மன்னர் மானிய ஒழிப்பு

இந்திரா காந்தி அரசு, மன்னர் மானிய ஒழிப்பில் தீவிரம் காட்டியது. அப்போது அதிகபட்ச ஆண்டு மானியமாக வரிவிலக்கோடு ரூ. 26,00,000 பெற்றவர் மைசூர் மகாராஜா ஜெய சாமராஜேந்திர உடையார். குறைந்தபட்சமாக சௌராஷ்டிராவிலிருந்த குட்டி சமஸ்தானமான கட்டோடியாவின் ராஜா ரூ. 192 பெற்றுக் கொண்டிருந்தார். எதற்கு அநாவசியச் செலவு என்று இந்திரா, மன்னர் மானிய ஒழிப்புத் தீர்மானத்தை அந்த செப்டெம்பரில் பாராளுமன்றத்தில் கொண்டுவந்தார். கீழவையில் நிறைவேறியது. ஆனால் மேலவையில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
‘மானியத்தை மட்டும் ஒழித்தால் போதாது. மன்னர்களின் பின் ஒட்டிக்கொண்டிருக்கும் வெற்றுப்பட்டங்களையும் ஒழிக்கவேண்டும்.’ இந்திரா, அவசரச் சட்டம் ஒன்றை நிறைவேற்ற முடிவுசெய்தார். ஹைதராபாத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த அப்போதைய ஜனாதிபதி வி.வி. கிரி, இந்திராவின் விருப்பத்துக்கேற்ப அரசாணையில் கையொப்பமிட்டார். மன்னர்கள் தரப்பில் நீதிமன்றத்துக்குச் சென்றார்கள். தீர்ப்பு மன்னர்களுக்குச் சாதகமாக அமைந்தது. ‘இந்தச் சட்டம் செல்லாது.’
இந்திராவின் அடுத்த காய் நகர்த்தலை யாருமே எதிர்பார்க்கவில்லை. ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை அறிவித்தார் (1971). பங்களாதேஷ் போரில் கிடைத்த வெற்றியினால் இந்திராவுக்கு அந்தத் தேர்தலில் பூரண ஜெயம். மீண்டும் பிரதமரானார். இந்திய அரசியலமைப்பின் இருபத்தாறாவது சட்டதிருத்தத்தைக் கொண்டு வந்தார் இந்திரா. அது மன்னர் மானிய ஒழிப்பு. தீர்மானம் இரு அவைகளிலும் நிறைவேறியது. 1971, டிசம்பரில் அது சட்டமாகியது. அவர்களின் பட்டங்களும் பறிக்கப்பட்டன. ‘நாங்கள் மன்னர்களில் ஆடம்பரத்தைப் பறித்துவிட்டோம். ஆனால் அவர்கள் மனிதர்களாக வாழ வாய்ப்பு கொடுத்திருக்கிறோம்’ – இந்திரா சொன்னார். ‘சுதந்தரத்தின்போது இந்தியாவைக் கட்டமைக்கும் சக சிற்பிகள் என்று சொன்னீர்கள். இப்போது ஏதுமில்லாதவர்களாக்கி விட்டீர்கள்’ – பரோடா மகாராஜா பஃதேசிங் புலம்பினார். ‘எங்களைத் தீண்டத்தகாதவர்களாக்கி விட்டீர்கள்’ – கதறினார் ஜோத்பூர் மகாராஜா கஜ்சிங்.
வருடம் 192 ரூபாய் மானியமாகப் பெற்றுவந்த கட்டோடியா ராஜா, அதையும் இழந்தபின் சோற்றுக்கு என்ன செய்தார்? ஓர் அலுவலகத்தில் குமாஸ்தாவாக வேலைக்குச் சேர்ந்திருந்தார். ராஜா, தனது ஓட்டை சைக்கிளில் அலுவலகத்துக்குச் செல்லும்போது யாரும் அவருக்கு வணக்கம் வைக்கவில்லை.

 

புலி வேட்டை

இந்தியாவை ஆண்டு கொண்டிருந்த பிரிட்டிஷார், புலி வேட்டையாடுவதை கௌரவமான ஒன்றாகக் கருதினார்கள். சுட்ட புலியைக் குப்புறப்போட்டு, அதன்முன் லேடி வைஸ்ராயோடு நின்று, துப்பாக்கியுடன் சிரித்தாற்போல புகைப்படம் எடுத்துக் கொள்வது என்பதை அளப்பரிய சாதனையாக நினைத்தார்கள். தாங்கள் சுடும் புலி, குறைந்தபட்சம் பத்து அடி நீளமாவது இருக்க வேண்டும் என்பதிலும் கவனமாக இருப்பார்கள். புலி வேட்டையாடுவதில் மூன்று முறைகளைக் கடைபிடித்தார்கள்.

புலி நடமாட்டமுள்ள பகுதிகளை புக்கிகள் கண்டறிந்து சொல்லுவார்கள். அதற்கு அருகிலுள்ள பகுதியில் மகாராஜா, மரத்தில் மேலேறி மேடையில் துப்பாக்கியோடு காத்திருப்பார். கீழே சற்று தொலைவில் ஒரு ஆடோ, மாடோ, மானோ உயிரோடு கட்டப்பட்டிருக்கும். சாயங்கால வேளையில் புலிக்குப் பசி எடுக்க ஆரம்பிக்கும். தன் இடத்தில் இருந்து எழுந்து, சோம்பல் முறித்து, இரையை மோப்பம் பிடித்து வரும். கட்டப்பட்டிருக்கும் விலங்கு கத்த, புலி பாய, மகாராஜாவின் துப்பாக்கியிலிருந்து குண்டும் பாயும். இது முதல் முறை.

அதிகாலையிலேயே புலிக்கு இரை வைத்துக் காத்திருப்பார்கள். புலி, இரையை அடித்து இழுத்துச் சென்று சாப்பிட ஆரம்பிக்கும். அப்போது யானைமீது சென்று புலியைச் சுற்றி வளைத்துச் சுடுவது இரண்டாவது முறை. இந்த முறையில் மகாராஜாவின் குறி தப்பினால், வேறு யாராவது சுட்டு விடுவார்கள். ஏனெனில் புலி, பூ பறித்துக் கொண்டிருக்காதே.

மூன்றாவது முறை மகாராஜாக்கள் கொஞ்சமும் நோகாமல் நொங்கெடுக்கும் முறை. அதாவது மகாராஜா காட்டில் ஒரு பகுதியில் தனக்கான மேடையில் சௌகரியமாக உட்கார்ந்து கொள்ளுவார். யானைகளோடும் தீப்பந்தங்களோடும் முரசு கொட்டுபவர்களோடும் ஒரு படையினர் புலியின் இருப்பிடத்துக்கே சென்று, அதனை மிரள வைத்து மகாராஜா காத்திருக்கும் பகுதிக்கு ஓட்டி வருவார்கள். மகாராஜா அதை டுமீல் செய்வார்.

ஆனால், ரேவா சமஸ்தான மகாராஜா, புலி வேட்டைக்கு நான்காவதாக ஒரு புதிய முறையை உபயோகப்படுத்தினார். அவரிடம் பழக்கப்படுத்தப்பட்ட குரங்கு ஒன்று இருந்தது. வேட்டைக்கான மேடையில் அவர் இருக்கும்போது, அந்தக் குரங்கு மரத்தின் உச்சியில் இருக்கும். மகாராஜா, ஜாலியாக புத்தகங்கள் படித்துக் கொண்டிருப்பார். புலி அந்தப் பக்கமாக வந்தால், அந்தக் குரங்குக்குத் தெரிந்துவிடும். உடனே இறங்கிச் சென்று மகாராஜாவிடம் சத்தம் எழுப்பும். மகாராஜாவும் புத்தகத்தைக் கீழே வைத்துவிட்டு துப்பாக்கியைத் தூக்குவார்.

வேட்டை குறித்த மிரள வைக்கும் புள்ளிவிவரங்கள் சில. கூச் பிகார் மகாராஜா நிருபேந்திர நாராயண், தன் வாழ்நாளில் 365 புலிகள், 438 காட்டெருமைகள், 207 காண்டாமிருகங்கள், 311 சிறுத்தைகளை வேட்டையாடியிருக்கிறார். சர்குஜா சமஸ்தான ராஜா, ராமானுஜ் சரன் சிங், தம் வாழ்நாளில் சுட்ட புலிகளின் எண்ணிக்கை மட்டும் ஆயிரத்தைத் தாண்டும். ரேவா சமஸ்தான மகாராஜா குலாப் சிங்கில் புலி ஸ்கோர் தொள்ளாயிரத்துச் சொச்சம்.

(அகம் புறம் அந்தப்புரம் நூலில் இருந்து.)