சென்னை புத்தகக் காட்சி 2011 – கடந்த நான்கு நாள்கள் ஒரு பார்வை.
* ‘வானுயர்ந்த சோலையிலே… நீ நடந்த பாதையெல்லாம்…’ பாடலை பாடிக்கொண்டே செல்வது உத்தமம். நடக்கும் பாதையில் கீழே பொருத்தப்பட்டுள்ள மரப்பலகைகள் எப்போது உடைந்து நம்மை உள்ளிழுக்குமோ என்ற பயம் கண்காட்சிக்குள் நுழைந்து சில அடிகள் எடுத்து வைத்தவுடன் உங்களுக்கு ஏற்படப்போவது சர்வ நிச்சயம். தனுஷுக்குத் தம்பிபோன்ற உடல்வாகுடன் இருக்கும் நானே பயப்படுகிறேன் என்றால், பிரபுவுக்கு அண்ணன்போல இருக்கும் பாரா, ஹரன் பிரசன்னா போன்றோர் நிலைமையை நினைத்துப் பாருங்கள்.
* இந்தமுறை வள்ளுவர் பாதை, ஷெல்லி பாதை, கம்பர் பாதை, சேக்ஸ்பியர் பாதை என்ற ஒவ்வொரு வரிசைக்கும் ஒரு பெயர் கொடுத்திருக்கிறார்கள். நல்ல யோசனைதான். ஆனால் ‘ஓளவையார் பாதை’ என்று தவறாக அச்சிட்டு நம் தமிழ் மூதாட்டியை அவமானப்படுத்தியிருக்க வேண்டாம். தவிர, பபாஸி வழங்கும் ஸ்டால் வரைபடத்தில் ‘பாரதியார் பாதை’ என்று அச்சிடப்பட்டிருக்கும். ஆனால் நிஜத்தில் அங்கே இருப்பது ‘மகாத்மா காந்தி பாதை.’ அதற்குப் பக்கவாட்டில் இருக்கும் நீண்ட வரிசைதான் பாரதியார் பாதை. எனவே வாசகர்கள் வரைபடத்தைப் பார்த்துக் குழம்ப வேண்டாம்.
* இங்கே ஒரு கண்டனத்தைப் பதிவு செய்ய விரும்புகிறேன். திராவிட அரசியலில் எவ்வளவோ விஷயங்களுக்குப் பாதை போட்டுக் கொடுத்தவரும், இளைஞன் வரை இடையறாது எழுத்துச் சேவை ஆற்ற்ற்ற்ற்றிக் கொண்டிருக்கும் கலைஞரின் பெயரில் பாதை ஏன் வைக்கவில்லை? இந்தவார ஆ.வி.யில் கலைஞருக்காக வரிந்துகட்டிக் கொண்டு ஜிங்ஜக் அடித்திருக்கும் இயக்குநர் இமய்யம் பாரதிராஜா சார்பில் இந்தக் கண்டனத்தை முன் வைக்கிறேன்.