பலே பாண்டியா – மாமா மாப்ளே – பின்னணி

நேற்றிரவு (1.2.14) முதல் பலரும் ‘மாமா… மாப்ளே – பலே பாண்டியா’ பாடல் நினைவாக இருக்கின்றனர். உபயம் : ஏர்டெல் சூப்பர் சிங்கர் திவாகர். சற்று முன்புதான் அந்தக் காட்சியை யூட்யுப் வழியாகக் கண்டேன். மிக அருமையாகப் பாடினார். அந்தப் பாடலின் மூலம் திவாகர் தனக்கான வெற்றியை உறுதி செய்துகொண்டதாகவும் அறிந்தேன். திவாகருக்கு வாழ்த்துகள்.

பலே பாண்டியா – இந்தப் பாடல் உருவான பின்னணி குறித்து எம்.ஆர். ராதா குறித்த எனது புத்தகத்தில் இடம்பெற்றுள்ள விஷயங்கள் இங்கே.

‘நீயே உனக்கு என்றும் நிகரானவன்…
மாமா… மாப்ளே…’

பாடலை முதன் முதலில் செட்டில் கேட்டார் ராதா. அவரது குரல் போலவே இருந்தது அது.

‘அட யாருப்பா இது? நான் பாடுன மாதிரியே இருக்குது?’ – ஆச்சரியமாகக் கேட்டார். விவரம் சொன்னார்கள். பாடலைப் பாடிய எம். ராஜூவை உடனே பார்க்க வேண்டும் என்று விருப்பப்பட்டார் ராதா. அவர் எம்.எஸ். விஸ்வநாதன் குழுவிலிருந்தவர். வரவழைக்கப்பட்டார்.

ஒல்லியாக, சிவப்பாக இருப்பார் அவர். ராதா முன் சென்று நின்றார். ‘என்னப்பா பாடகரை அழைச்சுட்டு வரலையா?’ கேட்டார் ராதா. இவர்தான் என்றார்கள்.

‘பாடுனது நீங்களா?’ – ராதாவுக்கு ஆச்சரியம்.

‘ஆமாண்ணே’ என்றார் ராஜூ. மென்மையான குரல்.

‘எனக்கு அதிசயமா இருக்கு. பேசறப்போ இவ்வளவு மெதுவா பேசறீங்க. என் குரல்லயே பாடியிருக்கீங்க. உங்களை எப்படிப் பாராட்டறதுன்னே தெரியலை. நான் உன்னை மறக்கவே மாட்டேன் தம்பி. யாருப்பா அங்க? தம்பிக்கு காப்பி கொடுங்க’ உபசரித்து அனுப்பினார் ராதா.

அந்தப் பாடலில் நடிப்பதற்காக சிவாஜி பலமாக பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார். பாடலில் கிட்டத்தட்ட இரண்டு, மூன்று நிமிடங்களுக்கு ஆலாபனை வருமே. அதற்காகத்தான் அவ்வளவு பயிற்சி.

‘அண்ணே, நீங்க மாட்டிக்கிட்டீங்க’ என்ற போகிற போக்கில் ராதாவையும் கலாட்டா செய்துவிட்டுப் போனார் சிவாஜி. உண்மையிலேயே அவ்வளவு பெரிய ஆலாபனைக்கு உதடசைப்பதெல்லாம் ராதாவுக்குக் கடினமான காரியமாகத்தான் தோன்றியது.

நேராக டைரக்டரிடம் வந்தார்.

‘இங்க பாரு பந்தலு. கணேசன் மாதிரில்லாம் நம்மளால முடியாது. கேமராவை வைச்சுக்கோ. நான் பாட்டுக்கு ஆக்ட் பண்ணுவேன். எங்க எனக்கு உதடசைக்கிறது கரெக்டா வருதுன்னு தெரியுதோ, அந்த இடத்துல கேமாராவுக்கு முகத்தைக் காட்டுவேன். மத்த இடத்துல குனிஞ்சுகிட்டுதான் இருப்பேன். வேற வழியில்லப்பா. நீ பாட்டுக்கு டைட் குளோஸ் அப்பெல்லாம் வைச்சிடாதே. அப்பப்ப கட் சொல்லிடாதே. சரியா?’

சொல்லிவிட்டு ராதா ஷாட்டுக்குச் சென்றார்.

பாடல் படப்பிடிப்பு ஆரம்பமானது. பாதி பாடல் வரை ஒழுங்காகப் போனது. ஆலாபனைக் காட்சிகள் வரும்போது, ராதா தன் உதடசைவுகளை அட்ஜெஸ்ட் செய்ய உட்கார்ந்திருக்கும் சோபாவிலிருந்து குதியோ குதியென்று குதிக்க ஆரம்பித்தார். ஏகப்பட்ட சேஷ்டைகள் செய்தார். செட்டில் டைரக்டர், கேமராமேன், லைட் பாய் உள்பட எல்லோராலும் சிரிப்பை அடக்கமுடியவில்லை. சில ரீடேக்குகள் ஆகத்தான் செய்தன.

ஒரு கட்டத்தில் ராதா திடீரென பெரிய பாடகர் போல காதருகே தன் இடது கையை வைத்து, வலது கையை நீட்டி பயங்கர ஆக்‌ஷன் கொடுப்பதை பாடலில் காணலாம். ஆனால் அது ஆக்‌ஷன் அல்ல. நடந்த விஷயமே வேறு.

ஏகத்துக்கும் குதித்ததில் ராதாவின் விக் லூஸாகி விட்டிருந்தது. அந்த ஷாட் முடியப் போகும் நேரம் அது. விக் கழண்டு விட்டால், இன்னொரு முறை நடிக்க வேண்டியது வருமே. அந்தச் சமயத்தில்தான் பெரிய பாடகர் போல ஆக்‌ஷன் செய்து, விக்கைக் காப்பாற்றிக் கொண்டார் ராதா.

***
குறிப்பு : சிக்ஸ்த் சென்ஸ் பதிப்பக வெளியீடான எம்.ஆர். ராதா புத்தகம், நடந்து முடிந்த சென்னை புத்தகக் கண்காட்சியில் சிக்ஸ்த் சென்ஸின் டாப் 10ல் ஒன்பதாவது இடத்தைப் பிடித்தது என்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.

கலியுகம் பாடல்கள் – சிறு அறிமுகம்

மூன்று இசையமைப்பாளர்கள், ஐந்து பாடல்கள், கலியுகம் திரைப்படத்தின் பாடல்கள் புதனன்று வெளியாகின. விழாவில் மூன்று பாடல்கள், இரண்டு டிரைலர்கள் திரையிடப்பட்டன. பாடல்கள் குறித்த தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகிறார்கள். பாடல்கள் குறித்த அறிமுகம் இங்கே.

# ஏடாகூடா ஆசை…

குத்துப் பாடல்கள் மட்டுமல்ல, தன்னால் இளமை பொங்கும் பாடல்களையும் எழுத முடியும் என்று நிரூபிக்க, (ஈசன் ஜில்லாவிட்டு புகழ்) மோகன்ராஜனுக்குக் கிடைத்துள்ள வாய்ப்பு இந்தப் பாடல். இசை சித்தார்த் விபின். துள்ளலான பாடல். பண்பலை வானொலிகள் அடிக்கடி ஒலிபரப்பினால் இளைஞர்களைக் கவரும் வாய்ப்புள்ளது.

# அஜல உஜல

சென்னை மண்ணின் இலக்கியமான ‘கானா’வை இதுவரை சினிமா பயன்படுத்தியிருக்கும் விதம் வேறு. அதாவது சினிமா பாடல்களைத்தான் ‘கானா’ பாடல்களாக மற்ற ஊர்க்காரர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்படி இல்லாமல், ‘மரண கானா விஜி’யின் புகழ்பெற்ற கானா பாடலான ‘அஜல உஜல’வையும், அவரது மற்ற சில கானா பாடல்களையும் கலந்து கானாவின் வடிவம் சிதையாமல் சினிமா ட்யூன் ஆக்கியிருக்கிறார்கள். இசை அருணகிரி. மரண கானா விஜியின் குரலில் இந்தப் பாடல் நிச்சயம் ஒரு ரவுண்ட் வரும் என எதிர்பார்க்கிறேன்.

# சிரபுஞ்சி சாலையிலே…

படத்தில் வரும் ஒரே காதல் பாடல் இதுதான். வரிகள் தாமரை. இசை தாஜ்நூர். குரல் ஹரிச்சரண். ஆந்திராவின் கடப்பாவில் கண்டிக்கோட்டாவில் படமாக்கியிருக்கிறார்கள். கேமராமேன் S.R. கதிர் புகுந்து விளையாடி இருக்கிறார். பாடல் வெளியீட்டு விழாவில் இந்தப் பாடலைத் திரையிட்ட போது ‘விஷுவல்ஸ் பிரமாதம்’ என்று கமெண்ட்டுகள் குவிந்தன. மெலடி பாடலான இது, நிச்சயம் மியுஸிக் சேனல்களில் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பாகும் என்று நம்புகிறேன்.

# ஏனோ ஏனோ

உன்னைப் போல் ஒருவனில் கவிஞர் மனுஷ்யபுத்திரன் ஒரு பாடல் எழுதியிருந்ததாக செய்தி படித்த ஞாபகம். அதன்பின் கலியுகத்தில் பாடல் ஒன்றை எழுதியிருக்கிறார். ‘மனுஷ்யபுத்திரன், தனிமையை அதன் வலியைத் தனது கவிதைகளில் பிரமாதமாக வெளிப்படுத்துவார். இந்தப் பாடலும் அப்படிப்பட்ட வலியை வெளிப்படுத்துவதுதான். அதனால் அவரை எழுதச் சொல்லிக் கேட்டுக் கொண்டேன்’ – இது இயக்குநர் யுவராஜ், இசை வெளியீட்டு விழாவில் சொன்ன தகவல். பாடலைப் பாடியிருப்பவர் ராகுல் நம்பியார். இசை தாஜ்நூர்.

# வெண்ணையில…

படத்தில் இது மிகவும் ஸ்பெஷலான பாடல். இந்த பூமியே ஏங்கி, ரசித்துக் காதலித்த ஒரு பெண்ணின், பேரழகியின், நல்ல மனுஷியின் புகழ்பாடும் விதமாக இந்தப் பாடல் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது. அந்தப் பெண் சில்க் ஸ்மிதா. நாற்பது வயதுக்காரன் ஒருவனுக்கு இன்னமும் சில்க் தன்னுடன் வாழ்ந்து வருவதாகதே நினைப்பு. அவன் தான் ரசிக்கும் சில்க்கை, அவள் அழகை, அவள் வாழ்ந்த வாழ்க்கையைப் பாடும் பாடல் இது. வெளியீட்டு விழாவில் இந்தப் பாடலைத் திரையிட்டு முடித்தபின் ஏகப்பட்ட கைதட்டல். எல்லாம் சில்க்குக்குக் கிடைத்த மரியாதை. அந்த மனுஷிக்கு கலியுகம் டீம் செய்யும் மரியாதை. கடந்த இரு தினங்களில் தொலைபேசியில் பேசிய நண்பர்கள் எல்லாம் இந்தப் பாடலைக் கொண்டாட ஆரம்பித்திருக்கிறார்கள். இசை சித்தார்த் விபின். பாடியவர் முகேஷ். பாடல் வரிகளுக்குச் சொந்தக்காரர் மோகன்ராஜன்.

பூமியே காதலிச்ச பொம்பளை மேல

நான் ஆசை வெச்சேனே ராமனைப் போல

சாமியே சைட் அடிச்ச கண்களினாலே

நான் தொலைஞ்சு போனேனடா…

இந்தப் பாடலில் சில்க்கின் கிளிப்பிங்ஸை பயன்படுத்தவில்லை. பதிலாக ஓவியர் இளையராஜா வரைந்த சில்க் ஓவியங்களைப் பயன்படுத்தியிருக்கிறோம். நிச்சயம் ரசிகர்கள் மனத்தில் நீங்காத பாடலாக இது நிலைத்திருக்கும்.

வழக்கம்போல இணையத்திலும் பாடல்கள் வலம் வர ஆரம்பித்துவிட்டன. பாடல்கள் குறித்த தங்கள் கருத்துகளுக்குக் காத்திருக்கிறேன்.

குறிப்பு : ‘கலியுகம் படத்தில் பாடல் எதுவும் எழுதியிருக்கிறாயா?’ என்று பலரும் விசாரிக்கிறீர்கள். நான் இந்தப் படத்தில் வசனம் மட்டுமே எழுதியிருக்கிறேன். ‘ஏதோ செய்தாய் என்னை’ என்ற படத்தில் மட்டுமே ஒரு பாடல் எழுதியிருக்கிறேன். அதன் பிறகு எந்தப் படத்திலும் பாடல் எழுதவில்லை. அடுத்தடுத்து வசனம், திரைக்கதை என கவனம் செலுத்தவே விருப்பம்.

 

கம்யூனிஸத்துக்குத் தடை!

‘ஏதோ செய்தாய் என்னை’ என்ற திரைப்படத்தில் நான் எழுதிய முதல் திரைப்படப் பாடலான ‘போகாமல் ஒருநாளும்’  என்ற பாடல் இடம்பெற்றிருக்கிறது. சென்ற வாரம் படத்தின் பாடல்கள் வெளியாயின. எனது பாடல் வரிகளைக் குறிப்பிட்டுப் பாராட்டிய நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.

படத்தின் இசையமைப்பாளர் கணேஷ் குமாருக்கு இது இரண்டாவது தமிழ்ப் படம். முதல் படம், ‘துள்ளித் திரிந்த காலம்.’ அதில் ‘ஜெயந்த்’ என்ற பெயரில் இசையமைத்திருக்கிறார். கணேஷ் குறித்த எனது பழைய பதிவு ஒன்று இங்கே.

ஏதோ செய்தாய் என்னை – படத்துக்காக ஜாலியான காலேஜ் பாடல் ஒன்று தேவைப்பட்டபோது கணேஷ் என்னை அழைத்தார். சற்றே சவாலான விஷயங்கள் எழுத வேண்டியிருந்தால் என்னை கணேஷ் அழைப்பது வழக்கம். ‘வழக்கமான பல்லவி, சரணம் பாணியில் பாடல் அமைய வேண்டாம். இந்தப் பாடலை நான் Reggae வடிவத்தில் கொடுக்கப் போகிறேன். நீங்கள் எழுதுங்கள். எந்தவிதக் கட்டுப்பாடுகளும் கிடையாது. மெட்டை பிறகு யோசித்துக் கொள்ளலாம்’ – கணேஷ் எனக்கு கட்டற்ற சுதந்தரம் வழங்கினார்.

அவர் சொன்ன Reggae பாடல் வடிவம் குறித்து அப்போதுதான் கேள்விப்பட்டேன். அது ஜமைக்காவைச் சேர்ந்த ஓர் இசை வடிவம் என்று தெரிந்துகொண்டேன். சில Reggae பாடல்களைக் கேட்கச் சொல்லி கணேஷ் பரிந்துரைத்தார். கேட்டேன். சில ஐடியாக்கள் தோன்றின. டைரக்டர் எல்வின், கணேஷ், நான் மூவரும் கலந்துரையாடினோம். ‘ஒரு கல்லூரியின் பல்வேறு இடங்களை, கல்லூரி வாழ்க்கை குறித்த பல்வேறு விஷயங்களை கேலியாக இரண்டிரண்டு வரிகளில் சொல்வதாகப் பாடலை அமைக்கலாம்’ என்று முடிவு செய்தோம்.

திருவள்ளுவர், ஔவையார் ஆகியோரைத் துணைக்கழைத்துக் கொண்டு, பழமொழிகள், பழைய பாடல்கள் உதவியுடன் வரிகளை எழுதினேன். மெட்டுக்குள் உட்கார வேண்டும், மீட்டர் இடிக்கக்கூடாது போன்ற சங்கடங்கள் இல்லாததால் எளிதாகவே பாடல் வரிகள் வந்து விழுந்தன. ஒரு சில திருத்தங்களுக்குப் பிறகு பாடல் என் தரப்பில் முழுமை பெற்றது. அதன்பின் கணேஷ்தான் அதனை இசையமைக்க மிகவும் மெனக்கிட்டிருக்க வேண்டும். பாடலின் Chorus-ஆக வரும் ஆங்கில வரிகளை, ஜார்ஜியனா எழுதினார்கள். இவர்கள், பாடகி ஷாலினியின் அம்மா என்பது தகவலுக்காக. படத்தில் வரும் ஒரு ஆங்கிலப் பாடலும் இவர்களது கைவண்ணமே.

கல்லூரி ஜாலி பாடலுக்கு நாங்கள் 2010ன் ஆரம்பத்தில் வைத்த பெயர் College Anthem. (அதாவது லவ் அன்தேம், சச்சின் அன்தேம் எல்லாம் வருவதற்கு முன்பாகவே தோன்றிய யோசனை இது என்பதை பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன் மை லார்ட்! 😉 )

தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கல்லூரிகளின் பெயரை எல்லாம் ராப் பாணியில் வேகமாக அடுக்கி, This is an anthem for every college என்று சொல்லிவிட்டு பாடலுக்குள் செல்லலாம் என்பது என் யோசனை. ஏனோ அது நிறைவேற்றப்படவில்லை. பாடல் ஏற்கெனவே நீளமாக இருப்பதே காரணமாக இருக்கலாம்.

சரி, நான் எழுதிய பாடல் வரிகள், பாடலின் முறையான வடிவம் இதுதான். பாடலை இங்கே கேட்டுக் கொண்டே, வரிகளைப் படித்துக் கொள்ளுங்கள். கீழே வாருங்கள்… இன்னும் சில விஷயங்களை வைத்திருக்கிறேன்.

படம் : ஏதோ செய்தாய் என்னை

பாடல் : முகில்

Chorus வரிகள் : ஜார்ஜியானா

Opening

ராத்திரி நேரம் தூக்கம் எதுக்கு?

போதும் உறக்கம் – போர்வை விலக்கு.

இளமை இருக்கு! இரவைச் செதுக்கு!

Verse 1

Canteen

போகாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்

போண்டாவில் வாய் வைக்க வேண்டாம்

டீ என்னும் ஹாட் வாட்டர் குடிக்க வேண்டாம்

டிரீட்டுன்னா கேன்டீனா? வேண்டவே வேண்டாம்

Verse 2

Hostel

தீராது விளையாட்டு தினமும்தான் இங்கே – திருட்டு

தம்முக்கும் பியருக்கும் என்றென்றும் பங்கே

எல்லோருக்கும் எல்லாம் சொந்தம் – கம்யூனிஸம்!

எல்லோரும் நம்ம சொந்தம் – ஹாஸ்டலிஸம்!

Verse 3

Exam

காக்க காக்க – காக்க காக்க – கைபிட்டு காக்க

நோக்க நோக்க – நோக்க நோக்க – Next Bench நோக்க!

Distinction வாங்கத்தான் அலையுது ஒரு குரூப்பு

Just Pass போதுமடா – சொல்லுறான் நம்ம மாப்பு!

Verse 4

Arrears

அரியர்ஸ் வெச்சா தப்பில்ல

அதை வைக்காத வாழ்க்கையிலே கிக் எதுவும் இல்லை

அரியர்ஸ் இல்லா ஸ்டூடண்ட் அரை ஸ்டூடண்ட்

அதை முடிக்காத ஸ்டூடண்ட் Ever ஸ்டூடண்ட்

Pre Chorus

Library புத்தகத்தில் Love Letter விதைப்போம்

Physics Labக்குள் Chemistry வளர்ப்போம்

Ragging தொடங்கி Farewell வரைக்கும்

ஒவ்வொரு நாளும் இனிக்கும் இனிக்கும்…

Chorus

College life is so much fun

Ragging Bagging all in one

Happiest days under the sun

One for all and all for one!

Verse 5

Class Room

Class Room என்பது சட்டசபை போல!

வெளிநடப்பு செய்வதே தினம் எங்கள் வேலை!

போர்டில் உள்ள பாடத்தை நோட்டில் எழுத மாட்டோம்

நெஞ்சில் உள்ள காதலை Bench-ல் எழுதி வைப்போம்

Verse 6

Boys & Girls

Boys

எந்த ஃபிகருமே நல்ல ஃபிகருதான் லவ்வரா நினைக்கையிலே

அவ நல்லவளாவதும் கெட்டவளாவதும் Love Propose செய்கையிலே

Girls

எந்தப் பையனுமே ரொம்ப உத்தமன்தான் லவ் சொல்லும் போதினிலே – நாங்க

Yes சொன்ன பின்னாலே ஜொள்விட்டுப் போறானே இன்னொருத்தி பின்னாலே!

Pre Chorus

Collage Culturals – சைட் அடிக்கும் Carnival

Collage Election – Politics Practical

Ragging தொடங்கி Farewell வரைக்கும்

ஒவ்வொரு நாளும் இனிக்கும் இனிக்கும்…

Chorus

College life is so much fun

Ragging Bagging all in one

Happiest days under the sun

One for all and all for one!

Interlude

Bridge

கட் அடிப்போம் சைட் அடிப்போம்

பிட் அடிப்போம் பியர் அடிப்போம்

ஆனாலும் படிப்போம் காலேஜை முடிப்போம்

மம்மி டாடி கனவை மறக்காம மதிப்போம்

Pre Chorus

ஆயிரந்தான் வந்தாலும் விலகாது நட்பு

ஆயுளுக்கும் நம்ம கைவிடாது நட்பு

Ragging தொடங்கி Farewell வரைக்கும்

ஒவ்வொரு நாளும் இனிக்கும் இனிக்கும்…

Chorus

College life is so much fun

Ragging Bagging all in one

Happiest days under the sun

One for all and all for one!

***

சிடிக்களிலும் சரி, இணையத்தில் கிடைக்கும் பாடலிலும் சரி, சன் மியூஸிக்கில் ஒளிபரப்பப்பட்டதிலும் சரி, பாடலில் எந்தவித பாதிப்பும் இருந்திருக்காது. ஆனால் இந்தப் பாடல் சென்சாரில் சிக்கித் தவித்ததாகக் கேள்விப்பட்டேன். தியேட்டருக்கு வரும்போது சில இடங்களில் மௌனமான வாயசைப்புடன்தான் பாடல் ஒலிக்குமாம்.

சட்டசபை குறித்த வரிக்கு ஆட்சேபணை தெரிவித்திருப்பார்கள் என்பது என் கணிப்பு. அது பொய்த்தது.

அதில்லாமல் மூன்று இடங்களில் ஆட்சேபணை தெரிவித்திருக்கிறார்களாம்.

1. ராகிங் என்ற வார்த்தை பாடலில் வரக்கூடாதாம்.

2. திருட்டு தம், பியர் என்ற வார்த்தைகள் இருக்கக்கூடாதாம்.

3. கம்யூனிஸம் என்ற வார்த்தையை உபயோகப்படுத்தக்கூடாதாம்.

ராகிங் என்ற வார்த்தையின்றி கல்லூரி குறித்த பாடல் முழுமை பெறாது என்பதால் அந்த வார்த்தையைப் பயன்படுத்தினேன். தவிர, இந்தப் பாடல் மூலமாகத்தான் ராகிங், நம் சமூகத்துக்கு அறிமுகப்படுத்தப்படவில்லை. நேரடியாகவோ, இலைமறை காயாகவோ ராகிங் இன்றுவரை கல்லூரிகளில் ஓர் அங்கமாகத்தான் இருந்து வருகிறது என்பதை யாரும் மறுக்கவும் முடியாது.

பாடலில் அடுத்து தம், பியருக்கு தடை போட்டிருக்கிறார்கள். அது இந்தச் சமூகத்துடனும் சினிமா காட்சிகளுடனும் பின்னிப் பிணைந்ததல்லவா. எனில், தற்போது வெளிவரும் படங்களில் பாதி காட்சிகள் வெட்டியெறியப்பட வேண்டுமே. திரையில் தோன்றி சிகரெட் பிடிக்கலாம், மது அருந்தலாம். அதற்கு ‘மது, புகை கேடு’ என்ற ரீதியான அறிவிப்பைப் போட்டுக் கொண்டால் போதுமானது. ஆனால் அவற்றை பாடலில் உபயோகித்தால் தெய்வ குற்றம் என்பதைப் புரிந்துகொண்டேன். நாட்டில்தான் புகை, மதுவை முற்றிலுமாகத் தடை செய்ய முடியவில்லை. டாஸ்மாக்கை வைத்துதான் அரசாங்கமே மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறது. இந்தப் பாடலாவது மது, புகை, ராகிங் உள்ளிட்டவை இன்றி புனிதப் பாடலாக வெளிவருவதில் எனக்கு சந்தோஷமே.

ஆனால் அடுத்த விஷயம்தான் எனக்குப் புரியவில்லை. இந்த ‘கம்யூனிஸம்’ என்ன பாவம் செய்தது? ‘எல்லோருக்கும் எல்லாம் சொந்தம் கம்யூனிஸம்’ என்பது பொதுவாகச் சொல்வதுதானே. அதில் என்ன பிரச்னை? கம்யூனிஸம் என்ற வார்த்தையையே உபயோகப்படுத்தக் கூடாது என்று சொல்வதன் பின்னணியில் உள்ள அரசியல் சத்தியமாக எனக்கு விளங்கவில்லை.

தோழர்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.

ஒருவேளை, யாருக்குமே புரியாத வகையில் டைலோமோ, டயோரியா, ங்கொக்கமக்கா, ங்கொய்யால வகையறா வார்த்தைகள், கெட்ட வார்த்தைகள் கொண்டு பாடல் எழுதப்பட்டிருந்தால் ஆரத்தழுவி வரவேற்றிருப்பார்கள்போல.

பின்குறிப்பு :

1. இப்படியெல்லாம் சென்சார் கட் கிடைத்தால் அதை வைத்து ஏதோ சர்ச்சை கிளப்புவதும், படத்துக்கான பப்ளிசிட்டி தேடுவதும் சினிமாக்காரர்களின் இயல்பு. ஆனால் அப்படி எதுவும் செய்யாமல் விஷயத்தை என்னிடம் எளிமையாக எடுத்துச் சொன்ன நண்பர் கணேஷுக்கு என் நன்றிகள்.

2. திவாகர் என்ற நண்பரும் இந்தப் படம் மூலமாக பாடலாசிரியராக அறிமுகமாகிறார். அவர் எழுதிய ‘காதில் மட்டும் இன்பமா’ – ஏற்கெனவே பலரது காதுகளிலும் தொடர்ந்து ஒலிக்க ஆரம்பித்துவிட்டது என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி.

 

கெளம்பிட்டாருயா சுப்புடு!

சமீபத்தில் கேட்ட பாடல்களில் என்னைக் கவர்ந்தவை மட்டும் இங்கே :

அவன் இவன் (யுவன் ஷங்கர் ராஜா)

சுசித்ரா குரலில் டியா டியா டோலே என்ற தீம் இசைதான் கேட்டதிலிருந்தே மனத்துக்குள் சடுகுடு ஆடிக் கொண்டிருக்கிறது. உற்சாகத் துள்ளல் இசை. அதன் பின் பாதியில் வரும் கிராமிய இசை, அப்படியே நம்மை ஊர்ப்பக்கம் நடக்கும் ‘கோயில் கொடை’க்கு தூக்கிச் சென்று விடுகிறது.

ராசாத்தி போல – ஹிட் ஆவதற்குரிய இசைக்கலவை, ஏற்ற இறக்கங்கள், மாய வார்த்தைகள் கொண்ட பாடல். பிடித்திருக்கிறது. இருந்தாலும் காட்டுச் சிறுக்கியே என்ற வார்த்தை மட்டும் ராவணனால் தொந்தரவு கொடுக்கிறது.

ஒரு மலையோரம் – அருமையான மெலடி. எப்போதும் பச்சை (Ever green) ரக பாடல். ஏர்டெல் சூப்பர் ஜூனியர் சிங்கர்ஸ் ஸ்ரீநிஷா, பிரியங்கா, நித்யஸ்ரீயுடன் விஜய் யேசுதாஸ் பாடியிருக்கிறார். இளையராஜாவின் பழைய சரக்குதான் என்றாலும் அவன் இவனில் எனக்கு மிகப் பிடித்த பாட்டாக இது உள்ளுக்குள் இறங்கிக் கொண்டிருக்கிறது.

முதல் முறை, அவனைப் பத்தி – இரண்டுமே காட்சிகளுடன் பார்க்கும்போது, பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கிறேன். இரண்டு பாடல்களிலுமே மரணத்தின் வாசனை தூக்கலாக இருக்கின்றன. அவனைப் பத்தி பாடலில் – சாவு மோளத்தின் பின்னணியில் ஹீரோக்களின் ஆரம்பப் பாடல்போல இருக்கிறது. பாலாவின் டச்! டி.எல். மகாராஜன் குரல் – அதிர்வுகளை ஏற்படுத்துவது உண்மை.

அவன் இவன் – பாலாவின் காமெடி படமென்று கேள்விப்பட்டேன். இல்லையோ?

காதல் 2 கல்யாணம் (யுவன் சங்கர் ராஜா)

எனக்காக உனக்காக – யுவன் டெம்ப்ளேட் டூயட் – நரேஷ், ஆண்ட்ரியா குரல்களுக்காக, கேட்கக் கேட்க பிடிக்கும்.

குறிப்பு : இதே படத்தில், நான் வருவேன் உன்னைத் தேடி, தேடி உன்னை நான் வருவேன், வருவேன் தேடி நான் உன்னை, உன்னை வருவேன் தேடி நான், தேடி வருவேன் நான் உன்னை – இந்த வார்த்தைகள் கூட்டணியில் ஒரு பாடல் இருக்கிறது. கேட்காதீர்கள் 😉

180 (இசை : Sharreth – தமிழ்ல என்ன ஸ்பெல்லிங்?)

கார்க்கியின் வரிகளில் சிறுசிறு கண்ணில் – உத்வேகமூட்டும் வித்தியாசமான பாடல். பாடியிருக்கும் சிறுவர்களின் குரல்கள், பாடலைக் கவனம் பெற வைக்கின்றன.

AJ என்றொரு பாடல் – முழுவதும் கேட்கத் தோன்றுகிறது. மீண்டும் கேட்கத் தோன்றுகிறது. ஆனால் பாடலைப் புரிந்துகொள்ள தமிழோடு பிரெஞ்ச், ஜப்பானிஷ், ஆங்கிலம் உள்ளிட்ட ஏகப்பட்ட மொழிகள் தெரிந்திருக்க வேண்டும்போல.

தெய்வத் திருமகன் (ஜி.வி. பிரகாஷ்)

விழிகளில் ஒரு வானவில் – இசையமைப்பாளரின் வருங்கால மனைவி பாடிய பாடல். கேட்க இதமாகத்தான் இருக்கிறது. பண்பலை வானொலிகள் மூலம் ஹிட் ஆக ஆரம்பித்துவிட்டது. இருந்தாலும் இருபதோடு இருபத்தொன்றாகத்தான் இருக்கிறது.

இந்த ஆல்பத்தில் என்னைக் கவர்ந்த பாடல்கள் இரண்டு. இரண்டுமே விக்ரம் பாடியவை : பாப்பாப் பாட்டு, கதை சொல்லப் போறேன். இரண்டுமே குழந்தைத்தனமான பாடல்கள். அதனால்தான் எனக்குப் பிடித்திருக்கிறதுபோல.

ஆரிரோ ஆராரிரோ – நான் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கும் பாடல் இது. நா. முத்துக்குமாருக்கும் பெயர் கொடுக்கும் இன்னொரு பாடல், பாடகர் ஹரிசரனுக்கும். இசையில் புதிதாக எதுவும் தெரியவில்லை என்றாலும் மனதோடு ஒட்டிக் கொள்ளும் வகையில் கட்டமைக்கப்பட்ட பாடல்.

கோ – படம் சென்றிருந்தேன். இடைவேளையில் தெய்வத்திருமகன் டீஸர் காண்பித்தார்கள். விக்ரம், ஜன்னலைத் திறந்துகொண்டு வந்து, மழலையாகப் பேசும்போது… தியேட்டரே கேலியாகச் சிரிக்கிறது. இந்தப் படத்தைப் பார்க்க நினைத்தால்கூட தியேட்டரில் பார்க்கவிட மாட்டார்கள்போல!

வைரமுத்துவின் கவிதைகள் சில வைரமுத்துவின் குரலில், ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் பல காலத்துக்கும் முன் வந்திருக்கிறது. அந்த அபூர்வ புதையல் இங்கே.

குதிக்குற குதிக்குற குதிரைக்குட்டி…

அழகர்சாமியின் குதிரை பாடல்கள் குறித்து இணையத்தில் முதலில் வந்து விழுந்த விமரிசனங்கள் எல்லாமே எதிர்மறையாக மட்டுமே இருந்தன. ‘எந்தப்பாடலுமே இளையராஜா தரத்தில் இல்லை’, ‘இளையராஜா ஏமாற்றிவிட்டார்’ – இப்படி. அதனால் பாடல்கள் கேட்கும் ஆர்வம் எனக்கு உடனே ஏற்படவில்லை. வார இறுதியில்தான் பாடல்களைக் கேட்டேன். ஏமாந்துபோனதை உணர்ந்தேன். பாடல்களால் அல்ல, பாடல்கள் குறித்த விமரிசனங்களால்.

நந்தலாலாவுக்குப் பிறகு இளையராஜாவின் மிக முக்கியமான ஆல்பம்.

அடியே இவளே ஊருக்குள்ள திருவிழாவாம்…

மிக மிக வித்தியாசமான பாடல். இந்தப் பாடலின் கட்டமைப்பை நினைத்தால் வியப்பாக இருக்கிறது. எத்தனை விதமான குரல்கள். எத்தனை விதமான இசைக்கருவிகள். எல்லாம் கிராமிய இசைக்கருவிகள். தமிழர் பண்பாட்டு இசைக்கருவிகள் குறித்து குங்குமத்தில் தொடர் எழுதிவரும் நண்பர் நீலகண்டன், இந்தப் பாடல் குறித்து ஏதாவது கட்டுரை எழுதுவார் என்று காத்துக் கொண்டிருக்கிறேன். இந்தப் பாடல் உருவான விதம் குறித்து வீடியோ எதுவும் பதிவு செய்யப்பட்டிருந்தால் அது நிஜமாகவே கலைப் பொக்கிஷம். ஈசன் – ஜில்லாவிட்டு பாடல் புகழ் தஞ்சை செல்விக்கு அமைந்துள்ள மற்றுமொரு அழகான பாடல்.

பூவைக்கேளு காத்தைக்கேளு…

அசல் இளையராஜா பிராண்ட் மெலடி. மீண்டும் கார்த்திக், ஷ்ரேயா கோஷல். புதிதாக எதுவும் சொல்லத் தோன்றவில்லை. ஆனால் கேட்கச் சலிக்காத மென்பாடல். பண்பலை வானொலிகளால் சற்றே கவனிக்கப்படும் பாடல் இதுதான். இரவு நேரத் தூக்கத்துக்கு முன் கேட்கும் பாடல் பட்டியலில் இதையும் சேர்த்துக் கொண்டுவிட்டேன்.

குதிக்கிற குதிக்கிற குதிரைக்குட்டி…

இந்த ஆல்பத்தின் ஸ்டார் பாடல் இதுவே. குதிக்கிற குதிக்கிற என இளையராஜா அசட்டுக் குரலில் பாடும்போது எனக்குள் இனம்புரியாத துள்ளலை உணர்ந்தேன். எத்தனைவிதமான மாடுலேஷன். பாடலைக் கேட்கும்போது அந்தக் குரலில் படத்தில் கதாநாயகனான அப்புகுட்டியின் முகம் என் கண்முன் விரிந்தது. ரசித்துக் கொண்டே இருக்கலாம், காலத்துக்கும். இந்தப் பாடலுக்கான விஷுவல்ஸ் அவ்வளவு அருமையாக வந்திருக்கிறதென சினிமா துறை நண்பர் ஒருவர் சொன்னார். வெள்ளிக்கிழமை வரை காத்திருக்க வேண்டும்.

நண்பர் பாஸ்கர் சக்திக்கு என் வாழ்த்துகள்.

படம் குறித்து இளையராஜா, குமுதத்தில் (23.03.2011) பகிர்ந்துகொண்ட கருத்து இது.

ஃபாரின் படங்களைப் பார்த்துட்டு அதுமாதிரி புதுசா சிந்தனை பண்ணி படம் எடுக்க ஆளில்லை. அந்தப் படத்தையே அப்படியே எடுக்க வேண்டியிருக்கு. சமீபத்துல அப்படி ஒரு படத்தை மீடியாக்கள் பாராட்டின அளவுக்கு மக்கள் ரசிக்கலையே. இந்த பாதிப்பு இனி வர்ற நல்ல படங்களுக்கு வந்திடக்கூடாதுங்கற அக்கறையாலதான் இப்ப நான் பேசுறேன். நான் இசையமைக்குற படம் என்பதால சொல்லலை. நான் வேலை செய்யாத நல்ல படங்களும் தோல்வி அடைஞ்சிருக்கு. இது வருத்தமா இருக்கு. உலகத் தரத்தில் படம் எடுக்க நம்ம ஊர்லயும் ஆள் இருக்காங்க என்பது மாதிரி ‘அழகர்சாமியின் குதிரை’ படத்தை எடுத்திருக்காங்க. இதுக்கு ஜனங்க சரியான முறையில் ஆதரவு கொடுத்தால்தான் சினிமாவில் ஆரோக்கியமான சூழல் ஏற்படும்.