வெளிச்சத்தின் நிறம் கருப்பு – அத்தியாயம் 01

தமிழக அரசியல் வாரமிருமுறை இதழில் நான் எழுத ஆரம்பித்துள்ள வெளிச்சத்தின் நிறம் கருப்பு தொடரின் முதல் அத்தியாயம் உங்களுக்காக. (சென்ற ஞாயிறு இதழில் வெளியானது.)

***

பூ ஒன்று செடியிலிருந்து உதிர்ந்த ஒரு சமயத்திலோ, நீர்க்குமிழ் ஒன்றை காற்று மோதி உடைத்த சமயத்திலோ, வண்ணத்துப் பூச்சி ஒன்று தன் சிறகை இழந்த சமயத்திலோ அந்தக் காதல், அவர்கள் உறவு முறிந்திருக்க வேண்டும்.

ஹென்றி ஸீக்லேண்ட் என்ற காதலன், தனது நீண்ட நாள் காதலியை விட்டு நிரந்தரமாகப் பிரிந்தான். உறவு முறிய ஓரிரு சுடுசொற்கள்கூட போதுமே. இருவரும் திருமணம் செய்துகொண்டு, ஏழெட்டு குழந்தைகள் பெற்று, பேரன் பேத்தி எடுத்து… ஹென்றியின் காதலிக்கு ஏராளமான கனவுகள். அவை எல்லாம் வெறும் கனவுகள் மட்டுமே என்று அவள் உணர்ந்த நொடியில் விரக்தியை உச்சத்தைத் தொட்டாள். தனது நிகழ்காலத்தை, ‘இறந்த’காலம் ஆக்கினாள்.

அவள் தற்கொலை செய்துகொண்டதுகூட ஹென்றியை எந்த விதத்திலும் பெரிதாகப் பாதிக்கவில்லை. அந்தக் காதலிக்கு ஓர் அண்ணன் இருந்தான். பாசமலர் சிவாஜி வகையறா பிரதர். தங்கையின் கோர முடிவு அவனை ஏராளமாக உலுக்கியிருந்தது. துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு ஹென்றியைப் பழிவாங்கக் கிளம்பினான்.

ஹென்றி தன் வீட்டுத் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தான். அங்கே திடீரென உதித்த அண்ணன், சற்று தொலைவிலிருந்து கைகள் நடுநடுங்க, ஹென்றியின் தலைக்குக் குறிபார்த்தான். அண்ணன், அப்போது கெட்ட வார்த்தைகள் கலந்த ஆங்கிலத்தில் ஏதாவது டயலாக் விட்டிருக்கலாம். அவனது துப்பாக்கி தோட்டா ஒன்றை வெளியே விட்டது.

ஹென்றி சுருண்டு விழுந்தான்.

‘அய்யோ… கொலை செய்துவிட்டேனா?’ – சில நொடிகளில் அண்ணனை பயம் கவ்விக் கொண்டது. அந்த பயம், உடனே உருமாற்றமும் அடைந்தது. ‘நினைத்தபடியே பழிவாங்கிவிட்டேன். இனி எனது பாசமலரின் ஆத்மா சாந்தியடையும்.’ அண்ணன், தன் தன் நெற்றியில் துப்பாக்கியை வைத்து விசையை அழுத்தினான். இன்னொரு தோட்டா அவனது உயிரைக் குடித்தது.

சில நிமிடங்கள் கடந்திருக்கும். ஹென்றி மயக்கம் தெளிந்து எழுந்தான். ‘நான் உயிரோடுதான் இருக்கிறேனா!’ – அவனாலேயே நம்ப முடியவில்லை. தோட்டா, அவனது நெற்றியைத்தான் உரசிக் கொண்டு சென்றிருந்தது. உயிருக்குச் சேதாரமில்லை. அவன் அருகிலிருந்த மரத்தைப் பார்த்தான். அதைத் துளைத்திருந்த தோட்டா, உள்ளே பத்திரமாகத் தஞ்சமடைந்திருந்தது. இன்னொருபுறம் அண்ணன் செத்துக் கிடந்தான்.

இந்தச் சம்பவம் நடந்தது 1893ல். நடந்த இடம் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்திலுள்ள ஹனி குரோவ் நகரில்.
இந்த இடத்தில் பாஸ்ட் பார்வேர்ட் பட்டனை அழுத்தி, 1913க்கு வந்துவிடலாம்.

ஹென்றி அதே வீட்டில்தான் சுபிட்சமாக வாழ்ந்து கொண்டிருந்தான். ஆனால் என்ன, தோட்டத்தில் அந்தத் ‘தோட்டா மரம்’ கண்ணில்படும்போதெல்லாம் பழைய காதலியின் நினைவு அநாவசியமாக வந்து தொலைத்தது. இந்த மரத்தை எதற்கு விட்டு வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் ஒருநாள் வலுப்பெற்றது.

ஹென்றி, கோடாரியுடன் அந்த மரத்தை நோக்கிச் சென்றான். கோடாரி வேலைக்கு ஆகவில்லை. மரம் புஜபலம் காட்ட, ஹென்றிக்கு கோபம் வந்தது. மரத்தைத் தகர்த்தெறிய முடிவு செய்தான். மரத்தில் சில டைனமைட்டுகள் கட்டப்பட்டன. பலத்த சப்தம். மரம் நாலாபக்கமும் சிதறியது. பறவைகள் அலறிக் கொண்டிருந்தன.

ஹென்றி அதை உணரும் நிலையில் இல்லை. இறந்து கிடந்தான். உடலில் வேறெங்கும் காயங்களில்லை, ஆனால் அவன் தலையில் இருந்து மட்டும் ரத்தம் வடிந்து கொண்டிருந்தது. அந்தப் பழைய தோட்டா, அச்சமயம் ஹென்றியின் தலையில் தஞ்சமடைந்திருந்தது.

‘அந்தத் தோட்டாவால்தான் அவன் உயிர்போக வேண்டுமென்பது விதி. அதனால்தான் இருபது வருடங்கள் கழித்து அதே தோட்டாவால் செத்திருக்கிறான்.’ ‘அந்த மரத்தைப் பார்த்திருக்கிறாயா? பேய் மரம். அந்த அண்ணனின் ஆவி அதில்தான் காத்திருந்தது. சமயம் வாய்த்தபோது கொன்றுவிட்டது.’, ‘ஹென்றி ஏமாற்றிய அந்தக் காதலியின் ஆவிதான் தோட்டாவுக்கும் புகுந்து அவனைப் பழி தீர்த்துவிட்டது.’

பலருக்கும் பல கருத்துகள். விதவிதமாகப் பேசிப் பேசி மாய்ந்துபோனார்கள். பழைய தோட்டா தலையில் பாய்ந்துதான் ஹென்றி இறந்துபோனான் என்பதில் மாற்றமில்லை. இருந்தாலும், என்றோ மரத்துள் புதைந்துபோன தோட்டா, மீண்டும் குறிபார்த்துப் பாய்ந்து வந்து உயிரைப் பறித்திருக்கிறது எனில், அதன்பின் உள்ள மர்மம் என்ன?
விடை இல்லை.

1657, மார்ச் 4 அன்று டோக்கியோ என்ற நகரமே சுடுகாடு ஆகிப் போனதன் பின்னணியில் உள்ள மர்மத்துக்குக் கூட விடை கிடையாது.

இன்றைய டோக்கியோவின் அன்றைய பெயர் இடோ (Edo), ஜப்பானின் மிகப்பெரிய வணிக நகரம். சுமார் மூன்று லட்சம் பேர் வசித்தார்கள். நெருக்கமாக அமைந்த வீடுகள் (மரத்தால், காகிதக் கூழினால் ஆனவை), குறுகலாக அமைந்த தெருக்கள், நீளமான சந்தைகள், நிறைய கோயில்கள், பாலங்கள் கொண்ட நகரம் அது.

கனத்த சாரீரமுடைய ஒருவர் பலமாகத் தும்மினால்கூட ‘நில அதிர்வு’ ஏற்படும் சபிக்கப்பட்ட தேசம்தானே ஜப்பான். 1657, மார்ச் 2 அன்று நண்பகலில் ஏதோ ஓரிடத்தில் சிறிய அளவில் நெருப்பு பரவ ஆரம்பித்தது. எங்கிருந்தோ கிளம்பிவந்த சூறாவளிக் காற்று அந்த நெருப்பின் இருப்பை பல மடங்காக்கியது. அந்தக் காலத்திலேயே இடோ நகரில் தீயணைப்புப் படை இருந்தது. ஆனால் அளவில் மிகச் சிறியது. அவர்கள் நெருப்பிடம் தோற்றுப் போனார்கள். மார்ச் இரண்டாம் தேதி இன்முகத்துடன் தன் சேவையைத் தொடங்கிய தீ, மூன்றாம் தேதி முழுவதும் மும்மரமாக வேலை பார்த்துவிட்டு, நான்காம் தேதி நண்பகலுக்குப் பின்னரே ஓய்வெடுக்கச் சென்றது.

புகைமூட்டத்தினுள் புதைந்திருந்த இடோ நகரில், கால்வைத்த இடமெல்லாம் கருகிய உடல்கள். அந்தப் ‘பேரழிவு நெருப்பு’ பரவக் காரணம் என்ன?

நில அதிர்வாகத்தான் இருக்கும் என்பது பொதுவான கருத்து. ஆனால் இன்றைக்கும் ஜப்பானியர்களைக் கேட்டால், இடுங்கிய கண்களில் பயம் பரவ, நடுங்கும் குரலுடன் அந்தச் சம்பவத்தைச் சொல்வார்கள்.

ஜப்பானிய இளம்பெண் ஒருத்தி விலையுயர்ந்த, பகட்டான கிமோனோ (Kimono, ஜப்பானியப் பெண்கள் அணியும் முழுநீள கவுன்) ஒன்றை வாங்கி ஆசையுடன் அணிந்தாள். ஏனோ, அடுத்த சில நாள்களிலேயே நோய்வாய்ப்பட்டு படுக்கையில் விழுந்தாள். என்ன நோயென்று பிறர் அறியும் முன்பே செத்துப் போனாள்.

அவள் ஆசையுடன் வாங்கி வைத்திருந்த கிமோனோ, இன்னொரு இளம்பெண்ணுக்கு விற்கப்பட்டது. அவளும் அணிந்துகொண்டு அழகு பார்த்தாள். சில நாள்களிலேயே மர்ம நோயொன்று அவளை அணிந்துகொண்டு அழகு பார்த்தது. இரண்டாமவளும் இறந்து போனாள். மூன்றாவதாக கிமோனோ, இன்னொரு இளம்பெண்ணிடம் சென்று சேர்ந்தது. அவளுக்கும் அதே கதி. அதோ கதி.

கிமோனோ அணிந்த பெண்

இடோ நகரமெங்கும் விஷயம் பரவியது. ‘அந்த கிமோனோவில் துர்சக்தி ஏதோ புகுந்துள்ளது. அதுதான் மூன்று இளம்பெண்களின் உயிரை எடுத்துள்ளது.’ மதகுரு ஒருவரிடம் அந்த மர்ம கிமோனோ ஒப்படைக்கப்பட்டது. ஊரே கூடி நிற்க, மதகுருவும் அந்த கவுனைப் பரப்பி வைத்து மந்திரமெல்லாம் ஓதி, சடங்குகள் செய்து, எரிகின்ற கட்டை ஒன்றை எடுத்து அந்த கிமோனோவுக்குக் கொள்ளி வைக்க…

அச்சுறுத்தும் ஊளைச் சத்தத்துடன் சூறாவளிக் காற்று ஒன்று எங்கிருந்தோ கிளம்பி வர… உயரமாகக் கிளம்பிய தீ, திகுதிகுவென வேகமாகப் பரவ…

அந்தச் சம்பவத்தால் ஏற்பட்ட இழப்பு – சுமார் ஒரு லட்சம் மனித உயிர்கள். பல்லாயிரக்கணக்கான கால்நடைகள். முந்நூறு கோயில்கள். அறுபது பாலங்கள். அநேக கட்டடங்கள். 60 -70 சதவிகித இடோ நகரமே தீக்கிரையாகியிருந்தது. இதுவரை ஜப்பான் சந்தித்தப் பேரழிவுகளில் இதுவும் ஒன்று.

*
உலகின் முதல் மனிதனுக்கு சூரியன், சந்திரன், வானம், கடல், மலை உள்பட தன்னைச் சுற்றியிருந்த ஒவ்வொன்றுமே விநோதமாகவும் மர்மமாகவும்தான் இருந்தன. ஒவ்வொன்றையும் கண்டு பயந்தான். இயற்கையில் அவன் பயந்த விஷயங்களை இறைவனாகப் பார்க்க ஆரம்பித்தான்.

எப்போது மனிதன் அறிவு சார்ந்தும், அறிவியல் சார்ந்தும் உலகைப் பார்க்க ஆரம்பித்தானோ, அப்போதிருந்தே இயற்கை மீதான வீண்பயம் விலகியது. எவையெல்லாம் விநோதமாகத் தெரிந்தனவோ, பின் அவையே அறிவியலை வளர்க்க உரமாக ஆயின. பகுத்தறிவு வளர மூடநம்பிக்கைகள் பலவும் தகர்ந்தன.

இருந்தாலும் ‘உலகம் மர்மங்களால் ஆனது’ என்று பறைசாற்றும்படியாக, மனித அறிவுக்கும் அறிவியலுக்கும் பிடிபடாத, விடைதெரியாத மர்மங்கள் காலம்தோறும் பெருகிக் கொண்டேதான் செல்கின்றன. மேலே பார்த்தபடி தோட்டாவாக, கிமோனோவாக விநோத விபரீதங்கள் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கின்றன.

இந்தத் தொடர் எதைப் பற்றியெல்லாம் பேசப்போகிறது என்று பட்டியலிடுவது கடினம். ஆனால் குண்டலினி வித்தையால் பறக்க வைக்கும் சாமியார், சிவலிங்கத்தைக் கக்கும் ஆன்மிகவாதி, கூனர்களையும் குருடர்களையும் குணமாக்கும் மதகுரு போன்ற டுபாக்கூர்களை நாம் சீண்டப் போவதில்லை. ஸ்பை கேமரா வைக்கப்படாத அறையில் அவர்கள் சுபிட்சமாக வாழ்ந்துவிட்டுப் போகட்டும். தவிர ஆவி, பேய், பிசாசு, பில்லி, சூனியம், கண்கட்டு வித்தை என்ற மிகக் குறுகிய வட்டத்துக்குள்  மட்டும் நாம் சுற்றி வரப்போவதில்லை.

நமக்கான தளம் மிக மிகப் பெரியது. நாம் ஏற்கப் போகும் பாத்திரங்கள் (தசாவதாரம் கமல்ஹாசனைக் காட்டிலும்) ஏராளம். ஓர் அத்தியாயத்தில் நாம் அறிவியல் ஆராய்ச்சியாளராக மாற வேண்டியதிருக்கும். அடுத்ததில் உளவியல் மருத்துவராக. அதற்கடுத்த அத்தியாயங்களில் தொல்லியல் வல்லுநர், வரலாற்று ஆய்வாளர், வானியல் அறிஞர், துப்பறியும் அதிகாரி, விலங்கியல் நிபுணர், இயற்கை ஆர்வலர், அவசியப்பட்டால் பேய் ஓட்டும் மந்திரவாதியாகவும் மாற வேண்டியது வரலாம்.

பகுத்தறிவைப் பக்கத்துத் தெரு சேட்டிடம் அடகு வைத்துவிட்டு இந்தத் தொடரைப் படிக்கத் தேவையில்லை. உலகில் பலராலும் விடைகாண முடியாத மர்மங்களைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தவே இந்தத் தொடர். நம் அறிவுக்கும் அறிவியலுக்கும் அப்பாற்பட்ட மர்மங்கள், விநோதங்கள், விசித்திரங்கள் மீது வெளிச்சம் பாய்ச்சுவதே இத்தொடரின் நோக்கம்.

எனில், அந்தத் தீராத புதிர்களுக்கு இதில் விடை கிடைக்குமா என்றால், என் பதில் – அந்த வெளிச்சத்தின் நிறம் கருப்பு!

(வெளிச்சம் பரவும்)

புதிய தொடர்

தமிழக அரசியல் இதழில் தொடர் அறிவிப்பு

தமிழக அரசியல் வாரமிருமுறை இதழில் வரும் ஞாயிறு இதழ் முதல் இரு புதிய தொடர்கள் ஆரம்பமாகின்றன. அதற்கான அறிவிப்பு இது. மர்மமான ஒரு களத்தில் ஏகப்பட்ட சுவாரசியங்களுடன் நான் களமிறங்குகிறேன். நண்பர் முத்துக்குமார் தனக்குப் பரிச்சயமான ஒரு களத்தில் புதிய கோணத்தில் களமிறங்குகிறார். படியுங்கள். தங்கள் கருத்துகளைப் பகிருங்கள்.

இது எனக்கு மூன்றாவது தொடர். தங்கள் மனமார்ந்த வாழ்த்துகளுக்கு நன்றி.

றிடிறிஏ விக்டோரியா ஆரம்பப் பாடசாலை, தூத்துக்குடி.

 

1985

வீட்டு வாசல் கதவைப் பிடித்து அடம்பிடித்தபடி கொஞ்சநேரம், செல்லும் வழியெல்லாம் கொஞ்சநேரம், பள்ளிக்கூட கேட் அருகில் கொஞ்சநேரம் – அழுது தீர்ப்பேன். பள்ளிக்கூடம் என்றால் அவ்வளவு பயம். அந்த பயத்துக்கான காரணம் என்னவென்று சிறுகுறிப்பெல்லாம் வரைய முடியாது. பயந்தேன். அவ்வளவுதான்.

நான் படிப்பை ஆரம்பித்தது பிரிகேஜி, எல்கேஜியில் அல்ல; பேபி கிளாஸில். தமிழ் வழிக் கல்வி. எனது (தந்தை வழி) தாத்தா சுப்ரமணியன், தம் பேரப்பிள்ளைகளை தமிழ் வழியில் மட்டுமே படிக்க வைக்க வேண்டும் என்பதில் கொள்கைப் பிடிப்போடு இருந்துள்ளார்கள். (தாத்தாவுக்கு என் மனபூர்வமான நன்றி.) என் அக்காவைக்கூட ஆங்கில மீடியத்தில் சேர்த்துவிட்டு பின், தாத்தாவின் கட்டளையால் ஓரிரு வருடங்களில் தமிழ் மீடியம் பள்ளிக்கு மாற்றிவிட்டனர்.

பெற்றோர், என்னைப் பள்ளியில் கொண்டு சேர்த்த அந்த நிமிடங்கள் எல்லாம் நினைவில் இல்லை. ஆனால் பேபி கிளாஸ் எடுத்த கல்யாணி டீச்சரின் முகம் மட்டுமல்ல, குரல்கூட எனக்கு என்றைக்கும் மறக்காது. அந்தப் பள்ளிக்கூட ஆசிரியைகள் அனைவருக்குமே எங்கள் குடும்பம் பரிச்சயம். ஆக, என்மேல் அவர்களுக்குத் தனிப் பிரியம். கல்யாணி டீச்சரது மகனான மாரிமுத்துவும் என் க்ளாஸ்மேட்தான். மாரிமுத்துவுக்கு அடுத்தபடியாக டீச்சர், அன்பாகக் கவனித்தது என்னைத்தான் இருக்கும். (நன்றி டீச்சர்!)

பேபி கிளாஸ் - 1985

டீச்சர் அன்போடு இருந்தால் மட்டும் போதுமா? ஹெட்மிஸ்டரஸ் பாசத்தோடு பேசினால் மட்டும் போதுமா? என்னைப் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் ‘அரளக்கா’ (ஆயாவை அப்படித்தான் கூப்பிடுவோம்; அவர்கள் முழுப்பெயர் ’அருளம்மாள்’ என ஞாபகம்.) என்னைப் பள்ளியில் பரிவாகக் கவனித்துக் கொண்டால் மட்டும் போதுமா; எனக்கும் பள்ளிக்கூடம் மீது பிடிப்பு, பிரியம், காதல், கெமிஸ்டரி எல்லாம் வர வேண்டாமா? அதெல்லாம் வருவதற்குப் பல காலம் பிடித்தது. அதிகம் பயந்தால், பள்ளி நடந்து கொண்டிக்கும்போதே அழுதபடியே என் வகுப்பிலிருந்து எழுந்து மூன்றாம் வகுப்பு ‘B’ செக்ஷனுக்குச் செல்வேன். அது என் அக்காவின் வகுப்பு. அவளருகில் உட்கார்ந்து கொள்வேன். அதற்காக அந்த மூன்றாம் வகுப்பு டீச்சர் என்னை ஒருபோதும் அதட்டவில்லை, விரட்டவில்லை. அவ்வகுப்பில் நடத்தப்படும் ‘ஏ ஃபார் ஆப்பிள்… பி ஃபார் பால்’ பாடத்தைக் கவனிப்பேன். (மூன்றாம் வகுப்பில்தான் ஆங்கிலம் ஒரு சப்ஜெக்ட்டாக எங்களுக்கு அறிமுகமானது.)

மதியம் உணவு இடைவேளையில், அரளக்கா என்னையும் அக்காவையும் (மேலும் சிலரையும்) வீட்டில் கொண்டு போய் விடுவார்கள். வீட்டுக்கும் பள்ளிக்கும் அதிக தூரமெல்லாம் இல்லை. உடல் நோகமால் அங்கப்பிரதட்சணம் செய்யும் தூரம்தான். முதல் வாய் சாப்பிடும்போதே எனக்கு வயிறு வலிக்க ஆரம்பித்துவிடும். தயிர் சாதத்துக்குச் செல்லும் முன்பாகவே தலைவலிக்க ஆரம்பித்துவிடும். அரளக்கா மீண்டும் பள்ளிக்கு அழைத்துப் போக வரும்போது பெருங்குரலெடுத்து அழ ஆரம்பிப்பேன். என் வீட்டுக் கதவில் இறுகியிருக்கும் எனது உடும்புப் பிடியை விடுவிக்க அம்மா மல்லுக்கட்டுவார்கள்.

பேபி கிளாஸில் பர்ஸ்ட் ரேங்க் எல்லாம் எடுக்க ஆரம்பித்தவுடன், எனது பயம் மறைய ஆரம்பித்திருக்கும் என்று நினைக்கிறேன். பள்ளி செல்வதில் ஆர்வம் வந்தது. இங்கே என்னைப் பற்றிய ஒரு சுயதம்பட்ட குறிப்பு: நான் றிடிறிஏ (TDTA) விக்டோரியா ஆரம்பப் பாடசாலையில் படித்தபோது (பேபி கிளாஸ் முதல் ஐந்தாம் வகுப்பு வரை) முதல் அல்லது இரண்டாம் ரேங்க் மட்டுமே வாங்கியிருக்கிறேன். நான் முதல் ரேங்க் என்றால் இரண்டாவதாக புவனேஸ்வரி இருப்பாள். நான் இரண்டாவது எனில் முதலிடத்தில் அவள் இருப்பாள். ஸ்கூல் டீமில் பெரிய பேட்ஸ்மேனாக இருப்பவன், மாவட்ட அணிக்குச் செல்லும்போது தடுமாறுவதில்லையா. மேற்படிப்புக்குச் செல்லச் செல்ல கட்டெறும்பு தேய்ந்து கால் தூசாக நான் ஆனதெல்லாம் வரலாறு!

காலையில் தினமும் பிரேயர் உண்டு. ஒவ்வொரு நாளும் தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பின் பழைய ஏற்பாட்டிலிருந்து ஏசையாவோ, யோவானோ பேசுவார்கள் அல்லது சங்கீதம் ஒலிக்கும். அதற்குப் பின் கிறித்துவப் பாடல் ஒன்றைப் பாட வேண்டும்.

சருவ லோகாதிபா, நமஸ்காரம்!
சருவ சிருஷ்டிகனே, நமஸ்காரம்!
தரை, கடல், உயிர், வான் சகலமும் படைத்த
தயாபர பிதாவே, நமஸ்காரம்…

என்ற பாடல் செவ்வாய்க்கிழமைக்கானது. மற்ற கிழமைக்கான பாடல்கள் நினைவில் இல்லை. அதன் அர்த்தம், யாரைப் போற்றும் பாடல் என்றெல்லாம் தெரியாது. எல்லோருடனும் சேர்ந்து அதிக சத்தம் போடுவது பாடுவதில் அவ்வளவு சந்தோஷம். (மற்ற பாடல்களை நினைவுக்குக் கொண்டு வருவதற்காக எல்லாம் வல்ல பரமபிதா கூகுளைச் சரண்புக வேண்டும்.)

பாட்டு முடிந்ததும் வகுப்பறைக்குச் செல்ல வேண்டும். முதல் பீரியடில், டீச்சரிடம் எழுதி வந்த ஹோம்-வொர்க்கைக் காண்பிக்க வேண்டும். அதற்கெனத் தனி நோட்டெல்லாம் கிடையாது. சிலேட்டுதான். (கல் சிலேட், சுற்றிலும் மரச்சட்டம் – ஞாபகமிருக்கிறதா?) எழுதுவதைவிட, அது அழியாமல் அரும்பாடுபட்டு பள்ளிக்குக் கொண்டுவருவதே ஆகப் பெரிய சவால். சிலேட்டில் இரு பக்கங்களுக்குள் அடங்கும் வகையில்தான் ஹோம்-வொர்க் சுமை இருக்கும் என்பது வசதி. ஹோம்-வொர்க் எழுதாத சமயங்களில் ‘பையில் வைத்திருந்தேன், அழிந்துவிட்டது’, ‘மழையில் அழிந்துவிட்டது’ என்று காரணம் சொல்லலாம். எந்த டீச்சரும் அவ்வளவு சுலபத்தில் ‘அடி ஸ்கேலை’த் தூக்க மாட்டார்கள்.

காலை, மதிய இடைவேளைகளில் கல்யாணி டீச்சர் தம்மிடம் இருக்கும் மிட்டாய் பாக்கெட்டுகளைப் பிரிப்பார்கள். பிரித்து ஒரு பச்சை டப்பாவில் போடுவார்கள். கடலை மிட்டாய், மிளகாய் மிட்டாய், கல்கோனா, பாக்கு மிட்டாய், ஆரஞ்சு மிட்டாய், சூடம் மிட்டாய், தேன் மிட்டாய், சீரக மிட்டாய் – இப்படி பல ரகங்கள். ஐந்து பைசாவுக்கு ஒரு மிட்டாய். எனக்கோ அக்காவுக்கோ வீட்டில் பாக்கெட் மணி கொடுக்க மாட்டார்கள். மிட்டாய் என்பது எங்களுக்குக் கண்களால் சாப்பிடும் சமாசாரம் மட்டுமே.

கொடிநாளுக்காக, பள்ளியில் எல்லோருக்கும் கொடி கொடுத்து 25 பைசா கேட்பார்கள். ஒருமுறை கொடிக்காகக் கொண்டுவந்த 50 பைசாவில் நானும் அக்காவும் ஆசைப்பட்டு மிட்டாய் வாங்கித் தின்றுவிட்டோம். கொடிக்குப் பைசா?

அம்மாவிடம் தயங்கித் தயங்கிச் சொல்ல, அப்புறமென்ன, தாராளமாக அடி கிடைத்தது. மீண்டும் மிட்டாய் வாங்கித் தின்னும் எண்ணம் வராதது போனஸ்.

பெரிய மைதானமெல்லாம் என் பள்ளியில் கிடையாது. ‘L’ போல நீளமாக அமைந்த வகுப்பறைகள். அதில் நடுவே ஹெட் மிஸ்ட்ரஸ் அறையும் பேபி கிளாஸும். அந்த வகுப்புகளுக்கு இருபுறமும் உள்ள இடம்தான் மைதானம். அங்கே மொத்தம் ஏழு மரங்கள் இருந்ததாக நினைவு. வேர்களைத் தரையில் அகலமாகப் பரப்பிய அந்த அரச மரம் மற்ற மரங்களுக்கெல்லாம் அரசனாக கம்பீரமாக நிற்கும். அது தரையில் பரப்பிய அந்த வேர் சிம்மாசனத்தில் உட்கார புதன்கிழமைகளில் போட்டா போட்டி நடக்கும்.

காரணம், புதன்கிழமை மாலையில் ‘பாட்டக்கா’ வருவார்கள். (பாட்டுப் பாடி, கதைகள் சொல்லி, பைபிள் வாசிக்கும் இனிய குரலுடைய அக்கா. கிறித்துவ மதபோதகர்.) பள்ளியின் சிறிய மைதானத்தில் எல்லோரும் குழுமியிருக்க கூட்டம் ஆரம்பமாகும். பாட்டக்கா கையில் என்ன எடுத்து வருகிறார்கள் என்பதில்தான் எங்கள் அனைவருடைய கவனமும் இருக்கும். முதலில் பைபிள் வாசிப்பார்கள். பின் சில பாடல்கள். அடுத்தது கதை. நிற்க வைக்கப்பட்டிருக்கும் கரும்பலகைமேல், வெல்வெட் போன்ற துணி ஒன்றை விரித்து, அதில் விதவிதமான, வண்ணமயமான படங்களை ஒட்டி, கதை சொல்வார்கள். இன்றைய குழந்தைகளுக்கு கார்ட்டூன் சேனல்போல, எனக்கு அன்றைக்கு பாட்டக்கா சேனல். எல்லா கதைகளிலும் இறுதியில் இயேசுதான் ஜெயிப்பார் என்று எனக்குத் தெரியும். இருந்தாலும் பாட்டக்கா கதை சொல்லும் அழகுக்காகவே புதன்கிழமை மாலைகளுக்காகக் காத்திருந்திருக்கிறேன்.

ஐந்தாம் வகுப்பில் நான் படித்தது A செக்‌ஷன். ஹெட்-மிஸ்ட்ரஸ்தான் எனக்கு வகுப்பாசிரியர். பாதி வகுப்புகள் ஹெட்-மிஸ்ட்ரஸ் அறையிலேயே நடக்கும். அறைக்கு வெளியேதான் பள்ளிக்கூட மணி தொங்க விடப்பட்டிருக்கும். ஒரு பெரிய உலோக வட்டு, அதைத் தட்டுவதற்கென பெரிய சைஸ் ஆணி. மாணவர்கள்தான் மணியடிக்க வேண்டும். கிட்டத்தட்ட அது ‘ஸ்கூல் லீடர்’ போன்ற கௌரவத்துக்குரிய பதவி. பலமுறை முதல் ரேங்க் எடுக்கும் மாணவனால் மட்டுமே அப்பதவியை வகிக்க முடியும் என்பதால்…

ஒரு பீரியடுக்கும் இன்னொரு பீரியடுக்கும் இடைப்பட்ட நேரத்தில் ‘டிங்’ என ஒரே ஒரு முறை தட்ட வேண்டும். இண்டர்வெலில் நான்கைந்து ’டிங்’குகள். மதிய இடைவேளையிலும், சாயங்காலம் பள்ளி முடியும்போதும் இஷ்டம்போல ‘டிங்டிங்’கலாம். மணியடிப்பதற்காகவே கடிகாரத்தில் மணியைப் பார்த்துக் கொண்டு காத்திருப்பதில் அத்தனை சந்தோஷம்!

’மாணவர் சங்கம்’ – என்பது பள்ளியில் நடக்கும் கலைவிழா. ஒவ்வொரு வகுப்பிலிருந்தும் ஏதாவது நிகழ்ச்சி நடத்த வேண்டும். குழுவாக ஆடலாம், சேர்ந்து பாடலாம், கதை சொல்லலாம். நம் இஷ்டம்தான். ஐந்தாம் வகுப்பில் நண்பர்களோடு சேர்ந்து நாடகம் ஒன்றை ஏற்பாடு செய்தேன். சபாபதி ரக வேலைக்காரனும் (மையா), அவனால் அல்லல்படும் முதலாளியும்.

முதலாளி : மையா மையா!

வேலைக்காரன் : என்ன ஐயா?

முதலாளி : வீட்டுக்கு விருந்தாளிகள் வர்றாங்க. சோப்புத்தண்ணியால வீட்டைக் கழுவி விட்டுட்டு, எண்ணையில வடை சுட்டு வை.

’சரி’ என்பதாகத் தலையாட்டும் வேலைக்காரன், வீட்டை எண்ணெயால் கழுவி விட்டு, சோப்புத் தண்ணீரில் வடை செய்து வைப்பான். இப்படியாக சில காட்சிகளைக் கற்பனை செய்து அரங்கேற்றினோம். வசனம் மறந்து, ரியாக்‌ஷன்ஸ் மறந்து பல இடங்களில் சொதப்பினாலும் நாடகத்தை சிறிய வகுப்பு மாணவர்கள் கைதட்டி ரசித்ததாக நினைவு.

பொங்கலுக்கு முன்பாக, தீபாவளிக்கு முன்பாக, மேலும் சில விசேஷ நாள்களுக்கு முன்பாக – சத்துணவில் சாயங்கால வேளையில் ‘புளியோதரை’ கொடுப்பார்கள். சத்துணவு சாப்பிடும் நண்பர்கள் சிலர் அதில் எனக்கும் பங்கு கொடுப்பார்கள். அந்தச் சுவை நினைவில் இல்லை. ஆனால் அந்தப் புளியோதரையை நினைத்தால் இனிக்கிறது.

றிடிறிஏ பள்ளி இன்றைக்கும் தூத்துக்குடியில் இருக்கிறது. ஆனால் முற்றிலும் தோற்றத்தில் மாறுபட்டு, அந்த அரச மரத்தையும் பிற மரங்களையும் இழந்து…

2010ல் எனது பள்ளி

இப்போதும் ஊருக்குச் சென்றால் பள்ளிக்கூடத்தைக் கடக்கும்போது மதிய இடைவேளையில் எல்லா மாணவர்களும் கூடி உட்கார்ந்து உரக்கச் சொல்லும் அந்தச் சத்தம் மட்டும் எனக்குள் கேட்கிறது.

‘எட்டா எட்டா அறுவத்துநாலு…

ஒம்பித்தெட்டு எழுவத்திரண்டு..

பைத்தெட்டு எண்பது…’

(புகைப்படத்தில் நடுவரிசையில் கல்யாணி டீச்சருக்கு அருகில் நிற்பது நான். என்னருகில் மாரிமுத்து. மேல் வரிசையில் மூன்றாவது ஆண்டாள் கொண்டையுடன் நிற்பவள் புவனேஸ்வரி. அரளக்காவும் இருக்கிறார்கள்.)

140 எழுத்துப் பறவை!

ட்விட்டர், பேஸ்புக் வகையறாக்கள் மீது எனக்கு அவ்வளவாக ஆர்வம் இருந்ததில்லை. எனவே பலகாலமாக அதனுள் எனது வலதுகாலை வைக்கவில்லை. எல்லாமே நேரத்தை விழுங்கும் முதலைகளாக மட்டுமே தெரிந்தன.

இருந்தாலும் எளிதில் விஷயங்களை அப்-டேட் செய்துகொள்ள இந்த முதலைகள்தான் இன்றைக்கு உதவுகின்றன என்பதை மறுக்க முடியாதே. தவிர, இவ்விரண்டிலும் அக்கவுண்ட் இல்லாவிட்டால் வாழத் தகுதியில்லாதவர்கள் பட்டியலில் என்னையும் சேர்த்துவிடுவார்கள் என்ற பயத்தில், அவற்றினுள் என் இடதுகாலை எடுத்துவைத்தேன்.

இப்போது வரை முகப்புத்தகத்தில் எனக்கு அவ்வளவாக ஈடுபாடு ஏற்படவில்லை. அதனுள் செல்லும்போதெல்லாம் ஏதோ நடுத்தெருவில் நிற்பதுபோன்ற உணர்வு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. கல்லூரி நண்பர்கள் பலரும் அதில் இருப்பதால், அதில் அவ்வப்போது முகம் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

ஆனால் ட்விட்டரில் இருக்கும் சுவாரசியம் வேறெந்த சமூக வலைத்தளங்களிலும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. 140 எழுத்துப் பறவையைத் துரத்திச் செல்வது எனக்குப் பிடித்திருக்கிறது. ஒரு வருடத்துக்கும் மேல் ட்விட்டரில் இயக்கிக் கொண்டிருக்கிறேன். என் பின் தொடரும் நிழலின் குரலாக இருக்கும் ஆயிரம்+ நண்பர்களுக்கு நன்றி.

ட்விட்டரில் என்னைத் தொடர : http://twitter.com/writermugil

எனது சில ட்வீட்ஸ்:

சாருவின் எழுத்துகளைவிட ராமராஜனின் சட்டைகள் எனக்குப் பிடிக்கும்!

செய்தி :விஜயின் சுறாவுக்கு எந்தவெட்டும் இல்லாமல் கிளீன் யு சான்று வழங்கியுள்ளது சென்சார்போர்டு. # படத்தோட எடிட்டருக்கே எதை வெட்ட, எதை ஒட்டன்னு ஒரு எழவும் புரியலையாம்.

செல்பேசிக் கொண்டே வண்டி ஓட்டுபவர்களைக் கண்டால் கடுப்பாகிறது. # டிரைவிங்கில் செல்லடிக்கும் சலனம் – நடுரோட்டில் பெல்லடிக்கும் மரணம்.

வாழ்க்கையில் நிரந்தரமாக மறந்துவிட வேண்டும் என்று நினைத்த ஒரு விஷயம் திடீரென நினைவுக்கு வந்துவிட்டது # செம்மொழி பாடல் சுருதிகாசன் குரலு ;(

வரவர விஜய் படங்களில் கிராபிக்ஸ் செலவு அதிகம்ஆகிறதாம். அவர் உதடுகூட அசைக்காமல் வசனம்பேசுவதால் மெனக்கிட்டு கிராபிக்ஸ் செய்யவேண்டியதுள்ளதாம் 😉

நேற்று கலைஞருக்காக அண்ணா சாலையில் வைக்கப்பட்ட ப்ளக்ஸில் தமிழ் மிளிர்ந்தது – ‘குறலோவியமே!’

நந்தலாலா பார்த்துவிட்டேன். உடனே Kikujiro பார்க்கவேண்டும் போலிருக்கிறது. டிவிடி வாங்க வேண்டும். மிஷ்கினிடம் கிடைக்குமா?

என் ஹெட்போனில் விருதகிரி பாடல்கள்தான் காலையில் இருந்து ஓடிக் கொண்டிருக்கின்றன. நான் அதைக் காதில் மாட்டவில்லை.

அண்ணாசாலையில் தமிழர்களின் முகவரியே என்று கலைஞருக்கு பேனர் வைத்திருந்தார்கள். எனது பாஸ்புக் முதல் கேஸ் கனெக்‌ஷன்வரை அட்ரஸ் மாற்றவேண்டும்போல!

4வது முறை மதிமுக பொதுச் செயலரானார் வைகோ! – யாருமே இல்லாத கடையில் யாருக்கு டீ ஆற்றிக் கொண்டிருக்கிறாரோ?

மங்காத்தாவும் ஊத்திக்கிட்டா அஜித்துக்கு பிரச்னையே இல்ல, ‘தல’ப்பாக்கட்டு பிரியாணி கடை ஆரம்பிச்சுடலாம்.

சிவப்புகருப்புசிவப்பு கொடிபார்த்து நீண்டநேரம் எந்த கட்சி என்று யோசித்தேன். பின்பே தானேஅழிந்த தானைத்தலைவரின் சிரித்தமுகம் நினைவில்வந்தது.

லிபியாவில்தவிக்கும் இந்தியர்களைமீட்க 4கப்பல் 2விமானம் -ஜி கே வாசன்- அப்டியே தமிழக காங்.தலைகளை அதுலஏத்தி லிபியால விட்டுட்டு வந்தா நிம்மதி.

டிவிடியில் 3இடியட்ஸ் பார்த்தேன். இதன் தமிழ் வெர்ஸனில் அமீர்கான் பாத்திரத்தில் நடித்தால் விஜய்க்கு நல்லது நடிக்காவிட்டால் படத்துக்கு நல்லது.

கலைஞர் (துரைமுருகனிடம்) : காங்கிரஸ்காரங்களை கேலி பண்ணுனியா? துரைமுருகன் : என்ன கேலி பண்ணுனியா?

கொகதிசொகதிஆயீஇ நெரமொரஇகமொர ஒகதிஒயயியீஇயீஇ ஒலிஸிஒலிஸி மொகதஒயபீபீயீஇ #listening harrisjayaraj’s Song Chorus

திடீரென உங்கள் வங்கிக் கணக்கில் ஆயிரத்துச் சொச்ச ரூபாய் உயர்ந்திருந்தால் குழம்பாதீர்கள்… ஜி ஜி வாக்காளர்ஜி டூஜி த்ரீஜி டெக்னாலஜி…

எனக்கு கண்ணாலம் ஆனப்புறம்தான் இந்தியா உலகக்கோப்பை ஜெயிக்கிறதைக் கண்ணால பார்க்க முடிஞ்சது. தெரிஞ்சிருந்தா, 2007லயே கண்ணாலம் கட்டிருப்பேன்.

உரம் விநியோகம் சம்பந்தமா திங்கக்கிழமை அழகிரிக்கு டெல்லில மீட்டிங்காம். பாவம் அந்தப்புள்ளை, ‘விநியோகத்துலயே’ வாழ்க்கை போயிரும்போல!

இன்றைக்கு தேதியில், கோல்டுபாலு உருவபொம்மை விற்கும் வியாபாரம் ஆரம்பித்தால், ஒரே பாட்டில் பெரிய பணக்காரனாகிவிடலாம்.

ஏதோ ஓரிடத்தைக் கடக்கும்போது, உணரும் ஏதோ ஒரு மணம், மனத்தை ஏதோ ஒரு நினைவுக்குள் அழைத்துச் சென்றுவிடுகிறது. மனம்! மணம்!

பெத்தான் செத்தான் பாடல் FMல் கேட்ட, புதுசினிமா குறித்த அப்டேட் இல்லாத என் அம்மா சொன்னது: ‘இது என்ன கேவலமா இருக்குது. சிம்பு பாட்டா?’

2016ல் ஸ்டாலினின் நாற்காலிக் கனவு பலிக்க லேட்டஸ்ட்டாக செத்துப்போன சாய்பாபா அருள்புரிவார் என்ற நம்பிக்கையுடன்…

‘அ’வின் மாபெரும் வெற்றிக்கு அடித்தளம் போட்டவை இரண்டு ‘ஆ’க்கள். ஆராசா. ஆற்காட்டார்.

தும்மலை அடக்கிக் கொண்டிருக்கிறேன். அம்மா பதவியேற்கும் சமயம் வரும்போது சொல்லுங்கள் 😉

இனி டிராபிக் அதிகமுள்ள இடங்களில், டூவிலரை அணைத்து, உருட்டிச் செல்ல வேண்டியதுதான். நேரத்தைவிட, பெட்ரோலின் மதிப்பு அதிகம்!

புகை பிடித்தல் உடலுக்குத் தீங்கானது, நீங்கள் சூப்பர் ஸ்டாராகவே இருப்பினும்!

இப்போது அடிக்கடி கேட்கும் பாடல்கள் எங்கேயும் காதல். அடுத்து ஹாரிஸின் இசையில் வேறு ஜெராக்ஸ் பாடல்கள் வந்தபின், இதை நிச்சயம் கேட்கமாட்டேன்.

திமுகவின் விக்கெட்டுகளை ஒரேடியாக அள்ளிவிட்டதாக அதிமுக பவுலர்கள் கொண்டாட அவசியமில்லை. திமுக பேட்ஸ்மேன்கள் அவுட் எல்லாமே ஹிட் விக்கெட்.

இன்று எதுவுமே ட்வீட் செய்யத்தோன்றவில்லை என்பதை இங்கே ட்வீட் செய்யக் கடமைப்பட்டிருக்கிறேன்.