அனகா என்றொரு தேவதை!

முதலில் அண்ணாச்சி முத்துகணேஷுக்கு லட்சோப லட்ச நன்றிகள். அவர்தான் இப்படி ஒரு நிகழ்ச்சி வருவதாகச் சொன்னார். Youtubeல் தேடினேன். நிறைய கொட்டின.

அம்ரிதா மலையாள சேனலில் வரும் ஏதோ ஒரு ஜுனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி.  பத்தோடு பதினொன்று என்ற மனநிலையில்தான் அந்த வீடியோவைப் பார்க்க ஆரம்பித்தேன். (பதிமூன்று சொச்ச வயதுள்ள) குழந்தைகள் பாடினார்கள். மலையாள சேனல் என்றாலும் தமிழ் டூயட் சுற்று, ஏ.ஆர். ரஹ்மான் சுற்று என்று தமிழ்ப்பாடல்களின் ராஜ்ஜியம்தான். பல குழந்தைக்குரல்களைக் கேட்டு ரசித்த பிறகு, அந்த லிங்க்கைத் தட்டினேன்.

பெயர் அனகா. வயது 13. ஊர் கோட்டயம் என்று தெரிந்தது. அது ஏ.ஆர். ரஹ்மான்  சுற்று. அந்தக் குழந்தை தேர்ந்தெடுத்திருந்த பாடல் – மலர்களே மலர்களே – லவ்பேர்ட்ஸ்.

கேட்ட நிமிடத்திலிருந்து மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருக்கின்றேன். காலையில் அனகாவின் குரலைக் கேட்ட பாரா, வீடியோவின் இறுதியில் கண்ணீர் சிந்திக்  கொண்டிருந்தார். மேற்கொண்டு எழுதத் தோன்றவில்லை.

நீங்களே அனுபவியுங்கள்.

http://in.youtube.com/watch?v=GOP_n6H5Uw4

அனகாவின் மலர்களே மலர்களே – வீடியோவை இறக்கிக்கொள்ள :

http://rapidshare.com/files/170408000/anakha_a_r_rahman_round.avi.html

அனகாவின் மலர்களே மலர்களே – ஆடியோவை இறக்கிக்கொள்ள :
http://rapidshare.com/files/170403997/anakha_a_r_rahman_round.mp3.html

அனகாவின் எல்லா பாடல்களையும் Youtubeல் பார்க்க, கேட்க:
http://in.youtube.com/results?search_query=anakha+amrita+tv&search_type=&aq=f

தமிழ் பதிப்புலக ‘வரலாற்றில்’ முதன்முறையாக…

‘அவ்வளவுதான். இனி நம்மிடம் இருப்பது இரண்டே கப்பல்கள்தான். சான் அண்டோனியாவும் கான்செப்ஷனும் நிச்சயமாக சூறாவளியால் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. அவற்றை நான் தொலைத்துவிட்டேன். இழந்துவிட்டேன்’ – மனத்தளவில் அந்த முடிவுக்கு வந்திருந்தார் மெகல்லன்.

இருக்கும் இரண்டு கப்பல்களையாவது காப்பாற்றியாக வேண்டிய சூழல். ஆனால் அதற்கும் சோதனை தொடங்கியது. அடுத்ததாக ஒரு சூறாவளி வீச ஆரம்பித்தது. டிரினாடாடையும் விக்டோரியாவையும் கட்டுப்படுத்த முடியவில்லை. ஏதேதோ திசைகளில் எல்லாம் அவை கொண்டு செல்லப்பட்டன.

அந்தச் சூறாவளியும் ஓரளவுக்கு ஓய்ந்தது. டிரினிடாடில் இருந்தபடி கடலைப் பார்த்தார் மெகல்லன். கண்பார்வை தூரத்தில்தான் விக்டோரியா இருந்தது. மனத்துக்குள் மெல்லியதாக ஒரு நிம்மதி படர்ந்தது. ஆனால் மேற்கொண்டு பயணத்தைத் தொடர முடியாதபடி விக்டோரியாவின் பாய்மரத் துணிகள் கிழிந்து தொங்கின. சூறாவளி கொடுத்துவிட்டுப் போன பரிசு.

சில மணி நேரங்கள்கூட மெகல்லனின் நிம்மதி நீடிக்கவில்லை. அடுத்த சூறாவளி தாக்க ஆரம்பித்தது. கப்பல்களைப் புரட்டிப் போடும் அளவுக்குப் பேரலைகல் அட்டகாசம் செய்ய ஆரம்பித்தன.

கடல், பேரலைகளால் அந்த இரண்டு கப்பல்களையும் பந்துகள் போல எடுத்து, தூக்கிப் போட்டு விளையாட ஆரம்பித்தது. எந்தக் கணத்தில் வேண்டுமானாலும் ஏதாவது ஒரு பாறையில் மோதி கப்பல் துண்டு துண்டாகிப் போகலாம் என்ற நிலை.

கப்பல்களில் இருந்த எல்லோரும் இறுக்கமாக எதையாவது பிடித்துக் கொண்டு இருந்தார்கள். இருந்தாலும் அலைகளில் ருத்ர தாண்டவம், சிலரை கடலுக்குள் விழ வைத்தது. கடலுக்குள் விழுந்தவர்களைக் காப்பாற்ற முயற்சி செய்தவர்களும் தவறி விழுந்தார்கள். அவர்களை மீட்பதற்குள் பெரும்பாடாகப் போய்விட்டது.

ஒவ்வொரு நொடியையும் மரண பயமின்றிக் கழிக்க முடியவில்லை. இந்த நிலை இரண்டு நாள்கள் தொடர்ந்தது.

அதுவரை ஆடிய ஆட்டத்துக்கும் தனக்கும் எந்தவித சம்பந்தம் இல்லை என்பதுபோல அமைதியாக இருந்தது கடல்.

‘இந்த நிமிடம் வரை உயிரோடு இருப்பதே ஆச்சரியமான விஷயமாகத்தான் இருக்கிறது. எப்படியோ விக்டோரியாவும் தப்பித்து விட்டது. ஆனால் சான் அண்டோனியாவும்  கான்செப்ஷனும் இதற்கு மேலும் பிழைத்திருக்க வாய்ப்பே இல்லை. அவை நிச்சயமாக ஏதாவது ஒரு பாறையிலோ, குன்றிலோ மோதி சிதைந்து போயிருக்கும். யாராவது உயிர் பிழைத்திருப்பார்களா? சிந்தித்துப் பார்க்க முடியவில்லை.’

உடலெல்லாம் வலி. மனத்தில் அதைவிட. கடல் அமைதியடைந்திருந்தாலும் மெகல்லனால் அந்த இரவில் தூங்க முடியவில்லை.

இருளை தின்றபடியே மெள்ள மெள்ள ஒளி ஆக்கிரமிப்பு செய்ய ஆரம்பித்த அதிகாலை நேரம். யாரோ தன்னைக் கூப்பிடுவது போல உணர்ந்த மெகல்லன் படாரென எழுந்து உட்கார்ந்தார்.

‘கேப்டன்.. கேப்டன்..’

வெளியே ஹென்றியின் குரல் கேட்டது. அவசர அவசரமாக எழுந்து நொண்டியபடியே வெளியே சென்றார். முகம் முழுக்க உற்சாகம் வழிய நின்று கொண்டிருந்தான் ஹென்றி. அவன் வாயிலிருந்து வேறு வார்த்தைகள் எதுவும் வரவில்லை. அவன் கைகாட்டிய திசையில் மெகல்லனின் பார்வை சென்றது.

நம்பவே முடியாத ஆச்சரியம். தன் கண்களை மீண்டும் ஒருமுறை துடைத்துவிட்டு அதே திசையில் நோக்கினார். மெகல்லனின் முகத்தில் புன்னகை, சூரியன் போல உதயமானது. கைகள் கூப்பி ஜெபம் செய்ய ஆரம்பித்தார்.

தூரத்தில் சான் அண்டோனியாவும் கான்செப்ஷனும் வந்து கொண்டிருந்தன.

000

பதினாறாம் நூற்றாண்டின் ஆரம்ப காலம். பாய்மரக் கப்பல்கள்தான் இருந்தன. கடலில் சுழலோ, சூறாவளியோ, பெரும் பாறைகளோ, எதிரி நாட்டுப் படையோ – எது வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் கப்பலைச் சீரழிக்கக் காத்திருக்கும். நிலப்பரப்பே இன்றி, பயணம் மாதக் கணக்கில் நீண்டு கொண்டே செல்லும். உணவோ , நீரோ கிடைக்காத அவலநிலையால் மரணம் சகஜம்.

இம்மாதிரியான சூழலில்தான் பயணி மெகல்லன், கடல் வழியாக உலகைச் சுற்றிவரப் புறப்பட்டார். ஐந்து கப்பல்கள். 241 பேர். 69,800 கி.மீ. பயண தூரம். மூன்று வருடப் பயணம். எத்தனை பேர் பிழைத்து வந்தார்கள்? உலகை முதன் முதலில் சுற்றி வந்தவர் மெகல்லன் என்பது உண்மைதானா?

புரியும்படியாக புவியியலையும் சொல்லி, கூடவே சுவாரசிய நடையில் வரலாற்றையும் கலந்து சொல்வதென்பது சவால்தான். இதற்கு முன்பாக அண்டார்டிகா குறித்து நான் எழுதிய ‘ஸ்…!’ என்ற புத்தகம் பூரண திருப்தி கொடுத்தது. இந்தவருடம் அதே திருப்தி எனக்கு மெகல்லனில் கிடைத்திருக்கிறது.

மெகல்லன் : ப்ராடிஜி வெளியீடு

வீடுகள், மனைகள் விற்பனைக்கு

போட்-ஹவுஸ் ப்ரமோட்டர்ஸ்

வழங்கும்

பெருமையான வாய்ப்பு!

சென்னையின் புறநகர்ப்பகுதிகளான வேளஏரியில் உதயமாகியிருக்கிறது  எங்களது குடைக்குள் மழை நகர். அங்கீகரிக்கப்பட்ட புறம்போக்கு  நிலத்தில் கட்டிமுடிக்கப்பட்ட அருமையான வீடுகள்.

  • வீட்டின் அளவு 1100 ச.அ. (புயல் காலங்களில் எல்லைகள் கிடையாது.)
  • இரண்டு படுக்கை அறைகள், ஒரு நீச்சல் குளம் (நவம்பரில் மட்டும்)
  • நல்ல நீரோட்டமுள்ள சாலைகள்
  • அம்சமான படகு பார்க்கிங்
  • வாஸ்து முறைப்படி அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால்கள்.
  • குறிப்பிட்ட மாதங்களில் முட்டுக்காடுக்கு உல்லாசப் படகு சவாரி  உண்டு.
  • அருகிலேயே உயர்நிலைப்பள்ளி, பொறியியல் கல்லூரி, மரு த்துவமனை மற்றும் வெள்ள நிவாரண முகாம்கள் உள்ளன.

லோன் மற்றும் வெள்ள நிவாரண நிதி வசதிகள் செய்து தருகிறோம்.

மழைப்பாக்கம், ஆறூரில் 1200 ச.அ. அளவுள்ள மீன்பிடிமனைகள்  விற்பனைக்கு உள்ளன.

மேலும் விவரங்களுக்கு :

போட்-ஹவுஸ் பிரமோட்டர்ஸ்,
எண் – 420, மழைப்பாக்கம் சாலை,
ஆறூர். 044 44420420, 9999900420.

குறிப்பு : தினமும் எங்கள் அலுவலகத்திலிருந்து சைட்-விசிட்டுக்காக  காலை பதினோரு மணிக்குப் படகு கிளம்பும்.

ரீமிக்ஸ் பலன்கள்

கணிணியில் பழைய ஃபைல்களை எல்லாம் எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தபோது  இது கிடைத்தது. சில வருடங்களுக்கு முன் ‘சனிப்பெயர்ச்சி பலன்கள்’ என்று தினமணி  கதிருக்காக லொள்ளுத்தனமாக எழுதிய கட்டுரை. பலரும் எடுத்துக் கையாண்டதால், ஏற்கெனவே படித்திருக்கக்கூடும். இந்தவாரத்தில் ஏதோ சிஷ்யப் பெயர்ச்சியோ, குரு  பெயர்ச்சியோ நடக்கப்போகிறதாமே? பழைய கட்டுரையை ரீமிக்ஸ் செய்து ‘புதிய  பலன்கள்’ ஆகத் தந்துள்ளேன். ஜோதிட நம்பிக்கை உடையவர்கள் வாசிக்க வேண்டாம்.  நகைச்சுவைமேல் நம்பிக்கையுடைவர்கள் தாராளமாகத் தொடரவும்.


மேஷ ராசி மக்களே!

ஏலேய் மக்கா, ரெண்டாவது மாடியிலிருந்து, மூணாவது மாடிக்கு குரு பெயர்ச்சி ஆக றதால, நீங்க 2ல இருந்தா 1க்கும், 1ல இருந்தா 0க்கும், 0ல இருந்தா, அதான் கீழ்  போர்ஷன்ல இருந்தா பூமிக்கடியில போய் ஒளிஞ்சிக்கோங்க! மேலும் நீங்க இங்கிலீசுல ‘a,e,i,o,u’, அப்புறம் தமிழில ‘கசடதபற’ல ஆரம்பிக்கிற வார்த்தைகளை 126 நாள் பேசக்கூடாது. ஜோடி நெம்பர் ஒன்னோ, மானாட மயிலாடவோ மாங்கு மாங்குன்னு பார்த்தா, கல்யாணம் ஆகாதவங்களுக்குக்கூட விவாகரத்து நடக்க வாய்ப்பிருக்கு.

பரிகாரம்: ராமராஜனையோ, ஜே.கே. ரித்தீஷையோ உங்க காஸ்ட்யூம் டிசைனரா நியமிச்சு, அவங்க சொல்ற கலருல வலம் வருதல் ஷேமம்.

ரிஷப ராசி மக்களே!

நீங்க அடுத்த ஆறு மாசத்துக்கு நேரா நிமிர்ந்து நடக்கக்கூடாது. 98.3டிகிரி சாய்ஞ்சாப்ல நடக்கறது நல்லது. நடக்கறப்போ முக்கியமா உங்க வலதுகாலும், இடதுகாலும்  உரசவே கூடாது. அப்படி நடக்காலேன்னா என்ன ஆகும்னு கேக்கறீகளா, நடக்கக்கூடாததெல்லாம் நடந்துரும். யோகாதிபதியான குரு, பாதகாதிபதியான சனியோட வீட்டுல வலுக்கட்டாயமா தொடர்வதால, உங்க புள்ளைக்கு எந்தக் கல்லூரியில  இடம் கிடைக்கலைன்னாலும், சட்டக் கல்லூரியிலயாவது இடம் கிடைக்கும்.

பரிகாரம்: உங்களுக்கு ஏழரை உச்சத்துல உட்கார்ந்துறதால, ‘நாலரை பால்’ குடிக்கிறது நல்லது.

மிதுன ராசி மக்களே!

எஸ்.எம்.எஸ் அனுப்பி அனுப்பியே, முடக்குவாதம் வந்த மிதுன மக்களே, அடுத்த  குருபெயர்ச்சிவரை நீங்க செல்லைக் கையால தொடக்கூடாது, காதாலயும் தொடக்கூடாது. குரு ஆறுல இருந்து பாஸாகி ஏழுக்கு வந்தாலும், சனி எட்டாம் பாதத்துலயிருந்து தொடர்ந்து ‘நோக்கியா’. அதனால செல்லோட யாரும் பக்கத்துல வந்தாக்கூட  கல்லைக் கண்ட நாய் மாதிரி தறிகெட்டு ஓடுறது நலம். இல்லாட்டி சனி ரிங்டோனா  ‘சங்கு சவுண்டை’ அனுப்பி வைக்கும்.

பரிகாரம்: ரிலையன்ஸ் அம்பானிக்கு வாராவாரம் ஞாயித்துக்கிழமை நெய் விளக்கு போடணும்.

கடக ராசி மக்களே!

சன் டிவிக்கும் கலைஞர் டிவிக்கும் வித்தியாசம் தெரியாம திரியுற நீங்க, இன்னும் ஏழரை மாசத்துக்கு, டி.விப் பொட்டியில, நியூஸே பார்க்கக்கூடாது. அதுவும் அடியில் ப்ளாஷ் நியூஸ் ஓடிச்சுன்னா, தெறிச்சு தெற்குப் பக்கமா ஓடுறது நல்லது. ஏன்னா, ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் வீட்டில் குரு. உங்க ராசியோட அஞ்சாவது வீட்டை குரு குத்துமதிப்பா பார்க்குறதால, மதுரைக்குப் போய் மறந்து தினகரன் வாங்கிடப் போறீங்க, கவனம்.

பரிகாரம்: டேபிள்ல குரு இருந்தாலும் வீட்டுக்குள்ள வர்ற கேபிள்ல சனி இருக்கறதால, உங்க வீட்டு ரிமோட்டை உடனடியா எடுத்துட்டுப் போய், பேங்க் லாக்கர்ல வைச்சிருங்கோ! முரசொலியில் ராசிபலன் வருகிறதா என்று தேடிப்பாருங்கோ!

சிம்ம ராசி மக்களே!

குருவும் ராகுவும் ஒரே நேரத்துல நாலாம் பாதத்துக்கு ‘Login’ ஆகியிருக்கறதால,  இன்னும் 222 நாளுக்கு நீங்க இமெயில் செக் பண்ணக்கூடாது. சாட் ஆகவே ஆகாது.  ‘orkut, facebook’ பக்கம் தலை, கை, கால் எது வைச்சும் படுக்கக்கூடாது. முக்கியமா  வலைப்பதிவை கொலைவெறியோட பண்ணுறவங்க, அந்தப்பக்கமே வரக்கூடாது. ஜூன்,  ஜூலை மாதத்துல குரு லாப வீட்டுல குந்தப்போறதால, மேட்ரிமோனியல்ல பதிஞ்சு வைச்சுருக்கிற கன்னிப்பசங்களுக்கு உடனடியா சஷ்டியப்த பூர்த்தி ப்ராப்திரஸ்து!

பரிகாரம்: சனிக்கிழமைதோறும் இட்லிவடையைத் தேடிக் கண்டுபிடிச்சு வடைமாலை சாத்தறது உத்தமம்.

கன்னி ராசி மக்களே!

ஹைக்கூ.. பைக்கூ.. கொக்கரக்கூ.. இப்படி எந்தவித கவிதைகளையும் உங்க வாழ்க்கையில நீங்க இன்னும் அரை வருசத்துக்கு நுழையவிடக்கூடாது. வைரமுத்து, வாலி  வகையறாக்களை பாத்தா உங்க வாய் ‘வாய்தா’ வாங்கிட்டு போயிடறது நல்லது. முக்கியமா பின்நவீனத்துவக்காரங்ககிட்ட முன்னெச்சரிக்கையா இருக்கறது நல்லது. இதையெல்லாம் மீறி நீங்க காதல் கவிதை படிச்சீங்கன்னா, குருவே தடுத்தாலும் உங்க கண்ணை ‘சனி பகவானோட’ காக்கா வந்து கொத்திரும்.

பரிகாரம்: வாரம் ஒருமுறை மூணு கிலோ ‘கவித’ பொஸ்தகம் வாங்கி, ‘கழுதை’க்கு தானம் பண்ணனும்.

துலாம் ராசி மக்களே!

கார்ப்பரேட் கம்பெனிகள் எடுக்குற எந்த சினிமாவுலயும் கதையே இல்லாததால உங்க  வாழ்க்கைக் கதையில எதிர்பாராத யூ-டர்ன் வர வாய்ப்பிருக்கு. ஆகவே நீங்க இன்னும்  நாலேகால் மாசத்துக்கு நயன்தாராவைப் பார்க்கக்கூடாது. ஸ்ரேயா ஆகவே ஆகாது.  மல்லிகா ஷெராவத்தை மனசால நினைச்சாகூட எதிர்த்த வீட்டு ஆயா, ஆப்பக்கரண்டியால அடிக்க வாய்ப்பிருக்குது. முக்கியமா, தியேட்டர், டி.வி, விசிடி இப்படி எதுல  சினிமா பாத்தாலும் உங்களுக்கு சனிமா!

பரிகாரம்: வடபழனி அருகே கோடம்பாக்கத்தில் அருள்பாலிக்கும் நமீதாம்பாளை வடக்கே சூலம் இருக்கும் நாளில் சென்று வணங்குதல் நல்லது.

விருச்சிக ராசி மக்களே!

யார் எதைச்சொன்னாலும் கேட்காத விருச்சிக மக்களே, நான் இப்ப சொல்லுறதையும்  நீங்க கேட்கப்போறதில்ல. அதனால நானும் எதுவும் சொல்லப் போறதில்ல!

பரிகாரம்: யார் என்ன பரிகாரம் சொன்னாலும் செய்யாமலிருப்பது.

தனுசு ராசி மக்களே!

நீங்க ‘i’ல ஆரம்பிக்கிற பேங்குல அக்கௌண்ட் வைச்சிருந்தா உடனே அதை வேற  எங்கேயாவது மாத்திடுங்க. இன்னும் 8 மாசத்துக்கு ‘i’யோட சகவாசமே ஆகாது. இவ்ளோ நாள் ஒஸாமா லக்கினத்துல இருந்த குரு இப்போ ஒபாமா லக்கினத்துக்கு கம்பி  நீட்டியிருக்கிறதால உங்களுக்கு கார்டுல கண்டம். கிரெடிட் கார்டை கிழிச்சுப் போடுங்க. டெபிட் கார்டை டெலிட் பண்ணுங்க. ரேஷன் கார்டை ‘ஒரு ரூபாய்’க்கு வித்துருங்க.

பரிகாரம்: தினமும் ஒரு ஆளுக்கு ஒபாமா ஹேர்கட்டிங் செஞ்சு விடுறது நல்லது.

மகர ராசி மக்களே!

வாஸ்துப்படி குரு உங்களுக்கு குண்டக்க மண்டக்க பெயர்ச்சி அடைஞ்சிருக்கறதால,  இன்னும் 7 மாசத்துக்கு நீங்க உங்க வீட்டுக்குள்ள முன்வாசல் வழியா நுழையக்கூடாது.  பின்வாசலும் ஆகாது. அதனால சன்னல் வழியா போனா இன்னல் இருக்காது. டூ பாத்ரூம் டாய்லெட்ல போகாதீங்க. கோலத்தை வாசல்ல போடாதீங்க. மீறினா, தேற மாட்டீங்க.

பரிகாரம்: பேசாம கொஞ்ச நாளைக்கு ஃப்ளாட்பாரத்துல வாழுங்க!

கும்ப ராசி மக்களே!

இப்ப ‘கரண்ட்’ஆ நடந்திருக்கிற குரு பெயர்ச்சியால, உங்களுக்கு ‘கரண்டுல’ கண்டம்.  அதனால வீட்டுல உள்ள எலெக்ட்ரிக் ஐயிட்டத்தையெல்லாம் வித்துடுங்க. ஜீரோ வாட்ஸ்  பல்பு கூட இருக்கக் கூடாது. சொல்லப்போனா, பேப்பர்ல வர்ற ‘கரண்ட்’ நியூஸைக்கூட படிக்கக்கூடாது.

பரிகாரம்: அமாவாசை அன்னிக்கு மின்சார வாரியம் புள்ளையார் கோயில்ல ஆற்காட்டார் பெயருல அர்ச்சனை பண்ணுங்க.

மீன ராசி மக்களே!

குரு நார்த் ஈஸ்ட்டுக்கும், சௌத் வெஸ்ட்டுக்கும் இடையில ஈஸ்ட்வெஸ்ட்டுல ரெண்டு  டிகிரி நகர்ந்து இருக்கிறதால, நீங்க அடுத்த பஸ்ஸையோ, ட்ரெயினையோ அல்லது  அடுத்த சந்திராயனையோ புடிச்சு வியாழன் கெரகத்துக்கு போயிடுறது நல்லது. கடமையைச் செய் பலனை எதிர்பாருன்னு பகவத் கீதையில சொல்லாததால, தேமுதிக  மஞ்சக்கலர்ல முண்டா பனியன் போட்டுக்கிட்டா, கலைஞர்கள் வாழ்வில் விடிவு ஏற்படும்.

பரிகாரம்: எந்த ஜோசியக்காரனைப் பாத்தாலும் வெக்கப்படாம கடன் கேளுங்க!

(மேலும் பலன்களை அறிந்துகொள்ள இதே கட்டுரையைக் கீழிருந்து படிக்கவும்.)