கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு 100

அல்வா.

இந்த ஒரு  வார்த்தையை வைத்துக் கொண்டு உங்கள் மனத்தில் தோன்றும் அர்த்தமுள்ள கேள்விகளைக் கேளுங்கள்.

உதாரணத்துக்கு…

அல்வாவைக் கண்டுபிடித்தது யாராக இருக்கும்? அல்வாவின் ஆதி வடிவம் எப்படி இருந்திருக்கும்? அது வேறு நாட்டின் இனிப்பு பதார்த்தம் என்றால் இந்தியாவுக்குள், தமிழ்நாட்டுக்குள் எப்படி புகுந்திருக்கும்? இல்லை, இங்கு நம்மவர்களின் பாரம்பரிய பதார்த்தம் என்றால், இங்கிருந்து இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கும், பிற கண்டங்களுக்கும் எப்படி பரவியிருக்கும்? உலகில் இன்று எத்தனை விதமான அல்வாக்கள் உள்ளன?

இன்னும் பல கேள்விகள் உதிக்கலாம்.

இந்தக் கேள்விகளுக்கான விடையைத் தேடுவதே, தேடித் தொகுப்பதே, தொகுத்ததைக் காட்சிப்படுத்துவதே ‘கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு’ நிகழ்ச்சியின் மையக்கரு. அல்வாவையே எடுத்துக் கொள்வோம். அல்வா என்றதும் நமக்கு திருநெல்வேலியின் நினைவும் நெய்யாக ஒட்டிக் கொண்டு வரும். ஆக, திருநெல்வேலிக்கு அல்வா எப்படி நுழைந்தது, எவ்விதம் பெயர் பெற்றது, திருநெல்வேலியில் அல்வா எப்படி தயாராகிறது என்பதையும் சேர்த்து காட்சிப்படுத்துவது கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு நிகழ்ச்சியின் சிறப்பு.

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சி இது. ஆரம்பமான முதல் எபிசோடிலிருந்தே பெருத்த வரவேற்பைப் பெற்றது. நிகழ்ச்சியின் ஆரம்ப எபிசோடுகளின் ‘ஆய்வு – எழுத்து’ பணியை அன்பிற்குரிய பா. ராகவன் மேற்கொண்டார். 31-வது எபிசோடிலிருந்து நிகழ்ச்சிக்கான ‘ஆய்வு – எழுத்து’ப் பணியை நான் மேற்கொண்டு வருகிறேன். இதோ நாளைய எபிசோட் (16 மார்ச் 2014, ஞாயிறு) கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு நிகழ்ச்சியின் 100வது எபிசோட். இந்த சிறப்பு எபிசோடில் பிஸ்கட்டின் வரலாறு பேசப்படுகிறது.

புதிய தலைமுறை டீவியில் வாரம் ஒருமுறை ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சி, கடந்த சில மாதங்களாக புதுயுகம் டீவியில் வாரம் இருமுறை ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. அல்வா, பிஸ்கட், கத்தரிக்காய் என ஏதாவது ஓர் உணவுப்பொருளை எடுத்துக் கொண்டு அதன் வரலாற்றை, உணவுக் குறிப்புகளை கொடுப்பது ஒருவிதம். அல்லது, கும்பகோணம், தூத்துக்குடி, கோவா என்று ஊர்களுக்குச் சென்று அந்தந்த ஊரின் வரலாற்றைப் பேசியபடி, அந்தந்த மண்ணுக்கான பாரம்பரிய உணவுகளை, சிறப்பு சுவையைப் பேசுவது இன்னொரு விதம். இந்த இரண்டு விதங்களிலும் கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது.

எபிசோடுகள் வளர வளர, இந்த நிகழ்ச்சிக்கான எழுத்துப்பணி மிகவும் சவாலானது. காரணம் ‘கூறியது கூறல்’ ஆகிவிடக்கூடாதல்லவா. அதே சமயம், நாம் கருவாக எடுத்துக் கொண்டிருக்கும் உணவு குறித்து வரலாறு பேசலாம். ஆனால், அதைக் கொண்டு சமையல் செய்ய அதிகம் வாய்ப்பிருக்காது. உதாரணம், நாவல் பழம் குறித்த வரலாறு பேசலாம். ஆனால், அதைக் கொண்டு பதார்த்தங்கள் அதிக அளவில் செய்ய இயலாது. ஆரஞ்சு என்று எடுத்துக் கொண்டால், அதன் வரலாறு பேசலாம், அதைக் கொண்டு பதார்த்தங்களும் செய்யலாம். ஆனால், நினைத்த நேரத்தில் ஆரஞ்சைப் படம் பிடிக்க முடியாது. அதற்கான சீஸன் வரும்வரை காத்திருக்க வேண்டும் – அதற்கான நல்ல தோட்டம் கிடைக்க வேண்டும். தவிர, படப்பிடிப்பு குழுவினர் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு ஊருக்கு ஓட வேண்டும். நேர நெருக்கடி. ஆக, அதற்கு ஏற்றாற்போலும் ‘பாடுபொருளைத்’ தேர்ந்தெடுக்க வேண்டும்.  இப்படிப் பல சவால்கள்.

ஒவ்வொரு எபிசோடுக்கும் புதுப்புது விஷயங்களை யோசிப்பது, வரலாற்றைத் தேடிப் பிடிப்பது, அந்தந்த பாடுபொருளுக்கேற்ப விதவிதமான சுவாரசியமான வரலாற்றைச் சேர்ப்பது என மிகுந்த மனமகிழ்வுடன் இந்த ‘ஆய்வு – எழுத்துப்’ பணியை செய்து வருகிறேன். ‘அடை’ என்பதற்கான வரலாறு என்னவாக இருக்க முடியும்? டபரா செட் எப்படி உருவாகியிருக்கும்? சட்னியின் வரலாறு என்ன? அம்மிக்கு வரலாறு உண்டா? இந்திய சமையலறைகளுக்கு மிக்ஸி வந்த வரலாறு என்ன? இப்படிப் பலப்பல சுவாரசியமான கேள்விகளுக்கான விடைகளைத் தேடுவது என்பது… எனக்குப் பிடித்திருக்கிறது.

இதோ நூறைத் தொட்டுவிட்டோம் என்று எண்ணும்போது திருப்தி. மகிழ்ச்சி. மனநிறைவு. உணவும் வரலாறும் பேசும் தமிழின் முதல் நிகழ்ச்சி இதுவே. இனி இதுபோன்ற நிகழ்ச்சிகளை உருவாக்கலாமே தவிர, இதைவிடச் சிறந்த நிகழ்ச்சியை உருவாக்குவது என்பது ஆகப்பெரிய சவால்.

கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு குழுவினருக்கு (நான் அறிந்த/அறியாத ஒவ்வொருவருக்கும் என்) வாழ்த்துகள். நிகழ்ச்சியின் அகமாகவும் புறமாகவும் இயங்கிக் கொண்டிருக்கும் ஹரிக்கு என் வாழ்த்துகள். புதிய தலைமுறை, புதுயுகம் சேனல்களுக்கு என் நன்றி.

இன்னும் பேசப்பட வேண்டிய சுவையான வரலாறு ஏராளம் இருக்கிறது. பணி தொடர்கிறது.

அரைவேக்காடு!

பொதிகையில் விநாயகர் சதுர்த்தி சிறப்பு நிகழ்ச்சிகள்… 

அதிலும் சமையல் குறிப்பு நிகழ்ச்சி Live-ஆக ஒளிபரப்பு…

குறிப்புகளை வழங்கிக் கொண்டிருந்த பெரியம்மா கேமராவுக்கு பழக்கமில்லாதவர் போல. கேமராவின் திசையைத் தவிர மற்ற திசைகளில் எல்லாம் பார்த்து பேசிக் கொண்டிருந்தார். அவ்வப்போது ‘நான் பேசுறது, செய்யறது சரியா?’ என்பது போல எதிரிலிருப்பவர்களிடம் பார்வையால் பேசிக் கொண்டார்.

கைகள் மட்டுமல்ல, பேசப்பேச அவருக்கு குரலும் நடுங்கியது. ஆனால் என்ன, அவர் சொன்ன சமையல் குறிப்புகள் அனைத்துமே புதுமையானவை. விநாயகருக்கு உகந்ததாகக் கருதப்படும் விளாம்பழத்தைக் கொண்டு ஏகப்பட்ட விஷயங்கள் சொன்னார். விளாம்பழ பஞ்சாமிர்தம், விளாம்பழ ரசம், விலாம்பழ துவையல்… இப்படி. பெரியம்மாதான் தடுமாறுகிறார் என்றால், கேமராமேன் அதற்குமேல். பல பழங்கள் கலந்த கூழ்போன்ற பஞ்சாமிர்தத்தில் விளாம்பழம் தனியாகத் தெரியுமளவுக்கு டைட்-குளோஸப்பில் காட்டி படுத்தினார்.

ஒரு கட்டத்தில் பெரியம்மாவுக்கு தொண்டை வற்றி விட்டது. பேச்சு வரவில்லை. அடப்போங்கப்பா என அருகிலிருந்த பாட்டிலை எடுத்து மடக் மடக் என தண்ணீர் குடிக்க ஆரம்பித்துவிட்டார். அந்தச் சமயத்தில் கேமராமேன் தட்டுத்தடுமாறி அருகிலிருந்த பிள்ளையார் சிலையின் தொப்பையை நோக்கி கேமராவைத் திருப்பிக் கொண்டார்.

சில நொடிகள் கழித்து பெரியம்மா தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு, ‘கம்பு’ குறித்த சமையல் குறிப்புகளைப் பேச ஆரம்பித்தார். ஆரம்பத்திலேயே தடுமாற்றம். பேச வந்தது மறந்துவிட்டது. ‘தடங்கலுக்கு வருந்துகிறோம்’ என்று வரும் என்று ஆசையாகக் காத்திருந்தேன். விளம்பரங்களை ஒளிபரப்ப ஆரம்பித்தார்கள்.

நாலைந்து விளம்பரங்களுக்குப் பிறகு மீண்டு வந்த பெரியம்மா, கம்பு குறித்த சமையல் குறிப்புகளை வேக வேகமாக ஒப்பிக்க ஆரம்பித்தார். (இருந்தாலும் அவையெல்லாமே மிக அருமையான குறிப்புகள்.) அதன்பின் பிள்ளையாருக்குப் பிரசாதமாக வேறு என்னவெல்லாம் படைக்கலாம் என்று சொல்ல ஆரம்பித்தார்.

ஏகப்பட்ட பதார்த்தங்களை தன் வீட்டிலேயே தயாரித்து, வண்ண வண்ண டப்பர்வேர்களில் நிரப்பிக் கொண்டு வந்திருந்தார். Live-விலும் ஏதோ ஒன்று செய்து காட்ட வேண்டுமல்லவா. அதனால் கடைசியாக, தேங்காய்ப்பூ கலந்த அரிசிமாவுக் கொழுக்கட்டை செய்ய ஆரம்பித்தார். மாவை உருண்டையாகப் பிடித்து, இட்லித் தட்டில் வைத்து குக்கருக்குள் வேக வைத்தார்.

பெரியம்மா பேசுவதற்கு வேறு ஒன்றும் இல்லை. நிகழ்ச்சியை முடிக்க வேண்டியதுதான். ஆனால் ஏதாவது பேசித்தான் ஆகவேண்டும். ‘கொழுக்கட்ட வேக பத்து நிமிஷம் ஆகும்’ என்றார் கொஞ்சம் டென்ஷனாக. ‘ஏதாவது பேசிக் கொண்டிருங்கள்’ என்று எதிர்முனையில் இருந்து சொல்லியிருப்பார்கள் போல.

‘விநாயகரை வழிபட இப்படியெல்லாம் நிறைய செஞ்சு வழிபடணும்னு இல்ல. ரெண்டு பழம், வெல்லம் வைச்சுகூட வழிபடலாம்’ என்றார் அப்பாவியாக. மேற்கொண்டு ஏதேதோ சொல்ல முயற்சி செய்தார்.

‘வணக்கம்’ சொல்லச் சொல்லிவிட்டார்கள் போல. சொல்லி விடைபெற்றார்.

அச்சமயத்தில் கொழுக்கட்டை, அரைவேக்காடாகத்தான் இருந்திருக்கும் – பொதிகை போல.

கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு கொஞ்சம் நான்…

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ‘கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு’ நிகழ்ச்சிக்காக ஸ்கிரிப்ட் எழுதிக் கொடுக்க ஆரம்பித்திருக்கிறேன். இன்று (31 மார்ச், சனி) ஒளிபரப்பாகவிருக்கும் அல்வாவின் வரலாறு, எனக்கு முதல் எபிசோட்.

நிகழ்ச்சி ஒவ்வொரு சனி இரவும் 8.30க்கு ஒளிபரப்பாகும். ஞாயிறு காலை 8.30க்கு மறு ஒளிபரப்பு.

தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.