விஜய் – விமர்சனம்

நானும் வேண்டாம், கூடாது, பேசவே கூடாது என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் எங்கு ஓடினாலும் துரத்தித் துரத்தி பயமுறுத்துவதால் ‘சுறா’வைப் பற்றி பேச வேண்டிய நிர்பந்தம்.

இன்று காலையில் சென்னை ஹலோ எஃப்.எம். சுசித்ரா நிகழ்ச்சியில் பேசப்பட்ட விஷயம் : தொடர்ந்து பல படங்களாக ஒரே ஃபார்முலாவில் நடித்துக் கொண்டிக்கும் விஜய் அதை மாற்றிக் கொள்ள வேண்டுமா?

போனில் பேசியவர்கள் எல்லோருமே ‘கண்டிப்பாக மாற்றியே தீர வேண்டும்’ என்று கொட்டித் தீர்த்துவிட்டார்கள்.

நிகழ்ச்சியில் பேசிய சிலரது கருத்துகள் :

ஒரு பெண் : விஜய்க்கு டான்ஸ் மட்டும்தான் ஆடத் தெரியும். அதுலயும் வித்தியாசமா, கஷ்டப்பட்டு பண்றதா நினைச்சு தரையில படுத்து தவழ ஆரம்பிச்சுடுறாரு. பாவமா இருக்கு.

***

ஒரு குடும்பத் தலைவி : இந்த படமாவது நல்லாயிருக்கும்னு மனசைத் தேத்திக்கிட்டு ஒவ்வொரு விஜய் படமும் தியேட்டர்ல போய் பார்க்கத்தான் செய்யுறேன். ஆனா ஒவ்வொரு தடவையும் ஏமாற்றமா இருக்குது. வெறுப்பா இருக்குது. இன்னிக்கு நைட்கூட சுறா போகலாம்னு இருக்கேன். விஜய் வேற மாதிரி நடிச்சா நல்லாயிருக்கும்.

***

ஒரு குடும்பத் தலைவர் : நாங்க விஜய்கிட்ட இருந்து கமல் அளவுக்கெல்லாம் எதிர்பார்க்கல். ஒரே படத்துல பத்து ரோல் பண்ணச் சொல்லல. பத்து படமா தொடர்ந்து ஒரே ரோல் பண்ண வேண்டாம்னுதான் சொல்றோம்.

***

ஒருவர் : விஜய் தன்னைக் கண்டிப்பா மாத்திக்கணுங்க. நடிப்புக்கு ஸ்கோப் உள்ள மாதிரி கேரக்டர் பண்ணனுங்க.

சுசித்ரா : அந்த ரிஸ்க் எடுக்கணுங்கிறீங்களா? அவரால முடியுமா?

ஒருவர் : ஏங்க, ஐம்பது படம் நடிச்சுட்டாரு. இன்னும் இந்த ரிஸ்க் கூட எடுக்கலேன்னா எப்படி?

***

நேயர் : விஜய் ஒரு தேசிய விருதாவது வாங்கணும். அப்படி ஒரு படத்துல நடிக்கணும்.

சுசித்ரா : அவர் உங்ககிட்ட தேசிய விருது வேணும்னு கேட்டாரா?

நேயர் : இல்லீங்க. நெம்பர் ஒன் இடத்துல இருக்கிறதா சொல்லிக்கிறாங்க. ஒரு விருதாவது வாங்கி அந்த இடத்துக்கு நியாயம் சேர்க்க வேண்டமா?

***

நிகழ்ச்சியில் பேசிய எல்லோரும் விஜயின் படங்களில் மாற்றத்தை எதிர்பார்த்தே பேசினார்கள். வெள்ளிக்கிழமைகளில் ரிலீஸ் ஆகும் டப்பா படங்களுக்குக் கூட எஃப்.எம்.களில் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளே அரங்கேறிக் கொண்டிருக்கும். ஆனால் இந்த நிகழ்ச்சி விஜயைக் கேலி செய்ய வலுவான களம் அமைத்துக் கொடுத்ததுபோல அமைந்தது. செய்வதை எல்லாம் செய்துவிட்டு சுசித்ரா கடைசியில் சொன்ன வழிசல் வார்த்தைகள்.. ஹிஹி!

விஜய் எனக்கு நல்ல ப்ரெண்ட். அவரோட டான்ஸ் சான்ஸே இல்ல. அவர் சொன்ன தகவலை உங்ககிட்ட பகிர்ந்துக்கிறேன். அடுத்து அவர் நடிக்கிற த்ரீ இடியட்ஸ்ல ஒரு ஸீன்கூட மாத்தக்கூடாதுன்னு சொல்லிருக்காராம்.

சுசித்ராவுக்கு ஒரு கமெண்ட் : உங்கள் நிகழ்ச்சியில் நீங்கள் பாடிய பாடல்களை மட்டும் ஐம்பது சதவிகிதத்துக்கும் மேல் ஒலிப்பரப்பு செய்வது ரொம்ப ஓவர்.

***

விஜய் கதைத் தேர்வில் இம்மியளவுகூட ரிஸ்க் எடுப்பதில்லை. மக்கள்தான் அவருடைய படத்தைப் பார்ப்பதற்காக ஒவ்வொரு முறையும் ரிஸ்க் எடுக்க வேண்டியதிருக்கிறது. எனவே விஜய் நடித்த படங்கள் பார்ப்பதை விட்டு பட வருடங்களாகிவிட்டன.

பழைய விஜய் படங்களில் எனக்குப் பிடித்தவை – 1. குஷி 2. காதலுக்கு மரியாதை 3. லவ் டுடே.

கடைசியாக தியேட்டருக்குச் சென்று (அதாவது நண்பர்களால் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றதால்) பார்த்த விஜய் படம் : சிவகாசி.

சுறா பார்க்கும் துர்பாக்கியமான சூழல் என் வாழ்க்கையில் அமைந்துவிடாது என்று எல்லாம் வல்ல கோடம்பாக்கீஸ்வரரை வேண்டிக் கொள்கிறேன்.

அது சரி. விஜய் மாற வேண்டியது பற்றி என் கருத்து…?

தீப்பந்தம் எடுத்து தீண்டாமை கொளுத்து இதுதான் என் கருத்துன்னு பாட நான் என்ன விஜயா? அட போங்கப்பு… நாட்டுல மாத்த வேண்டியது எவ்வளவோ இருக்கு. அதை விட்டுப்புட்டு…

அங்காடித் தெரு

அங்காடித் தெரு – விமரிசனங்களால் முன் நிறுத்தப்பட வேண்டிய படம் அல்ல; தியேட்டருக்குச் சென்று உணர்ந்து நெகிழ வேண்டிய படம். இதுவரை வெளிவந்த சிறந்த தமிழ்ப் படங்களில் இது மிக முக்கியமானது. எதனோடும் ஒப்பிட முடியாத தனித்துவமான படம். வசந்தபாலன், இனி தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத முக்கியமான (தைரியமான) இயக்குநர். அங்காடித் தெரு, உலக அளவில் தமிழ் சினிமாவுக்கு மாறுபட்ட அடையாளம் பெற்றுத்தரப் போகிறது. ரங்கநாதன் தெருவில் கூடும் கூட்டத்தில் ஒரு பங்கு அங்காடித் தெரு ஓடும் தியேட்டர்களில் நிறைந்தால், தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனை மேம்பட்டுவிட்டது என்று மகிழலாம்.

படத்தின் உருவாக்கத்தில் பங்குபெற்ற ஒவ்வொருவருக்கும் வாழ்த்துகள் அல்ல, நன்றி.

ஸ்ரீநிஷா

அதிகாலை ஐந்து மணிக்கு வீட்டின் ஜன்னலைத் திறக்கும்போது முகத்தை வருடிச் செல்லும் குளிர்காற்று…

அமைதியான இரவில், கடற்கரையோரம் நிற்கும்போது செவிகளை நிறைக்கும் அலைகளின் ஆர்ப்பரிப்பு…

பதமாக மசாலா கலந்து வைக்கப்பட்ட மாங்காய் ஊறுகாயின் காரம்…

இந்த மூன்றும் ஒரே குரலில் சாத்தியம் என்று நிரூபித்துக் கொண்டிருக்கிறாள் ஸ்ரீநிஷா. விஜய் டீவி சூப்பர் சிங்கர் ஜுனியர் 2ல் அல்கா அஜித்தின் பரம ரசிகனாக இருந்த நான், இப்போது கொஞ்சம் கொஞ்சமாக ஸ்ரீநிஷாவின் ரசிகன் ஆகிவிட்டேன் (மாறிவிட்டேன்?).

அல்கா, சந்தேகமே இல்லாமல் நல்ல பாடகியாக வரப்போகிற பெண்தான். தவறுகளே இல்லாமல் 100% சுத்தமாக பாடக்கூடியவள். சித்ரா, ஷ்ரேயா கோஷல்,  சாதனா சர்கம் – வகை மெலடி பாடல்கள் எல்லாம் அல்கா பாடினால் நமக்கு ஜஸ்கீரிம் சாப்பிடும் உணர்வு ஏற்படும். கர்நாடக சங்கீதம் சார்ந்த சினிமா பாடல்களும் அல்காவுக்கு தூசு. அல்கா பைனலுக்கு வருவது உறுதி. சூப்பர் சிங்கர் ஜுனியர் என்ற பட்டத்தை வெல்வதற்குக்கூட அதிக வாய்ப்புகள் அல்காவுக்கு இருக்கிறது. ஆனால் வெஸ்டர்ன் வகை பாடல்கள், பாஸ்ட் பீட் குத்துபாடல்கள் அல்காவின் தேர்வாக எப்போதுமே இருந்ததில்லை. அப்படிப்பட்ட பாடல்கள் அல்கா பாடும்போதுகூட அதில் தவறு இருக்காது, ஆனால் வழக்கமான அழகு  குறைவாகவே இருக்கும்.

ஸ்ரீநிஷாவின் குரலுக்கு இந்த மாதிரியான வரையறைகள் எதுவுமே கிடையாது. எந்த வகையான பாடலுக்கும் வளைந்து கொடுக்கும் அற்புதக் குரல் அது. பாடும்போது சிறு சிறு தவறுகள் இருக்கலாம். பத்து வயது குழந்தைதானே. பயிற்சியில் சரியாகிவிடும். ஆனால் எந்தவிதமான பாடலையும் முழு அர்ப்பணிப்புடன் கற்றுக் கொண்டு, அழகாக, வார்த்தைகளுக்கேற்ப உணர்வுகளைப் பிரதிபலித்துப் பாடும் ஸ்ரீநிஷா மட்டுமே அல்காவுடன் பைனலில் மோதுவதற்குத் தகுதியான பெண்ணாகத் தெரிகிறாள்.

இன்றைய தேதியில் ஐந்து சிறுவர்கள் போட்டியில் இருக்கிறார்கள். யாரும் இவ்விரண்டு பெண் குழந்தைகளுக்கு ஈடுகொடுத்துப் பாடுவதாகத் தோன்றவில்லை. பையன்களில் இருந்து ஒரு போட்டியாளர் பைனலுக்கு வந்தே ஆக வேண்டும் என்று (மறைமுக) விதி எதுவும் வைத்திருந்தால் ரோஷன் வர வாய்ப்பிருக்கிறது.

இருப்பதிலேயே குட்டிப்பையன் ஸ்ரீகாந்துக்கு இன்னும் வயதும் வாய்ப்புகளும் இருக்கின்றன. நிகழ்ச்சியின் கவர்ச்சிக்காக ஸ்ரீகாந்தை இன்னமும் ‘எலிமினேட்’ செய்யாமல் வைத்திருக்கிறார்கள். இருந்தாலும் ஸ்ரீகாந்துக்கு, நிகழ்ச்சி பார்க்கும் தாத்தா, பாட்டிகளின் அமோக ஆதரவு குறையவே இல்லை. நித்யஸ்ரீயை ரசிக்கலாம். நித்யஸ்ரீயைவிட அதிக திறமைகள் கொண்ட (ஆனால் அதிகம் அமைதியாக இருப்பதால் வெளியே தெரியாத) பிரியங்காவை மனமாரப் பாராட்டலாம். ஆனால் பைனலுக்கு யாரெல்லாம் வர வாய்ப்பிருக்கிறது?

அதற்கு முன் ஒரு சந்தேகம். பைனலில் இருவர் பாடுவார்களா? மூன்று பேர் பாடுவார்களா?

மூன்று பேர் என்றால் என் தேர்வு ஸ்ரீநிஷா, அல்கா, ரோஷன். பைனலில் இருவர் என்றால்… என்ன சொல்வதென்று புரியவில்லை. (இன்னும் எவ்வளவு மாதம் நிகழ்ச்சியை இழுப்பார்கள் என்று தெரியவில்லை. இந்தக் குழந்தைகளுக்கெல்லாம் பரிட்சை இருக்காதா?)

ஸ்ரீநிஷா பற்றி மேலும் ஒரு வரி – பாடி முடித்தபின் நடுவர்கள் பாராட்டும்போது வெட்கப்பட்டு சிரித்துக்கொண்டே ‘Thank you sir’, ‘Thank you Maam’ சொல்லும் அழகுக்காகவே ஸ்ரீநிஷாவை ரசித்துக் கொண்டே இருக்கலாம்.

ஸ்ரீநிஷாவின் பல்வேறு பரிமாணங்கள் :

ஆரம்ப கால ஸ்ரீநிஷா

எந்தப் பூவிலும் வாசமுண்டு…

கண்ணோடு காண்பதெல்லாம்…

அல்காவை திணறடித்த ஸ்ரீநிஷா

பொன்வானம் பன்னீர் தூவுது

நாடோடித் தென்றல் படத்திலிருந்து

கே.பி. சுந்தராம்பாள் குரலில்

தம் மரே தம்…

ஆடுவோமே பள்ளு பாடுவோமே

மாமா மாமா மாமா – மற்றும் பல

வசீகரா ரீமிக்ஸ்…

கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு

(பின் குறிப்பு : எனது அலுவலகத்தில் ஸ்ரீநிஷாவுக்கு தனி ரசிகர் மன்றமே இருக்கிறது.)

கண்டேன் இயக்குநரை!

கலைஞர் டீவியிலும் உருப்படியான, பிற சேனல்களிலிருந்து காப்பியடிக்காத ஒரு நிகழ்ச்சி வருகிறது. நாளைய இயக்குநர்.

சில வாரங்களாகத்தான் இந்த நிகழ்ச்சியைப் பார்க்கிறேன். டைரக்‌ஷன் கனவுகளோடு திரியும் இளைஞர்களுக்கான நல்ல களம் இந்த நிகழ்ச்சி. சில குறும்படங்கள் சப்பென்று இருந்தாலும், சில படங்கள் நன்றாக இருக்கின்றன. ஒரு சில படங்கள் ‘அட’ போட வைக்கின்றன.

மார்ச் 14, ஞாயிறு காலையில் (10.30 – 11.30) ஒளிபரப்பான நிகழ்ச்சியில் ஒளிபரப்பான ஒரு படம் ஓஹோ ரகம். கார்த்திக் சுப்பாராஜ் என்ற இளைஞர் இயக்கிய பெட்டிகேஸ் என்ற ஒன்பது நிமிட குறும்படம்.

போலீஸில் பெரிய ஆளாக வரவிரும்பும் ஒரு கான்ஸ்டபிளின் கதை என்று சுருக்கமாகச் சொல்லலாம். ஆனால் அதற்குள் பல கிளைக்கதைகள். படம் முழுக்க நகைச்சுவை. அருமையான நடிகர் தேர்வு. அற்புதமான ஷாட்கள். ஒரு ஃப்ரேம்கூட அநாவசியமாக இல்லை. ஒரு குறும்படத்தில் இத்தனை விஷயங்களைக் கொடுக்க முடியுமா என்று அசர வைத்துவிட்டார் கார்த்திக். ஒன்பது நிமிடப் படத்தில் ஒரு முழு நீள திரைப்படம் பார்த்த திருப்தி.

‘Karthick, You are going to become a very Big Director’ என்று நடுவராக இருந்த பிரதாப் போத்தன் சொனனார். சத்தியமான வார்த்தைகள். நிகழ்ச்சிக்கு விருந்தினராக வந்திருந்த இயக்குநர் வசந்த் தனக்கே உரிய மேதமைத்தனத்தோடு பேசினார். ரசிக்க முடியவில்லை.

இதற்கு முந்தைய சுற்றுகளில், கார்த்திக் இயக்கிய பிற படங்களைத் தேடிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். நான் மட்டும் ஒரு தயாரிப்பாளராக இருந்தால் இந்நேரம் கார்த்திக்குக்கு அட்வான்ஸ் கொடுத்திருப்பேன்.

பெட்டி கேஸ் படத்தினைப் பார்க்க : இங்கே. (மூன்றாவது வீடியோவில் மூன்றாவது நிமிடத்திலிருந்து படம் ஆரம்பமாகிறது. நான்காவது வீடியோவிலும் தொடருகிறது.)

a film by…

எப்போதுமே குரங்கு சேட்டை செய்து கொண்டிருக்கும் ஒரு பையன். யாருக்குமே அடங்காதவன். அவனை யாருக்குமே பிடிக்காது. திடீரென்று அந்தப் பையன் சேட்டை எதுவும் செய்யாமல் அமைதியாக இருக்கிறான். ஒரே ஒரு நாள் மட்டும். அன்று அந்தப் பையனை பார்க்கும் எல்லோருமே, ‘அவன் நல்லவன்தான். தினமும் இப்படியே இருந்தா நல்லாயிருக்கும்’ என்று நினைக்கிறார்கள்.

‘விண்ணைத் தாண்டி வருவாயா’ சிம்புவை இப்படித்தான் நினைக்கத் தோன்றுகிறது. இந்தப் படத்தில் சிம்பு வழக்கமான அலட்டல்கள் இல்லாமல் அமைதியாக வந்து போவதையே பெரிதாகத் தெரிகிறது. ‘அபாரமான நடிப்பு, அமர்க்களமான ஃபெர்பார்மென்ஸ்’ என்று சொல்வதற்கெல்லாம் சிம்பு இன்னும் நிறைய தூரம் போக வேண்டியதிருக்கிறது.

இந்தப் படத்தில் நடித்ததினால் பங்குபெற்றதால் த்ரிஷாவுக்கு ப்ளஸ்ஸே தவிர, த்ரிஷாவினால் இந்தப் படத்துக்கு எந்தவிதமான ப்ளஸ்ஸும் இருப்பதாகத் தெரியவில்லை. சிம்புவைவிட த்ரிஷா ஒரு வயதல்ல, பல வயது மூத்தவர்போலத் தெரிகிறார். க்ளோஸ்-அப் காட்சிகளைத் தவிர்த்திருக்க முடியாது, த்ரிஷாவையே தவிர்த்திருக்கலாம்.

ஈரம் படம் நான் பார்க்கவில்லை. அதிலேயே மனோஜ் பரமஹம்ஸாவைப் பலரும் பாராட்டினார்கள். வி.தா.வ.-ல் பல காட்சிகள் அழகாக இருந்தன. ‘ஒரு காட்சியில் கேமரா இருப்பதே தெரியக்கூடாது. அதுதான் கேமரா மேனின் வெற்றி’ என்று சொன்னார் பாரா. அந்த அளவுக்கு நுட்பமாகப் பார்க்க, இப்போதுதான் கற்றுக் கொண்டிருக்கிறேன்.

ஏ.ஆர். ரஹ்மான் – பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது (கேட்க). பாடல்களுக்கான இசையில் பெரும்பகுதியை ரீரெகார்டிங்கிலும் உபயோகித்திருக்கிறார். பின்னணி இசையைச் சிலாகித்துச் சொல்லுமளவுக்கு எதுவும் தோன்றவில்லை.

சில பளிச் காதல் வசனங்களில் கௌதம் என்ற கௌதம் மேனன் என்ற கௌதம் வாசுதேவ் மேனன் தெரிகிறார். வழக்கமான ஆங்கில கெட்ட வார்த்தை வசனங்களிலும் சலிப்பு தருகிறார். வேறு வேறு லொகேஷன்களில் எடுத்தாலும் கௌதமின் பாடல்கள் எல்லாம் ஒரே போலத்தான் இருக்கின்றன. ஹீரோவுக்குப் பின்னால் நான்கு வெளிநாட்டுக்காரர்கள் ஆடும் டெம்ப்ளேட் இல்லாமல் கௌதமால் பாடல் எடுக்க முடியாதுபோல. பாடல் காட்சிகளில் மட்டுமல்ல, பல இடங்களில் கௌதமின் டெம்ப்ளேட்கள் பெரும் அலுப்பைத் தருகின்றன.

காதலை உணர்ந்தவர்களுக்கு படம் இழுவையாகத் தெரியாது. ரசிப்பார்கள் (அதுவும் நகரங்களில் மட்டும்). மற்றபடி, a film by karthick என்று க்ளைமாக்ஸுக்கு முந்தைய காட்சியில் திரையில் வரும்போது ரசிகர்கள் எழுந்து செல்வதைத் தவிர்க்க இயலாது. எனவே அந்த இடத்தில் ‘படம் இன்னும் முடியவில்லை. இனிமேல்தான் க்ளைமாக்ஸ்’ என்றொரு டைட்டில் கார்டையும் போடலாம். தப்பில்லை.

பாஸிட்டிவ் க்ளைமாக்ஸ், நெகடிவ் க்ளைமாக்ஸ் என்று வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு முடிவுகள் வருவதாகக் கேள்விப்பட்டேன். எப்படி இருந்தால் என்ன, இது எல்லா சென்டரிலும் ஓடப்போவதில்லை. நீண்ட நாள்கள் கழித்து வந்துள்ள முழு நீ….ள காதல் படம் என்ற விதத்தில் விண்ணைத் தாண்டி வருவாயா கவனம் பெறுகிறது.

***

என் தோழி ஒருத்திக்கு அவ்வப்போது உடல்நிலை சரியில்லாமல் போய்விடும். முந்தைய தினம் என்ன சாப்பிட்டாள் என விசாரிப்பேன். அப்போதெல்லாம் அவள் சிக்கனுக்குப் பிரசித்தி பெற்ற அந்த மூன்றெழுத்து கடைக்குச் சென்று வந்ததை அறிந்தேன்.

‘இனிமே நீ அங்க போய் சிக்கன் சாப்பிடக்கூடாது’ என்று சொல்லி வைத்திருந்தேன். வி.தா.வருவாயாவில் அந்த மூன்றெழுத்து சிக்கன் கடையில் ஒரு காட்சி வருகிறது.

நான் என் தோழியிடம் சொல்லிவிட்டேன். ‘நீ இந்தப் படத்தைப் பார்க்கக்கூடாது. உனக்கு உடம்புக்கு ஆகாது.’

***

சமீபத்தில் நண்பர்களோடு ஒரு பார்ட்டிக்குச் சென்றேன். பெரிய ஹோட்டல்தான். பறப்பன நடப்பன வகைகளோடு தயிர்சாதமும் இருந்தது.

எல்லோரும் சாப்பிட்டு முடிக்கும் நேரத்தில் நண்பர் ஒருவர் ரகசியம் ஒன்று சொல்வதாகச் சொன்னார். ‘இப்போது சொல்ல முடியாது. நாளை சொல்கிறேன்’ என்று பீடிகை வேறு போட்டார்.

மறுநாள் நண்பரை விசாரித்தபோது அந்த ரகசியத்தை வெளிப்படுத்தினார். ‘என் தட்டுல நான் போட்டுக்கறப்போ அந்த தயிர் சாதத்துல ஒரு கரப்பான் பூச்சி இருந்தது.’

ஜீரணிக்க முடியவில்லை. ஸ்டார் அந்தஸ்துள்ள ஹோட்டலின் தரத்தை நினைக்கும்போது என் மேனியெங்கும் கரப்பான் பூச்சியின் வருடல். ‘அங்கு வைத்திருந்த க்ரேவியில கோழி கிடந்துச்சு, பிரியாணில ஆடே கிடந்துச்சு. தயிர் சாதத்துல கரப்பான் பூச்சியெல்லாம் ஒரு மேட்டரா?’ என்று வலுக்கட்டாயமாக சமாதானப்படுத்திக் கொண்டேன்.

***

விண்ணைத் தாண்டி வருவாயாவுக்கும், மூன்றெழுத்து சிக்கன் ஹோட்டலுக்கும், தயிர்சாத கரப்பான் பூச்சிக்கும் எந்தவித பந்தமுமில்லை.