சரித்திரத்தின் அஞ்சறைப் பெட்டி!

‘மாமா, நீங்க ஏன் சாஃப்ட்வேர்ல வேலை பார்க்கல?’ – சில நாள்களுக்கு முன் எனது அக்காவின் ஏழு வயது மகள் கேட்டாள். ‘கெமிஸ்ட்ரி, இன்ஃபர்மேஷன் டெக்னாலஜின்னு படிச்சதுக்கு பதிலா, நீ ஹிஸ்டரி எடுத்துப் படிச்சிருக்கலாம்.’ எனக்கு நெருக்கமானவர்கள் என்னிடம் அடிக்கடி சொல்வது இது.

சில சமயங்களில் நான் யோசித்துப் பார்த்திருக்கிறேன். ஏன் எனக்கு வரலாற்றின் மீது ஆர்வம் வந்தது? பள்ளி நாள்களில் வரலாறை விரும்பிப் படித்திருக்கிறேனா?

நிச்சயமாக இல்லை. அதை ஒரு பாடமாக மட்டுமே நினைத்துப் படித்திருக்கிறேன். சொல்லப்போனால் கொட்டாவி விட வைக்கும் அல்லது மனனம் செய்யும் மனநிலைக்குத் தள்ளும் பள்ளி வரலாற்று நூல்கள்மீது என்னையறியாமலேயே எனக்குள் வெறுப்புதான் வளர்ந்து வந்திருக்கிறது.

பிற மொழிகளில் ஏராளமான வரலாற்று புத்தகங்கள் இருக்கின்றன. தமிழில்? அதுவும் ரசிக்கத் தகுந்த நடையில்? மிக மிக மிகக் குறைவே. எல்லோரும் விரும்பி படிக்கும் வகையில் சுவாரசியமான வரலாற்றுப் புத்தகங்களை எழுத வேண்டும் என்ற எனது இன்றைய நோக்கத்துக்கு காரணம், இவைதான்.

ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம் – கதைகள் சிறுவயதில் கேட்டதுண்டு, படித்ததுண்டு. பட்டுடையில், படோடோப நகைகளோடு தலையில் கீரிடம் கவிழ்த்த ராஜாக்களை நாடகங்களில், திரைப்படங்களில் கண்டதுண்டு. ‘மனசுல பெரிய மைசூரு மகாராசான்னு நினைப்பு’ – யாரோ யாரையோ திட்டுவதை ரசித்ததுண்டு. சரி, உண்மையில் நம் மகாராஜாக்கள் எப்படி இருந்தார்கள்? எந்த மாதிரி வாழ்ந்தார்கள்? ‘யாரங்கே?’, ‘மாதம் மும்மாரி பொழிந்ததா?’ என்று நிஜமாகவே வசனம் பேசினார்களா? மாறுவேடமணிந்து இரவில் நகர்வலம் வந்தார்களா? குதிரைகள் பூட்டிய ரதத்தில் ராணிகளோடு டூயட் பாடிக்கொண்டு சென்றார்களா? அவர்கள் வேங்கையை வீழ்த்திய வீரர்களா அல்லது வெத்துவேட்டு கோமாளிகளா?

நிஜத்தை அறிந்துகொள்ள இந்தியாவிலிருந்த சமஸ்தானங்களை ஆண்ட மகாராஜாக்கள் குறித்த விஷயங்களைத் தேட ஆரம்பித்தேன். படிக்க ஆரம்பித்தேன். லயித்துப் போனேன். இதைவிட சுவாரசியமான வரலாறு வேறெதுவுமே கிடையாது என்று தோன்றியது. மகாராஜாக்கள் குறித்த புத்தகம் ஒன்றை எழுதிவிட வேண்டுமென்று நினைத்தேன். அதைத் தொடராகவே எழுதும் வாய்ப்பு குமுதம் ரிப்போர்ட்டரில் அமைந்தது.

தொடருக்கு ‘அகம் புறம் அந்தப்புரம்’ என்ற பொருத்தமான தலைப்பை வழங்கிய நண்பர் பாலு சத்யாவுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது எனது முதல் சரித்திரத் தொடர். எப்படியும் ஐம்பது அத்தியாயங்கள் எழுதிவிட முடியும் என்ற நம்பினேன். ஆரம்பித்த சில வாரங்களிலேயே நூறு அத்தியாயங்கள் தாராளமாக எழுதலாம் என்று தெரிந்தது. வாசகர்களின் ஏகோபித்த வரவேற்பு என் நம்பிக்கையை பிரகாசமாக்கியது. எனது தேடல் அதிகமானது. படிக்கப் படிக்கத் தீராத விஷயங்கள். நான் குதித்திருப்பது சமுத்திரத்தில் என்று உணர்ந்துகொண்டேன்.

மகாராஜாக்கள் என மனத்துக்கு நெருக்கமானவர்களாகிப் போனார்கள். இரண்டு வருடங்கள். வாரம் இரண்டு அத்தியாயங்கள். ஒரு தவம் போலத்தான் செய்தேன்.

மகாராஜாக்களிடம் பிரிட்டிஷார் எப்படி நடந்துகொண்டார்கள்? சமஸ்தானங்களின் அரசியல் நடவடிக்கையில் ஐரோப்பியர்களின் ஆதிக்கம் எவ்வளவு அழுத்தமாக இருந்தது? அன்றைய சமூகத்தில் எப்படிப்பட்ட ஏற்றத்தாழ்வுகள் இருந்தன? அந்தப்புரத்தின் மயக்கத்தினால் சீரழிந்த மகாராஜாக்கள் யார் யார்? அந்தப்புரத்தில் கவனம் செலுத்தாமல் தன் சமஸ்தான மக்களின் வீட்டில் அடுப்பு எரிகிறதா என்று நிஜமாகவே கவலைப்பட்ட மகாராஜாக்கள் இருந்திருக்கிறார்களா? சமஸ்தானங்களில் வரலாறோடும் மகாராஜாக்களின் வாழ்க்கையோடும் நிறுத்திக் கொள்ளாமல் அப்படியே அவற்றோடு தொடர்புடைய பல விஷயங்களையும் பதிவுசெய்ய ஆரம்பித்தேன்.

மகாராஜாக்களின் வெளிநாட்டுப் பயணங்கள் எப்படி இருந்தன என்று எழுதும்போது அவர்கள் அப்போது சென்ற இடங்கள் குறித்த வரலாற்றையும் சிறிய அளவில் பதிய முடிந்தது. மகாராஜா போலோ, கிரிக்கெட் விளையாடுவாரா? சரி, இந்தியாவுக்குள் போலோவும் கிரிக்கெட்டும் எப்போது, எப்படி வந்தது, எந்த சமஸ்தானங்களிலெல்லாம் போலோ அணி இருந்தது, எந்த மகாராஜாக்களெல்லாம் கிரிக்கெட் வீரர்கள் போன்ற விஷயங்களையும் தொகுத்துத் தர முடிந்தது. மகாராஜா, வேட்டையாடுவதற்கென்றே காட்டுக்குள் அரண்மனை கட்டினாரா? சரி, எப்படி வேட்டையானார்கள், எவ்வளவு வேட்டையாடினார்கள், யாராவது வேட்டையாடுவதைத் தடுக்க விரும்பினார்களா – என்பன போன்ற தகவல்களை அளிக்க முடிந்தது. இப்படி எத்தனையோ உப வரலாறுகளைச் சேர்த்து மொத்தமாகப் பார்க்கும்போது, ‘சரித்திரத்தின் அஞ்சறைப் பெட்டி’ ஒன்றை உருவாக்கிக் கொடுத்த திருப்தி.

நிறைவு அத்தியாயம் வெளிவந்ததும், ‘ஏன் அதற்குள் நிறுத்தி விட்டீர்கள்?’ என்று என்னை உரிமையோடு கோபித்துக் கொண்ட வாசகர்களுக்கு நான் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறேன்.

இனி இவர்களுக்கு என் நன்றிகள். குமுதம் ரிப்போர்ட்டரில் எனக்காக இடம் ஒதுக்கிக் கொடுத்த ஆசிரியர் இளங்கோவன் அவர்களுக்கு. தொடருக்காக என்னைப் பல்வேறு விதங்களில் ஊக்கப்படுத்திய என் ஆசிரியர் பா. ராகவனுக்கு. பிரம்மாண்டமாக இந்தப் புத்தகத்தைப் பதிப்பித்துள்ள பதிப்பாளர் பத்ரிக்கு.

தொடருக்கான அறிவிப்பு விளம்பரம் முதல், இந்தப் புத்தகம் வரை நயத்தோடு வடிவமைத்துக் கொடுத்த நண்பர் குமரனுக்கு. புத்தக ஆக்கத்தில் உற்சாகமாக ஒத்துழைத்த கதிர், முத்துகணேசன், ஆனந்துக்கு. ரிப்போர்ட்டரில் வெளிவருவதற்கு முன்பாகவே என்னிடமிருந்து அத்தியாயங்களை வாங்கிப் படித்து கருத்துகள் சொல்லிய நண்பர்கள் உமா சம்பத், பாலுசத்யா, ஜானகிராமனுக்கு. அடிக்கடி தொலைபேசியில் வாழ்த்திய ஆடிட்டர் ரவிகுமாருக்கு. மற்றும் இந்தத் தொடரை வாசித்த முகமறியாத வாசகர்களுக்கு.

ரிப்போர்ட்டரில் வெளிவந்த அத்தியாயங்களின் சற்றே மேம்படுத்தப்பட்ட வடிவம் இந்த நூல். அடுத்தடுத்த தலைமுறைகளுக்காக, தமிழில் ஒரு முக்கியமான பதிவைக் கொடுத்துவிட்டேன் என்று நினைக்கும்போது மனநிறைவு. ஆனால் இன்னமும் பதிவு செய்யப்படாத வரலாறுகளை நினைக்கும்போது… காலமும் சூழலும் அமையுமென நம்புகிறேன்.

சென்னை புத்தகக் கண்காட்சியில் அகம் – புறம் – அந்தப்புரத்தோடு சந்திக்கிறேன்.

பக்கங்கள் : 1392. விலை ரூ. 750.

அந்த காலத்து ஐஸ்வர்யா ராய்!

‘போலோ மேட்சுக்காக ஜெய்ப்பூர் மகாராஜா கல்கத்தா வர்றார். உட்லேண்ட்ஸ் ஹோட்டல்ல இடமில்லை. நம்ம மாளிகைல, உங்க அறையிலதான் தங்கப்போறார். அதனால நீங்க அறையைக் காலி பண்ணிக்கொடுத்துடுங்க. சரியா?’ – கூச்பிகார் மகாராணி இந்திரா சொல்லிவிட்டுப் போனாள். பன்னிரண்டு வயது இளவரசி காயத்ரி தேவிக்கு தன் அறையை விட்டுக் கொடுப்பதில் பூரண சம்மதமில்லை. அம்மா சொல்லிவிட்டாள். வேறு வழியில்லை. போலோ விளையாட்டில் ஜெய் கில்லாடி என்பதை பத்திரிகைச் செய்திகளில் படித்திருந்தாள். பேரழகர் என்றும் கேள்விப்பட்டிருந்தாள். ஆகவே அவரது வருகையை எதிர்நோக்கினாள் (1931).

ஜெய் வந்தார். கூச் பிகார் இளவரசர்களோடு கூடிக் குலாவினார். இளவரசிகளையும் நேர்பார்வையில் நோட்டமிட்டுக் கொண்டார். ‘ஆளு அழகாத்தான் இருக்காருடி’ – இளவரசிகள் கிசுகிசுத்துக் கொண்டார்கள். ‘அவருக்குக் கல்யாணமாயிருச்சு தெரியுமா?’

ஜெய்யுடன் காயத்ரி
ஜெய் உடன் காயத்ரி

‘தெரியும்டி. மிக்கின்னு ஒரு பொண்ணும், பபிள்ஸ்னு ஒரு பையனும்கூட இருக்காங்க. ஆனா இவரைப் பார்த்தா அப்படியா தெரியுது?’ பருவத்தின் வாசலில் நின்று கொண்டிருந்த காயத்ரிக்கு ஜெய்யின் மீது ஒருவித ஈர்ப்பு வந்திருந்தது. மேட்ச் எல்லாம் முடிந்து ஜெய் கிளம்பிச் சென்றிருந்தார். ஆனாலும் அடிக்கடி வந்துகொண்டிருந்தார், காயத்ரியின் நினைவில்.

அடுத்த ஆண்டும் கல்கத்தாவுக்கு வந்தார், போலாவுக்காக. அப்போதுதான் அவருக்கு இரண்டாம் கல்யாணம் நடந்திருந்தது. ‘அவரோட புது மனைவி போட்டோவை அனுப்பச் சொல்லேன்’ – தனது அம்மாவிடம் நச்சரித்தாள் காயத்ரி. இந்திராவும் ஜெய்யிடம் கேட்டாள். சரியென்று சொல்லிய அவர், அனுப்பவில்லை.

இந்திரா, குடும்பத்தோடு அவ்வப்போது பரோடாவுக்குச் செல்வாள். தாய் வீட்டுக்கு. அந்தமுறை, ‘போகும் வழியில் ஜெய்ப்பூருக்குச் செல்லலாம்’ என்றாள். காயத்ரியின் மனத்துக்குள் இனம்புரியாத சந்தோஷம். ஜெய்ப்பூரின் அரண்மனை அழகை ரசித்தாள், அவளையறியாமலேயே ஜெய்யையும். அந்தப்புரம் சென்று அவரது மனைவிகளைச் சந்தித்தாள். குழந்தைகளோடு விளையாடினாள்.

‘நான் காயத்ரியை வெளியில் அழைத்துக் கொண்டு போகிறேன்’ – ஜெய், திடீரென இப்படிக் கேட்டதும் அவளுக்குள் பரவச ஊற்று. மகாராஜா கேட்டு மறுப்பது நாகரிகமில்லையே. இந்திரா சம்மதித்தாள். ஜெய்யோடு காரில் சென்ற நிமிடங்களில் பறப்பதுபோல உணர்ந்தாள் காயத்ரி.

‘நீ கார் ஓட்டுகிறாயா?’

ஓட்டினாள். ஜெய் உதவி செய்தார். வெட்கமும் புன்னகையும் ஸ்பரிசங்களும் கலந்த நொடிகள். அரண்மனைக்குத் திரும்பினார்கள். ‘உங்க பொண்ணு நல்லாத்தான் ஓட்டுறா. ஆனா வண்டி ஓட்டத் தெரிஞ்சவங்க சொல்றதைத்தான் கேக்குறதில்ல’ – ஜெய், இந்திராவிடம் சொல்லிவிட்டு நகர்ந்தார். இந்திரா, காயத்ரியைப் பார்த்தாள். ‘நான் அவர் சொல்றபடிதான் ஓட்டினேன். ஆனா அவர்தான் ஒரு நிலையில இல்லை.’ காயத்ரி சிரித்தாள்.

ஜெய்ப்பூரிலிருந்து கிளம்பும்போது எதையோ விட்டுச் செல்வதுபோல உணர்ந்தாள் காயத்ரி. இரவிலும் பகலிலும் அவளது கனவுகளில் ஜெய், போலோ விளையாடிக் கொண்டிருந்தார். ஜெய்யைப் பற்றி பத்திரிகைகளில் எந்தச் செய்தி வந்தாலும் அது அவளைக் குதூகலமடைய வைத்தது. அவரது பெயர்மீது விரல்வைத்து ஆசையாக வருடிக் கொடுத்தாள். ஜெய் கழற்றிப்போட்ட ஒரு கையுறையிலிருந்து இரண்டு நூல்களை எடுத்து வைத்திருந்தாள். நூல்களைத் தனது கை பிரெஸ்லெட்டோடு சுற்றிக்கொண்டாள். அழகாகத் தெரிந்தது. ஜெய்யின் முதலிரண்டு மனைவிகள், குழந்தைகள் – எதுவுமே காயத்ரிக்கு உறுத்தவில்லை. ‘நான் ஜெய்யைக் காதலிக்கிறேன்’ – தனிமையில் சொல்லிப் பார்த்துச் சந்தோஷப்பட்டுக் கொண்டாள். அப்போது அவளுக்கு வயது பதினான்கு.

***

‘காயத்ரி காங்கிரஸில் இணைந்துவிட்டார்’ என்ற கிசுகிசு பலகாலமாகவே வலம் வந்துகொண்டிருந்தது. அழைப்பு வந்ததென்னவோ உண்மைதான். ஆனால் காயத்ரி காங்கிரஸில் இணையவில்லை. அதற்கு எதிர்க்கட்சியாக, ராஜாஜியின் தலைமையில் உருவான சுதந்தரா கட்சியில் இணைந்தார் (1960). காரணம்? வலுவான எதிர்க்கட்சி ஏதுமின்றி காங்கிரஸ் அதுவரை செலுத்தி வந்த அதிகாரம் பல மட்டங்களில் அதிருப்தியை உருவாக்கியிருந்தது. ராஜஸ்தான் காங்கிரஸார், முன்னாள் ராஜ ஆட்சியாளர்களுக்கு மதிப்பு கொடுக்காமல் எடுத்திருந்த சில நடவடிக்கைகள் காயத்ரியைக் களமிறங்க வைத்தன.

‘அரசியலில் இறங்கி பதவிக்கு வர நினைக்கிற ராஜகுடும்பத்தினருக்கு மன்னர் மானியத்தொகை கிடையாது’ என்று சட்டசபையில் திருவாய் மலர்ந்தார் ராஜஸ்தான் காங்கிரஸ் முதல்வர் மோகன்லால் சுகாடியா. ‘அப்படியென்றால் காங்கிரஸில் இருக்கும் மன்னர்களுக்கு?’ என்று எதிர்க்கேள்வி எழ, சுகாடியா வாய்பொத்திக் கொண்டார். தங்களுக்குக் கிடைக்கும் மானியத் தொகைக்கு எதுவும் ஆபத்து வந்துவிடக்கூடாது என்றே பல மகாராஜாக்கள், இளவரசர்கள் காங்கிரஸில் அடைக்கலம் புகுந்திருந்தனர். ஆனால் எதிர்க்கட்சிகளில் இருந்த ராஜகுடும்பத்தினருடைய ‘மக்கள் செல்வாக்கை’ காலிபண்ணும் வேலையை காங்கிரஸ் தொடர்ந்தது.

1962 தேர்தல். ஜெய்ப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கு வேட்பாளராக காயத்ரியை அறிவித்தார் ராஜாஜி. ‘நான் உங்கள் மகாராஜாவின் மனைவி என்பதால் என்னை ஆதரிக்கிறீர்களா?’ – காயத்ரி மக்களிடம் நேரடியாகவே கேட்டார். பாதிக்கூட்டம் ‘ஆம்’ என்றது. ‘இல்லை, நீங்கள் எங்களுக்கு ஏற்கெனவே நிறைய செய்திருக்கிறீர்கள். இனியும் செய்வீர்கள்’ என்றது மீதிக்கூட்டம். பிரசாரத்தின் இறுதிநாள். ஜெய்ப்பூரில் காங்கிரஸ், ஜனசங்கம், சுதந்தரா – மூன்று கட்சிகளும் ஒரே நேரத்தில் பொதுக்கூட்டம் போட்டன. ஜெய் பேச்சைக் கேட்க திரண்ட சுமார் இரண்டு லட்சம் ஜனங்களைக் கண்டு எதிர்க்கட்சிகளுக்கு மூச்சடைத்தது.

தேர்தலில் ஜெய்ப்பூர் தொகுதியில் பதிவான ஓட்டுகள் 1,92,909. அதில் காயத்ரி வாங்கிய ஓட்டுகள் 1,57,692. கின்னஸ் புத்தகம் புதிய சாதனையைப் பதிவு செய்துகொண்டது.

*****

மன்னர் மானிய ஒழிப்புக்குப் பின்னும் இந்திரா காந்தி, எதிர்க்கட்சிகளிலிருந்த ராஜ பரம்பரையினரை விட்டுவைக்கவில்லை. வருமான வரி சோதனை முதல் பல விஷயங்களில் துன்பத்துக்கு ஆளானார் காயத்ரி. 1975ல் அவசரநிலை பிரகடனம். நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடருக்குச் சென்ற காயத்ரிக்கு அதிர்ச்சி. அவையில் காங்கிரஸார் மட்டும் இருந்தார்கள். அன்று மதியமே காயத்ரி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். உள்ளே இன்னொரு மகாராணி ‘ஹாய்’ சொன்னார், குவாலியரின் விஜயராஜே சிந்தியா.

கொசுக்கடி, எலித்தொல்லை, இருள் அறை இன்னல்கள். ஆறுமாத சிறைவாசத்துக்குப் பிறகு வெளியே வந்த காயத்ரி, தீவிர அரசியலிலிருந்து விலகிக்கொண்டார். இன்றுவரை ஜெய்ப்பூரின் ராஜமாதாவாக மக்கள் அபிமானத்தோடு அங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

*****

மேலே சொன்ன கடைசி வரி, இந்த ஏப்ரல் மாதத்தில் நான் எழுதியது. (குமுதம் ரிப்போர்ட்டர், அகம் புறம் அந்தப்புரம் தொடருக்காக.) அதை அடுத்த மூன்று மாதங்களுக்குள்ளாகவே மாற்ற வேண்டியது வரும் என்று எதிர்பார்க்கவில்லை.

அந்தக்காலத்து ஐஸ்வர்யாராய். மக்களோடு நெருங்கிப் பழகிய மகாராணி. இந்திரா காந்தியின் அரசியல் எதிரி. பெரு வாழ்க்கை வாழ்ந்த நல்ல மனுஷி. அடுத்த சில வருடங்களுக்குள் ஜெய்ப்பூருக்குச் சென்று காயத்ரி தேவியைச் சந்திக்க வேண்டும் ஆசை வைத்திருந்தேன். நேற்று மறைந்துவிட்டார்.

A Princess Remembers – The Memoirs of the Maharani of Jaipur
by Gayatri Devi

மகாராணி காயத்ரி தேவியின் நினைவுகளைச் சொல்லும் புத்தகம். அது மட்டும் இப்போது என்னிடம், பொக்கிஷமாக.

டைம் அட்டையில் ஒரு கஞ்ச மகாபிரபு!

‘எவ்வளவுதான் தரமுடியும்?’

‘முப்பது ரூபாய்’

‘சரி, பணத்தைக் கொடுத்துவிட்டு அழைத்துச் செல்லுங்கள்.’ என்று வியாபாரத்தை முடித்தார் ஹைதராபாத் நிஜாம் ஒஸ்மான் அலிகான் என்ற ஏழாம் அஸஃப் ஜா (1886 – 1967).

நிஜாமாகப் பதவிக்கு வந்ததும் (1911) அவர் செய்த முக்கியமான காரியம் இதுதான். ஆறாவது நிஜாம்  மெஹபூப் அலிகான் இறந்த பிறகு அவரது துணைவிகளை விற்றுவிட்டார். ‘எனக்கு ஆகவே ஆகாத தந்தை, சேர்த்துக் கொண்ட துணைவிகளுக்கெல்லாம் நான் ஏன் சோறும் சிக்கனும் போட்டுக் கொண்டிருக்க வேண்டும்?’ என்ற எண்ணத்தால் நிகழ்த்தப்பட்ட சிக்கன நடவடிக்கை அது. சில துணைவிகளை விற்று, பணத்துக்குப் பதிலாக மாங்காய்களாகப் பெற்றுக் கொண்டார் என்றுகூட குறிப்புகள் இருக்கின்றன.

அநாவசியச் செலவுகளை எப்படியெல்லாம் தவிர்க்கலாம் என்ற சிந்தனையே ஒஸ்மானின் மனத்தில் எப்போதும் ஓடிக் கொண்டிருக்கும். அதன் மாறுபட்ட பரிமாணங்களே பல விஷயங்களில் கஞ்சத்தனமாக வெளிப்பட்டன.

‘நிஜாம், உங்கள் சால்வை மிகவும் பழசாகிவிட்டது. புதிதாக ஒன்றை எடுத்துக் கொள்ளலாமே?’ என்றார் அமைச்சர் ஒருவர். அதற்கு ஒஸ்மான் அளித்த பதில், ‘எடுக்கலாம். ஆனால் நான் அதுக்கு பதினெட்டு ரூபாய்தான் ஒதுக்கியிருக்கிறேன். புதிய சால்வை இருபது ரூபாய் ஆகிறதே.’

ஒருமுறை வைஸ்ராய் லின்லித்கோ, ஒஸ்மானைச் சந்தித்தபோது அவரது வாக்கிங் ஸ்டிக்கைக் கவனித்தார். இரண்டாக உடைந்த அது, ஒட்டப்பட்டு நூலால் சுற்றப்பட்டிருந்தது. அதை வைத்துக் கொண்டே எந்தவித கூச்சமும் இன்றி வெளியிடங்களுக்குச் சென்று கொண்டிருந்தார் ஒஸ்மான். தன்னுடன் பேச வரும் ஒரு சமஸ்தானத்தின் நிஜாம், இப்படி ஒடிந்த ஸ்டிக்குடன் வருகிறாரே என்று வைஸ்ராய்க்குத்தான் கூச்சமாகப் போய்விட்டது. அடுத்தமுறை ஒஸ்மானைச் சந்தித்தபோது ஒரு புதிய உயர்தரமான வாக்கிங் ஸ்டிக்கைப் பரிசளித்தார். வாய் நிறையப் புன்னகை வழிய, அதனை வாங்கி வைத்துக் கொண்டார் ஒஸ்மான்.

அப்போதைய இந்திய அரசின் முதன்மை ஆலோசகராக வி.பி. மேனன் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவர் ஒருமுறை ஒஸ்மானைச் சந்திக்கச் சென்றார். பல்வேறு விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தனர். ஒஸ்மான் தன் சார்மினார் சிகரெட் பாக்கெட்டை எடுத்தார். மேனனிடம் நீட்டினார். அதுதான் அப்போதைய மலிவான சிகரெட். பாக்கெட் பன்னிரண்டு பைசாதான். பத்து சிகரெட் இருக்கும்.

மேனனுடைய பிராண்ட் வேறு. போயும் போயும் சார்மினாரைப் புகைத்து வாய் நாற்றத்துடனா அலைய முடியும் என்று யோசித்த அவர், ‘வேண்டாம்’ என்று மறுத்தார். ஒஸ்மான் வற்புறுத்தவெல்லாம் இல்லை. தம் வாயில் ஒரு சிகரெட்டை வைத்துப் பற்ற வைத்தார். மேனனுக்கும் வாய் நமநமத்தது. தன் சட்டைப் பையில் இருந்து விலையுயர்ந்த சிகரெட் பாக்கெட் ஒன்றை எடுத்து உடைத்தார்.

நாகரிகமாக ஒஸ்மானிடம் நீட்டினார். வாயில்தான் புகைந்துகொண்டிருக்கிறதே என்று மறுத்திருக்கலாம். ஆனால் ஒஸ்மான் அதிலிருந்து நான்கைந்தை எடுத்துத் தன் சார்மினார் பாக்கெட்டுக்குள் வைத்துக் கொண்டார். அறையிலிருந்து புகை கலைந்து முடிந்த சில நொடிகளில் அவர்களது சந்திப்பும் முடிந்தது.

சில நாள்களிலேயே இருவரும் மீண்டும் சந்தித்துக் கொண்டனர். பேச்சின் இடையே, ஒஸ்மான் தன் சார்மினார் பாக்கெட்டை எடுத்தார். மேனனிடமிருந்து எடுத்த புதிய பிராண்ட் சிகரெட்டுகள் எண்ணிக்கை குறையாமல் அப்படியே இருந்தன.

அதிகாரிகளோ விருந்தினர்களோ ஒஸ்மானை சந்திக்கச் சென்றால் அவர் உபசரிக்கும் விதமே தனியானது. வருபவர்களை உட்காரச் சொல்லுவார். அவர்கள் தனக்கு ஏதாவது கொண்டு வந்திருக்கிறார்களா என்று பார்ப்பார். எது கொடுத்தாலும் வாங்கி வைத்துக் கொள்வார். பேசத் தொடங்குவார்கள்.

சில நிமிடங்கள் கழித்து அரண்மனைப் பணியாள் கையில் ஒரு தட்டுடன் வருவார். அதில் முக்கால்வாசி நிரம்பிய நிலையில் இரண்டு கோப்பைகளில் டீ, இரண்டு பிஸ்கட்டுகள் மட்டுமே இருக்கும். ஆளுக்கு ஒரு கோப்பை டீ, ஒரே ஒரு பிஸ்கட். அவ்வளவுதான். பெட்டி பெட்டியாக தங்க பிஸ்கட் வைத்திருந்தால் என்ன, சாப்பிடக்கூடிய பிஸ்கெட்டை வீணாக்கக்கூடாது என்பது ஒஸ்மானின் உயரிய எண்ணம்.

ரத்தத்தோடு கலந்துவிட்ட குணம் அது. வாழ்நாளில் எந்த நிலையிலும் ஒஸ்மான் தனது குணத்தை மாற்றிக் கொள்ளவே இல்லை. அப்படிப்பட்ட நிஜாம் ஒஸ்மான் அலிகானைப் பற்றி, டைம் வாரப் பத்திரிகை ஒரு கட்டுரை வெளியிட்டது. அட்டையில் ஒஸ்மானின் ஓவியம் கம்பீரமாகக் காட்சியளித்தது. (1937, பிப்ரவரி 22)

கட்டுரை அவரது கஞ்சத்தனத்தைப் பற்றியல்ல.‘உலகின் மாபெரும் பணக்காரர்’ என்பதற்காக. HIS EXALTED HIGHNESS THE NIZAM OF HYDERABAD என்று தலைப்பிட்டிருந்தது.

இன்றைய தேதியில் முகேஷ் அம்பானிக்கு அந்த பாக்கியம் கிடைத்ததோ இல்லையோ, அன்றைய தேதியில் நிஜாம் ஒஸ்மான் அலிகானுக்கு அந்தப் பேறு கிடைத்தது. டைம் பத்திரிகை மட்டுமல்ல, உலகில் பல பெரிய பத்திரிகைகள் அப்போது அந்தச் செய்தியை வெளியிட்டு நிஜாமின் சொத்துக் கணக்கை விதவிதமாகக் கூறின.

நிஜாமின் தினப்படி வருமானம் சுமார் ஐயாயிரம் அமெரிக்க டாலர்கள். அவர் கொத்துக் கொத்தாகச் சேர்த்து வைத்துள்ள நகைகளின் மொத்த மதிப்பு குத்துமதிப்பாக பதினைந்து கோடி அமெரிக்க டாலர்கள். அவர் உப்புப் போட்டு கெட்டுப் போகாமல் பாதுகாப்பாக வைத்துள்ள தங்கக் கட்டிகளின் மதிப்பு இருபத்தைந்து கோடி அமெரிக்க டாலர்கள் இருக்கும். அதையும் சேர்த்து நிஜாமின் ஒட்டுமொத்த சொத்தின் மதிப்பு தோராயமோ தோராயமாக நூற்று நாற்பது கோடி அமெரிக்க டாலர்கள் இருக்கலாம் என்று வியந்து எழுதியிருந்தது டைம் பத்திரிகை. இந்தக் கணக்கில் ஒஸ்மான் சேர்த்து வைத்திருக்கும் வைர, மரகதக் கற்களின் மதிப்பு சேர்க்கப்பட்டவில்லை என்பது கவனிக்கப்படவேண்டியது.

சரி, முதலிடம் ஒஸ்மானுக்கு. இரண்டாவது இடம்?

வெற்றிகரமாக கார்களைத் தயாரித்து வந்த ஹென்றி ஃபோர்டுக்கு. ஆனால் என்ன, அவரது மொத்த சொத்து மதிப்பு, ஒஸ்மான் சேர்த்து வைத்திருந்த நகைகளின் மதிப்பில் பாதிகூட இல்லை என்பதே உண்மை.

(குமுதம் ரிப்போர்ட்டரில் எழுதிய அகம் புறம் அந்தப்புரம் தொடரில் இருந்து ஒரு சிறு பகுதி. இன்னும் சில மாதங்களில் அகம் புறம் அந்தப்புரம் குண்டு புத்தகமாக வெளிவர இருக்கிறது.)

ஆடியது காங்கிரஸ் கூடாரம்!

(தேர்தல் செய்திதான். ஆனால் கொஞ்சம் பழசு.)

சுதந்தரம், சமஸ்தானங்கள் இணைப்பு இவையெல்லாம் நிகழ்ந்த பிறகும் பல மகாராஜாக்களுக்குப் பழைய நினைப்பும் மிதப்பும் குறையவில்லை. சொல்லப்போனால் அதுவரை மன்னர் ஆட்சிக்குப் பழகியிருந்த மக்கள் மனத்தில் மகாராஜாக்களின் மீதான மதிப்பு குறையாமல்தான் இருந்தது.

1952. ராஜஸ்தான் மாநிலத்துக்கான முதல் சட்டசபை, இந்தியாவின் முதல் மக்களவைக்கான தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன. ‘எவனாவது தேர்தல்ல நின்னீங்க, மானியம் கிடையாது’ என்று நேரு, முன்னாள் மகாராஜாக்களை மிரட்டியதாக ஒரு தகவல் உண்டு.

ஜோத்பூரின் கடைசி மகாராஜா ஹன்வந்த் சிங்கும் தேர்தலைச் சந்திக்கத் தயாரானார். காங்கிரஸோடு கூட்டணி அமைத்து போட்டிபோட நினைத்தார். பாதி தொகுதிகள் கேட்டு பேச்சுவார்த்தை நடத்தினார். உடன்பாடு ஏற்படவில்லை. தனித்து நிற்க முடிவு செய்தார்.

ஹன்வந்த் சிங்

காங்கிரஸார் கைகொட்டிச் சிரித்தார்கள். ‘நான் நிக்கவைச்சா ஒரு கல்லுகூட தேர்தல்ல ஜெயிக்கும்’ என்று சவால்விட்டு களமிறங்கினார் ஹன்வந்த் சிங். தனது ரதோர் பரம்பரையைச் சேர்ந்த பிரமுகர்களையெல்லாம் சேர்த்தார். முப்பந்தைந்து சட்டசபை, நான்கு பாராளுமன்றத் தொகுதிகளில் நிறுத்தினார். அவரு ஜோத்பூர் சட்டசபை, பாராளுமன்றம் இரண்டிலும் வேட்பாளராக நின்றார்.

‘போடுங்கம்மா ஓட்டு! ஒட்டகத்தைப் பார்த்து!’ – ஊர் ஊராகச் சுற்றினார். ‘நீங்கள் என் மக்கள். நீங்களே எனக்கான மானியம்!’ – ஹன்வந்த் சிங்குக்கு செல்லுமிடமெல்லாம் படுவரவேற்பு. காங்கிரஸ் கூடாரம் ஆடித்தான் போயிருந்தது. தேர்தல்கள் முடிந்தன. ஓட்டு எண்ணிக்கைகள் ஆரம்பமாயின (ஜனவரி 26). ஆரம்பத்திலிருந்தே ஒட்டகத்துக்கு நல்ல செய்திதான் வந்துகொண்டிருந்தது.

ஹன்வந்த் சிங்குக்கு குஷி தாங்கவில்லை. தனது மூன்றாவது மனைவியும் நடிகையுமான ஸுபைதாவை அழைத்துக்கொண்டார். இருவர் மட்டும் செல்லும் மினி விமானம் ஒன்றில் ஏறினார். மகிழ்ச்சியாக ஓட்ட ஆரம்பித்தார். விமானம் வானத்தில் சாகசம் செய்துகொண்டிருந்தது.

இரவு. நொறுங்கிக் கிடந்த விமானத்தில் இருந்து ஹன்வந்த் சிங்கின் உடலையும் ஸுபைதாவின் உடலையும் மீட்டெடுத்தார்கள். (ஹன்வந்த் சிங், ஸுபைதாவின் கதை, ‘ஸுபைதா’ என்ற ஹிந்தித் திரைப்படமாக வெளிவந்துள்ளது.) தேர்தல் முடிவுகள் முழுவதுமாக வெளியாகின. ஹன்வந்த் சிங்கின் வேட்பாளர்கள் 31 சட்டசபைத்தொகுதிகளிலும், 4 மக்களவைத் தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தார்கள். அவரும் இரண்டிலும் வெற்றிபெற்றிருந்தார்.

காங்கிரஸின் முதலமைச்சர் வேட்பாளரான ஜெய் நாராயன் வியாஸுக்குப் படுதோல்வி. மகாராஜா இறந்த துக்கம், ஆத்திரம். வியாஸை ஜோத்பூர் மக்கள் நையப்புடைத்திருந்தார்கள். பின்பு இடைத்தேர்தல் ஒன்றில் வெற்றிபெற்றுதான் வியாஸால் முதலமைச்சர் ஆக முடிந்தது.

புலி புராணம்!

தேசிய விலங்கு என்று சொல்லி பெருமைப்பட்டுக் கொள்ளலாம். ஆனால் எந்த மிருகக் காட்சியில் எப்போது புலி குட்டி போடும் என்று காத்துக் கொண்டிருக்க வேண்டியதிருக்கிறது. வண்டலூரில் வெள்ளைப்புலி அனு, மூன்று குட்டிகள் போட்டதாக செய்தி. கேக் வெட்டி கொண்டாட வேண்டும் என்று தோன்றுகிறது.

சரி, நம் முன்னோர்கள் புலிகளை எப்படியெல்லாம் அழித்தார்கள்? வேட்டை என்று சொல்லிக்கொண்டு மகாராஜாக்களும் பிரிட்டிஷாரும் செய்த அழிச்சாட்டியங்கள் என்னென்ன?

***

வேட்டையாடுதல் என்பது இந்திய மகாராஜாக்களின் பொழுதுபோக்குகளில் முக்கியமான ஒன்று. அதை ஒரு கௌரவமாகக் கருதினார்கள். ‘போன வருசம் மட்டும் நான் பதினேழு காட்டுப்பன்றி, ஒன்பது சிறுத்தை, நாலு புலி கொன்னுருக்கேன்’ என்று சக சமஸ்தான மகாராஜாக்களிடம் பட்டியலிட்டுப் பெருமைப்பட்டுக் கொள்வார்கள். அத்தோடு தாங்கள் வேட்டையாடிய விலங்குகளை பாடம் செய்துவைத்து ஓர் அறை முழுவதையும் நிரப்பியிருப்பார்கள்.

குவாலியர் மகாராஜா மாதவ் ராவ் சிந்தியா
குவாலியர் மகாராஜா மாதவ் ராவ் சிந்தியா

சமஸ்தானத்தில் வனப்பகுதி இருந்தால் போதும். அதற்குள் சகல சௌபாக்கியங்களும் நிறைந்த ஒரு வேட்டை அரண்மனையை கட்டி வைத்திருப்பார்கள். அவ்வப்போது அங்கு சென்று குடும்பத்தோடு தங்கி, டுமீல்.. டுமீல்! இன்றும் குவாலியரில் மாதவ் தேசியப் பூங்காவில், சிவ்புரி என்ற வேட்டை அரண்மனை அப்படியே இருக்கிறது. அது மகாராஜா மாதவ் ராவ் சிந்தியா கட்டியது.

பொதுவாக வைஸ்ராய், ஒரு சமஸ்தானத்துக்கு வருடத்துக்கு ஒருமுறைதான் செல்லுவார். செல்லும் நேரத்தில் பலே விருந்து உண்டு. அது காட்டை ஒட்டிய சமஸ்தானமாக இருந்தால் வேட்டையும் இருக்கும். ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு வேட்டை பிரசித்தம். உதய்பூர், ஜோத்பூர், குவாலியர், பஞ்சாப் பகுதிகளுக்குச் சென்றால் புலிகளை, புளியங்காய் அடிப்பது போல அடிக்கலாம். தோல்பூர், பரத்பூர் பகுதிகளுக்குச் சென்றால் விதவிதமான பறவைகளையும் கொத்துக் கொத்தாக வாத்துகளையும் அள்ளலாம். குஜராத் வனப்பகுதிகளில் சிறுத்தைகளுக்குக் குறிபார்க்கலாம். இந்தியா முழுவதிலுமே மான்களுக்குப் பஞ்சமிருந்ததில்லை. தெற்கே கேரள வனப்பகுதிகளுக்கு வந்தால் யானை வேட்டை சாத்தியம். இவைபோக கரடி, ஓநாய், மயில், காட்டுப்பன்றி, காட்டெருமை, காண்டாமிருக வேட்டைகளும் நடந்தன.

பிரிட்டிஷார், புலி வேட்டையாடுவதை கௌரவமான ஒன்றாகக் கருதினார்கள். சுட்ட புலியைக் குப்புறப்போட்டு, அதன்முன் லேடி வைஸ்ராயோடு நின்று, துப்பாக்கியுடன் சிரித்தாற்போல புகைப்படம் எடுத்துக் கொள்வது என்பதை அளப்பரிய சாதனையாக நினைத்தார்கள். தாங்கள் சுடும் புலி, குறைந்தபட்சம் பத்து அடி நீளமாவது இருக்க வேண்டும் என்பதிலும் கவனமாக இருப்பார்கள். புலி வேட்டையாடுவதில் மூன்று முறைகளைக் கடைபிடித்தார்கள்.

கர்ஸன், லேடி கர்ஸன், புலி
கர்ஸன், லேடி கர்ஸன், புலி

புலி நடமாட்டமுள்ள பகுதிகளை புக்கிகள் கண்டறிந்து சொல்லுவார்கள். அதற்கு அருகிலுள்ள பகுதியில் மகாராஜா, மரத்தில் மேலேறி மேடையில் துப்பாக்கியோடு காத்திருப்பார். கீழே சற்று தொலைவில் ஒரு ஆடோ, மாடோ, மானோ உயிரோடு கட்டப்பட்டிருக்கும். சாயங்கால வேளையில் புலிக்குப் பசி எடுக்க ஆரம்பிக்கும். தன் இடத்தில் இருந்து எழுந்து, சோம்பல் முறித்து, இரையை மோப்பம் பிடித்து வரும். கட்டப்பட்டிருக்கும் விலங்கு கத்த, புலி பாய, மகாராஜாவின் துப்பாக்கியிலிருந்து குண்டும் பாயும். இது முதல் முறை.

அதிகாலையிலேயே புலிக்கு இரை வைத்துக் காத்திருப்பார்கள். புலி, இரையை அடித்து இழுத்துச் சென்று சாப்பிட ஆரம்பிக்கும். அப்போது யானைமீது சென்று புலியைச் சுற்றி வளைத்துச் சுடுவது இரண்டாவது முறை. இந்த முறையில் மகாராஜாவின் குறி தப்பினால், வேறு யாராவது சுட்டு விடுவார்கள். ஏனெனில் புலி, பூ பறித்துக் கொண்டிருக்காதே.

மூன்றாவது முறை மகாராஜாக்கள் கொஞ்சமும் நோகாமல் நொங்கெடுக்கும் முறை. அதாவது மகாராஜா காட்டில் ஒரு பகுதியில் தனக்கான மேடையில் சௌகரியமாக உட்கார்ந்து கொள்ளுவார். யானைகளோடும் தீப்பந்தங்களோடும் முரசு கொட்டுபவர்களோடும் ஒரு படையினர் புலியின் இருப்பிடத்துக்கே சென்று, அதனை மிரள வைத்து மகாராஜா காத்திருக்கும் பகுதிக்கு ஓட்டி வருவார்கள். மகாராஜா அதை டுமீல் செய்வார்.

ஆனால் ரேவா சமஸ்தான மகாராஜா, புலி வேட்டைக்கு நான்காவதாக ஒரு புதிய முறையை உபயோகப்படுத்தினார். அவரிடம் பழக்கப்படுத்தப்பட்ட குரங்கு ஒன்று இருந்தது. வேட்டைக்கான மேடையில் அவர் இருக்கும்போது, அந்தக் குரங்கு மரத்தின் உச்சியில் இருக்கும். மகாராஜா, ஜாலியாக புத்தகங்கள் படித்துக் கொண்டிருப்பார். புலி அந்தப் பக்கமாக வந்தால், அந்தக் குரங்குக்குத் தெரிந்துவிடும். உடனே இறங்கிச் சென்று மகாராஜாவிடம் சத்தம் எழுப்பும். மகாராஜாவும் புத்தகத்தைக் கீழே வைத்துவிட்டு துப்பாக்கியைத் தூக்குவார்.

மிரள வைக்கும் வேட்டை புள்ளி விவரங்களில் சில. கூச் பிகார் மகாராஜா நிருபேந்திர நாராயண், தன் வாழ்நாளில் 365 புலிகள், 438 காட்டெருமைகள், 207 காண்டாமிருகங்கள், 311 சிறுத்தைகளை வேட்டையாடியிருக்கிறார். சர்குஜா சமஸ்தான ராஜா, ராமானுஜ் சரன் சிங், தம் வாழ்நாளில் சுட்ட புலிகளின் எண்ணிக்கை மட்டும் ஆயிரத்தைத் தாண்டும். ரேவா சமஸ்தான மகாராஜா குலாப் சிங்கில் புலி ஸ்கோர் தொள்ளாயிரத்துச் சொச்சம்.

(குமுதம் ரிப்போர்ட்டரில் எழுதி வரும் அகம் புறம் அந்தப்புரம் தொடரிலிருந்து ஒரு சிறு பகுதி.)