எம்.ஜி.ஆரை அடக்கிய தேவர்!

‘அண்ணே யாரு உங்க படத்துல ஹீரோ?’

‘எம்.ஜி.ஆர்.’

‘நல்ல ஆளுண்ணே நீங்க. மொத மொதலாப் படம் எடுக்கறீங்க. ஒழுங்கா வேல நடக்க வேணாமா?’

‘ஏம்ப்பா, எம்.ஜி.ஆர். உனக்கென்ன கெடுதல் செஞ்சார்?’ – கோபத்தோடு சின்னப்பா தேவர் கேட்டார். சக தயாரிப்பாளர் அசரவே இல்லை. ‘அண்ணே நான் சொல்றேன்னு தப்பா எண்ணாதீங்க. நீங்க  எம்.ஜி.ஆர். காளையை அடக்குற மாதிரி நடிக்கணும்னு ஆசைப்படறீங்க. இன்னும் எம்.ஜி.ஆரை  நீங்க சரியாப் புரிஞ்சிக்கிடவே இல்ல. அவர் வரவே மாட்டார்.’
தேவர் பேசாமலிருந்தார். எம்.ஜி.ஆருக்கும் அவருக்குமான நட்பைப் பற்றித் தெரியாத அந்த சக தயாரிப்பாளர், ‘வரேங்க’ என்றபடி காரில் ஏறினார். எம்.ஜி.ஆர். மீதான குற்றச்சாட்டுகள் நெருப்பாகப் பரவியிருந்தன. எல்லோருமே குறை கூறினர். தயாரிப்பாளர்களோடு ஒத்துழைப்பது குறைவு. எம்.ஜி.ஆர். தன்னிச்சையாகச் செயல்படுகிறார். அவரால் படங்கள் வெளிவருவது தாமதமாகிறது.

அதற்கெல்லாம் காரணம் தி.மு.க.தான். ஒழுங்காக பக்தியோடு தொழில் செய்தவர்,  நாத்திகவாதிகளுடன் சேர்ந்து நாசமாகி விட்டார் என்பது போன்ற செய்திகள் எம்.ஜி.ஆரின் இமேஜைப் பாதித்தன. அலிபாபாவும் நாற்பது திருடர்களும் படத்தில் ‘அல்லா மீது ஆணையாக’ என்ற  வசனத்தைப் பேச மறுத்தார். அதை ‘அம்மா மீது ஆணையாக’ என்று மாற்றித் தரும்படி வசனகர்த்தா  ஏ.எல். நாராயணனை வற்யுறுத்தினார். முதலாளி டி.ஆர்.எஸ், ‘டயலாக் என்ன இருக்கோ, அதையே  பேசு ராமச்சந்திரா’ என்று உத்தரவே போட்டார். ஆனால் எம்.ஜி.ஆர். ஷூட்டிங்குக்கு தொடர்ந்து போகவில்லை. அவர் இல்லாமலேயே ஒரு சண்டைக் காட்சியையும் பாட்டு சீனையும் எடுத்து  டி.ஆர்.எஸ். படத்தை முடித்தார்.

எம்.ஜி.ஆர். மீண்டும் சேலம் சென்றார். ‘ராமச்சந்திரா படத்தை ஒரு தடவை பார்த்துட்டுப் போ’  என்று வழியனுப்பினார் டி.ஆர்.எஸ். கரடிமுத்து என்கிற நகைச்சுவை நடிகர், எம்.ஜி.ஆருக்கு  பதிலாக நடித்திருந்தார். எம்.ஜி.ஆர். அதிசயித்தபடி வெளியே வந்தார். அவருக்கே அசலையும் ÷ பாலியையும் பிரித்துப் பார்க்க முடியவில்லை.

குற்றச்சாட்டுகள் எதையும் தேவர் பொருட்படுத்தவில்லை. எம்.ஜி.ஆரை  நம்பினார். 1956 –  எம்.ஜி.ஆரின் ஆண்டாக இருந்தது. அதனாலேயே தாய்க்குப் பின் தாரம் படத்தையும் மிகுந்த  அக்கறையோடு தயாரித்துக் கொண்டிருந்தார்.

எம்.ஜி.ஆருக்காகவே சண்டைக் காட்சிகள் அதிகம் புகுத்தப்பட்டன. ஷூட்டிங் முடிய ஒரு  ஷெட்யூல் மட்டுமே பாக்கி. தேவர் உற்சாக நடை போட்டார். மருதமலை முருகன் அருளால் படம்  நல்லபடியாகவே தயாராகி விட்டது. காளைச் சண்டையை காமிராவில் பிடித்து விட்டால் வியாபாரம் முடிந்த மாதிரி. எம்.ஜி.ஆரிடம் பேசினார் தேவர்.

‘அண்ணே! உங்க தேதிக்கு காத்துக்கிட்டு இருக்கேன். வாகினில செட் தயார். வந்து பார்க்கறீங்களா?  பெரிய மைதானம். போதுமா சொல்லுங்க. வர்ற தை அமாவசை அன்னிக்கு வேலையை ஆரம்பி ச்சாப் பரவாயில்லயா?’

‘காளைக்கு நல்லா ட்ரெயினிங் கொடுத்தாச்சா?’ – எம்.ஜி.ஆர். கேட்டார்.

‘நீங்க அச்சப்படற மாதிரி விட்டுடுவேனா?’

‘பயமா, எனக்கா?’

‘இல்லண்ணே ஒரு பேச்சுக்கு…’
தேவருக்குச் சட்டென்று மனத்துக்குள் சிநேகித நூல் அறுவது போலிருந்தது. எம்.ஜி.ஆரின் உரையாடலும் நடவடிக்கையும் தட்டிக் கழிப்பதாகத் தெரிகிறதே. ஒழுங்காக முடித்துக்கொடுக்க மாட்டாரா?  எல்லோரும் சொன்னதெல்லாம் அனுபவித்து அவஸ்தையுற்று வெளியிட்ட சத்திய  வார்த்தைகள்தானா? என் எம்.ஜி.ஆர். இல்லையா இவர்?
தேவர், எம்.ஜி.ஆரை ஏறிட்டு நோக்கினார். மகிழ்ச்சி போனது. எனக்கு பதில் சொல்லிட்டுப் போ  என்கிற பிடிவாதமும் மிரட்டலும் கண்களில் அப்பட்டமாகத் தெரிந்தன.

‘அண்ணே…’

‘என் கால்ஷீட்டை இப்பப் பெரியவருதான் பார்க்குறாரு. நீங்க சக்ரபாணி அண்ணனைக் கேளுங்க’ –  எம்.ஜி.ஆர். சொன்னார்.

‘தாய்க்குப் பின் தாரத்துல சக்ரபாணி கிடையாதே. நான் எதுக்கு அவருகிட்டப் பேசணும்.’ – தேவர்  சூடானார்.

‘புரிஞ்சுக்குங்க அண்ணே. எல்லா முதலாளிகளும் அண்ணன்கிட்டதான் பேசறாங்க. எனக்கு அவரு  சொன்னா ஓகே. ஒரே குடும்பமா வாழறோம். பெரியவங்க வார்த்தையை மீற விரும்பல.’

தேவர் அமைதியாக வெளியேறி விட்டார்.

*******

தேவர் பிலிம்ஸின் முதல் தயாரிப்பான தாய்க்குப் பின் தாரமே தேவருக்குச் சுளையாக முப்பதாயிரம்  ரூபாயை லாபப் பங்காக அளித்தது. சொந்த சினிமா முயற்சி வெற்றி பெறாவிட்டால் தேவர் பிறந்த  ஊருக்கே போய்விடலாம் என்று முடிவு செய்திருந்தார். ஆனால் அவரது பேனரில் தாய்க்குப் பின்  தாரம் அள்ளிய வசூலை வேறு எந்தப் படமும் பெறவில்லை.
எம்.ஜி.ஆர். தேவரைச் சந்தித்தார். தன் சந்தோஷத்தைத் தெரியப்படுத்தினார். ‘அடுத்த ரிலீஸ் எப்ப  அண்ணே?’ என்றார் ஜாலியாக.

‘பார்க்கலாம்’ தேவர் சுருக்கமாக முடித்துக் கொண்டார்.

‘மனசுல எதையும் வெச்சுக்காதீங்கண்ணே. நீங்களே என்னைப் புரிஞ்சுக்கலண்ணா வேறு யார்  கிட்டப் போய் நிக்குறது?’

எம்.ஜி.ஆர். இறங்கி வந்தார். தேவர் பிடி கொடுக்கவில்லை. தாய்க்குப் பின் தாரம் தெலுங்கும் பேசியது. எம்.ஜி.ஆர்.  வீறுகொண்டு எழுந்தார். ‘யாரைக் கேட்டுப் படத்தை டப் செய்தீர்கள். எனக்கு எப்படி இன்னொரு வன் குரல் கொடுக்கலாம்?’ விளக்கங்கள் கேட்டு வக்கீல் நோட்டீஸ் பறந்தது தேவர் பிலிம்ஸுக்கு.

அலறியடித்துக் கொண்டு வாகினியில் நின்றார் தேவர். அதன் அதிபர்களில் ஒருவரான சக்ரபாணி சிநேகமாகச் சிரித்தார். தேவர் வசமிருந்த வழக்கறிஞரின் ஓலையை வாங்கி வாசித்துப் பார்த்தார். நாகிரெட்டி ஓடி வந்தார். அவரும் படித்துப் பார்த்து விட்டு கலகலப்பானார்.

சக்ரபாணி, எம்.ஜி.ஆருக்குத் தக்கபடி பதிலடி கொடுத்தார்.
‘காளையை நீங்கள் நிஜமாகவே அடக்கவில்லை. உங்களது டூப்தான் மோதி வெற்றி பெற்றார்.  ஆனால் அதற்கும் சேர்த்து ஊதியம் பெற்றுக் கொண்டீர்கள். உண்மையில் அக்கறையோடு நீங்களே  மாட்டை வென்றிருந்தால் இன்னும் எங்களுக்கு வசூல் அதிகரித்திருக்கும். அதற்கான நஷ்டத்தை  உங்களிடம் இருந்தே பெற விரும்புகிறோம்.’

எம்.ஜி.ஆர். அடங்கி விட்டார்.

********

சமீபத்தில் நான் மிகவும் ரசித்த, வியந்த, படித்து மகிழ்ந்த (எடிட் செய்த) புத்தகம் இது. சாண்டோ  சின்னப்பா தேவர். சினிமாவையும் சிவமைந்தனையும் வெறித்தனமாக நேசித்த ஒரு மாறுபட்ட  மனிதரின் வாழ்க்கை வரலாறு.

சினிமாவுக்குள் தேவர் எப்படி நுழைந்தார்? ஆரம்ப காலத்தில் எம்.ஜி.ஆருக்கும் தேவருக்கும் நட்பு  எப்படி இருந்தது? ஏன் முறிந்தது? மீண்டும் எப்படித் துளிர்த்தது? எம்.ஜி.ஆரை வைத்து ஒரு படம்  எடுப்பதற்குள்ளாகவே எத்தனையோ தயாரிப்பாளர்கள் நொடிந்து போயிருக்கிறார்கள். தேவரால்  மட்டும் எப்படி தொடர்ந்து இத்தனை படங்களைக் கொடுக்க முடிந்தது? ஒரே இனத்தைச் சார்ந்தவர்  என்றாலும் தேவர் ஏன் சிவாஜியை வைத்து படம் எடுக்கவில்லை? எம்.ஜி.ஆரையும் முருகனையும்  மட்டுமே நம்பி படம் எடுத்த தேவர், திடீரென மிருகங்களை நம்ப ஆரம்பித்தது ஏன்? மொழியே  தெரியாமல், பாலிவுட்டிலும் நுழைந்து தேவர் கலக்கியது எப்படி? இவை மட்டுமல்ல, இன்னும்  எத்தனையோ கேள்விகளுக்கு விடையளிக்கிறது இந்தப் புத்தகம்.

பூஜை போட்டு மூன்றே அமாவாசையில் படம் முடியவேண்டும். அடுத்த பௌர்ணமியில் படம்  ரிலீஸ் ஆக வேண்டும். இதுதான் தேவரின் கணக்கு. யாருக்காகவும் எதற்காகவும் தொழிலில்  சுணக்கம் வருவதை தேவர் ஒருபோதும் அனுமதித்ததில்லை, அது எம்.ஜி.ஆராகவே இருந்தாலு ம்கூட. கோலிவுட்டின் இடிஅமீன் இதுவே அவருக்கு வைக்கப்பட்ட பட்டப்பெயர்.

தேவர் பற்றியும் புத்தகம் பற்றியும் இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் நீ ங்கள் புத்தகத்தை வாசித்து அனுபவிக்கும் சுகத்தை நான் கெடுக்க விரும்பவில்லை.

தேவரது வாழ்க்கையிலேயே ஏகப்பட்ட சுவாரசியங்கள். புத்தகத்தை எழுதியிருக்கும் நண்பர் பா.  தீனதயாளனின் நடை அதை அதிசுவாரசியமாக்கியிருக்கிறது. புத்தகத்தைப் படிக்கும்போது நமக்கு தேவரது வசவுகளையும் பாசத்தையும் அனுபவித்துக் கொண்டே தேவர் பிலிம்ஸில் வேலை பார்க்கும் உணர்வு ஏற்படுகிறது. தேவரது வாழ்க்கையோடு அரைநூற்றாண்டு கால கோடம்பாக்கத்தின் வரலாற்றையும் பின்னிப் பிணைத்துக் கொடுத்திருக்கிறார் தீனத யாளன்.

கிழக்கில் வெளியாகியிருக்கும் சினிமா கலைஞர்கள் குறித்த புத்தகங்களிலேயே மிகச் சிறந்ததாக  நான் குறிப்பிடுவது இந்தப் புத்தகத்தைத்தான்.

புத்தகத்தை வாங்க.

தீனதயாளனின் பிற புத்தகங்கள்.

புத்தகம் குறித்த பாராவின் விமர்சனம்.

தேவர் குறித்த முரளிகண்ணனின் சமீபத்திய பதிவு.

அழிந்து கொண்டிருக்கிறோம்!

ஈழத்தமிழர்களுக்காக இறுதி வேண்டுகோள்.

பதினைந்து நிமிடங்கள் ஓடும் வீடியோ காட்சி இது. இதில் வரும் சில காட்சிகள் உங்கள் மனத்தைப் பாதிக்கலாம், தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம் என்ற வாசகத்துடன் ஆரம்பிக்கிறது. இன்றைய ஈழத்தமிழர்களில் நிலையே ஒட்டுமொத்த உலகத்தால் தவிர்க்கப்பட்ட ஒன்றாகத்தானே இருக்கிறது.  பாதிக்கட்டும், பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன்தான் அதற்கான இணைப்புகளைத் தருகிறேன். பாதித்தால் மட்டும் என்ன நடக்கப்போகிறது?

பகுதி 1 :http://www.youtube.com/watch?v=YZ_qbOyz4Ms&NR=1

பகுதி 2 :http://www.youtube.com/watch?v=d8kXCDiW98o&NR=1

ஸ்ரீலங்காவில் இறுதியாக நடைபெற்ற போரில் கனரக ஆயுதங்களின் பாவனைக்கான தெளிவான ஆதாரங்களை நான் காணவில்லை என்று சிஎன்என் தொலைக்காட்சிக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் பான் கீ மூன் பேட்டி கொடுத்துள்ளார்.

திருவாசகம். ஐநா சபையின் நியு யார்க தலைமையகத்தில் பொறித்து வைத்துக் கொள்ளட்டும். தமிழினத் தலைவர்களே டெல்லியில் முடிந்தவரைக்கு ஆதாயம் ஈட்டுவதில் முனைப்புடன் இருக்கும்போது, யாரோ ஒரு மூன்றாவது மனுசன் ஆதாரம் இல்லையென்று சொல்வதில் வியப்பில்லையே.

ரமணன் இன்று மழை பெய்யும் என்று சொன்னாரா? கந்தசாமி ரிலீஸ் தள்ளிப்போகிறதா? பேருந்துக் கட்டணம் குறைக்கப்படுமா? 20-20 வேர்ல்ட் கப்ல தோனி மறுபடியும் ஜெயிப்பாரா? – நமக்கென்று வாழ்க்கையில் இப்படி ஆயிரம் யதார்த்தக் கவலைகள் இருக்கின்றன. ஈழத்தமிழர்களின் நிலையை எண்ணி, நமது இன உணர்வு பீறிட,  அதிகபட்சம் ‘உச்’ கொட்டி கண்ணீர் சிந்துவோம். உள்ளுக்குள் கோபம் கொந்தளிக்கும். நாலு பேரைத் திட்டிப் பேசுவோம், எழுதுவோம். பிறகு,அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விடுவோம்.

இந்த வீடியோவைப் பார்த்து கண்ணீர் சிந்தக்கூட அருகதையற்றவனாகத்தான் என்னை நினைக்கிறேன்.

பக்கடாவும் மனோன்மணியும்!

தமிழ் சினிமாவில் குழந்தைகளுக்காக வந்துள்ள ஒரே படம் என்று அஞ்சலியை பலகாலமாக வேறுவழியின்றிக் கொண்டாடிக் கொண்டிருந்தோம். அஞ்சலி குழந்தைகளுக்கான படமா என்ன?

இனி நாமும் துண்டை, கௌரவமாகத் தோளில் போட்டுக் கொள்ளலாம். பசங்க வந்துவிட்டது. குழந்தைகளுக்கான முதல் தமிழ் சினிமா வந்தேவிட்டது. இயக்குநர், தயாரிப்பாளர் சசிகுமாரைப் பார்த்து கேட்கத் தோன்றும் கேள்வி, இத்தனை நாளா எங்க சார் இருந்தீங்க?

முதல் படத்துக்கு ‘சின்னப்பசங்க’ கதையை வைத்துக்கொண்டு வாய்ப்பு தேடி அலைஞ்ச இயக்குநர் பாண்டிராஜுக்கு தன்னம்பிக்கை ஜாஸ்திதான். இந்தக் கதையை பல மசாலா தயாரிப்பாளர்கள் இடதுகையால் நிராகரிச்ச சம்பவங்கள் கண்டிப்பாக நடந்திருக்கலாம். சமீபத்தில் மீண்டும் படம் தயாரிக்க ஆரம்பித்த அந்த நிறுவனமும் நிராகரித்ததாகக் கேள்விப்பட்டேன். இப்போது வருத்தப்படுவதாகவும் சொல்கிறார்கள்.

விகடனில் 50 மார்க் போட்டிருக்கிறார்கள். மகிழ்ச்சி. மக்களை தியேட்டருக்கு இழுக்க இந்த மார்க் மிகவும் உபயோகப்படும். இரு தினங்களுக்கு முன்பு நானும் சூரியனில் பசங்க பார்த்தேன், பசங்களோடு. பக்கடா, மனோன்மணி, குட்டிமணி உள்பட சில சிறுவர்களை படத்தின் உதவி இயக்குநர்கள் தியேட்டருக்கு அழைத்து வந்திருந்தார்கள். அனைத்து பகுதிகளிலிருந்தும் ரிசல்ட் பாசிட்டிவாக வருகிறது என்றார் அந்த உதவி இயக்குநர். ஜீவா, அன்பு தவிர மற்ற எல்லோரும் புதுக்கோட்டை பசங்க. படத்தில் வரும் பள்ளி, டைரக்டர் படித்த இடம். எல்லோரையும் கவர்ந்த கதாபாத்திரமான புஜ்ஜியின் சொந்த வீட்டில்தான் அவன் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கின்றன.

கோடை விடுமுறை என்பதால் படத்தில் நடித்த பசங்க, தியேட்டர் தியேட்டராக சென்று மக்களின் வரவேற்பை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையிலேயே நாம், நம் வீட்டுப் பசங்களோடு தியேட்டருக்குச் சென்று அனுபவித்துப் பார்க்கவேண்டிய படம் இது.

படத்தில் குறைகளே இல்லையா? நீளமான காட்சிகள், சேராத பின்னணி இசை, க்ளைமாக்ஸ் என்று குறைகள் இருக்கின்றன. ஆனால் நிறைகள் நிறையவே இருக்கின்றன. குறிப்பாக யதார்த்தம் மீறாத காட்சிகள், வசனங்கள், கதாபாத்திரங்கள்.

அவ்வளவு உயர்தரமான படமா? ரெண்டாம்தர கதைகளோடும், மூன்றாம்தர வசனங்களோடும் வரும் கேடுகெட்ட சினிமாக்களே நமக்கு விதிக்கப்பட்டது என்று நொந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோமே. அந்தக் குப்பைகளோடு ஒப்பிடத் தேவையே இல்லை. பசங்க, பெரியவங்க!

இயக்குநருடன் போனில் பேசும் வாய்ப்பு அமைந்தது. ‘அடுத்த படத்துல நீங்களும் கமர்ஷியல் ஃபார்முலாவுக்குள்ள சிக்கிக்காதீங்க’ என்றேன். ‘கண்டிப்பாக மாட்டேன்’ என்றார் அழுத்தமாக.

நம்புகிறேன்.

சினிமாவின் எதிர்காலம் – நம் கையில்!

இன்று பாடல் பதிவுடன் இனிதே ஆரம்பிக்கிறோம் – அடிக்கடி புதிய சுவரொட்டிகள்  கண்களில் தென்படும். வெகு சில போஸ்டர்களைப் பார்க்கும்போது மட்டும் ‘இந்தப் படம் வர்றப்போ கண்டிப்பா தியேட்டர்ல போய்ப் பார்க்கணும்’ என்று மனத்துக்குள் பச்சை விளக்கு எரியும். வெண்ணிலா கபடி குழுவின் படபூஜை போஸ்டரும் எனக்குள்  பச்சை ஒளி பரப்பியது. சென்ற வாரம் ஏவிஎம் ராஜேஸ்வரியில் குடும்பத்துடன் சென்று  பார்த்தேன்.

வெள்ளந்தி மனிதர்களின் வெகு இயல்பான வாழ்க்கை. ஆரம்ப காட்சிகளிலிருந்தே சின்னச் சின்னதாக நிசர்சனக் கவிதைகள். பார்த்துப் பழகிய பக்கத்து கிராம மனிதர்களின் மண்வாசனைப் பேச்சு.

பஸ் ஓட்டும் டிரைவர் அண்ணாச்சி. பஸ்ஸின் வேகத்துக்கு இணையாக ஒற்றையடிப் பாதையில் சைக்கிள் மிதிக்கும் கதாநாயகன். ஹார்ன், சைக்கிள் பெல்லால் சத்தம் எழுப்பி அவர்கள் பேசிக்கொள்ளும் அழகு. திருவிழாவுக்கு வரும் மதுரைப் பெண்ணின் வெட்கம். காதலுக்குரிய முதல் சலனத்தை உண்டாக்கும் தெருநாய். கதாநாயகன்  எதிரே வந்து சடாரென முகத்தில் மஞ்சளைப் பூசிவிட்டு ஓட, அதிர்ந்து, அடுத்தநொடி  வெட்கப்படும் கதாநாயகியின் நளினம். கதாநாயகியின் கொலுசின் ஓசையைக் காதில்  வாங்கியபடியே சரியாக நகர்ந்து வந்து உரியடிக்கும் கண்கள் கட்டப்பட்ட கதாநாயகன். இப்படி படம் நெடுகிலும் குட்டிக் குட்டியாக ரசிக்க நிறைய விஷயங்கள்.

படத்தில் கிட்டத்தட்ட எல்லாக் கதாபாத்திரங்களும் வந்து அவர்களது இயல்புக்கேற்ப  இருந்துவிட்டுப் போயிருக்கிறார்கள். யாருமே கேமராவை நேரடியாகப் பார்த்து சொடுக்குப் போட்டு தொண்டை கிழியக் கத்தவில்லை.

காட்சிகளோடு காட்சிகளாக நகைச்சுவையும் சென்டிமெண்டும் இரண்டறக் கலந்தி ருக்கின்றன. கிராமத்தில் மக்கள் சூழ்ந்துநிற்க கபடி விளையாடியே பழகியவர்கள், கேலரியில் ஆயிரக்கணக்கானோர் சூழ்ந்து இருக்கும் கபடி மைதானத்துக்குள் நுழையும்போது அவர்களது கண்களில் இருக்கும் மிரட்சி. ‘நம்மளையெல்லாம் இதுக்குள்ள விளையாட விடுவாய்ங்களா..’ என்று கேட்கும் யதார்த்தம். ஒரு போட்டியில் வெற்றி  பெற்றதும், மக்கள் எழுந்து நின்று ஆரவாரம் எழுப்ப, ‘இதெல்லாம் நமக்குதானாடா?’  என்று சந்தேகம் வழிய அழுதபடியே கேட்கும் அப்பாவித்தனம். இன்னும் நிறைய சொல்லலாம்.

இந்தப் படத்திலும் சில சினிமாத்தனங்கள் இருக்கவே செய்கின்றன. ஆனால் என்னைப்  பொருத்தவரையில் எல்லாமே ஜீரணிக்கக்கூடியவை. முதல்பாதி சற்றே நீளம்தான். இரண்டாவது பாதியில் கேலரியில் உட்கார்ந்து விளையாட்டைப் பார்க்கும் உணர்வைக் கொண்டுவந்துவிடுகிறார்கள். சற்றே நாடகத்தனம் பூசப்பட்ட க்ளைமேக்ஸ் என்றாலும் ஒரு சோகக்கவிதை படித்துமுடித்துவிட்டு, சற்றுநேரம் அமைதியாக இருப்போமே – அந்த மனநிலை வாய்க்கிறது.

உலகின் ஒட்டுமொத்த அபத்தங்களையெல்லாம் அள்ளிச் செதுக்கிய காட்சிகளால் மட்டுமே ஆன சினிமாக்கள்தானே  அதிகம் வருகின்றன. அவற்றோடு ஒப்பிடும்போது.. சேச்சே, தப்பு தப்பு. அந்த அபத்தங்களை இந்தக் குழுவோடு ஒப்பிடவே கூடாது.

இந்த மாதிரியான அழகான, எளிமையான, யதார்த்தமான படங்களை, தியேட்டருக்குச் சென்று, மனமார ரசிப்பது ஆதரிப்பதே, வருங்காலத்தில் நல்ல தமிழ் சினிமாக்களும் முளைப்பதற்கு நாம் விதைக்கும் விதை. இல்லையென்றால் வில்லு, சிலம்பாட்டம், பெருமாள், திருவண்ணாமலை ரக விஷச் செடிகள் மட்டுமே நமக்குக் கிடைக்கும் அபாயம் நிச்சயம்.

நான் கடவுளும் மெண்டோஸ் குரங்கும்!

உதயம் தியேட்டரில் டிக்கெட் புக்கிங் ஆரம்பமான உடனேயே நான்கு டிக்கெட் வாங்கியாயிற்று. குடும்பத்தினரோடு அல்ல, நண்பர்களோடு பார்ப்பதாகத் திட்டம். சனிக்கிழமை  (பிப்ரவரி 7) மாலைக்காட்சிக்கு உரிய நேரத்தில் சென்றாயிற்று.

சொர்க்க வாசலைத் திறந்து பக்தர்களை உள்ளே அனுமதிக்க ஆரம்பித்தார்கள். எனக்குமுன் வரிசையில் சென்ற ஒருவர் கையில் பெரிய ஊதுபத்தி பாக்கெட். ‘ஓம் நமசி வாயம்’ என்று அதில் இருந்தது. அந்த நபரோடு ஒட்டி நின்றிருந்த பிறர் கையில் ஏதாவது தென்படுகிறதா என்று பார்த்தேன். தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, சாம்பிராணி… நல்லவேளை. எதுவுமில்லை.

படம் ஆரம்பிப்பதற்கு முன் நிறைய விளம்பரங்கள். குரங்கு, கழுதை. மெண்டோஸ் மிட்டாய் சாப்பிட்ட குரங்கு, ஆதி மனிதனாக பரிணாம வளர்ச்சிபெற்று, கழுதையை அடிமையாக்கும் கான்செப்ட். எனக்கென்னவோ அந்த விளம்பரமே ஆர்யா நடித்ததுபோல  இருந்தது.

பின் வரிசையில் குடும்பத்தோடு ஒருவர் வந்திருந்தார். ஆறு வயது மதிப்புமிக்க பெண்  குழந்தை ஒன்றும் வந்திருந்தது. அதன் கையில் டெடி பியர். கிஷ்கிந்தாவுக்கு பிக்னிக்  போவதுபோல நினைத்து அழைத்து வந்துவிட்டார்போல. ‘தேவனே! இந்த வாதைகளிலிருந்து அவர்களை ரட்சியும்!’

தேசிய விருதை வாங்கப்போகும் ஆர்யாவே! நடிப்பு உலகில் லவம் வரும் நம்பிக்கை நட்சத்திரமே! (வலம் அல்ல, லவம்தான்.) இப்படியெல்லாம் வெளியே ரசிகக் கண்மணிகள்  ஃப்ளக்ஸ் பேத்தல்கள். படத்தில் டைட்டில் கார்டு போடும்போது ‘ஆர்யா’ என்று மட்டும்  போட்டார்கள். நிறைவாக இருந்தது.

எல்லோரும் படத்தோடு ஒன்றிப் போயிருந்தார்கள். பிச்சைக்காரர்களை வைத்து அதிர வைக்கும் ஒரு காட்சி. என் பக்கத்து சீட் நண்பர் தலையைக் குனிந்து கொண்டிருந்தார்.  பின் வரிசையைத் திரும்பிப் பார்த்தேன். தந்தையும் தாயும் தலையைக் குனிந்துகொண்டிருக்க, ஆறுவயது குழந்தை மட்டுமே ‘தேமே’வெனப் பார்த்துக் கொண்டிருந்தது.

இடைவேளை. தியேட்டரின் விராண்டாவில் நிற்க முடியாத அளவுக்கு சிகரெட் புகை யாகம். ஓம் சிவோஹம். அங்கே நிற்பதற்குப் பதில் ஆர்யாவிடமிருந்து கஞ்சா பைப்பை  வாங்கி ஒரு இழு இழுத்துவிடலாம் என்றே தோன்றியது.

ஆர்யா வரும் காட்சிகளே குறைவு. அதிலும் அவர் பேசும் வசனங்கள் மிகக்குறைவு.  அதிலும் தமிழ் வார்த்தைகள் மிகச் சொற்பமே. சமஸ்கிருதமே மிகுதி. ஹரன் பிரசன்னா வோடு சேர்ந்து இன்னொரு முறை படம் பார்க்க வேண்டும் நினைத்துக் கொண்டேன்.

க்ளைமாக்ஸில் பூஜாவின் நடிப்புக்கு கைதட்டு. ‘சூடா ஒரு தேசிய விருது பார்சல்!’ எ  பிலிம் பை பாலா என்று திரையில் வரும்போது கைதட்டு. அடுத்த பாலா படம் வருவதற்குள் 2011ல் முதல்வர் யார் என்று தெரிந்துவிடும்.

வெளியே வந்தேன். பக்கவாட்டில் நடந்துவந்த ஒருவர் என்னென்னமோ சொல்லிக்கொண்டு வந்தார். திடீரென என் முகத்தைப் பார்த்து, ‘ஓ ஸாரி. என் ஃப்ரெண்டு நினைச்சு  பேசிக்கிட்டு வந்தேன்’ என விலகினார். தவறு அவர் மீதில்லை. எல்லாப் புகழும் பாலாவுக்கே.

அடுத்த காட்சிக்காக மக்கள் தயாராகியிருந்தார்கள். பக்கத்து தியேட்டரில் செம தில்லாக வில்லு விட்டுக்கொண்டிருந்தார் விஜய். மந்தையிலிருந்து விலகிய ஆடாக பாலா தெரிந்தார். ஆட்டுமந்தைக் கூட்டத்தில் ரசிப்பதற்கு ஒன்றுமில்லை.