சென்னை புத்தகக் கண்காட்சி – ஜனவரி 21, 2013

இன்று புத்தகக் கண்காட்சி காற்று வாங்கும் என்று எதிர்பார்த்து போன எனக்கு அதிர்ச்சி. மாலை 6 மணிக்குமேல் ஓரளவு நல்ல கூட்டம். கடைகளில் வியாபாரமும் ஓகே. நாளைக்கும் இதே அளவு கூட்டத்தை எதிர்பார்க்கலாம். புதன் – அன்று கடைசி தினம் என்பதால் சொல்லவே தேவை இல்லை.

நாளை மதியம் 2 மணிபோல சென்றுவிட்டால், புத்தகங்களைத் தேடி வாங்க வசதியாக இருக்கும் என்று திட்டமிட்டுள்ளேன்.

திருமகள் நிலையத்துக்கு பாலகுமாரன் வந்திருந்தார். ஏற்கெனவே வாங்க நினைத்திருந்த ‘என்னைச் சுற்றி சில நடனங்கள்’ புத்தகம் வாங்கி, அவரிடம் கையெழுத்தும் வாங்கிக் கொண்டேன். நான் பாலகுமாரனை வார இதழ்களில் வாசித்துள்ளேன். அதிகம் வாசித்ததில்லை. மேற்சொன்ன புத்தகம் அவரது கட்டுரைகளின் தொகுப்பு என்பதால் வாங்கினேன். ஒரு வகையில் இது அவரது ஆட்டோபயாகிராபி என்றுகூட சொல்லலாம்.

நண்பர் ஆர். முத்துக்குமார் வித்தியாசமான ஒரு புத்தகத்தை வாங்கியிருந்தார். என்ன பதிப்பகம், ஆசிரியர் பெயர் எல்லாம் நினைவில் நிற்கவில்லை. ஆனால், புத்தகத்தின் பெயர் என்றைக்கும் மறக்காது – ‘பெரிய புடுங்கி’. ஒரு பத்திரிகையாளரின் அனுபவ நூல் இது. (Karunakaran Perumal கவனத்துக்கு.)

பத்ரியைச் சந்தித்தேன். நேற்றைய கிழக்கு ஹிட் லிஸ்ட்டில் வாத்யார் சுஜாதாவும் இணைந்திருந்தார். ஸ்ரீரங்கத்து தேவதைகள் ஓஹோ. சாருவின் ஜீரோ டிகிரியும் டாப் டென்னில் வரக்கூடும் என்று சொன்னார்.

பெரிகாம் (ஸ்டால் எண் 585, 586) என்ற கடையில் மூன்று நூல்கள் கவனம் ஈர்த்தன. வாருங்கள் வீடு கட்டலாம், கம்பி வளைப்போர் கையேடு, கொத்தனார் கையேடு. மூன்றையும் எழுதிய ஆசிரியர் டாக்டர் என்.வி. அருணாசலம். யாருக்காவது பயன்படும் என்பதால் இங்கே இந்தத் தகவல்.

புக் வேர்ல்ட் லைப்ரரி என்ற ஓம் சக்தி புக் டிரேடர்ஸ் – இந்த முறை இரண்டு வரிசைகள் ஸ்டால்கள் அமைத்துள்ளார்கள். எல்லாம் பிற நாடுகளில் இருந்து கண்டெய்னர்களில் மொத்தமாக வரும் புத்தகங்கள். இங்கே உள்ள புத்தகக் கடைகளில் தேடினாலும் கிடைக்காதவை. பெரும்பாலும் ஹார்ட் பவுண்ட், காஃபி டேபிள் வகையறா புத்தங்கள். பல நல்ல, சுவாரசியமான, அரிய புத்தகங்கள் உள்ளன. ஸ்டால் எண் : 108, 436-437

திருத்தம் : தினத்தந்தி வரலாற்றுச் சுவடுகளுக்கு கழிவு இல்லை என்று நேற்று எழுதியிருந்தேன். மன்னிக்கவும். 10 சதவிகிதம் கொடுக்கிறார்கள்.

கேண்டீன் குறிப்பு : எதுவுமில்லை.

சென்னை புத்தகக் கண்காட்சி 2013 : என் புத்தகங்கள்

சென்னை புத்தகக் கண்காட்சி இன்று ஜனவரி 11 முதல் ஆரம்பமாகவிருக்கிறது. இந்த வருடம் என்னுடைய புதிய புத்தகம் ஒன்று வெளியாகிறது. நான் எடிட் செய்த புத்தகம் ஒன்று புதிதாக வெளியாகிறது. தவிர மறுபதிப்பாகும் சில புத்தகங்கள் குறித்த அறிவிப்புகளையும் இங்கே தருகிறேன்.

அறிவிப்பு 1 : வெளிச்சத்தின் நிறம் கருப்பு

மர்மங்களின் சரித்திரம் குறித்த புத்தகம். பேய், பிசாசு, பில்லி, சூனியம், ஆவி, அமானுஷ்யம் என்ற குறுகிய வட்டத்துக்குள் இந்தப் புத்தகத்தை அடக்கிவிடக் கூடாது. அவற்றையும் தாண்டி, நெஞ்சை நடுங்க வைக்கும், தூக்கத்தை தொலைக்க வைக்கும் சாகாவரம் பெற்ற மர்மங்கள் குறித்து இந்தப் புத்தகம் பேசுகிறது. இது 2012ல் தமிழக அரசியல் வாரமிருமுறை இதழில் தொடராக வெளிவந்தது.
வெளியீடு : சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிஷர்ஸ்
விலை ரூ. 200.


அறிவிப்பு 2 : ரஜினி
ஆறிலிருந்து அறுபத்து மூன்று வரை ரஜினியின் முழு வாழ்க்கையைச் சொல்லும் புத்தகம் எதுவும் இதுவரை வெளிவரவில்லை. அந்தக் குறையைப் போக்கும் வகையில் பா. தீனதயாளன் எழுதியுள்ள, ‘ரஜினி’ புத்தகம் இந்தப் புத்தகக் கண்காட்சிக்கு வெளியாகிறது. கடுமையான உழைப்பைக் கொட்டி, நுணுக்கமான தகவல்கள் சேர்த்து, அசரடிக்கும் எழுத்து நடையில் இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார். இந்தப் புத்தகத்தை எடிட் செய்தவன் என்ற முறையில், சந்தையில் இனி எத்தனை ரஜினி புத்தகங்கள் வந்தாலும் இது தனித்துவமாக நிலைத்து நிற்கும் என்பதை உறுதியாக நம்புகிறேன். சிவாஜி, ஜெமினி கணேசன், சிலுக்கு, சாண்டோ சின்னப்பா தேவர் வரிசையில் தீனதயாளனில் மாஸ்டர் பீஸ் – ரஜினி. இந்தப் புத்தகக் கண்காட்சியில் நிச்சயம் இந்தப் புத்தகம் ஹிட் ஆகும். புத்தகத்தின் பதிப்பாளர் முடிவு செய்து அச்சிட்டுள்ள அட்டைப்படத்தில் மட்டும் எனக்கு உடன்பாடில்லை என்பதையும் இங்கே பதிவு செய்துகொள்கிறேன்.

அரிய புகைப்படங்களுடன் 400+ பக்கங்கள்.
விலை : ரூ. 275
வெளியீடு : மதி நிலையம்

அறிவிப்பு 3 : அகம் புறம் அந்தப்புரம்
மூன்று ஆண்டுகளுக்கு முன் வெளியான எனது மெகா வரலாற்று புத்தகம். இந்திய சமஸ்தானங்களின் – மகாராஜாக்களின் வரலாறு. கிழக்கு பதிப்பகம் வெளியீடு. விலை குறித்து கவலைப்படாமல் வாசகர்கள் அதிகம் நேசித்த புத்தகமும்கூட. சுமார் 1400 பக்கங்கள் கெட்டி அட்டைப் புத்தகமாக இதைக் கொண்டு வருவதில் பல நடைமுறைச் சிக்கல்கள் இருந்ததால், கிழக்கு பதிப்பகத்தினர் இதனை அதிக அளவில் பிரிண்ட் செய்யவில்லை. ஆனால், டிமாண்ட் இருந்துகொண்டே இருந்தது. இந்த முறை, அகம் புறம் அந்தப்புரத்தை ‘பேப்பர் பேக்’காக கொண்டு வருகிறார்கள் என்பதை வாசகர்களுக்கு அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
வெளியீடு : கிழக்கு பதிப்பகம்
விலை : ரூ. 995.

அறிவிப்பு 4 : சந்திரபாபு
2006 சென்னை புத்தகக் கண்காட்சியில் கிழக்கு பதிப்பகம் வெளியிட்டு, பெரும் வரபேற்பைப் பெற்ற எனது புத்தகம், கண்ணீரும் புன்னகையும். நகைச்சுவை நடிகர் சந்திரபாபுவின் வாழ்க்கை வரலாறு. இது எனது முதல் புத்தகமும்கூட. கடந்த இரண்டு ஆண்டுகளாக அச்சில் இல்லாமல் இருந்தது. பலரும் புத்தகம் மீண்டும் எப்போது வரும் என்று கேட்டார்கள். இந்தப் புத்தகக் கண்காட்சிக்கு, ‘சந்திரபாபு’ என்ற தலைப்பில், அரிய புகைப்படங்களுடன் புதிய பதிப்பாக இந்தப் புத்தகத்தைக் கொண்டு வருகிறேன்.
வெளியீடு : சிக்ஸ்த் சென்ஸ்
பக்கங்கள் : 200
விலை : ரூ. 125


அறிவிப்பு 5 : அண்டார்டிகா
‘ஸ்…’ என்ற தலைப்பில் அண்டார்டிகாவின் வரலாறு, சில ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கு வெளியீடாக வந்தது. தலைப்பு புரியவில்லையா அல்லது என்ன பிரச்னை என்று தெரியவில்லை, என் புத்தகங்களில் இது ‘குசேலன்’ ஆகிப்போனது. தற்போது, ‘அண்டார்டிகா – வரலாறு’ என்ற நேரடித் தலைப்பிலேயே புத்தகம் மறுபதிப்பு காண்கிறது. அண்டார்டிகா என்ற ஆச்சரியம் நிறைந்த கண்டம் குறித்த அனைத்துத் தகவல்களையும் உள்ளடக்கிய புத்தகம். உலகின் தென் துருவத்தை அடைவதற்காக மேற்கொள்ளப்பட்ட பயணங்கள் ஒவ்வொன்றும் உயிரை உலக்குபவை. படித்துப் பார்த்தால் உணருவீர்கள்.

வெளியீடு : மதி நிலையம்.

அறிவிப்பு 6 : சிலுக்கு
சிலுக்கு குறித்த உருப்படியான பயாகிராஃபி. சிலுக்கு லேபிளோடு தற்போது வெளிவந்த / வெளிவரப்போகும் அனைத்து பட இயக்குநர்களுக்கும் இந்தப் புத்தகம் நிச்சயம் பேருதவியாக இருந்திருக்கும். பா. தீனதயாளனின் எழுத்தில், நான் எடிட் செய்த, சிலுக்கு – ஒரு பெண்ணின் கதை, மேம்படுத்தப்பட்டு தற்போது மறுபதிப்பு காண்கிறது.
வெளியீடு : மதி நிலையம்.



அறிவிப்பு 7 : சுப்ரமணியபுரம்
சசிகுமார் இயக்கிய சுப்ரமணியபுரம் திரைப்படத்தின் திரைக்கதை, படம் உருவான விதம் – நூலாக வெளிவருகிறது. புத்தகத்தின் எழுத்து வடிவம் என்னுடையது. சில வருடங்களுக்கு முன்பு செய்து கொடுத்தேன். தற்போது புத்தகம் விகடன் பிரசுர வெளியீடாக வருவதாக நண்பர் சசிகுமார் தகவல் சொன்னார்.
மேற்சொன்ன புத்தகங்கள் தவிர, என்னுடைய பிற நூல்களான முகலாயர்கள், யூதர்கள், கிளியோபாட்ரா, செங்கிஸ்கான் போன்றவை கிழக்கு பதிப்பக ஸ்டாலில் கிடைக்கும். மற்றும் பல ஸ்டால்களிலும் கிடைக்கும்.
கடந்த ஏழு வருடங்களாக கிழக்கு பதிப்பகத்தின் ஆசிரியர் குழுவில் இருந்தபடி புத்தகக் கண்காட்சிக்கான வேலைகளில் ஈடுபட்டிருந்தேன். இந்த வருடம் எந்த நிறுவனமும் சாராத, சுதந்தர எழுத்தாளனாக புத்தகக் கண்காட்சியைச் சந்திக்கப் போகிறேன்.
ஜனவரி 19 முதல் 23 வரை சென்னை புத்தகக் கண்காட்சியில் இருப்பேன்.
அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள்.