சுஜாதாவின் கொலைகள்

சென்னை புத்தகக் காட்சி 2011 – கடந்த நான்கு நாள்கள் ஒரு பார்வை.

* ‘வானுயர்ந்த சோலையிலே… நீ நடந்த பாதையெல்லாம்…’ பாடலை பாடிக்கொண்டே செல்வது உத்தமம். நடக்கும் பாதையில் கீழே பொருத்தப்பட்டுள்ள மரப்பலகைகள் எப்போது உடைந்து நம்மை உள்ளிழுக்குமோ என்ற பயம் கண்காட்சிக்குள் நுழைந்து சில அடிகள் எடுத்து வைத்தவுடன் உங்களுக்கு ஏற்படப்போவது சர்வ நிச்சயம். தனுஷுக்குத் தம்பிபோன்ற உடல்வாகுடன் இருக்கும் நானே பயப்படுகிறேன் என்றால், பிரபுவுக்கு அண்ணன்போல இருக்கும் பாரா, ஹரன் பிரசன்னா போன்றோர் நிலைமையை நினைத்துப் பாருங்கள்.

* இந்தமுறை வள்ளுவர் பாதை, ஷெல்லி பாதை, கம்பர் பாதை, சேக்ஸ்பியர் பாதை என்ற ஒவ்வொரு வரிசைக்கும் ஒரு பெயர் கொடுத்திருக்கிறார்கள். நல்ல யோசனைதான். ஆனால் ‘ஓளவையார் பாதை’ என்று தவறாக அச்சிட்டு நம் தமிழ் மூதாட்டியை அவமானப்படுத்தியிருக்க வேண்டாம். தவிர, பபாஸி வழங்கும் ஸ்டால் வரைபடத்தில் ‘பாரதியார் பாதை’ என்று அச்சிடப்பட்டிருக்கும். ஆனால் நிஜத்தில் அங்கே இருப்பது ‘மகாத்மா காந்தி பாதை.’ அதற்குப் பக்கவாட்டில் இருக்கும் நீண்ட வரிசைதான் பாரதியார் பாதை. எனவே வாசகர்கள் வரைபடத்தைப் பார்த்துக் குழம்ப வேண்டாம்.

* இங்கே ஒரு கண்டனத்தைப் பதிவு செய்ய விரும்புகிறேன். திராவிட அரசியலில் எவ்வளவோ விஷயங்களுக்குப் பாதை போட்டுக் கொடுத்தவரும், இளைஞன் வரை இடையறாது எழுத்துச் சேவை ஆற்ற்ற்ற்ற்றிக் கொண்டிருக்கும் கலைஞரின் பெயரில் பாதை ஏன் வைக்கவில்லை? இந்தவார ஆ.வி.யில் கலைஞருக்காக வரிந்துகட்டிக் கொண்டு ஜிங்ஜக் அடித்திருக்கும் இயக்குநர் இமய்யம் பாரதிராஜா சார்பில் இந்தக் கண்டனத்தை முன் வைக்கிறேன்.

CLOSED

* கடந்த செவ்வாய் முதல் வெள்ளிவரை கண்காட்சியில் கூட்டம் இல்லை, அவ்வளவாக இல்லை, இல்லவே இல்லை. வெளியில் அமைக்கப்பட்டுக்கும் (நான்கோ, ஐந்தோ) டிக்கெட் கௌண்டர்களில் இரண்டு மட்டுமே இயங்கின (சில சமயம் ஒன்று மட்டும்). மற்றவை ‘CLOSED’  என்ற அறிவிப்புடன் காணப்பட்டன. ‘HOUSE FULL’ என்று பலகை மாட்டும் காலமெல்லாம் பு.கண்காட்சிக்கு வருமா என்ன?

* சென்ற வருடம் கிழக்கில் ‘ராஜீவ் கொலை வழக்கு’தான் பெஸ்ட் செல்லர் என்று ஓரிரு நாள்களிலேயே சொல்ல முடிந்தது. இந்தமுறை அப்படி எதுவும் சொல்ல முடியாது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புத்தகம் ஹீரோயிஸம் காட்டுகிறது. சனி, ஞாயிறு கடந்தால்தான் தெரியும். பந்தயத்தில் முன்னணியில் உள்ள கிழக்கு புத்தகங்கள் :  காஷ்மீர், ஸ்பெக்ட்ரம், திராவிட இயக்க வரலாறு, ஆர்எஸ்எஸ், ராஜ ராஜ சோழன், முதல் உலகப் போர்.

சமர்ப்பணம் சொக்கனுக்கு..

* கிழக்கின் சினிமா புத்தகங்களில் இந்த வருடமும் தீனதயாளனின் ‘கமல்’ அதிகம் விற்பனையாகிறது. அதனுடன் போட்டி போடுவது ‘நான் நாகேஷ்.’ (கல்கியில் தொடராக வந்த நாகேஷின் அதிகாரபூர்வ வாழ்க்கை. தொகுப்பு எஸ். சந்திரமௌலி.) கடந்த ஐந்து வருடங்களாக ‘சொல்லிக்கொள்ளும்படியாக’ விற்பனையான சந்திரபாபு இந்தவருடம் விற்பனைக்கு இல்லை. வந்துவிடும் என்று எதிர்பார்க்கிறேன்.

* கடந்த சில வருடங்களாக வரலாற்றுப் புத்தகங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு மகிழ்ச்சி கொடுக்கிறது. மாயவலையையும், அகம் புறம் அந்தப்புரத்தையும் வாசகர்கள் விலையைப் பொருட்படுத்தாமல் வாங்கிச் செல்லும்போது…. ஓர் எழுத்தாளனுக்கு வேறென்ன சந்தோஷம் இருக்கக்கூடும்.

*  நேற்று கிழக்கில் ஓர் அம்மணி ஆர்வமாக நுழைந்தார். சுஜாதாவின் புத்தகங்கள் குறித்து கேள்விப்பட்டு வந்திருப்பார்போல. உள்ளே செல்லவில்லை. நேராக பில் கௌண்டருக்கு வந்து நின்றார். தன் கையிலிருந்த சிறு நோட்டைப் பிரித்து வாசிக்க ஆரம்பித்தார். ‘கொலையுதிர் காலம், மீண்டும் ஒரு கொலை எடுங்க. மேற்கே ஒரு குற்றம் இருக்கா?’ – இதுபோன்ற ‘கொலை’வெறி வாசகர்கள் இருக்கும்வரை சுஜாதா வாழ்வார்.

* கண்ணதாசனில் ‘வனவாசம்’ அழகான கட்டமைப்பில் கொண்டு வந்திருக்கிறார்கள். ‘மனவாசம்’ புத்தகமும் அருமையாக அச்சிடப்பட்டுள்ளது. முதல் வாசம் ரூ. நூறுக்கும், இரண்டாவது ரூ. எழுபதுக்கும் கிடைக்கிறது. மேலும் சில கண்ணதாசனின் புத்தகங்களும் புதிய கட்டமைப்புடன் கவரும் விதத்தில் வெளிவந்துள்ளன.

* கடந்த நான்கு நாள்களில் நான்கு புத்தகங்கள் மட்டுமே வாங்கினேன். நான் மிகவும் நேசிக்கும் எழுத்தாளர் ரேவதியின் ‘அப்பள ராஜா’, ‘இசையைக் கேட்குமா பாம்பு?’ – சிறுகதை நூல்கள். இரண்டுமே நடைபாதைக் கடையில் கிடைத்தன. ஹோவர்ட் ஃபாஸ்டின் ‘ஸ்பார்ட்டகஸ் ’ (தமிழில் ஏ.ஜி. எத்திராஜுலு) – என்.சி.பி.ஹெச்சில் வாங்கினேன். இன்னொரு நூல், அசோகமித்திரன் தொகுத்துள்ள ‘புதிய தமிழ்ச் சிறுகதைகள்’ – அதிலிருந்து சா. கந்தசாமியின் ‘ஒரு வருடம் சென்றது’ சிறுகதை நேற்றிரவு படித்தேன். இன்னும் மனத்துக்குள் ஏதோ செய்துகொண்டிருக்கிறது.

அமைதிப் பேச்சாளர் நாஞ்சில்

* நேற்று கண்காட்சியில் நண்பர் தளவாய் சுந்தரம் ஓரிடத்தில் நின்று கொண்டிருந்தார். அவர் அங்கே நிற்கிறார் என்றால் அருகில் ‘இலக்கிய நிகழ்வு’ ஏதோ நடப்பதாக அர்த்தம். எட்டிப் பார்த்தேன். உயிர் எழுத்து ஸ்டாலில் நாஞ்சில் நாடனின் கவிதைத்தொகுப்பு ஒன்றை வெளியிட்டார்கள். மனுஷ்யபுத்திரனின் முன்னிலையில் நாஞ்சில் நாடன் வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தார். என்ன ஓர் அமைதியான குரல். பேசியது நிச்சயமாக அருகில் நின்றவர்களுக்குக்கூட கேட்டிருக்காது. இந்த அடக்கத்துக்காகவே இவருக்கும் வருடந்தோறும் சாகித்ய அகாடமி கொடுக்கலாம்.

* இன்றும் நாளையும் புத்தகக் கண்காட்சியில்தான் இருப்பேன். சந்திக்கலாம்.

கழுதைப்பால் கட்டழகி!

மொத்தம் எழுநூறு கழுதைகள். அலெக்ஸாண்ட்ரியாவின் அரண்மனை வளாகத்தில் அவற்றைப் பராமரிக்கவே தனி ‘தொழுவம்’ இருந்தது. கழுதைப் பால் கறப்பவர்களின் வேலை காலை முதலே ஆரம்பித்துவிடும். தூசு, துரும்பு எதுவும் இல்லாத அக்மார்க் கழுதைப் பால் மதிய நேரத்தில் அந்தப்புரத்துக்குள் கொண்டு செல்லப்படும். குளிக்கும் தொட்டிக்குள் நிரப்பப்படும். மாலை நேரத்தில் தோழிகள் சூழ அங்கு வரும் கிளியோபாட்ரா, குளியல் தொட்டிக்குள் இறங்கி கழுதைப் பாலில் ஊற ஆரம்பிப்பாள்.

காலம் காலமாக கிளியோபட்ரா குறித்து சொல்லப்பட்டு வரும் சம்பவம் இது.  சமீபத்தில் ஹலோ எஃப்.எம்மில் புத்தகக் கண்காட்சி புதுவரவுகள் குறித்து பேட்டி கொடுத்த பாரா, ‘கிளியோபாட்ரா புத்தகம்’ வெளிவருவதாகச் சொன்னார். உடனே ஆர்ஜே (மிஸ்டர்) பாலாஜி கேட்ட கேள்வி, ‘கிளியோபாட்ரா கழுதைப்பால்ல குளிப்பாங்கன்னு சொல்றது நிஜமா?’

கிளியோபாட்ரா என்றாலே பலரது மனத்தில் தோன்றும் அடுத்த வார்த்தை ‘கழுதைப்பால்.’ அப்படி என்னதான் இருக்கிறது கழுதைப்பாலில்?

கிட்டத்தட்ட மனிதனின் தாய்ப்பாலுக்குச் சமமானது கழுதைப்பால். லாக்டோஸ் அதிகமுண்டு, பசும்பாலைவிட கொழுப்பு குறைவு. அப்போதெல்லாம் குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்குப் பதில் கழுதைப்பாலும் கொடுத்திருக்கிறார்கள். மருத்துவத்துக்கும் பல்வேறு விதங்களில் உபயோகிப்படுத்தி இருக்கிறார்கள். அழகுக் குறிப்புகளும் கொடுக்கிறார்கள். கழுதைப்பாலில் குளித்தால் முகச்சுருக்கங்கள் வரவே வராது. தோலில் மினுமினுப்பு அதிகரிக்கும். வெண்மை நிறம் மிளிரும். ஒரு நாளில் ஏழுமுறை கழுதைப் பாலில் முகம் கழுவினால் முகம் என்றென்றைக்கும் புத்துணர்வுடன் இருக்கும்.

கி.பி. 30 முதல் 65 வரை வாழ்ந்த ரோம் அரசி சபினா (பிடில் புகழ் நீரோவின் இரண்டாவது மனைவி), கழுதைப் பாலில் குளித்ததற்கான சான்றுகள் இருக்கின்றன. அவள் எங்காவது வெளியூர் சென்றாலும் அவளுக்காகக் கையுடனேயே அண்டா அண்டாவாக கழுதைப்பால் கொண்டு செல்வார்களாம் அல்லது நூற்றுக்கணக்கான கழுதைகளையே ஓட்டிக் கொண்டு செல்வார்களாம். நெப்போலியனின் தங்கை பவுலினும் கழுதைப் பாலில் குளித்ததற்கான குறிப்புகள் இருக்கின்றன. இருக்கட்டும், கிளியோபட்ரா? அந்த விஷயத்துக்கு அப்புறமாக வருவோம்.

எகிப்தியர்களுக்குக் காலை எழுந்தவுடன் குளிக்கும் வழக்கம் இருந்ததில்லை. வேலையெல்லாம் முடித்துவிட்டு, வெயில் விடைபெறும் வேளையில் மாலைக் குளியல் போட்டிருக்கிறார்கள். அலெக்ஸாண்ட்ரியாவின் அரண்மனையில் இளவரசியாக சகல வசதிகளுடன் வளர்ந்துவந்த கிளியோபட்ராவும் அந்த வழக்கத்தைத்தான் கடைபிடித்திருக்கிறாள்.

அரண்மனைக்குள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியே குளியல் தொட்டிகள் இருந்தன. வெந்நீர்க் குளியலுக்கான வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. கிளியோபாட்ரா ஆலிவ் எண்ணெய் தேய்த்து குளித்தாள். உடல் தேய்த்துக் குளிக்க, வளைவான தகடு (Strigil) ஒன்றை உபயோகப்படுத்தினாள். குளியலை முடிக்க குறைந்தது இரு மணி நேரம் பிடிக்கும்.

கிளியோபாட்ரா உபயோகப்படுத்திய இன்னொரு முக்கியமான அழகுப் பொருள் மருதாணி. கூந்தலில், கைவிரல்களில், பாதங்களில் மருதாணி உபயோகப்படுத்தினாள். தவிர முகத்துக்கான இயற்கை கிரீம்கள், கண்ணுக்கான மை, உதட்டுக்கான சாயம், முகப் பொலிவுக்கான பூச்சுகள், வாசனைக்கான திரவியங்கள் – எல்லாமே உபயோகப்படுத்தியிருக்கிறாள்.

படுத்திக் கொள்ளட்டும். அவள் பொன்வண்டு சோப்பு வேண்டுமானாலும் தேய்த்துக் குளித்திருக்கட்டும். அதெல்லாம் விஷயமே இல்லை. கழுதைப்பாலில் குளித்தாளா?

சான்றுகள் எதுவும் இல்லை. எகிப்தில், கிரீஸில், ரோமில் வாழ்ந்த உயர்குடிப் பெண்கள் எல்லோருமே பாலில் குளிக்கும் வழக்கத்தைக் கடைபிடித்தார்கள். அந்த விதத்தில் கிளியோபாட்ராவும் பாலிலோ, கழுதைப் பாலிலோ (ஆரோக்யா நாலரை பாலிலோ) குளித்திருக்கலாம். இதில் கவனிக்கப்பட (சந்தோஷப்பட) வேண்டிய விஷயம் எகிப்தியர்களுக்குத் தினமும் குளிக்கும் வழக்கம் இருந்திருக்கிறது என்பதுதான்.

கழுதைப்பாலைத் தாண்டியும் கிளியோபாட்ரா பற்றி தெரிந்துகொள்ள ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. அவளது பிறப்பு முதல், அவள் பேரழகியா, நல்லவளா, இனவெறி பிடித்தவளா, தற்கொலை செய்துகொண்டாளா என்பதுவரை ஏகப்பட்ட சர்ச்சைகள் நிறைந்து கிடக்கின்றன. கிளியோபாட்ரா குறித்து ஏற்கெனவே பலவிதமான தகவல்கள் சேகரித்து வைத்திருந்தேன். 2010ல் அவள் வாழ்க்கை குறித்த புத்தகத்தை எழுத முடிவு செய்தேன். எழுதி முடித்தேன். இந்தப் புத்தகத்தை எழுதுவதற்கு முன்பாகவே எனக்குத் திருமணம் நடந்துவிட்டது என்பதை தமிழ் கூறும் நல்லுலகுக்கு அறிவிக்கக் ‘கடாமைப்பட்டிருக்கிறேன்.’ (ஆதாரம் : பாரா – http://www.writerpara.com/paper/?p=1786 பத்ரி – http://thoughtsintamil.blogspot.com/2011/01/3.html)

கிளியோபாட்ரா, சென்னை புத்தகக் கண்காட்சி கிழக்கு ஸ்டாலில் (F13, F14, F15) கிடைக்கும். ஆன்லைனில் வாங்க.

கருணாநிதியிடம் ஒரு கேள்வி; கலைஞரிடம் ஒரு கேள்வி.

என்றோ வாழ்ந்துவிட்டுப் போன அரசர்களின் ஆட்சி, அரசியல் இதில் எனக்கு ஆர்வம் அதிகம். ஆனால் நேற்று வாழ்ந்துவிட்டுப்போன, இன்று வாழ்ந்துகொண்டிருக்கும் அரசியல்வாதிகளின் அரசியலில் எனக்கு அவ்வளவாக ஈடுபாடு இருந்ததில்லை. எனவே தமிழகத்தின் அரசியல் வரலாறு பற்றிய நிறையறிவு எனக்குக் கிடையாது. தெரிந்துகொள்ள பேராசை உண்டு. சென்னைப் புத்தகக் கண்காட்சியில் வெளிவரவிருக்கும் ஆர். முத்துக்குமாரின் திராவிட இயக்க வரலாறு புத்தகங்களுக்காகக் (இரண்டு பாகங்கள்) காத்திருக்கிறேன்.

திராவிட இயக்க முக்கிய தலைவர்களிடம் கேட்பதற்கு சில கேள்விகள் இருக்கின்றன.

பெரியாரிடம் ஒரு கேள்வி

ஒடுக்கப்பட்டவர்களை ஆதிக்கத்தின் பிடியில் இருந்து மீட்பதற்காகக் குரல் கொடுத்ததில் தங்களுடைய முன்னோர் என்றால் அது அயோத்திதாசப் பண்டிதர். அவருடைய வழிமுறைகளை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? அவர் முன்வைத்த தமிழ் பௌத்தத்தை எப்படி அணுகுகிறீர்கள்?

அண்ணாவிடம் ஒரு கேள்வி

‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ – இது தாங்கள் சொன்னதுதான். கடவுளே கிடையாது என்ற பாரம்பரியத்தில் இருந்துவந்த நீங்கள், இதுபோல விட்டுக் கொடுக்க வேண்டியிருந்த சூழ்நிலைகள் குறித்து வருத்தப்பட்டிருக்கிறீர்களா? கொண்ட லட்சியங்களை நிறைவேற்ற கட்சி அரசியல் துணை போகாது என்று உணர்ந்த தருணம் உண்டா?

கருணாநிதியிடம் ஒரு கேள்வி

எம்.ஜி.ஆருக்கு இருந்த மக்கள் செல்வாக்கை எம்.ஜி.ஆரைக் காட்டிலும் அதிகம் புரிந்தவர்கள் நீங்கள். அப்படியிருக்கும்போது யாரை நம்பி (அல்லது எதனால்) எம்.ஜி.ஆரை கட்சியிலிருந்து விலக்க முடிவுசெய்தீர்கள்? தப்புக்கணக்கு போட்டுவிட்டதாக என்றேனும் நினைத்திருக்கிறீர்களா?

எம்.ஜி.ஆரிடம் ஒரு கேள்வி

கடவுளுக்கு எதிரான சிந்தனைகளைக் கொண்ட திராவிட இயக்கத்துக்குள் இருந்துகொண்டே, மூகாம்பிகையையும் சங்காராச்சாரியையும் தொழுது, ஆட்சியிலும் நீடித்தது உங்களுடைய பலமா? திராவிட இயக்க ஆதரவாளர்களின் பலவீனமா?

வைகோவிடம் ஒரு கேள்வி

தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி தாங்கள்தான் என்று காங்கிரஸ், பாமக, தேமுதிக போன்றவை எல்லாம் மார்தட்டிக் கொள்ளும்போது, கட்டமைப்பு ரீதியாக மாநிலம் முழுக்க மதிமுகவைப் பரப்பியிருக்கும் நீங்கள் என்ன நினைத்துக்கொள்வீர்கள்?

கலைஞரிடம் ஒரு கேள்வி

டெல்லியில் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ள அரசியல் சாதுரியம், பேச்சுத்திறன், ஆங்கிலப்புலமை என்ற மூன்று விஷயங்களும் அத்தியாவசியம். ஈ.வெ.கி. சம்பத், முரசொலி மாறன், வைகோ போன்றவர்கள்தான் திமுகவின் டெல்லி முகங்கள். இருவர் மறைந்துவிட்டார்கள். வைகோ விலகிவிட்டார். இவர்களைப் போல திறமைவாயந்த வேறு எவரும் திமுகவில் இன்று இல்லை அல்லது நம்பிக்கைக்குரியவர்களாக இல்லை. ஆக, திமுகவின் டெல்லி அரசியல் இனி எடுபடாது என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?

தலைவர்களிடம் இருந்து என் கேள்விக்கெல்லாம் பதில் கிடைக்கப் போவதில்லை. ஆர். முத்துக்குமாரின் புத்தகங்கள், இதற்குரிய விடைகளைக் கொடுக்குமா என்று ஆவலோடு காத்திருக்கிறேன்.

திராவிட இயக்க வரலாறு முதல் பாகம் (ரூ. 200), இரண்டாம் பாகம் (ரூ. 200)

பாக்யராஜின் முதுகு!

சென்னை நுங்கம்பாக்கத்திலிருந்த பாக்யா பத்திரிகை அலுவலகத்தின் பிரகாசமான விளக்குகள் அணைக்கப்பட்டன. இரவு மணி சரியாக 12.00. ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றிவைத்த கையோடு நடிகர் பாண்டியராஜன் கொத்தாக ஒரு கட்டு ஊதுபத்தியை ஏற்றி வைத்தார்.

கோலப்பன் என்ற மீடியம், அந்தப் பளபளப்பான ஆவிகளுடன் பேச உதவும்  பிரான்சட் போர்டை மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் வைத்தார்.
‘ஒரு 10 செகன்ட் எல்லாரும் உங்களுக்குப் பிரியமா இருந்து ஏதோ ஒரு காரணத்துனாலே இறந்து போன அந்த நபரை மனசார நெனைச்சு கண்ணை மூடிட்டுப் பிரார்த்தனை பண்ணுங்க.’
மீடியம் கட்டைக்குரலில் வேண்டுகோள் விடுத்தார். அந்த விஸ்தரமான அறையில் மீடியத்தையும் சேர்த்து ஐந்து பேர் மட்டுமே இருந்தோம். எல்லோரும் மீடியத்தின் பேச்சுக்குக் கட்டுப்பட்டு கண்மூடிப் பிரார்த்தனை செய்தோம்.
கண்ணைத் திறந்தபோது – ஒரு நிமிடம் ஆடி அதிர்ந்து போனேன்.
பாக்யராஜின் தலைக்குமேலே வெள்ளை வெளேர் நிறத்தில் இரண்டு ஆவிகள் கை கோர்த்து மிதந்து போய்க் கொண்டிருந்தன. அது வேறொன்றும் இல்லை. பாண்டியராஜன் ஆவியோடு இன்றைக்குப் பேசியே ஆகவேண்டும் என்ற ஆர்வத்தில் கொத்தாகக் கொளுத்தி வைத்த ஊதுபத்திப் புகைதான் என்பதை உணர்வதற்குள் என் முகத்தில் பேய் பயம்.

அதைக் கவனித்த பாக்யராஜ், ‘ஆவிகளோட பேசறதுக்கு முன்னாடியே ரொம்ப டென்சன் ஆயிட்டீங்களே. பேசி முடிச்சிட்டீங்கன்னா எல்லாஞ் செரியாப் போயிரும். ப்ரபசர் சார், நீங்களும் சஞ்சீவியும் மொதல்லெ ஆவி போர்டுலெ கைவைங்க. சஞ்சீவிக்கு ஏதாவது வித்தியாசமா வந்து சேரும்!’

எனக்கும் சரி, ப்ரபசருக்கு சரி, இந்த மாதிரியான விஷயங்களில் அவ்வளவு நம்பிக்கை கிடையாது. இப்படி நம்பிக்கை இல்லாத இரண்டு பேரும் சேர்ந்து பிளான்சட் போர்டு ஸ்ட்ரைகரில் விரல் வைத்தாலோ என்னவோ, வெகு நேரம் ஸ்ட்ரைகர் இருந்த இடம் விட்டு நகரவேயில்லை.

அதற்குப் பிறகு ஸ்ட்ரைகர் மெதுவாக நகர ஆரம்பித்தது. ஆனால், பிளான்சட் போர்டில் அச்சடித்த ஆங்கில எழுத்துகளில் எந்த சம்பந்தமும் இல்லாமல், அர்த்தமும் இல்லாமல் அந்த ‘பிளாஸ்டிக் வில்லை’ நின்று நின்று நகர்ந்தது. சிலசமயம் பிளான்சட் போர்டின் சதுரம் தாண்டி வழுக்கிக் கொண்டு போய் தரையிறங்கியது.

மீடியம் அப்போது நம்பிக்கையூட்டும் வகையில் ஓர் அறிவிப்பு செய்தார்.
‘சார்! ஏதோ ஆவி ஒண்ணு, இப்போ இங்க வந்திருச்சு. இல்லாட்டி ஸ்ட்ரைகர் நகரவே நகராது. இதுல இன்னொரு விஷயமும் இருக்கு. இப்போ இங்க வந்திருக்கிற ஆவிக்கு இங்கிலீஸ் எழுத்துகள் படிக்கத் தெரியலேன்னு வெச்சுக்குங்க. அப்போ இது மாதிரிதான் வெளையாட்டு காட்டிட்டுப் போயிரும்.’

பாக்யராஜ் அப்போது என்னிடம் கேட்டார். ‘ஏங்க சஞ்சீவி, நீங்க கூப்புட்ட ஆவிக்கு இங்கிலீஸ் தெரியுமா? தெரியாதா?’
‘இல்லில்லே, நான் மனசிலே நெனைச்ச ஆவி ஒரு ஸ்கூல் டீச்சர். இங்கிலீஸ் ப்ராப்ளம் எல்லாம் இல்லே’ என்று நான் சொல்லி முடிக்கும்போது ஸ்ட்ரைகர் பிளான்சட் போர்டின் நடுவில் சென்று நின்றது.

முன்பு இல்லாத ஒரு வைபரேசனை என் விரல்கள் உணர்ந்தன. அதை ஆமோதிப்பது போல் இங்கிலீஷ் ப்ரபசர் என்னைப் பார்த்து லேசாகத் தலையாட்டினார். அதற்குப் பிறகு ஸ்ட்ரைகர், M – என்ற எழுத்துக்குச் சென்று ஒரு செகண்ட் நின்று, பின் A, Y – அடுத்து A  என்று அங்கேயே நங்கூரம் பாய்ச்சிக் கொண்டது.

‘மாயாவோட ஆவி வந்திருச்சுங்க ஏன் சார்… நீங்க மாயாவைத்தான் நெனைச்சீங்களா?’ – பாண்டியராஜன் கேட்டார். உண்மைதான் அந்த ஸ்கூல் டீச்சரின் பெயர் மாயாதான். ஒப்புக்கொண்டேன் இருந்தாலும் மீடியமாக வந்திருப்பது நான் கூப்பிட்ட டீச்சரின் ஆவிதான் என்பதை ஊர்ஜிதப்படுத்திக் கொள்ளும் வகையில் ‘எங்க பிரார்த்தனைய மதிச்சு இந்த ராத்திரி நேரத்துல இங்க வந்திருக்கற மாயா ஆவிக்கு எங்க வணக்கம். நீங்க பிறந்த ஊரைச் சொல்லமுடியுமா ப்ளீஸ்’ – என்று கேட்டேன்.

இப்போது நானும் ப்ரபசரும் மீண்டும் பிளாஸ்டிக் வில்லையில் விரல் வைத்தோம்.
S
A
L
E
M – என்று ஸ்டைகர் நிலைகொண்டது. பாண்டியராஜன் அதை சலீம் என படித்து வாய் விட்டுச் சிரித்தார்.

‘அது சலீம் அல்ல…‘சேலம்’தான். ஸ்கூல் டீச்சர் வாழ்ந்து, சின்ன வயதிலேயே மறைந்தது சேலத்தின்தான். அதன் ஸ்பெல்லிங்கும் SALEMதான்!’ என்றேன். அதற்குப் பிறகு நான் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டிருக்க வேண்டும். என்னால் தொடர்ந்து மாயாவுடன் பேச முடியவில்லை. நிலைமையை உணர்ந்துகொண்ட பாக்யராஜ், என்னை ஆறுதல்படுத்தினார். அறிவுபூர்வமாக சில விளக்கங்களையும் சொன்னார்.

‘இதுல பெருசா ஒண்ணும் இல்லீங்க. எல்லாமே உங்க சப்கான்சியஸ்லெ இருந்ததுதான். உங்க விரல் மூலமா வெளிப்பட்டிருக்கு. மத்தபடி ஆவி வந்து போறதெல்லாம் நம்பறமாதிரி இல்லே. ஒரு ஆவி வந்து தன்னோட ஊரு பேரைச் சொல்றதுல என்ன அதிசயமிருக்கு. நாளைக்கு இதே இடத்துல இதே மணிக்கு என்ன நடக்கும்னு சொன்னா அது அதிசயம்.’
பாக்யராஜின் யதார்த்தத்தை வந்திருந்த மீடியம் ஒப்புக்கொள்வதாக இல்லை. ‘வீணாக நாம் இப்போ எந்த ஒரு ஆவியோட கோபத்துக்கும் ஆளாக வேண்டாம். இதோட பூஜையை முடிச்சுக்குவோம். அதுதான் எல்லாருக்கும் நல்லது.’

மீண்டும் அந்த இடத்தில் இருட்டுமாறி வெளிச்சம் வந்தது.

மறுநாள். நான் பாக்யா பத்திரிகையின் நிர்வாக ஆசிரியர் பொறுப்பில் இருந்ததால் அன்றும் இரவு 12 மணி அளவில் பத்திரிகை தொடர்பாக சந்திக்க வேண்டி வந்தது. அப்போது பாக்யராஜ் தான் போட்டிருந்த சட்டையைக் கழட்டினார். தனது முதுகை என் பக்கம் திருப்பிக் காட்டினார்.

முதுகில் யாரோ கூரிய நகங்களால் கீறிய ரத்தச் சுவடுகள் தெரிந்தன.

எனக்கு அதிர்ச்சி. நேற்று வந்த ஏதாவது வந்து பிராண்டிவிட்டுப் போனதா? பாக்யராஜும் அப்படி ஒரு பில்ட்-அப்தான் கொடுத்தார். மேலே நடந்த சம்பவங்களை எல்லாம் பாக்யாவில் எழுதலாம் என்னுமளவுக்கு நான் தயாராகி விட்டேன். கடைசியில் பாக்யராஜ் உண்மையைப் போட்டுடைத்தார்.

‘சஞ்சீவி, நான் சரியா நகம் வெட்டலை. குளிக்கும்போது முதுகு தேய்க்கறப்போ கீறல் விழுந்திருக்குது. ஒரு சுவாரசியத்துக்காக உங்ககிட்ட ஸ்கீரின் ப்ளே பண்ணி சொன்னேன். இப்படித்தான் இந்த பேய், ஆவி சமாசாரங்களை எல்லாம் இஷ்டத்துக்குப் பரவியிருக்கும்னு நினைக்கிறேன்.’

***

உண்டா, இல்லையா? கடவுளுக்கு அடுத்து அதிகம் விவாதிக்கப்படும் விஷயம் பேய்தான். ஆதி காலம் தொட்டு அறிவியல் ஆட்சி செய்யும் இந்தக் காலம் வரை அமானுஷ்யங்கள் மீதான அச்சமும் நம்பிக்கையும் அதிகரித்துக் கொண்டேதான் செல்கின்றன. பல தனியார் சேனல்கள் இரவு பத்து மணிக்கு மேல் இந்த பேயை ஹீரோவாக வைத்துத்தான் நிகழ்ச்சிகளை ஒப்பேற்றிக் கொண்டிருக்கின்றன. பரபரப்பு வாரமிருமுறை இதழ்களிலும் ஆவி, பேய் செய்திகள் என்றாலே அதற்கு தனி மவுசுதான்.

ஆவி, பேய், பூதம், மோகினி, கொள்ளிவாய்ப் பிசாசு, காட்டேரி, காத்து, கருப்பு என்று பல வடிவங்களில் மனிதனின் மனத்தை ஆக்கிரமித்திருக்கும் பேய், நிஜமா, கற்பனையா? பில்லி, சூனியம், ஏவல் போன்ற மாந்திரீக விஷயங்களில் எவ்வளவு உண்மை உள்ளது? பேசப் பேச, எழுத எழுத தீராத சந்தேகங்களும் சுவாரசியமும் கொண்ட டாபிக் இது. உள்ளூரில் மட்டுமல்ல, முன்னேறிய நவீன நாடுகளிலும் பேய்கள் உலாவிக்கொண்டுதான் இருக்கின்றன. அறிவியலுக்கு பொருந்தாது என்று சொல்லி பேயை நிராகரிப்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால், பேயின் இருப்பை மறுதலிக்க முடிந்தது போல், பேய் பயத்தை ஒழிக்க அறிவியலாலும் முடியவில்லை என்பதுதான் நிஜம்.

அறிவியல், அமானுஷ்யம் இரண்டின் கலவையாக ‘பேய்’ என்ற புத்தகம், கிழக்கு வெளியீடாக சென்னை புத்தகக் கண்காட்சிக்கு வர இருக்கிறது. இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கும் சஞ்சீவியை, பாக்யா வாசகர்கள் ஏற்கெனவே அறிந்திருப்பீர்கள். சஞ்சீவி, ஓவிய ஆசிரியராகப் பணியாற்றியவர். ‘பாக்யா’ வார இதழின் நிர்வாக ஆசிரியராக பதினான்கு ஆண்டுகள் இருந்தவர். கண்ணன் சர்வதேச அறிவியல் ஆய்வு மையத்தின் நிறுவனர். அமானுஷ்ய விஷயங்கள் குறித்து அறிவியல்பூர்வமாக தொடர்ந்து எழுதி வருபவர். இந்தப் புத்தகத்தை எடிட் செய்த விதத்தில் என் கருத்து – மிக மிக சுவாரசியமான விஷயங்களும் கதைகளும் சம்பவங்களும் நிறைந்துள்ள, அறிவியல்பூர்வமான விளக்கங்களும் கொண்ட விறுவிறு புத்தகம்.

தொண்ணூறு டிகிரி (பகுதி 2)

(தொண்ணூறு டிகிரி பகுதி 1 படிக்க.)

‘திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் போற ரோட்டுல அந்த சென்டர் இருக்குது’ என்றான் பாலாஜி.

‘அதோட பேரு என்ன தெரியுமா?’ – நான் கேட்டேன்.

‘ஏதோ ஜியோமேக்னடிக் சென்டர்னு வரும்.’

‘நீ சொல்றபடி உண்மையிலேயே அங்க அப்படிப்பட்ட ஆள்கள் இருக்காங்களா?’

‘எம்எஸ்சி பிஸிக்ஸ் நான் படிக்கிறப்போ என்னோட பிரெண்ட்ஸ் அங்க ப்ராஜெக்ட் பண்ணிருக்காங்க. அவங்க சொல்லிருக்காங்க.’

பாலாஜி என் நண்பனின் சகோதரன், எனக்கும்தான். திருநெல்வேலியில் இருக்கும் ஒரு மையத்தில் உள்ள ஆய்வாளர்கள், அடிக்கடி அண்டார்டிகாவுக்குச் சென்று வந்திருக்கிறார்கள். அவர்களிடம் பேசினால், அண்டார்டிகா குறித்த பல தகவல்கள், அனுபவங்கள் கிடைக்கும் என்று பாலாஜி தகவல் கொடுத்தான்.

கூகுள், அந்த திருநெல்வேலி மையத்தின் தொடர்பு எண்ணை எனக்குக் கொடுத்தது. பேசினேன். விஷயத்தைச் சொன்னேன். நேரில் வாருங்கள், பேசலாம் என்றார்கள். பாராவிடம் சொல்லிவிட்டு சென்னையிலிருந்து கிளம்பினேன்.

அது Indian Institute of Geomagnetism – திருநெல்வேலி கிருஷ்ணாபுரத்தில் இயங்கிவரும் பூமத்திய புவி இயற்பியல் ஆராய்ச்சி மையம். ஊரைவிட்டு வெளியே பாளையங்கோட்டையிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் கிருஷ்ணாபுரம் என்ற ஊருக்கு அருகில் அமைந்துள்ள மையம் அது. பேருந்து நிறுத்தப்படும் இடத்திலிருந்து சில கி.மீ. நடந்துதான் செல்ல வேண்டும். மினி நெய்வேலி டவுன்ஷிப் போல, அலுவலர் குடியிருப்புடன் அந்த மையம் அமைந்திருந்தது.

அதன் தலைவர் குருபரன் அவர்களைச் சந்தித்தேன். ‘எந்த மாதிரியான விவரங்கள் வேண்டும் என்று கேளுங்கள். இங்கே உள்ள தொழில்நுட்ப அலுவலர்கள் பலரும் அண்டார்டிகாவுக்கு சென்று வருபவர்கள்தாம். அநேக பேர் ஷார்ட் டிரிப்  சென்று வருபவர்கள். ஜீவா என்று ஒருவர் இருக்கிறார். அண்டார்டிகாவுக்கு சிலமுறை லாங் டிரிப் சென்றிருக்கிறார் அவர். நீங்கள் அவரிடம் பேசினால் சரியாக இருக்கும்’ என்று எனக்கு வழிகாட்டினார் குருபரன்.

ஜீவா, மென்மையான மனிதர். பல விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளக்கூடிய குணம் கொண்டவர். அண்டார்டிகா குறித்து ஒரு புத்தகம் எழுதப்பட வேண்டும் என்ற எண்ணம் அவருக்கும் இருந்தது. எனக்கு உதவுவதற்கு ஒப்புக்கொண்டார். ஓரிரு சந்திப்புகளிலேயே நண்பரும் ஆனார்.

சொந்த ஊரான தூத்துக்குடியில் தங்கிக் கொண்டேன். தினமும் கிருஷ்ணாபுரத்துக்குச் சென்றுவர ஆரம்பித்தேன். பேச வேண்டிய விஷயத்தை, கேள்விகளை முன்னதாகவே தயார் செய்துகொள்வேன். ஜீவா, தன் பணிகளுக்கிடையில் கிடைக்கும் நேரங்களில் என்னுடன் பேசினார். மற்ற நேரங்களில் மையத்தில் உள்ள அண்டார்டிகா அனுபவம் கொண்ட பிற நபர்களிடம் பேசி தகவல்களைச் சேகரித்தேன்.

நண்பர் ஜீவா என்னிடம் பகிர்ந்துகொண்ட தகவல்கள் அண்டார்டிகாவுக்குச் சென்று வந்ததைப் போன்ற உணர்வைத் தந்தன. அண்டார்டிகாவின் வானிலை, காலநிலை எப்படிப்பட்டது, எந்த மாதிரியான ஆராய்ச்சிகளை இந்தியர்கள் அங்கே மேற்கொள்கிறார்கள், அங்குள்ள மைத்ரி இந்திய ஆராய்ச்சி மையத்தில் தின வாழ்க்கையின் நிகழ்வுகள் என்னென்ன, குளிர்காலம் எப்படிப்பட்டது, அங்கே விளைபவை என்று எதுவும் கிடையாதே, மாதக்கணக்கில் தங்கியிருப்பவர்கள் உணவுக்கு என்ன செய்கிறார்கள், காலையில் எழுந்ததும் சுடச்சுட டிகிரி காபி சாத்தியம்தானா என்பது முதற்கொண்டு யாரெல்லாம் அண்டார்டிகாவுக்குச் சென்று தங்க முடியும் என்பது வரையிலான பல்வேறு விஷயங்களைக் கேட்டு அறிந்துகொண்டேன். சென்னைக்குத் திரும்பினேன்.

அண்டார்டிகாவின் இந்திய ஆராய்ச்சி நிலையம் ‘மைத்ரி'

தொண்ணூறு டிகிரி தென் துருவத்தை முதன் முதலில் தொட வேண்டும் என்ற வெறியில், பயணம் செய்த இங்கிலாந்தைச் சேர்ந்த ராபர்ட் ஸ்காட், நார்வேயைச் சேர்ந்த ரோல்ட் அமுன்ட்சென், இன்னொரு முக்கிய பனிப்போராளியான அயர்லாந்தைச் சேர்ந்த ஷாகெல்டன் ஆகியோரது பயணங்கள் குறித்த புத்தகங்களைப் படித்தேன். அவை குறித்து கிடைக்கும் ஆவணப் படங்களைப் பார்த்தேன். அண்டார்டிகாவின் புவியியல், அறிவியல் விஷயங்கள், அதன் வரலாறு, தென் துருவத்தை அடைவதற்காக நடந்த பந்தயங்கள் என பிரித்துக் கொண்டு புத்தகத்தை எழுத ஆரம்பித்தேன். தயாரிப்புகளுக்கு இரண்டு மாதங்கள் பிடித்தன. எழுதுவதற்கு இரண்டு மாதங்கள். இடைப்பட்ட காலத்தில் மீண்டும் நண்பர் ஜீவாவைச் சென்று சந்தித்து, சில விஷயங்கள் குறித்த சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொண்டேன்.

ஒரு மாலை. புத்தகம் எழுதி முடித்து ஸ்கிரிப்டை பாராவுக்கு அனுப்பினேன். மாலை வீட்டுக்குக் கிளம்புவதாக இருந்தவர், ஸ்கிரிப்ட் வந்ததும் அன்று இரவு கிழக்கிலேயே தங்குவதாக முடிவு செய்தார், எடிட் செய்வதற்காக. முத்துக்குமார், ச.ந. கண்ணன், முத்துராமன், மருதன் உடன் நானும் அன்று இரவு அலுவலகத்திலேயே தங்கினேன்.

பாரா, மாலை ஆறு மணிபோல ஸ்கிரிப்டை வாசிக்க ஆரம்பித்தார். இரவு ஏழரை மணி இருக்கும். இரவு சாப்பாட்டுக்கு என்ன டிபன் வேண்டும் என்று கேட்பதற்காக அவரது அறைக்குள் நுழைந்தேன். மடிக் கணிணிக்குள் மூழ்கியிருந்தார். முகம் சாதாரணமாக இல்லை. இரண்டு முறை அழைத்தேன். பதிலில்லை. அருகில் சென்று தோளைத் தொட்டு அழைத்தேன். சட்டென நிமிர்ந்தார். முகத்தில் ஒருவிதமான மிரட்சி. முன் நிற்பது நான்தான் என்று அவர் உணர்வதற்குக்கூட சில நொடிகள் பிடித்தன.

‘சார் டிபன் வாங்கணுமா?’

‘அப்புறம் சொல்றேன்…’

அறையிலிருந்து வெளியில் வந்துவிட்டேன். வருவதற்கு முன் அவர் லேப்டாப்பின் திரையில் பார்த்தேன். ஸ்காட்டும் அமுண்ட்சென்னும் தென் துருவத்தைத் தொட போராடிக் கொண்டிருந்தார்கள். அடுத்த ஒருமணி நேரத்தில் புத்தகத்தை எடிட் செய்துமுடித்துவிட்டு பாரா அறையிலிருந்து வெளியே வந்தார்.

‘ஸ்காட், அமுண்ட்சென் – ரெண்டு பேருமே என்னை மிரட்டிட்டாங்க. உன்னோட பெஸ்ட் புக் இது. இனி நீ என்ன எழுதுனாலும் இதுக்கு நிகரா வராது.’

(பாரா பரிந்துரைக்கும் Top 100 புத்தகங்களில் எனது அண்டார்டிகாவுக்கும், கண்ணீரும் புன்னகைக்கும் எப்போதும் இடம் உண்டு என்பதில் மகிழ்ச்சி )

அண்டார்டிகா புத்தகம், கடும்குளிரை வெளிப்படுத்தும் வார்த்தையான  ‘ஸ்…’ என்ற தலைப்பில் வெளிவந்தது. 2007 சென்னை புத்தகக் கண்காட்சியில் ஓரளவு விற்பனையானது.

அதற்குப் பின்?

நான் எழுதி வெளியான புத்தகங்களிலேயே மிகக் குறைவான எண்ணிக்கையில் விற்பனையான புத்தகம் அண்டார்டிகாதான். கிழக்கின் சேல்ஸ் டிபார்ட்மெண்டில் கேட்டால் ‘Failure’ புத்தக வரிசையில் சொல்வார்கள். யூதர்கள், செங்கிஸ்கான போன்ற ஹிட் புத்தகங்கள் எழுதியிருந்தாலும், அகம் புறம் அந்தப்புரம், முகலாயர்கள் போன்ற மெகா சைஸ் புத்தகங்கள் எழுதியிருந்தாலும், என் மனத்துக்கு அதிக சந்தோஷம் கொடுக்கும் புத்தகம் ‘அண்டார்டிகா’தான். எழுதும்போதே என் மனத்தை அதிகம் பாதித்த புத்தகமும் இதுதான். இன்று வரையில், என் எழுத்தை புதிதாக வாசிக்கப் போகிறவர்களுக்கு நான் முதலில் பரிந்துரைக்கும் புத்தகம் அண்டார்டிகாதான். இந்தப் புத்தகத்தின் மூலம் எனக்கு அறிமுகமான நண்பர்களும் அநேகம்.

கடந்த மூன்று ஆண்டுகளாகவே ‘ஸ்…’, சென்னை புத்தகக் கண்காட்சியில் கிழக்கின் இலக்கியப் புத்தக ஸ்டாலில் இடம்பெற்றிருந்தது. (ஏன் என்று புரியவிலலை. ஒருவேளை இலக்கியம் படைத்துவிட்டேனோ?) இந்தமுறையும் விற்பனைக்குக் கிடைக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் ‘ஸ்..’ என்ற பழைய தலைப்பில் கிடைக்குமா, அல்லது ‘அண்டார்டிகா’ என்று தலைப்பும் அட்டையும் மாற்றப்பட்ட புதிய பதிப்பாகக் கிடைக்குமா என்று என்னால் உறுதியாகக் கூறமுடியவில்லை. விருப்பப்பட்டால் வாங்கிப் படித்துவிட்டு உங்கள் விமரிசனங்களை முன் வையுங்கள்.

நண்பர் ஜீவாவும் எனது அண்டார்டிகா புத்தகத்தை மிகவும் ரசித்தார். தற்போதுகூட அண்டார்டிகாவில் ஆராய்ச்சி நிமித்தமாக தங்கியிருக்கும் (இந்த முறை குழுவுக்குத் தலைமையேற்று சென்றிருக்கும்) நண்பர் ஜீவாவுக்கு அவர் செய்த உதவிகளுக்காக என் நன்றிகளை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தொண்ணூறு டிகிரி மூன்றாம் பாகத்தில் பனிப்போராளிகளான ஸ்காட், அமுன்ட்சென், ஷாகெல்டன் ஆகியோரோடு சந்திக்கிறேன்.