாய்நேசர்கள் இதற்கான விடையைக் கண்டுபிடித்தே தீர வேண்டுமென்பதில் ஆர்வமானார்கள். விதவிதமான ஆராய்ச்சிகள் ஆரம்பித்தன.
நாய்கள் பாலத்தில் மேன்சனை நோக்கிச் செல்லும் வலதுபுறத்தில், கடைசி இரு வளைவுகளுக்கு இடையில் மட்டுமே குதிக்கின்றன. நாய்கள் குதிக்கும் நாள்களில் வானம் தெளிவாக இருக்கிறது. வெயில் அடிக்கிறது. இரவுகளில் நாய்கள் குதித்ததாகத் தெரியவில்லை. Labradors, Collies, Retrievers போன்ற நீண்ட மூக்குகள் கொண்ட நாய்கள் மட்டுமே குதிக்கின்றன. நாய்களை இழந்தவர்கள் சொன்ன தகவல்கள் மூலம் இப்படிப்பட்ட பொதுவான ஒற்றுமைகள் தெரிய வந்தன.
எந்த மர்மத்துக்கும் மத சம்பந்தமான கோணம் ஒன்று உருவாக்கப்படுமே. ஒரு கதை பரவியது. 1994ல் கெவின் என்ற தீவிர கிறித்துவன் தனது ஆண் குழந்தையோடு, இந்தப் பாலத்துக்கு ஓடிவந்தான். கைப்பிடிச் சுவர் மேல் ஏறி நின்றபடி, ‘இந்தக் குழந்தை கிறித்துவத்துக்கு எதிரானது. பின்னாளில் கிறித்துவத்தையே அழித்துவிடும். வேண்டாம் இந்தக் குழந்தை…’ என்று குழந்தையைக் கீழே வீசிக் கொன்றான். பின் அவனும் அங்கிருந்து குதித்தான். அவனது தற்கொலை முயற்சி தோல்வியில் முடிந்தது.
அந்தக் குழந்தைதான் இப்போது ஆவியாக ஓவர்டவுன் மேன்சனை, அந்தப் பாலத்தைச் சுற்றிச் சுற்றி வருவதாகவும், அந்த ஆவி நாய்களின் கண்களுக்குத் தெரிய அவை மிரண்டு போய் பாலத்திலிருந்து குதிப்பதாகவும் ஊருக்குள் செய்தி பரப்பப்பட்டது. அப்படியொரு சம்பவம் நடந்ததற்கான ஆதாரம் இல்லாததாலும், 1994க்கு முன்பும் நாய்கள் அங்கிருந்து குதித்திருக்கின்றன என்பதாலும் அந்த வதந்தி செத்துப் போனது.
ஆதி ஐரோப்பியர்களின் ஓர் இனமான செல்ட் மக்களின் நம்பிக்கைப்படி, ஓவர்டவுன் எஸ்டேட்டில் அந்தப் பாலம் அமைந்துள்ள இடமானது மிகவும் உணர்வுபூர்வமானது. அந்த இடத்தில்தான் உலகத்தின் சொர்க்கமும் நரகமும் சந்திக்கின்றன. இது பழம் பெருச்சாளிகள் சிலர் மார்தட்டி முன் வைத்த கருத்து. இருக்கட்டுமே. அந்த உணர்வுபூர்வமான புள்ளியில் நாய்கள் மட்டும் சாக வேண்டும்? பன்றிகள், குதிரைகள், மாடுகள், மனித ஜென்மங்கள்கூட அப்பாலத்தைக் கடக்கின்றன. அவை ஏன் குதிப்பதில்லை என்ற கேள்வி எழுந்ததும், பெருச்சாளிகள் பேச மறுத்துவிட்டன.
இருந்தாலும் ஏதோ அமானுஷ்ய சக்தி, அந்தப் பாலத்தில் இருக்கிறது. அதுவே நாய்களைத் தூண்டி விடுகிறது அல்லது மிரளச் செய்கிறது என்ற கருத்து புஷ்டியாகிக் கொண்டே போனது. வெயில் நாள்களில் மனநல நிபுணர்கள் நாய்களோடு பாலத்தில் நடந்து பார்த்தார்கள். அந்தக் குறிப்பிட்ட இடம் வந்ததும் நாய்கள் மிரளுவதை, குதிக்க நினைப்பதை உணர்ந்தார்கள்.

அந்தப் பாலம் (பல்வேரு கோணங்களில்)

மனநல மருத்துவரான டேவிட் சான்ஸும் தனது பத்தொன்பது வயது கிழட்டு நாய் ஹென்றிக்ஸை வைத்து சோதனை செய்தார். ‘நான் அதைப் பிடிக்கவில்லை. அது சுதந்தரமாக ஆனந்தமாக பாலத்தின் மேல் நடந்துபோனது. வலதுபுறத்தின் அந்த இடம் வந்ததும் ஒருமாதிரி ஆகிவிட்டது. கட்டைச் சுவரின் மேல் கால்களால் பிராண்ட ஆரம்பித்துவிட்டது. வயதான காரணத்தினால் அதனால் எம்பிக் குதிக்க முடியவில்லை.’
சான்ஸ், அந்த இடத்தில் தன் நாய் ஏதையோ கண்டு, அல்லது கேட்டு, அல்லது ஏதோ வாசனையால் ஈர்க்கப்பட்டதால் அப்படிச் செய்துள்ளது. அது எதனால் என்று தெளிவாகக் கண்டறிய வேண்டும் என்றார். பின் டேவிட் செக்ஸ்டன் என்ற விலங்கியல் சிறப்பு நிபுணர் அந்த ஆராய்ச்சியில் இறங்கினார்.
நாய்களைப் பயமுறுத்தும் விதமாக தோற்றத்தைக் கொண்ட எந்தப் பொருளும் அங்கில்லை. நாய்களை மிரளச் செய்யும் விதமான ஒலிகளும் அங்கே கேட்பதில்லை. எனவே ஏதோ வாசனைதான் காரணம் என்ற முடிவுக்கு வந்தார். பாலத்தின் கீழ் எலிகள் நிறைய இருந்தன, கூடவே மிங்க் என்ற பிராணிகளும். (மிங்க் – குளிர் பிரதேசங்களில் வாழும் பாலூட்டி விலங்கு. அதன் ரோமத்துக்காக (Fur) வேட்டையாடப்படுவது.) எலிகளைவிட, மிங்குகளின் மணம் நாய்களைத் தூண்டி இழுப்பவையே.
இதனைக் கண்டறிந்த டேவிட், பத்து வேறு வேறு நாய்களை பாலத்தில் நடக்க விட்டு ஆராய்ச்சி செய்தார். அவற்றில் ஏழு நாய்கள் மிங்குகளினால் ஈர்க்கப்பட்டன. ‘மிங்குகளை வேட்டையாடுவதற்காக நாய்கள் பாலத்திலிருந்து குதிக்கின்றன. இதுவே மர்மத்துக்கான விடை’ என்றார் டேவிட்.
விஷயம் தீர்ந்துவிடவில்லை. மிங்குகள் சென்ற நூற்றாண்டில் பாதியில்தான் பிரிட்டனுக்கு அமெரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்டன. பின்பே அவை பல்கிப் பெருகின. ஸ்காட்லாந்தில் பல பாலங்களுக்கு அடியில் மிங்குகள் ஆயிரக்கணக்கில் வாழ்கின்றன. இருந்தும் ஏன் இந்தப் பாலத்திலிருந்து மட்டும் நாய்கள், மிங்குகளுக்காக, அதுவும் வலதுபுறத்திலிருந்து மட்டும் குதிக்க வேண்டும்?
நாய்களை அழைத்து வருபவர்கள் மன அழுத்தத்தில், தற்கொலை எண்ணத்துடன் இருந்தால் அந்த உள்ளுணர்வு நாய்களுக்கும் பரவும் என்றொரு மேலோட்டமான கருத்தும் உண்டு. ஆனால் நாய் ஓனர்கள் எல்லோருக்குமே அப்படிப்பட்ட எண்ணம் இருக்க வாய்ப்பில்லையே. தவிர, தானே வந்து தனியே செத்துப் போகும் நாய்களை என்ன சொல்ல?
இப்போது வரை ஓவர்டவுன் பாலத்தின் நாய் மர்மம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. அது தீர வேண்டுமென்றால் இரண்டு விஷயங்கள் நடக்க வேண்டும். ஒன்று ஏதாவது ஒரு நாய் தற்கொலை செய்வதற்கு முன்பாக ‘என் சாவுக்குக் காரணம்…’ என கடிதம் எழுதி வைத்துவிட்டுச் சாக வேண்டும். அல்லது நாமே நாயாக மாறி, ஓவர்டவுன் பாலத்துக்குச் சென்று…

(தமிழக அரசியல் இதழில் வெளிவந்து கொண்டிருக்கும் ‘வெளிச்சத்தின் நிறம் கருப்பு’ தொடரிலிருந்து ஓர் அத்தியாயம்.)