கமலஹாசனின் குடும்பப் பாடல்!

லக் – முதல் ஹிந்தித் திரைப்படத்தில் ஷ்ருதிஹாசனுக்கு பேட் லக். அடுத்த அவதாரம், தந்தையின் படத்தில் இசையமைப்பாளராக. பாடல்கள் எப்படி இருக்கின்றன?

ஷ்ருதிஹாசன், அக்சரா, சுப்புலட்சுமி, கமலஹாசன் என்று எல்லோருடைய குரல்களும் உன்னைப் போல் ஒருவன் பாடல்களில் இடம்பெற்றிருக்கின்றன. இதுதான் குடும்பப்பாடலோ என்று நினைக்கத் தோன்றுகிறது. கௌதமியின் குரல் மட்டும்தான் கேட்கவில்லை. அதுகூட எந்தப் பாடலிலாவது கோரஸாக ஒலித்திருக்கிறதா என்று பிரித்துணர முடியவில்லை.

அல்லா ஜானே… கமலஹாசனின் குரல். பல்லவி நன்றாக இருக்கிறது. முதல் சரணத்தில் கமல் பாடும்போது ஏதோ வேண்டுமென்றே குரல் மாற்றி பாடுவதுபோலத் தெரிகிறது. மொத்தத்தில் இந்தப் பாடல் இந்த ஆல்பத்தின் நெம்பர் ஒன் பாடல்.

அல்லா ஜானே ரீமிக்ஸ்… ஷ்ருதிஹாசனின் குரலில். சிக்னலில் ஆரஞ்சிலிருந்து ரெட்டுக்கு மாறுவதற்குமுன் வேகமாக வண்டியில் கடந்துபோவதுபோல உச்சரிப்புகளில் வேகம். ரசிப்புக்குரியதாகப் படவில்லை. ஆல்பத்தில் எண்ணிக்கைக்காகச் சேர்த்திருக்கிறார்கள்.

நிலை வருமா? – அடுத்த பாடல். பாம்பே ஜெயஸ்ரீ, கமலின் குரல்கள். கேட்கக் கேட்க ஒருவேளை பிடிக்கலாம். நின்றே கொல்லும் தெய்வங்களும் – இன்றே கொல்லும் மதப்பூசல்களும் – ஒன்றே செய்யும் என உணரும் – நன்றே செய்யும் நிலைவருமா? – யாருடைய வரிகள்? ஏதோ ஒரு பிரபல எழுத்தாளர் தான் ஷ்ருதிஹாசனின் இசையமைப்பில் பாடல் எழுதுவதாக குமுதத்தில் மகிழ்ச்சி பிதுங்க பேட்டி கொடுத்ததாக ஞாபகம். அது ‘அல்லா ஜானே’ என்று சக நண்பர்கள் சொல்கிறார்கள்.

உன்னைப் போல் ஒருவன் – தீம் மியூஸிக். சம்பவானி யுகே யுகே என அடிக்கடி ஒலிக்கிறது. ‘ஐ ஆம் தி நியூ ஃபேஸ் ஆஃப் டெரர்!’ என்று பல குரல்கள் வசனம் பேசுகின்றன. இது இந்து தீவிரவாதத்தைக் குறிக்கும் பாடல் என்று யாராவது களமிறங்கி பாடலுக்கு பாப்புலாரிட்டி கொடுக்காமலிருந்தால் சரி.

வானம் எல்லை – ப்ளாஸேவின் கரடுமுரடு RAP-ல் ஷ்ருதிஹாசனுக்கு அறிமுகம் கொடுத்து ஆரம்பமாகிறது பாடல். ஷ்ருதியின் குரல் ஸ்டைலிஷாக வெளிப்பட்டிருக்கிறது. மற்றபடி பாடல் பத்தோடு பதினொன்று.

கமலஹாசன் ஏதாவது ஒரு படத்தை ரீமேக் செய்கிறார் என்றால் முதலிலேயே அதன் மூலப்படத்தை பார்த்துவிடுவேன். வசூல்ராஜாவின் அறிவிப்பு வந்த உடனேயே முன்னா பாய் பார்த்து விட்டேன். வசூல்ராஜா எத்தனை முறை பார்த்தாலும் எனக்குச் சலிப்பு ஏற்படுத்தாத படம். காரணம் கிரேஸி மோகன். ஆனால் முன்னா பாய் அளவுக்கு வசூல் ராஜாவில் சில காட்சிகளில் அழுத்தம் இல்லை என்பதே என் கருத்து.

உன்னைப் போல் ஒருவனின் மூலப்படமான தி வெட்நெஸ்டே பார்த்துவிட்டேன். அது மிகவும் பிடித்தது. பார்க்கலாம். அது அதுவாகவே வருகிறதா அல்லது கமலின் வாசனையோடு புதிதாக வருகிறதா என்று.

குருதிப்புனல்போல இந்தப் படத்துக்கும் பாடல்கள் தேவையில்லை. ஆல்பத்தில் தீம் மியூஸிக், ரீமிக்ஸ் தவிர மூன்று பாடல்கள் இருக்கின்றன. A Shruthi hassan Musical என்று போடுவதற்காக இருக்கலாம். ரீரெகார்டிங் எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும்.

பாடல்களில் ஷ்ருதிஹாசன் ஈஸியாகப் பாஸ் செய்துவிட்டார். ஆனால் எந்தப் பாடலுமே உருக்கவும் இல்லை, அதே சமயம் உறுத்தவும் இல்லை.

சல்மாவும் பாஸ்ட் பெர்பெஃக்ட் டென்ஸும்

நேற்று இரவு பத்து மணிக்கு மேல் இருக்கும். வீட்டில் டீவியில் NDTV Hindu சேனல் ஓடிக் கொண்டிருந்தது. நைட் விஷன் என்றொரு நிகழ்ச்சி. ஓர் அதீத லிப்ஸ்டிக் ஆன்ட்டியும், வழுக்கைக்கு முந்தைய நிலையில் கேச அமைப்பு கொண்ட முதிர் இளைஞரும் நுனி நாக்கு ஆங்கிலத்தில் நுரைபொங்கப் பேசிக் கொண்டிருந்தார்கள். கூடவே அந்தச் சூழலுக்குப் பொருத்தமில்லாதது போல ஓர் அம்மணி.

எங்கோ அந்த அம்மணியைப் பார்த்ததாக ஞாபகம். யோசித்துப் பார்த்தேன். அட, கவிஞர் சல்மா. அந்த இரண்டு ஆங்கில அதிமேதாவிகளும் எதைப் பற்றி, சல்மாவிடம் கேட்டுக் கொண்டிருந்தார்கள் என்று என்னால் சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. கவுன்சிலிங், போலீஸ் ஸ்டேஷன், டிவோர்ஸ், பெண்கள் – போன்ற வார்த்தைகள் அடிக்கடி பரிமாறப்பட்டன. என்ன விஷயம் என்றே புரியவில்லை. (பிறகு நெட்டில் தேடி படித்துக் கொண்டேன்.)

ஆனால் நேற்று சல்மாவின் பேட்டியைப் பார்த்த ஒவ்வொருவருக்கும் ஒன்று அவர் மீதோ அல்லது சேனல் மீதோ நிச்சயம் கோபமோ, வருத்தமோ வந்திருக்கும். என் வருத்தம் சல்மா மீதுதான். அறியப்பட்ட தமிழ் கவிஞர். தமிழில் நன்றாகப் பேசவும் கூடியவர். ஆனால் அந்த பேட்டியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் பதில் சொல்வதற்குள் திணறிப் போய்விட்டார்.

மனத்துக்குள் ஒரு வார்த்தையை யோசித்து அதை அப்படியே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் சொல்லி, பின் இடைவெளிவிட்டு அடுத்த வார்த்தையை யோசித்து மொழிபெயர்த்து பதிலைச் சொல்லி முடிப்பதற்குள் – நிஜமாகவே பரிதாபமாக இருந்தது. டென்ஷனில் டென்ஸ் தெரியாமல் பெரும்பாலும் பாஸ்ட்டிலும் பாஸ்ட் பெர்பெஃக்ட் டென்ஸிலுமே சல்மா பேசியதைக் கேட்கும்போது எதற்கு இவ்வளவு கஷ்டப்பட வேண்டும் என்றே நினைக்கத் தோன்றியது.

‘தமிழில்தான் பேசுவேன். ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும் என்று கட்டாயப்படுத்தாதீர்கள்’ – என்று ஆங்கில சேனல்காரர்களிடம் ஒரு தமிழ் கவிஞரால் நேரடியாகச் சொல்ல முடியாதா என்ன? தேவைப்பட்டால் சேனல்காரர்கள் ஆங்கிலத்தில் சப்-டைட்டில் போட்டுக் கொள்ளட்டும். எல்லா ஹிந்திக்காரர்களும் சேனல் பேட்டிகளில் ஆங்கிலத்தில்தான் பேசுகிறார்களா என்ன? தான் சொல்ல வந்ததைக்கூட சரியாகச் சொல்லமுடியாமல், சல்மா இப்படி ஒரு பேட்டி கொடுக்க வேண்டுமா?

அடச்சே, ஒரு விஷயத்தை மறந்து விட்டேன். முதலிலேயே ஞாபகம் இருந்திருந்தால் இந்தக் கட்டுரையை எழுதியிருக்க மாட்டேன். தி ஹிந்து எப்போதுமே தமிழர்களுக்கு எதிரானதுதானே.

நாடோடிகள் – 2009ன் சுப்ரமணியபுரம்!

தனது மூன்றாவது முயற்சியிலும் வெற்றி பெற்றிருக்கிறார் சசிகுமார், கதாநாயகனாக. இயக்குநராக சமுத்திரக்கனிக்கு இந்தப் படம் பெருவாழ்வு. எல்லா சென்டர்களிலும் வசூலை அள்ளப்போகிறது நாடோடிகள்.

படத்தின் கதையை விலாவாரியாகச் சொல்லமாட்டேன். அது திரையில் ரசிக்க வேண்டியது. என்  நண்பனின் நண்பன் எனக்கும் நண்பன். படத்தில் ஒரு வரி இதுதான். நண்பனின் (நண்பன்) காதலைச் சேர்த்து வைப்பதற்காகப் போராடும் நண்பர்கள் தங்கள் வாழ்க்கையில் சந்திக்கும் இழப்புகளைச் சுளீரென எடுத்துக்  காட்டியிருக்கிறது இந்தப்படம். அந்தக் காதலர்கள் நன்றி மறந்து நண்பர்களுக்குத் துரோகம் செய்தால்? அதற்குப் பின் அந்த நண்பர்களின் எதிர்வினை என்ன? அதுவே கதை.

நட்பை ஏக உயரத்தில் ஏற்றி வைத்திருக்கும் இந்தப்படம், இன்று மலிந்து கிடக்கும் போலி  காதல்களையும் தோலுரித்துக் காட்டியிருக்கிறது.

படத்தின் முதல்பாதி – அத்தனை விறுவிறுப்பு, அவ்வளவு சுறுசுறுப்பு. அதுவும் இடைவேளைக்கு முந்தைய சேஸிங் காட்சிகள் – செம வேகம். ஒளிப்பதிவாளர் கதிர் – அசத்தல். முதல் பாதி சிறுத்தை வேகத்தில் செல்வதால் இரண்டாவது பாதி கொஞ்சம் மெதுவாகச் செல்வதாகத் தோன்றுகிறது என  நினைக்கிறேன். ஆனால் இரண்டாவது பாதியிலும் விறுவிறுப்பு, சோகம், நகைச்சுவை எதற்கும் தட்டுப்பாடு இல்லை.

கதாபாத்திரங்களுக்கு வருவோம். கருணாகரனாக சசிகுமார் – ஒரு தேர்ந்த இயக்குநரால்தான் கதாபாத்திரத்தின் தேவைக்கேற்ப நடிக்க முடியும் சொல்லிக் காட்டியிருக்கிறார். மிகை நடிப்பு இல்லை. ஆக்ரோஷமான  காட்சிகளிலும், சோகமான காட்சிகளிலும் அப்ளாஸ்! அடுத்த இடம் பாண்டியாக வரும் கல்லூரி  பரணிக்கு. நகைச்சுவையில் கஞ்சா கருப்பை ஓரம்கட்டி விடுகிறார். ஆக்ரோஷமான காட்சிகளிலும்  ஆள், தூள். சென்னை 28ல் நடித்திருக்கும் விஜய்க்கு இதில் அழுத்தமான பாத்திரம்.

பெண் கதாபாத்திரங்களில் முதலிடம் கு. நல்லம்மாவுக்கு. குந்தாணி என்று செல்லப்பெயரோடு  அறிமுகமாகியிருக்கும் அனன்யா. முகபாவனைகளில் ஜோதிகாதான். சு.புரம் சுவாதி எட்டடி  என்றால் இவர் பதினெட்டு அடி. ஆள்தான் கொஞ்சம் குள்ளம். அடுத்தடுத்த படங்களில் வாய்ப்பு  எப்படி அமையுமோ? சசிகுமாரின் தங்கையாக அபிநயா. ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பு. இந்தச் சிறப்புப் பெண்ணை நடிக்க வைத்ததில் ஜெயித்திருக்கிறார் சமுத்திரக்கனி.

தமிழகத்தில் எதற்கெடுத்தாலும் ப்ளக்ஸ் வைக்கும் கலாசாரத்தை சின்னமணி (பார்ப்பதற்கு மன்சூர் அலிகான் போலவே இருக்கிறார்) என்ற கதாபாத்திரம் மூலம் நையாண்டி செய்திருக்கிறார்கள். அதற்கு  தியேட்டரில் செம கைதட்டல். தியேட்டருக்கு வெளியே இவருக்குத் தனியாக ப்ளக்ஸ் வைத்திருக்கிறார்கள் என்பது தனிக்கதை.

சசிகுமாரின் பாட்டி, ரெண்டாவது பொண்டாட்டிக்குப் பயந்து முதல் தாரத்தின் மகன் மீது வெளிப்படையாகப் பாசத்தைப் பொழிய முடியாமல் மருகும் பாண்டியின் அப்பா, தனது மகனது காதலுக்காகத் தூது செல்லும் விஜயின் அப்பா – இப்படி யதார்த்தமாகப் படைக்கப்பட்ட பல கதாபாத்திரங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். ஒவ்வொன்றிலும் அவ்வளவு  அழுத்தம் (சில பாத்திரங்கள் தவிர).

சம்போ சிவ சம்போ – பாடல் பின்னணி இசையின் உயிர்நாடி போல படத்தில் உதவியிருக்கிறது.  கண்கள் இரண்டால் போல ஒரு ஹிட் அமையாதது மட்டுமே குறை. மற்றபடி, ஒரு திருவிழா பாட லும், யக்கா யக்கா பாடலும் செருகல், உறுத்தல். அதுவும் யக்கா, யக்கா பாடலை நீக்கினால் அது இயக்குநர் ரசிகர்களுக்குச் செய்யும் நன்றிக்கடன். இசையமைப்பாளர் சுந்தர் சி. பாபு பின்னணி  இசையால் ஜெயித்திருக்கிறார்.

வசனங்கள் பல இடங்களில் பளிச். சத்யம் தியேட்டர் ரசிகர்களும் விசிலடித்துக் கைதட்டும்  அளவுக்கு. நட்பு குறித்த வசனங்களுக்கும் சசிகுமாரும் பாண்டியும் ஆக்ரோஷமாகப் பேசும் வசனங்களுக்கும் படு வரவேற்பு.

சில காட்சிகளில் சுப்ரமணியபுரம் நினைவுக்கு வருகிறது. புதிதாக யோசித்திருக்கலாம். மேலும் சில குறைகளையும் எடுத்துவைக்கலாம். படத்தின் ஓட்டத்தில் அவை தெரியாது.  விட்டுவிடலாம்.

கோடிக்கணக்கில் தயாரிப்பாளர் தலையில் மிளகாய் அரைக்கும் வெத்துவேட்டு மாஸ் ஹீரோக்கள் தேவையில்லை. கதை, திரைக்கதைதான் நிஜ ஹீரோ. அதைக் கொடுக்கவேண்டிய விதத்தில் கலந்துகொடுத்தால், எந்தப் படத்தையும் ரசிகர்களின் ஆதரவோடும், பெரும் வசூலோடும் ஜெயிக்க வைக்கலாம் என்று மூன்றாவது முறையாக நிரூபித்துக்  காட்டியிருக்கிறார்கள் சசிகுமார் கூட்டணியினர். நல்ல சினிமாவை ரசிக்கும் ரசிகர்களின் மனத்தில்  சசிகுமாருக்கு நிரந்தர இடம் உண்டு.

டைரக்டர் சமுத்திரக்கனியின் ‘உன்னைச் சரணடைந்தேன்’ – தியேட்டரில் பார்த்திருக்கிறேன். எனக்குப் பிடித்திருந்தது. நீண்ட போராட்டத்துக்குப் பின் சமுத்திரக்கனி நாடோடிகள் மூலமாக தனக்கான உயரத்தை அடைந்துவிட்டார். சமுத்திரக்கனி, சசிகுமாரின் நிஜ நட்பு ஜெயித்துவிட்டது.

இனி இவர்களை கோடம்பாக்கத்து மசாலா கோமாளிகள் அண்ணாந்து பார்க்கக் கடவதாக!

சினிமாவுக்குப் போன…

(ரொம்ப வருஷமாச்சு. இப்படி ஒரு நையாண்டிக் கட்டுரை எழுதி. இன்னிக்கு எழுதிப்பார்த்தேன். பரவாயில்ல, எதுவும் விட்டுப் போகல. நல்லாத்தான் வருது. ஆக, இந்த நையாண்டிக் கட்டுரையின் நோக்கம் யாரையும் புண்படுத்துவதோ, பண்படுத்துவதோ, டின்கட்டுவதோ அல்ல. இந்தக் கட்டுரையின் மூலம், அது உங்களுக்குத் தெரியாததா என்ன!)

தெலுங்கு தேஜஸ்வினி பத்திரிகையில் ரேணிகுண்டா ரெங்கநாயுடு (ரேரெ) தனது சினிமா  அனுபவங்களை கிசுகிசுக்களாக எழுதி வருகிறார். எதை எழுதினாலும் எவனுமே புரிந்துகொள்ளக்கூடாது என்ற பாணியில் எழுதுவதே ரேரெவின் வழக்கம். கிசுகிசுக்களின் சுவாரசியம்  பற்றி கேட்க வேண்டுமா? மர்ம நபர் இயக்கும் ரயில்போல காலம் கடந்துசெல்வதை  அதில்  உணர்ந்து பீதியடைய முடிகிறது.

பிரெட் பஜ்ஜி மடித்து வந்த காகிதத்தில் ரேரெவின் ஏப்ரல் மாதக் கட்டுரை அகப்பட்டது. தான் தங்கியிருந்த தெருவோரங்களை, உல்லாச விடுதிகள் குறித்து அதில் பீற்றியிருந்தார் ரேரெ. அவர் சிறுவயதில் திருட்டு தம் அடிக்க ஒதுங்கும் இடத்தில் தன் வாத்தியாரைத் திட்டி கரித்துண்டால்  எழுதுவாராம். குப்புறப்படுத்துக்கொண்டு ஹோம்வொர்க் எழுதுவாராம். அப்படியே  குறட்டைவிட்டு விடுவாராம். எழுத்துப் பிழை இல்லாமல் எழுதவேண்டும் என்பது அவரது நெடுங்கனவாக இருந்திருக்கிறது. சினிமாவுக்குள் நுழைந்த பிறகுதான் அது சாத்தியமாகியிருக்கிறது.  ஏறக்குறைய எனக்கும் அந்த அனுபவம் உண்டு. சினிமாவில்தான் யாரும் எழுத்துப் பிழைகளைக்  கண்டுகொள்வதில்லை.

எனக்குச் சிறுவயதில் கிறுக்குவதற்கென தனி இடமே இருந்ததில்லை. எதிர்வீட்டு போலீஸ்காரர்  வீட்டுச்சுவரில் கவிதை எழுதி ஏகப்பட்ட முறை அடி வாங்கியிருக்கிறேன். கோயில் பிரகாரம்  எனக்கு பிரசாதம் தரும் இடமாகத் தெரிந்ததே தவிர, எழுத்துப் பிரசவத்துக்குத் தோதான இடமாகத்  தோன்றவில்லை. வீட்டுக் கொல்லையில் மாமரம் மீது ஏறியமர்ந்து எழுதியிருக்கலாம். மாங்காயின்  சுவை என்னை எழுதவிடவில்லை.

பின்னர் நான் வேலைக்குச் சேர்ந்த உடன் செய்துகொண்ட வசதி, நான்கு கோடு போட்ட நோட்டு  ஒரு டஜன் வாங்கிக் கொண்டேன். கையெழுத்தைச் சரிசெய்ய. அதற்கு ஒரு மேஜை தேவை என்பதை உள்மனம் குத்திக்காட்டியது. தவணை முறையில் வாங்கினேன். ஒரு மேஜைமுன் அமர்ந்து  தப்பின்றி, எனக்குப் பிடித்த சினிமாப் பாடல்களை எழுதிப் பார்த்து குதூகலித்தது இன்றும் பசுமையாக, நாஞ்சில்நாட்டு பலாச்சுளையின் சுவைபோல நினைவில் நிற்கிறது.

பல வருடங்களாக வேறு வழியின்றி, வீட்டின் ஒற்றைப் படுக்கை அறையில் கணிப்பொறி வைத்து  அமர்ந்து டைப் அடித்துப் பழகினேன். தூங்க வேண்டும் என்றால் மானிட்டரை கட்டிலுக்கு அடியில் தள்ளிவிட வேண்டும். இந்த வசதியின்மைகள் என்னை ஓர் இலக்கியவாதியாக மாற்றியதில் ஆச்சரியமில்லை. வசதிகளைத் தேற்றுவதற்காக நான் திரைத்துறையை ‘அரைக்கண்’ணால்  வாஞ்சையோடு நோட்டமிட்டுக் கொண்டிருந்ததையும் மறுப்பதற்கில்லை.

சினிமாவுக்குள் நுழைவதற்கு முன்பாகவே எதை எதையெல்லாம் அடையலாம் என்று பகல் கனவு  காண்பது எனக்கு நாவல் எழுதுவதைவிட சுகானுபவமாக இருந்தது. சின்ன வாய்ப்பு ஒன்று  கிடைத்தபோதுகூட நான் என் கோரிக்கைகளை முன்னெடுத்து வைக்கத் தயங்கவே இல்லை. எழுதுவதற்குத்தான் யோசிக்க வேண்டும், பேசுவதற்கு அல்ல.

லால் பார்க், கப்பன் பார்க், நாகேஸ்வர ராவ் பார்க், மாநகராட்சி பார்க் என்று ஒரு பார்க்கைக்கூட  விடாமல் கொட்டாவி விட்டபடி காவியங்கள் படைத்த எனக்கு கீரின் பார்க்கில் ரூம்போட்டு எழுத  வேண்டும் என்பது வாழ்நாள் ஆசை. வெறி என்பதுகூட மிகையில்லாத சொல்தான். சினிமா வாய்ப்புகள் அனைத்தையும் சாத்தியமாக்கின. ஒரு நல்ல அறை ஓர் ஊற்றுக்கண். சுத்தமான கழிப்பறையோடு இணைந்த சௌகரியமான அறை, சொர்க்கம். கதைக்கான ஸீன் பிடிப்பது, கம்பா நதியில் மீன் பிடிப்பதற்கு ஒப்பானது. நாம் ஒரு நல்ல ஸீனைப் பிடித்துவிட்டோமென்றால் அந்த அறையும் ஸீனும் பின்னிப்பிணைந்து கொள்கின்றன. நினைவுகளின் ஏகாந்தக் கூட்டில் நிலைக்கின்றன.

‘கழுதைப்புலி’ எழுதும்போது சென்னையில் லொங்கடா ஓட்டல் ஒன்றில்தான் எனக்கு அறை  கொடுத்தார்கள். மாநகராட்சி பார்க்கைவிட அங்கே வசதிகள் குறைவுதான் என்றாலும் நறுமணங்களுக்குக் குறைவில்லை. வாடகையும் குறைவே. பஞ்சு இழந்த தலையணை, முடை நாற்றம் வீசும்  மெத்தை. நான்கில் ஒரு காலுக்குப் பதில் செங்கலால் அண்டை கொடுக்கப்பட்ட கட்டில்.  ஒருக்களித்துப் படுத்துக்கொண்டே பக்கத்து கட்டடத்தில் நடப்பதைப் பார்க்கும் சுதந்தரம்.  அனைத்தையும் சாத்தியப்படுத்திய அறைகூட எனக்கு சினிமாவின் கருவறையாகத்தான் தோன்றியது.

சமீபத்தில் தங்கிய தாஜ் கோரமண்டல் அறை என்னை வசீகரித்தது. எப்போதாவது இம்மாதிரி  விபத்துகளும் நேர்ந்துவிடுவது உண்டு. ஒருபக்கச் சுவர் முழுவதையும் என் முகத்தை எனக்கே  வெளிச்சம்போட்டுக் காட்டும் கண்ணாடி. பிடித்து கொதிக்கும் குழம்பில் போட்டுவிடலாமா என்று  நாக்கின் வெறியைத் தூண்டும் தொட்டி வண்ண மீன்கள். மார்கழி திருப்பாவைக் குளிரை ரிமோட்டில் கொண்டுவரும் ஏசி. இதையெல்லாம் இழந்து இத்தனைகாலம் அகம் பிரம்மாஸ்மி ருத்ரன்  போல தலைகீழாக நின்று தொலைத்த வாழ்க்கை உறுத்தலாக இருந்தது. தாஜில் என்னால் சிந்திக்கவே இயலவில்லை, வாழ்வைச் சுகித்துக் கிடந்தேன்.

வசதியான அறை ஒன்றை அனுபவித்துத் தீர்த்தபின் மனம் பூனைக்குட்டிபோல அதை நோக்கியே  பாய்கிறது. இப்போது மொட்டைமாடியில் எனக்கான அறையைக் கட்டிவிட்டேன். வீட்டின் கீழ்த்தளத்தில்  இருக்கும்போது நான் தக்காளி ரசம். மேல்தளத்தில் இருக்கும்போது பாதரசம். என்னை நானே  பிரித்துக் கொண்டேன். அறையில் இரண்டு புத்தக அலமாரிகள். ஒன்று குமுதம், விகடன், குங்குமத்துக்கானது. பரபரப்பை, சர்ச்சையைக் கிளப்ப ஏதாவது தூண்டுகோல் வேண்டுமே.  இன்னொரு அலமாரி எப்போதுமே பூட்டு கொண்டது. சாவி தொலைந்துவிட்டது. அது உலக  இலக்கியங்களுக்கானது.

என் அறையே சன்னல்களால் ஆனது போன்று பிரமிக்க வைக்கும். எப்போது வேண்டுமானாலும்  வெயிலும் வெள்ளை நிலாவும் வந்து போகலாம். இன்னும் கட்டுமானப்பணி முடியவில்லை. பக்கத்து  வீட்டு மரத்தில் காய்த்திருக்கும் கொய்யா அடிக்கடி கண்ணை உறுத்துகிறது. எதிர்வீட்டில் அலறும்  மெகா சீரியல் வசனங்கள். கேரளாவை நினைவுபடுத்தும் பக்கத்துவீட்டுப் பாட்டி. அவள் வளர்க்கும்  நாயின் நள்ளிரவு ஊளை. இயற்கையை இழக்க நான் விரும்புவதில்லை.

இந்த அறையின் வளர்ச்சியும் சினிமாவில் என் வளர்ச்சியும் ஒன்றுதான். வளர்ந்து கொண்டிருக்கி÷ றாம். எங்கு வேலை பார்த்தேன், என்ன வேலை பார்த்தேன் என்பதே நினைவிலிருந்து அழிந்து  கொண்டிருக்கிறது. சினிமா, ஒரு சமண முனிவனைப்போல என்னுள் தவமிருக்கிறது. சினிமா  எனக்கு வருமானம் தருகிறது. இரவு எனக்கு வெளிச்சத்தைத் தருகிறது. இரவெல்லாம் தூக்கத்தைத் தொங்கலில் விட்டுவிட்டு கூர்க்காவின் விசிலோசைகளை எண்ணிக் கொண்டிருக்கிறேன். இருளின் கருமை என் எழுத்துகளை,  பஞ்ச் டயலாக்குகளை கணிணியில் செதுக்குகிறது. இரவில் விழித்திருக்க விதிக்கப்பட்டவன், கத்திரி  வெயில் பல்லிளிக்கும் பட்டப்பகலில் தூங்கச் சபிக்கப்படுகிறான். கொசுக்கடியில் அவதிப் படுபவனும் கோடம்பாக்கத்துக்கு வாக்கப்பட்டவனும் இரவில் தூங்குவதில்லை.

இலக்கியம் நாயர் கடை பாக்கியைக்கூட தீர்க்க உதவவில்லை. அதில் கொஞ்சூண்டு பிராய்ந்து  எடுத்து கோடம்பாக்கத்தில் கடைவிரித்திருக்கிறேன். கல்லா நிறைகிறது. சினிமா என் நேசம் அல்ல.  எனக்கு சுவாசம் அல்ல. பேக்கரியைக் கடந்து செல்கையில் மூக்கைத் துளைக்கும் கேக்கின் வாசம்.  கேப்பைக்கூழும் இலக்கியமும் நல்லதுதான், நிலைத்த ருசி கொண்டதல்ல. எனக்கு கேக்தான் பிடித்திருக்கிறது. என்னால் கேக் இன்றி வாழ முடியாது.

இலக்குகள் இல்லாதவனுக்கு இலக்கியம் சுகம். எல்லாம் தேவைப்படுபவனுக்கு மசாலா சினிமாவே  முகம். அது வாழ்ந்து என்னை வாழ்விக்க!

அப்பன் மவனே! அருமை யுவனே!

இன்னும் கொஞ்ச நாள்களில் தில் படத்தில் ‘உன் சமையலறையில்’ பாடல்போல இந்தப் பாடலும்  மூலை, முடுக்களில் எல்லாம் நீக்கமற நிறைந்து அருள்பாலிக்கப் போகிறது. எந்தப் பாடல்? அது  கட்டுரையின் கடைசியில்.

சமீப வாரங்களில் ஏகப்பட்ட படங்களுக்கான பாடல்கள் வெளியாகிவிட்டன. உட்கார்ந்து  பொறுமையாக ரசித்து கேட்பதற்குத்தான் நேரம் இல்லை. கேட்ட, கேட்டுக்கொண்டிருக்கிற, கேட்கின்ற தரத்தில் இருக்கிற சில புதிய பாடல்கள் பற்றிய என் கருத்துகள்.

யுவனின் ஆதிக்கம் தொடருகிறது. ஆனால் வந்ததில் பாதிக்கும் மேற்பட்ட பாடல்கள் திரும்பக் கேட்கத் தோன்றவில்லை. முதலில் வாமனன். ஏதோ செய்கிறாய் (ஜாவித் அலி, சௌம்யா ராவ்), யாரைக் கேட்பது எங்கே போவது (விஜய் யேசுதாஸ்), ஒரு தேவதை (ரதோட்) – இந்த மூன்றும்  மெலடி மெகந்தி. (மெல்லிசை மக்ரூன், மெலடி ரசகுல்லா, தாலாட்டும் தக்காளி ரசம் – இப்படி  ஏதாவது போட்டுக்கொள்ளலாம் – இது விகடன் ஸ்டைல்!)

மூன்றாவது மட்டும் (ஒரு தேவதை) நிலைத்து நிற்கும் விதத்தில் இருக்கிறது. மற்றவை எல்லாம்  படம் ஹிட்டடித்தால் ஹிட் ஆகலாம்.

அடுத்தது முத்திரை. பதிக்கவில்லை யுவன். ஐந்து பாடல்களில் என்னைக் கவர்ந்தது ஓம் சாந்தி ஓம்  பாடல் மட்டுமே. அதுகூட நேகா பேஸினின் காந்தக் குரலுக்காக மட்டும். தந்தை ஷ்ரேயா கோஷலுக்கு ஆற்றும் உதவிபோல், மகன் நேகாவுக்கு ஆற்றுகிறார். தொடர்ந்து யுவனின் படங்களில் நேகாவைக் கேட்க முடிகிறது. மற்ற நான்கு பாடல்களும் பத்தோடு பதினான்கு. சர்வம்கூட யுவனால்  மியூஸிகல் ஹிட் ஆகவில்லை. (இசையின்) அப்பன் மவனே! அருமை யுவனே! ஆயிரத்தில் ஒருவனின்கூட நீ இல்லை. அடுத்த ஹிட் எப்போ ராசா?

ஓவர் டூ அப்பன்! வால்மீகி. இளையராஜா. பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிறம். அச்சடிச்ச  காசை பாடலில் ராஜா என் கண் முன்வந்து டப்பாங்குத்து ஆடுவதுபோல உணர்ந்தேன். என்னடா  பாண்டி – எது மாதிரியும் இல்லாத புதுமாதிரி. மற்ற நான்கு பாடல்களில் மூன்று வழக்கமான  இளையராஜா ரகம். சிலாகித்துச் சொல்வதற்கில்லை. ஆனால் இந்த வருடத்தின் சுகமான பாடலாக  ‘தென்றலும் மாறுது’ பாடலைச் சொல்லத் தோன்றுகிறது. பாடியிருப்பது வேறு யார், ஷ்ரேயா கோஷல்தான். பாடல்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை சற்றே அதிகமாக்கியிருக்கிறது என்று  சொல்லலாம்.

இந்த ஆண்டின் சிறந்த துள்ளலான பாடல்கள் எல்லாம் கந்தசாமிக்குள் அடங்கிவிட்டது. உபயம் தேவிஸ்ரீபிரசாத். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். பொதுவாக எனக்கு மெலடி ரகங்களில்தான் விருப்பம் அதிகம். ஆனால் கந்தசாமியில் அக்மார்க் மெலடி என்று எதுவும் கிடையாது. சோகப்பாட லும் கிடையாது. ஆறு பாடல்களுமே ஆட்டம் போட வைக்கக்கூடியவைதான். என் பேரு  மீனாகுமாரியில் மாலதியின் ஹைடெசிபல் குரலும் ரசிக்க வைக்கிறது. (நான் மாலதி  ரகப் பாடல்களை விரும்பியதில்லை.) எக்ஸ்க்யூஸ் மீ மிஸ்டர் கந்தசாமி… சுசித்ராவும் விக்ரமும் ஜுகல்பந்தி நடத்தியிருக்கிறார்கள். பாடல் வரிகள் புதுசாக இருக்கின்றன.

ஹிட்லர் பேத்தியே, ஹிட்லர் பேத்தியே, காதல் ஒன்றும் யூதன் இல்லை, கொல்லாதே!
லிங்கன் பேரனே, லிங்கன் பேரனே,
தத்துவங்கள் பேசிப் பேசிக் கொல்லாதே!
…கடவுள் இல்லை சொன்னது அந்த ராமசாமி
காதல் இல்லைன்னு சொல்றது இந்த கந்தசாமி
– இப்படி பளிச் வரிகள் நிறைய. கவிஞர் விவேகாவுக்கு கந்தசாமி ஒரு லிஃப்ட். ஆனால் எல்லாப் பாடல்களுமே தாற்காலிக ஹிட் ஆகும். நீடித்த ஆயுளுக்கு உத்தரவாதம் இல்லை.

நாடோடிகள். நிறைய எதிர்பார்த்தேன். சித்திரம் பேசுதடி சுந்தர் சி பாபு இசை. சங்கர் மகாதேவனின்  இசையில் சம்போ சிவ சம்போ (நான் கடவுள் ஓம் பாடல்போல) கவனம் ஈர்க்கிறது. உலகில் எந்தக்  காதல் உடனே ஜெயித்தது – வரிகளுக்காக ரசிக்கலாம். வாலி என்று நினைக்கிறேன். மற்ற எதுவும்  சட்டெனக் கவரவில்லை. டிரைலர் மிரட்டுகிறது. படத்தோடு சேர்ந்து பார்த்தபின்பே சொல்ல  முடியும்போல.

கார்த்திக் ராஜா ஈஸ் பேக் – என்று சொல்லுமளவுக்கு அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் ஒரு பாடலுக்கு இசையமைத்துள்ளார். கண்ணில் தாகம் – பாடகி சௌம்யாவின் குரலில் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகிறது.

மோதி விளையாடு – ஸாரி கலோனியல் கஸின்ஸ். சொல்வதற்கு ஒன்றுமில்லை. விண்ணைத்  தாண்டி வருவாயா பாடல்கள் என்று இரண்டு வெளிவந்துள்ளன. எந்தன் நெஞ்சில் ஒரு சுகம் –  என்ற பாடல் அழகு. இன்னொன்று மனத்தில் நிற்கவில்லை. ஆனால் ஏ.ஆர். ரஹ்மானை இரண்டு  பாடல்களிலுமே என்னால் உணர்ந்துகொள்ள முடியவில்லை. பொக்கிஷம் – சபேஷ் முரளியின் இசையில் ஏகப்பட்ட மெலடி பாடல்கள். பச்சக்கென்று எதுவும் ஒட்டவில்லை என்பதே உண்மை.

ஆயிரத்தில் ஒருவன் – யுவனோடு கா விட்டு செல்வராகவன் ஜிவிபிரகாஷோடு கைகோர்த்துள்ள படம். எனக்கு முதன் முதலில் பாடல்களைக் கேட்கும்போது ஆர்வம் எல்லாம் இருக்கவில்லை, பயம்தான் இருந்தது. குசேலன் புகழ் ஜிவி, செல்வாவைக் கவிழ்த்துவிடக் கூடாதென்று. கதாநாயகி ஆண்ட்ரியா, இரண்டோ மூன்றோ பாடல்கள் பாடியுள்ளார். அவரது குரல் என்னை ஈர்க்கவில்லை. ஓ ஈசா என்ற பாடல் க்ளப் மிக்ஸ், கம்போஸர்ஸ் மிக்ஸ் என்று இருமுறை வருகிறது. எங்கள் ஊர் பெருமாள் கோயிலில் சாயங்கால வேளைகளில் அதைக் கேட்டிருக்கிறேன்.. வேங்கட ரமணா கோவிந்தா, ஸ்ரீநிவாசா கோவிந்தா… – அதுதானா இது?

தனுஷ் அவர் பொஞ்சாதி எல்லாம் சேர்ந்து ஒரு குடும்ப (மூட்) பாடல் பாடியுள்ளார்கள். சிறப்பில்லை. செலிபரேஷன்ஸ் ஆஃப் லைஃப், தி கிங் அரைவ்ஸ் என்று இரண்டு தீம் ம்யூஸிக்ஸ். இரண்டுமே புதுப்பேட்டை ‘வர்றியா’ முன் நிற்க முடியாது.

பாராட்டுவதற்கு ஒன்றுமே இல்லையா? இருக்கிறதே. பெம்மானே, தாய் தின்ற மண்ணே. இரண்டு பாடல்கள். முதலாவது பாம்பே ஜெயஸ்ரீயின் குரலில் ஒப்பாரி. அடுத்தது விஜய் யேசுதாஸின் முதிர்ச்சியான குரலில் சோகப்பாடல். PB ஸ்ரீநிவாஸுக்கு செல்வாவுக்கு என்ன பாசமோ தெரியவில்லை. 7ஜியில் இது என்ன மாயம் – அசத்தல் போல, பெம்மானேவின் இறுதியில் தாத்தா, உருக்குகிறார்.

தாய் தின்ற மண்ணே – வைரமுத்துவின் வரிகளின் பலத்தால் நிற்கும். ஆனால் எங்கள் அலுவலக நக்கீரர் (பாராதான்) அந்தப் பாடலின் மூலத்தையும் பிடித்துவிட்டார். விரைவில் அதுகுறித்து தன் வலைத்தளத்திலோ டிவிட்டரிலோ எழுதுவார். மொத்தத்தில் ஆயிரத்தில் ஒருவன் பாடல்கள் – படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.

அங்காடித் தெருவுக்குள் நுழையலாம். அனைத்துப் பாடல்களும் ஒன்றுக்கு மேற்பட்ட முறை கேட்கலாம் என்ற தரத்தில் இருக்கின்றன. கதைகளைப் பேசும் – பாடல் நீண்ட ஆயுள் கொண்ட மெலடி. உன் பேரைச் சொல்லும் – ஷ்ரேயா கோஷல், ஹரிசரண், நரேஷ் அய்யரின் கூட்டணியில்  அழகான மெல்லிசை (காதல் படத்தில் வரும் உனக்கென இருப்பேன் சாயல் தோன்றினாலும் ரசிக்கலாம்). கண்ணில் தெரியும் வானம் – வறுமைக்கோட்டில் வாழும் மக்களின் நிலையை சற்றே  வெஸ்டர்ன் கலந்து கொடுக்கிறது. தவிர்க்க முடியாத பாடல். கருங்காலி நாயே – என்றொரு பாடல் –  கல்லூரி படத்தில் வரும் பஸ் பாடல் போல வசனங்களால் நிறைந்தது. ஒருவேளை பாடல் காட்சிக ளோடு பார்த்தால் ரசிக்கலாம்போல. மேலுள்ள பாடல்களில் ஜி.வி. பிரகாஷ் முதல் வகுப்பில் பாஸ் ஆகிவிடுகிறார்.

அங்காடித் தெருவில் அடுத்த இரண்டு பாடல்கள் விஜய் ஆண்டனி உடையது. எங்கே போவேனோ  காதல் சோக ரகம். கேட்கலாம். அடுத்தது அவள் அப்படி ஒன்றும் அழகில்லை – பாடல்.  கட்டுரையின் முதல் வரி பில்ட்-அப் இந்தப் பாடலுக்காகத்தான். நாக்கமுக்க, ஆத்திச்சூடி என்று  தமிழ்த் திரை இசையில் தான் செய்த பாவங்களுக்கெல்லாம் விஜய் ஆண்டனி செய்த பிராயச்சித்தமே இந்தப் பாடல் என்று தோன்றுகிறது. ரஞ்சித், வினித் ஸ்ரீநிவாஸ், ஜானகி ஐயர் குரலில் இந்த வருடத்தின் டாப் 10 பாடல்களில் இந்தப் பாடலுக்கும் ஓர் இடம் நிச்சயமுண்டு. அழகிய வரிகளுக்குச்  சொந்தக்காரர் வேறு யார், நா. முத்துக்குமார்தான்.

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை – அங்காடித் தெருவின் முகவரி.

(ஒரு சந்தேகம் : கல்யாணி ராகத்துக்கும் பஞ்ச கல்யாணி ராகத்துக்கும் என்ன வித்தியாசம்?)