கதவை மூடு! கடன்காரன் போகட்டும்!

(இந்தக் கட்டுரையைப் படிக்கும்போது உங்களுக்கு மைன்டே ரிலாக்ஸ் ப்ளீஸ், டோரைத் திற – காற்று ‘கம்’மட்டும், ALL-க்கும் ஆசைப்படு – போன்றவை ஞாபகத்துக்கு வந்தால் அதற்கு அடியேன் பொறுப்பல்ல, அது உங்கள் ஞாபக சக்தியின் கோளாறு!)

மனம் ஒரு மங்காத்தா! உள்ளே வெளியே உள்ளே வெளியே எனத் துள்ளிக்குதிக்கும் புனிதச் சாத்தான்! மனம் ஒரு பத்தி மானாவாரியா பேசலாம்!  இது (கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்லாமல்) உங்கள் உள்ளங்களின் உள்ளே வந்து எட்டிப்பார்க்கும் உற்சாகத் தொடர். உங்கள் இதயக் கதவைப் படாரெனத் திறந்து சடாரென (தொறந்த வீட்டில் வாலாட்டிக் கொண்டே) நுழையும் டானிக் தொடர். ஆனால் இது தொடரல்ல!

உங்களை நீங்களே உற்றுப் பார்க்க வேண்டிய தருணம் இது. நன்றாகப் பாருங்கள். ஆழமாகப் பாருங்கள். அழுத்தமாகப் பாருங்கள். எவ்வளவு முடியுமோ அவ்வளவு பாருங்கள். பார்த்துக் கொண்டே இருங்கள். அதற்கு மேலும் உங்களை உங்களாலேயே பார்க்க முடியாது. வெறுப்பு வந்து விடும். செருப்பைக் கழற்றி விடு! அடுப்பை அணைத்து விடு! பழைய சோற்றைத் தின்னுவிட்டு பரலோகத்தை அடைந்துவிடு!

ஒரு குட்டிக்கதை! ஷங்கன் பிள்ளை ரொம்ப நல்லவர். ஆனால் தன்னை அறியாமல் கெட்டவராக வாழ்ந்து வந்தார் நல்லவிதமாக! அவருக்கு ‘அல்வா’ சாப்பிட ஆசை வந்தது. ஒரு கடையில் சென்று அல்வா சாப்பிட்டுவிட்டு வந்தார். ஆனால் காசு கொடுக்கவில்லை. அது தவறில்லை. ஏனென்றால் அது வெற்றிலை பாக்குக் கடை. அங்கு அல்வா கிடைக்காது. யாருக்காகவோ வாங்கி வைக்கப்பட்டிருந்த அல்வாவை ஷங்கன் பிள்ளை எடுத்துச் சாப்பிட்டார். நீதி : இருக்கும் என்று நினைத்துப் போகுமிடத்தில், இல்லாத பொருள் இருக்கும்போது, அதை இல்லாமல் செய்துவிடுதல் தவறில்லை. ஷங்கன் பிள்ளை அதைச் செய்தார். அவர் நல்லவர்தான். கெட்டவராகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளார். அதனால் உங்களை நீங்களே புரிந்துகொள்ளுங்கள். அறிந்து கொள்ளுங்கள். அரிப்பெடுத்தால் சொறிந்து கொள்ளுங்கள்!

பார். கண்ணால் பார். கண்டதை அகக் கண்ணால் நோக்கு. ‘கண்டதை’யெல்லாம் காணாதே! பசியுள்ளவன் கண்ணுக்கு இடியாப்பம், பாயா தான் தெரியும்; அதை விற்கும் இடுப்பொடிஞ்ச ‘ஆயா’ தெரியாது. தூக்கம் உள்ளவன் கண்ணுக்குப் பாய்தான் தெரியும். பக்கத்துல கிடக்குற நாய் தெரியாது. கண்ணாடி போட்டவன் கண்ணுக்கு முதலில் அந்தக் கண்ணாடிதான் தெரியவேண்டும். ஆனால், கண்ணடிக்கிற ஃபிகர் தெரிஞ்சா அது வயசுக் கோளாறு. தெரியாவிட்டால் வாயுக் கோளாறு! வாஸ்துக் கோளாறு!

ஒரு ‘ஸென்’ கதை! அவருக்கு வாழ்வில் எப்படியாவது தான் விரும்பிய ‘அதை’ வாங்கி விட ஆசை. அதனால் தன்னிடமிருந்த விமானத்தை விற்றார். சொகுசுப் பேருந்துகளை விற்றார். ஆடம்பர பங்களாக்களை விற்றார். எல்லாவற்றையும் செலவழித்துவிட்டு, மீதித் தொகையில் தான் வாங்க விரும்பியதை, அந்த ‘ஸென்’ காரை வாங்கினார். இந்தக் கதை விளக்குவது என்ன?

உன் லட்சியம் என்னவோ அதை நோக்கி ஓடு; முடியவில்லையா, ஆட்டோ வைத்துப் போ. அவ்வளவு காசில்லையா? லட்சியத்தை மாற்றிக் கொள்! ஏனெனில் மாற்றம் மட்டுமே மாற்றமில்லாதது!
யார் நீ? எங்கிருந்து வந்தாய்? ஏன் வந்தாய்? எப்படி வந்தாய்? எதற்காக வந்தாய்? இப்படி கேள்விகள் நிறைந்தது வாழ்க்கை. பதில் சொல்லிக்கொண்டிருந்தால் பஸ் போய் விடும். பல்லை விளக்கிவிட்டுப் பள்ளிக்கூடம் கிளம்பு. அது தான் வாழ்க்கை என்று யாரும் சொல்லிவிட முடியாது. ஏனெனில் அதுதான் வாழ்க்கை.

அந்தக் கதையில் ஷங்கன் பிள்ளை என்ன சொன்னார்? என்னென்னமோ சொன்னார். அவர் அங்கு சொன்னதைத்தான் இங்கு நான் மீண்டும் சொல்கிறேன். என்னவென்று கேட்கிறீர்களா? கேட்பது சுலபம். எதைச் சுலபமாக நினைக்கிறீர்களோ அதைச் செய்யாதீர்கள். அது அந்நியருக்கு நம்மை நாமே அடிமைப்படுத்தும் செயல். யார் அந்நியன்? நாம்தான் அந்நியன்! நமக்குள் ஒரு அந்நியன்! உன்னைத் திற. ஒரு எழவும் பொங்காது! பீர் டின்னைத் திற. உற்சாகம் பொங்கும்!

ஒரு சிஷ்யன் என்னைத் தேடி வந்தான். ‘சாமி! முக்தி நிலையை அடைய என்ன செய்ய வேண்டும்?’ என்றான். சொன்னேன். விளக்கமாகச் சொன்னேன். ‘முதலில் இரண்டு கைகளையும் நன்றாய் விரி. பற. கைகளைச் சிறகாய்ப் பாவித்து வேகமாக அசை. அசைத்துக்கொண்டே மொட்டை மாடிக்குப் போ. நீ இப்போது உயரத்திலிருப்பாய்! பல படிகள் உயர்ந்திருப்பாய்! கால்களால் ஓட ஆரம்பி. சுற்றிச் சுற்றி ஓடு. கண்களை மூடிக்கொண்டு ஓடு. மோனத்தைத் தேடி ஓடு. கண்ணு மண்ணு தெரியாமல் ஓடு. கட்டாயம் முக்தி நிலை கிடைக்கும். மோட்ச நிலை கிடைக்கும்’ என்றேன். செய்தான். ‘கபால’ மோட்சம் பெற்றான்.

‘பற்று’ என்பது வேண்டும். எப்பொழுதும் வேண்டும். எங்கேயும் வேண்டும். பற்று இல்லாவிட்டால் வாழ்க்கையை வாழ முடியாது. டீக்கடை முதல் மளிகைக் கடை வரை பற்றின்றி வாழுதல் உற்றதல்ல உடம்புக்கு! உனக்கு எப்போதெல்லாம் தேவையோ அப்போதெல்லாம் ‘பற்று’ வை. முடியவில்லையா ஓரமா உட்கார்ந்து ஒரு ‘தம்’மை பற்ற வை!

நடப்பதுதான் நடக்கும். நாற்காலி நடக்காது. மலை மீது மழை பொழியும். மழை மீது மலை பொழியுமா? ‘எண்ணு’வதெல்லாம் எண்ணமாகாது. சில்லறையாகக் கூட இருக்கலாம். சம்சாரம் மீது மின்சாரம் பாய்வதற்கும், மின்சாரம் மீதும் சம்சாரம் பாய்வதற்கும் குறைந்தபட்சம் ஆறு வித்தியாசங்கள் உள்ளதே! லுங்கி கட்டிக்கொண்டு வங்கி போகலாம். வங்கியைக் கட்டியவன் லுங்கி கட்டிக்கொண்டு இருந்திருக்கலாம். இதில் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டியது, ஒன்றுமில்லை! ஒன்றுமில்லாததுதான் பூஜ்யம்! ஆனால் பூஜ்யத்திற்கு மதிப்பு உண்டு. அதுதான் மனம்.

மனதைத் திறந்து வை! மூடி வைப்பதற்கு அது முந்திரிப்பருப்பு அல்ல! கதவைத் திறந்தால் காற்று வரலாம். காத்து, கருப்புக் கூட வரலாம்! பன்றிக் காய்ச்சலும் வரலாம்! முதலில் மூடி வை! கடன்காரன் வந்துவிடப்போகிறான்! ஏனெனில் மனம் ஒரு கடன்காரன்!

நாளை 91.9ல்

ஆகஸ்ட் 9, ஞாயிறு –  நாளை – 91.9 ஆஹா – கிழக்கு பாட்காஸ்டில் – பாராவின் நிகழ்ச்சி.

தனது தீவிரமான தீவிரவாத எழுத்தனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொள்கிறார். கேட்டுவிட்டு கருத்துகளைச் சொல்லுங்கள்.

நாளைய நிகழ்ச்சியைக் கேட்க நான் சென்னையில் இருக்கமாட்டேன். என் நண்பர்களைக் காண குற்றாலம் செல்கிறேன் 😉

குஹாவும் ரஹ்மானும்

ஞாயித்துக்கிழமை (ஆகஸ்ட் 2) ரெண்டு முக்கியமான விஷயம் நடக்க இருக்குது.

இந்திய வரலாறு – காந்திக்குப் பிறகு – பாகம் 1 (India After Gandhi) – ராமச்சந்திர குஹா எழுதிய புத்தகத்தின் அதிகாரபூர்வ மொழி பெயர்ப்பு – நாளை வெளியீட்டு விழா.

நேரம் : காலை 11 மணி, ஆகஸ்ட் 2, 2009

இடம் : நுங்கம்பாக்கம் அபெக்ஸ் பிளாஸா லேண்ட் மார்க்.

சிறப்பு விருந்தினர் : ராமச்சந்திர குஹா மற்றும் நீங்கள்.

மறக்காம வந்துருங்க நண்பர்களே.

அடுத்த விஷயம், ஞாயிறு பகல் 12 – 1 ஒளிபரப்பாகிற கிழக்கு பாட்காஸ்ட் சம்பந்தப்பட்டது.

ஆஹா FM 91.9ல இந்த வார டாபிக் ஏ.ஆர். ரஹ்மான்.

என். சொக்கன் எழுதி தமிழ்ல முதல் முறையா ஏ.ஆர். ரஹ்மானோட வாழ்க்கை புத்தகம் வெளியாகி இருக்கிறது. ரஹ்மான் குறித்து நிகழ்ச்சில நம்மகூட பேசப்போறது சொக்கனும், தமிழ் சினிமா ஆய்வாளருமான பா. தீனதயாளனும்.

அன்னிக்கு நிகழ்ச்சி ரஹ்மான் பற்றி இருந்தாலும், பேசுனதுல பாதிக்குமேல் ராஜா Vs ரஹ்மான் – ஒப்பீடாகவும் சர்ச்சைகளாகவும்தான் போச்சுது. அதுவும் நிகழ்ச்சிக்கு இடையில ‘இளையராஜாவின் முரட்டு பக்தர்’ ஐகாரஸ் பிரகாஷ் போன் பண்ணி, வெறித்தனமா ஒரு கேள்வி கேட்டு சொக்கனை மிரட்டினார். அப்புறம் ஸ்லம்டாக் மில்லியனர் படத்துல பாடுன பாடகி ஸ்ரீமதுமிதாவும் போன் வழியா நிறைய பேசினாங்க, பாடுனாங்க.

மொத்தத்துல ஏ.ஆர். ரஹ்மான் குறித்த அந்த கிழக்கு பாட்காஸ்ட் நிகழ்ச்சி ரொம்ப சுவாரசியமாகவே அமைஞ்சுது. நாளைக்கு பகல் 12-1, ஆஹா 91.9, கேட்க மறந்துடாதீங்க.

சார், வண்டி இருவது நிமிசம் நிக்கும் சார்…

சார்… வண்டி இருவது நிமிசம் நிக்கும் சார்… டீ, காப்பி, டிப்பன் சாப்பிடுறவங்கள்ளாம் எறங்கி சாப்பிடலாம் சார்..’

ஏய்… எந்திரிடா வெண்ணை… நைட்டு ரெண்டு மணிக்கு கொட்டுற பனியில ஒருத்தன் கா கா-னு கத்திக்கிட்டிருக்கேன். பஸ்சுல சன்னலோரமா சீட்டு கிடைச்சவுடனே, எதோ பரலோகத்துலயே சீட்டு கிடைச்சாப்புல பவுசா தூங்கிருவீங்களே.. அடச்சீ எந்திரி…

தப்பா நெனைச்சுக்காதீங்க. இந்த சாலையோர ஓட்டலுதான் எனக்கு எல்லாம். இந்த ரூட்டுல ஒரு மணி நேரத்துக்கு அம்பது வண்டி போச்சுதுன்னா, அதுல பத்து, பதினைஞ்சுதான் எங்க மொபசல் ஓட்டலுக்குள்ள வருது. ஏன்னா போட்டிக்கு நிறைய ஓட்டலு பக்கத்துலயே இருக்கு. பஸ்சு டிரைவரு, கண்டக்டரை சரிகட்டி, வண்டியை நம்ம ஓட்டலு பக்கமா நிப்பாட்ட வைக்குறதுக்குள்ள நாங்க படுற பாடு எங்களுக்குத்தான தெரியும். நிக்குற வண்டியில பாதி பேரு, உள்ளே ஒக்காந்து உலக மகா தூக்கம் தூங்கிட்டு இருந்தாங்கன்னா, எங்க பொழைப்பு என்னாவறது?

அதான் தூங்குறவனை எழுப்புறதுல தயவு தாட்சண்யமே பாக்குறது கிடையாது. வண்டி வந்து நின்னாப் போதும். உலக்கையை வைச்சு இடிக்குற மாதிரி என் கையால பஸ்ஸைச் சுத்தித் தடதடனு தட்டிக்கிட்டே ‘டீ… காப்பி… டிப்பன்’னு கத்த ஆரம்பிச்சுருவேன். தட்டுற, தட்டுல அவனவன் அரண்டு, மிரண்டு பதறி அடிச்சுக்கிட்டு முழிப்பான். ஒண்ணுமே புரியாம இறங்கி வந்துருவான்.

ஆனா, சில பேரு இருக்கான் பாருங்க, ஏதோ வாழ்க்கையில அன்னிக்குத்தான் மொத மொதலா தூங்குறாப்புல போஸ் கொடுத்துட்டு இருப்பானுங்க! அது என்னை அவமானப்படுத்துற மாதிரி இருக்கும். விடுவேனா… என்னோட வால்யூமை ஃபுல்லா ஏத்திக்கிட்டு, பஸ் சன்னல்கிட்ட போயி கத்தோ கத்துன்னு கத்துவேன். பஸ்சு மேல முட்டோ முட்டுன்னு முட்டுவேன். அப்புறமென்ன, எவனாயிருந்தாலும் இறங்கித்தான் ஆவணும்.

இந்த மொபசல் ஓட்டல் வளாகத்துல சம்பந்தமேயில்லாத ஆடியோ கேசட் கடை ஒண்ணு துருத்திக்கிட்டிருக்கும். அது எதுக்குன்னு தெரியுமா! தூங்குறவங்களை எழுப்ப இன்னொரு டெக்னிக். கேசட்டைப் போட்டு, பெருசாக் கத்த விட்டுருவோம்.

‘பார்த்த முத நாளே.. உன் மூஞ்ச
பார்த்த முத நாளே..
டாஸ்மாக் போனேனே – நாந்தான்
டாஸ்மாக் போனேனே!’

இந்த ரேஞ்சுலதான் பாட்டெல்லாம். இதைப் பாடுறதுக்குன்னே கொடூர குரல்களோட ஒரு குரூப் இருக்குது. இதைக் கேட்டா, செத்துப்போனவனே கூட எந்திரிக்க சான்ஸ் இருக்கு. இந்தக் கேசட்டையும் சில ‘நல்ல மனுசங்க’ காசு கொடுத்து வாங்கிட்டுப் போவானுங்க தெரியுமா!

பஸ்சை விட்டு இறங்குன உடனே பாதி பேரு அப்படியே அங்கிட்டும் இங்கிட்டு நோட்டம் விடுவாங்க. அதாவது டாய்லெட்டுக்குப் போகாம, அப்படியே ஓரமா ஒதுங்கிடலாம், ஒரு ரூவாயை மிச்சப்படுத்தலாமுன்னு உலக மகா திட்டம் போடுவாங்க. வா மவனே வா, நீ உற்சாகமா திறந்தவெளி புல்கலைக்கழகத்துல போறதுக்கா, நாங்க காசைப் போட்டு கருமத்தைக் கட்டி வெச்சிருக்கோம்னு மரியாதையாச் சொல்லுவேன். அப்படியும் சில பேரு கேட்க மாட்டான். இன்னும் கொஞ்சம் தள்ளிப் போயி இருக்கலாமுன்னு அறிவுபூர்வமா திட்டம் போடுவானுங்க. நான் விடுவேனா.

‘எப்பா.. நீ உள்ள போயி இருக்க வேணாம். எங்கிட்டு வேணும்னாலும் போய் இரு. ஆனா ஒரு ரூவாக் காசைக் கொடுத்துரு’ன்னு கட் அண்டு ரைட்டாச் சொல்லுவேன். அப்புறமென்ன, ஒரு ரூவாயக் கொடுத்துட்டு, மூக்கைப் புடிச்சிக்கிட்டு உள்ளயே போயிருவான்.

பக்கத்துல நாலு மைலு தொலைவுல இருக்குற பசுமரத்துப்பட்டிதான் என் சொந்த ஊரு. நான் இந்த ஓட்டல்ல எட்டு வருசமா இப்படி எடுபுடி வேலைகளைப் பாத்துக்கிட்டிருக்கேன். எல்லா வேலையும் செய்வேன். இப்படி வந்து நிக்குற வண்டிங்க மத்தியிலதான் இந்த டேவிட்டோட வாழ்க்கை ஓடிக்கிட்டிருக்கு.

நேத்து வடநாட்டுக்காரன் ஒருத்தன் வந்தான். செம கடுப்பைக் கிளப்பிட்டான். ஆம்னி பஸ்ல இருந்து இறங்குனான். கேவலமா ஒரு கொட்டாவி விட்டுக்கிட்டே படு பங்கரையா சோம்பல் முறிச்சான். இளநி எவ்ளோன்னு இங்கிலீஷ்ல விசாரிச்சான். வாங்கல. அடுத்து கூல்டிரிங்ஸ் எவ்ளோன்னு ஹிந்தியில விசாரிச்சான். வாங்கல. அடுத்து டீ எவ்ளோன்னு சைகையிலேயே விசாரிச்சான். அதையும் குடிக்கல. இப்படி கொலை கேஸை விசாரிக்க வந்த இன்ஸ்பெக்டர் மாதிரி எல்லாத்தையும் விசாரிச்சிட்டு ஓரமா போய் ஒக்காந்துட்டான்.

எனக்குள்ள டென்ஷன் தாண்டவமாடிடுச்சு. அவன்கிட்ட போய், ஒரு ரசீதை நீட்டி ‘டென் ரூபிஸ்’னு மிரட்டலா சொன்னேன். ‘கியா?’ன்னு முழிச்சான். ‘டிக்கி பார்க்கிங் சார்ஜ்’னு சொன்னேன். ஒண்ணும் புரியாம பத்து ரூபாயைக் கொடுத்துட்டு பஸ்சுக்குள்ள ஏறிப் பதுங்கிட்டான்.

போன வாரம் இன்னொரு காமெடி நடந்துச்சு. ஒரு கவர்மெண்டு பஸ்சு வந்துச்சு. உள்ளயிருந்து வந்த ஆம்பிளைங்க எல்லாம், படு சோகமா நாலு நாள் தாடியோட இறங்குனாங்க. ஒருத்தர் மட்டும் எங்கிட்ட வந்து, ‘ஏம்ப்பா, இங்க சலூன்லாம் கெடையாதா?’ன்னு கேட்டாரு. ‘இல்லை’ன்னு சொன்னவுடனே, ‘முடிஞ்சா ஒரு சலூனையும் வைச்சிருங்க அப்பு. பாதயாத்திரையா கெளம்பியிருந்தாக் கூட இந்நேரம் ஊரு போய்ச் சேர்ந்திருப்பேன். கட்டையில போறவன்… இந்த பஸ்சுல நான் என்னிக்கு ஏறி ஒக்காந்துன்னு எனக்கே நியாபகத்துல இல்ல. இன்னும் ஊரு போய்ச் சேரல’ன்னு கண்ணீர் மல்க கதறிட்டாரு. அப்ப, அந்த பஸ் கண்டக்டரு வந்து, ‘ஏம்ப்பா, எல்லாரும் வண்டியில ஏறியாச்சா? நேராவுது. காலாகாலத்துல போய்ச் சேர வேணாமா’ன்னாரே பாக்கலாம்.

ஒரு வழியா அந்தக் கட்டை வண்டி கெளம்பிப் போச்சுது. அடுத்த அஞ்சு நிமிஷம் கழிச்சு, ஒரு ஆளு ‘குய்யோ முய்யோ’ன்னு கத்திக்கிட்டே ஓடியாந்தாரு. ‘இங்கிட்டுருந்த மஞ்சக் கலரு வண்டியெங்க? அய்யய்யோ.. நான் அதுல போனுமே’ன்னு அழுதாரு. ‘அதான் போயிருச்சே. போனும் போனும்னா என்னாத்த பண்ணுறது’ன்னு கேட்டேன்.

‘அய்யா.. வவுத்தக் கலக்குச்சுன்னு வெளிய போனேன். போயிட்டு வந்தவுடனே, பசிக்குற மாதிரி இருந்துச்சேன்னு போய்ச் சாப்பிட்டேன். மறுபடியும் வவுத்தக் கலக்குச்சுதுன்னு வெளிய போய்ட்டு வந்தேன். மறுபடியும் பசிச்சிருமோன்னு பயந்து இன்னொரு தடவைக் கொஞ்சமா சாப்பிட்டேன். பஸ்ல ஏறினா திரும்ப வவுத்தக் கலக்குமோன்னு பயம் வந்துருச்சு. அதான் மறுபடியும் வெளிய போய்ட்டு வந்து, பார்சல் ஒண்ணு வாங்கிட்டு வந்து பாக்குறேன். பஸ்சைக் காணோமே’ன்னு அழுதாரு.

‘யோவ்.. நீ உன் இஷ்டத்துக்கு ‘உள்ளே-வெளியே’ விளையாண்டுக்கிட்டு இருந்தேன்னா பஸ்சு வெயிட் பண்ணுமா? சரி, அடுத்த வண்டி இந்தா நிக்குது. டிக்கெட் வெச்சிருக்கேல்ல. சொல்லி ஏத்தி உடுறேன். கவலைப்படாத, நீ வந்த வண்டி போற ஸ்பீடுக்கு அங்கப்பிரதட்சணம் பண்ணிக்கிட்டே போனாக்கூட ஓவர்டேக் பண்ணிடலாம்’னு சமாதானப்படுத்தி அடுத்த வண்டியில அனுப்பி விட்டேன்.

ம்.. இப்படியே ‘டீ.. காப்பி.. டிப்பன்’னு கூவிக்கிட்டு, வர்ற வண்டிக்கெல்லாம் கண்ணாடி துடைச்சு விட்டுக்கிட்டே பொழைப்பை எவ்வளவு நாள்தான் ஓட்ட முடியும்? நானும் எனக்குன்னு சில கனவுகளை வெச்சிருக்கேன். எடுபிடியா நான் வேலை பாக்குற இந்த ஓட்டல் வளாகத்துலயே ஒரு சின்னக் கடையைப் போடணும். அப்படியே சினிமாவுல வர்ற மாதிரி மளமளன்னு முன்னேறணும். கடைசியில ஒருநாள் இந்த ஓட்டல் வளாகமே எனக்குச் சொந்தமா இருக்கணும். எப்படி, சூப்பரா இருக்குல்ல!

வருங்காலத்துல நான் நடத்தப்போற ஓட்டல்ல பஸ்சு மட்டும் வந்து நிக்காது. ஸ்பெஷலா டிராக்கு போட்டு டிரெயினெல்லாம் உள்ளாற வந்து டீ சாப்பிட்டு போற மாதிரி வசதி செய்வேன். அவ்வளவு ஏன், ரன் வே-லாம் போட்டு ஏரோ-ப்ளேனே வந்து இறங்கி இட்லி சாப்பிட்டுட்டு போகும்னா பாத்துக்கோங்க! அவ்வளவு ஹை-டெக்! நான் முதலாளியாவே இருந்தாலும், வர்றது ஏரோ-ப்ளேனாவே இருந்தாலும், பழசை மறக்க மாட்டேன். அப்பவும் நான் தட்டி எழுப்புவேன்.

‘சார்… ஏரோப்ளேன் பதினைஞ்சு நிமிசம் நிக்கும் சார்… டீ, காப்பி, டிப்பன் சாப்பிடுறவங்களெல்லாம் இறங்கி வந்து சாப்பிடலாம் சார்…’

தீபாவளி தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன!

வேற வழியே இல்லை. போற போக்கைப் பார்த்தா அப்படித்தான் நடக்கும்னு தோணுது. பிழைப்புக்காக சென்னைக்கு வந்த பிற பகுதி தமிழகத்து மக்கள் எல்லாம் 2011ல (அதாவது சமக தலைவர் சரத்குமார் முதல்வர் ஆகப்போற வருஷம்) இப்படித்தான் ஊருக்குப் போவாங்கன்னு தோணுது!)

காலங்கார்த்தால அலாரம் வைச்சு எழுந்து, படபடன்னு சிஸ்டம் ஆன் செஞ்சு, நெட் கனெக்‌ஷனை ஆன் பண்ணி, எப்போ ரயில்வே டைம் எட்டு ஆகும்னு செம விழிப்புணர்வோட படு வேகத்துல ரயில்வே டிக்கெட் பதிவு செஞ்சாக்கூட, வெயிட்டிங் லிஸ்டுன்னு நடுமண்டையில ஒரு சுத்தியல் அடி நங்குன்னு விழுகுது. (டிக்கெட் கவுண்டரில் முன்பதிவுக்காக ஏமாந்து நிற்கும் ஆயிரக்கணக்கான சக பயணிகளே எம்போன்ற கிராதகர்களை மன்னிப்பீராக!)

வருங்காலத்தில் ஏராளமான சிறப்பு ரயில்களோ, பேருந்துகளோ விட்டால்கூட கட்டுப்படியாகாது என்றே தோன்றுகிறது. அவரவர் இருக்கும் இடத்திலேயே பண்டிகை கொண்டாடிக் கொள்ள வேண்டியதுதான். அதையும் மீறி சொந்த ஊரில் மாமன் மச்சான்களோடுதான் பண்டிகை கொண்டாடுவோம் என்று மக்கள் அடம்பிடிக்கும் பட்சத்தில் அரசிடம் இருந்து ஓர் அறிவிப்பு வெளிவரும். (தேர்தல் அறிவிப்புபோல.)

‘தீபாவளி பண்டிகைக்கான கொண்டாட்ட தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வருகின்ற அக். 17 அன்று சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களுக்கும், அக். 19 அன்று தூத்துக்குடி, ஈரோடு, இராமநாதபுரம் மாவட்டங்களுக்கும், அக். 21 அன்று திருநெல்வேலி, பெரம்பலூர், சேலம், கடலூர் மாவட்டங்களுக்கும், அக். 23 அன்று கன்னியாகுமரி, மதுரை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கும் தீபாவளி கொண்டாட தேதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான ரயில் பயணச் சீட்டு முன்பதிவு ஆரம்பமாகும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் ஜே.கே. ரித்தீஷ் அறிவித்துள்ளார்.’

இன்னொரு விஷயம் தெரியுமா! தொடர்ந்து உங்களுக்கு ரயில்ல டிக்கெட்டே கிடைக்கலேன்னா உங்க ஜாதகத்துல ஐஆர்சிடிசி தோஷம் இருக்குதுன்னு அர்த்தம். அதுக்கு பரிகாரமா தொடர்ந்து அஞ்சு வாரம் மம்தா பானர்ஜிக்கு மாவிளக்குப் போட்டா எல்லாம் சரியாகிரும். ஓகேவா!