சென்னை புத்தகக் கண்காட்சி 2013 : என் புத்தகங்கள்

சென்னை புத்தகக் கண்காட்சி இன்று ஜனவரி 11 முதல் ஆரம்பமாகவிருக்கிறது. இந்த வருடம் என்னுடைய புதிய புத்தகம் ஒன்று வெளியாகிறது. நான் எடிட் செய்த புத்தகம் ஒன்று புதிதாக வெளியாகிறது. தவிர மறுபதிப்பாகும் சில புத்தகங்கள் குறித்த அறிவிப்புகளையும் இங்கே தருகிறேன்.

அறிவிப்பு 1 : வெளிச்சத்தின் நிறம் கருப்பு

மர்மங்களின் சரித்திரம் குறித்த புத்தகம். பேய், பிசாசு, பில்லி, சூனியம், ஆவி, அமானுஷ்யம் என்ற குறுகிய வட்டத்துக்குள் இந்தப் புத்தகத்தை அடக்கிவிடக் கூடாது. அவற்றையும் தாண்டி, நெஞ்சை நடுங்க வைக்கும், தூக்கத்தை தொலைக்க வைக்கும் சாகாவரம் பெற்ற மர்மங்கள் குறித்து இந்தப் புத்தகம் பேசுகிறது. இது 2012ல் தமிழக அரசியல் வாரமிருமுறை இதழில் தொடராக வெளிவந்தது.
வெளியீடு : சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிஷர்ஸ்
விலை ரூ. 200.


அறிவிப்பு 2 : ரஜினி
ஆறிலிருந்து அறுபத்து மூன்று வரை ரஜினியின் முழு வாழ்க்கையைச் சொல்லும் புத்தகம் எதுவும் இதுவரை வெளிவரவில்லை. அந்தக் குறையைப் போக்கும் வகையில் பா. தீனதயாளன் எழுதியுள்ள, ‘ரஜினி’ புத்தகம் இந்தப் புத்தகக் கண்காட்சிக்கு வெளியாகிறது. கடுமையான உழைப்பைக் கொட்டி, நுணுக்கமான தகவல்கள் சேர்த்து, அசரடிக்கும் எழுத்து நடையில் இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார். இந்தப் புத்தகத்தை எடிட் செய்தவன் என்ற முறையில், சந்தையில் இனி எத்தனை ரஜினி புத்தகங்கள் வந்தாலும் இது தனித்துவமாக நிலைத்து நிற்கும் என்பதை உறுதியாக நம்புகிறேன். சிவாஜி, ஜெமினி கணேசன், சிலுக்கு, சாண்டோ சின்னப்பா தேவர் வரிசையில் தீனதயாளனில் மாஸ்டர் பீஸ் – ரஜினி. இந்தப் புத்தகக் கண்காட்சியில் நிச்சயம் இந்தப் புத்தகம் ஹிட் ஆகும். புத்தகத்தின் பதிப்பாளர் முடிவு செய்து அச்சிட்டுள்ள அட்டைப்படத்தில் மட்டும் எனக்கு உடன்பாடில்லை என்பதையும் இங்கே பதிவு செய்துகொள்கிறேன்.

அரிய புகைப்படங்களுடன் 400+ பக்கங்கள்.
விலை : ரூ. 275
வெளியீடு : மதி நிலையம்

அறிவிப்பு 3 : அகம் புறம் அந்தப்புரம்
மூன்று ஆண்டுகளுக்கு முன் வெளியான எனது மெகா வரலாற்று புத்தகம். இந்திய சமஸ்தானங்களின் – மகாராஜாக்களின் வரலாறு. கிழக்கு பதிப்பகம் வெளியீடு. விலை குறித்து கவலைப்படாமல் வாசகர்கள் அதிகம் நேசித்த புத்தகமும்கூட. சுமார் 1400 பக்கங்கள் கெட்டி அட்டைப் புத்தகமாக இதைக் கொண்டு வருவதில் பல நடைமுறைச் சிக்கல்கள் இருந்ததால், கிழக்கு பதிப்பகத்தினர் இதனை அதிக அளவில் பிரிண்ட் செய்யவில்லை. ஆனால், டிமாண்ட் இருந்துகொண்டே இருந்தது. இந்த முறை, அகம் புறம் அந்தப்புரத்தை ‘பேப்பர் பேக்’காக கொண்டு வருகிறார்கள் என்பதை வாசகர்களுக்கு அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
வெளியீடு : கிழக்கு பதிப்பகம்
விலை : ரூ. 995.

அறிவிப்பு 4 : சந்திரபாபு
2006 சென்னை புத்தகக் கண்காட்சியில் கிழக்கு பதிப்பகம் வெளியிட்டு, பெரும் வரபேற்பைப் பெற்ற எனது புத்தகம், கண்ணீரும் புன்னகையும். நகைச்சுவை நடிகர் சந்திரபாபுவின் வாழ்க்கை வரலாறு. இது எனது முதல் புத்தகமும்கூட. கடந்த இரண்டு ஆண்டுகளாக அச்சில் இல்லாமல் இருந்தது. பலரும் புத்தகம் மீண்டும் எப்போது வரும் என்று கேட்டார்கள். இந்தப் புத்தகக் கண்காட்சிக்கு, ‘சந்திரபாபு’ என்ற தலைப்பில், அரிய புகைப்படங்களுடன் புதிய பதிப்பாக இந்தப் புத்தகத்தைக் கொண்டு வருகிறேன்.
வெளியீடு : சிக்ஸ்த் சென்ஸ்
பக்கங்கள் : 200
விலை : ரூ. 125


அறிவிப்பு 5 : அண்டார்டிகா
‘ஸ்…’ என்ற தலைப்பில் அண்டார்டிகாவின் வரலாறு, சில ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கு வெளியீடாக வந்தது. தலைப்பு புரியவில்லையா அல்லது என்ன பிரச்னை என்று தெரியவில்லை, என் புத்தகங்களில் இது ‘குசேலன்’ ஆகிப்போனது. தற்போது, ‘அண்டார்டிகா – வரலாறு’ என்ற நேரடித் தலைப்பிலேயே புத்தகம் மறுபதிப்பு காண்கிறது. அண்டார்டிகா என்ற ஆச்சரியம் நிறைந்த கண்டம் குறித்த அனைத்துத் தகவல்களையும் உள்ளடக்கிய புத்தகம். உலகின் தென் துருவத்தை அடைவதற்காக மேற்கொள்ளப்பட்ட பயணங்கள் ஒவ்வொன்றும் உயிரை உலக்குபவை. படித்துப் பார்த்தால் உணருவீர்கள்.

வெளியீடு : மதி நிலையம்.

அறிவிப்பு 6 : சிலுக்கு
சிலுக்கு குறித்த உருப்படியான பயாகிராஃபி. சிலுக்கு லேபிளோடு தற்போது வெளிவந்த / வெளிவரப்போகும் அனைத்து பட இயக்குநர்களுக்கும் இந்தப் புத்தகம் நிச்சயம் பேருதவியாக இருந்திருக்கும். பா. தீனதயாளனின் எழுத்தில், நான் எடிட் செய்த, சிலுக்கு – ஒரு பெண்ணின் கதை, மேம்படுத்தப்பட்டு தற்போது மறுபதிப்பு காண்கிறது.
வெளியீடு : மதி நிலையம்.



அறிவிப்பு 7 : சுப்ரமணியபுரம்
சசிகுமார் இயக்கிய சுப்ரமணியபுரம் திரைப்படத்தின் திரைக்கதை, படம் உருவான விதம் – நூலாக வெளிவருகிறது. புத்தகத்தின் எழுத்து வடிவம் என்னுடையது. சில வருடங்களுக்கு முன்பு செய்து கொடுத்தேன். தற்போது புத்தகம் விகடன் பிரசுர வெளியீடாக வருவதாக நண்பர் சசிகுமார் தகவல் சொன்னார்.
மேற்சொன்ன புத்தகங்கள் தவிர, என்னுடைய பிற நூல்களான முகலாயர்கள், யூதர்கள், கிளியோபாட்ரா, செங்கிஸ்கான் போன்றவை கிழக்கு பதிப்பக ஸ்டாலில் கிடைக்கும். மற்றும் பல ஸ்டால்களிலும் கிடைக்கும்.
கடந்த ஏழு வருடங்களாக கிழக்கு பதிப்பகத்தின் ஆசிரியர் குழுவில் இருந்தபடி புத்தகக் கண்காட்சிக்கான வேலைகளில் ஈடுபட்டிருந்தேன். இந்த வருடம் எந்த நிறுவனமும் சாராத, சுதந்தர எழுத்தாளனாக புத்தகக் கண்காட்சியைச் சந்திக்கப் போகிறேன்.
ஜனவரி 19 முதல் 23 வரை சென்னை புத்தகக் கண்காட்சியில் இருப்பேன்.
அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள்.

நாய்களின் தற்கொலை முனை!

இதை நீங்கள் படிக்க ஆரம்பிக்கும் நேரத்தில், அங்கே அந்தப் பாலத்தில் ஏதோ ஒரு நாய் தற்கொலை செய்துகொள்ளலாம். அதன் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டிக் கொண்டு மேற்கொண்டு தொடருங்கள்.
ஒரு நாய் எதற்காகத் தற்கொலை செய்துகொள்ள வேண்டும்?
தேர்வுத் தோல்வி, காதல் தோல்வி, பிஸினஸ் தோல்வி, தேர்தல் தோல்வி உள்ளிட்ட மனிதனுக்கான காரணங்கள் எதுவும் நாய்களுக்கு இருக்கப் போவதில்லை. தனது பாசத்துக்குரிய எஜமானரை இழந்து வாடும் சில நாய்கள், நாள்கணக்கில் எதுவும் உண்ணாமல் செத்துப் போன சம்பவங்கள் உண்டு. ஆனால் தற்கொலை எல்லாம் செய்துகொள்ளாது என்கிறீர்களா. எதையும் உறுதியாகச் சொல்வதற்குமுன் ஒருமுறை ஸ்காட்லாந்து வரை சென்று பார்த்துவிட்டு வந்துவிடுவோம். அதுவும் அங்கேயுள்ள மேற்கு டன்பர்ட்டன்ஷைர் நகரத்திலுள்ள ஓவர்டவுன் எஸ்டேட்டுக்கு. அதிலும் முக்கியமாக எஸ்டேட்டில் அமைந்துள்ள மர்மமான அந்தப் பாலத்துக்கு. வாருங்கள்.
ஓவர்டவுன் எஸ்டேட்டுக்கும், அதில் அமைந்திருக்கும் மேன்சனுக்கும், சுற்றியிருக்கும் அழகான தோட்டத்துக்கும் நூற்றாண்டு கால வரலாறு உண்டு. 1893ல் அந்த எஸ்டேட்டை வாங்கிய முதலாளியான லார்ட் ஓவர்டவுன், அதனை கிழக்கு, மேற்கு என பிரித்து விரிவுபடுத்தினார். இடைப்பட்ட பகுதியில் ஓர் அருவி விழுந்து நீரோடையாக ஓடியது. பாறைகளால் நிரம்பிய அந்தப் பகுதியில், நீரோடையைக் கடக்கும் விதமாக பாலம் ஒன்றையும் கட்டினார்.
கருங்கற்களாலும் கிரானைட்டாலும் உருவாக்கப்பட்ட இந்தப் பாலம் அதிக அகலமோ, பெரும் நீளமோ கிடையாது. சுமார் இரண்டடி உயர, தடிமனான கைப்பிடிச் சுவர். சுவரின் குறிப்பிட்ட இடைவெளிகளில் பாலத்திலிருந்து வெளியே நீட்டிக் கொண்டிருப்பதாக அரைவட்ட வளைவுகள். இருபக்கமும் சேர்த்து மொத்தம் எட்டு வளைவுகள். பாலத்தைக் கடந்தால் அந்தப் பக்கம் மேன்சன். ஒரு நாய் தன் பின்னங்கால்களைத் தரையில் ஊன்றி, முன்னங்கால்களை பாலத்தின் கட்டைச் சுவர் மேலே வைத்துக்கொண்டு, கீழே ஓடும் நீரோட்டத்தை ரசிக்கலாம். சுற்றியிருக்கும் இயற்கையில் திளைக்கலாம். அப்படியே பின்னங்கால்களால் உந்தித் தாவி, சுமார் 50 அடி பள்ளத்தில் குதித்து, பாறைகளில் மோதி தற்கொலையும் செய்து கொள்ளலாம்.
அப்படித்தான் குதித்து விட்டது பென், அக்டோபர் 2005ல். நீண்ட மூக்கும் புசுபுசு முடியும் கொண்ட இணிடூடூடிஞு ரக பெண் நாய் அது. அந்த ஊருக்கு வந்திருந்த டோனா தன் கணவருடனும், இரண்டு வயது மகனுடனும் செல்ல நாய் பென்னுடனும் வாக்கிங் சென்றாள். அன்று சூரியன் முழுமுகம் காட்டிச் சிரித்தது.
ஓவர்டவுன் பாலத்துக்கு அருகில் வந்தார்கள். பென் துள்ளலோடு பாலத்தின் மீது ஓடியது. பாதி பாலத்தைத் தாண்டி வலதுபுறமுள்ள கடைசி இரு வளைவுகளுக்கு இடையே வந்த பென், சட்டென கைப்பிடிச் சுவர் தாண்டி கீழே குதித்துவிட்டது.
‘ஓ மை காட்!’ அலறோடு அவர்கள், பாலத்தின் கீழே பார்க்க, பாறைகளின் மேல் விழுந்து அலங்கோலமாகக் கிடந்தது பென். தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடினார்கள். அதன் கால்கள் முறிந்திருந்தன. தாடை எலும்புகள், பின்பக்க எலும்புகள் என பல்வேறு முறிவுகள். வலியில் பென், கதறிக் கொண்டிருந்தது. ‘அதனைச் சாக அனுமதிப்பதே உத்தமம்’ என்றார் டாக்டர்.
பென் உயிரைவிட்டது. டோனாவின் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்ல கென்னத் என்பவர் வந்திருந்தார், அதுவும் தனது செல்ல நாயுடன். அது நீண்ட மூக்கும் தகதக முடியும் கொண்ட Golden Retriever ரகம். கென்னத்தும் தன் நாய் பற்றிய சம்பவத்தை அப்போது சொன்னார். ‘இவன்கூட இப்படித்தான். போன வருடம் ஒருநாள் அந்தப் பாலத்தின் மீதிருந்து குதித்துவிட்டான். நீங்கள் சொன்ன அதே இடத்தில்தான். நல்லவேளை. பாறைமேல் விழவில்லை. மிகவும் பாதுகாப்பாக ஒரு புதர்மேல் விழுந்திருந்தான். அடி பலமில்லை. ஓரிரு நாள்கள் பயந்ததுபோலஇருந்தான். எதுவும் சாப்பிடவில்லை. பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சரியாகிவிட்டான். என்ன, நாங்கள் இப்போது இவனை அழைத்துக் கொண்டு அந்தப் பாலத்தின்மீது செல்வதில்லை.’
கென்னத் சொல்லச் சொல்ல, டோனாவுக்கு அதிர்ச்சி. ‘நிஜமாகத்தான் சொல்கிறீர்களா?’
‘நீங்கள் மட்டுமல்ல, இந்நகரில் வசிக்கும் பலரும் தங்கள் செல்ல நாய்களை அங்கே பறிகொடுத்திருக்கிறார்கள். நாய்களோடு அங்கே செல்லவே எல்லோரும் பயப்படுகிறார்கள். அதை நாய்கள் தற்கொலை செய்துகொள்ளும் இடம் என்றுதான் அறிவித்திருக்கிறார்கள்.’
டோனா வாயடைத்துப் போனாள்.
சென்ற நூற்றாண்டிலிருந்து இன்றைய தேதி வரை நூற்றுக்கணக்கான நாய்கள், ஓவர்டவுன் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்திருக்கின்றன. அதுவும் குறிப்பாக வலதுபக்கத்தில். கடைசி இரு அரைவட்ட வளைவுகளுக்கு இடையில். இன்ன வருடம், மாதம், தேதியில் இந்த ரக நாய் ஒன்று, முதல் முறையாகக் குதித்து இந்த அமங்கள காரியத்தை ஆரம்பித்து வைத்தது என்று பக்காவான புள்ளிவிவரத்தை யாராலும் சொல்ல முடியவில்லை. 1950-லிருந்து வருடத்துக்கு குறைந்தது டஜன் நாய்களாவது இவ்விடம் தற்கொலை செய்து கொள்கின்றன. ஒருமுறை குதித்து உயிர் பிழைத்த சில நாய்கள், உடல்நிலை சீராகிய பின், மீண்டும் இதே பாலத்துக்கு முன்பு அட்டெம்ப்ட் செய்த அதே இடத்துக்கு வந்து இன்னொரு முறை குதித்து ஆனந்தமாகத் தம் உயிரை விட்ட அதிர்ச்சியான சம்பவங்கள் நடந்திருக்கின்றன.
ஏன்? பாலத்தில் அப்படி என்னதான் மர்மம் இருக்கிறது? அதுவும் அந்தக் குறிப்பிட்ட இடத்தில் அமானுஷ்ய சக்தி ஏதேனும் இருக்கிறதா? அந்த சக்திதான் நாய்களைச் ‘செத்து செத்து விளையாடக்’ கூப்பிடுகிறதா?
சென்ற நூற்றாண்டின் மத்தியில் உலகத்தின் கவனம் இந்தப் பாலத்தின் மேல் குவிந்தது. நாய்நேசர்கள் இதற்கான விடையைக் கண்டுபிடித்தே தீர வேண்டுமென்பதில் ஆர்வமானார்கள். விதவிதமான ஆராய்ச்சிகள் ஆரம்பித்தன.
நாய்கள் பாலத்தில் மேன்சனை நோக்கிச் செல்லும் வலதுபுறத்தில், கடைசி இரு வளைவுகளுக்கு இடையில் மட்டுமே குதிக்கின்றன. நாய்கள் குதிக்கும் நாள்களில் வானம் தெளிவாக இருக்கிறது. வெயில் அடிக்கிறது. இரவுகளில் நாய்கள் குதித்ததாகத் தெரியவில்லை. Labradors, Collies, Retrievers போன்ற நீண்ட மூக்குகள் கொண்ட நாய்கள் மட்டுமே குதிக்கின்றன. நாய்களை இழந்தவர்கள் சொன்ன தகவல்கள் மூலம் இப்படிப்பட்ட பொதுவான ஒற்றுமைகள் தெரிய வந்தன.
எந்த மர்மத்துக்கும் மத சம்பந்தமான கோணம் ஒன்று உருவாக்கப்படுமே. ஒரு கதை பரவியது. 1994ல் கெவின் என்ற தீவிர கிறித்துவன் தனது ஆண் குழந்தையோடு, இந்தப் பாலத்துக்கு ஓடிவந்தான். கைப்பிடிச் சுவர் மேல் ஏறி நின்றபடி, ‘இந்தக் குழந்தை கிறித்துவத்துக்கு எதிரானது. பின்னாளில் கிறித்துவத்தையே அழித்துவிடும். வேண்டாம் இந்தக் குழந்தை…’ என்று குழந்தையைக் கீழே வீசிக் கொன்றான். பின் அவனும் அங்கிருந்து குதித்தான். அவனது தற்கொலை முயற்சி தோல்வியில் முடிந்தது.
அந்தக் குழந்தைதான் இப்போது ஆவியாக ஓவர்டவுன் மேன்சனை, அந்தப் பாலத்தைச் சுற்றிச் சுற்றி வருவதாகவும், அந்த ஆவி நாய்களின் கண்களுக்குத் தெரிய அவை மிரண்டு போய் பாலத்திலிருந்து குதிப்பதாகவும் ஊருக்குள் செய்தி பரப்பப்பட்டது. அப்படியொரு சம்பவம் நடந்ததற்கான ஆதாரம் இல்லாததாலும், 1994க்கு முன்பும் நாய்கள் அங்கிருந்து குதித்திருக்கின்றன என்பதாலும் அந்த வதந்தி செத்துப் போனது.
ஆதி ஐரோப்பியர்களின் ஓர் இனமான செல்ட் மக்களின் நம்பிக்கைப்படி, ஓவர்டவுன் எஸ்டேட்டில் அந்தப் பாலம் அமைந்துள்ள இடமானது மிகவும் உணர்வுபூர்வமானது. அந்த இடத்தில்தான் உலகத்தின் சொர்க்கமும் நரகமும் சந்திக்கின்றன. இது பழம் பெருச்சாளிகள் சிலர் மார்தட்டி முன் வைத்த கருத்து. இருக்கட்டுமே. அந்த உணர்வுபூர்வமான புள்ளியில் நாய்கள் மட்டும் சாக வேண்டும்? பன்றிகள், குதிரைகள், மாடுகள், மனித ஜென்மங்கள்கூட அப்பாலத்தைக் கடக்கின்றன. அவை ஏன் குதிப்பதில்லை என்ற கேள்வி எழுந்ததும், பெருச்சாளிகள் பேச மறுத்துவிட்டன.
இருந்தாலும் ஏதோ அமானுஷ்ய சக்தி, அந்தப் பாலத்தில் இருக்கிறது. அதுவே நாய்களைத் தூண்டி விடுகிறது அல்லது மிரளச் செய்கிறது என்ற கருத்து புஷ்டியாகிக் கொண்டே போனது. வெயில் நாள்களில் மனநல நிபுணர்கள் நாய்களோடு பாலத்தில் நடந்து பார்த்தார்கள். அந்தக் குறிப்பிட்ட இடம் வந்ததும் நாய்கள் மிரளுவதை, குதிக்க நினைப்பதை உணர்ந்தார்கள்.

அந்தப் பாலம் (பல்வேரு கோணங்களில்)

மனநல மருத்துவரான டேவிட் சான்ஸும் தனது பத்தொன்பது வயது கிழட்டு நாய் ஹென்றிக்ஸை வைத்து சோதனை செய்தார். ‘நான் அதைப் பிடிக்கவில்லை. அது சுதந்தரமாக ஆனந்தமாக பாலத்தின் மேல் நடந்துபோனது. வலதுபுறத்தின் அந்த இடம் வந்ததும் ஒருமாதிரி ஆகிவிட்டது. கட்டைச் சுவரின் மேல் கால்களால் பிராண்ட ஆரம்பித்துவிட்டது. வயதான காரணத்தினால் அதனால் எம்பிக் குதிக்க முடியவில்லை.’
சான்ஸ், அந்த இடத்தில் தன் நாய் ஏதையோ கண்டு, அல்லது கேட்டு, அல்லது ஏதோ வாசனையால் ஈர்க்கப்பட்டதால் அப்படிச் செய்துள்ளது. அது எதனால் என்று தெளிவாகக் கண்டறிய வேண்டும் என்றார். பின் டேவிட் செக்ஸ்டன் என்ற விலங்கியல் சிறப்பு நிபுணர் அந்த ஆராய்ச்சியில் இறங்கினார்.
நாய்களைப் பயமுறுத்தும் விதமாக தோற்றத்தைக் கொண்ட எந்தப் பொருளும் அங்கில்லை. நாய்களை மிரளச் செய்யும் விதமான ஒலிகளும் அங்கே கேட்பதில்லை. எனவே ஏதோ வாசனைதான் காரணம் என்ற முடிவுக்கு வந்தார். பாலத்தின் கீழ் எலிகள் நிறைய இருந்தன, கூடவே மிங்க் என்ற பிராணிகளும். (மிங்க் – குளிர் பிரதேசங்களில் வாழும் பாலூட்டி விலங்கு. அதன் ரோமத்துக்காக (Fur) வேட்டையாடப்படுவது.) எலிகளைவிட, மிங்குகளின் மணம் நாய்களைத் தூண்டி இழுப்பவையே.
இதனைக் கண்டறிந்த டேவிட், பத்து வேறு வேறு நாய்களை பாலத்தில் நடக்க விட்டு ஆராய்ச்சி செய்தார். அவற்றில் ஏழு நாய்கள் மிங்குகளினால் ஈர்க்கப்பட்டன. ‘மிங்குகளை வேட்டையாடுவதற்காக நாய்கள் பாலத்திலிருந்து குதிக்கின்றன. இதுவே மர்மத்துக்கான விடை’ என்றார் டேவிட்.
விஷயம் தீர்ந்துவிடவில்லை. மிங்குகள் சென்ற நூற்றாண்டில் பாதியில்தான் பிரிட்டனுக்கு அமெரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்டன. பின்பே அவை பல்கிப் பெருகின. ஸ்காட்லாந்தில் பல பாலங்களுக்கு அடியில் மிங்குகள் ஆயிரக்கணக்கில் வாழ்கின்றன. இருந்தும் ஏன் இந்தப் பாலத்திலிருந்து மட்டும் நாய்கள், மிங்குகளுக்காக, அதுவும் வலதுபுறத்திலிருந்து மட்டும் குதிக்க வேண்டும்?
நாய்களை அழைத்து வருபவர்கள் மன அழுத்தத்தில், தற்கொலை எண்ணத்துடன் இருந்தால் அந்த உள்ளுணர்வு நாய்களுக்கும் பரவும் என்றொரு மேலோட்டமான கருத்தும் உண்டு. ஆனால் நாய் ஓனர்கள் எல்லோருக்குமே அப்படிப்பட்ட எண்ணம் இருக்க வாய்ப்பில்லையே. தவிர, தானே வந்து தனியே செத்துப் போகும் நாய்களை என்ன சொல்ல?
இப்போது வரை ஓவர்டவுன் பாலத்தின் நாய் மர்மம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. அது தீர வேண்டுமென்றால் இரண்டு விஷயங்கள் நடக்க வேண்டும். ஒன்று ஏதாவது ஒரு நாய் தற்கொலை செய்வதற்கு முன்பாக ‘என் சாவுக்குக் காரணம்…’ என கடிதம் எழுதி வைத்துவிட்டுச் சாக வேண்டும். அல்லது நாமே நாயாக மாறி, ஓவர்டவுன் பாலத்துக்குச் சென்று…

(தமிழக அரசியல் இதழில் வெளிவந்து கொண்டிருக்கும் ‘வெளிச்சத்தின் நிறம் கருப்பு’ தொடரிலிருந்து ஓர் அத்தியாயம்.)

 

வெளிச்சத்தின் நிறம் கருப்பு – அத்தியாயம் 01

தமிழக அரசியல் வாரமிருமுறை இதழில் நான் எழுத ஆரம்பித்துள்ள வெளிச்சத்தின் நிறம் கருப்பு தொடரின் முதல் அத்தியாயம் உங்களுக்காக. (சென்ற ஞாயிறு இதழில் வெளியானது.)

***

பூ ஒன்று செடியிலிருந்து உதிர்ந்த ஒரு சமயத்திலோ, நீர்க்குமிழ் ஒன்றை காற்று மோதி உடைத்த சமயத்திலோ, வண்ணத்துப் பூச்சி ஒன்று தன் சிறகை இழந்த சமயத்திலோ அந்தக் காதல், அவர்கள் உறவு முறிந்திருக்க வேண்டும்.

ஹென்றி ஸீக்லேண்ட் என்ற காதலன், தனது நீண்ட நாள் காதலியை விட்டு நிரந்தரமாகப் பிரிந்தான். உறவு முறிய ஓரிரு சுடுசொற்கள்கூட போதுமே. இருவரும் திருமணம் செய்துகொண்டு, ஏழெட்டு குழந்தைகள் பெற்று, பேரன் பேத்தி எடுத்து… ஹென்றியின் காதலிக்கு ஏராளமான கனவுகள். அவை எல்லாம் வெறும் கனவுகள் மட்டுமே என்று அவள் உணர்ந்த நொடியில் விரக்தியை உச்சத்தைத் தொட்டாள். தனது நிகழ்காலத்தை, ‘இறந்த’காலம் ஆக்கினாள்.

அவள் தற்கொலை செய்துகொண்டதுகூட ஹென்றியை எந்த விதத்திலும் பெரிதாகப் பாதிக்கவில்லை. அந்தக் காதலிக்கு ஓர் அண்ணன் இருந்தான். பாசமலர் சிவாஜி வகையறா பிரதர். தங்கையின் கோர முடிவு அவனை ஏராளமாக உலுக்கியிருந்தது. துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு ஹென்றியைப் பழிவாங்கக் கிளம்பினான்.

ஹென்றி தன் வீட்டுத் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தான். அங்கே திடீரென உதித்த அண்ணன், சற்று தொலைவிலிருந்து கைகள் நடுநடுங்க, ஹென்றியின் தலைக்குக் குறிபார்த்தான். அண்ணன், அப்போது கெட்ட வார்த்தைகள் கலந்த ஆங்கிலத்தில் ஏதாவது டயலாக் விட்டிருக்கலாம். அவனது துப்பாக்கி தோட்டா ஒன்றை வெளியே விட்டது.

ஹென்றி சுருண்டு விழுந்தான்.

‘அய்யோ… கொலை செய்துவிட்டேனா?’ – சில நொடிகளில் அண்ணனை பயம் கவ்விக் கொண்டது. அந்த பயம், உடனே உருமாற்றமும் அடைந்தது. ‘நினைத்தபடியே பழிவாங்கிவிட்டேன். இனி எனது பாசமலரின் ஆத்மா சாந்தியடையும்.’ அண்ணன், தன் தன் நெற்றியில் துப்பாக்கியை வைத்து விசையை அழுத்தினான். இன்னொரு தோட்டா அவனது உயிரைக் குடித்தது.

சில நிமிடங்கள் கடந்திருக்கும். ஹென்றி மயக்கம் தெளிந்து எழுந்தான். ‘நான் உயிரோடுதான் இருக்கிறேனா!’ – அவனாலேயே நம்ப முடியவில்லை. தோட்டா, அவனது நெற்றியைத்தான் உரசிக் கொண்டு சென்றிருந்தது. உயிருக்குச் சேதாரமில்லை. அவன் அருகிலிருந்த மரத்தைப் பார்த்தான். அதைத் துளைத்திருந்த தோட்டா, உள்ளே பத்திரமாகத் தஞ்சமடைந்திருந்தது. இன்னொருபுறம் அண்ணன் செத்துக் கிடந்தான்.

இந்தச் சம்பவம் நடந்தது 1893ல். நடந்த இடம் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்திலுள்ள ஹனி குரோவ் நகரில்.
இந்த இடத்தில் பாஸ்ட் பார்வேர்ட் பட்டனை அழுத்தி, 1913க்கு வந்துவிடலாம்.

ஹென்றி அதே வீட்டில்தான் சுபிட்சமாக வாழ்ந்து கொண்டிருந்தான். ஆனால் என்ன, தோட்டத்தில் அந்தத் ‘தோட்டா மரம்’ கண்ணில்படும்போதெல்லாம் பழைய காதலியின் நினைவு அநாவசியமாக வந்து தொலைத்தது. இந்த மரத்தை எதற்கு விட்டு வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் ஒருநாள் வலுப்பெற்றது.

ஹென்றி, கோடாரியுடன் அந்த மரத்தை நோக்கிச் சென்றான். கோடாரி வேலைக்கு ஆகவில்லை. மரம் புஜபலம் காட்ட, ஹென்றிக்கு கோபம் வந்தது. மரத்தைத் தகர்த்தெறிய முடிவு செய்தான். மரத்தில் சில டைனமைட்டுகள் கட்டப்பட்டன. பலத்த சப்தம். மரம் நாலாபக்கமும் சிதறியது. பறவைகள் அலறிக் கொண்டிருந்தன.

ஹென்றி அதை உணரும் நிலையில் இல்லை. இறந்து கிடந்தான். உடலில் வேறெங்கும் காயங்களில்லை, ஆனால் அவன் தலையில் இருந்து மட்டும் ரத்தம் வடிந்து கொண்டிருந்தது. அந்தப் பழைய தோட்டா, அச்சமயம் ஹென்றியின் தலையில் தஞ்சமடைந்திருந்தது.

‘அந்தத் தோட்டாவால்தான் அவன் உயிர்போக வேண்டுமென்பது விதி. அதனால்தான் இருபது வருடங்கள் கழித்து அதே தோட்டாவால் செத்திருக்கிறான்.’ ‘அந்த மரத்தைப் பார்த்திருக்கிறாயா? பேய் மரம். அந்த அண்ணனின் ஆவி அதில்தான் காத்திருந்தது. சமயம் வாய்த்தபோது கொன்றுவிட்டது.’, ‘ஹென்றி ஏமாற்றிய அந்தக் காதலியின் ஆவிதான் தோட்டாவுக்கும் புகுந்து அவனைப் பழி தீர்த்துவிட்டது.’

பலருக்கும் பல கருத்துகள். விதவிதமாகப் பேசிப் பேசி மாய்ந்துபோனார்கள். பழைய தோட்டா தலையில் பாய்ந்துதான் ஹென்றி இறந்துபோனான் என்பதில் மாற்றமில்லை. இருந்தாலும், என்றோ மரத்துள் புதைந்துபோன தோட்டா, மீண்டும் குறிபார்த்துப் பாய்ந்து வந்து உயிரைப் பறித்திருக்கிறது எனில், அதன்பின் உள்ள மர்மம் என்ன?
விடை இல்லை.

1657, மார்ச் 4 அன்று டோக்கியோ என்ற நகரமே சுடுகாடு ஆகிப் போனதன் பின்னணியில் உள்ள மர்மத்துக்குக் கூட விடை கிடையாது.

இன்றைய டோக்கியோவின் அன்றைய பெயர் இடோ (Edo), ஜப்பானின் மிகப்பெரிய வணிக நகரம். சுமார் மூன்று லட்சம் பேர் வசித்தார்கள். நெருக்கமாக அமைந்த வீடுகள் (மரத்தால், காகிதக் கூழினால் ஆனவை), குறுகலாக அமைந்த தெருக்கள், நீளமான சந்தைகள், நிறைய கோயில்கள், பாலங்கள் கொண்ட நகரம் அது.

கனத்த சாரீரமுடைய ஒருவர் பலமாகத் தும்மினால்கூட ‘நில அதிர்வு’ ஏற்படும் சபிக்கப்பட்ட தேசம்தானே ஜப்பான். 1657, மார்ச் 2 அன்று நண்பகலில் ஏதோ ஓரிடத்தில் சிறிய அளவில் நெருப்பு பரவ ஆரம்பித்தது. எங்கிருந்தோ கிளம்பிவந்த சூறாவளிக் காற்று அந்த நெருப்பின் இருப்பை பல மடங்காக்கியது. அந்தக் காலத்திலேயே இடோ நகரில் தீயணைப்புப் படை இருந்தது. ஆனால் அளவில் மிகச் சிறியது. அவர்கள் நெருப்பிடம் தோற்றுப் போனார்கள். மார்ச் இரண்டாம் தேதி இன்முகத்துடன் தன் சேவையைத் தொடங்கிய தீ, மூன்றாம் தேதி முழுவதும் மும்மரமாக வேலை பார்த்துவிட்டு, நான்காம் தேதி நண்பகலுக்குப் பின்னரே ஓய்வெடுக்கச் சென்றது.

புகைமூட்டத்தினுள் புதைந்திருந்த இடோ நகரில், கால்வைத்த இடமெல்லாம் கருகிய உடல்கள். அந்தப் ‘பேரழிவு நெருப்பு’ பரவக் காரணம் என்ன?

நில அதிர்வாகத்தான் இருக்கும் என்பது பொதுவான கருத்து. ஆனால் இன்றைக்கும் ஜப்பானியர்களைக் கேட்டால், இடுங்கிய கண்களில் பயம் பரவ, நடுங்கும் குரலுடன் அந்தச் சம்பவத்தைச் சொல்வார்கள்.

ஜப்பானிய இளம்பெண் ஒருத்தி விலையுயர்ந்த, பகட்டான கிமோனோ (Kimono, ஜப்பானியப் பெண்கள் அணியும் முழுநீள கவுன்) ஒன்றை வாங்கி ஆசையுடன் அணிந்தாள். ஏனோ, அடுத்த சில நாள்களிலேயே நோய்வாய்ப்பட்டு படுக்கையில் விழுந்தாள். என்ன நோயென்று பிறர் அறியும் முன்பே செத்துப் போனாள்.

அவள் ஆசையுடன் வாங்கி வைத்திருந்த கிமோனோ, இன்னொரு இளம்பெண்ணுக்கு விற்கப்பட்டது. அவளும் அணிந்துகொண்டு அழகு பார்த்தாள். சில நாள்களிலேயே மர்ம நோயொன்று அவளை அணிந்துகொண்டு அழகு பார்த்தது. இரண்டாமவளும் இறந்து போனாள். மூன்றாவதாக கிமோனோ, இன்னொரு இளம்பெண்ணிடம் சென்று சேர்ந்தது. அவளுக்கும் அதே கதி. அதோ கதி.

கிமோனோ அணிந்த பெண்

இடோ நகரமெங்கும் விஷயம் பரவியது. ‘அந்த கிமோனோவில் துர்சக்தி ஏதோ புகுந்துள்ளது. அதுதான் மூன்று இளம்பெண்களின் உயிரை எடுத்துள்ளது.’ மதகுரு ஒருவரிடம் அந்த மர்ம கிமோனோ ஒப்படைக்கப்பட்டது. ஊரே கூடி நிற்க, மதகுருவும் அந்த கவுனைப் பரப்பி வைத்து மந்திரமெல்லாம் ஓதி, சடங்குகள் செய்து, எரிகின்ற கட்டை ஒன்றை எடுத்து அந்த கிமோனோவுக்குக் கொள்ளி வைக்க…

அச்சுறுத்தும் ஊளைச் சத்தத்துடன் சூறாவளிக் காற்று ஒன்று எங்கிருந்தோ கிளம்பி வர… உயரமாகக் கிளம்பிய தீ, திகுதிகுவென வேகமாகப் பரவ…

அந்தச் சம்பவத்தால் ஏற்பட்ட இழப்பு – சுமார் ஒரு லட்சம் மனித உயிர்கள். பல்லாயிரக்கணக்கான கால்நடைகள். முந்நூறு கோயில்கள். அறுபது பாலங்கள். அநேக கட்டடங்கள். 60 -70 சதவிகித இடோ நகரமே தீக்கிரையாகியிருந்தது. இதுவரை ஜப்பான் சந்தித்தப் பேரழிவுகளில் இதுவும் ஒன்று.

*
உலகின் முதல் மனிதனுக்கு சூரியன், சந்திரன், வானம், கடல், மலை உள்பட தன்னைச் சுற்றியிருந்த ஒவ்வொன்றுமே விநோதமாகவும் மர்மமாகவும்தான் இருந்தன. ஒவ்வொன்றையும் கண்டு பயந்தான். இயற்கையில் அவன் பயந்த விஷயங்களை இறைவனாகப் பார்க்க ஆரம்பித்தான்.

எப்போது மனிதன் அறிவு சார்ந்தும், அறிவியல் சார்ந்தும் உலகைப் பார்க்க ஆரம்பித்தானோ, அப்போதிருந்தே இயற்கை மீதான வீண்பயம் விலகியது. எவையெல்லாம் விநோதமாகத் தெரிந்தனவோ, பின் அவையே அறிவியலை வளர்க்க உரமாக ஆயின. பகுத்தறிவு வளர மூடநம்பிக்கைகள் பலவும் தகர்ந்தன.

இருந்தாலும் ‘உலகம் மர்மங்களால் ஆனது’ என்று பறைசாற்றும்படியாக, மனித அறிவுக்கும் அறிவியலுக்கும் பிடிபடாத, விடைதெரியாத மர்மங்கள் காலம்தோறும் பெருகிக் கொண்டேதான் செல்கின்றன. மேலே பார்த்தபடி தோட்டாவாக, கிமோனோவாக விநோத விபரீதங்கள் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கின்றன.

இந்தத் தொடர் எதைப் பற்றியெல்லாம் பேசப்போகிறது என்று பட்டியலிடுவது கடினம். ஆனால் குண்டலினி வித்தையால் பறக்க வைக்கும் சாமியார், சிவலிங்கத்தைக் கக்கும் ஆன்மிகவாதி, கூனர்களையும் குருடர்களையும் குணமாக்கும் மதகுரு போன்ற டுபாக்கூர்களை நாம் சீண்டப் போவதில்லை. ஸ்பை கேமரா வைக்கப்படாத அறையில் அவர்கள் சுபிட்சமாக வாழ்ந்துவிட்டுப் போகட்டும். தவிர ஆவி, பேய், பிசாசு, பில்லி, சூனியம், கண்கட்டு வித்தை என்ற மிகக் குறுகிய வட்டத்துக்குள்  மட்டும் நாம் சுற்றி வரப்போவதில்லை.

நமக்கான தளம் மிக மிகப் பெரியது. நாம் ஏற்கப் போகும் பாத்திரங்கள் (தசாவதாரம் கமல்ஹாசனைக் காட்டிலும்) ஏராளம். ஓர் அத்தியாயத்தில் நாம் அறிவியல் ஆராய்ச்சியாளராக மாற வேண்டியதிருக்கும். அடுத்ததில் உளவியல் மருத்துவராக. அதற்கடுத்த அத்தியாயங்களில் தொல்லியல் வல்லுநர், வரலாற்று ஆய்வாளர், வானியல் அறிஞர், துப்பறியும் அதிகாரி, விலங்கியல் நிபுணர், இயற்கை ஆர்வலர், அவசியப்பட்டால் பேய் ஓட்டும் மந்திரவாதியாகவும் மாற வேண்டியது வரலாம்.

பகுத்தறிவைப் பக்கத்துத் தெரு சேட்டிடம் அடகு வைத்துவிட்டு இந்தத் தொடரைப் படிக்கத் தேவையில்லை. உலகில் பலராலும் விடைகாண முடியாத மர்மங்களைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தவே இந்தத் தொடர். நம் அறிவுக்கும் அறிவியலுக்கும் அப்பாற்பட்ட மர்மங்கள், விநோதங்கள், விசித்திரங்கள் மீது வெளிச்சம் பாய்ச்சுவதே இத்தொடரின் நோக்கம்.

எனில், அந்தத் தீராத புதிர்களுக்கு இதில் விடை கிடைக்குமா என்றால், என் பதில் – அந்த வெளிச்சத்தின் நிறம் கருப்பு!

(வெளிச்சம் பரவும்)