நாயகன் எம்.என். நம்பியார்

நம்பியார் : நட்பைக் கெடுத்துக் கொள்ளாதே, யோசித்துச் சொல்.
எம்.ஜி.ஆர் : யோசிக்க வேண்டியவன் நானல்ல, அவளை யாசிப்பதை விடுங்கள்.
நம்பியார் : உயிர்மீது உனக்கு ஆசையில்லையா?
எம்.ஜி.ஆர் : இதே கேள்வியை நானும் கேட்கலாமா?
நம்பியார் : மோதுவதுதான் உன் முடிவா?
எம்.ஜி.ஆர் : உங்களுக்கு அதைத்தவிர வேறு வழியில்லை என்றால் நான் தயார்.
நம்பியார் : அவளை அடைந்தே தீருவேன்.
எம்.ஜி.ஆர் : அதுதான் நடக்காது.


நம்பியார் : ஆ.. என்னையே எதிர்க்கத் துணிந்துவிட்டாய். மதம் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா?
எம்.ஜி.ஆர் : சினம் கொண்ட சிங்கத்திடம் தோற்று ஓடும்.
நம்பியார் : தோல்வியையே அறியாதவன் நான்.
எம்.ஜி.ஆர் : தோல்வியை எதிரிக்குப் பரிசளித்தே பழகியவன் நான்.
நம்பியார் : நாவை அடக்கு. நான் உன் தலைவன்.
எம்.ஜி.ஆர் : உங்கள் நடத்தை அப்படி இல்லையே.
நம்பியார் : ஆ…

***

தமிழகத்தின் தியேட்டர்களில் அதிகம் திட்டு வாங்கியவர், சபிக்கப்பட்டவர் எம்.என். நம்பியாராகத்தான் இருக்கமுடியும். ‘எங்க வீட்டுப் பிள்ளை’யில் எம்.ஜி.ஆரை அவர்  அடிக்கும்போது கதறியவர்கள், அந்த நேரத்தில் நம்பியார் கையில் கிடைத்தால் குதறி யிருப்பார்கள். ‘நான் ஆணையிட்டால்’ என்று வாத்தியார் கிளம்பி நம்பியாரை அடிக்கும் போது ரசிகர்களுக்குள் உற்சாக ஊற்று. பழி உணர்வைத் தீர்த்துக் கொண்ட திருப்தி.

திரையில் நம்பியாரின் அருமையான வில்லத்தனத்தாலே, நிஜத்தில் தனது ஹீரோயிஸத்தை வளர்த்துக் கொண்டார் எம்.ஜி.ஆர்.

***

கருப்பு வெள்ளைக் காலத்தில் நம்பியாரோடு நடிக்காத நடிகர்கள் இல்லை. எப்போதுமே எம்.ஜி.ஆர். – நம்பியாரின் கூட்டணி என்றால் வசூல்மழைதான். எம்.ஜி.ஆரோடு  ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘எங்க வீட்டுப் பிள்ளை’, சிவாஜியோடு ‘உத்தமபுத்திரன்’ – மறக்க முடியாதவை.

‘திகம்பர சாமியார்’ – நம்பியார் கதாநாயகனாகப் பதினொரு வேடங்கள் அணிந்து நடித்த படம். அந்த மர்மக்கதை சினிமா பெரும் வெற்றியும் பெற்றது. மக்களைப் பெற்ற  மகராசியில் ‘ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா’ என்று எம்.என். ராஜத்தோடு நம்பியார் பாடும்  டூயட், என்றும் இனியது.

பக்தி படங்களில் வைணவம் சார்ந்த கதைகள் ஓடாது என்று தமிழ் சினிமாவில் ஒரு  செண்டிமெண்ட் உண்டு. அதை முறியடித்துக் காட்டுகிறோம் என்று ‘சுப்ரபாதம்’ என்றொரு படம் எடுத்தார்கள். இந்தியா முழுவதும் உள்ள பல வைணவத்தலங்களில் கதை நகரும். நம்பியார் இதில் பக்தராக நடித்தார். அந்தப் படம் ஓடவில்லை.

***

அகில இந்திய சினிமா நட்சத்திரங்களுக்கு ஐயப்ப பக்தரான நம்பியார்தான் குருசாமி.  அமிதாப் பச்சன் உள்பட பல நட்சத்திரங்கள் அவரோடு சபரிமலைக்குச் சென்றிருக்கிறார்கள்.

சுத்த சைவத்தைக் கடைபிடித்து வந்த நம்பியார் பசும்பால்கூட சாப்பிட மாட்டாராம்.  பொதுவாக அந்தக்கால பத்திரிகைகளில்கூட நம்பியார் பற்றி அவ்வளவு விஷயங்கள்  வந்ததில்லை. தன்னைப் பற்றிய கிசுகிசுக்களுக்கு அவர் இடம் கொடுத்ததில்லை. தானுண்டு தன் வேலையுண்டு என்பதைக் கொள்கையாக கடைபிடித்த நம்பியார், பத்திரிகையாளர்களையும் பெரும்பாலும் தவிர்த்தே வந்தார்.

1000 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் நம்பியாரைக் கௌரவப்படுத்தும்விதமாக யாரும்  எந்தவிருதும் அளித்ததில்லை.

***

சந்திரபாபு, எம்.ஆர். ராதா – வாழ்க்கையைப் பதிவு செய்துள்ளேன். நம்பியாரைப் பதிவு  செய்யும் வாய்ப்பு கிடைக்காதது குறித்து வருத்தப்படுகிறேன். முன்பு கல்கியில் நம்பியார்  குறித்த ஒரு தொடர் வந்துள்ளது.

# இந்தக் கட்டுரைக்காக குறிப்புகள் தந்து உதவிய நண்பர் பா. தீனதயாளனுக்கு நன்றி.

பாவம் ராவணன்! – போகோ கட்டுரை ;)

(இந்தக் கட்டுரை குழந்தைகளுக்கும் குழந்தை மனம் படைத்தவர்களுக்கு மட்டும். சுட்டி விகடனில் சில வருடங்களுக்கு முன்பு வெளியானது. குழந்தைகள் தின வாழ்த்துகள்!)

ராவணன் தெரியுமா உங்களுக்கு… ஆமா பத்து தலைகளோட ‘பந்தா’வா ராமாயணத்துல  வருவாரே, அவரேதான்! ராவணன் இன்னிக்கு நம்ம கூட வாழ்ந்தார்னா, ‘அய்யோ பாவம்  அந்த அங்கிள்’னு நீங்க ‘உச்’ கொட்டுவீங்க. ஏன் தெரியுமா?

* தினமும் காலைல 320 பற்களைத் தேடிப்புடிச்சு ‘ஈ’ தேய்க்கணுமா, பாவம், அதுக்கே  எவ்வளவு நேரமாகும்!

* செல்போன்ல யாராவது ராவணனைக் கூப்பிட்டாங்கன்னா, ‘எந்தக் காதுல வைச்சுப்  பேசலாம்’னு குழம்பிப் போயிடுவாரு!

* இப்ப ராவணனுக்கு முதல் தலையில இருக்குற மூக்குல ஜலதோஷம் பிடிச்சா  அவ்வளவுதான். அப்புறம் பத்து மூக்குக்கும் பரவிடும். ‘அச்’னு ஒரு தும்மல் வந்துச்சுன்னா,  தொடர்ந்து ஒரே தும்மல் சத்தமாத்தான் இருக்கும்!

* ராவணனுக்கு ‘ஷேவ்’ பண்ண எவ்ளோ நேரமாகும்! முதல் முகத்துல இருந்து வரிசையா ‘ஷேவ்’ பண்ணிக்கிட்டே கடைசி முகத்துக்கு வர்றதுக்குள்ள முதல் முகத்துல தாடி முளைச்சிருமோ?!

* ராவணனுக்கு ஒரு தலையில ‘பொடுகு’ வந்தா, எல்லாத் தலைகளுக்கும் பரவிடுமா?  ஹைய்யோ, அப்ப குளிக்கணும்னா எவ்ளோ ஷாம்பு ஆகும்?

* ஸ்கூல்ல மிஸ் ‘2 X 3’ எவ்வளவுன்னு ராவணனைக் கேட்கறப்போ, நாலாவது வாய்  ‘6’-ன்னும் அஞ்சாவது வாய் ‘8’ன்னும் சொல்லிச்சுன்னா அவரு என்ன பண்ணுவாரு!?

* நாம அடிக்கடி தலையில அடிச்சு ‘எல்லாம் என் தலையெழுத்து’ன்னு சொல்லுவோமே,  அதை ராவணன் எப்படிச் சொல்லுவாரு?

* தனக்கு பிடிச்சவங்களுக்கு ‘கிஸ்’ கொடுக்கணும்னா ராவணன் எந்த உதட்டால கொடுப்பாரு?

* ஒரு தலைக்கு ‘ஹேர்-கட்’ பண்ண 40 ரூபாய்னா, பாவம் ராவணனுக்கு முடிவெட்ட  மட்டுமே, 400 ரூபாய் செலவாகிடும்ல!

* ஸ்கூல் பஸ்ல போகணும்னா எப்பவுமே ராவணனுக்கு கடைசி சீட்தான். அங்கதானே  அவரால உட்கார முடியும்!

இப்ப, சொல்லுங்க, ராவணன் பாவம்தானே!

பூ பூ மாரி!

சசி இயக்கத்தில் வெளிவரவிருக்கும் ‘பூ’ என்ற படத்திலிருந்து ‘ச்சூ ச்சூ மாரி’ என்றொரு பாடலை நேற்று கேட்டேன். பாடியிருப்பவர்கள் (பார்த்தசாரதி, ஸ்ரீமதி, எஸ். மிருதுளா) குழந்தைகள் என்றே நினைக்கிறேன். அல்லது குழந்தைக் குரலில்கூட பாடியிருக்கலாம். எப்போதும் கேட்கலாம். குழந்தைகளாக மாறலாம். கிழவர்களி்ன்  மனத்துக்குள்கூட குழந்தைத் துள்ளலைக் கொடுக்கும் சக்தி இந்தப் பாடலுக்கு  இருப்பதாகவே உணர்கிறேன்.

ஏதோ நாட்டுப்புறப்பாடலைத்தான் கொஞ்சம் மாற்றியிருக்கிறார்கள் என்று தோன்றியது. பின்புதான் பாடல் நா. முத்துக்குமார் என்று தெரிந்தது. அவரது சிறந்த பாடல்களில்  இதுவும் ஒன்று. வாழ்த்துகள்.

பாடல் வரிகளுக்கு :
http://sriramsongs.blogspot.com/2008/10/blog-post_22.html

பாடலைக் கேட்க :
http://alltamilmp3songs.blogspot.com/search/label/Poo%20MP3%20Songs

ஸாரி கங்குலி!

நம்பர் ஒன் ஸ்தானத்தில் இருப்பவர்கள் மேல் எனக்கு எப்போதுமே ஈர்ப்பு இருந்ததில்லை. உதாரணம் – ரஜினி, விஜய், சச்சின் ஆகியோரை என் மனம் கண்டுகொண்டதில்லை. அவர்களது வெற்றியும் கவர்ந்ததில்லை. ஆனால் நம்பர் ஒன்னுக்குச் சமமான தகுதியில் இருப்போரை என் மனம்  கொண்டாடும். கமல், அஜித், இவர்களோடு கங்குலி. இவர்களது முயற்சிகள் ஜெயிக்க வேண்டும்  என்று மனமார விரும்புவேன். இவர்கள் அடையும் சின்னச் சின்ன வெற்றிக்கும் எல்லையில்லாமல்  சந்தோஷப்படுவேன். (இதுகூட ஏதாவது ஃபோபியாவாக இருக்கலாம். ஹாய் மதனைக் கேட்க  வேண்டும்.)

கிரிக்கெட் புலிக்கு சர்வதேச மைதானத்தில் இன்று இறுதிநாள். கங்குலியின் வெறி, துணிச்சல்,  கோபம் எல்லாம் எனக்குப் பிடிக்கும். அவரது ஆட்ட நேர்த்தியைப் பாரா பாராவாகப் பேசுமளவு க்கு எனக்கு கிரிக்கெட் தெரியாது. நானொரு பாமர கிரிக்கெட் ரசிகன். புறக்கணிப்புகளை எ ல்லாம் தாண்டி வந்து சரிந்து விழுந்த தனது இமேஜை நிமிர்த்தி, சரியான நேரத்தில் ஓய்வை  அறிவித்துவிட்டு கௌரவமாக விலகும் தாதா சவுரவை…

இப்படி எழுதிக்கொண்டே போனால் ஏதோ இரங்கல் கடிதம் போலாகிவிடும். கோல்கட்டாவுக்காக கேப்டன் கங்குலியின் 20-20 ஆட்டத்துக்குக் காத்திருக்கிறேன்.

ஒரு விஷயம். 2005ல் கங்குலி ஃபார்ம் இழந்து கேப்டன் பதவியிழந்து மீடியாக்களால் கேலி  செய்யப்பட்டு வந்தபோது நானும் அவரைக் கேலி (காலி)செய்து ஜாலிக் கட்டுரை (ஒரு புலியின்  கதை) ஒன்றை தினமணிக் கதிரில் எழுதினேன். இன்றுவரை நான் எழுதிய நகைச்சுவைக் கட்டுரைகளில் நானே வெறுக்கும் கட்டுரை அதுவே. இப்போது அதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஸாரி கங்குலி!

இணையத்தில் அந்தக் கட்டுரை கிடைக்கலாம். தேடாதீர்கள் ப்ளீஸ்!

நானும் சினிமாவும்

சினிமா குறித்த தொடர் கேள்வி-பதில் குறித்து என்னுடைய பதிவு.

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவு தெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

வயதெல்லாம் நினைவில் இல்லை. ஒரு பாக்யராஜ் படம். அது முருங்கைக்காய் புகழ் முந்தானை முடிச்சா அல்லது கல்பனா புகழ் சின்னவீடா என்று தெரியவில்லை. படத்தை  தூத்துக்குடி சார்லஸ் தியேட்டரில் பார்த்ததாக அரைகுறை ஞாபகம். சிறுவயதில் தியேட்டர்களைக் கண்டால் எனக்கு ஒரு வெறுப்பு. காரணம்? தெரியவில்லை. ‘சின்னப்புள்ளைத்தனமா’ ஏதாவது இருந்திருக்கலாம். வீட்டில் யாராவது சினிமாவுக்குக்  கிளம்பிச் சென்றால் கையைப் பிடித்து இழுத்து, காலைக்கட்டிக் கொண்டு போகவிடாமல் நிறைய அழுது அடம்பிடித்திருக்கிறேன்.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

சரோஜா. சென்னை-28 அளவுக்கு கவரவில்லை.

3கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

ஜெயம் கொண்டான். படத்தில் கதை இருந்ததால் பிடித்திருந்தது. வினய் வளருவார். லேகா வாஷிங்டனுக்கும் கால்ஷீட் டைரி நிரம்பித் தளும்ப  வாய்ப்பிருக்கிறது. எல்லோரையும்விட இப்போது என் கண்களில், மனத்தில் அலைபாயும் முகம் சரண்யா மோகனுடையது. வெண்ணிலா கபடி குழுவுக்காகக் காத்திருக்கிறேன்.

4. மிகவும் தாக்கிய தமிழ் சினிமா?

பிடித்த படங்கள் அன்பே சிவம், லவ்டுடே. பாதித்த படம் மகாநதி. அந்தப் படத்தை இன்னொருமுறை பார்க்கும் மனோதிடம் எ னக்கில்லை.

5. உங்களை மிகவும் தாக்கிய தமிழ் சினிமா-அரசியல் சம்பவம்?

பொதுப்பிரச்னைகளுக்காக ரஜினிகாந்த் ஏறி உளறும் ஒவ்வொரு மேடைச் சம்பவத்தையும் வெறுக்கிறேன். அவரை ஆரம்பத்திலிருந்தே நம்பிக் கொண்டிருக்கும் நிஜ ரசிகர்களுக்காகப் பரிதாபப்படுகிறேன்.

6. தமி்ழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

நிறைய. குறிப்பாக பழைய பொம்மை, பேசும் படம், பிலிமாலாயா இதழ்கள் மேல் தனிப்  பிரியம் உண்டு.

7.தமிழ் சினிமா இசை?

என் மனத்துக்குப் பிடித்தமான எல்லா பாடல்களையும் ரசிப்பேன். இசையமைப்பாளர், பாடல் எங்கிருந்து காப்பியடிக்கப்பட்டது என்பது பற்றியெல்லாம் அலட்டிக்கொள்வதில்லை.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய  படங்கள்?

உண்டு. சமீபத்தில்தான் அதிகம் பார்க்க ஆரம்பித்திருக்கிறேன். என் பட்டியலிலுள்ள  ஐந்து நட்சத்திரப் படங்கள் : தாரே ஸமீன் பர், முன்னா பாய் பார்ட் ஒன், ஜுராஸிக்  பார்க், சில்ட்ரன் ஆஃப் ஹெவன், தி சினிமா பராடைஸோ, இன்னொஸன்ஸ், தி ரோட்  ஹோம்.

9. தமிழ் சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா?  அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ் சினிமா மேம்பட அது உதவுமா?

நேரடித் தொடர்பை உருவாக்கிக் கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறேன். சில அனுபவங்கள் குறித்து பின்னர் விரிவாக எழுதுகிறேன். மற்றபடி தமிழ் சினிமாவில் அழியாப் புகழ்பெற்ற இரண்டு மேதைகளுடைய (ஜே.பி. சந்திரபாபு, எம்.ஆர். ராதா) வாழ்க்கை வரலாறு எழுதியதில் பூரண திருப்தி.

10. தமிழ் சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

வியாபாரத்தில் ஏற்றம் இறக்கம் எப்போதும் உண்டு.

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாசாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? த மிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

அடிமட்ட சினிமா தொழிலாளர்களுக்காக அரசு கஞ்சித் தொட்டி திறக்கும்நிலை வரலாம். மற்றபடி தமிழர்களின் குடி முழுகிப் போகாது. புத்தக வாசிப்புப் பழக்கம் அதிகமாகும்.