சென்னை புத்தகக் கண்காட்சி 2013 : என் புத்தகங்கள்

சென்னை புத்தகக் கண்காட்சி இன்று ஜனவரி 11 முதல் ஆரம்பமாகவிருக்கிறது. இந்த வருடம் என்னுடைய புதிய புத்தகம் ஒன்று வெளியாகிறது. நான் எடிட் செய்த புத்தகம் ஒன்று புதிதாக வெளியாகிறது. தவிர மறுபதிப்பாகும் சில புத்தகங்கள் குறித்த அறிவிப்புகளையும் இங்கே தருகிறேன்.

அறிவிப்பு 1 : வெளிச்சத்தின் நிறம் கருப்பு

மர்மங்களின் சரித்திரம் குறித்த புத்தகம். பேய், பிசாசு, பில்லி, சூனியம், ஆவி, அமானுஷ்யம் என்ற குறுகிய வட்டத்துக்குள் இந்தப் புத்தகத்தை அடக்கிவிடக் கூடாது. அவற்றையும் தாண்டி, நெஞ்சை நடுங்க வைக்கும், தூக்கத்தை தொலைக்க வைக்கும் சாகாவரம் பெற்ற மர்மங்கள் குறித்து இந்தப் புத்தகம் பேசுகிறது. இது 2012ல் தமிழக அரசியல் வாரமிருமுறை இதழில் தொடராக வெளிவந்தது.
வெளியீடு : சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிஷர்ஸ்
விலை ரூ. 200.


அறிவிப்பு 2 : ரஜினி
ஆறிலிருந்து அறுபத்து மூன்று வரை ரஜினியின் முழு வாழ்க்கையைச் சொல்லும் புத்தகம் எதுவும் இதுவரை வெளிவரவில்லை. அந்தக் குறையைப் போக்கும் வகையில் பா. தீனதயாளன் எழுதியுள்ள, ‘ரஜினி’ புத்தகம் இந்தப் புத்தகக் கண்காட்சிக்கு வெளியாகிறது. கடுமையான உழைப்பைக் கொட்டி, நுணுக்கமான தகவல்கள் சேர்த்து, அசரடிக்கும் எழுத்து நடையில் இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார். இந்தப் புத்தகத்தை எடிட் செய்தவன் என்ற முறையில், சந்தையில் இனி எத்தனை ரஜினி புத்தகங்கள் வந்தாலும் இது தனித்துவமாக நிலைத்து நிற்கும் என்பதை உறுதியாக நம்புகிறேன். சிவாஜி, ஜெமினி கணேசன், சிலுக்கு, சாண்டோ சின்னப்பா தேவர் வரிசையில் தீனதயாளனில் மாஸ்டர் பீஸ் – ரஜினி. இந்தப் புத்தகக் கண்காட்சியில் நிச்சயம் இந்தப் புத்தகம் ஹிட் ஆகும். புத்தகத்தின் பதிப்பாளர் முடிவு செய்து அச்சிட்டுள்ள அட்டைப்படத்தில் மட்டும் எனக்கு உடன்பாடில்லை என்பதையும் இங்கே பதிவு செய்துகொள்கிறேன்.

அரிய புகைப்படங்களுடன் 400+ பக்கங்கள்.
விலை : ரூ. 275
வெளியீடு : மதி நிலையம்

அறிவிப்பு 3 : அகம் புறம் அந்தப்புரம்
மூன்று ஆண்டுகளுக்கு முன் வெளியான எனது மெகா வரலாற்று புத்தகம். இந்திய சமஸ்தானங்களின் – மகாராஜாக்களின் வரலாறு. கிழக்கு பதிப்பகம் வெளியீடு. விலை குறித்து கவலைப்படாமல் வாசகர்கள் அதிகம் நேசித்த புத்தகமும்கூட. சுமார் 1400 பக்கங்கள் கெட்டி அட்டைப் புத்தகமாக இதைக் கொண்டு வருவதில் பல நடைமுறைச் சிக்கல்கள் இருந்ததால், கிழக்கு பதிப்பகத்தினர் இதனை அதிக அளவில் பிரிண்ட் செய்யவில்லை. ஆனால், டிமாண்ட் இருந்துகொண்டே இருந்தது. இந்த முறை, அகம் புறம் அந்தப்புரத்தை ‘பேப்பர் பேக்’காக கொண்டு வருகிறார்கள் என்பதை வாசகர்களுக்கு அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
வெளியீடு : கிழக்கு பதிப்பகம்
விலை : ரூ. 995.

அறிவிப்பு 4 : சந்திரபாபு
2006 சென்னை புத்தகக் கண்காட்சியில் கிழக்கு பதிப்பகம் வெளியிட்டு, பெரும் வரபேற்பைப் பெற்ற எனது புத்தகம், கண்ணீரும் புன்னகையும். நகைச்சுவை நடிகர் சந்திரபாபுவின் வாழ்க்கை வரலாறு. இது எனது முதல் புத்தகமும்கூட. கடந்த இரண்டு ஆண்டுகளாக அச்சில் இல்லாமல் இருந்தது. பலரும் புத்தகம் மீண்டும் எப்போது வரும் என்று கேட்டார்கள். இந்தப் புத்தகக் கண்காட்சிக்கு, ‘சந்திரபாபு’ என்ற தலைப்பில், அரிய புகைப்படங்களுடன் புதிய பதிப்பாக இந்தப் புத்தகத்தைக் கொண்டு வருகிறேன்.
வெளியீடு : சிக்ஸ்த் சென்ஸ்
பக்கங்கள் : 200
விலை : ரூ. 125


அறிவிப்பு 5 : அண்டார்டிகா
‘ஸ்…’ என்ற தலைப்பில் அண்டார்டிகாவின் வரலாறு, சில ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கு வெளியீடாக வந்தது. தலைப்பு புரியவில்லையா அல்லது என்ன பிரச்னை என்று தெரியவில்லை, என் புத்தகங்களில் இது ‘குசேலன்’ ஆகிப்போனது. தற்போது, ‘அண்டார்டிகா – வரலாறு’ என்ற நேரடித் தலைப்பிலேயே புத்தகம் மறுபதிப்பு காண்கிறது. அண்டார்டிகா என்ற ஆச்சரியம் நிறைந்த கண்டம் குறித்த அனைத்துத் தகவல்களையும் உள்ளடக்கிய புத்தகம். உலகின் தென் துருவத்தை அடைவதற்காக மேற்கொள்ளப்பட்ட பயணங்கள் ஒவ்வொன்றும் உயிரை உலக்குபவை. படித்துப் பார்த்தால் உணருவீர்கள்.

வெளியீடு : மதி நிலையம்.

அறிவிப்பு 6 : சிலுக்கு
சிலுக்கு குறித்த உருப்படியான பயாகிராஃபி. சிலுக்கு லேபிளோடு தற்போது வெளிவந்த / வெளிவரப்போகும் அனைத்து பட இயக்குநர்களுக்கும் இந்தப் புத்தகம் நிச்சயம் பேருதவியாக இருந்திருக்கும். பா. தீனதயாளனின் எழுத்தில், நான் எடிட் செய்த, சிலுக்கு – ஒரு பெண்ணின் கதை, மேம்படுத்தப்பட்டு தற்போது மறுபதிப்பு காண்கிறது.
வெளியீடு : மதி நிலையம்.



அறிவிப்பு 7 : சுப்ரமணியபுரம்
சசிகுமார் இயக்கிய சுப்ரமணியபுரம் திரைப்படத்தின் திரைக்கதை, படம் உருவான விதம் – நூலாக வெளிவருகிறது. புத்தகத்தின் எழுத்து வடிவம் என்னுடையது. சில வருடங்களுக்கு முன்பு செய்து கொடுத்தேன். தற்போது புத்தகம் விகடன் பிரசுர வெளியீடாக வருவதாக நண்பர் சசிகுமார் தகவல் சொன்னார்.
மேற்சொன்ன புத்தகங்கள் தவிர, என்னுடைய பிற நூல்களான முகலாயர்கள், யூதர்கள், கிளியோபாட்ரா, செங்கிஸ்கான் போன்றவை கிழக்கு பதிப்பக ஸ்டாலில் கிடைக்கும். மற்றும் பல ஸ்டால்களிலும் கிடைக்கும்.
கடந்த ஏழு வருடங்களாக கிழக்கு பதிப்பகத்தின் ஆசிரியர் குழுவில் இருந்தபடி புத்தகக் கண்காட்சிக்கான வேலைகளில் ஈடுபட்டிருந்தேன். இந்த வருடம் எந்த நிறுவனமும் சாராத, சுதந்தர எழுத்தாளனாக புத்தகக் கண்காட்சியைச் சந்திக்கப் போகிறேன்.
ஜனவரி 19 முதல் 23 வரை சென்னை புத்தகக் கண்காட்சியில் இருப்பேன்.
அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள்.

கலியுகம்

கலியுகம்

கலியுகம் விரைவில் வெளியாகவிருக்கும் தமிழ்த் திரைப்படம். புதிய இயக்குநர், புதிய தயாரிப்பாளர், சில புதிய நடிகர்களுடன் நானும் புதிய வசனகர்த்தாவாக இதன் மூலம் அறிமுகம் ஆகிறேன்.

பதின்வயதில் ‘தவறான பாதைகள்’ மேல் ஒருவனுக்கு ஏற்படும் ஈர்ப்பை, அதனால் ஏற்படும் தடுமாற்றங்களை, இந்தச் சமூகம் எந்தவிதத்தில்லெல்லாம் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறது என்பதை ஆழமாகச் சொல்லும் திரைப்படம். மிக எளிமையான, நேர்த்தியான திரைக்கதை. கதையோடு ஒட்டாத உபரிக் காட்சிகளோ, மிகைப்படுத்தப்பட்ட மசாலாத்தனங்களோ இல்லாத, கதாபாத்திரங்களின் உணர்வுகளோடு நகரும் சினிமா இது. அதற்காக, ‘இதுவரை நீங்கள் பார்த்திராத படம்’, ‘முற்றிலும் மாறுபட்ட சினிமா’, ‘உதாரண உலக மூவி’ என்றெல்லாம் ஜிகினா சேர்க்க விரும்பவில்லை.

அறிமுக இயக்குநர் யுவராஜ். திரைக்கதையைச் செதுக்குவதில் எழுத்தாளர்களின் பங்கும் அவசியம் என்று நம்புபவர். உருப்படியான கதைகள் கொண்ட சினிமா எடுக்க வேண்டும் என்ற ஆசை கொண்டவர். இந்த சினிமாவில் பங்கெடுத்ததன் மூலம் எனக்குக் கிடைத்த நல்ல நண்பர். யுவராஜின் தந்தை வி. அழகப்பனை சினிமா ரசிகர்கள் மறந்திருக்க முடியாது. ‘பூக்களைப் பறிக்காதீர்கள்’, ‘பூ மழை பொழியுது’ உள்பட பல வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர். நடிகர் ராமராஜனை, ‘நம்ம ஊரு நல்ல ஊரு’ திரைப்படம் மூலமாக திரையில் அறிமுகப்படுத்தியவர்.

வசனம் எழுதுவதைத் தாண்டியும், படத்தின் பல்வேறு நிலைகளில், பல விஷயங்களைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அதுவும் அனுபவம் நிறைந்த முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்களுடன் பணியாற்றும் வாய்ப்பு அமைந்ததை முக்கியமான விஷயமாகக் கருதுகிறேன். கலியுகத்தின் கேமராமேனான S.R. கதிர், சில முக்கியமான ஆலோசனைகள் சொல்லி எனக்கு உதவினார். ஒளிப்பதிவாளராக தனது அனுபவங்களுடன், படத்தின் தரத்தை மேம்படுத்தியிருப்பதில் கதிருக்கு முக்கியப் பங்குண்டு.

எடிட்டிங் கிஷோர், நடனம் தினேஷ் மாஸ்டர் என படத்துக்கு பலம் சேர்ப்பவர்கள் பட்டியல் நீளும். இசை மூன்று பேர். தாஜ்நூர், சித்தார்த் விபின், அருண். தாமரை, மனுஷ்யபுத்திரன், மோகன்ராஜ் – பாடல்கள் எழுதியிருக்கிறார்கள். படத்தின் பாடல்கள் குறித்து தனியே எழுதுகிறேன்.

படத்தின் கதாநாயகனாக அறிமுகம் ஆகும் வினோத், ‘நந்தா’ சிறுவயது சூர்யாவாகவும், ‘நான் மகான் அல்ல’ – நான்கு இளைய வில்லன்களில் ஒருவராகவும் கவனம் ஈர்த்தவர். தவிர அஜய், சங்கர் என இரண்டு இளைஞர்கள் அறிமுகம் ஆகிறார்கள். கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார் நீத்தி. தவிர, ‘ஆடுகளம்’ நரேன், ‘ஆடுகளம்’ முருகதாஸ், ‘ஆரண்ய காண்டம்’ சோமு, மீனாள் என நடிப்பில் தனித்துவம் பெற்ற கலைஞர்களும் படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

A.V. விக்ரம் தயாரித்திருக்கும் கலியுகம் படத்தின் பாடல்கள் வரும் ஜூன் 20 (புதன்கிழமை), சென்னை பிரசாத் லேபில் காலை 10.30 மணி அளவில் வெளியிடப்படவிருக்கின்றன.

கலியுகம் மூலம் நான் சினிமாவுக்குள் இருந்து சினிமாவைக் கற்றுக் கொள்ள ஆரம்பித்திருக்கிறேன். இதற்கான வாய்ப்பை உருவாக்கித் தந்த நண்பர் வாசுதேவனுக்கு என் அன்பு கலந்த நன்றிகள்.

படம் குறித்த மேலும் தகவல்களுக்கு http://www.facebook.com/KaliyugamTheMovie

கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு கொஞ்சம் நான்…

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ‘கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு’ நிகழ்ச்சிக்காக ஸ்கிரிப்ட் எழுதிக் கொடுக்க ஆரம்பித்திருக்கிறேன். இன்று (31 மார்ச், சனி) ஒளிபரப்பாகவிருக்கும் அல்வாவின் வரலாறு, எனக்கு முதல் எபிசோட்.

நிகழ்ச்சி ஒவ்வொரு சனி இரவும் 8.30க்கு ஒளிபரப்பாகும். ஞாயிறு காலை 8.30க்கு மறு ஒளிபரப்பு.

தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.