தொண்ணூறு டிகிரி (பகுதி 2)

(தொண்ணூறு டிகிரி பகுதி 1 படிக்க.)

‘திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் போற ரோட்டுல அந்த சென்டர் இருக்குது’ என்றான் பாலாஜி.

‘அதோட பேரு என்ன தெரியுமா?’ – நான் கேட்டேன்.

‘ஏதோ ஜியோமேக்னடிக் சென்டர்னு வரும்.’

‘நீ சொல்றபடி உண்மையிலேயே அங்க அப்படிப்பட்ட ஆள்கள் இருக்காங்களா?’

‘எம்எஸ்சி பிஸிக்ஸ் நான் படிக்கிறப்போ என்னோட பிரெண்ட்ஸ் அங்க ப்ராஜெக்ட் பண்ணிருக்காங்க. அவங்க சொல்லிருக்காங்க.’

பாலாஜி என் நண்பனின் சகோதரன், எனக்கும்தான். திருநெல்வேலியில் இருக்கும் ஒரு மையத்தில் உள்ள ஆய்வாளர்கள், அடிக்கடி அண்டார்டிகாவுக்குச் சென்று வந்திருக்கிறார்கள். அவர்களிடம் பேசினால், அண்டார்டிகா குறித்த பல தகவல்கள், அனுபவங்கள் கிடைக்கும் என்று பாலாஜி தகவல் கொடுத்தான்.

கூகுள், அந்த திருநெல்வேலி மையத்தின் தொடர்பு எண்ணை எனக்குக் கொடுத்தது. பேசினேன். விஷயத்தைச் சொன்னேன். நேரில் வாருங்கள், பேசலாம் என்றார்கள். பாராவிடம் சொல்லிவிட்டு சென்னையிலிருந்து கிளம்பினேன்.

அது Indian Institute of Geomagnetism – திருநெல்வேலி கிருஷ்ணாபுரத்தில் இயங்கிவரும் பூமத்திய புவி இயற்பியல் ஆராய்ச்சி மையம். ஊரைவிட்டு வெளியே பாளையங்கோட்டையிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் கிருஷ்ணாபுரம் என்ற ஊருக்கு அருகில் அமைந்துள்ள மையம் அது. பேருந்து நிறுத்தப்படும் இடத்திலிருந்து சில கி.மீ. நடந்துதான் செல்ல வேண்டும். மினி நெய்வேலி டவுன்ஷிப் போல, அலுவலர் குடியிருப்புடன் அந்த மையம் அமைந்திருந்தது.

அதன் தலைவர் குருபரன் அவர்களைச் சந்தித்தேன். ‘எந்த மாதிரியான விவரங்கள் வேண்டும் என்று கேளுங்கள். இங்கே உள்ள தொழில்நுட்ப அலுவலர்கள் பலரும் அண்டார்டிகாவுக்கு சென்று வருபவர்கள்தாம். அநேக பேர் ஷார்ட் டிரிப்  சென்று வருபவர்கள். ஜீவா என்று ஒருவர் இருக்கிறார். அண்டார்டிகாவுக்கு சிலமுறை லாங் டிரிப் சென்றிருக்கிறார் அவர். நீங்கள் அவரிடம் பேசினால் சரியாக இருக்கும்’ என்று எனக்கு வழிகாட்டினார் குருபரன்.

ஜீவா, மென்மையான மனிதர். பல விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளக்கூடிய குணம் கொண்டவர். அண்டார்டிகா குறித்து ஒரு புத்தகம் எழுதப்பட வேண்டும் என்ற எண்ணம் அவருக்கும் இருந்தது. எனக்கு உதவுவதற்கு ஒப்புக்கொண்டார். ஓரிரு சந்திப்புகளிலேயே நண்பரும் ஆனார்.

சொந்த ஊரான தூத்துக்குடியில் தங்கிக் கொண்டேன். தினமும் கிருஷ்ணாபுரத்துக்குச் சென்றுவர ஆரம்பித்தேன். பேச வேண்டிய விஷயத்தை, கேள்விகளை முன்னதாகவே தயார் செய்துகொள்வேன். ஜீவா, தன் பணிகளுக்கிடையில் கிடைக்கும் நேரங்களில் என்னுடன் பேசினார். மற்ற நேரங்களில் மையத்தில் உள்ள அண்டார்டிகா அனுபவம் கொண்ட பிற நபர்களிடம் பேசி தகவல்களைச் சேகரித்தேன்.

நண்பர் ஜீவா என்னிடம் பகிர்ந்துகொண்ட தகவல்கள் அண்டார்டிகாவுக்குச் சென்று வந்ததைப் போன்ற உணர்வைத் தந்தன. அண்டார்டிகாவின் வானிலை, காலநிலை எப்படிப்பட்டது, எந்த மாதிரியான ஆராய்ச்சிகளை இந்தியர்கள் அங்கே மேற்கொள்கிறார்கள், அங்குள்ள மைத்ரி இந்திய ஆராய்ச்சி மையத்தில் தின வாழ்க்கையின் நிகழ்வுகள் என்னென்ன, குளிர்காலம் எப்படிப்பட்டது, அங்கே விளைபவை என்று எதுவும் கிடையாதே, மாதக்கணக்கில் தங்கியிருப்பவர்கள் உணவுக்கு என்ன செய்கிறார்கள், காலையில் எழுந்ததும் சுடச்சுட டிகிரி காபி சாத்தியம்தானா என்பது முதற்கொண்டு யாரெல்லாம் அண்டார்டிகாவுக்குச் சென்று தங்க முடியும் என்பது வரையிலான பல்வேறு விஷயங்களைக் கேட்டு அறிந்துகொண்டேன். சென்னைக்குத் திரும்பினேன்.

அண்டார்டிகாவின் இந்திய ஆராய்ச்சி நிலையம் ‘மைத்ரி'

தொண்ணூறு டிகிரி தென் துருவத்தை முதன் முதலில் தொட வேண்டும் என்ற வெறியில், பயணம் செய்த இங்கிலாந்தைச் சேர்ந்த ராபர்ட் ஸ்காட், நார்வேயைச் சேர்ந்த ரோல்ட் அமுன்ட்சென், இன்னொரு முக்கிய பனிப்போராளியான அயர்லாந்தைச் சேர்ந்த ஷாகெல்டன் ஆகியோரது பயணங்கள் குறித்த புத்தகங்களைப் படித்தேன். அவை குறித்து கிடைக்கும் ஆவணப் படங்களைப் பார்த்தேன். அண்டார்டிகாவின் புவியியல், அறிவியல் விஷயங்கள், அதன் வரலாறு, தென் துருவத்தை அடைவதற்காக நடந்த பந்தயங்கள் என பிரித்துக் கொண்டு புத்தகத்தை எழுத ஆரம்பித்தேன். தயாரிப்புகளுக்கு இரண்டு மாதங்கள் பிடித்தன. எழுதுவதற்கு இரண்டு மாதங்கள். இடைப்பட்ட காலத்தில் மீண்டும் நண்பர் ஜீவாவைச் சென்று சந்தித்து, சில விஷயங்கள் குறித்த சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொண்டேன்.

ஒரு மாலை. புத்தகம் எழுதி முடித்து ஸ்கிரிப்டை பாராவுக்கு அனுப்பினேன். மாலை வீட்டுக்குக் கிளம்புவதாக இருந்தவர், ஸ்கிரிப்ட் வந்ததும் அன்று இரவு கிழக்கிலேயே தங்குவதாக முடிவு செய்தார், எடிட் செய்வதற்காக. முத்துக்குமார், ச.ந. கண்ணன், முத்துராமன், மருதன் உடன் நானும் அன்று இரவு அலுவலகத்திலேயே தங்கினேன்.

பாரா, மாலை ஆறு மணிபோல ஸ்கிரிப்டை வாசிக்க ஆரம்பித்தார். இரவு ஏழரை மணி இருக்கும். இரவு சாப்பாட்டுக்கு என்ன டிபன் வேண்டும் என்று கேட்பதற்காக அவரது அறைக்குள் நுழைந்தேன். மடிக் கணிணிக்குள் மூழ்கியிருந்தார். முகம் சாதாரணமாக இல்லை. இரண்டு முறை அழைத்தேன். பதிலில்லை. அருகில் சென்று தோளைத் தொட்டு அழைத்தேன். சட்டென நிமிர்ந்தார். முகத்தில் ஒருவிதமான மிரட்சி. முன் நிற்பது நான்தான் என்று அவர் உணர்வதற்குக்கூட சில நொடிகள் பிடித்தன.

‘சார் டிபன் வாங்கணுமா?’

‘அப்புறம் சொல்றேன்…’

அறையிலிருந்து வெளியில் வந்துவிட்டேன். வருவதற்கு முன் அவர் லேப்டாப்பின் திரையில் பார்த்தேன். ஸ்காட்டும் அமுண்ட்சென்னும் தென் துருவத்தைத் தொட போராடிக் கொண்டிருந்தார்கள். அடுத்த ஒருமணி நேரத்தில் புத்தகத்தை எடிட் செய்துமுடித்துவிட்டு பாரா அறையிலிருந்து வெளியே வந்தார்.

‘ஸ்காட், அமுண்ட்சென் – ரெண்டு பேருமே என்னை மிரட்டிட்டாங்க. உன்னோட பெஸ்ட் புக் இது. இனி நீ என்ன எழுதுனாலும் இதுக்கு நிகரா வராது.’

(பாரா பரிந்துரைக்கும் Top 100 புத்தகங்களில் எனது அண்டார்டிகாவுக்கும், கண்ணீரும் புன்னகைக்கும் எப்போதும் இடம் உண்டு என்பதில் மகிழ்ச்சி )

அண்டார்டிகா புத்தகம், கடும்குளிரை வெளிப்படுத்தும் வார்த்தையான  ‘ஸ்…’ என்ற தலைப்பில் வெளிவந்தது. 2007 சென்னை புத்தகக் கண்காட்சியில் ஓரளவு விற்பனையானது.

அதற்குப் பின்?

நான் எழுதி வெளியான புத்தகங்களிலேயே மிகக் குறைவான எண்ணிக்கையில் விற்பனையான புத்தகம் அண்டார்டிகாதான். கிழக்கின் சேல்ஸ் டிபார்ட்மெண்டில் கேட்டால் ‘Failure’ புத்தக வரிசையில் சொல்வார்கள். யூதர்கள், செங்கிஸ்கான போன்ற ஹிட் புத்தகங்கள் எழுதியிருந்தாலும், அகம் புறம் அந்தப்புரம், முகலாயர்கள் போன்ற மெகா சைஸ் புத்தகங்கள் எழுதியிருந்தாலும், என் மனத்துக்கு அதிக சந்தோஷம் கொடுக்கும் புத்தகம் ‘அண்டார்டிகா’தான். எழுதும்போதே என் மனத்தை அதிகம் பாதித்த புத்தகமும் இதுதான். இன்று வரையில், என் எழுத்தை புதிதாக வாசிக்கப் போகிறவர்களுக்கு நான் முதலில் பரிந்துரைக்கும் புத்தகம் அண்டார்டிகாதான். இந்தப் புத்தகத்தின் மூலம் எனக்கு அறிமுகமான நண்பர்களும் அநேகம்.

கடந்த மூன்று ஆண்டுகளாகவே ‘ஸ்…’, சென்னை புத்தகக் கண்காட்சியில் கிழக்கின் இலக்கியப் புத்தக ஸ்டாலில் இடம்பெற்றிருந்தது. (ஏன் என்று புரியவிலலை. ஒருவேளை இலக்கியம் படைத்துவிட்டேனோ?) இந்தமுறையும் விற்பனைக்குக் கிடைக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் ‘ஸ்..’ என்ற பழைய தலைப்பில் கிடைக்குமா, அல்லது ‘அண்டார்டிகா’ என்று தலைப்பும் அட்டையும் மாற்றப்பட்ட புதிய பதிப்பாகக் கிடைக்குமா என்று என்னால் உறுதியாகக் கூறமுடியவில்லை. விருப்பப்பட்டால் வாங்கிப் படித்துவிட்டு உங்கள் விமரிசனங்களை முன் வையுங்கள்.

நண்பர் ஜீவாவும் எனது அண்டார்டிகா புத்தகத்தை மிகவும் ரசித்தார். தற்போதுகூட அண்டார்டிகாவில் ஆராய்ச்சி நிமித்தமாக தங்கியிருக்கும் (இந்த முறை குழுவுக்குத் தலைமையேற்று சென்றிருக்கும்) நண்பர் ஜீவாவுக்கு அவர் செய்த உதவிகளுக்காக என் நன்றிகளை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தொண்ணூறு டிகிரி மூன்றாம் பாகத்தில் பனிப்போராளிகளான ஸ்காட், அமுன்ட்சென், ஷாகெல்டன் ஆகியோரோடு சந்திக்கிறேன்.

தொண்ணூறு டிகிரி! (பகுதி 1)

அண்டார்டிகா – 2006ல் நான் எழுதிய புத்தகம். ‘அண்டார்டிகா குறித்த ஒரு புத்தகம் எழுதப்பட வேண்டும். நீ எழுது’ என்று யோசனை கொடுத்தது பாராதான்.

கொஞ்சம்கூட யோசிக்கவில்லை. எழுத ஒப்புக்கொண்டேன். அண்டார்டிகா குறித்து பெரிதாக எனக்கு எதுவும் தெரியாது. அண்டார்டிகாவுக்கான ஆங்கில ஸ்பெல்லிங்கில்கூட சந்தேகம் இருந்தது.

அந்தச் சவாலான சூழ்நிலைதான் அண்டார்டிகா குறித்து எழுதுவதற்கான உந்துசக்தியாக என்னை வழிநடத்தியது. இங்கே தமிழ்நாட்டில் வாழும் நாம் எந்தச் சூழ்நிலையிலும் அண்டார்டிகா குறித்து கொஞ்சம்கூட யோசித்துப் பார்த்திருக்க மாட்டோம். அது ஒன்றும் அமெரிக்கா இல்லையே. அந்தக் கண்டம் குறித்த கவலைகள் நமக்கு அநாவசியமே. எனில், தமிழ் வாசகர்களுக்கு அண்டார்டிகா என்ற ஒரு கண்டத்தை புதிதாக, எளிதாக அறிமுகப்படுத்த வேண்டும். அதன் வரலாறு, புவியியல், அறிவியல் விஷயங்களை நான் அறிந்து கொள்ள வேண்டும். அதை புத்தகத்தில் சுவாரசியம் குறையாமல் கொண்டுவர வேண்டும். முடிவு செய்து கொண்டேன். உடனே அண்டார்டிகா குறித்த தகவல்களை, புத்தகங்களைத் தேடி ஓடவில்லை.

அண்டார்டிகா குறித்து நான் அறிந்த ஒரு சில பொதுவான செய்திகளைக் கொண்டு, அந்தப் புத்தகத்துக்கான அறிமுக அத்தியாயத்தை எழுதினேன். அதுதான் இது.

***

படிக்க ஆரம்பிக்கும் முன் முதலில் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுங்கள். இது அவசியம்.

குறைந்த பட்சம் இரண்டு ஸ்வெட்டர்கள் அணிந்து கொள்ளுங்கள். அப்புறம் கை கால்களை முற்றிலும் மூடும் படி உறை அணிந்து கொள்ளுங்கள். மப்ளர், தலையில் குல்லா மிகவும் அவசியம். ஹலோ ஹலோ ஒரு நிமிஷம். குல்லா அணியும் முன் காதினில் பஞ்சு வைத்துக் கொள்ளுங்கள். ஆச்சா? முடிந்தால் ஒரு கம்பளிப் போர்வையால் போர்த்திக் கொள்ளுங்கள். உங்கள் கண்கள் மட்டும் வெளியே தெரிந்தால் போதுமானது. ஓ.கே. இப்பொழுது நீங்கள் ரெடி. ஆரம்பிக்கலாம்.

ஒரு வளவளப்பான கூடைப் பந்தில் ஒருபுறம் ஒரு கப் வெண்ணிலா ஐஸ்கீரிமை கொட்டினால் எப்படி இருக்கும். கற்பனை செய்து பாருங்கள். அப்படித்தான் பூமிப் பந்தின் தென் துருவத்தில் அண்டார்டிகா ‘என் கடன் பனியால் உறைந்து கிடப்பதே’ என ஜில்லிட்டுக் கிடக்கிறது.

அண்டார்டிகா என்ற சொன்னால், புது வெள்ளை மழை நம் கற்பனைக் கண் முன்னால் பொழியும். தத்தக்கா பித்தக்கா என நடக்கும் பென்குயின்கள் நினைவுக்கு வரும். பக்கத்து வீட்டு குண்டு மாமா போல மீசை வைத்த ஸீல்கள் ஞாபகத்துக்கு வரும். வேறென்ன? ‘வேறென்ன இருக்கிறது, அவ்வளவுதான்’ என்பது பெரும்பான்மையானோரின் பதிலாக இருக்கும். ஆனால் உண்மையில் இன்னும் சொல்லப்படாதவை, கண்டுபிடிக்கப்படாதவை நிறைய நிறைய இருக்கின்றன.

பூமியின் மற்ற பகுதிகளில் காண முடியாதவற்றை, உணர முடியாதவற்றை பூமியின் இறுதிப் பகுதியான அண்டார்டிகாவில் காணலாம்.

கொஞ்சம் நிதானமாக சிந்தித்து கேள்வி கேட்க ஆரம்பித்தாலே போதும். அண்டார்டிகா பற்றி மேலும் மேலும் அறிந்து கொள்ள வேண்டுமென்ற ஆர்வம் நமக்குள் எரியத் தொடங்கி விடும்.

முதலில் ஒரு கேள்வி. அண்டார்டிகாவும் பூமியில் ஒரு கண்டம்? அது யாருக்குச் சொந்தம்? இன்னும் சில கேள்விகள்.

அது தனி நாடா? எந்த நாடு அண்டார்டிகாவை ஆட்சி புரியும் அதிகாரத்தை வைத்துள்ளது?

இல்லை, மக்களே இல்லாத பிரதேசமா? அங்கு மக்கள் அபார்ட்மெண்ட்ஸ் கட்டி வாழ முடியுமா? குறைந்த பட்சம் குடிசையாவது போட முடியுமா? இப்போது அங்கு மனிதர்கள் நிரந்தரமாக வசித்துக் கொண்டிருக்கிறார்களா?

வாழ முடியுமென்றால், அங்கு உணவு கிடைக்குமா? விவசாயம் செய்ய முடியுமா? என்னென்ன இயற்கை வளங்கள் உண்டு? நல்ல நீர் ஆதாரம் உண்டா? இல்லை, ஐஸ்கட்டிதான் எல்லாமுமா?

அங்கு டீவி, வானொலி, தொலைபேசி வசதிகளுக்கு சாத்தியமுண்டா? விமான சேவை வசதியுண்டா? நிரந்தர கப்பல் போக்குவரத்து வசதிகள், நிரந்தர துறைமுகங்கள் உண்டா?

இப்படி இன்னும் எத்தனை எத்தனையோ கேள்விகள் பனிப்புயலாய் வீசத் தொடங்கி விட்டதல்லவா. எதையும் விட்டு வைக்க வேண்டாம். ஒவ்வொன்றாகப் பார்த்து விடலாம்.

***

அண்டார்டிகா புத்தகம் எழுதிய அனுபவத்தை அடுத்த பதிவில் பகிர்ந்து கொள்கிறேன்.

‘இந்த எண்ணம் மிஸ்டர் எம்.ஜி.ஆருக்கு இருக்குமா?’

காலையிலேயே சேகர் என்ற நண்பர் தொலைபேசியில் அழைத்தார். அவர் ஜே.பி. சந்திரபாபுவின் குரலில் பாடும் மேடைப் பாடகர். எனது கண்ணீரும் புன்னகையும் புத்தகத்தின் ரசிகர். அவ்வப்போது அழைத்து சந்திரபாபு குறித்து பேசுவார். அவர் பேசி முடித்ததிலிருந்து எனக்குள் சந்திரபாபுவின் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

*

‘நான் குடிகாரன் என்பது ஊரறிந்த உலகறிந்த ஒரு விஷயம். ஒவ்வொரு மனிதனையும் அழைத்து அவனுக்கு மதுவை ஊற்றிக் கொடுத்துப் பாருங்கள். அவன் தன் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளை ஒளிவு மறைவின்றி கூறிவிடுவான். அழுது விடுவான். மதுவை நான் அளவோடு தினமும் குடிப்பேன். ஆனால் என்று ‘மாடி வீட்டு ஏழை’ படமெடுக்கத் துணிந்தேனோ அன்று முதல் ‘மொடாக்குடி’ என்று கூறுவீர்களே, அப்படிக் குடிக்க ஆரம்பித்தேன். அந்த மயக்கமும் போதாமல்தான் ‘பெத்தடினுக்கு’ வந்தேன். நடிகனுக்கு மதிப்பும் மரியாதையும் உயரும்போது, ஊதியமும் சேர்ந்து உயரத்தான் செய்யும்.

மனிதன் எதற்காக உழைக்கிறான்? ஊதியத்திற்காகத்தானே? அது கிடைக்காதபோது ஷூட்டிங்குக்கு போகாமலிருக்கிறேன். பணம் தராத படத் தயாரிப்பாளர்களின் படங்களில் சில சமயங்களில் நடிக்கப் போகாமலிருந்ததுண்டு. பிறகு நானே வருத்தப்பட்டு போகிறது பாவம் கஷ்டப்படுகிறார் என்றுணர்ந்து நடிக்கச் சென்று விடுவேன். உண்மையான ஒரு கலைஞன் ஷூட்டின் இருக்கிறது என்றறிந்த பிறகும் போகாமல் இருக்கமாட்டான்.

அவரது ஊதியத்தை பேசியபடி கொடுக்காத தயாரிப்பாளர்களுண்டா?
நல்ல கறவை மாடு என்றறிந்தால்தான் மிஸ்டர் எம்.ஜி.ஆர். நடிக்கவே ஒப்புக் கொள்வார். இதுதான் உண்மை. நான் எந்தத் தயாரிப்பாளரையும் சரி செட் போடுங்கள் என லட்ச ரூபாய்க்கு செட் போடச் சொல்லிவிட்டு, பிறகு செட்டைப் போய்ப் பார்த்து, இது நன்றாக இல்லை கலைந்து விடுங்கள் என்று சொன்னதில்லை.

உடன் நடிக்கும் நடிகையைக் கூப்பிட்டு நாளை நான் கால்ஷீட் கொடுத்திருக்கிறேன். நீ இல்லாமல் படமெடுக்க முடியாது. உன்னை அழைக்க வந்தால், மாத விலக்கு என்று கூறிவிடு என சொல்லிவிட்டு நான் தப்பித்துக் கொண்டதில்லை.

ஷூட்டிங் இருக்கும் நாளில் கண்வலி என்று சொல்லி கன்னியருடன் விளையாடிக்கொண்டிருந்ததில்லை. முக்கியமாக எடிட்டிங் அறைக்குப் போனதே இல்லை. போனாலும் என் காட்சிகள் தவிர மற்றவர் காட்சிகளை நீக்கச் சொல்லிவிட்டு, எடிட்டர் மீது பழி போட்டதே இல்லை. தொழிலில் நான் அன்றும் சரி, இன்றும் சரி, மிகவும் நாணயமாக நடந்து கொள்ள முயற்சித்து வருகிறேன்.

நான் ரசிகர்களை மதிக்கிறேன். நீங்கள் எனக்களித்த ஏகோபித்த வரவேற்பால்தான் சாதாரண மீனவக் குடிமகனான நான் உயர்ந்த நிலைக்கு வந்தேன். வாழ்ந்தேன். இன்றும் உங்களால் தான் ஏதோ வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இந்த எண்ணம் மிஸ்டர் எம்.ஜி.ஆருக்கு இருக்குமா?

கட்சிக்காரர்கள், ரசிகர்கள் தொல்லை தருகிறார்கள். அதனால்தான் அயல்நாடுகளில், பிற மாநிலங்களில் படப்பிடிப்பு நடத்துகிறேன் என்றல்லவா கூறியிருக்கிறார். நான் என்றும் அப்படி கூறியதில்லை. அவுட்டோர் ஷூட்டிங் என்றால் எனக்கு ஒரே ‘குஷி’யாக இருக்கும். நமது திறமையை மக்களுக்கு நேரில் காட்டுவோம் என்றெண்ணி உற்சாகமாக உழைப்பேன்.

என்னிடமும் சில குறைபாடுகள் உண்டு. ஆனால் அது பிறருக்குத் தீங்கு விளைவிக்காது.
ஆனால் மிஸ்டர் எம்.ஜி.ஆரிடம் உள்ள குறைபாடுகள், என்னைப் போன்ற ஏமாளிகளைத் தெருவில் நிறுத்தி விடும்.

சமீபத்தில் எனது நண்பரான ஸ்டண்ட் மாஸ்டர் ஒருவரின் திருமணத்திற்காக நான் சென்றிருந்தேன். முன் வரிசையில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கும்போது வழக்கத்திற்கு மாறாக பரபரப்பு ஏற்பட்டது. பலர் என்னையே பார்த்தார்கள். என்ன விஷயம் என்று தெரியாமல் நான் திகைக்க, முன் வரிசைக்கருகே மிஸ்டர். எம்.ஜி.ஆர். வந்து கொண்டிருந்தார்.

கை கூப்பி வணங்க கையைத் தூக்கியவர் என்னைக் கண்டதும் எதையோ பார்த்தவர் போலானார். விருட்டென்று அருகிருந்த கதவுப் பக்கம் ஓட்டமும் நடையுமாக ஓடி கதவைத் தட்டினார். அது திறக்கப்படவில்லை.

பின் வேகமாக என் பாதை வழியாக முகத்தை திருப்பியபடி சென்று மறைந்தார்.
என்னைக் கண்டு ஏன் இப்படி ஓடி மறைய வேண்டும்? நானென்ன பேயா.. பூதமா.. நான் உண்மையை எழுதுகிறேன் என்ற ஆத்திரமா.. பணத்தையும் கொடுத்து விட்டு, பரிதாபத்திற்குரிய காட்சிப் பொருளாக ஆனவன் நானல்லவா! ஆத்திரப் படவேண்டிய நான் அமைதி அடைந்து விட்டேன். தர்மத்தை கண்டு பொறுக்காமல் அதர்மம் ஆத்திரப்படுகிறது. இப்படித்தான் நான் அன்று எண்ணிக் கொண்டேன்.’

புத்தம் புது பூமி வேண்டும்!

ஓர் இயக்குநர். முதல் படம் ஹிட். அடுத்த படம் ரிலீஸ் ஆகப்போவதற்கு முந்தைய நாள். அந்த இயக்குநரின் மனநிலை எப்படி இருக்கும்? வரப்போகும் வெள்ளிக்கிழமையை (ஏப்ரல் 16, 2010) எதிர்நோக்கி நான் அதே மனநிலையோடுதான் காத்திருக்கிறேன்.

அகம் புறம் அந்தப்புரம் முதல் அத்தியாயம் – குமுதம் ரிப்போர்ட்டரில் 2007 ஜூலை 22 இதழில் வெளியானது. அது எனது முதல் வரலாற்றுத் தொடர். அப்போது பரவசம் அதிகம் இருந்தது. சென்னை சாலைகளில் என் பெயர் ஏந்திய போஸ்டர்களைப் பார்க்கும்போது சந்தோஷம். 50 அத்தியாயங்கள் எழுதிவிடலாம் என்று ஆரம்பித்து, நூறாக வளர்ந்து, 185 அத்தியாயங்களாக நிறைந்த தொடர் அது. அந்த இரு வருடங்களில் என் வாழ்க்கையில் தினசரி வேலைகளில் அகம் புறம் அந்தப்புரத்துக்காக உழைப்பதுவும் சேர்ந்துகொண்டது. அது புத்தகமாக வெளிவந்தபின்பு, அதன் கனம், விலை பொருட்படுத்தாமல் தொடர்ந்து ஆதரவளித்து வரும் வாசகர்களுக்கு நன்றி.

க்டந்த ஏழெட்டு மாதங்களாகவே அடுத்த தொடருக்கான விஷய சேகரிப்புகளில் ஈடுபட்டிருந்தேன். கடந்த இரண்டு மாதங்களாக அதற்கான முழு தயாரிப்பில் இறங்கியிருந்தேன். இதோ நாளை வெளிவரப்போகிறது – புத்தம் புது பூமி வேண்டும்.

இந்த முறை  தமிழக அரசியல் இதழில் எழுதுகிறேன். அண்டார்டிகா குறித்த புத்தகம் எழுதும்போதே சாகசப் பயணிகள் குறித்து இன்னும் நிறைய தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு அதிகமானது. அடுத்து உலகைப் பாதி சுற்றி வந்த மெகல்லன் குறித்து ஒரு புத்தகம் எழுதினேன். உலக வரைபடத்தை முழுமையாக்கிய ஒவ்வொரு பயணியின் பயணத்தை வைத்தும் தொடர் எழுத வேண்டும் என்று ஆசை. தமிழக அரசியலில் அதற்கான இடம் கிடைத்திருக்கிறது.

ஆரம்பித்துவிட்டேன்.

புத்தம் புது பூமி வேண்டும் என்று தொடருக்காக அழகான தலைப்பை வைத்த பாராவுக்கு நன்றி. அகம் புறம் அந்தப்புரத்தைவிட, சவாலான களம் இது. கிமுவில் தொடங்கி சென்ற நூற்றாண்டு வரை சரித்திரத்தை மாற்றியமைத்த சாகசப் பயணங்களை மீண்டும் நான் செய்து பார்க்க வேண்டும். என்னோடு நீங்களும்.

தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.

பின் குறிப்பு : சினிமாவின் ரிசல்ட் – முதல் காட்சியிலேயே தெரிந்துவிடும். பத்திரிகைத் தொடருக்கு அப்படியல்ல.

சலூனில் கலைஞர்!

வார நாள்களில் கூட்டம் அதிகம் இருக்காது அல்லது கூட்டமே இருக்காது என்ற நினைப்பில் நேற்று காலை (வியாழன்) சலூனுக்குச் சென்றேன். நினைப்பில் முடி விழவில்லை.

எனக்கு வழக்கமாக முடி வெட்டி விடும் அண்ணன் ஒருவருக்கு முடிவெட்டிக் கொண்டு இருந்தார். வேறு யாரும் இல்லை. குமுதத்தைப் புரட்ட ஆரம்பித்தேன். விமரிசனத்தில் தீராத விளையாட்டுப் பிள்ளையை டர்…

அண்ணனைப் பார்த்தேன். அந்த நபருக்கு அப்போதுதான் வெட்ட ஆரம்பித்திருப்பார் போல. அண்ணன் அசையாமல் நிற்பார். வேலை செய்வதுபோலவே தெரியாது. ஆனால் அவரது விரல்களின் வேகம் அலாதியாக இருக்கும். மின்சாரக் கனவு பிரபுதேவா போல சினிமாத்தனமாகவெல்லாம் இருக்காது. கட்டிங் என்றால் எந்தத் ‘தல’க்கும் பத்தே நிமிடங்கள்தான்.

டீவி ஓடிக் கொண்டிருந்தது. இந்தியா தென் ஆப்ரிக்கா இரண்டாவது டெஸ்ட் மேட்ச் ஐந்தாவது நாள். அம்லாவின் அஸ்திவாரத்தைத் தகர்க்க, நாக்கு தள்ள ஓடிவந்து முயற்சி செய்து கொண்டிருந்தார் இஷாந்த் சர்மா. இருவரையுமே சலூனுக்கு அழைக்கலாம் என்று தோன்றியது.

சலூனுக்குள் ஒருவர் நுழைந்தார். கையில் டிஃபன் பார்சல். உள்ளே கொண்டுபோய் வைத்தார். ‘பொங்கல் வாங்கியிருக்கேன்’ என்றார் அண்ணனிடம். ‘நீங்க வாங்க உக்காருங்க’ என்றார் என்னிடம். தொடர்ந்து ‘ஏவ்வ்வ்’ என்று அடிவயிற்றில் இருந்து அசுர ஏப்பம் வேறு.

கடைக்குப் புதியவர் போல. அதென்னவோ, சில விஷயங்களில் மாற்றத்தைச் சட்டென்று மனம் ஏற்றுக் கொள்ளாதல்லவா. யோசித்தேன். பின் (பாரா ஸ்டைலில் சொல்ல வேண்டுமென்றால்) ‘கேச’வ பெருமாளை மனமார வேண்டிக் கொண்டு, தலையைக் கொடுத்தேன். அவர் என் சட்டை மேல் பட்டனைக் கழற்றி, துணி சுற்றவே சில நிமிடங்கள் எடுத்துக் கொண்டார். சுற்றிய துணியை உருவி மேலும் சிலமுறை சுற்றிப் பார்த்துக் கொண்டார்.  ‘என்னதான் நடக்கும் நடக்கட்டுமே’ எனக்குள்ளே ஈனஸ்வரத்தில் யாரோ பாடினார்கள்.

செடிக்கு பூச்சி மருந்து அடிப்பதுபோல தண்ணீரை ஸ்பிரே செய்தார். அதுவும் சில நிமிடங்களுக்கு. ஷாம்பு வாங்கிக் கொடுத்தால் குளிப்பாட்டி விட்டிருப்பார். டிராயரை நிதானமாகத் திறந்து கத்திரிக்கோலுக்கு வலிக்காமல் எடுத்தார். நான்கைந்து சீப்புகளையும் எடுத்துவைத்தார். ஒவ்வொன்றாகப் பார்த்தார். மனத்துக்குள் இங்கி பிங்கி பாங்கி சொல்லியிருப்பார்போல. கடைசியாக ஒரு சீப்பைத் தேர்ந்தெடுத்து கத்திரிக்கோலையும் கையில் எடுத்துக் கொண்டார். சிலமுறை 360 டிகிரி என்னைச் சுற்றி வந்தார். எங்கிருந்து ஆரம்பிப்பது என்ற குழப்பம்போல. பின் மண்டையிலிருந்தே ஆரம்பித்தார். சோதனைச் சாலை எலிகள் என் தலையில் ஊர்வதுபோல தெரிந்தது.

மயிரே போச்சு என்று விட்டுவிட முடியாதே, எல்லை மீறினால் காப்பாற்ற அண்ணன் வருவாரா என்று ஓரக்கண்ணால் நோக்கினேன். அண்ணன் கஸ்டமரை அனுப்பிவிட்டு, பொங்கலைக் கவனிக்கப் போயிருந்தார்.

என்னவர், பக்கத்து தெரு கடையில் சென்று பொங்கல் வாங்கி வந்த உப்புச் சப்பற்ற கதையை பேச ஆரம்பித்தார். மேட்சில் விக்கெட்டும் விழவில்லை. நானே விக்கெட் ஆகிவிடுவேனோ என்ற பயம் எனக்கு.

‘நேத்து ஒரு கண்ணால வூட்டுக்குப் போயிருந்தேன். பெர்சா பந்தியெல்லாம் போட்டு சாப்பாடு போட்டானுக. ஒரு சோறு ஒரு சாம்பாரு ஒரு வத்தக்குழம்பு ஒரு ரசம்னு துன்னாத்தானே நமக்கு திருப்தியா இருக்கும். ஊத்தப்பம் வைக்கிறானுக, சுண்டு விரலு சைஸுல ஸ்வீட்டு வைக்கிறானுக. என்னென்னமோ வைக்கிறானுக. துன்ன மாதிரியே இல்ல. சப்ளைக்கு எல்லாம் பொண்ணுங்க. ஒரு ஆம்பிள கெடயாது. பாதி பேரு துன்னவே மாட்டேங்கிறான். ஜொள்ளு வுட்டுக்கினு கெடக்கிறான்.’

அண்ணன் பொங்கல் வாயோடு செய்தி சொன்னார். என்னவர் பின்பக்கம் இருந்தபடியே முன்பக்க முடியை பிடித்து இழுத்து (ஸ்கேல் இருந்தால் அளந்து அளந்து வெட்டுவார்போல) ஒரு தினுசாக கத்தரிக்க ஆரம்பித்தார். அசம்பாவிதம் ஏதும் நேர்ந்துவிட்டால் எப்படி வெளியில் ‘தலை காட்டுவது’ என்று எனக்குள் ஏக பயம்.

கட்டிங்கே கால்வாசிகூட முடியாத நிலையில் ‘ஸார் ஷேவிங் பண்ணனுமா?’ என்றார் என்னவர். வேண்டாம் என்றேன் வேகமாக. ‘நீங்களே செஞ்சுக்குவீங்களா?’ என்றார். ஆமாம் என்றேன். ‘இன்னைக்கே பண்ணுவீங்களா?’ என்றார். பொறுமையாக ‘ம்’ என்றேன். கிட்டத்தட்ட 25 நிமிடங்கள் ஓடியிருந்தன.

பாதிவேலை முடிந்த நிலையில் என்மேல் போர்த்திருந்த துணியை உருவினார். ‘இன்னும் முடியலையே’ என்று பதறினேன். ‘இருங்க சார்’ என்று விலகிச் சென்றவர், துணியை உதறிவிட்டு மீண்டும் வந்து போர்த்திவிட்டு வேலையைத் தொடர்ந்தார். இண்டர்வெல்போல.

‘நீங்க இந்த ஏரியாவா?’ கேட்டார் என்னவர்.

‘ம்’

‘எங்க?’

‘பக்கத்துல லெவன்த் அவென்யூ’

‘கலைஞர் டீவி கொடுக்கறார். வாங்கலையா?’

‘கலைஞரே வந்து கொடுக்குறாரா?’

‘ஹிஹி.. இந்த ஏரியாவுல ரேஷன் கார்டு இருக்கறவங்களுக்கெல்லாம் இன்னிக்கு கொடுக்கறாங்க.’

‘என்கிட்ட இல்ல.’

கட்டிங்கை முடிக்கும் நிலைக்கு வந்தார் என்னவர். கோடை வருகிறதல்லவா. இன்னும் கொஞ்சம் வெட்டச் சொல்லலாம் என்று நினைத்தேன். பயமாகவும் இருந்தது. இதுவரை விபத்து இல்லை. இனி நேர்ந்துவிட்டால்?

‘இன்னும் கொஞ்சம் வெட்டாலாம்பா’ – அண்ணனின் குரல் கொடுத்தார். மீண்டும் கத்திரிக்கோல் சோம்பல் முறித்தது. 45 நிமிடங்கள் நகர்ந்திருந்தன.

கத்தி போட ஆரம்பித்தார். கழுத்தருகே வரும்போது இதுவரை உயில் எழுதவில்லையே என்ற கவலை தோன்றியது. அதிலும் தப்பித்துவிட்டேன்.

எழுந்துகொள்ளலாம் என்ற நிலையில் அண்ணன் விடவில்லை. ‘மீசையை டிரிம் பண்ணி விடுப்பா?’

தில்லு முல்லு தில்லு முல்லு பாடல் எனக்குள் ஒலித்தது. வேண்டாம் என்று அவசரமாகச் சொல்லிவிட்டு பணத்தைக் கொடுத்துவிட்டு கிளம்பிவிட்டேன். என்னவர் விடவில்லை. நான் நகர நகர ‘நில்லுங்க சார்’ என்று என் மேல் ஒட்டியிருந்த ‘ரோம சாம்ராஜ்யத்தை’ தட்டிவிட்டுக் கொண்டே வந்தார்.

அப்பார்ட்மெண்ட் வாசலுக்குள் நுழைந்தேன். இரண்டு ஆட்டோக்களும் நுழைந்தன. ஒவ்வொன்றிலும் இரண்டுரண்டு கலர் டீவி பெட்டிகள்.

மூன்று பெண்மணிகள் கிளம்பித் தயாராக நின்றார்கள். ‘என்ன ஆன்ட்டி நீங்க டீவி வாங்கப் போகலியா?’

‘கால் டாக்ஸி சொல்லிருக்கோம். வெயிட்டிங்!’