தீபாவளி தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன!

வேற வழியே இல்லை. போற போக்கைப் பார்த்தா அப்படித்தான் நடக்கும்னு தோணுது. பிழைப்புக்காக சென்னைக்கு வந்த பிற பகுதி தமிழகத்து மக்கள் எல்லாம் 2011ல (அதாவது சமக தலைவர் சரத்குமார் முதல்வர் ஆகப்போற வருஷம்) இப்படித்தான் ஊருக்குப் போவாங்கன்னு தோணுது!)

காலங்கார்த்தால அலாரம் வைச்சு எழுந்து, படபடன்னு சிஸ்டம் ஆன் செஞ்சு, நெட் கனெக்‌ஷனை ஆன் பண்ணி, எப்போ ரயில்வே டைம் எட்டு ஆகும்னு செம விழிப்புணர்வோட படு வேகத்துல ரயில்வே டிக்கெட் பதிவு செஞ்சாக்கூட, வெயிட்டிங் லிஸ்டுன்னு நடுமண்டையில ஒரு சுத்தியல் அடி நங்குன்னு விழுகுது. (டிக்கெட் கவுண்டரில் முன்பதிவுக்காக ஏமாந்து நிற்கும் ஆயிரக்கணக்கான சக பயணிகளே எம்போன்ற கிராதகர்களை மன்னிப்பீராக!)

வருங்காலத்தில் ஏராளமான சிறப்பு ரயில்களோ, பேருந்துகளோ விட்டால்கூட கட்டுப்படியாகாது என்றே தோன்றுகிறது. அவரவர் இருக்கும் இடத்திலேயே பண்டிகை கொண்டாடிக் கொள்ள வேண்டியதுதான். அதையும் மீறி சொந்த ஊரில் மாமன் மச்சான்களோடுதான் பண்டிகை கொண்டாடுவோம் என்று மக்கள் அடம்பிடிக்கும் பட்சத்தில் அரசிடம் இருந்து ஓர் அறிவிப்பு வெளிவரும். (தேர்தல் அறிவிப்புபோல.)

‘தீபாவளி பண்டிகைக்கான கொண்டாட்ட தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வருகின்ற அக். 17 அன்று சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களுக்கும், அக். 19 அன்று தூத்துக்குடி, ஈரோடு, இராமநாதபுரம் மாவட்டங்களுக்கும், அக். 21 அன்று திருநெல்வேலி, பெரம்பலூர், சேலம், கடலூர் மாவட்டங்களுக்கும், அக். 23 அன்று கன்னியாகுமரி, மதுரை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கும் தீபாவளி கொண்டாட தேதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான ரயில் பயணச் சீட்டு முன்பதிவு ஆரம்பமாகும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் ஜே.கே. ரித்தீஷ் அறிவித்துள்ளார்.’

இன்னொரு விஷயம் தெரியுமா! தொடர்ந்து உங்களுக்கு ரயில்ல டிக்கெட்டே கிடைக்கலேன்னா உங்க ஜாதகத்துல ஐஆர்சிடிசி தோஷம் இருக்குதுன்னு அர்த்தம். அதுக்கு பரிகாரமா தொடர்ந்து அஞ்சு வாரம் மம்தா பானர்ஜிக்கு மாவிளக்குப் போட்டா எல்லாம் சரியாகிரும். ஓகேவா!