எம்.ஆர். ராதாவின் ராவணன்

காமவல்லி (சூர்ப்பநகை) : யாரையா நீர்?
ராமன் : நான்.. நான்.. பெரிய வீரன்
கா.வ.: (சிரித்துக்கொண்டே) அதுதான் தெரியுதே நீ வில் பிடித்திருக்கிற லட்சணத்திலிருந்தே! (ராமன் வில்லைச் சரியாகப் பிடித்துக் கொள்கிறான்.)
ராம : நான் பெரிய அரசகுமாரன். எனக்கு இன்னும் (கழுத்தைக் காட்டி) அது… ஆகலே, அதுக்காக…
கா.வ.: ஏய் மரியாதையாகப் பேசு, நான் இந்த மண்டலத்து அரசப் பிரதிநிதி காமவல்லி. இப்பவாவது இந்த இடத்தை விட்டு அகன்றுவிடு. உம்…
ராம : நான் யார் தெரியுமா? ராமன்! தசரத மைந்தன். அயோத்திக்கே அரசனாக வேண்டியவன். நமது விவாகம் முடிந்ததும் பட்டம் சூட்ட வேண்டியதுதான் பாக்கி.
கா.வ.: (திகைத்து) ராமனா? நீ மணமானவன். மரியாதையாகப் போய்விடு. உனது ஆரிய அடாத வழக்கம் தமிழகத்தில் செல்லாது.
ராம : ஆரியர் வழக்கம்தான் ஆசைப்பட்டால் ஐந்து தாரங்களை மணக்கலாமே. அரசீ! அடியேனை உன் அன்பனாக ஏற்றுக்கொள்; அடிமையாக வாழ்கிறேன். கண்ணே உன்னைக் கண்டதுமே காதல்…
கா.வ.: காதல்! காமத்துக்கும் காதலுக்கும் வேறுபாடு தெரியாத கயவனே, என் நாட்டில் புகுந்ததுமல்லாது தகாத வார்த்தைகள் வேறு பேசுகிறாயா?
ராம : பொறுமைக்கும் அளவுண்டு… பொன்மானே!
கா.வ.: நீ எருமை
ராம : நான் ஆண்.. ஆரியன்!
கா.வ.: அசல் கோழை!
ராம : நீ தனிமையில் இருக்கிறாய்.
கா.வ.: நான் தமிழச்சி! தற்காக்கும் திறன் எனக்குண்டு.
ராம : உன்னை அடையாது விடமாட்டேன். (தாவிப் பிடிக்கிறான்)
கா.வ.: உதை வாங்காது போகமாட்டாய் போலிருக்கிறது. (எட்டி உதைக்கிறாள். ராமன் கத்துகிறான்.)
ராம : தம்பி லட்சுமணா ஓடிவாயேன். அந்த அசுரச் சிறுக்கி என்னை அடிச்சுட்டுப் போராளே, அவளை உருக்குலைத்து விடேன்; அவள் செருக்கு குலையட்டுமே; தம்பி.. தம்பி… (லட்சுமணன் ஓடிவந்து காமவல்லியைத் தடுக்கிறான்.)
லட்சுமணன் : ஏய் தடிச்சிறுக்கி! எனது தமையனைத் தள்ளிவிட்டா போகிறாய், நில்லடி…
கா.வ.: மானத்தை விட்டவனே, மரியாதையாகப் பேசு.
(இருவருக்கும் ஏற்பட்ட வாள் சண்டையில் லட்சுமணன் அவளது மூக்கையும் காதையும் வெட்டிவிடுகிறான்.)
கா.வ.: அய்யோ, அண்ணா! போய்விட்டதே தமிழன் பெருமை! ஆரியன் என்னை அவமானப்படுத்தி விட்டானே!
(காமவல்லி அங்கிருந்து அலறி ஓடுகிறாள். தான் சந்திக்கும் கரன், தூஷ்ணனிடம் ராமனும் லட்சுமணும் தனக்கு செய்த அவமானங்களைச் சொல்லிக் கதறுகிறாள்.
கா.வ.: என் அண்ணன் தென்னிலங்கை இறைவனிடம் இதைக் கூறுங்கள், பழிக்குப் பழி வாங்காது விடாதீர்கள். அய்யோ அண்ணா! (சாகிறாள்.)

**
மானைப் பிடிக்கச் சென்றிருக்கிறான் ராமன். சீதைக்குக் காவலிருக்கிறான் லட்சுமணன். ஒருகட்டத்தில் இருவருக்கும் வாக்குவாதம் முற்ற, லட்சுமணன் அங்கிருந்து வெளியேறுகிறான். அப்போது அங்கு வரும் ராவணனை சீதை வரவேற்கிறாள்.)

ராவணன் : பாழ் வெளியிலே பளிங்கு மண்டபம்.
சீதை : ஆமாம்… எங்கள் பர்ணகசாலை.
ராவ : இல்லை உன் உருவம். பேரழகி, நீ யாரோ?
சீதை : ஆரிய குலம்… ஜானகி என்பது நாமம்.
ராவ : ஜானகி… ராமனின் மனைவி.
சீதை : ஆமாம்.
ராவ : அழகின் அவதாரம்; உன் அங்கங்கள் அவற்றின் அமைப்புக்கே எடுத்துக்காட்டு!
சீதை : பெரியவரே! உங்கள் பிரியமொழிகள் என் செவியில் இன்ப கீதமாய் ஒலிக்கின்றன. உங்கள் மொழிதான் எவ்வளவு இனிமையானது!
ராவ : வேதனையோடு வந்திருக்கிறேன்… வேல்விழி…
சீதை : அதிதிக்கு உபசாரம் செய்ய அடியாள் காத்திருக்கிறேன் ஸ்வாமி; அன்போது உரையாடும் தாங்கள் யாரோ?
ராவ : நான் இலங்கையின் வேந்தன்… ராவணன்.
சீதை : (திடுக்கிட்டு) ராவணன்! ராட்சதன்!
ராவ : என்று மூடர்கள் சொல்லுவார்கள், நான் மனிதன்… மறத்தமிழர் மன்னன்.
சீதை : (நடுங்கிக்கொண்டே) காமவல்லியின் அண்ணன்.
ராவ : ஆமாம்.
சீதை : அய்யோ, மோசம் வந்துவிட்டதே, நாதா! லட்சுமணா! மாபெரும் பழியைத் தேடிக் கொண்டேனே!
ராவ : பிதற்றாதே பெண்ணே! உன்னைச் சேர்ந்தவர்களைப் போன்ற நிர்மூடன் அல்ல நானும் உன் அங்கங்களைச் சிதைக்க.
சீதை : ஏன் இங்கு வந்தாய் நான் தனிமையாக இருக்கும்போது?
ராவ : தகாத வேலை செய்த உன் கணவனுக்கு புத்தி கற்பிக்க.
சீதை : அதற்கு அவரிடம் போ.
ராவ : இல்லை, அவன் வரவேண்டும் என்னிடம்.
சீதை : அதற்காக.
ராவ : உன்னைச் சிறை செய்யப் போகிறேன்.
சீதை : அது அநீதி! (கத்துகிறாள்)
ராவ : இல்லை; அரச மரபு.
சீதை : நான் ஒரு பாவமும் அறியாதவள்.
ராவ : நீ பாவிகளின் மனைவி. என் தங்கையின் அங்கங்கள் சிதைக்கப்படுவது கண்டும்; நீ ஒரு பெண்ணாக இருந்தும் வாளாவிருந்தாய். அந்த ஒரு குற்றத்துக்காகவே உன்னைச் சித்திரவதைகூடச் செய்யலாம். ஆனால், நான் தண்டிக்க விரும்புவது உன்னை அல்ல; உன் கணவனை.
சீதை : அதற்கு?
ராவ : நீ ஒரு கருவி. வா, வந்துவிடு என்னோடு. (நெருங்கிப் பிடிக்கிறான். சீதை அலறுகிறாள்.)
சீதை : வேண்டாம்! என்னை விட்டுவிடு.
ராவ : விட்டுவிடலாம். அதனால் அந்த மட்ட ரகங்களுக்குப் புத்தி வந்துவிடாது. உம் வந்துவிடு.
(அவளது கூந்தலை ஒரு கையிலும் துடைகளை மற்றொரு கையாலும் பிடித்துத் தூக்கித் தன் மடியிலே வைத்துக்கொண்டு தேரிலே ஏறிப்போகிறான்.)

***

தன் படத்தில் ராவணனை நல்லவனாகக் காட்டுகிறார் மணிரத்னம் என்ற பேச்சு பரவலாக இப்போது எழுந்திருக்கிறது. இதற்கு முன்பே ஆர். எஸ். மனோகர் தனது லங்கேஸ்வரன் நாடகத்தில் அசல் ராவணனைக் காட்டியிருக்கிறார். இவர்கள் எல்லோருக்கும் முன்னோடியாக இருந்தவர்கள் பெரியார், எம்.ஆர். ராதா. எழுத்தின் மூலம் பெரியார், தமிழர்களுக்கான ஒரிஜினல் ராமாயணத்தை உலகத்துக்குக் கொடுத்திருக்கிறார். எம்.ஆர். ராதா, தனது ராமாயணம் நாடகம் மூலம் செய்த பகுத்தறிவுப் புரட்சி மிரட்டலானது. எம்.ஆர்.ராதா, ராமன் கதாபாத்திரத்தில் நடித்த ராமாயணம் நாடகத்தில் இடம்பெற்ற இரண்டு காட்சிகளுக்கான வசனங்களைத்தான் மேலே கொடுத்துள்ளேன்.

நாடகத்தில் ராமனாக எம்.ஆர். ராதா (குனிந்திருப்பவர்)

நாடகத்தின் முழு வசனமும் என்னிடம் உள்ளது. எம்.ஆர். ராதாயணம் புத்தகத்துக்காக தகவல் திரட்டும்போது பெரியார் திடல் நூலகத்தில் எனக்கு இந்த நாடகம் கிடைத்தது. நாடகத்தில் நடித்த, எம்.ஆர். ராதாவின் நாடகக்குழுவில் இருந்த சிலரோடு பேசியிருக்கிறேன். அவர்களது அனுபவங்களையும் என் புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறேன். ராதா நடித்து அந்த நாடகத்தைப் பார்க்கும் பாக்கியம்தான் எனக்குக் கிடைக்காமல் போய்விட்டது. ராதாவின் நாடகம் You Tubeல் கிடைத்தால் எப்படி இருக்கும்!

***

நாடகம் குறித்து அண்ணாதுரை

நடிகவேள் இராதா நடத்தும் ‘இராமாயணம்’ நாட்டிலே இன்று ஏற்பட்டிருக்கும் இன எழுச்சிக்கு ஓர் எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது. வால்மீகியின் ராமாயணத்தை மெருகளிப்பதாகக் கூறிக்கொண்டு, கம்பன் தமிழகத்தாருக்கு கரைபடிந்த காவியத்தை தந்து சென்றான். அதன் பயனாக இராமாயணம் தேவகதை ஆக்கப்பட்டது. இன்று நடைபெற்று வரும் ‘கலாச்சாரப் போரின்’ விளைவாக, ஆரிய காவியங்களின் உண்மைகளும் தன்மைகளும் விளக்கப்பட்டு வருகின்றன.

குத்தூசி எஸ். குருசாமி

வடநாட்டில் இராவணனைப் போன்ற உருவத்தைச் செய்து தீயிட்டுக் கொழுத்துகின்றனர். அதுபோல தென்னாட்டில் தமிழகத்தில் ஆரிய இராமனைப் போன்ற உருவஞ்செய்து கொழுத்தப்படும் நிலையை உண்டாக்க வேண்டும். தமிழன் வீட்டில் இராமன் படம் இருத்தல் கூடாது. இராமன் தமிழ் இனத்தின் எதிரி என்பதை உணர வேண்டும். இதுவே இந்நாடகத்தின் இலட்சியம்.

பெரியார்

நான் சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இராமாயண ஆராய்ச்சி செய்து அதன் தன்மையையும் உண்மையையும் சொற்பொழிவாலும் பத்திரிகையாலும் ஆராய்ச்சி நூல் என்பதினாலும் மக்களுக்கு வெளியிட்டு வந்தாலும் அவை மக்களிடையில் சாதாரணமாக பரவுவதற்கு முடியாமல் போய்விட்டது. இப்போது இராதா அவர்கள் பெரும்பாலும் எனது ஆராய்ச்சிக் கருத்துக்களையே தழுவி நாடக ரூபமாக்கி நடிக்க முன் வந்திருப்பது மிகவும் பாராட்டத்தக்கதாகும்.

வி. எஸ். சந்தானம் அய்யங்கார்

நண்பர் இராதா அவர்கள் நடத்தும் இராமாயணத்தைப் பார்க்கா ரொம்பவும் மகிழ்ச்சியடைந்தேன். பலர் சாஸ்திரத்துக்கு முரண்பாடாய் இருப்பதாக என் நண்பர்கள் சிலர் சொல்ல கேள்வியுற்றேன். அப்படி நினைப்பவர்கள் சாஸ்திர ஆராய்ச்சி செய்திருக்க மாட்டார்களென்பது திண்ணம். தற்காலம் இராதா அவர்கள் விபரமாக உண்மையை (இராமாயணம்) எடுத்துக் காட்டுகிறார்கள். இதை எவ்விதத்திலும் முறை தவறுதல் என்று பிராமணர்களும் பிராமணரல்லாதவர்களும் கூற ஞாயமில்லை.

அப்பன் மவனே! அருமை யுவனே!

இன்னும் கொஞ்ச நாள்களில் தில் படத்தில் ‘உன் சமையலறையில்’ பாடல்போல இந்தப் பாடலும்  மூலை, முடுக்களில் எல்லாம் நீக்கமற நிறைந்து அருள்பாலிக்கப் போகிறது. எந்தப் பாடல்? அது  கட்டுரையின் கடைசியில்.

சமீப வாரங்களில் ஏகப்பட்ட படங்களுக்கான பாடல்கள் வெளியாகிவிட்டன. உட்கார்ந்து  பொறுமையாக ரசித்து கேட்பதற்குத்தான் நேரம் இல்லை. கேட்ட, கேட்டுக்கொண்டிருக்கிற, கேட்கின்ற தரத்தில் இருக்கிற சில புதிய பாடல்கள் பற்றிய என் கருத்துகள்.

யுவனின் ஆதிக்கம் தொடருகிறது. ஆனால் வந்ததில் பாதிக்கும் மேற்பட்ட பாடல்கள் திரும்பக் கேட்கத் தோன்றவில்லை. முதலில் வாமனன். ஏதோ செய்கிறாய் (ஜாவித் அலி, சௌம்யா ராவ்), யாரைக் கேட்பது எங்கே போவது (விஜய் யேசுதாஸ்), ஒரு தேவதை (ரதோட்) – இந்த மூன்றும்  மெலடி மெகந்தி. (மெல்லிசை மக்ரூன், மெலடி ரசகுல்லா, தாலாட்டும் தக்காளி ரசம் – இப்படி  ஏதாவது போட்டுக்கொள்ளலாம் – இது விகடன் ஸ்டைல்!)

மூன்றாவது மட்டும் (ஒரு தேவதை) நிலைத்து நிற்கும் விதத்தில் இருக்கிறது. மற்றவை எல்லாம்  படம் ஹிட்டடித்தால் ஹிட் ஆகலாம்.

அடுத்தது முத்திரை. பதிக்கவில்லை யுவன். ஐந்து பாடல்களில் என்னைக் கவர்ந்தது ஓம் சாந்தி ஓம்  பாடல் மட்டுமே. அதுகூட நேகா பேஸினின் காந்தக் குரலுக்காக மட்டும். தந்தை ஷ்ரேயா கோஷலுக்கு ஆற்றும் உதவிபோல், மகன் நேகாவுக்கு ஆற்றுகிறார். தொடர்ந்து யுவனின் படங்களில் நேகாவைக் கேட்க முடிகிறது. மற்ற நான்கு பாடல்களும் பத்தோடு பதினான்கு. சர்வம்கூட யுவனால்  மியூஸிகல் ஹிட் ஆகவில்லை. (இசையின்) அப்பன் மவனே! அருமை யுவனே! ஆயிரத்தில் ஒருவனின்கூட நீ இல்லை. அடுத்த ஹிட் எப்போ ராசா?

ஓவர் டூ அப்பன்! வால்மீகி. இளையராஜா. பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிறம். அச்சடிச்ச  காசை பாடலில் ராஜா என் கண் முன்வந்து டப்பாங்குத்து ஆடுவதுபோல உணர்ந்தேன். என்னடா  பாண்டி – எது மாதிரியும் இல்லாத புதுமாதிரி. மற்ற நான்கு பாடல்களில் மூன்று வழக்கமான  இளையராஜா ரகம். சிலாகித்துச் சொல்வதற்கில்லை. ஆனால் இந்த வருடத்தின் சுகமான பாடலாக  ‘தென்றலும் மாறுது’ பாடலைச் சொல்லத் தோன்றுகிறது. பாடியிருப்பது வேறு யார், ஷ்ரேயா கோஷல்தான். பாடல்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை சற்றே அதிகமாக்கியிருக்கிறது என்று  சொல்லலாம்.

இந்த ஆண்டின் சிறந்த துள்ளலான பாடல்கள் எல்லாம் கந்தசாமிக்குள் அடங்கிவிட்டது. உபயம் தேவிஸ்ரீபிரசாத். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். பொதுவாக எனக்கு மெலடி ரகங்களில்தான் விருப்பம் அதிகம். ஆனால் கந்தசாமியில் அக்மார்க் மெலடி என்று எதுவும் கிடையாது. சோகப்பாட லும் கிடையாது. ஆறு பாடல்களுமே ஆட்டம் போட வைக்கக்கூடியவைதான். என் பேரு  மீனாகுமாரியில் மாலதியின் ஹைடெசிபல் குரலும் ரசிக்க வைக்கிறது. (நான் மாலதி  ரகப் பாடல்களை விரும்பியதில்லை.) எக்ஸ்க்யூஸ் மீ மிஸ்டர் கந்தசாமி… சுசித்ராவும் விக்ரமும் ஜுகல்பந்தி நடத்தியிருக்கிறார்கள். பாடல் வரிகள் புதுசாக இருக்கின்றன.

ஹிட்லர் பேத்தியே, ஹிட்லர் பேத்தியே, காதல் ஒன்றும் யூதன் இல்லை, கொல்லாதே!
லிங்கன் பேரனே, லிங்கன் பேரனே,
தத்துவங்கள் பேசிப் பேசிக் கொல்லாதே!
…கடவுள் இல்லை சொன்னது அந்த ராமசாமி
காதல் இல்லைன்னு சொல்றது இந்த கந்தசாமி
– இப்படி பளிச் வரிகள் நிறைய. கவிஞர் விவேகாவுக்கு கந்தசாமி ஒரு லிஃப்ட். ஆனால் எல்லாப் பாடல்களுமே தாற்காலிக ஹிட் ஆகும். நீடித்த ஆயுளுக்கு உத்தரவாதம் இல்லை.

நாடோடிகள். நிறைய எதிர்பார்த்தேன். சித்திரம் பேசுதடி சுந்தர் சி பாபு இசை. சங்கர் மகாதேவனின்  இசையில் சம்போ சிவ சம்போ (நான் கடவுள் ஓம் பாடல்போல) கவனம் ஈர்க்கிறது. உலகில் எந்தக்  காதல் உடனே ஜெயித்தது – வரிகளுக்காக ரசிக்கலாம். வாலி என்று நினைக்கிறேன். மற்ற எதுவும்  சட்டெனக் கவரவில்லை. டிரைலர் மிரட்டுகிறது. படத்தோடு சேர்ந்து பார்த்தபின்பே சொல்ல  முடியும்போல.

கார்த்திக் ராஜா ஈஸ் பேக் – என்று சொல்லுமளவுக்கு அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் ஒரு பாடலுக்கு இசையமைத்துள்ளார். கண்ணில் தாகம் – பாடகி சௌம்யாவின் குரலில் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகிறது.

மோதி விளையாடு – ஸாரி கலோனியல் கஸின்ஸ். சொல்வதற்கு ஒன்றுமில்லை. விண்ணைத்  தாண்டி வருவாயா பாடல்கள் என்று இரண்டு வெளிவந்துள்ளன. எந்தன் நெஞ்சில் ஒரு சுகம் –  என்ற பாடல் அழகு. இன்னொன்று மனத்தில் நிற்கவில்லை. ஆனால் ஏ.ஆர். ரஹ்மானை இரண்டு  பாடல்களிலுமே என்னால் உணர்ந்துகொள்ள முடியவில்லை. பொக்கிஷம் – சபேஷ் முரளியின் இசையில் ஏகப்பட்ட மெலடி பாடல்கள். பச்சக்கென்று எதுவும் ஒட்டவில்லை என்பதே உண்மை.

ஆயிரத்தில் ஒருவன் – யுவனோடு கா விட்டு செல்வராகவன் ஜிவிபிரகாஷோடு கைகோர்த்துள்ள படம். எனக்கு முதன் முதலில் பாடல்களைக் கேட்கும்போது ஆர்வம் எல்லாம் இருக்கவில்லை, பயம்தான் இருந்தது. குசேலன் புகழ் ஜிவி, செல்வாவைக் கவிழ்த்துவிடக் கூடாதென்று. கதாநாயகி ஆண்ட்ரியா, இரண்டோ மூன்றோ பாடல்கள் பாடியுள்ளார். அவரது குரல் என்னை ஈர்க்கவில்லை. ஓ ஈசா என்ற பாடல் க்ளப் மிக்ஸ், கம்போஸர்ஸ் மிக்ஸ் என்று இருமுறை வருகிறது. எங்கள் ஊர் பெருமாள் கோயிலில் சாயங்கால வேளைகளில் அதைக் கேட்டிருக்கிறேன்.. வேங்கட ரமணா கோவிந்தா, ஸ்ரீநிவாசா கோவிந்தா… – அதுதானா இது?

தனுஷ் அவர் பொஞ்சாதி எல்லாம் சேர்ந்து ஒரு குடும்ப (மூட்) பாடல் பாடியுள்ளார்கள். சிறப்பில்லை. செலிபரேஷன்ஸ் ஆஃப் லைஃப், தி கிங் அரைவ்ஸ் என்று இரண்டு தீம் ம்யூஸிக்ஸ். இரண்டுமே புதுப்பேட்டை ‘வர்றியா’ முன் நிற்க முடியாது.

பாராட்டுவதற்கு ஒன்றுமே இல்லையா? இருக்கிறதே. பெம்மானே, தாய் தின்ற மண்ணே. இரண்டு பாடல்கள். முதலாவது பாம்பே ஜெயஸ்ரீயின் குரலில் ஒப்பாரி. அடுத்தது விஜய் யேசுதாஸின் முதிர்ச்சியான குரலில் சோகப்பாடல். PB ஸ்ரீநிவாஸுக்கு செல்வாவுக்கு என்ன பாசமோ தெரியவில்லை. 7ஜியில் இது என்ன மாயம் – அசத்தல் போல, பெம்மானேவின் இறுதியில் தாத்தா, உருக்குகிறார்.

தாய் தின்ற மண்ணே – வைரமுத்துவின் வரிகளின் பலத்தால் நிற்கும். ஆனால் எங்கள் அலுவலக நக்கீரர் (பாராதான்) அந்தப் பாடலின் மூலத்தையும் பிடித்துவிட்டார். விரைவில் அதுகுறித்து தன் வலைத்தளத்திலோ டிவிட்டரிலோ எழுதுவார். மொத்தத்தில் ஆயிரத்தில் ஒருவன் பாடல்கள் – படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.

அங்காடித் தெருவுக்குள் நுழையலாம். அனைத்துப் பாடல்களும் ஒன்றுக்கு மேற்பட்ட முறை கேட்கலாம் என்ற தரத்தில் இருக்கின்றன. கதைகளைப் பேசும் – பாடல் நீண்ட ஆயுள் கொண்ட மெலடி. உன் பேரைச் சொல்லும் – ஷ்ரேயா கோஷல், ஹரிசரண், நரேஷ் அய்யரின் கூட்டணியில்  அழகான மெல்லிசை (காதல் படத்தில் வரும் உனக்கென இருப்பேன் சாயல் தோன்றினாலும் ரசிக்கலாம்). கண்ணில் தெரியும் வானம் – வறுமைக்கோட்டில் வாழும் மக்களின் நிலையை சற்றே  வெஸ்டர்ன் கலந்து கொடுக்கிறது. தவிர்க்க முடியாத பாடல். கருங்காலி நாயே – என்றொரு பாடல் –  கல்லூரி படத்தில் வரும் பஸ் பாடல் போல வசனங்களால் நிறைந்தது. ஒருவேளை பாடல் காட்சிக ளோடு பார்த்தால் ரசிக்கலாம்போல. மேலுள்ள பாடல்களில் ஜி.வி. பிரகாஷ் முதல் வகுப்பில் பாஸ் ஆகிவிடுகிறார்.

அங்காடித் தெருவில் அடுத்த இரண்டு பாடல்கள் விஜய் ஆண்டனி உடையது. எங்கே போவேனோ  காதல் சோக ரகம். கேட்கலாம். அடுத்தது அவள் அப்படி ஒன்றும் அழகில்லை – பாடல்.  கட்டுரையின் முதல் வரி பில்ட்-அப் இந்தப் பாடலுக்காகத்தான். நாக்கமுக்க, ஆத்திச்சூடி என்று  தமிழ்த் திரை இசையில் தான் செய்த பாவங்களுக்கெல்லாம் விஜய் ஆண்டனி செய்த பிராயச்சித்தமே இந்தப் பாடல் என்று தோன்றுகிறது. ரஞ்சித், வினித் ஸ்ரீநிவாஸ், ஜானகி ஐயர் குரலில் இந்த வருடத்தின் டாப் 10 பாடல்களில் இந்தப் பாடலுக்கும் ஓர் இடம் நிச்சயமுண்டு. அழகிய வரிகளுக்குச்  சொந்தக்காரர் வேறு யார், நா. முத்துக்குமார்தான்.

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை – அங்காடித் தெருவின் முகவரி.

(ஒரு சந்தேகம் : கல்யாணி ராகத்துக்கும் பஞ்ச கல்யாணி ராகத்துக்கும் என்ன வித்தியாசம்?)