சென்னை புத்தகக் காட்சி 2012 – சில அனுபவங்கள்

ஜனவரி 06, 2012 வெள்ளிக்கிழமை

* தானே புயலால் எந்தவிதத்திலும் பாதிக்கப்படாத புத்தகக் கண்காட்சி நேற்று (ஜன. 5, வியாழன்) இனிதே ஆரம்பித்தது. ஆரம்பித்து வைத்த சபாநாயகர் ஜெயக்குமார், சட்டசபையைவிட, நேற்றைய கூட்டத்தில் அதிக வார்த்தைகள் பேசியிருக்கிறார் என்பதை பத்திரிகைகள் மூலமாகத் தெரிந்துகொண்டேன்.

* வழக்கம்போல புத்தகக் காட்சிக்கு வெளிப் பக்கம் தரை சமதளமில்லை. பார்த்துத்தான் நடக்க வேண்டும். காட்சி அரங்கினுள் இந்தமுறை ஓரளவு கச்சிதமாக தரைவிரிப்புகள் அமைந்துள்ளன. கட்டுமானப் பணிகள் எல்லாம் நாளை வரை நடக்கும்போல. தற்போது வரை திறந்தவெளி புல்வெளிக் கழகம்தான்.

* கிழக்கு F7, F20 என்ற இரண்டு இடங்களில் அமைந்துள்ளது. உடையும் இந்தியா, கிழக்கு இந்திய கம்பெனி, பஞ்சம் பட்டினி படுகொலை கம்யூனிஸம், நல்ல கட்டமைப்புடன் கூடிய பொன்னியின் செல்வன், வலைவிரிக்கும் இந்துத்துவம், எக்ஸைல், ஓப்பன் சோர்ஸ், அறியப்படாத அண்ணா ஹசாரே என வேறு விதமான புத்தகங்களுடன் கிழக்கு களமிறங்கியுள்ளது. இவற்றில் சில புத்தகங்களில் இன்னும் ஓரிரு நாள்களில் விற்பனைக்கு வந்துவிடும்.

* சட்டென என்னைக் கவர்ந்தது – சில்ட்ரன் புக் டிரஸ்ட் வெளியிட்டுள்ள கெட்டி அட்டை ஆங்கிலக் கதைப் புத்தகங்கள். ரூ 50 லிருந்து ரூ. 150க்குள் நல்ல காகிதம், அழகான பைண்டிங்குடன் கதைப் புத்தகங்கள் பல தலைப்புகளில் கிடைக்கின்றன.

* விகடனில் இந்தமுறை பல புதிய தலைப்புகள் வெளிவந்துள்ளன. கலைஞரின் அரிய புகைப்படங்கள், ஜெயலலிதாவின் அரிய புகைப்படங்கள் அடங்கிய தனித்தனி புத்தகங்கள் வரவிருக்கின்றன. விலை ரூ. 150 இருக்கலாம். ஆர்ட் பேப்பரா என்று தெரியவில்லை. மருத்துவ நூல்கள் அதிகம் விற்பனையாவதாகச் சொன்னார்கள். எல்லாவற்றையும் தாண்டி, விகடனில் இந்த வருட டாப் புத்தகமாக கல்கியும் மணியமும் மீண்டும் கைகோர்த்துள்ள கெட்டி அட்டை பொன்னியின் செல்வன்தான் இருக்கப் போகிறது.

* ஸ்டால் எண் F10ல் ஓம் சக்தி புக் டிரேடர்ஸ் அமைந்துள்ளது. சென்ற வருட கண்காட்சியிலேயே செகண்ட் ஹேண்ட் ஆங்கிலப் புத்தகங்கள் மூலம் கலக்கியவர்கள் இவர்கள். ஐநூற்றுச் சொச்ச விலையில் காபி டேபிள் புத்தகங்கள் சிலவும், குண்டு என்சைக்ளோபீடியாக்கள் சிலவும் தற்போது விற்பனைக்கு இருக்கின்றன. முந்துங்கள்.

* மதி நிலையத்தில் குற்றியலுலகமாக பாரா தன் சைஸுக்குப் பொருந்தாத புத்தகத்துடன் ப்ளக்ஸில் சிரித்தார். கைக்கடக்கமான ட்விட்டர் தொகுப்பு. அதை நான் புரட்டிக் கொண்டிருந்தபோது, ஒரு வயதானவர் அதே புத்தகத்துடன் என்னருகில் வந்து ஒரு சந்தேகம் கேட்டார். ‘இதுல டைனோன்னு இருக்குதே. அப்படின்னா?’ – ‘டைனோன்னா ஒருத்தரோட பெயர்.’ – ‘ஓ… நான் டைனோஸரோன்னு குழம்பிட்டேன்’ – ‘சேச்சே, டைனோ ரொம்ப சாது. இந்த புத்தகத்தை எழுதியிருக்கிறவர்தான் ட்விட்டர்ல டைனோஸர்’ என்றேன் சிரித்தபடி. அவருக்கு என்ன புரிந்ததோ, என்னிடமிருந்து நகர்ந்து விட்டார்.

* இந்த முறை கேண்டீன் வழக்கத்தை விட பளபளப்பாக, தோட்டாதரணி செட்டுடன் இருக்கும்போதே மனத்தில் ஏதோ உறுத்தியது. நண்பர்கள் மருதனும் முத்துக்குமாரும் வேண்டாம் என்று சொன்னபோதும் கேட்காமல், அவர்களை இழுத்துக் கொண்டு உள்ளே நுழைந்துவிட்டேன். மெனு போர்டைப் பார்த்து மினி சமோசா என்றேன். 50 ரூபாய் கேட்டார்கள். ஒரு பிளேட் போதும் என்றேன். அதுதான் 50 ரூபாய் என்றார்கள். கொடுத்தேன். அதற்கான இடத்துக்குத் தேடிப் போய் கூப்பனை நீட்டினேன். பத்து மினி சமோசாவது தருவார்கள் என்பது என் எதிர்பார்ப்பு. எள்ளுருண்டை சைசில் நான்கே நான்கு மைக்ரோ சமோசாக்கள். கொஞ்சூண்டு சாஸ். அதுதான் ஐம்பது ரூபாயாம். சமோசாவுக்குள் பெருங்காயம் பேரரசு நடத்திக் கொண்டிருந்தது. சகிக்கவில்லை. காபி இருபது ரூபாயாம். தோசை எல்லாம் ரூபாய் ஐம்பதுக்கும் மேல்… ஏதோ சரஸ்வதி கேட்டரிங் சர்வீஸாம்… ஹரஹர சங்கர – ஜெய ஜெய சங்கர என பாடல் வேறு ஒலித்துக் கொண்டிருந்தது. என் பர்ஸுக்குள்ளிருந்து ‘அரோகரா அரோகரா’வென சத்தம் கேட்டது. தண்ணீர் மட்டும் இலவசமாகத் தருகிறார்கள் (இன்றைக்குத் தந்தார்கள்). கொடுத்த ஐம்பது ரூபாய்க்காக தினமும் அங்கே சென்று தண்ணீர் குடிக்கலாம் என்றிருக்கிறேன்.

ச்சீய்…

* கலைஞர் தன் பரிவாரங்கள் சூழ கார்களில் வந்து, கிழக்கு பதிப்பக ஸ்டால் வாசலில் பார்க் செய்து, ‘திராவிட இயக்க வரலாறு’ வாங்கிவிட்டுப் போகலாம் என்னுமளவுக்கு திங்கள்கிழமை (ஜனவரி 10) புத்தகக் கண்காட்சி காலியாகத்தான் இருந்தது.

* ‘பாரா ஏகத்துக்கும் புகழ்ந்துக்கிட்டிருக்காரே, திசை காட்டிப் பறவை இருக்குதா?’ என்று கேட்டபடியே ஆழி ஸ்டாலுக்குள் நுழைந்தார் வலைப்பதிவர் சுரேகா. பேயோனின் புதுப் புத்தகத்தை வாங்கிக் கொண்டார். பாரா இன்று தான் பார்த்தவர்களிடமெல்லாம் பேயோனுக்குத் திசை காட்டிக் கொண்டிருந்தார். ‘முன்னுரையே அவ்வளவு பிரமாதம். அதுக்கே கொடுத்த காசு சரியாப் போச்சு’ என்றார் (விலை ரூ. 100). பேயோன் பாராவைத் தன் கொ.ப.செ.வாக நியமித்துள்ளாரா, அல்லது பாராதான் பேயோனா, இல்லை பாராவுக்கும் பேயோனுக்கும் என்ன உறவு என்றெல்லாம் என்னிடம் வினவினார் ஒரு வலைப்பதிவர்.

* ‘பேயோன்னா யார்னே எனக்குத் தெரியாது. மூஞ்சி தெரியாத ஒரு எழுத்தாளரோட புக்கை நான் எதுக்கு வாங்கிப் படிக்கணும்’ என்பது ஹரன் பிரசன்னாவின் கமெண்ட். எனில் இட்லிவடையின் முகம் பிரசன்னாவுக்குத் தெரியும். அல்லது பிரசன்னாவுக்குத் தினமும் கண்ணாடியில் முகம் பார்க்கும் பழக்கம் உண்டு என்பது இங்கே நிரூபணமாகிறது. 😉

* நக்கீரனில் எழுத்தாளர் ஜெகாதாவை முதன் முதலில் சந்தித்தேன். (ஜெகாதா என்றால் ஜெயகாந்தனின் தாசன் என்று இன்றுதான் அறிந்துகொண்டேன்.) முப்பது நிமிடங்களுக்கும் மேல் பேசிக் கொண்டிருந்தோம். புனைவுகளுக்கான மார்க்கெட் குறைந்துவருவது குறித்து வருத்தத்துடன் பேசிக் கொண்டிருந்தார். ‘ஒரு காலத்தில் கதைகள் தவிர வேறெதையும் எழுத மாட்டேன் என்ற கொள்கைப் பிடிப்புடன் இருந்த என்னையே வெவ்வேறு விஷயங்களை எழுத வைத்துவிட்டார்கள். இன்றைக்கு அபுனைவுகள் காலத்தின் தேவையாகிவிட்டது’ என்றார்.

* ஸ்பெக்ட்ரம் புத்தகம் குறித்து ஞாநி, பத்ரியுடன் விவாதத்தில் ஈடுபட்டிருக்கும்போது, அவர்களுடன் நின்று கொண்டிருந்த நண்பர் பாஸ்கர் சக்தியைச் சந்தித்தேன் (சனி அன்று). குதிரை எப்படிப் போய்க் கொண்டிருக்கிறது என்று கேட்டேன். இன்னும் பத்துநாள் ஷூட்டிங் மிச்சம் இருப்பதாகச் சொன்னார். இந்த மார்ச்சில் அழகர்சாமி குதிரையுடன் தியேட்டர்களில் இறங்கலாம்.

* நக்கீரனில் புதிதாக வந்துள்ள சில புத்தகங்கள் கவர்கின்றன. அதில் ஒன்று ஆதனூர் சோழன் எழுதியுள்ள Mr. மனிதன். கற்காலம் முதல் நவ நாகரிகம் வரையிலான மனித இன வரலாறு என்று அட்டை சொல்லியது. ஆதனூர் சோழன் எழுதிய இன்னொரு புத்தகம் ஜோதிபாசு. இயக்குநர் மகேந்திரனின் புதிய நாவல், ‘அந்தி மழை’யை நக்கீரன் வெளியிட்டுள்ளது. சின்னக்குத்தூசி அவர்களில் வெவ்வேறு சுவை கொண்ட கட்டுரைகளின் தொகுப்பு ‘பூக்கூடை.’

* கல்கிக்கு முந்தா நேத்து சன் டீவி வழியே ரஜினி மார்கெட்டிங் செய்துள்ளார். இந்த ‘ரஜினி வாய்ஸ்’ மூலம் பொன்னியின் செல்வன் விற்பனை அதிகரிக்கும் என்றெல்லாம்… அடப்போங்க சார். பொன்னியின் செல்வன் – புத்தகக் கண்காட்சியின் நிரந்தர சூப்பர் ஸ்டார்! நக்கீரனில் இந்தமுறை சிறிய தலையணை சைஸுக்கு கெட்டி அட்டை பொன்னியில் செல்வன் – மலிவு விலை பதிப்பாக ரூ 225க்கு கொண்டு வந்திருக்கிறார்கள். புரட்டிப் பார்த்தேன். வேகமாகத் திருப்பினாலோ, நகம் பட்டாலோ காயமடைந்துவிடும் அளவுக்குக் காகிதத் தரம் இருந்தது. நக்கீரன் ஸ்டால் நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தேன். கடந்த வார இறுதி விற்பனை அமோகம் என்றார். அந்த பொன்னியின் செல்வன் 500 பிரதிகளாவது விற்றிருக்கும் என்றார். காகிதத் தரம் பற்றி வருத்தத்தையும் சொன்னேன். பரிசளிப்பதற்காகவே நிறைய பேர் வாங்கிச் செல்வதாகச் சொன்னார்.

மெகா சைஸ்.. க்ளிக்கிப் பார்க்கவும்

* கிழக்கு நேர் எதிரே Gift Books என்று ஒரு ஸ்டால் இருக்கிறது. பல பிரம்மாண்டமான புத்தகங்கள் சட்டென கவனம் ஈர்க்கின்றன. பெரும்பாலும் காஃபி டேபிள் புத்தகங்கள்தாம். எடுத்து, மேசையில் வைத்து, ஆசை ஆசையாகப் புரட்டிப் பார்த்து, தடவி மகிழ்ந்து, சமர்த்தாக மூடிவைத்துவிட்டு வந்துவிடலாம். வாங்க நினைப்பது வெங்காயத்தனம்!

* கடந்த சில தினங்களில் நான் கவனித்த ஒரு விஷயம், அகம் புறம் அந்தப்புரம் வாங்கிச் செல்பவர்களில் பெரும்பாலோனோர் கணவன் – மனைவியாக இருக்கிறார்கள். ஒன்று கணவனோ, அல்லது மனைவியோ, அல்லது இருவருமோ, ரிப்போர்ட்டரில் தொடரை முழுமையாக (அல்லது பகுதி அளவில்) வாசித்தவர்கள். சீனியர் சிட்டிசனாக என்னை நினைத்துக் கொண்டிருப்பவர்கள், கண்காட்சியில் சந்திக்கும்போது அதிர்ச்சியடையத்தான் செய்கிறார்கள். இந்தக் கண்காட்சியில் நான் அதிகம் கையெழுத்திட்ட புத்தகம் அ.பு. அந்தப்புரம்தான். வாசகர்களின் அன்புக்கு நன்றி.

* கணவன் – மனைவிக்கு மட்டும் என்று அட்டையிலேயே குறிப்பிடப்பட்ட இரா. த. சக்திவேல் என்பவர் எழுதிய கவிதைப் புத்தகம் கண்ணில்பட்டது. தலைப்பு : ச்சீய்… புரட்டிப் பார்த்தேன். சில வரிகள் ஈர்த்தன. இருந்தாலும் கவிதை எழுதும் பழக்கத்தையும் கவிதைப் புத்தகங்கள் வாங்கும் வழக்கத்தையும் ஐந்தாண்டுகளுக்கு முன்பே நிறுத்திவிட்டதால் ச்சீயை வைத்துவிட்டேன். தவிர, வாங்கிச் சென்றால் என் மனைவி கோபித்துக் கொள்ளக்கூடும். ஏனென்றால் அவளுக்கு நானே ஒரு கவிதை! ;)))

பாராவின் ‘அப்பன்’ மனசு!

சென்னை புத்தகக் கண்காட்சி 2011, ஜனவரி 8, 9 – சில குறிப்புகள்.

* வேர்ல்ட் கப் கிரிக்கெட் பைனல் மேட்ச் பார்க்க வந்த கூட்டம்போல, சனி ஞாயிறு இரண்டு தினங்களும் சென்னை புத்தகக் கண்காட்சி களை கட்டியது. பார்க்கிங் இடம் கிடைக்காமல் பல கார்கள் திணறிக் கொண்டிருந்தன. என்னதான் கூட்டம் கூடினாலும் நாங்கள் இரண்டு டிக்கெட் கௌண்டர்களுக்கு மேல் திறக்கவே மாட்டோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு பபாஸி, வாசகர்களை வாசலிலேயே நீண்ட க்யூவில் நிற்க வைத்து கடுப்படித்தது.

* வெளியே ப்ளாட்பார கடைகளிலும் ஜேஜேவெனக் கூட்டம். பழைய ஆங்கில நாவல்களும், புகழ்பெற்ற புத்தகங்களின் போலிகளும் சக்கைபோடு போட்டுக் கொண்டிருந்தன. சட்டென என் கவனத்தைக் கவர்ந்த ஒரு புத்தகம் – தமிழர் நோபல் பரிசு பெற வழிகள். புகைப்படம் மட்டும் எடுத்துக் கொண்டேன். கையில் எடுத்துப் பார்க்கவில்லை. எனக்கு நோபல் ஆசையில்லாததால், புத்தகத்தை வாங்கத் தோன்றவில்லை.

* இந்த இரு தினங்களிலும் பெங்களூரு வாசகர்கள் அதிகம் வந்திருந்தார்கள். ஞாயிறு இரவு சென்ட்ரல் ரயில் நிலையம் சென்றிருந்தால், பெங்களூரு தமிழர் பலர் புத்தக மூட்டைகளோடு ரயிலேறும் அற்புதக் காட்சியைக் கண்டிருக்கலாம். கொசுறு செய்தி : பெங்களூருவின் ஆதி தமிழர், தற்போதைய ‘காந்தி கொலை வழக்கு’ புகழ் எழுத்தாளர் என். சொக்கன், ஜனவரி 11, 12 தினங்களில் சென்னை விஜயம் செய்கிறார்.

* கிழக்கு பதிப்பகத்துடன் கடந்த ஆறு ஆண்டுகளாக நெருக்கமாகப் புழங்கிக் கொண்டிருக்கும் பல வாசகர்கள், எவையெல்லாம் புதிய புத்தகங்கள், எவை பழைய புத்தகங்கள் என்று பெரும்பாலும் தெரிந்து வைத்துக் கொண்டுதான் உள்ளே நுழைகிறார்கள். தங்களுக்குத் தேவையானவற்றை வேகமாக தேடி எடுத்துவிட்டு, விருட்டென பில் போட்டு, கார்டு தேய்த்துவிட்டு போய்க்கொண்டே இருக்கிறார்கள். ‘இதோ இருக்கிறது கிழக்கு’ என்று நேரே கிழக்கு தேடி வந்து புத்தகம் வாங்கும் வாசகர்களையும் பார்க்க முடிகிறது.

* பொன்னியின் செல்வன் ரசிகர்கள் அனைவரையும் ஈர்க்கிறது ராஜ ராஜ சோழன். கிழக்கின் தற்போதைய நெம்பர் ஒன் புத்தகம் இதுவே. எழுதிய நண்பர் ராஜ ராஜ கண்ணனுக்கு வாழ்த்துகள்.

* என்னுடைய இந்த வருடப் புத்தகமான கிளியோபாட்ராவும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சனியன்று டாப் டென்னில் இருப்பதாக ஹரன் பிரசன்னா தகவல் சொன்னார். கடந்த செவ்வாய் அன்றே புத்தகத்தை வாங்கிச் சென்ற நண்பர் ரகு (உதவி இயக்குநர்), ஞாயிறு அன்று கண்காட்சி வந்தார். கிளியோபாட்ரா குறித்த தன் விமரிசனத்தைச் சொன்னார். (இதுவே எனக்குக் கிடைத்த முதல் விமரிசனம்.) ‘ஒரே நாளில் ஒரே மூச்சில் படித்துவிட முடிந்தது. புத்தகத்தின் மூலம் கிளியோபாட்ராவின் வாழ்க்கைக்கு ஈடாக, சீஸரின் வாழ்க்கையையும், ஆண்டனியின் வாழ்க்கையையும் தெரிந்துகொள்ள முடிகிறது. மொத்தத்தில் எகிப்தில் உட்கார்ந்துகொண்டு ரோமின் வரலாற்றைப் படித்ததுபோல உள்ளது.’

* புரட்சிக்குக் குறைவாக எதையும் சம்மதிக்காதே! என்ற வாசகத்தில் மேலே லெனினில் ஓவியம். அருகில் பகத் சிங் ஓவியம். இரண்டுமே சுவரில் மாட்டக்கூடியவை. கீழைக்காற்றில் கிடைக்கின்றன. அருகிலேயே ‘நாகரிக கோமாளி’ விசிடி கிடைக்கிறது. இந்தப் படம் பற்றி நல்லவிதமாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். வாங்கிப் பார்க்க வேண்டும். கூடவே சார்லி சாப்ளின் டிவிடிக்களும் கிடைக்கின்றன. The Great Dictator இருக்கிறதா என்று தேடினேன். இல்லை.

* சில புத்தகங்களைப் பார்த்தாலே எடுத்துப் பார்க்க வேண்டும் என்று  தோன்றும். அந்த வரிசையில் கிழக்கில் பலரும் எடுத்துப் பார்க்கும் புத்தகம் ‘பேய்.’ ஓரளவு விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. சில புத்தகங்களை பார்த்தாலே வாங்க வேண்டும் என்று தோன்றும். அந்த வரிசையில் வந்துள்ள இந்த வருடப் புத்தகம் ‘தமிழ்நாடு சுற்றுலா வழிகாட்டி.’ (ஆசிரியர் – தழிழ் பேப்பரின் ‘பெண்மனம் புகழ்’ தமிழ் சுஜாதா). அழகான கட்டமைப்புடன், தெளிவான அச்சுடன் வந்துள்ள இந்தப் புத்தகத்தைப் பரிசாக பலருக்கும் வாங்கிக் கொடுக்கலாம் என்பது என் சிபாரிசு.

* சென்ற கண்காட்சியில் ஒரு கடையில் சில காமிக்ஸ் புத்தகங்கள் கிடைத்தன. இந்தமுறை இதுவரை என் கண்ணில் படவில்லை. பத்ரி, சனி அன்று பெரிய சைஸ் லயன் காமிக்ஸ் தொகுப்புடன் (விலை ரூ. 200) வந்தார். யாரிடமோ சொல்லிவைத்து வாங்கியதாம். லக்கிலுக் வழியாக அவர் கைக்கு வந்ததாம். அந்த காமிக்ஸ் தொகுப்பு புத்தகக் கண்காட்சியில் கிடைக்கவில்லை.

* ரெண்டு புள்ளைங்க. ரெண்டு பேரும் ஓட்டப்பந்தயத்துல வேகமா ஓடுறாங்க. அதைப் பார்க்குற அப்பனோட மனசு, எந்தப் புள்ளை முதல்ல வந்து ஜெயிக்கணும்னு நெனைக்கும்? அப்படிப்பட்ட அப்பன் மனசுடன் கிழக்கில் இருவர்  திரிந்து கொண்டிருக்கிறார்கள். ஒருவர் பாரா. ஒருநாள் அவருடைய புள்ளை ஆர்எஸ்எஸ் முதலில் ஓடி வந்தால், மறுநாள் காஷ்மீர் ஓவர்டேக் செய்கிறது. இன்னொருவர் ஆர். முத்துக்குமார். திராவிட இயக்க வரலாறு பாகம் ஒன்றுக்கும் இரண்டுக்கும் இடையே கடும்போட்டி (பெரும்பாலான வாசகர்கள் இரண்டு பாகங்களையும் வாங்கிச் செல்வது மகிழ்ச்சிக்குரிய விஷயம்). மருதனுக்கு அந்தப் பிரச்னையே இல்லை. சென்ற முறை இரண்டாம் உலகப் போரில் ஈடுபட்டவர்கள், இந்தமுறை தானாகவே முதல் உலகப் போரில் குதித்துவிடுகிறார்கள்.

* இந்தக் கண்காட்சியிலும் கதவு திறந்துதான் கிடக்கிறது. காத்து வரவில்லை. கண்ட கண்ட…

நாளை 91.9ல்

ஆகஸ்ட் 9, ஞாயிறு –  நாளை – 91.9 ஆஹா – கிழக்கு பாட்காஸ்டில் – பாராவின் நிகழ்ச்சி.

தனது தீவிரமான தீவிரவாத எழுத்தனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொள்கிறார். கேட்டுவிட்டு கருத்துகளைச் சொல்லுங்கள்.

நாளைய நிகழ்ச்சியைக் கேட்க நான் சென்னையில் இருக்கமாட்டேன். என் நண்பர்களைக் காண குற்றாலம் செல்கிறேன் 😉